ஆர்கலியில் ஓர் துளி!
பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.” இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” என்ற பொதுமைப்படுத்தல் சிந்தனை தவறென்பதை உணரும் கணத்தில், பொறுக்கமுடியாமல் அவர்களிடம் நாமோ, நம்மிடம் அவர்களோ இவ்வசனத்தைச் சொல்வதுண்டு. முகநூல் பதிவுகளிலும், நட்பார்ந்த அரட்டைகளிலும், தனிநபர் நடத்தையிலும் மேற்சொன்ன ஒவ்வொரு நண்பர்களும், இனப்பிரச்சினை சார்பான தம் நிலைப்பாட்டை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தனி ஒருவனின் பழக்கம், ஒரு இனக்குழுமம் சார்ந்த அவர்களது பொதுக்கருத்தை மாற்றியதை (குறைந்தபட்சம் மாற்ற முயன்றதை) தம் வாயாலேயே அவர்கள் ஒப்புக்கொண்டபோது ஒன்றை உணர்ந்தேன். என்னையறியாமலேயே அவர்களுடன் - புன்னகைத்த - பேசிய – உணவு உண்ட - ஒவ்வொரு கணத்திலும், இந்தச் சிறுதீவுக்குள் சுமார் நான்கு மில்லியன் குடித்தொகை கொண்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பிரதிநித...