மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு

0 comments

 படம்: ishafoundation.org

“படம்பக்கா!”

அழகன் கூப்பிட்டதற்கு அந்தப் பக்கம் பதிலே வரவில்லை.
“அடேய் படம்பக்கா… உன்னைத் தான்!”
“…………”
அழகனுக்கு ஆத்திரம் வந்தது.
“ சொந்தப் பெயரைக்கூட மறந்துவிட்டாயோ? உன்னைத் தான் அழைக்கிறேன் படம்பக்கா! பெயரைப் பார் படம்பக்கன் - குடம்பக்கன் என்று... ஒழுங்கான தாய் தகப்பன் இருந்தால் தானே ஒரு பெயர் வைப்பதற்கு” அழகன் முணுமுணுக்கும் போதே, அந்தப் பக்கம் குரலைச் செருமும் சத்தம் கேட்டது.
“உம்!”
அந்த உங்காரத்தில் தொனித்த மெல்லிய கோபம் அழகனுக்கு புரியாமல் இல்லை.
“எதற்காக இந்தக் கோபம்? ஏன் என்னோடு பேச மறுக்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. இதில் என்ன தவறு?”
அழகன் சிணுங்கினான்.
படம்பக்கனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஒரு பெண்ணை மணக்க விரும்புவதில் எந்த தவறும் இல்லையடா அழகா… ஆனால், ஏற்கனவே ஒருத்தியை மணந்து தவிக்கவிட்டு இங்கே இன்னொருத்தியை ஏமாற்றி மணக்க முயல்கிறாய் பார், அதுவும் என் வீட்டு வேலைக்காரியை ஏமாற்றப் பார்க்கிறாய் பார், அதுதான் தவறு!” படம்பக்கன் குரலில் தெரிவது பொய்க் கோபமா, என்ன?
“நீ வேறு! ஊரில் உலகத்தில் இல்லாததையா நான் செய்யப் போகிறேன்? இரண்டுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் வாழும் இந்த பூமியில் இரண்டு பெண்களை மணப்பது அப்படி என்ன குற்றம்? மனைவியை தவிக்கவிட்டு இங்கு வந்தேன் என்றெல்லாம் புருடா விடாதே. எனக்கு அவள் ஒரு கண் என்றால், இவள் இன்னொரு கண். இரண்டையும் பொத்திப் பொத்திப் பாதுகாப்பேன்!” அழகனும் விட்டுக் கொடுக்கவில்லை.
“ஓகோ! கண்! கண்! ஹாஹா!” ஏதோ பிறகு நடக்கப் போவதை உணர்ந்தவன் போல படம்பக்கன் பெரும் சத்தமிட்டு சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்.
“இந்தக் கவிதைக்கெல்லாம் குறைச்சல் இல்லை! உன் பேச்சுக்கு நான் வேண்டுமானால் மயங்கலாம். எல்லோரும் மயங்குவார்கள் என்று எண்ணிவிடாதே. குறிப்பாக உன் உள்ளங்கவர் கள்ளி ஒற்றியூர் நாச்சி. தன் துணையின் வாழ்க்கையில் மூன்றாமவர் பங்குபோட்டால் ஆண்கள் எப்படி கொதிப்பார்களோ, அதை விட மோசமாக பெண்கள் ஆவேசம் கொள்வார்கள் என்பதை மறந்துவிடாதே!” படம்பக்கன் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
“ஆமாம். இவர் மட்டும் ஏதோ ஏகபத்தினி விரதன் போல அறிவுரை கூறுகிறார்! நீ கூட ஒருத்தியை மணந்துவிட்டு, இன்னொருத்தியை தலையில் வைத்துக் கூத்தாடுகிறாயே. அது மட்டும் நியாயமாக்கும்.”
அழகன் முடிப்பதற்குள் படம்பக்கன் பேச்சை இடைவெட்டினான். “அழகா!”
“உடலிச்சையை பூர்த்தி செய்ய உன் போன்றோர்க்கு பூக்கும் காமத்துடன் என்னை ஒப்பிடாதே. காமம், காதல் இதையெல்லாம் கடந்தவன் நான்." படம்பக்கனின் மறுமொழியில் இலேசான சூடு தெரிந்ததால், அழகன் பேச்சை மாற்றமுற்பட்டான்.
“அதை விடு! இப்போது என்ன தான் சொல்லவருகிறாய்? உன் தோழனின் காதலுக்கு உதவப்போகிறாயா இல்லையா?”
படம்பக்கன் அழகனை ஒருகணம் ஏறிட்டு நோக்கினான். பின் மறுபக்கம் பார்வையைத் திருப்பிச் சொன்னான். “செய்து தொலைக்கிறேன்… என்ன மாதிரி உதவி வேண்டும் உனக்கு?”
அழகன் வெட்கத்துடன் தரையில் கால்களால் கோலம்போட்டான். “நான் அவளை நேசிப்பதை அவள் அறிவாளாம். அவளும் என்னை நேசிக்கிறாள் என்று அவளது தோழி சொன்னாள்."
“ஓஹோ… தோழியைக் கூப்பிட்டு செய்தி சேகரிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டீர்கள்… அப்புறம் என்ன?”
படம்பக்கனின் கேலியை அழகன் இரசிக்கவில்லை.
"ஆனால், ஏற்கனவே எனக்கு மணமான விடயத்தை யாரோ ஒற்றியூர் நாச்சியிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அப்படி நான் அவளை மணக்கக் கோரினால் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்று என்னிடம் அவள் சத்தியம் வாங்கப் போவதாக அவள் தோழி சொன்னாள். இப்போது நான் அவளை மணப்பது உன் கையில் தான் இருக்கிறது!”
“ம்ம்! சொல்… நான் என்ன செய்யட்டும்?”
“அது வந்து… படம்பக்கா… ஒற்றியூர் நாச்சி உன் வீட்டு வேலைக்காரி அல்லவா...? தன் எசமானான உன் வீட்டின் முற்றத்தில் தான் அவள் என்னிடம் சத்தியம் வாங்கப் போகிறாள்.. அப்போது…”
“அப்போது?”
“நீ உன் வீட்டில் இருக்கக் கூடாது!”
“இருக்காவிட்டால்?”
“கோபித்துக் கொள்ளாதே! உன் முன்னிலையில் சத்தியம் செய்தது போல் நானும் செய்வேன்! நீ அங்கு இருந்தால் தானே சத்தியம் செல்லுபடியாகும்?”
“அழகா!”
படம்பக்கனின் குரலில் உஷ்ணம் கூடியது.
“உன் சுயலாபத்திற்காக இந்தப் படம்பக்கனை பொய்மைக்குத் துணைபோகச் சொல்கிறாயா? மெய்மையே உருவெடுத்தவன் என்று உலகம் போற்றும் என்னை - இந்தப் படம்பக்கனை - வஞ்சகத்திற்கு உடன்படச் சொல்கிறாயா?”
“படம்பக்கா!”
இப்போது அழகனின் கன்னங்களில் நீர்முத்துக்கள்!
“தந்தை தாயையும் பிரிந்து வந்தேன். எனக்கு தந்தை தாய் நீயேயென்று நம்பினேன்… நட்பையும் மீறி உன் மீது எனக்குள்ள அன்பின் மீது ஆணை! என்னைக் கைவிட்டுவிடாதே!”
படம்பக்கன் ஒன்றும் சொல்லவில்லை. அழகன் தொடர்ந்தான்:
“எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பதும், உன் புகழ் பாடிக்கொண்டே இருப்பதும் தான் எனக்கு இன்பம்… நாச்சிக்கு சத்தியம் செய்து இங்கேயே தங்க நேர்ந்தால், அயலூர்களில் நீ சென்று தங்கும்போது உன்னைக் காணாது என்னால் இருக்கமுடியாது! இது வெறும் தன்னலமல்ல… உன்மீது நான் கொண்ட அன்பின் – நட்பின் காரணமாகத் தான் இந்த சூதுவேலை!”
அழகன் குரல் தழுதழுத்தது. கருணையே வடிவான படம்பக்கன் உள்ளமும் கரைந்துவிட்டது. அழகனின் திட்டத்துக்கு ஒத்துக் கொண்டான்.
“உன் வேண்டுகோளை ஏற்று என் வீட்டில் அன்று இருக்கமாட்டேன். போதுமா. ஆனால் ஒன்று. நாச்சி என்னைத் தேடிப் பிடித்து என்முன் சத்தியம் வாங்கிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது."
உண்மைதான்! அந்த நாச்சியும் அவ்வளவு இலேசுப்பட்டவள் போல் தெரியவில்லை. படம்பக்கனோடு எனக்குள்ள நெருங்கிய உறவும் அவளுக்குத் தெரியாமல் இருக்காது… என்ன செய்யலாம்? அழகன் சிந்தித்தான்.
“உன் வீட்டின் வலது புறமுள்ள மகிழமரம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. பெரிதாக அந்தப்பக்கம் யாரும் வருவதுமில்லை. கொஞ்சநேரம் அதன்பின் சென்று ஒளிந்துகொள்ளேன்!”
படம்பக்கன் புன்னகையுடன் உடன்பட்டான். அவனுக்கு நன்றி சொல்லி மிக்க மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினான் அழகன்.
படம்பக்கன் ஏதோ எண்ணியவனாக சற்று சத்தமிட்டு தான் சிரித்தான்.
"பல்லைக் காட்டும் வேலை அழகனோடு இருக்கட்டும். உங்கள் நண்பரின் திட்டத்துக்கு உடன்படுவதென்றால் இன்றைக்கு நீங்கள் வீட்டுக்கு வெளியில் தான் தூங்கவேண்டும்." படம்பக்கன் திடுக்கிட்டு திரும்பினால் அங்கு நின்று கொண்டிருந்தாள் வடிவுடையாள். "ஓகோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டாயா?"
"கேட்டேன் கேட்டேன். அநத அப்பாவிப் பெண் ஒற்றியூர் நாச்சியின் வயிற்றிலடிப்பதற்கு அழகனும் அவனது பைத்தியக்கார நண்பன் படம்பக்கனும் திட்டம் போடுவதை காது குளிர கேட்டேன்"
படம்பக்கன் தலையைச் சொறிந்தான். சரியாகப் போயிற்று. இன்றைய ஊடலுக்கு காரணத்தை பிடித்து விட்டாளா?
"அன்பே. இப்போதைய நாடகத்தில் எனக்கு நகைச்சுவை நடிகன் வேடம். கதாநாயகனின் காதலுக்கு உதவாவிட்டால் உலகம் தூற்றும். எல்லாம் சுபமாகத் தான் நடக்கப்போகிறது. எப்படியென்று கேளேன்" அன்போடு தன் நாடியைப் பிடித்த படம்பக்கனின் கைகளைத் தட்டிவிட்டாள் வடிவுடையாள் "கையை எடுங்கள்." படம்பக்கன் பெருமூச்செறிந்தான். "கணவன் - மனைவி என்று வந்துவிட்டால் எனக்கே இந்தக்கதி தான் என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா."
"அங்கே என்ன புறுபுறுப்பு? ஒரு பெண்ணின் வாழ்க்கை நாசமாக நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். அழகன் அவளை பிரியவே கூடாது. அவன் அவளிடம் செய்யும் சத்தியம் பலிக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்வதென்றால் மட்டும் என்னிடம் வாய் திறவுங்கள்." அவள் திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
"ஹஹா. காதல் என்று சொல்லி ஒரு பெண்ணின் வாழ்வை அழிப்பதற்கு நான் என்றுமே ஒத்துக்கொள்ள மாட்டேன். வடிவு. என்ன நடக்கிறதென்று உனக்கு நாளை புரியும். இதோ கிளம்பிவிட்டேன்"
வடிவுடையாள் திரும்பிப் பார்த்து எங்கே என்று புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.
"ஒற்றியூர் நாச்சி வீட்டுக்கு தான்" படம்பக்கன் இதழ்களில் குமிண்சிரிப்பு. என்ன நடக்கப் போகிறது என்பது வடிவுடையாளுக்கு புரிந்தது. அதுவரை நடித்துக் கொண்டிருந்த பொய்க்கோபம் விலக குறும்புச் சிரிப்பு சிரித்தபடி நடந்தாள் அவள்.
---------------------------------------------------------------
விடிந்தது. படம்பக்கனின் அரண்மனையை ஒத்த அந்தப் பெரும் வீடு அல்லோலகல்லோலப் பட்டது. மண்டபக் கதவு சாத்தியே இருந்தாலும், பணியாட்கள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி வேலைசெய்து கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் பாட்டு. மறுபக்கம் கூத்து. ஒரு மூலையில் அன்னதானம். இன்னொரு மூலையில் முந்திய நாளுக்கான படம்பக்கனது வீட்டு வரவு செலவை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் கருவூலக் கணக்கர்கள்.
இது எதையுமே கவனிக்காமல் முற்றத்தில் நுழைந்த அழகனின் கண்கள், நாச்சியையே துழாவித் தேடிக் கொண்டிருந்தன.
“ஆகா. அதோ வருகிறாள். பூவே பூந்தட்டை ஏந்தி வருகிறது. என்ன அழகு. எத்தனை அழகு. திலோத்தமை, ஊர்வசி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் விட அழகிகளை என்னால் படைக்கமுடியும் என்று கங்கணம் கட்டித் தான் நான்முகன் இவளைப் படைத்தானோ. ஓ. என் மனைவி ஆரூர் மடவாள். ச்சே அவளை ஏன் இப்போது நினைக்கிறேன்.. எத்தனை ஆரூர் மடவாளைச் சேர்த்தாலும் இவளது அழகுக்கு ஈடாகாது! அழகு, அழகை மீறிய நாணம், நாணத்தை மீறிய அடக்கம், பெண்மையின் இலக்கணமே வடிவெடுத்து வந்த்தோ! அட, என்னைத் தான் ஓரக்கண்களால் பார்த்தபடி செல்கிறாள்.. ம்கூம்… இனியும் தாமதிக்கக் கூடாது!” அழகன் நாச்சியை நெருங்கினான்.
“பெண்ணே! உன்னுடன் கொஞ்சம் பேசலாமா?”
“சொல்லுங்கள்!”
அவள் தாழ்த்திய விழிகளை உயர்த்தவில்லை.
அவள் குரல் அவனை என்னவோ செய்தது. நினைத்தவுடன் எதுகை மோனை என்று கவிதையாகக் கொட்டும் அவனது நாக்கு குளறி ஒட்டிக்கொண்டது. கொஞ்சநேரம் அழகனால் ஒன்றுமே பேசமுடியவில்லை. நாச்சி சில கணங்களின் பின் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு வார்த்தை வரவில்லை. சொல்லிவிடுகிறேன் கேள். நேற்று உன்னைக் கண்டதிலிருந்தே என் வசமிழந்தேன். உன்னை மனதார நேசிக்கிறேன். நாணத்தை விட்டுக் கேட்கிறேன்..என்னை மணந்துகொள்கிறாயா?”
சட்டென இப்படி அழகன் கேட்டதும், நாச்சி அப்படியே நின்றாள். அவள் இதழ்கள் பிரிந்து ஒட்டும் ஒலியும் இதயம் துடிக்கும் ஒலியும் அருகில் நிற்பவர்களுக்கும் கேட்டது. அவள் ஒன்றும் சொல்லாமல் தலைமுடியை நீவி காதின் பின் சொருகிவிட்டு மெல்ல நகர்ந்தாள்.
“எங்கே செல்கிறாய்? எனக்குப் பதில் சொல்லமாட்டாயா?”
நாச்சியின் மெல்லிய பாதங்கள், சிலம்பொலிக்க வீட்டின் வெளிப்புறமாகச் சென்றுகொண்டிருந்தன. அழகன் குறுக்கே சென்று இடைமறித்தான்.
“நில் பெண்ணே! தமிழ் பொங்கி நர்த்தனமாடும் என் சொற்கள் உன்னைக் கண்ட நொடி முதல் திக்குமுக்காடுகின்றன. என்னையே நான் மறந்தேன், உன் சம்மதம் ஒன்றையே வேண்டுகிறேன்..”
நாச்சியோ நிற்காமல் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.”மன்னிக்கவும் ஐயா. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. ஊரவர் தான் நேற்றிலிருந்து உங்களை ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஊரூராய்ச் சென்று எங்கள் தலைவர் படம்பக்கரின் புகழ்பாடுபவர் நீங்கள் என்கிறார்கள். ஆனால், நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பின்புலமென்ன, ஒன்றுமறியாமல் தங்களை எவ்விதம் அடியேன் மணப்பேன்? தங்களுடன் ஏற்படும் மண உறவு எதிர்காலத்தில் எனக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடாதல்லவா?”
அவளது யாழைப் பழிக்கும் இன்குரல், குரலிலிருந்த மென்மை, அதில் ஓடிய காதல்... எல்லாம் அழகனைத் தன்வசம் இழக்கச் செய்தது.
“இல்லை பெண்ணே! உன் தலைவன் படம்பக்கனின் நெருங்கிய தோழன் நான். நிச்சயமாக ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்கமாட்டேன். உன்னை மணந்தபின் வேறெங்கும் செல்லமாட்டேன். உன்னுடனே தங்கிவிடுகிறேன்!”
நாச்சியின் நடையின் வேகம் குறைந்தது!
“இதை நான் நம்பலாமா?”
“நிச்சயம் நம்பலாம்!”
“என்னை மணந்தால் என்னை விட்டுப் பிரியவே மாட்டீர்கள்”
“மாட்டேன்!”
“பிரியும் சூழ்நிலை வந்துவிட்டால்?”
“வராது!”
“எந்த சந்தர்ப்பத்திலும்?”
“நன்றாகக் கேள்! நீயே என்னை விரட்டினாலும், ஏன், உன் எசமானன், அந்தப் படம்பக்கனே சொன்னாலும் உன்னைப் பிரியேன்!”
ஒற்றியூர் நாச்சி அங்கேயே சடாரென நின்று திரும்பினாள்.
“அப்படியானால் இங்கேயே இப்பொழுதே எனக்கு வாக்குக் கொடுங்கள்! படம்பக்கர் மீது ஆணையாக எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் என்னைப் பிரியமாட்டேன் என்று!” நாச்சியின் அழகிய கைகளிலொன்று, அழகனை நோக்கி நீண்டது.
அழகனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “அப்பாடா, ஒத்துக் கொண்டாளே! நல்லவேளை, படம்பக்கன் வீட்டில் இல்லை” திருப்தியுடன் வாக்குக் கொடுக்க, கையைத் தூக்கிய அழகனின் கண்கள் ஒருகணம் இடப்புறம் சென்று வந்தன. அழகன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான். அவனது மகிழ்ச்சி, போன இடம் தெரியவில்லை! அவன் நாச்சியுடன் நின்றுகொண்டிருந்தது, முந்தியநாள் படம்பக்கனுடன் பேரம்பேசிய அதே மகிழமரத்தடி!
அழகனின் நாக்குழறியது. “ஏன்… எதற்கு இந்த இடத்தில்…? படம்பக்கனின் வாசலிலேயே….. வைத்துக் கொள்ளலாமே… இங்கு…. ஏன்?”
“வாக்குத் தானே தரப்போகிறீர்கள்… அதை எங்கு தந்தால் தான் என்ன?”
“இல்லை… படம்பக்கன் முன்னிலையில் வாங்கி…??!!”
“தாங்கள் தயங்குவதைப் பார்த்தால்... என்னை மன்னித்துவிடுங்கள் ஐயனே! இந்த அடியவளுக்கு தங்களை அடையும் ஊழ்வினை இல்லை! நான் போய் வருகிறேன்!” ஒருகணம் தயங்கிய அழகன் அடுத்தகணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“நில் பெண்ணே நில்! விதிப்படி நடக்கட்டும்! உனக்கு நான் உடன்படுகிறேன்.
சங்கிலி…. உன் தலைவன் - என் தலைவன் திருவொற்றியூர் படம்பக்க நாதன் மீது ஆணை! எக்காரணம் கொண்டும்,எதற்காகவும் உன்னைப் பிரியேன்..
“ஒற்றியூர் உறையும் இந்த ஆரூரனின் ஆருயிர்த் தோழன் தியாகேசன் மீது ஆணை! இந்த ஒற்றியூர் எல்லையை இனிச் சுந்தரன் தாண்டமாட்டான்!”
நாச்சியின் - சங்கிலி நாச்சியாரின் திருக்கரங்களை அழகனின் - சுந்தரனின் - சுந்தரமூர்த்தி நாயனாரின் - கைகள் பற்றிக் கொண்டன. திருவொற்றியூர் படம்பக்க நாதர் ஆலய மணி கணீர் கணீர் என ஒலித்தது. மகிழம்பூக்களை உதிரவிட்டு மெதுவாக வீசிய காற்றில் ஆடியது மகிழமரம். ஈசன் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது சுந்தரருக்கு!
“எல்லாம் உன் லீலை தானா! திட்டமிட்டே சங்கிலியை இங்கே வரவழைத்து அவள் விருப்பப்படியே உன்முன் வாக்குப் பெற வைத்துவிட்டாயே! இனி எப்படி நான் வேறு தலங்களுக்குச் சென்று உன்னை தரிசிப்பது? உன் புகழ் பாடுவது?
போகட்டும்! நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே! என்னை ஏமாற்றினாலும் நான் உனக்கே அடியவன்.. நல்லதோ தீயதோ, என் வினைகளைக் கழுவ நீயிருக்கும்போது எனக்கென்ன அச்சம்? எனக்கென்ன கவலை?” சுந்தரர் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடித்திறந்தார். தன் காலில் வீழ்ந்தெழுந்த சங்கிலி நாச்சியை அரவணைத்துக் கொண்டார். செய்தியறிந்து அவர்களிருவரையும் சூழ்ந்து கொண்ட அடியவர் கூட்டம் மகிழ்ச்சிக் குரல் எழுப்பியது. ஐந்தெழுத்தை உச்சரித்து பதிகம் பாடியவாறே, ஈசன் சன்னதியை நாடிச் சென்றுகொண்டிருந்தார் சுந்தரர்!
அன்று ஒருநாள் எங்கும் நிறைந்தவன் என்ற பெருமையைத் தள்ளி, வெறும் மகிழமரத்தில் குடிகொண்டிருந்த திருவொற்றியூர் படம்பக்க நாதர், அருகிலிருந்த வடிவுடை நாயகியைப் பார்த்தார். இதழ்களில் அதே குமிண்சிரிப்பு. தூரத்தே கேட்டுக் கொண்டிருந்த சுந்தரரின் தேவாரத் தமிழமுதத்தை மகிழமரத்தடியில் கொணர்ந்து கொட்டிக்கொண்டிருந்தான் வாயுபகவான்.
"பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே!!"
_________________________________
இது 2013ஆமாண்டு நான் எழுதிய ஒரு கதை. பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதையின் பேசுபொருள் பற்றி பிறகு விரிவாக எழுதவேண்டும். சொல்கிறேன்.
🙂
மேலும் வாசிக்க »

ஒரே ஒரு உறவு

0 comments

 


தகுதி இருப்பதால் ஒரு அறிவுரை மட்டும் கூறமுடியும்.

மனம் விட்டு கதைப்பதற்கு ஒரே ஒரு உறவையாவது சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது பெற்றாரோ, உடன்பிறப்போ, நண்பரோ, வாழ்க்கைத்துணையோ, தொழின்முறைத் தோழரோ,  யாராகவும் இருக்கலாம். 

ஆனால் ஒருவர் போதும். ஏன் ஒருவர்? 

பலர் பார்க்க சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை.  பயனின்றி தன்மானம் போவது தான் மிச்சம். சிலரது உள அழுத்தத்தை புரிந்து கொண்டு, பாவம் பார்த்து ஆறுதல் சொல்லப் போய், நான் வீணாக மன அழுத்தத்தில் சிக்கி இருக்கிறேன்.  இன்னும் சிலரை தவறாகப் புரிந்துகொண்டு அவர்களிடம் மனக்குமுறல்களை கொட்டப்போய் தேவையின்றி அவமானமும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். ஒருமுறை நானே நண்பனொருவனின் வேதனையை புரிந்துகொள்ளாமல் அவன் சொன்னதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு இப்போது உண்மை உணர்ந்து குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆறுதலுக்கு சாய்ந்து அழ தோள் தருவார்கள் என்று நம்பி, இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் மாட்டினால் உங்கள் கதை முடிந்தது. உங்கள் வேதனையை பலர் அறிந்து வைத்திருப்பதும் நல்லதல்ல. அது உங்கள் மன அழுத்தத்தை இன்னும் கூட்டலாம்.

எனவே மிகக் கவனமாக அந்த ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் நம்பிக்கையை வென்ற ஒருவர். உங்கள் மன அழுத்தத்துக்கு தீர்வு சொல்லத் தெரியாவிட்டாலும், அப்போதைக்கு  ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லத் தெரிந்த ஒருவர். குறைந்த பட்சம்  விம்மி அழும் உங்களை ஒன்றுமே சொல்லாமல்  தழுவிக்கொள்ளத் தெரிந்த ஒருவர்.

அப்படி ஒருவர் கிடைத்திருந்தால் உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது. அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால், அல்லது அப்படிப்பட்ட ஒருவரே தலையிடியாக மாறினால் வேறு வழியில்லை. கடவுளைப் பிடித்துக்கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கையை. அல்லது காலத்தை. தைரியம் இருந்தால் தொழில்முறை உளவள ஆலோசகர் ஒருவரை. குறைந்தது உங்கள் நம்பிக்கையானவர்  பட்டியலில் இதற்கென்றே இரண்டாம் தெரிவாக இன்னொருவரையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.  நிஜத்திலும் மாய பேஸ்புக் உலகிலும் ஆயிரம் பேரை நண்பர்கள் என்று சம்பாதித்து வைத்திருக்கிறோம். ஒரு இரண்டு பேரை தெரிந்தெடுப்பதா அதில் கடினமான வேலை?

சொல்வதற்கு எளிது தான். எப்போதாவது ஏடாகூடமான எண்ணம் வரும்போது இதெல்லாம் எத்தனை பயனற்ற வழிகள் என்று எனக்கும் தெரியும்.  அப்போது ஒன்றை மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும். கண்ணதாசனின் பொன்னான வரிகள்.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி தேடு. "

காரணம் பல கொண்டு கலங்குவோர் யாவரும் மீண்டு துலங்கியெழ என் அன்பும் பிரார்த்தனைகளும். 

 "எனக்கு மட்டும் ஏன் அத்தனை குறைத்துத் தந்தீர்" என்று புலம்புவோரே! 

அறிக. அமைதி கொள்க. 

"என் தேவனே, எனக்கு மட்டும் ஏன் இத்தனை நிறைத்துத் தந்தீர்?" என்று மன்றாடுவோர்  இங்குண்டு.

மேலும் வாசிக்க »

கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

0 comments
"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக் காண்பிக்கின்ற பிராந்தியத்தை தான் மட்டக்களப்புத் தேசம் என்கிறார்கள்.


இப்படிச் சொல்வதால், இந்த "கீழைக்கரை" என்ற வரையறை புதியது என்று அர்த்தமில்லை. அந்தப் பண்பாட்டொருமை ஏற்கனவே பல மானுடவியலாளர்களால் தெளிவாக இனங்காணப்பட்டிருக்கிறது. மட்டக்களப்புத் தேசம் என்ற வரைவிலக்கணத்தை விடப் பரந்த அர்த்தத்தில் மார்க் விட்டாகர் (Mark P Whitaker), டெனிஸ் மக்கில்வ்ரே (Dennis B. McGilvray) முதலிய மானுடவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கீழைக்கரை (East Coast) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் வியப்பு என்னவென்றால், கரையோரப்பட்டியில் நெடுக்குவாக்காக மூன்று மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 225 கிமீ தூரம் நீளும் பிராந்தியத்தில் நம்மால் அவதானிக்க முடியும் பண்பாட்டு ஒருமை, வெறும் 20 கிமீ பக்கவாட்டில் கரையோரத்திலிருந்து உள்நோக்கிச் சென்றால் அடியோடு மாறி சிங்களப் பண்பாடாகி விடுகிறது.

நிர்வாக ரீதியில் மட்டக்களப்புத் தேசம் இன்று மட்டக்களப்பு, அம்பாறை என்று இரு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள போதும், அவற்றின் கிராமங்களிடையே மணவுறவும் நட்புறவும் இன்றும் நீடிப்பதன் காரணம் அந்தப் பண்பாட்டொருமை தான். சொல்லப்போனால் இலங்கையின் வேறுபகுதி மக்களால் கூட இந்தப் பண்பாட்டுத் தனித்துவத்தை இலகுவாக வேறுபிரித்தறிய முடிகிறது என்பதை பலருடன் பழகக் கிடைத்த இப்பிராந்தியத்தவர்கள், அல்லது இப்பிராந்தியத்தவருடன் பழகக்கிடைத்த வேறுபகுதி மக்கள் இலகுவில் உணர்ந்துகொண்டிருப்பார்கள்.

இன்றைய ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் வலுவாகப் பேசப்படும், கீழைக்கரைத் தேசியம் அல்லது மட்டக்களப்பு முன்னிலைவாதம் என்பதும் இந்தப் பின்னணியிலேயே உருவாகி வளர்ந்த ஒரு கருத்தியல் தான். தமது பிரதேசம், அது சார்ந்த தனித்தேசியம் முதலிய தன்னுணர்வுகள் உருவாவது எப்போதும், அரசியல் கருதுகோள்களாலோ, திட்டமிட்ட திணித்தல்களாலோ சாத்தியமாவதில்லை. அப்படி திட்டமிட்டு உருவாக்க வேண்டுமென்றாலும், அந்தத் தன்னுணர்வுகளுக்கான வாய்ப்புகள் அல்லது நிகழ்தகவுகள் ஏற்கனவே குறித்த பகுதியில் உருவாகி நீடித்திருக்கவேண்டும்.

இந்தக் கீழைக்கரைத் தேசியத்தை உண்டாக்கி வளர்த்த முக்கிய காரணிகளில் ஒன்று கண்ணகி வழிபாடு என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆம். கிழக்கில் உருவான கண்ணகி இலக்கியங்களில் இப்படிச் சொல்வதற்கான பட்டவர்த்தமான சான்றுகள் கிடைக்கத்தான் செய்கின்றன.

கீழைக்கரையில் தோன்றிய பழைமையான கண்ணகி கோவில்கள் எவை, அவற்றைப் பின்பற்றித் தோன்றிய பிற்காலக் கோவில்கள் எவை என்பது விவாதத்துக்குரிய விடயங்களாக இருக்க, வந்தாறுமூலை முதல் தம்பிலுவில் வரையான கண்ணகி கோவில்கள் தமக்குள் நெருக்கமான பண்பாட்டுத் தொடர்பைப் பேணிவந்திருக்கின்றன. ஒருகோவிலில் உருவான இலக்கியமொன்றைப் பின்பற்றி வேறு கோவில்களில் அதே போல இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றமை, அதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

அடுத்த ஆரோக்கியமான படியாக, ஒரு கண்ணகி கோவிலைப் புகழ்ந்து ஒருவர் இலக்கியமொன்று இயற்றினால், அதன் இறுதிப்பாடல் இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் சகல தலங்களையும் புகழ்வதாக இயற்றப்பட்டிருக்கின்றன. தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவுக் காவியங்கள், இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களைப் பாடுவதைக் காணலாம்.

இப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களை ஒரே தலத்தில் நின்றபடி பாடுவது தேவாரம், திருவாசகம், சேத்திரத் திருவெண்பா என்று திருமுறைகளிலிருந்தே நீடித்து வரும் வழக்கம் தான். ஆனால் கீழைக்கரைக் கண்ணகி இலக்கியங்களைப் பொறுத்தவரை இந்தப் பாடல்கள் எப்போதும் தனது பிராந்தியத்துக்குட்பட்ட தலங்களை மாத்திரம் பாடுவதோடு நின்று கொண்டன. ஒரேயொரு புறநடை யாழ்ப்பாணத்து அங்கணாமைக்கடவை. அது ஏன் என்பதை வேறொரு இடத்தில் விரிவாக ஆராய்வோம்.

என்ன தான் வீடு, ஊர், தேசம் என்று மானுட அகம் சுருங்கியிருந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் பக்குவமடைந்து, அது முழு உலகம் நோக்கி விரிந்து விடுகிறது. தனித் தேசிய வரையறைக்குள் நின்ற கீழைக்கரை கண்ணகி இலக்கியங்கள் ஓரிடத்தில் முழு ஈழவளநாடு நோக்கி விரிந்துகொண்டன. அப்படி பரந்த பார்வை உருவான மைல்கல் தான் ஊர்சுற்றுக்காவியம்.

உடுகுச்சிந்து என்றும் அழைக்கப்படும் ஊர்சுற்றுக்காவியம், விபுலானந்தரைப் பெற்ற காரைதீவு மண்ணிலேயே தோன்றியிருக்கிறது என்பது, அகச்சான்றுகள் மூலம் தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்லிலிருந்து திருக்கோணமலை மாவட்டம் மாகாமம் வரையும், பின்பு அதைத்தாண்டி யாழ். அங்கணாமைக்கடவையையும் கண்டியையும் சேர்த்து, 25 ஊர்களில் குடிகொண்டிருக்கும் கண்ணகியைப் பாடும் ஊர்சுற்றுக் காவியம் கூடவே, கொக்கட்டிச்சோலை சிவன், பொன்னாலைத் திருமால், கதிர்காமக்கந்தன், சரஸ்வதி முதலிய கடவுளரையும் போற்றுகின்றது.

ஊர்சுற்றுக்காவியம் ஓரிடத்தில் ராசசிங்க ராசனைக் குறிப்பிடுவதால், அது கீழைக்கரை கண்டி அரசின் ஆட்சியின் கீழ் நிலவிய பிற்பாதியில் (17 - 18ஆம் நூற்றாண்டுகளிடையே) பாடப்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. அக்காலத்தில் தான் ராஜசிங்கன் என்ற பெயரைக் கொண்ட ஐந்து மன்னர்கள் கண்டியை ஆண்டிருக்கிறார்கள்.

தற்போது கிடைக்கும் ஊர்சுற்றுக்காவியத்தின் உய்வுப் பதிப்பில் (Critical Edition) 72 பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றில் பிறதெய்வங்களுக்குப் பாடப்படும் தனிப்பாடல்களைத் தவிர்த்தால் மொத்தம் 50 பாடல்கள் கண்ணகி மீது பாடப்பட்டவை.

எனினும் இதில் பல இடைச்செருகல்கள் சேர்ந்திருக்கின்றது தெரிகின்றது. ஊர்சுற்றுக்காவியத்தைப் பாடும் மெட்டும் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது. ஊருக்கு ஊர் இது வெவ்வேறு எண்ணிக்கையிலும், பாடல் ஒழுங்கு மாறுபட்ட விதத்திலும் கிடைக்கின்றது. மண்முனையையும் அங்கணாமைக்கடவையையும் பாடும் ஊர்சுற்றுக்காவியப் பாடல்கள் தனிக்காவியங்களாகவும் கிடைத்திருக்கின்றன.

எவ்வாறெனினும் ஊர்சுற்றுக்காவியம், சந்த அழகும் சொல் அழகும் நிறைந்தது. முதன்முறையாக அதைக்கேட்ட வெளியூர் நண்பரொருவர் "இதென்ன திருப்புகழா?" என்று கேட்டார். தமிழுலகு மறந்துவிட்ட காப்பிய நாயகியைப் போற்றுவதாலும், முழு இலங்கை நோக்கி விரிந்த பரந்த பார்வையைக் கொண்டது என்பதாலும், கண்டி அரசு காலத்தில் தோன்றிய பழைமையைக் கொண்டதாலும், எல்லாவற்றையும் விட அதன் சொல்லழகாலும், ஈழத்து தமிழ் இலக்கியங்களில் சிறப்பிடம் வைத்து நோக்கத்தக்கத்து உடுகுச்சிந்து.






களுவாஞ்சிக்குடியில் பாடப்படும் ஊர்சுற்றுக்காவியப் பாடல்கள், அவ்வூரின் பாரம்பரிய மெட்டுடன் இசையமைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் இறுவட்டாக வெளியிடப்பட்டன. அதை நீங்கள் இங்கு கேட்கலாம்.


களுவாஞ்சிக்குடி காவியம் 



தம்பிலுவில் காவியம்




ஊருக்கு ஊர் மெட்டு மாறுபடுவதை ஒப்பிட வசதியாக, களுவாஞ்சிக்குடி காவியத்தின் இறுதிப்பாடலையும், தம்பிலுவில் காவியத்தின் இறுதிப்பாடலையும் இங்கு விழியமாக இணைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் சந்த அழகை இரசிக்க மூன்று பாடல்களின் வரிகளையும் இணைத்திருக்கிறேன்.

ஒற்றை நவ ரெட்ணமணி ஒப்பரிய சுத்தனை
ஒப்பெழு தவப்பெரிய தொப்பைவயி றப்பனை
சித்திரமெ னத்தகுதி யப்பெரிய வெற்பனைச்
சித்தியென அத்திமுக வித்தக மருப்பனை
முத்தகு மெனத்தகு முருப்பான மூர்த்தியை
மூவருக் கருளும்வகை செய்தருளு மூர்த்தியை
மத்தமத மொத்தபனை யொப்பனைய கையனை
மகாகணப திக்கடவுள் தன்னைமற வேனே (01)

இதம்பட இரண்டருகு வேதமிசை பாட
இளங்கமுகு குங்கும குளிங்குமுக மென்ன
சதங்கையொடு தண்டைகள் அலம்பவடி மீதே
சலஞ்சல சலமென்று கோடுகள் ததும்ப
பதங்களொடு தொம்ததோம் தோமென விசைப்ப
பதஞ்சலி வியாக்கிர பதத்துமுனி காணச்
சிதம்பர சிதம்பரவெ னுங்கொடிய வன்கோடு
திரண்டடசி வந்தவினை சிந்தியோ டிடுமே (12)


மட்டுலவு பொற்பரி புரத்தைமது ரைப்பதியில்
மாறுமுயர் செட்டியை வதைத்திட அறிந்தும்
இட்டபெரு மட்டகிரி யைச்சரிசொல் வட்டமுலை
யைத்திருகி விட்டுநகர் சுட்டர சழித்தாய்
பெட்டெனைய கத்தடிமை யைப்பணி விடைக்குதவி
இடைச்சுவடு தன்கிருபை நின்கருணை புரிவாய்
கட்டுட னடக்குமுயர் காரேறு சோலைவாழ்
கண்ணகையை நெஞ்சினில் கருதவினை யறுமே.(34)

மேலும் வாசிக்க »

. கண்ணகியாள் குளிர்ந்தாடும் கவின்பதியாம் தண்பொழிலூர்

0 comments

சித்திரை வருடப்பிறப்பு பிறந்தால் கிழக்கிலங்கை ஊர்களில் ஒருவரை ஒருவர் காணும் போது சுகவிசாரிப்புகளுக்குப் பின்னர் பொதுவாக இரு கேள்விகள் வழக்கமானவை. "எப்பயாம் கதிர்காமக் கொடியேத்தம்?" என்பது ஒன்று. "எப்பயாம் கதவு திறக்குது?" என்பது அடுத்தது. கதவு திறப்பது என்பது, தன் ஊரில் அல்லது அடுத்துள்ள ஊரில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சடங்கு ஆரம்பமாவதைக் குறிக்கும். மற்றைய நாள்களிலெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் கண்ணகி கோவில்கள் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தான், குளிர்த்திச் சடங்கு ஆரம்பமாவதை "கதவு திறத்தல்" என்று சொல்கிறார்கள்.

ஆலய கிழக்கு நுழைவாயில்

ஏனென்றால் கிழக்கிலங்கையில் வைகாசி மாதம் என்பது கண்ணகிக்குரியது. அங்கு அமைந்துள்ள பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் எல்லாம் இப்படி "திருக்குளிர்த்திச் சடங்கு" என்று ஆதுரமாக அழைக்கப்படும் கண்ணகி விழா ஆரம்பமாகும்.  அங்குள்ள கண்ணகி கோவில்களில் பழமை வாய்ந்ததும் புகழ்மிக்கதுமான கோவில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிழக்கில் கண்ணகிக்காக அமைந்த முதற்கோவில் இது என்பது பொதுவான ஐதிகம். அதற்கும் பல தொன்மங்களைச் சொல்கிறார்கள்.

கண்டிமகாராசன் தன் தலைநகரில் கண்ணகிக்கு கோவில் அமைத்தபோது, அவன் கனவில் தோன்றிய தேவி, "உன் நாட்டில் பக்தி நிறைந்த ஊரிலேயே நான் குடியிருப்பேன்" என்று ஆணையிடுகிறாள். அரசன் அவள் விருப்பத்துக்கேற்ப அம்மனுக்கு ஒரு ஏடகம் (தேர்) செய்து ஊர்வலம் அனுப்புகிறான். அந்த ஏடகம் அம்மன் சொன்னபடி தானாகத் தரித்து நின்ற முதல் ஊர் தம்பிலுவில் என்பது அவற்றுள் முதன்மையான  தொன்மம். கீழைக்கரையின் ஏனைய ஊர்களில் அதன்பிறகே கண்ணகி கோவில் கொள்கிறாள். தம்பிலுவில் அம்மன் வழக்குரை காவியம் எனும் நாட்டார் இலக்கியத்தில் வரும் "பக்திசெறி தம்பிலுவில் ஊர்தனிலிருந்து" எனும் வரிகளை இந்த தொன்மக்கதைக்கு ஆதாரமாகச் சொல்வார்கள்.

நேரிழை தன்னொரு கலை நான்கு கலையாகி
நிலவு போலேயுலகில் நிறைபூசை கொண்டு
பாரிலுள்ளோர்களின் நோய்பிணி தவிர்த்து
பக்திசெறி தம்பிலுவில் ஊர் தனிலிருந்து
அரசறியும் அங்கணாமைக் கடவை காரைநகர்
வீரமுனை பட்டிநகர் களுவாஞ்சி மகிழூர்
பேரான கல்முனை கல்லாறெழுந்தருளி
பெருமையுடன் வரமளித்து இனிது காத்தவளே
-  அம்மன் வழக்குரை காவியம் 20

இன்னொரு கதையின் படி, தமிழகத்திலிருந்து கொணரப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் கொட்டியாறுத் துறை, இலந்தைத்துறை, கண்டபாணத்துறை எனும் மூன்று துறைமுகங்கள் வழியே கொண்டுவந்து  கோவில் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டதாகவும், அவையே இன்றைய சம்பூர் காளி, ஈச்சிலம்பற்று செண்பகநாச்சி, தம்பிலுவில் கண்ணகி என்றும் சொல்கிறார்கள்.

கண்டபாணத்துறை (திருக்கோவில்) வழியே வந்த கண்ணகிக்கு  தம்பிலுவிலுக்கு மேற்கே "ஊரக்கைக் கண்டம்" எனும் வயல்வெளியில், வீரைச்சோலை எனும் இடத்தில் அமைக்கப்பட்ட பத்தினி கோவில், பிற்காலத்தில் கைவிடப்பட்டு பாழடைந்துபோனது. சிலகாலத்தின் பின், இன்று ஆலயம் அமைந்துள்ள காரைத்திடல் எனும் இடத்தில் பெண்கள் விறகு பொறுக்கும் போது, பொற்புறாவொன்றைக் கண்டிருக்கிறார்கள். அங்கு கிடைத்த தெய்வக்குறிப்பின்படி, ஊரக்கையிலிருந்த அம்மன் சின்னங்கள் எடுத்துவரப்பட்டு இங்கு புதிய ஆலயம் அமைக்கப்படுகிறது. அக்கோவிலுடன் கண்டியின் நரேந்திரசிங்கன், இராஜசிங்கன் முதற்கொண்டு பல மன்னர்களும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். "தம்பிலுவில் மழைக்காவியம்" எனும் இலக்கியத்தில்  இராஜசிங்க மன்னனும் (1629 - 1687) "தம்பிலுவில் அம்மன் பள்ளு" எனும் இலக்கியத்தில் நரேந்திரசிங்க மன்னனும் (1707 - 1739) புகழப்படுவதைக் கொண்டு இந்தக்கூற்றை உறுதி செய்யலாம்.  

உண்மையில் கீழைக்கரைக்கு கண்ணகி வழிபாடு வந்தமைக்கு இரு நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று  சீதாவாக்கை சிங்களத் தொடர்பு. இதைச் சொல்வது, நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டு எனும் நூல். மதுரைக்குப் போய் கண்ணகியை வழிபட்டு வந்த சின்னத்தம்பிப் போடியார், அம்மன் ஆணைப்படி வோறாகோடைக் கல்லிலிருந்து சிங்களக் கட்டாடியாரைக் கொண்டுவந்து இறக்காமம் கோவில்மேட்டில் கண்ணகி வழிபாட்டை ஆரம்பிக்கிறார். அது அக்கரைப்பற்று பட்டிமேட்டுக்கு இடம் மாறியதையும், அதற்கு பகரமாக காரைதீவில் இன்னொரு கண்ணகி கோவில் தோன்றியதையும் அந்த நூல் சொல்கின்றது. 


இரண்டாவது ஆதாரம், யாழ்ப்பாணத்தொடர்பு. போர்த்துக்கேயர் காலத்தில் யாழிலிருந்து இடம்பெயர்ந்த ஒத்துக்குடா கந்தன் என்பவரால் கொணரப்பட்ட ஏழு கண்ணகி விக்கிரகங்கள் வட மட்டக்களப்பில் ஏழு ஆலயங்கள் அமைத்து நிறுவப்பட்டதைச் சொல்லிச் செல்லும் தொன்மம் இது. கீழைக்கரையை கண்ணகியின் மண்ணாக வளர்த்தெடுத்தது இந்த இரண்டாவது அலை தான் எனும் போதும், காலவரிசைப்படி பார்த்தால், இக்கோவில்கள் மேலே சிங்களத்தொடர்பு மூலம் உருவான கோவில்களுக்கு சற்று பிற்பட்டவை. இந்த இரு அறுதியான சான்றுகளுக்கு முன்பும் கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு நிலவியிருக்கிறது என்பதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, கடல் வழியே கண்டபாணத்துறை வந்த தம்பிலுவில் கண்ணகி பற்றிய தொன்மம். 

கோவில்மேடு  என்ற இடமே இனங்காணமுடியாதபடி  இப்போது முற்றாக மறைந்துவிட்டது. எனினும் பட்டிமேடு, காரைதீவு என்பவற்றோடு ஒப்பிட்டால், தம்பிலுவில் ஆலயம் அல்லது அதற்கு முன்னோடியான ஊரக்கை பத்தினி கோவில்,  காலத்தால் முந்தியது என்பதற்கும் இரு மறைமுக சான்றுகள் கிடைக்கின்றன. 

முதலாவது பட்டிமேடு மீது பாடப்பட்ட பொற்புறா வந்த காவியம். அந்த இலக்கியம், பொற்புறா வடிவில் வந்த நாகமங்கலை அம்மன் (கண்ணகி) குடியேறிய ஊர்களை தம்பிலுவில், இறக்காம நகர், காரைதீவு, பட்டிமேடு என்று தான் வரிசைப்படுத்திப் பாடுகிறது. 

அடுத்தது, காரைதீவுக் கோவில் உருவான தொன்மத்தில் சொல்லப்படும் தேவந்தியம்மையார், ஊரவர்களுடன் முரண்பட்டு அம்மன் சிலையுடன் புறப்பட்டு தற்காலிகமாகத் தங்கிய இடமாக தம்பிலுவில் அம்மன் கோவில் சொல்லப்படுகிறது. இந்த இரு கதைகளும் பட்டிமேட்டுக்கும் காரைதீவுக்கும் முன்பு தம்பிலுவில்லில் அம்மன் கோவில் இருந்ததை  வாய்மொழிச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் போதுமானவை.

கோட்டை அரசன் ஆறாம் விஜயபாகுவால் 1520ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இலங்கையின் முக்கியமான தமிழ்க்கல்வெட்டுகளுள் ஒன்றான "தம்பிலுவில் கல்வெட்டு" இந்தக் கோவிலில் தான் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு திருடுபோன தங்க மாங்கனி, விசயபாகு மகாராசா கொடுத்தது என்பதும் இங்குள்ள ஐதிகம். (இலங்கைத் தமிழ் - சிங்கள மரபுரைகளின் படி, கண்ணகி பாண்டியன் மாளிகையில் மாங்கனியாகத் தோன்றியவள்.) 

எனவே தம்பிலுவில் கண்ணகி ஆலயத்தின் காலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது சரியாகக் கூடும். எது எவ்வாறெனினும், இக்கோவில் கீழைக்கரையில் எழுந்த தொன்மையான கண்ணகி ஆலயங்களுள் ஒன்று  என்பதையேனும் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

தம்பிலுவில் அம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ள மடாலயம் ஆகும். கேரளப்பாணியில் ஓடு வேய்ந்து கலசம் பொருத்திய கருவறைக் கூரை, இக்கோவிலின் தனித்துவம். அதன் அழகை முழுமையாகக் கண்டு இரசிக்க முடியாதபடி அண்மையில் கொங்கிரீட்டில் படாடோபமாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுமண்டபம் நம் பொறுமையைச் சோதிக்கின்றது.

கேரளப்பாணி ஓட்டு மடாலயமும்  பழைய நாகதம்பிரான் பரிவார சன்னதியும்
2007 - 08களில்.
(படம்: கணேசமூர்த்தி பவணன்)


கருவறையில் உள்ள மூலவர் சிலை ஒன்றரையடி உயரமானது.  ஐம்பொன்னாலானது. அள்ளிமுடிந்த கொண்டையும் ஒரு கையில் பத்திரக்கொத்தும் அரைவிழி மூடிய திருமுகமுமாக எழிற்காட்சி தருவது. (பத்திரக்கொத்து என்றால் வேப்பங்குழை. பத்திரக்கொத்துக்கு இங்கு அம்மன் வழிபாட்டில் முக்கிய இடம் உள்ளது). அதன் அருகே அஞ்சல், அருளல், பத்திரக்கொத்து, சிலம்பு என்பன தாங்கிய  நான்கு திருக்கரங்களுடன் அம்மனின் சிறிய எழுந்தருளி மூர்த்தம் வீற்றிருக்கிறது. ஆனால் சடங்கு காலத்தில் மூன்றாவதாக, பத்திரக்கொத்தும் கமுகம்பாளையும் வைத்து அலங்கரிக்கப்படும் அம்மன் முகக்களையிலேயே அவள் எழுந்தருள்வதாக நம்புகிறார்கள். வீதியுலா, ஊர்வலம் எல்லாவற்றிலும் எழுந்தருளிக்கு முன்புறமாக அம்மன் முகக்களை உலாப்போவது வழமை.
                                  
வாய்கட்டி சடங்குப்பூசை செய்யும் கப்புகனார். 
முகக்களை, மூலவர், எழுந்தருளியின் அருட்காட்சி. 2012
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)

   
இந்தக் கருவறையும் நடுமண்டபமும் விழாக்காலங்கள் தவிர்ந்த நாள்களில் பூட்டப்பட்டே இருக்கும். நடுமண்டபக் கதவுக்கு முன்னே அம்மனின் ஓவியம் எழுதிய திரைச்சீலை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தற்போது செவ்வாய்க்கிழமைகளிலும்  வெள்ளிக்கிழமைகளிலும் இடம்பெறும் வாராந்தப் பூசைகள் இந்த அம்மனின் திரைக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் - வெள்ளிப் பூசைகள் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வழக்கங்கள் தான். அதற்கு முன், கோவிலுக்குள் என்ன; கோவில் வளாகத்துக்குள்ளேயே யாரும் நுழையமாட்டார்கள். "வருசத்துக்கொருகால் பூசை வௌவால் உறையும் கோவில்"  என்பது கீழைக்கரையின் கண்ணகி வழிபாடு தொடர்பாக பிரசித்தமான பழமொழி. தம்பிலுவில் கோவிலுக்கு முன்புறமாக அமைந்துள்ள ஆலமரங்களில் இன்றும் பெருந்தொகையான வௌவால்களைக் காணலாம். 

அம்மன் கோவிலைச் சூழவர பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் ஆகிய மூன்று "பரிகலத்" தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலின் இரண்டாம் வீதியில் எட்டுத் திசைத்தேவர்களுக்கான பலிபீடங்களும் காணப்படுகின்றன. கோவிலுக்கு கிழக்கே பழைய கிணறு அமைந்திருக்கிறது. பீடைநாசினிகள் கண்டறிய முன்னர், வயல்களில் களைகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த உள்ளூர் விவசாயிகளால் பயன்பட்ட மருந்து இந்தக் கிணற்றின் நீர் தான். இன்றும் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக நம்பப்பட்டு இக்கிணற்று நீரில் நீராடி அடியவர்கள் அம்மையை வணங்கி வழிபடுவதுண்டு.


தம்பிலுவில் ஊர் மக்கள் அவர்களது குல அடையாளங்களின் வழியே வடசேரி, தென்சேரி என்று இரு சேரிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். கண்ணகி அம்மன் கோவில் இதில் தென்சேரிக்கு பாத்தியதைப்பட்டதாகும். வடசேரியின்  குறித்த பிரிவு மக்களுக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் நிருவாக உரித்து இருந்தது. அதற்கு மேலதிகமாக கீழைக்கரையின் பாரம்பரிய விளையாட்டான கொம்புமுறியை நிகழ்த்துவதற்காக, "சாமி கோவில்"  சகல வடசேரியாருக்கும் உரித்துடையதாக இருந்தது. கண்ணகி அம்மன் கோவிலுக்கு வடக்கே 100 மீ தொலைவில் அமைந்திருந்த வடசேரிக் கோவில், கொம்புமுறி அருகிப்போன கடந்த நூற்றாண்டின் இறுதியில் சித்திவிநாயகர் கோவிலாக மாற்றம் கண்டுவிட்டது. தற்போது இன்னொரு சிறிய வடசேரிக்கோவில், சித்திவிநாயகர் கோவிலின் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

                   
கொம்புமுறி விளையாட்டுக்காக அமைந்த புதிய வடசேரிக் கோவில்
புதிய வடசேரிக் கோவில் மூலவர்
சாமி அல்லது கோவலன்

தென்சேரியை சேர்ந்த ஏழு குடிகள், பதினொரு பாகைகளாகப் பிரிக்கப்பட்டு இக்கோவில் நிர்வாகத்தில் பங்குவகிக்கின்றன. கோவிலை நிர்வகிக்கும் மற்றும் சடங்கை மேற்பார்வை செய்யும் மட்டக்களப்பின் பழம்பெரும் பதவியான "வண்ணக்கர்" பதவி, கட்டப்பத்தன் குடிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கோவிலின் பூசகர் "கப்புகனார்" என்று அழைக்கப்படுவதுடன், அவர் மழுவரசன் குடியிலிருந்தே தேர்வு செய்யப்படுவார். இவர் முன்பு மட்டக்களப்பின் ஏனைய கண்ணகி கோவில்கள் போல "கட்டாடியார்" என்று தான் அழைக்கப்பட்டிருக்கிறார்.  17ஆம் நூற்றாண்டில் இந்த அம்மன் மீது மழைக்காவியம் பாடிய பூசகர் தன்னை "கட்டாடி கண்ணப்பன்" என்றே குறிப்பிடுவதைக் கொண்டு இதை  உய்த்துணரலாம்.

கட்டப்பத்தன் குடியுடன்  மேலும் கோரைக்களப்புக் குடி, சிங்களக்குடி, வேடக்குடி, அறுபதுமுன்னங்கைச் சவடி குடி, குருக்கள் குடி, ஆகிய ஐந்தும் விஸ்வப்பிரம குலத்தினரும் இணைந்து  நிர்வாகத்தில் ஏழு குடிகளை அமைக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பு இப்படி தென்சேரிக்கு வரையறுக்கப்பட்டிருந்தாலும், இன்று வடசேரியில் அடங்கும் ஏனைய குடியினரும், நேர்த்தி வைக்கும் பல ஊர் மக்களும், ஏன் மாற்று மதத்தவர்களும் கூட இக்கோவில் வழிபாட்டில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். 

கண்ணகிக்கென நிகழும் குளிர்த்திச் சடங்கு, அவள் மதுரையை எரித்த பின்னர் அடியவர்களால் குளிர்விக்கப்பட்டு சீற்றம் தணிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐதிகத்துடன் தொடர்புடையது. பேச்சுவழக்கில் "குளுத்தில்" என்பார்கள். கோடை மிகுகின்ற காலமான வைகாசியில், இயற்கையை தாய்த்தெய்வமாக உருவகித்த ஆதிமனிதனின் மனது, அந்தத் தாய்த்தெய்வத்தை இரந்து வேண்டி குளிரக் கோரிய பழங்குடிச் சடங்கின் தொடர்ச்சியாக குளுத்திலைக் காணலாம்.  

கீழைக்கரையின் கண்ணகி கோவில்களில் குளுத்திலானது, அவற்றின் மரபைப் பொறுத்து இரு நாள்களில் இடம்பெறுகிறது. ஒன்று, வைகாசி மாத முழுநிலவு நாள். இரண்டாவது, வற்றாப்பளை கோவிலோடு ஒத்துப்போகும் வண்ணம், வைகாசி முழுநிலவை நெருங்கி வரும் ஒரு திங்கட்கிழமை. தம்பிலுவில்லின் குளித்தில் இதில் இரண்டாவது வகைக்குரியது. "வைகாசித் திங்கள் வருவோமென்று மாதுமையாளும் வரங்கொடுத்தாள்" எனும் பழம்பாடல் வரியொன்றை இதற்கு ஆதாரம் காட்டுகிறார்கள்.

                                     
குரவையும் தண்ணுமையும் ஒலிக்க திறக்கிறது திருக்கதவு, 2017 
(விழியம்: இராஜரெட்ணம் நர்த்தனன்)

குறித்த திங்கட்கிழமைக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை  அதிகாலை கோவிலில் கதவு திறக்கப்படும். இதில் கப்புகனார் அம்மனைக் குற்றம் குறை வாராமல் வேண்டி பழிகிடத்தல், வண்ணக்கரை திறப்புக்கொத்துடன் வீட்டிலிருந்து அழைத்துவரல் உள்ளிட்ட பல மரபுகள் உண்டு. கதவு திறந்து ஏழு நாளும், கோவில் பெண்களின் குரவையால் நிரம்பியிருப்பது இக்கோவிலின் அழகு. இந்நாட்களில் கோவிலுக்கு வரமுடியாதவர்களுக்காக அம்மன் தெண்டலுக்கு போதல் என்றோர் வழக்கமுண்டு. இளஞ்சிறுவன் ஒருவனை அம்மன் போல் அலங்கரித்து வீடுவீடாகப் போய் காணிக்கை சேகரித்து வீட்டாருக்கு திருநீறு கொடுத்து ஆசீர்வதித்து திரும்புவார்கள். 
                                  
              அம்மன் தெண்டல்
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)

கதவு திறந்ததிலிருந்து குளித்தில் வரை அம்மனுக்கு "மடைப்பெட்டி கொடுப்பது" வழக்கம். நெல், கமுகம்பாளை, வெற்றிலை, பாக்கு வைத்து, ஊருக்கு வந்திருக்கும் அம்மாளுக்கு உபசாரமாகக் கொடுக்கப்படும் பெட்டி தான் மடைப்பெட்டி. நேர்த்தி வைத்தவர்கள் மடைப்பெட்டியுடன் சேர்த்து தென்னம்பிள்ளை, சேலை, நகை, கற்பூரச்சட்டி, அடையாளங்கள், முதலியவற்றையும் கொடுப்பதுண்டு.  இந்த எல்லா நாட்களும் மடிப்பிச்சை, அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி, காவடி நேர்த்திகள் என்று கோவில் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும். 
                                  
மடைப்பெட்டி கொடுத்தல்

                                  
கண்ணகி வழக்குரை பாடுதல்
(விழியம்: இராஜதுரை கீதன்)
இரண்டாம் நாளிலிருந்து தினமும் மதியச்சடங்கு பூசையும், இரவுச்சடங்கு பூசையும் என இருவேளை பூசை நிகழும். இரவுச்சடங்குக்குப் பின் அம்மன் திருவீதியுலாவும்  இடம்பெறும். தினமும் கண்ணகியின் வரலாற்றைப் பாடும் "கண்ணகி வழக்குரை" எனும் நாட்டார் இலக்கியம் பாடப்படுவது வழமை. சடங்குப்பூசை முடிந்ததும் வழங்கப்படும் பாணக்கம் தான் இக்கோவிலின் முக்கியமான பிரசாதம். பாணக்கம் வாங்குவதற்கு அடியவர்கள் விளையாட்டாக முண்டியடிப்பார்கள். பாணக்கம்  என்று இங்கு சொல்லப்படுவது மா,பலா, வாழை, பேரீச்சை, சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் தான்.
                                 
இரவுச்சடங்கில் திருவுலாச் செல்லும் அம்மன் முகக்களையும் எழுந்தருளியும்.
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)


குளுத்தில் சடங்கில் முக்கியமான நாட்கள் இறுதி இரு தினங்களான ஞாயிறும் திங்களுமே. ஞாயிறு மதியச்சடங்கு கலியாணக்கால் நாட்டும் சடங்காகும். கண்ணகி வழக்குரையில் அன்றைக்குப் பாடவேண்டிய பாடல்கள் நிறுத்தப்பட்டு, கோவலன் - கண்ணகி திருமணப்பாடல்களே பாடப்படும். இளநீர்க் குரும்பைகள், பட்டுச்சேலைகள், முத்துமாலைகள் கொண்டு இளங்கன்னியும் அவளது நான்கு தோழியரும் போல கல்யாணக்கால்களை அலங்கரிப்பது மரபு.

                    
கல்யாணக்கால் அலங்காரம்

அன்று அம்மன் ஊர்வலம் வரும் நாள். அன்றிரவு ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏடகத்தில் வரும் அன்னையை சந்திக்கு சந்தி அலங்காரப் பந்தல்கள் கட்டி  வீட்டுவாசல்களில் நிறைகுடம் வைத்து  வரவேற்பார்கள்.  ஊரின் முக்கியச் சந்திகளில் "பள்ளுக்கு வளைதல்" எனும் கலையாடல் நிகழ்வதுண்டு. தென்னோலையை எரித்து அதைச்சுற்றி அம்மன் பள்ளு எனும் இலக்கியத்தைப் பாடி ஆண்கள் கைகொட்டி ஆடுவது தான் பள்ளுக்கு வளைதல். இது அம்மனுக்கு கண்ணூறு கழிப்பதற்காகச் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
                                   
அம்மன் ஊர்வலம்
(விழியம்: ஜனகன் சுந்தரமூர்த்தி)

பள்ளுக்கு வளைவது இப்படித்தான். 
இது கொம்புமுறியில் எடுக்கப்பட்ட விழியம்


திங்கள் இரவு வைகாசிப்பொங்கல். நேர்த்தி வைத்தவர்கள், கோவில் வளாகம் முழுதும் பானை வைத்துப் பொங்குவார்கள். அன்றிரவு நள்ளிரவு கடந்தபின்னர் குளுத்தில் ஆரம்பமாகும். கப்புகனார் சேலையில் மறைத்தபடி அம்மனைக் கொணர்ந்து "குளுத்தில் சட்டி"யில் வைக்க, நியமிக்கப்பட்ட அடியவர்கள் இருவர், "குளிர்த்திக்காவியம்" பாடுவார்கள். அதிகாலை வேளைக்குரிய நிசப்தமும், அரிவையரின் குரவையூடே அம்மானைக்காய்கள் சிணுங்குவதும், சிலம்பு கிலுக்குவதும், அசாதாரணமான உளநிலைக்கு நம்மை இட்டுச்செல்லும்.

                               
குளுத்தில் - பணிமாறல் - தீர்த்தம் தெளித்தல்
விழியம்: Battinews.com


குளுத்திலாடி முடிந்ததும் "பணிமாறல்" எனும் சடங்கு இடம்பெறுவதுண்டு. அம்மனுக்கு நேர்த்தியாக வந்த மூன்று சேலைகளை அடுத்தடுத்து உடுத்து, கப்புகனார், சிலம்பு கிலுக்கியபடி வலம்வருவார். குற்றம் குறை ஏதுமின்றி அவ்வாண்டுச் சடங்கை தான் ஏற்றுக்கொண்டேன் என்று அம்மன் சொல்வதன் அடையாளமாக பணிமாறலை அடியவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இறுதியாக அம்மன் குளுத்திலாடிய மஞ்சள் நீர் அடியவர்கள் மீது தெளிக்கப்பட்டு பொங்கல் பிரசாதம் வழங்கப்படுவதுடன் அவ்வாண்டுச் சடங்கு இனிதே நிறைவுறும். இறுதியாக கதவு அடைத்தல் எனும் மரபுடன், வண்ணக்கரை ஊர்வலமாக அவர் வீட்டுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், அன்றைய மரபுகள் முடிவடைந்து விடுகின்றன. பின்னர் மூன்று நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமையன்று நிகழும் "வைரவர் மடை" எனும் சடங்குடன் கோவில் மீண்டும் உறங்குநிலைக்குச் செல்கிறது.


குளுத்தில் என்பது ஒரு கொண்டாட்டம். ஒரு பண்டிகை. பொங்கல், சித்திரைக்குக் கூட புத்தாடை தரிக்காதவர்கள், இதற்கென குடும்பமாக புத்தாடை வாங்கித் தரித்துக்கொள்வதைக் காணலாம். ஊரில் மங்கல நிகழ்வுகளோ  அமங்கல நிகழ்வுகளோ இந்நாள்களில் நிகழ்த்தப்படாமல் தள்ளிப்போடப்படுகின்றன. குறித்த காலவேளையில் யாரும் மரித்தால், அவருக்குரிய ஈமக்கிரியைகள் கூட முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. அந்த மரணத்தில் அம்மனே கலந்துகொண்டு அவர் ஆன்மாவைச் சிவலோகம் சேர்ப்பதாக நம்பிக்கை என்பதால், பூதவுடலை அகற்றும் வரை, கோவிலில் சடங்குகளும் நிகழ்த்தாமல் ஒத்திவைப்பார்கள். வைகாசி பொதுவாக திருமணத்துக்கான மாதம் என்பதால், குளுத்தில், தம் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் - பெண் பார்க்கும் மையமாகவும் விளங்கியது. சுயதொழில், சிறுதொழில் முனையும் உள்ளூரார் தம் உற்பத்திகளை காட்சிப்படுத்தவும், அதன்மூலம் குறைந்தபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும்  உதவிய குளுத்தில், சமூகத்தின் பொருளாதார ஊக்குவிப்பு அலகாகவும் விளங்கியது என்பதைக் காணலாம்.

இப்படி சமூக ஒருங்கிணைப்பு மையமாக ஊருக்கு ஊர் தொழிற்பட்ட குளுத்தில், தம்பிலுவில்லில் மாத்திரமல்ல; இவ்வாண்டு கிழக்கிலங்கையின் சகல கண்ணகி கோவில்களிலும் சோபையிழந்தபடியே இடம்பெறுகிறது. வேறொன்றுமில்லை. கொரோனா அச்சுறுத்தல் தான். அடியவர்கள் கூடுவதில், திருவுலா நிகழ்த்துவதில், ஊர்வலம் செல்லுவதில், அனைத்திலும் கட்டுப்பாடுகள், வரையறுத்தல்கள். கோவிலுக்குள் நிர்வாகத்தினர் தவிர பொதுமக்களும் அடியவரும் நுழைவதில் இறுக்கமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்படி நுழைபவர்களும் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தூண்டப்படுவதுடன், சமூக இடைவெளியைப் பேணவும், இயன்ற விரைவில் கோவிலை விட்டு நீங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் கண்ணகி கோவில்கள் பல இப்போது பலத்த மரபு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. பல கோவில்களின் பூர்வீகமான மடாலய அமைப்பு, தற்போது மாற்றமுற்று ஆகமவிதிப்படி கோபுரமும் விமானமும் எழுந்து பூசனை முறைகளில் மாற்றம் கண்டுவிட்டன. கதவு திறத்தல் என்பதே இல்லாமலாகி, இப்போது நித்திய நைமித்திய பூசைகள் இடம்பெறும் ஆலயங்களும் ஏராளம். கும்பாபிஷேகம், சங்காபிஷேகம் என்பன சில கோவில்களில் இப்போது வழக்கமாகி இருக்கின்றது. எஞ்சிய காணிக்கைகளை என்ன செய்வதென்று தெரியாமல், பழமைவாய்ந்த அரிய கட்டிடங்களை இடித்தும் திருத்தியும் புதுக்கியும் மடங்களைக் கட்டியும் பணத்தை வீணே செலவழித்து வருகிறார்கள். காலத்துக்கேற்ப மாறவேண்டும் என்று சொல்லி மாற்றப்படுகின்ற எல்லாமே  தேவையான - மாற்றக்கூடாத மரபுகளாக இருக்க; பேணப்படவேண்டும் என்று வரையறுக்கப்படுகின்ற மரபுகளெல்லாமே   காலத்துக்கொவ்வாத - தூக்கியெறியப்பட வேண்டிய மரபுகளாக இருக்கின்றன.

உதாரணத்துக்குச் சொல்லப்போனால், கண்ணகி கோவில்களில் இடம்பெறும் அதிகாரப் போட்டிகளும் சமூக உட்பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் ஊன்றி நோக்கத்தக்கவை. இந்த ஜனநாயக யுகத்தில், கோவில் உறுப்பினர்கள், வேறு யாருக்கும் இடம் தராமல், தங்கள் ஆயுட்காலம் முழுவதும், நிரந்தரமாக நிர்வாகப் பதவிகளை வகிக்கலாம் என்பது போன்ற மரபுகள் இன்றைய இளந்தலைமுறையினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.  

தமிழ்ப்பண்பாட்டில் அம்மன் கோவில்களுக்கும்  இயற்கை - செயற்கைப் பேரிடர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அம்மன்கள் சீற்றம் மிகுந்தவர்கள் என்பதாலேயே, நித்திய வழிபாடுகளின்றி அவர்களை ஆண்டுக்கொருமுறை மட்டும் அழைத்து வழிபட்டு, பின் வழியனுப்பி வைப்பதாக ஐதிகங்கள் சொல்கின்றன.  பல நாட்டார் தெய்வங்கள்  கொள்ளைநோய்களை உருவாக்கியவை. பின் பக்தியால் இரங்கி கொள்ளைநோய்களிலிருந்து அடியவர்களைக் காத்ததாகவும் நாட்டார் தொன்மங்கள் நிலவுகின்றன. கண்ணகி கூட மதுரையை அழித்தவள் தான். அப்படி இருக்க, ஒரு ஊர் என்றன்றி, ஒரு பெரும்பிரதேசத்தில் நவீனக் கொள்ளைநோயால் அம்மனுக்கு வருடத்துக்கொருமுறை இடம்பெறும் பூசை கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருப்பதை பாமர மனது எவ்வாறு எடுத்துக்கொள்கிறது?

ஒருபுறம் இதை வழிபாட்டுரிமை மீதான மறுப்பாகக் காண்பவர்களும் இல்லாமலில்லை. அம்மன் வழிபாடே நோய்களிலிருந்தான பாதுகாப்புக்கானது எனும் போது,  ஒரு கொள்ளைநோய்க்கு அஞ்சி பொதுமக்களுக்கு வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுப்பது  அநீதி என்கிறார்கள் அவர்கள். "நோயிலிருந்து தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், இவர்களது இறைபக்தி என்பது வெறும் வெளிவேஷம் தானா?" என்பது இத்தரப்பினர் ஆவேசமாக முன்வைக்கும் கேள்வி. 

இப்படி ஒரு தரப்பினர் கொதிக்க, இன்னொரு தரப்பினர் இந்தக் கொள்ளைநோயையும் அம்மனின் கோபமாகவே காண்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. சில கோவில்களில்  நாகம் யாரையும் உள்ளே விட மறுத்து வாசலில் பழிபடுப்பதாக சொன்னார்கள், இன்னும் சில கோவில்களில் கருவறைக்குள் பிள்ளை அழும் சத்தம் கேட்பதாகக் கதை பரவியது. மரபுரைகளின் படி, பிள்ளை அழும் சத்தம் அம்மனுக்குப் பிடிக்காத ஒன்று. ஆக. இந்தத் தரப்பினர் சொல்வதன்படி, இவ்வாண்டு சடங்கில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அம்மனே விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளாள். அல்லது இவ்வாண்டுச் சடங்கை வழமை போல் சீரும் சிறப்புமாகக் கொண்டாட விரும்பாத அளவுக்கு அவள் கோபமாக இருக்கிறாள். 


நாட்டார் வழிபாட்டின் இயக்க சக்தியே தெய்வத்தை தங்களைப் போல் ஆசாபாசங்கள் நிறைந்த ஒன்றாகக் கருதிக்கொள்வது தான். கொரோனா போன்ற வெளி அச்சுறுத்தல்களை விட மோசமாக  அதிகாரப்போட்டி, கௌரவ முரண்கள், சமஸ்கிருத மேல்நிலையாக்கம் முதலிய அக அழுத்தங்கள், தமிழ் மரபு மாறாத பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன.  சீற்றம் கொள்ளாமல் அவள் என்ன தான் செய்வாள்?  இயற்கைச் சீற்றங்கள் மூலம் அவள் சொல்லும் செய்தி ஒன்றே. அவளாக முற்றழிக்கமுன்  நாமாகத் திருந்திக்கொள்வது நல்லது.  

(தினகரன் பத்திரிகையின் 2020.06.03 இதழில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். பத்திரிகைக் கட்டுரையைப் படிக்க இங்கு அழுத்துங்கள்.)




மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner