மரபில் அறிமுகம் வேண்டும்!

"தளபதி" திரைப்படத்தின் "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? குறிப்பாக அதில் இந்தப்பாகத்தை யார் அதிகம் இரசித்திருக்கிறீர்கள்?
                                             

நீங்கள் "90 kids" அல்லது "2K kids" வகையறா என்று பெருமை பேசுபவர் என்றால் இந்தப் பாட்டோடு சேர்ந்து இன்னொரு காட்சியும் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
                                              

இந்தப் பாடல்வரிகள் மூன்றாவது தடவையாக இன்னொரு திரைப்படத்தையும் நினைவூட்டலாம், நீங்கள் தீவிர அஜித் விசிறி என்றால்! வீரம் திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? என்றால் இந்தக் காட்சியையும் பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

ஏன் இப்படி ஒரே பாடல் இடம்பெற்ற மூன்று திரைப்படக் காட்சிகளை வரிசையாகப் பார்க்கச் சொல்கிறாய் என்றால், "குனித்த புருவமும்" என்று தொடங்கும் பாடல், அப்பர் பாடிய சைவத் தேவாரங்களில் ஒன்று. வீரம் திரைப்படத்தில் அதே பாடலுக்கு நடனமாடியபடி தான் நாயகி தமன்னாவின் கதாபாத்திரம் அறிமுகமாகின்றது. அப்போது மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளும் அவருக்கு ஆண்டாள் வேடம். தேவாரம் பாடியபடி கண்ணனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்!

அதே போல இரண்டாயிரங்களில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த பாடகர் ஸ்ரீநிவாசின் "உசேலே உசேலே" எனும் இசைத்தொகுதி. செவிபன்னி செயலிழக்க செயலிழக்க, இன்றுவரை கேட்கும் பாடலொன்று அதில் இருக்கிறது. உன்னி கிருஷ்ணனின் குரலில் கர்நாடக - மேலைத்தேய கலப்பிசையில் வெளியான "எப்போ வருவாரோ!". அந்தப்பாடலின் வரிகள், சிவன் மீது கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய கர்நாடக சங்கீத கீர்த்தனையிலிருந்து பெறப்பட்டிருந்தது. (இது மீண்டும் அண்மையில் வெளியான ஒருநாள் கூத்து திரைப்படத்தில் முழுமையான பாடலாக இடம்பெற்றிருக்கிறது). 

ஆனால் இந்த "உசேலே உசேலே" எப்போ வருவாரோ பாடலில் ஒரு வரி வந்திருக்கும். "மாயக்காற்று மதி கொள்ளை கொண்ட ஆயர் செல்வியே!" ஆயர் செல்வி. இராதை. சிவன் மீதான கீர்த்தனை, ஒரே வரியில் கண்ணன் மீதான இராதையின் ஏக்கமாக மாறிவிட்டது!

எப்போதும் அடிபட்டுக் கொண்டிருக்கும் சைவ - வைணவங்களுக்கு இடையே பாலம் அமைப்பதற்காகவே சமய சமரச மனப்பாங்கு கொண்ட நம் திரையுலகினர் இப்படி சித்தரித்தார்கள்    என்று இதைப்புரிந்துகொள்ளலாமா?

சமயத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள். ஒரு கவிதாயினியை, கவிஞரை அவமானப்படுத்துக்கிறோம். தான் பாடிய நூற்றைம்பது பாசுரங்களை விடுத்து, அப்பரின் தேவாரத்தை ஆண்டாள் பாடுவது போல் காட்சியமைப்பது, அவளுக்கு மட்டுமல்ல; அப்பருக்கும் அவமானம். கோபாலகிருஷ்ணருக்கும் அதே தான். புலமைச்சொத்து அத்துமீறல், இல்லையா? 

மரபில் நமக்குக் கொஞ்சமாவது அறிமுகம் இருக்கவேண்டும். தவிர, பொதுவெளியில் ஒரு விடயத்தை - கருத்தைச் சொல்லும் போது அது சரியா என்பதிலும் அவதானம் இருக்கவேண்டும். அது மேற்படி திரையுலகினருக்கு மட்டுமல்ல; நம் பேஸ்புக் -  இணைய உலகினருக்கும் பொருந்தும் அறிவுரை தான்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner