சாகாமம்

0 comments

சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக.

மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப் படையடுத்தது இப்படிச் சொல்லப்படுகிறது. "சோழர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, (விஜயபாகு) மன்னனின் இன்னும் இரு திறமை வாய்ந்த அதிகாரிகள் கரையோர 'வெள்ள மகாபத' பெருஞ்சாலை வழியே அனுப்பப்பட்டார்கள்...... அவர்கள் சாக்காமத்திலும் அதன் அருகே அங்குமிங்கும் இருந்த (சோழர்) காவலரண்களை சூறையாடினார்கள்." (மகாவம்சம் 58:41 - 47). 

சோழர்களின் ஆதிக்கம் கிழக்கிலங்கையில்  சாகாமம் வரை பரந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்வார்கள். சாகாமத்துக்குக் கிழக்கே உள்ள திருக்கோவில் ஆலயத்தை சோழர்களுடன் இணைக்கும் மரபுரைகளையும் இங்கு இணைத்து நோக்கலாம்.

விஜயபாகுவுக்கு நூறாண்டுகள் பிந்திய மகா பராக்கிரமபாகு மன்னனும் சாகாமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறான் என்பதையும் அதே மகாவம்சம் பதிவுசெய்திருக்கிறது. அதன் 75ஆம் அத்தியாயத்தில் இபப்டி வருகிறது. "இப்போது (மகா பராக்கிரமபாகுவின்) சகல பிரமுகர்களும் தலைவர்களும் தீகவாபிமண்டலத்தைக் கைப்பற்ற பெரும் படையுடன் வந்தார்கள். சவனவியளத்திலிருந்த பன்னிரு வாயில் கொண்ட அரணையும், கோமயகாமத்தையும் சாக்காமத்தையும், பின்னர் பலபாசாணத்தையும் அவர்கள் நிர்மூலமாக்கினார்கள்."  (மகாவம்சம் 75:1-4.

இதில் சொல்லப்படும் தீகவாபிமண்டலம், அம்பாறை மாவட்டம் இறக்காமத்துக்கு கிழக்கே அமைந்திருந்தது. கோமயகாமம் இன்று பொத்துவிலுக்கு வடக்கே உள்ள கோமாரி ஆகலாம். சவனவியளம், பலபாசாணம் ஆகிய மற்ற இடங்கள் எங்கெங்கு இருந்தன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தீகவாபிமண்டலத்தில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஏனைய சிங்கள அரசரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கவிரும்பவில்லை என்பதற்கு இந்தக் கிளர்ச்சி பற்றிய தகவல்கள் முக்கியமான ஆதாரங்கள்.      
மொட்டையாகல்லு மலை

சாகாமத்துக்கு வடக்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள மொட்டையாகல்லு மலை இன்னொரு விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வயல் நிலங்களின் மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்தக் குன்றின் கம்பீரம் வார்த்தைகளால் விளக்க முடியாதது.  அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் நடமாடிய இடம் என்பதற்கான ஆதாரம் அங்குள்ள பிராமிக் கல்வெட்டு.

மொட்டையாகல்லு பிராமிக் கல்வெட்டு.



அது பொ.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு. "தச பதிகன சவ கனய உபரஜ நாக" என்ற பாகதப் பொறிப்புக்குப் பொருள், "பத்து சகோதரர்களில் இளையவரான உபராஜன் நாகன்." என்பதாகும். பத்து சகோதரர்கள் என்பதை,  கிழக்கு உரோகணத்தை அல்லது இன்றைய மட்டு - அம்பாறை - அம்பாந்தோட்டைப் பகுதிகளை ஆண்ட கதிர்காம ஷத்திரியர்கள் பதின்மராக வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். 

மொட்டையாகல்லு குன்றின் உச்சியில் படிக்கட்டுகளும் சிதைந்த இடிபாடு ஒன்றும் அமைந்திருக்கின்றன. அதை புத்த தாதுகோபமொன்றின் சிதைவாகச் சொல்வதுடன், மொட்டையாகல்லையும் அதைச் சூழ சாகாமத்தில் சில இடங்களையும் தொல்லியல் பூமியாக வர்த்தமானிப் படுத்தி இருக்கிறார்கள். 


கழிகாம மலை

மொட்டையாகல்லு மலையிலிருந்து தென்மேற்கே பார்த்தால் கழிகாம மலையைக் காணமுடியும். அதன் இன்றைய பெயர் கோவிந்தஹெல. பழைய மட்டக்களப்புத் தேசத்தின் மேற்கெல்லை அது. வெள்ளையர்கள் அம்மலையை "Westminister Abey" என்று அழைத்தார்கள். கழிகாம மலையைக் குறிப்பிடும் சிதைந்த பதினாறாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கிடைத்திருக்கிறது. 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞானசங்கரிகள் ஸ்ரீவிசயவாகு தேவருக்கு யாண்டு 10வதில் தை மாசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் மேற்கு களி[காமமலை தெற்கு அறுகமனப்பூமுனை வடக்கு அன்பிலான்துறை]" என்பது சிதைந்த கல்வெட்டு வாசகம். கோட்டை அரசின் மன்னன் விஜயபாகு பொ.பி 1519இல் பொறித்ததாகக் கருதப்படுகிறது.



மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 02

3 comments


கைலாசபுராணத்தை அடுத்து உருவான கோணேசர் கல்வெட்டும், திரிகோணாசலபுராணமும் 17 - 18ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்க வேண்டும். கோணேசர் கல்வெட்டில் பாட்டு வடிவிலும், எழுத்து நடையிலும் சொல்லப்படும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்தோடு சொல்வது திரிகோணாசல புராணம். எனவே கோணேசர் கல்வெட்டைப் பின்பற்றியே திரிகோணாசல புராணம் தோன்றியிருக்கிறது எனலாம். அவை இரண்டும் தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் கோவில் பற்றியும் குறிப்பிடுகின்றன. திருக்கோணேச்சரம் 1624இல் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னரே, தம்பலகாமத்தில் ஆதிகோணை நாயகர் கோவில் உருவானது. எனவே கோணேச்சரம் இடிக்கப்பட்டு ஒரு சில தசாப்தங்கள் கழிந்தே இவை பாடப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

கோணேசர் கல்வெட்டின் பத்தாம் பாடல் “வார் குலவு களப முலைப் பிடிநடையை” குளக்கோடன் வழிபட்டதைப் பாடுகிறது. திரிகோணாசல புராணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பிடியன்ன மென்னடை என்ற பெயர் வந்திருக்கிறது. அதன் கடவுள் வாழ்த்திலும் மாதுமை அம்மையின் இடத்தில் “பிடியன்ன மென்னடை”யைத் தான் காண்கிறோம். மூன்றாவது திருநகரப் படலத்தில் “மங்கையாள் பிடியன்ன மென்னடையுடன் மருவி” என்றும், நான்காவது கோணவரைப் படலத்தில் “பெண்ணினுக்கரசாகிய பிடியன நடையும்” என்றும் வந்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் கடைசியாக இணையும் நூல்கள்  வெருகல் சித்திரவேலாயுதர் காதலும் கோணமலை அந்தாதியும். வெருகல் சித்திரவேலாயுதர் காதல், பதினேழாம் நூற்றாண்டில் தம்பலகாமத்து வீரக்கோன் முதலியாரால் பாடப்பட்டது. இதன் கடவுள் வாழ்த்திலும் இறுதிப்பாடலான வாழியிலும் “பிடியன்ன மென்னடை” தான் போற்றப்படுகிறாள்.  

கோணமலை அந்தாதி 1806ஆம் ஆண்டு திருக்கோணாசல சைவ ஆதீனத்தைச் சேர்ந்த புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகத்தால் பாடப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் நல்லை ஆதீனத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் தமிழகத்தில் திருவாவடுதுறை, பேரூர்,  மதுரை முதலிய சைவ ஆதீனங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆதீனங்கள்,  சைவ சமயம் சார்ந்த கோவில் நிர்வாகத்திலும் சமூக மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருபவை. திருக்கோணமலையில் சில ஆண்டுகளுக்கு முன் தென்கைலை ஆதீனத்தை தாபித்திருக்கிறார்கள். ஆனால் பன்னெடுங்காலமாக அங்கு திருக்கோணாசல சைவ ஆதீனம் இருந்ததென்பது பலருக்கும் தெரியாது. உப்புவெளியிலுள்ள சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோவிலடியில் இயங்கி வந்த இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் தான் புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகம்.   

ஆறுமுகப் புலவரால் பாடப்பட்ட கோணை அந்தாதியின் முப்பத்தைந்தாம் பாடல் “பிடியன்ன மென்னடைப் பெண்ணரசே” என்று தான் உமையை விளிக்கிறது. இந்த எல்லா நூல்களிலும் கிடைக்கின்ற  திருக்கோணேச்சரம் பற்றிய தொன்மங்களனைத்தையும் தொகுத்து “திரிகோணாசல வைபவம்” எனும் நூலை 1889இல் எழுதிய புலவர் திருமலை வ.அகிலேசபிள்ளை அவர்களும் மூலங்களில் உள்ளபடியே “பிடியன்ன மென்னடை” என்ற பெயரைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆக, இத்தனை சான்றுகளாலும், கோணேச்சரத்தில் வீற்றிருந்த அம்மனின் பெயர் “பிடியன்ன மென்னடை” தான் என்பது தெளிவாகப் புலனாகின்றது. பின்பு மாதுமை என்ற பெயர் எப்படி வந்தது? அது தான் கோணேச்சரத்து இறைவியின் பெயர் என்று யார், எப்போது கதை கட்டி விட்டிருக்கிறார்கள்?

போர்த்துக்கேயர் அழித்த பின்னர் மீளத் திருப்பணிகள் ஆரம்பமாகி, 1963இல் இன்றைய கோணேச்சரத்துக்கு முதலாவது குடமுழுக்கு இடம்பெற்ற போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாதுமையம்மையார் என்ற பெயர் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை அதற்கு முன்பு யார் எப்போது முதன்முதலாக பாவித்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே 1889இற்கும் 1963இற்கும் இடையில் இந்தப் பெயர் யாராலோ சூட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது அம்மையின் பழைய பெயர் வழக்கிழந்த பின் திருக்கோணேச்சர இலக்கியங்களில் தேடிய சிலர் இப்பெயரை அங்கு கண்டடைந்திருக்கலாம். உமையைப் பலவாறாக வருணிக்கும் போது ‘மாதுமை’ என்ற பெயர் திரிகோணாசல புராணத்திலும் கோணமலை அந்தாதியிலும் சில இடங்களில் வந்திருக்கிறது. ஆனால் அப்பெயர் கோணேச்சர இறைவியின் பெயராக இல்லாமல், இமயமலையில் தோன்றிய மலைமகள் உமையைக் குறிப்பிடவே எடுத்தாளப்பட்டிருக்கிறது.  

மாதுமை என்பது பிற்காலத்தில் அறியாமல் சூட்டப்பட்ட பெயராகவே இருக்கட்டும். மாது + உமை. அதுவும் அழகான தமிழ்ப் பெயர் தான். ஆனால் பிடியன்ன மென்னடை என்ற பெயரை அன்றாட வழக்கத்தில் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

உங்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம். நம் சமயத்திலும் இனத்திலும் மாற்றுவதற்கும் தீர்ப்பதற்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, கோணேச்சர இறைவி மாதுமையின் பெயரை ‘பிடியன்ன மென்னடை’ என்று பழையபடி மீட்பது தான் முக்கியமான பிரச்சினையா இப்போது? இந்தப் பெயரை விட அந்தப் பழைய பெயருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால், காரணம் இருக்கிறது, மொத்தம் நான்கு காரணங்கள்.

முதலாவது அதன் தமிழ் அழகு. ‘பிடியன்ன மென்னடை’ என்பது அசாதாரணமான ஒரு தமிழ்ப்பெயர். நாம் முன்பே பார்த்த யாழைப்பழித்த மொழி, பண்ணினேர்மொழி, சுரும்பார்குழலரிவை என்பன போல, பொருள் உள்ள, நயம் பொருந்திய இனிய பெயர். உச்சரிப்பின் இடையே ‘ஷ்’ஓ ‘ஸ்’ஓ வராத பெயர்கள் ஓசைநயமற்றவை என்று கண்டபடியெல்லாம் பெயர் வைக்கின்ற நாம், இனி எதிர்காலத்தில் கூட இப்படி ஒரு பெயரை குழந்தைகளுக்குச் சூட்டப்போவதில்லை. அந்தப் பெயர் ஒரு மறைந்த பாரம்பரியத்தின் அடையாளமாக எஞ்சியிருக்கட்டும். எஞ்சியிருக்கவும் வேண்டும். அந்தப் பெயரையும் வடமொழிக்கு மாற்றி உச்சரிக்க சிலர் விரும்பலாம். அதற்கு அனுமதிக்கவேண்டிய அவசியம் இப்போது இல்லை.

இரண்டு, அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி. குறைந்தது 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒரு பெயர், தமிழ் ஞானசம்பந்தன் திருவாய் மலர்ந்த ஒரு பெயர், நூறாண்டுகளுக்கு முன் வரை வழக்கில் இருந்த பெயர், மறக்கடிக்கப்பட்டு, யாரோ ஒருவரால் முன்மொழியப்பட்ட பெயரொன்றால் இன்று அங்குள்ள தேவியை அழைக்கிறோம். அது அறியாமல் மரபில் ஏற்பட்டு விட்ட ஒரு இடைவெளி.  அந்த வரலாற்றுச் சரடு அறுபட்டு விடக்கூடாது. அவள் பழைய பெயரிலேயே அறியப்பட வேண்டும்.

மூன்று, அப்பெயரின் வரலாற்று முக்கியத்துவம். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணிக மையமாக, இயற்கைத் துறைமுகமாக, முக்கியமான அரசியல் களமாக, இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது திருக்கோணமலை. இலங்கைப் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கப்படும் சின்னங்களில் யானையும் ஒன்று. வரலாற்றுக் காலத்திலிருந்து பிரித்தானியர் காலம் வரை இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் முக்கியமானவை யானைகளும் யானைத்தந்தங்களும் யானைத்தந்தங்களில் விளைந்த முத்துக்களும். வியாபாரம், படையெடுப்பு என்று இங்கு பெருமளவு யானைகள் ஒருகாலத்தில் கூடியிருக்கும். ஆக, கோணமலைத் துறைமுகத்தின் கரையில் வீற்றிருக்கும் உமையவள் பிடிநடையாக இனங்காணப்பட்டதன் பின்னுள்ள கவித்துவம் அற்புதமானது. அப்படி அவளை கண்டவன் மகத்தான ஒரு கவிஞனே தான்.   

மிக முக்கியமானது இறுதிக் காரணம். அந்தப் பெயரை வெறுமனே இலக்கிய அழகு, பெண்ணின் நடை அழகு என்று சுருக்காமல், அந்தப் பெயரின் பின்னுள்ள குறியீட்டை புரிந்துகொள்வது. சோழர் காலத்தில் கொடை அளிக்கப்படும் நிலங்களை பெண் யானைகளைக் கொண்டு அளந்து கொடுப்பது வழக்கமாக இருந்தது. இலங்கையில் கூட அந்த வழக்கம் இருந்திருக்கிறது. கந்தளாயில் கிடைத்த இரண்டாம் கஜபாகுவின் கல்வெட்டொன்றில் “கந்தளாய்ப் பிரமதேயம் பிடி நடந்த பூமி” என்ற வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிடி நடந்த பூமியைக் கொடையளிப்பது அரச வழக்கம். எனவே ஒரு மறைந்து போன வழக்கத்தின் சாட்சி நம் பிடியன்ன மென்னடை அம்மை. 

கோணமாமலையில் வீற்றிருக்கும் மாதரசி, பிடி போல நடப்பவள். அவள் நடக்கும் இடமெல்லாம் தானம் அளிக்கத் தகுதி பெற்று விடுகின்றன. இலங்கைத்தீவின் தொன்மையான நகரொன்றில் பிடியானையின் மதர்ப்போடு நின்றிருக்கும் அந்த மூதன்னை மிக மெதுவாகத் தான் நடை பயில்கிறாள். இல்லாதவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தை அளந்து அளந்து அள்ளிக் கொடுத்துக்கொண்டே செல்கிறாள். நிலத்தை, நிம்மதியை, நீதியை இழந்து கொண்டிருப்பவர்கள் சென்று கையேந்த வேண்டியது அந்தப் பிடியானையிடம் அல்லவா? அந்த யானையோடு மண்ணாளும் கோணை மன்னனிடம் அல்லவா?

மேலும் வாசிக்க »

கூத்து என்னும் மக்கள் கலை

0 comments
விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல்
கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி. சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தித்து தனது ஆய்வுத்தலைப்பு திருக்கோவில் பிரதேச கூத்துக்கலையை மையமாகக் கொண்டது என்பதைக் கூறி, அது தொடர்பான ஓரிரு வாய்மொழி வரலாறுகளை சேகரித்துச் சென்றிருந்தார்.

திருக்கோவில் பிரதேசம் பழைய மட்டக்களப்புத் தேசத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த தொட்டில். அங்கு நீடிக்கின்ற கலைக்கும் நீண்ட வரலாறு உண்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில், காலனித்துவ காலம் வரை ஆடல் பெண்கள் பணியாற்றிய தகவல் கிடைக்கிறது. அக்கோவிலின் நிர்வாகத்தில் முதன்மை இடம்பிடிக்கும் சமூகப்பிரிவொன்று தனது பட்டமாக "நட்டுமுட்டு நாடகசாலை கொண்ட கோத்திரம்" என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. நட்டுமுட்டு என்றால் மேளதாளம். திருக்கோவிலின் வரலாற்று பூர்வமான தோற்றத்திலிருந்து இங்கு மேளதாளத்திற்கும் நாடகசாலைக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக அப்பெயரைப் புரிந்துகொள்ளலாம்.

வசந்தன் ஆட்டத்துக்கு (சிறுவர் கோலாட்டக்கலை) ஒருகாலத்தில் புகழ்பெற்ற இரு ஊர்களில் ஒன்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிலுவில் (மற்றைய ஊர்  காரைதீவு).  மட்டக்களப்புக் கூத்தின் இரு வகைகளில் ஒன்றான தென்மோடிக்கூத்தைப் பழக்குவிப்பதில் பெயர் போன பழைய அண்ணாவிமார் கோளாவில் மற்றும் தம்பிலுவில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். ஆண்கள் கைகொட்டி ஆடும் "பள்ளுக்கு வளைதல்" எனும் கலையாடல் இங்குள்ள தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலை மையமாக வைத்து உருவாகி, இங்கு மட்டும் நீடிக்கின்ற தனித்துவமான கலை. இவை எல்லாம் இப்பிரதேசம்  முற்காலத்தில் கலைவளர்ச்சியில் ஆற்றிய தவிர்க்கமுடியாத பங்கைச் சொல்வன.

சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்து
திரு.மு.பராந்தகன், திருமதி.சிவகாமிதேவி முருகமூர்த்தி, திரு.மு.விஜயாலயன்

இன்று இங்கு ஆடப்பட இருப்பது வெடியரசன் கூத்து. கண்ணகியின் காற்சிலம்பில் நாகமணிகளை இடுவதற்காக மீகாமன் இலங்கை வருவதும், அவனை வெடியரசனும் தம்பியரும் எதிர்ப்பதும், அவர்களை வென்று மீகாமன் நாகமணி பெற்றுச் செல்வதும் கதை. கூத்தைப் பழக்கிய விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தினர் எனக்கு ஏற்கனவே நெருக்கமானவர்கள். இந்தக் கூத்தின் அண்ணாவியார் திரு.முருகமூர்த்தி விஜயாலயன் அண்ணாவின் வழிகாட்டலிலேயே  நான் நான்கைந்து தடவை கூத்தாடியிருக்கிறேன். அவரது தமையன் திரு.மு.பராந்தகனே பன்னிரண்டு வயதில் எனக்குக் கூத்தைப் பழக்குவித்த அண்ணாவியார்.  பல அண்ணாவிமார் இன்றும் கூத்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், தம்பிலுவில் கிராமத்தின் மரபுவழிக் கூத்து இவர்கள் பழக்குவிக்கும் கூத்தில் இன்றும் பொலிவுடன் பிரகாசிக்கக் காரணம், அவர்களது மறைந்த தந்தையார் அமரர் திரு.முருகமூர்த்தி அண்ணாவியாரும், அவர் மறைவுக்குப் பின்னும் கூத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த அவர்களது தாயார் திருமதி. சிவகாமிதேவி அம்மையாரும் தான் என்பேன்.

            
கொழும்புப் பல்கலைக்கழக விண்ணகர் விழாவில் விஜயாலயன் அண்ணாவியாரின் வழிகாட்டலில் கட்டுரையாசிரியனும் பல்கலை நண்பர்களும் டிய "பாசுபதாஸ்திரம்" வடமோடிக்கூத்து


பதினேழாம் திகதி மாலை, விநாயகபுரம் சிவன் கோவில் முன்றலுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கே சென்று விட்டேன். வட்டக்களரியை அழகாக சோடனை செய்திருந்தார்கள். கோவிலின் தலைவர் திரு.வி.ஜெயச்சந்திரன் அவர்கள், ஆசிரியை மற்றும் எழுத்தாளரான திருமதி. ஜெகதீஸ்வரி நாதன் அம்மையார், திருக்கோவில் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிரோஜினி தவநீதன் அவர்கள், கிராம சேவையாளர் திரு.அ.அனீர்த்தன் முதலிய விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் ஐயா மற்றும் விரிவுரையாளர் திரு.கௌரீஸ்வரன் ஐயா, ஆய்வுமேற்பார்வையாளரான திரு.ச.சந்திரகுமார் ஐயா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.  சந்திரகுமார் சேரை பாடசாலைக் காலத்திலேயே அறிவேன். ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் கூத்து பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் இரசிகர்களுக்கு, தாங்கள் ஏற்கும் பாத்திரங்களை விட நடிகர்களே முனைப்பாகத் தெரிவார்கள்.  கூத்திலும் பாத்திரத்தை விட தங்களில் ஒருவரான நடிகரையே மக்கள் அதிகம் இரசிப்பார்கள். அவர் உறவினர் என்றால் மாலை அணிவிப்பது, அன்பளிப்புக் கொடுப்பது, சால்வை அணிவிப்பது இதெல்லாம் கூத்து இடம்பெறும் போதே நடக்கும். அதை யாரும் இடையூறாகவோ, கூத்தின் தொடர்ச்சித்தன்மை தடைப்படுவதாகவோ கருதுவதில்லை. மாறாக பார்வையாளர், நடிகர்கள் இருதரப்பினரையும் குதூகலமூட்டும் நிகழ்வாகவே அது கருதப்படும்.

வட்டக்களரி

வட்டமாகக் களரி கட்டி அதில் ஆடப்படுவது தான் கூத்து. இதனால் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பார்வையாளர்களால் கூத்தைக் கவனிக்க முடியும்.  இப்போது வசதி கருதி ஒருபக்க மேடையில் கூத்து ஆடப்படுவதால், அதன் மரபார்ந்த மக்கள் ஊடாட்டத் தன்மை குறைந்து விடுகிறது.  வட்டக்களரிக்குள் தைரியமாக நுழையும் ஒரு உறவினனுக்கு மேடை சற்று உயரமான - அசௌகரியமான நுழைவிடமாகத் தோன்றுகிறது. இன்றைய சமூகக் கலை மாற்றங்களிலுள்ள இந்த  இடைவெளியைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டோம்.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தலைமை உரை, விருந்தினர் உரை, ஆய்வுமாணவி உரை முதலிய அம்சங்கள் முதலில் இடம்பெற்றன. மாணவர்களை மக்கள் கலைஞர்களிடம் அனுப்பி, மக்கள் கலையை முறைப்படி கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கும் தமது, "அடிப்புறத்திலிருந்து அடிப்புறத்திற்கு" எனும் கற்கை முறைமை பற்றி தலைமையுரையாற்றிய சந்திரகுமார் சேர் விளக்கமளித்தார். 
சந்திரகுமார் சேர் உரையாற்றுகிறார்

சிற்றுரை ஆற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கூத்துக்கலையை இலங்கைத் தமிழரின் தேசியக்கலையாக வளர்த்தெடுப்பது பற்றியும் கலைகளைப் பொதுமைப்படுத்தலிலுள்ள அபத்தம் பற்றியும் பேசினேன்.  இவை முன்பொருமுறை பேராசிரியர் மௌனகுரு ஐயாவுடனும் உரையாடிய விடயங்கள் தான். தேசியக்கலையாக கூத்து வளர்க்கப்படவேண்டும் என்றால், அது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவை எடுக்க வேண்டும். ஆனால் கூத்தில் இங்கு ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான ஆட்டமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக "தாளம் தீர்தலை" சொல்லலாம்.

ஆட்டம் முடிந்துவிட்டதை, அல்லது பாத்திரம் பேசுகின்ற வசனம் முடிந்துவிட்டதைச் சொல்கின்ற ஆட்டமும் அதற்கேயான மத்தள அடியும்  தாளம் தீர்தல் எனப்படும். நான் அவதானித்த கொக்கட்டிச்சோலை மரபில் அல்லது வடமட்டக்களப்பு மரபில் "தாம்தாம் தரிகிட தெய்" என்ற தாளக்கட்டுடன் தாளம் தீர்க்கப்படுகிறது.   ஆனால் தம்பிலுவில் மரபில் அல்லது திருக்கோவில் பிரதேச மரபில் "தாம்தாம் தரிகிட தெய் ததிங்கிண" என்று 'ஒரு தாளம்' கூட்டப்பட்டே தாளம் தீர்க்கப்படுகிறது. கூத்துக்கான ஒரு பொதுவடிவம் உருவாக்கப்படும் என்றால் இதில் எதை ஏற்பது, எதை விடுவது, இந்த ஏற்பையும் விடுகையையும் தீர்மானிப்பது எது - எப்படி? போன்ற கேள்விகள் இலகுவில் விடைகூற முடியாதவை.  ஈழத்தமிழர் தேசியக்கலையாக கூத்தை வளர்க்கும் போது, அந்தந்த ஊர் மரபை தனி ஆட்டமுறையாக (style)  உள்வாங்கி பொதுமைப்படுத்தலைச் செய்து முடிப்பதே சாத்தியமானது என்பதைச் சொன்னேன்.

உரை முடிந்து வந்தமர்ந்ததும், கௌரீஸ்வரன் சேர் உரையில் நான் பயன்படுத்திய 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லாடல் தொடர்பில் தன் கருத்தைச் சொன்னார். அது மக்கள் கலையான கூத்தை இழிவுபடுத்துவதற்காக குறிப்பிட்ட தரப்பினர் வலிந்து உருவாக்கிய சொல்லாடல் என்றும், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம் என்றும் குறிப்பிட்டார். 

இதில் என் கருத்து வேறாக இருந்தது. முன்பொருமுறை கூத்தாடிய ஒரு பெரியவர் சொன்ன விடயம் அது. சாஸ்திரிய பரதநாட்டியத்தில் தட்டடவு, நாட்டடவு எனும் ஆட்டவகைகள் உண்டு. கூத்தில் பெரும்பாலும் கால்களைத் தட்டி ஆடுவதே வழமை. ஆனால் விறுவிறுப்பான மற்றும் இரசிக்கத்தக்க இடங்களில் எல்லாம் கால்கள் வேகமாக நாட்டப்பட்டே ஆடுகின்றன. எனவே நாட்டுக்கூத்து என்பது ஆட்டங்களில் கால்களின் அமைவை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல்லாடல் என்பதே என் கோணம் என்பதைத் தெரிவித்தேன். அவர் உள்ளூர் வழக்கை விசாரித்தார். அப்போது தான் பழையவர்கள் சாதாரணமாக 'கூத்து' என்றே பயன்படுத்துவதையும், இளந்தலைமுறையினரும் கூத்து அருகிய காலத்தைச் சேர்ந்த மூத்தவர்களுமே 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவதையும் உணர்ந்தேன். இன்றைய பயன்பாட்டில் அதை இயல்பாக கூத்து என்றே சொல்லலாம். வலிந்து நாட்டுக்கூத்து என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. தேவையான இடங்களில் மட்டும் வடமோடி -  தென்மோடி என்றோ, வடபாங்கு - தென்பாங்கு என்றோ,  அதன் வகை சார்ந்து குறிப்பிட்டுக்கொள்ளமுடியும் என்றார் கௌரீஸ்வரன் சேர். அவர் கருத்து சரியானதே என்பதை ஏற்றுக்கொண்டேன்.  

கூத்து 9 மணியளவில் துவங்கியது. வட்டக்களரி பொலியத் தொடங்கியது. வேட்டி மறைப்பில் பாத்திரங்கள் உள்நுழைந்தார்கள். நண்பர்களும் உறவினர்களும் மலர்மாலைகள், சால்வைகள் அணிவித்து  நடிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆடிய எல்லோருமே பதின்பருவத்தினர் என்பதாலும், அது அவர்களுக்கு புதிய அனுபவம் என்பதாலும், இரசிக்கத்தக்க வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டு ஆடினார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் வட்டக்களரியை நெருங்கி அமர்ந்து நாடிகளை கைகளால் தாங்கியபடி ஆட்டத்தை உன்னித்துக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஏனைய பார்வையாளர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிப்படும்படி இருந்தது. ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் அவர்களையே சுட்டிக்காட்டி பூரித்துக்கொண்டிருந்தார்கள். "மக்கள் கலைகள் மக்கள் மத்தியிலேயே ஆடப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புவது இதற்காகத்தான்" என்றார்கள்.  

கூத்து நடிகர்களை தனிப்பட்ட ரீதியிலும் அறிவேன். அவர்களுடன் இரண்டு தடவை கூத்தாடிய அனுபவம் எனக்குண்டு. ஒருபுற மேடைக்கு பயின்றுவிட்டிருந்ததால், ஓரிருவர் வட்டக்களரி ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறினார்கள். ஆனால் பயின்ற விழிகளும் இலகுவில் அடையாளம் காணமுடியாதபடி இலாவகமாக அந்தத் தடுமாற்றத்திலிருந்து மீண்டு ஆடினார்கள்.  வழக்கத்தை விடச் சிறப்பாக விஜயாலயன் அண்ணாவியாரின் மத்தளம் 'பேசியது'. கோலாகலமாக கூத்து இடம்பெற்று முடிந்ததும் தங்கை விலோஜினியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

கூத்துக்கலைஞர்கள் மற்றும்  விருந்தினர்கள்
இறுதியாக அன்றைய நிகழ்வு பற்றிய சில கண்ணோட்டங்களை கலாநிதி.ஜெயசங்கர் ஐயா அவர்கள் பகிர்ந்துகொண்டார். மக்கள் கலையான கூத்து இன்று இருப்பதை விட சீரிய நிலையை சீக்கிரமே அடையவேண்டும். சிறுவர்களுக்கான கதைகளை வைத்து சிறுவர் கூத்துக்கள், சமூகக் கூத்துக்கள் அதிகம் எழுதப்பட்டு ஆடப்படுகின்றன, இனியும் ஆடப்படவேண்டும் என்பதைத் தெரிவித்த அவர், மண் சார்ந்த கதைகளும் கூத்து வடிவம் பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதே திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலின் தோற்றம் பற்றிய மனுராசா - தம்பதிநல்லாள் தொன்மங்களைக் கூத்தாக்கலாம், தம்பிலுவில் கண்ணகி அம்மனோடு தொடர்புடைய செண்பகநாச்சியார் - நாகமங்கலை - பொற்புறா முதலிய தொன்மங்களை கூத்து வடிவமாக்கலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவை செயலுருவாக்கம் அடைந்தால் நன்றாக இருக்கும்.    

நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றதற்காக சகோதரி விலோஜினிக்கும், விஜயாலயன் அண்ணா மற்றும் சிவகாமி அம்மாவுக்கும் நன்றி கூறி, அனைவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினேன். விடைபெறும் போதும், விருந்தினர்கள் பார்வையாளர்கள் காட்டிய ஈடுபாட்டைச் சொல்லி வியந்து கொண்டார்கள். உண்மையில் கலைகளை இரசிப்பதற்கு ஒரு மனநிலை வேண்டும். திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமில்லாத நண்பனோடு நீங்கள் திரையரங்கு போக முடியாது. சங்கீத ஞானம் இல்லாத துணையோடு நீங்கள் கர்நாடக இசைக்கச்சேரியில் அமர்ந்து தலையாட்ட முடியாது. கூத்தும் அப்படித்தான். அதற்கும் ஒரு ஆர்வம், ஒரு தயார் மனநிலை வேண்டும். ஆனால் சுமார் நூறு அளவில் கூடியிருந்த இந்தக் கூட்டம் சொல்லி வைத்தால் போல் வயது வித்தியாசமின்றி கூத்தோடு ஒன்றித்து நின்றது ஆச்சரியம் தான். இந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே இந்தக்கலை அத்தனை நெருக்கமானதா?  அல்லது இந்தக்கதையை  விரும்பி இரசிக்கும் பழந்தமிழ் ஆழ்மனம் இவர்களில் விழித்துக்கொண்டதா? விழித்துக்கொண்டால் நல்லது தான். முழுத்தமிழ்ச்சமூகமும். 

மேலும் வாசிக்க »

உடுராஜமுகி

0 comments


ஒரு 18+ பதிவு.

பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம். 



2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம்.


2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிகை நேகா பாண்ட்சே ஆடுவது போலமைந்த காட்சியமைப்பு. படு மோசமான நடனக்காட்சி. 

உடுராஜமுகி - ஆண் வேற்றம்

பாடலை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. பாடல் வரிகளின் அர்த்தம் ஓரளவு புரிந்து பின்னர் அந்தப் பாடல் என் கைபேசி பாடல் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம்பெறத் தொடங்கியது. திரைப்படத்தில் இடம்பெற்றது மதுபாலகிருஷ்ணன் பாடிய ஆண் வேற்றம் (version). ஆனால் எனக்குப் பிடித்தது மஞ்சரி பாடுகின்ற பெண் வேற்றம் தான். 

உடுராஜமுகி - பெண் வேற்றம்

இந்தப் பாட்டின் பொருளை அறிந்தது உண்மையில் ஒரு சோகக்கதை. நான் முறைப்படி சமஸ்கிருதமோ மலையாளமோ கற்றவன் அல்லன். பாடலில் வந்த "சமுத்ரசுதா' (அலைமகள்) என்ற சொல்லை மட்டும் புரிந்து கொண்டு 'மகாலட்சுமியின் பக்திப் பாடல் போல. நன்றாக இருக்கிறது. நவராத்திரி காலத்தில் பாடுவோம்' என்று தான் இணையத்தில் பொருள் தேடிப் பாடமாக்கினேன். பிறகு தான் தெரிந்தது, வெறுமனே பெண்ணைப் பாடும் பாடல்தான் அது என்று. எப்படியோ பாடலாசிரியன் மகாரசிகன் என்று மட்டும் தெரிகிறது.
 ‌
ஏனென்றால் இது சிருங்கார ரசம் பொருந்திய இனிய பாடல். பொருளைப் பார்த்துவிட்டு நீங்கள் தலைதெறிக்க ஓடக்கூடாது என்று தான் முன்னெச்சரிக்கையாக ஒரு 18+ போட்டுவைத்தேன். (ம்கும். இவன் அப்படி என்ன 18+ எழுதியிருக்கிறான் என்று பார்க்கத்தான் நீங்கள் வந்தீர்கள் என்று எனக்கு தெரியாமலில்லை.) சரி, யூடியூப்பில் பாட்டை இயக்கியபடியே பாருங்களேன் பொருளை. 

"‌நிருபம ப்ரஹ்மாண்ட சம்மோஹினி
நிகில நித்யானந்த மந்தாகினி"
 ‌
நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினி.
முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறு. 

மந்தாகினி என்பது, மெதுவாக ஓடுவதால் அந்த நதி பெற்ற பெயர். பெண்ணை, நீராடும் நதிக்கு - அதுவும் மெதுவாக ஓடும் நதிக்குச் சொல்லும் அந்த ஒப்பீடே சிருங்காரம் கொப்பளிப்பது தான்

‌"உடுராஜமுகி ம்ருகராஜகடி"
 ‌
உடு என்றால் நட்சத்திரம். உடுராஜன் நட்சத்திரங்களின் அரசனான சந்திரன். உடுராஜமுகி என்பது நமக்கு பழக்கமான பெயர் தான். சந்திரமுகி. சந்திரன் போன்ற முகத்தைக் கொணடவள்.

கடி என்றால் இடுப்பு. மிருகராஜன் சிங்கம். மிருகராஜகடி. சிங்கம் போன்ற இடுப்பைக் கொண்டவள். சிங்கம் பிடரி மயிராலும் ஊனுண்ணுவதாலும் பெயர் பெற்றது. தோற்ற ஒப்பீட்டில் மட்டுமன்றி அது எப்படி பெண்ணின் இடுப்புக்கு உவமையாகிறது என்று நான் சொல்லப்போவதில்லை.‌

"கஜராஜ விராஜித மந்தகதி"

இந்த வரிக்கு விளக்கம் தேவையில்லை. பிடியன்ன மென்னடை. அரசியர்க்கு உரிய நடை. அந்த நடையுடைய இவள் பேரரசி.

"கணஸார சுகந்தி விலாசினி நீ‌"
‌கணசாரம் என்பது சந்தனம். அதன் சுகந்தத்தைக் கொண்ட விலாசினி. விலாசினி என்றால் விளையாட்டுக்களால் மகிழ்விப்பவள் (என்ன விளையாட்டுக்களால் என்றெல்லாம் கேக்கப்படாது). ஆந்திரத்து நடனவகைகளில் ஒன்றுக்குப் பெயர் "விலாசினி நாட்டியம்". அதன் "ஆஸ்தான சம்பிரதாயம்" எனும் பிரிவு அரண்மனையிலும் அந்தப்புரங்களிலும் ஆடப்பட்டது தான்.

"கனகாங்கி விகார ஸமுத்ரஸுதே‌" 
சமுத்ரசுதே ஏற்கனவே பார்த்தது தான். "வந்தாள் மகாலக்‌ஷ்மியே" என்று பாடுவதில்லையா? இவளை திருமகள் என்கிறான் கவிஞன். கனகாங்கி? கனகம் என்பது தங்கம். தங்கம் போன்ற அங்கங்களைக் கொண்டவள். இதைத்தான் அண்மைக்காலத்தைய புலவரான விவேகா, தனது "டாடி மம்மி வீட்டில் இல்லை" எனும் மகத்தான காவியத்தில் "தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே, தன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே" என்று பாடியிருக்கிறார். 
 ‌
"‌நயனங்களில் அஞ்சன காந்தகடம்"
இனி வருவது மலையாளம். அவள் கண்களில் மை காந்தம் போல் கவர்கின்றது. அஞ்சனம் என்பது மை. சிங்களத்தில் எனது துலாஞ்சனன் எனும் பெயருக்கு அர்த்தம், 'ஒளியையே கண்மையாகக் கொண்டவன்" என்பது இங்கு உங்களுக்குத் தேவையில்லாத - ஆனால் சின்ன விளம்பரமாக கொடுக்க வேண்டிய ஒரு கொசுறுத்தகவல்.

"அதரத்தில் அனந்தம் அருந்த ரசம்"
இந்தப் பெண்ணின் உதடுகளில் அருந்த அனேக இனிய பானங்கள் உள்ளன.

"ப்ரணயோஜ்வல காவ்ய கலாவதி நீ"
பிரணயோஜ்வல என்றால் எனக்கும் என்னவென்று தெரியாது. அடுத்து வருவது. காவியக்கலைகளில் வல்லவள் நீ.

"சுரலோக விஹாரிணி சாருலதே"
சுரலோகம் - தேவலோகம். விகாரிணி - இன்பத்துக்காக அங்குமிங்கும் அலைபவள். சாருலதா - அழகிய கொடி. அங்குமிங்கும் அலைந்து சொர்க்கத்தைக் காட்டும் பூங்கொடியே என்று ஒரு 'மார்க்கமாக' மொழிபெயர்க்கலாம்.

‌"கலரஞ்சித காஞ்சன காந்திமயம்
ஸ்தனகும்ப தரங்கித சஞ்சலனம்" 

"மன்மதனைப் போல் மயக்கும்படி ஒளிவீசுபவள். அவள் குடங்களை ஒத்த மார்புகள் அலைகளைப் போல் அசைந்தாடுகின்றன. வாயைத் துடைத்து விட்டு அடுத்த வரிக்கு வாருங்கள். 

"மணிமேகல பூண்ட நிதம்ப தடம்
நவ பத்மதளாப புணர்ந்ந பதம்"
ஒட்டியாணம் பூண்ட அல்குல். புத்தபுதுத் தாமரையிதழ்கள் இணைந்தது போன்ற பாதங்கள்.

இவ்வளவையும் பாடிவிட்டு மீண்டும், ‌நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினியே,‌ முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறே என்று கூவியபடி முடிகிறது பாடல்.

பாடல் இவ்வளவும் தான். ஆனால் பொருள் புரிந்து இந்த இன்னிசையை இரசித்தபடி கேட்கும் போது என்னவோ செய்யத்தான் செய்கிறது, இல்லையா?

மொழியறிஞர்கள் சமஸ்கிருத - மலையாள மொழிபெயர்ப்புகள் தவறென்றால், (இங்கு கூறப்பட்ட அர்த்தத்தில் சிருங்காரக்குறைவு இருந்தால் மாத்திரம்) திருத்தவும். இறுதியாக, 18+இற்காக மட்டும் என் முழுநீளப்பதிவை முதன்முறையாக வாசித்த மற்றும் 'பெரிதாக' எதிர்பார்த்த உங்களில் சிலர் "எங்கடா இதில நீ சொன்ன 18+" என்று என் கொலரைப் பிடிப்பதற்கு முன், தங்களிடம் வணக்கம் கூறி விடைபெறும் நான்... 


மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 01

0 comments


திருக்கோணேச்சரப் பக்கம் போயிருக்கிறீர்களா? போகாவிட்டாலும் பரவாயில்லை. அது சம்பந்தமாக கேள்வி ஒன்று. திருக்கோணமலையில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், உமையையும் என்னென்ன பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்?

கொஞ்சம் யோசித்துவிட்டு பதினோராம் ஆண்டு படித்த சமய பாடத்தை ஞாபகப்படுத்தி “மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரர்” என்று நீங்கள் பதில் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பேர் இது பெரிய கஷ்டமான கேள்வியொன்றும் இல்லையே என்று புன்னகைக்கலாம். இல்லை. உங்கள் விடை பிழை. கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் சிவன் - உமையின் பெயரை நீங்கள் சரியாகச் சொல்லவில்லை.

அதை ஒரு பக்கம் வையுங்கள். நாம் முதலில் தலைப்புக்கு வருவோம். பிடியன்ன மென்னடை. ஏதாவது புரிகிறதா? பிடி + அன்ன + மெல் + நடை. பிடி என்றால் பெண் யானை. அன்ன என்றால் ‘போல’ என்று பொருள். பெண் யானையைப் போல மென்மையாக நடப்பது அல்லது நடப்பவர் தான் பிடி அன்ன மென்னடை.

ஆண்கள் கவிழ்வது பெரும்பாலும் பெண்களின் நடையில் தான். இக்காலப் பாடலாசிரியர்களே கூட “நடையா இது நடையா” என்று தான் பாடித் தீர்க்கிறார்கள். தமிழ் இலக்கியங்களும் பெண்களின் நடையை பலவாறு வருணிக்கின்றன. அப்படி வர்ணிக்க நினைக்கும் போது தமிழ்க் கவிஞர்களை அதிகம் பித்துப் பிடிக்கச் செய்தவை அன்னமும் யானையும் தான். திருக்குற்றாலக் குறவஞ்சியில் “மட அன்ன நடையிலொரு சின்ன நடை பயிலும் நடையினாள்” ஆடி வருகிறாள். சகலகலாவல்லி மாலையில் “நற்குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாள்” என்று பாடுகிறார் குமரகுருபரர். சரஸ்வதியின் நடையழகைப் பார்த்து பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படுகின்றனவாம்.

நீங்கள் அன்னமோ யானையோ நடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பக்கத்தில் கைபேசி இருந்தால் யூடியூப்பில் போய் தட்டித் தேடிப் பாருங்கள். பார்க்கப் பார்க்கத் தீராது. விலங்குகளிலேயே ஒய்யாரமாகவும் கவர்ச்சியாகவும் நடந்து செல்பவை அன்னமும் யானையும் தான். முதன் முதலாக எழுந்து நடக்கப் பயிலும் குழந்தையின் நடையின் அழகை மட்டும் தான் அவற்றின் நடைக்கு ஒப்பிட முடியும். 



ஆனால் இரண்டின் நடைக்கும் சிறிய வேறுபாடு இருக்கிறது. அன்னம் நடை பயிலும் போது அதில் குழைவும் மென்மையும் தென்படும். யானையின் நடையில் ஒரு ஒயில் இருந்தாலும் கூடவே கம்பீரம் இருக்கும். அன்னநடையை எல்லா வயதுப் பெண்களுக்கும் சொன்னாலும்,  யானை நடை பேரிளம்வயதுப் பெண்களுக்குத் தான் அதிகம் ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. யானை உருவத்திலும் வயதிலும் பெரியது. இலக்கியத்தில் அன்னையரும் அரசியருமே யானை நடைக்கு ஒப்பிடப்படுகிறார்கள். யானையின் நடை கம்பீரமான பெண்களின் நடைக்கு ஒப்பிடப்படுவதை தமிழ் மரபில் மாத்திரமல்ல,  ஏனைய இந்திய மொழி இலக்கியங்களிலும் கூட காணலாம்.

அயிகிரி நந்தினி என்று துவங்கும் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதன் 12ஆம் பாடலில் “மத்தமதம் கஜராஜ பதே” என்று தேவி போற்றப்படுகிறாள். மதயானையின் ராஜநடை கொண்டவளாம். இங்கு திறன்பேசிகள் அறிமுகமான 2010களின் ஆரம்பத்தில் நம்மவர் பலரின் கைபேசி அழைப்போசையாக இருந்தது “உடுராஜமுகி” எனும் பாடல். மலையாளத்தில் 2007ஆமாண்டு வெளியான ஆப்பிரகாம் லிங்கன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது. அதில் “கஜராஜ  விராஜித மந்தகதி” என்றோர் வரி வருகின்றது. யானையரசனின் இணையற்ற மந்தமான நடையைக் கொண்டவள். இந்த வரி கவி காளிதாசனின் வடமொழி சுலோகமொன்றிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள்.


உடுராஜமுகி ம்ருகராஜகடி கஜராஜ விராஜித மந்தகதி

சரி, இப்போது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பெண்களின் நடை பற்றிய இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒன்றுமில்லை. இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்கு விடை இது தான். திருக்கோணமலையில் வீற்றிருக்கும் தம்பதியரின் பெயரில் நீங்கள் சொன்ன பாதி விடை சரி. கோணேசர் – கோணைநாயகர் - கோணேச்சரர். ஆனால் அம்மையின் பெயர் மாதுமை அல்ல. பிடியன்ன மென்னடை!

கேள்விப்பட்டதே இல்லையா? ஆம். வியப்பாகத் தான் இருக்கும். திருக்கோணேச்சரம் மீது பாடப்பட்ட எந்தவொரு பழைய இலக்கியங்களிலுமே கோணேஸ்வரரின் தேவியின் பெயர் மாதுமை இல்லை. அவை எல்லாமே ஒரே பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன. “பிடியன்ன மென்னடை”, “பிடியன்ன நடை”, “பிடிநடை”, பெண்யானை போல் நடை பயில்பவள்.

சரி. உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், ஒவ்வொரு இலக்கியமாகவே போய் பார்த்து விட்டு வருவோம், வாருங்கள். அதற்கு முன், அவற்றை காலத்துக்கேற்ப ஒழுங்குமுறைப்படுத்துவது அந்தப் பெயர் விடயத்தில் நாம் சொல்வது சரி தானா என்பதை உறுதி செய்ய உதவலாம்.

திருக்கோணேச்சரம் பற்றிய மிகப்பழைய இலக்கியச் சான்று சம்பந்தர் தேவாரம். அது பொ.பி 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. (பொ.பி என்றால் பொது ஆண்டுக்குப் பின். கி.மு, கி.பி என்ற சுருக்கங்களுக்குப் பதிலாக இப்போது பொ.மு, பொ.பி என்று பயன்படுத்துகிறார்கள்).

தமிழகத்தின் பாடல் பெற்ற தலங்களிலுள்ள அம்மன்களின் பெயர்கள் பெரும்பாலும் தேவாரங்களில் இடம்பிடித்த பெயர்களாகவே இருக்கின்றன. உதாரணமாக மதுரைப்பதிகத்தில் “அங்கயற்கண்ணி”,  இராமேஸ்வரப் பதிகத்தில் “மலைவளர்காதலி”, திருவண்ணாமலைப் பதிகத்தில் “உண்ணாமுலை”, இப்படிப் பல பெயர்களைக் காணலாம். இன்றும் இந்தப் பெயர்களே அங்கங்கு உள்ள அம்மன்களை அழைக்க பயன்படுகின்றன. என்ன, நமது வடமொழி மோகத்தால் அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொஞ்சம் மாற்றிவிட்டோம்.

அங்கயற்கண்ணி ‘மீனாட்சி’ ஆகிவிட்டாள். உண்ணாமுலை அம்மைக்கு இன்று ‘அபீதகுஜாம்பாள்’ என்று பெயர். மலைவளர்காதலி ‘பர்வதவர்த்தனி’ ஆகிவிட்டாள். தேவாரங்களில் நாயன்மார் பதிவு செய்த வண்டார்குழலி (சூடிய மலர்களின் நறுமணம் காரணமாக வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்டவள்), சுரும்பார் குழல் அரிவை (அதே பொருள் தான். சுரும்பு என்றால் வண்டு), யாழைப்பழித்த மொழி (பேச்சின் இனிமையில் யாழை வெட்கப்பட வைத்தவள்) முதலிய அருமையான பெயர்களை இன்றும் அரிதாக தமிழகத் தலங்களில் காண முடிகின்றது.

இதே நியதிப்படி, பாடல் பெற்ற தலமான கோணேச்சரத்து அம்மனின் பெயர், அந்தத் தலம் மீது பாடப்பட்ட தேவாரத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், மாதுமை என்ற பெயரை சம்பந்தரின் பதிகத்தில் காணமுடியவில்லை. அப்படி என்றால் பிடியன்ன மென்னடை? அது இருக்கிறது. இரண்டாம் பதிகத்திலேயே. “பிடியன நடையாள் பெய்வளை மடந்தை”

தேவாரத்தை அடுத்து, காலம் இன்னதென்று சரியாகக் கூறமுடியாத கோணேச்சர இலக்கியங்கள் பல கிடைக்கின்றன. அவற்றின் மொழிநடை, பாடல் பொருத்தம், கூறப்படும் செய்திகள் என்பன கருதி, அவை 15ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடையே உருவானவை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவற்றில் மிகப்பழையதாகக் கருதப்படுவது கைலாச புராணம். இதை சிலர் ‘தட்சிணகைலாச புராணம்” என்று அழைக்கிறார்கள். இதன் .காலம் 16ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். கைலாச புராணத்தின் கடவுள் வாழ்த்தின் ஐந்தாம் பாடல் மாதுமை அம்மையைத் துதிக்கின்றது. ஆனால் பாடலில் மாதுமை என்ற பெயர் இல்லை. “சீர்புரந்த பிடியன்ன மென்னடை அம்பிகை பாதம் சிந்தை செய்வாம்!” என்றே பாடுகிறது அது. அதன் ஏழாவது திருநகரச் சருக்கப் படலத்தில் “பிரை செய்த அமுதமொழிப் பிடியன்ன மென்னடைக்கு”, “அமையனைய திருத்தோளின் அணங்கு பிடி அன்ன நடை”க்கு குளக்கோட்டன் கோவில் அமைத்த செய்தி வருகிறது.

(தொடரும்)




மேலும் வாசிக்க »

அரங்கம்: ஒரு நண்பனை இழத்தல்

0 comments

அது 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம். ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் அவர்கள் ஒருநாள் அழைப்பெடுத்தார். “மட்டக்களப்பிலிருந்து அரங்கம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வெளியாகின்றது. காத்திரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறார்கள். எழுதலாமே?” என்று சொன்னார். “எதை எழுதுவது அங்கிள்?” என்று கேட்டேன். “கிழக்கிலங்கையை மையமாக வைத்துத் தான் இந்தப் பத்திரிகை வெளியாகிறது. அது சார்பாக எதுவும் எழுதலாம்” என்றார் அவர். பொதுவாக என்று சொல்லிவிட்டதால், என் பிறந்தகம் தம்பிலுவில் பற்றியே ஒரு கட்டுரை எழுதி அவருக்கே மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். சில நாட்களிலேயே அரங்கத்தின் ஆசிரியர் திரு.பூபாலரெட்ணம் சீவகன் ஐயாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆக்கம் நன்றாயிருப்பதாகச் சொல்லி தொடர்ச்சியாக ஆக்கங்களை அனுப்புமாறும் கேட்டார். அன்று தொடங்கிய அரங்கத்தின் உறவு சுமார் ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்குப் பின் இன்று முற்றுப்புள்ளியை நெருங்கி வந்து நிற்கிறது. 


சமகாலத்தில் செய்தி ஊடகமொன்றை நடத்துவது மிகச்சிக்கலான ஒரு விடயம். அது மக்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கென தொடர்ச்சியான விளம்பர வழங்குநர்கள், புரவலர்கள் இருக்கவேண்டும். பக்கச்சார்பற்ற ஊடக தர்மத்தை அந்த செய்தியூடகம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது மக்கள் வரவேற்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் வர்த்தகநாமம் நன்கு பரவலாக வேண்டும். இவை ஒரு ஊடகம் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடிப்படையான சில தேவைப்பாடுகள். 

ஆனால் சமகாலம், செய்தியூடகங்களுக்கு மிகச்சவாலான ஒரு காலம். இன்று சமூக வலைத்தளங்கள் சம்பவமொன்று இடம்பெற்ற அடுத்த கணத்திலேயே அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லுமளவுக்கு அதிவிரைவாக இயங்குகின்றன. இன்னொரு பக்கம் இணையம் எல்லாத் துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி விட்டது. செய்தியூடகங்களில் தங்கியிருக்கவேண்டும் என்ற கட்டாயம் இன்று யாருக்கும் இல்லை. இணையத்துக்குச் செல்லும் எல்லோருக்கும் எல்லாமும் எந்த நிமிடத்திலும் தெரிந்துவிடும். இந்த நிலையில் ஏற்கனவே தங்களை நிலைப்படுத்தி விட்ட காட்சியூடகங்களும் வானொலியூடகங்களும் கூட பலத்த பிரயாசைப்பட்டு தம்மை நேயர்கள் கைவிடக்கூடாது என்பதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன. 

இவற்றின் நிலைமையே இப்படி இருக்க, இதழ் ஊடகங்களின் நிலைமை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் அச்சடிக்கும் பத்திரிகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை பல பத்திரிகையாசிரியர்கள் பெருமூச்சுடன் தான் சொல்லி வருகிறார்கள். பல பத்திரிகைகள் பெருமளவு எண்ணிம (டிஜிட்டல்) உலகுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போது அரங்கமும் அதே இக்கட்டான நிலைமைக்கே வந்து சேர்ந்திருக்கிறது. 

இப்படி ஏனைய இதழியல் ஊடகங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னாலும், அரங்கத்தை பொதுமைப்படுத்தி கருத்துக் கூறமுடியாது. அரங்கத்தின் ஒரு கட்டுரையாளனாகவும், தொடர்ச்சியான வாசகனாகவும் நான் கண்டுவருகின்ற தனித்துவங்கள் பல. 

முதலாவது, அரங்கம் இதழ், இறுதிவரை இலவச இதழாகவே கிடைத்து வந்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் இப்படி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 80 இதழ்கள் இலவசமாக வெளியான வார இதழ் என்ற பெருமை, நானறிந்தவரையில் அரங்கத்துக்கே உண்டு. “இலவசமாகக் கிடைத்தால் நம் மக்களுக்கு அதன் அருமை தெரியாது. பெரிய அளவில் வேண்டாம். இரண்டு ரூபா, ஐந்து ரூபா என்றாவது விலை வையுங்கள்” என்று அரங்கத்தின் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்த பலரில் நானும் ஒருவன். அவர் புன்னகையோடு மறுத்திருக்கிறார். சில வாரங்களில் அதிக வண்ணப்பக்கங்களுடனும், சில இதழ்களுக்கு எந்தவித விளம்பரமே கிடைக்காமலும் கூட அரங்கம் வெளியாகியிருக்கிறது. இதழியல் துறையில் அதை ஒரு சாதனை என்று தான் சொல்லவேண்டும். 

இரண்டாவது தனித்துவம், அதன் உள்ளடக்கம். முன்பே சொன்னது போல், வாசகரைக் கவர்வதற்காக எல்லா ஊடகங்களுமே தரமிறங்கி விட்டன. இணையத்தில், தமிழகத்தின் - இலங்கையின் பிரபல ஊடகங்கள் உட்பட “இந்த நபர் செய்த காரியத்தைப் பாருங்கள்”, “ஒரு பெண் வீதியில் செய்த காரியம்” என்றெல்லாம் கீழ்த்தரமான தலைப்புக்களை இட்டே நேயர்களை கவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. காட்சியூடகங்களோ செய்திகளுக்காக நாவைத் தொங்கப்போட்டு அலைவதைக் காணலாம். இருபத்து நான்கு மணிநேரச் செய்திச் சேவைகள் செய்திகளுக்காக அலைவதும், செய்தியொன்றைக் கண்டுவிட்டால், அதைத் தூக்கிப்பிடித்து ஊதிப் பெருப்பித்துக் காட்டுவதும், பொதுமக்களின் கவனத்தை உருப்படியான வேறு காரியங்கள் மீது திசை திருப்பாது தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயல்வதுமாக, பார்வையாளர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஊடக அறத்தின் எல்லையைக் கண்டு அதற்குள் நிற்பவை மிகச்சில ஊடகங்களே. சந்தேகமின்றி அவற்றில் அரங்கம் ஒன்று. 

அரங்கத்தில் சில பக்கங்கள் தான் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அது வார இதழ் என்பதால், செய்திகளை தேவையற்ற சூடு தவிர்த்து, உள்ளதை உள்ள விதத்தில் பதிவு செய்து கொடுக்க, அரங்கத்தால் இயன்றது. அதன் எஞ்சிய பக்கங்கள் ஒரு சேகரிப்பு ஆவணமாகப் பேணும் வகையிலேயே அதன் தரத்தை பேணி வந்தன. பொதிசோற்றைச் சுற்றுவதற்கு பழைய அரங்கம் பத்திரிகையைப் பயன்படுத்தியதற்காக அங்கிருந்த பெண்மணி ஒருவர் வெகுண்டு அந்த தாளைப் பறித்து பத்திரமாக சேமித்து வைத்த சம்பவமொன்றை நண்பரொருவர் மூலம் அறிந்தேன். 

பண்பாடு, சமூகவியல், அரசியல், பொருளாதாரம் முதலான பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு கோணங்களில் ஆய்ந்த பேராசிரியர். சி.மௌனகுரு, செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், கலாபூஷணம் அரங்கம் தேவராஜா, தமிழ்க்கவி, சரவணன், படுவான் பாலகன், எழுவான் வேலன், போன்றோரின் தொடர் கட்டுரைகள் அரங்கத்தின் வாசகர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், ஒரு கலை இலக்கிய இதழாகவும் அரங்கம் இயங்க முயன்றிருந்தது என்று சொல்லலாம். 

மூன்றாவது சிறப்பம்சம், அரங்கத்தின் வாசக அடைவு. எங்கள் ஊரில் சிகையலங்காரக் கடையொன்றில் அரங்கம் இதழ் விநியோகிக்கப்பட்டு வந்தது. அரங்கம் வெளிவராத வாரங்களில், அல்லது வந்து சேரத் தாமதமாகும் வாரங்களில் “இந்தக்கிளம அரங்கம் வரல என” என்று தேடி விசாரிக்குமளவு, அந்தக் கடை உரிமையாளரையும் வாடிக்கையாளர்களையும் அது வசீகரித்திருந்தது. அரங்கம் பத்திரிகையை நன்கறிந்த பலர், கிழக்கின் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். இலவசமாக அரங்கத்தைத் தொடர்வதற்கு “வாசிப்பில் ஆர்வம் இருந்தும், பத்திரிகையொன்றை பணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் நம் மக்கள்” என்று சீவகன் ஐயா அடிக்கடி காரணம் சொல்வார். பெரும்பாலும் பின்தங்கிய, பொருளாதார வசதிகள் குறைந்த கிராமங்களையே குறிப்பிடத்தக்களவு குறிவைத்திருந்ததை ஒரு பத்திரிகையாக அதன் வெற்றி என்றே கூறவேண்டும். 

அரங்கத்தின் நான்காவது மற்றும் முக்கியமான தனித்துவம், அது கிழக்கின் குரலாக ஒலித்தது என்பதே. பண்பாட்டு - அரசியல் தளத்தில் தங்கள் விசேடமான பிரச்சினைகள் சிங்களத்தரப்பாலோ வடக்குத் தமிழர் தரப்பாலோ முழுமையாக புரிந்துகொள்ளப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டு கீழைக்கரை அறிவுஜீவிகளால் அடிக்கடி முன்வைக்கப்படுவதுண்டு. இந்த முரண் குரலை எழுப்பிய பெரும்பாலானோர், அந்த இடைவெளியை நிரப்பாததில் தம் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டதே இல்லை. 

அரங்கம் அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறைகளை பிரயோகித்தது. “கிழக்கு மண் குறித்து பிறர் பேசத்தயங்கும் விடயங்களை இங்கு எவரும் பேசலாம்” என்று அனைவரையும் அழைத்தது. இனநல்லிணக்கத்தை முக்கியமான தொனிப்பொருளாக்கிக் கொண்டது. அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் கிழக்கை மையப்படுத்திய ஆய்வுப்பார்வையில் வெளியான பல கட்டுரைகள் வாசகர்களைச் சிந்திக்கவைத்தன. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் கீழைக்கரைக்காக ஒலித்த கவனிக்கத்தக்க முக்கியமான ஊடகக்குரல் என்று இன்று அரங்கத்தையே சுட்டிக்காட்ட முடியும். 

இதன் மறுபக்கமாக அரங்கம் தன் வாசகத்தளத்தை மலையகம், கொழும்பு, புத்தளம், வடக்கு என்று விரிவாக்க முயன்றபோது, தனது கிழக்குச்சார்பு அம்சங்களால் அது பிரதேசவாத முத்திரை குத்தப்பட்டதை நான் அறிவேன். ஆனால் கிழக்கு இன்ன இன்ன விடயங்களில் ஏனைய தமிழ்பேசும் நிலங்களுடன் வேறுபடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகள் அதில் வெளியாயினவே தவிர, ஒரு பொது கற்பனை எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு அந்த எதிரியால் தாம் ஒடுக்கப்படுவதாக அல்லது புறக்கணிக்கப்படுவதாக நீதி கோரும் பாணியிலான கட்டுரைகளை அரங்கத்தில் காணமுடிந்ததில்லை. அரங்கம் மாற்றுத்தரப்புகளை வரையறுத்துக்கொண்டு அவர்களுடன் போராடுவதற்காக எழுப்பப்பட்ட அறைகூவல் அல்ல; அது குரலற்றவர்களுக்காக எழுப்பப்பட்ட ஒரு மாற்றுக் குரல். அவ்வளவு தான். 

அரங்கம் சந்தித்த சவால்களும் அதிகம். இலவச இதழான அரங்கத்துக்கு விளம்பரதாரர்களை சம்பாதித்துக்கொள்ளும் விடயத்தில் அரங்கத்தின் ஆசிரியர் முகங்கொடுத்த இடர்ப்பாடுகள் பெரிதும் வெளியே பேசப்படாதவை. ஐநூறு பேர் கிள்ளிக்கொடுத்தால் மலையைப் பிளக்க முடியும். ஆனால் ஓரிருவர் அள்ளிக்கொடுப்பதில் தான் இன்று வரை மலைகள் பிளக்கப்படுகின்றன. வரலாற்றின் மகத்தான பக்கங்கள் அப்படி எழுதப்பட்டவை தான். அரங்கம் இன்னொரு மலை பிளந்தெழுந்த விருட்சம். 

தனிப்பட்ட ரீதியில் அரங்கத்துக்கு நான் பல விதங்களில் கடப்பாடு கொண்டவன். ஒரு கட்டுரையாளனாக, எழுத்தாளனாக, என் எழுத்தை மெருகூட்டவும், ஆய்வுப்பாணியை வளப்படுத்தவும் அரங்கம் எனக்கு உதவியிருக்கிறது. பழைய மட்டக்களப்பு நாடு பற்றிய காலனித்துவ கால குறிப்புகள் இதுவரை யாராலும் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. எனவே அவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட அரங்கக் கட்டுரைகள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அரங்கம் சம்பாதித்துத் தந்த வாசக சொந்தங்கள் அனேகம். அரங்கத்தின் வாசக அன்பரான புத்தளத்தைச் சேர்ந்த இஸ்தார் அவர்கள் இன்றும் தொடர்பில் இருக்கிறார். அறிஞர்கள், பெரியவர்களுக்கு அரங்கத்தை விநியோகிக்கும் சாக்கில், அவர்களுடனான நெருக்கத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி அரங்கம் எனக்குத் தந்தவை பல. 

குறிப்பிட்ட வாரம் எழுத ஒன்றுமே கிடைக்கவில்லை என்றாலும், சீவகன் ஐயாவின் அன்புத்தொல்லை காரணமாக சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்படி அவசரமாக எழுதப்பட்ட பல கட்டுரைகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன. அவரது ஊக்குவிப்பாலும் அன்பான நிர்ப்பந்தத்தாலும் எழுதப்பட்ட கிழக்கிலங்கை வரலாறு, பண்பாடு தொடர்பான சில கட்டுரைகள் அவற்றின் உள்ளடக்கத்தாலும், புதுமையாலும் என்னையே கர்வம் கொள்ள வைத்தவை. என்றேனும் ஒருநாள் அவை கிழக்கிலங்கை வரலாற்றில் பேசப்படுமானால், அதற்குரிய முழு கௌரவமும் பாராட்டும் அரங்கம் இதழுக்கும் சீவகன் ஐயாவுக்குமே போய்ச் சேரவேண்டும். 

இலவசம், தரம், இன்றியமையாமை முதலான சிறப்பம்சங்களுடன் வீறுநடை போட்ட அரங்கத்துக்கு எது நடக்கக்கூடாது என்று அஞ்சினேனோ அது நடந்து விட்டது. வாசிப்பை நேசிப்பவர்களுக்குத் தெரியும். ஒரு பத்திரிகையை இழப்பதென்பது ஒரு நல்ல நண்பனை இழப்பதைப் போல. அச்சுப் பதிப்பு நின்றுவிட்டாலும் இணையத்தில் அரங்கம் தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அது விட்டுச்செல்லும் இடைவெளியை இனி யார் நிரப்புவது என்பது பெரிய கேள்வி. காலத்திடம் பதில் இருக்கும் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான். அரங்கத்துக்கு ஒரு நண்பனின் பிரியாவிடைகளும் அன்பும்.
மேலும் வாசிக்க »

முருகனுக்கு மச்சான் வள்ளுவர்!

0 comments
 

அது கந்த சஷ்டி நோன்புக்காலம். அருணகிரி நாதரின் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அகப்பட்ட நூல் மயில் விருத்தம். அருணகிரிநாதர் பாடிய பல நூல்களில் ஒன்று இது. விருத்தப்பாவில் அமைந்த இந்த நூலின்  ஒவ்வொரு விருத்தமும் முருகனின் வாகனமான மயிலைப் புகழ்ந்து முடிவதால் இதன் பெயர் "மயில் விருத்தம்". அதன் "சந்தான புஷ்ப பரிமள" என்று துவங்கும் முதலாவது விருத்தம்  "அருணகிரிநாதர்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸின் கணீர்க்குரலில் இடம்பெற்றிருக்கிறது. 50ஸ் கிட்ஸ், 60ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானது அந்தப்பாடல் என்பதால், அப்பாவின் உபயத்தில் எனக்கும் அந்தப் பாடல் ஓரளவு கேட்டுப் பழகி விட்டது.  


ஆனால் முழுப்பாடலையும் இந்த முறை தான் முதன்முதலாகப் பாடுகிறேன்.  பொருளை அறியாமல் தமிழை ஓதுவதில்லை என்ற என் கொள்கைப்படி, அருணகிரியின் சந்த அழகை இரசித்தபடியே அடிக்கடி பொருளையும் புரட்டிக் கொண்டிருந்தேன். மூன்றாவது விருத்தம் தான் திடுக்கிட வைத்தது.

முருகனின் மயில் தன் அடியைத் தூக்கி வைக்கும் போது, பாதாளம் அதிர அண்ட முகடுகள் பெயர்கின்றன. ஆதிசேடனது முடியும், எட்டுத்திசை யானைகளும் நடுங்குகின்றன.  சிவபெருமானும் உமாதேவியும் வைத்த கண் எடுக்காமல் பார்க்க பலவிதமாக ஆடி மகிழ்கின்றது இந்த மயில். மாதானுபங்கியின் சகோதரியும், மான்மகளுமான  வள்ளியம்மையின் சிலம்பணிந்த பாதங்களைத் தலையில் சூடிக்கொள்ளும் முருகன்,  நீலோற்பலங்கள் மலரும் தணிகை மலையில் வாழ்பவன், அசுரரின் படைகள் சிதைய நடந்தது அவனது பச்சைத்தோகைகள் கொண்ட மயில். (விரிவான பொருளை இங்கே நீங்கள் படிக்கலாம்)

ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே
ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனும் மாலது சகோதரி
மகீதரி கிராத குலி
மாமறை முனி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்
பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படை நிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

குடும்பத்தில் சண்டை என்றால் முதலில் சரண்டர் ஆகவேண்டியது கணவன் தானே? ஊடலைத் தீர்க்க முயலும் போது, மனைவியின் காலில் விழுவதே பாவப்பட்ட ஆண்வர்க்கத்தின் தலைவிதி. மனிதர்கள் மட்டுமல்ல இப்படி உமையின், இராதையின், வள்ளியின் கால்களில் சிவனும் கண்ணனும் முருகனுமே விழுந்து கிடப்பதை பக்தி இலக்கியங்கள் பாடித் தீர்த்திருக்கின்றன. ஆனானப்பட்ட  இறைவர்களுக்கே இந்தக் கதி என்றால்? சரி, எனக்கேன் வம்பு. நான் பாட்டின் பொருளைத் தான் சொல்லவந்தேன்.  வள்ளியின் ஊடல் தீர்க்க முருகன் அவள் காலில் விழுந்ததை "வள்ளி மணி நூபுர மலர் பாதாரவிந்த சேகரன்" - வள்ளியின் சிலம்பணிந்த தாமரைப் பாதங்களைத் தலையில் தாங்கியவன் என்று இங்கு பாடுகிறார் அருணகிரியார்.

இதற்கு அடுத்ததாக கொஞ்சம் கவனத்தை ஈர்க்கின்ற முக்கியமான வரி "மாதானுபங்கி எனும் மாலது சகோதரி". மாதானுபங்கி யாரென்று தெரியுமா? திருவள்ளுவர்! திருவள்ளுவர் எனும் பெருமகனாரின் சகோதரி வள்ளி!

'திருவள்ளுவமாலை' எனப்படும் நூல் 12 தொடக்கம் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகச் சொல்லப்படுவது. தமிழின் முதலாவது திறனாய்வு நூல் என்று சிலரால் குறிப்பிடப்படுகின்ற இது, வள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் 55 பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்.  நல்கூர் வேள்வியார் எனும் புலவரால் பாடப்பட்ட இதன் இருபத்தோராம் பாடல் இப்படிப் பாடுகிறது.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு


"உபகேசியாகிய நப்பின்னையை மணந்தவன் வடமதுரையின் அரசனான கண்ணன். அவன் அந்த வடமதுரைக்கு அச்சு என்றால், மாதானுபங்கியை கூடல் நகர் - தென்மதுரைக்கு அச்சு என்று சொல்லலாம்" என்பது இப்பாடலின் பொருள். இந்தப்பாடலில் தான் வள்ளுவரின் இன்னொரு பெயர் மாதானுபங்கி என்பது தெரியவருகிறது. 

உண்மையில், இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பாடல் கூட. ஏனெனில் இங்கு வரும் 'உபகேசி' என்பது தமிழ் மரபில் கண்ணனின் காதலியாகச் சொல்லப்படும் நப்பின்னை தான் என்று உறுதியாகச் சொல்வதற்கு வேறெந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இந்தச் செய்யுளைக் கொண்டு வள்ளுவருக்கு நம்மவர்கள் 'செந்நாப்போதார்' என்ற ஒரு பெயரையும் சொல்வார்கள். (வேறெங்கும் வள்ளுவருக்கு 'செந்நாப்போதார்' என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை). பாடலின் பொருளைப் பார்த்தால் - மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடல் - "குற்றமற்ற நிலத்தில் விளைந்த சிவந்த நாக்குகள் போன்ற மொட்டுகள் மிதக்கும் வைகை பாயும் கூடல்" என்று பொருள் கொள்வதே பொருத்தம் போல் படுகிறது. 


மாதா+அனுபங்கி, என்றால் தாயைப் போல பேரன்புடையவர் என்று பொருள். மாதானுபங்கி என்று அருணகிரிநாதர் பாடும் பெயர் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் இல்லாமல், இங்கு மட்டுமே பயன்படுவதால், மாதானுபங்கி வள்ளுவர் தான் என்றே கொள்ளலாம். அப்படி என்றால், அருணகிரியார் சொல்வது போல, வள்ளுவர் வள்ளியின் சகோதரரா? முருகனுக்கு மச்சானா வள்ளுவர்?

ஆம். அப்படிச் சொல்கின்ற தொன்மங்கள் தமிழில் வழக்கில் உள்ளன.  ஞானாமிர்தம் (12ஆம் நூற்றாண்டு), கபிலர் அகவல் (18 - 19ஆம் நூற்றாண்டு) எனும் இரு நூல்கள் இந்தத் தொன்மத்தை உறுதிப்படுத்த நமக்கு உதவுகின்றன. ஞானாமிர்தத்தில்  யாளி என்ற அந்தணனுக்கும் புலையர் குலப்பெண்ணுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்த கதை (பாடல் 33) குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எழுவரும்,  திருவள்ளுவர், அதிகமான், கபிலர், ஔவை, உப்பை, முறுவை, வள்ளி என்று உரை கூறப்பட்டிருக்கிறது. இதே கதை பிற்கால நூலான கபிலரகவலில் சற்று வேறுபட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதி ஒரு புலைக்குலப் பெண். பகவன் ஒரு அந்தணன். இருவரும் தமக்குப் பிறக்கும் குழந்தைகளை பிறக்குமிடத்திலேயே விட்டுச்செல்வதென்று முடிவெடுத்து ஊரூராகச் செல்கிறார்கள்.  அவர்களுக்கு உப்பை, உறுவை, வள்ளுவர், வள்ளி, அதிகன், கபிலர், ஔவை ஆகிய ஏழு பிள்ளைகள் முறையே சலவைத்தொழிலர், கள் இறக்குநர், பறைத்தொழிலர், குறவர், அரசன், அந்தணர், பாணர் வீடுகளில் பிறந்தார்கள். உப்பையும் உறுவையும் தான் காளியம்மனும் மாரியம்மனும். தம் ஒப்பந்தப்படி ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் பிரிந்த போது அவர்களுக்கு குழந்தைகள் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த பாடல்களும் கபிலர் அகவலில் உள்ளன. இந்தக் கதைகளின் படி, மாரி, காளி, வள்ளி முதலிய அம்மன்களும் வள்ளுவர், ஔவை ஆகியோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆகிறார்கள். 

ஞானாமிர்தமும் கபிலர் அகவலும் சொல்வது பிற்காலக் கட்டுக்கதைகள் தான். இவற்றுக்கு எந்தவித வரலாற்றுப் பெறுமானமும் இல்லை. ஆனால் தொன்மங்கள் என்ற வகையில் இவற்றுக்கென ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஞானாமிர்தத்துக்கும் கபிலர் அகவலுக்கும் இடைப்பட்ட காலத்தில் (14 - 15ஆம் நூற்றாண்டு) வாழ்ந்த அருணகிரியாரின் பாடலொன்றைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் நமக்கு தேவைப்படுகிறது. வள்ளி எப்படி மாதானுபங்கியின் சகோதரி என்றால், அவள் வள்ளுவரோடு உடன்பிறந்த அறுவரில் ஒருத்தி. இந்தக் 'கதை' தெரியாவிட்டால் அது யார் மாதானுபங்கி? அவருக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போய் உட்கார வேண்டியது தான்.

ஆங். கடைசியாக ஒன்று. தொன்மங்களை அறிந்திருப்பது நல்லது தான். ஆனால் அவற்றின் இலக்கியப்பெறுமானத்தோடு அவற்றை நிறுத்தி வைப்பது நலம். இதை வைத்து வள்ளுவர் இந்தக்காலம், வள்ளியின் காலம் இத்தனையாம் ஆண்டு. காளி, மாரி வழிபாடெல்லாம் இத்தனையாம் ஆண்டுகள் தான் தொடங்கின  என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு இறங்கினோமென்றால் விளைவு விபரீதமாகிவிடும். ஒரு தகவலை வரலாறாக மாற்ற முன்பு அதன் நம்பகத்தன்மையையும் நிகழ்தகவையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். வள்ளுவனே சொல்லி வைத்தது தான்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மேலும் வாசிக்க »

வள்ளுவ நெறி - 01

0 comments
வள்ளுவர் பற்றி மூன்று விடயம் சொல்லவேண்டும்.


ஒன்று, கடவுள் வாழ்த்தில் தன் கடவுள் இன்னார் தான் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அதில் கூறப்படும் வரைவிலக்கணங்கள், ஒரேநேரத்தில் சைவத்துக்கும்  சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் பொருந்துவன தான். அவரே 'தன் இறைவன் இன்னார்' என்று வெளிப்படையாகக் கூற விரும்பாத போது, அவரது இறைவன் இவர் தான் என்று வாதிடுவது பயனற்ற செயல்.

இரண்டு, வள்ளுவருக்கும் நமக்கும் அண்ணளவாக இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம்.  அன்றுள்ள சைவம் அல்ல, இன்றுள்ளது. அன்றுள்ள சமணம் அல்ல இன்றுள்ளது.  இன்றுள்ள சைவம், வைணவம், சமணம், பௌத்தம் இவையெல்லாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் அடைந்த மாற்றம் மிகப்பெரியது. அதைச் சரிவரத் தெரியாமல் -  புரியாமல், வள்ளுவரின் சமயத்தைத் தீர்மானிக்க முடியாது. அப்படி கஷ்டப்பட்டு தீர்மானிக்க அவசியமும் இல்லை. 

மூன்று, என் தனிப்பட்ட கருத்து. வள்ளுவர் தமிழின் சொத்து. தமிழன் எவனும் அவரைத் தன் சமயத்தவனாக உரிமைகோர முழு உரிமையும் உண்டு - அதற்கு பண்பாட்டிலும் மரபிலும் இடம் இருக்கும் பட்சத்தில்! வள்ளுவரைக் குந்தகுந்தாசாரியார் என்று சமணரும், மாதானுபங்கி என்று சைவரும் தத்தம் மரபில் போற்றுவதற்கு உரிமை உண்டு. அவரவர் தத்தம் சமயத்தவராக அவரைக் கருதி இன்புற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தமது உரிமையை நிலைநாட்ட மாற்றுச் சமயத்தாரை வாதுக்கு அழைக்கவோ மற்றைய சமயத்தவர் அல்லர் என்று நிரூபிக்கவோ வேண்டிய தேவை தற்போது இல்லை என்பதே நிதர்சனம். சமயம் என்பது உணர்வுபூர்வமான விடயம். வள்ளுவரின் சமயம் தெரியத்தான் வேண்டுமென்றால், இந்தக் காலத்தில் நடுநிலை நின்று ஆய்ந்தறியக் கூடிய ஒரு ஆய்வாளன் கையில் அந்தப்பணியை ஒப்படைத்து இரு தரப்பாரும் ஒதுங்கி நிற்பதே அழகு. ஆனால் இங்கு இரு தரப்பினர் அல்ல; தொடர்பே இல்லாத மாற்றுமதத் தரப்புகள்,  அரசியல் கொள்கைவாதிகள், இறைமறுப்பாளர்கள் இவர்களெல்லாம் கூட வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறார்கள்! பாவம் வள்ளுவன்!

உண்மையில், வள்ளுவரை சைவரோ -  சமணரோ உரிமை கோருவதை எதிர்ர்த்தரப்பினரோ அல்லது இன்னொரு தரப்பினரோ எக்காரணம் கூறியும்  கேள்வி கேட்க இயலாது. 'இயேசுவை நீங்கள் ஈஸா (அலை) நபியாக ஏற்கக் கூடாது' என்று கிறிஸ்தவர் இஸ்லாமியரிடம் கூறமுடியாது என்பது போல! 'புத்தரை நீங்கள் திருமாலின் அவதாரமாகக் கொள்ளக்கூடாது' என்று பௌத்தர் வைணவரிடம் வாதாட முடியாது என்பது போல! எந்த மரபு இப்படி மதங்கடந்த உறவுகளை அனுமதிக்கிறதோ, அதே மரபே வள்ளுவரை சைவரும் சமணரும் ஒரே நேரத்தில் சொந்தம் கொண்டாடவும் அனுமதிக்கும். 

சமண நூல்களெதையும் நான் படிக்கவில்லை என்பதால், அவர்களிடம் திருக்குறளின் தாக்கத்தை  அளந்துகூற முடியாது. எனினும் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளதை சான்றாகக் கொள்ளலாம். சிலம்பு சமண நூல் என்பது உண்மையானால்  அதன் காலத்திலிருந்தே (பொபி 1 - 5ஆம் நூற்.) திருக்குறளுக்கு சமணத்தில் தார்மீக உரிமை உண்டு. (சிலம்பும் திருக்குறள் போலவே மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய நூல் என்பதால் இதில் மேலதிக வாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை).

எனினும் சைவத்துக்கு திருக்குறளிலுள்ள தார்மீக உரிமை சுந்தரரின் தேவாரத்தில் (அண்ணளவாக பொ.பி 812 - 844) முதன்முதலாக முனைப்பாகத் தெரிகிறது. திருநெல்வாயில் அரத்துறை மீதான சுந்தரர் பதிகத்தின் 2,3,4, 7ஆம் பாடல்களில் பொறிவாயில் ஐந்தவித்தான், பிறவிப் பெருங்கடல் நீந்துவார், உறங்குவது போலும் சாக்காடு, அகரமுதல எழுத்தெல்லாம் ஆகிய நான்கு குறள்களும் எடுத்தாளப்பட்டுள்ளன (திருமுறை 7: 3 )  தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் மெய்யியலுக்குப் பிரமாண நூல்களில் ஒன்றான திருக்களிற்றுப்படியார்ம, சைவ ஔவையாரின் பாடல்கள், மயிலை  வள்ளுவர் கோவில் முதலியன பிற்கால திருக்குறள் ஆதரவுச் சைவச் சான்றுகள். 

பக்கச்சார்பற்ற ஆய்வுகளும் ஒழுங்கான காலவரிசைப்படுத்தலும் தொடர்ந்தால் வள்ளுவர்  சமணரா சைவரா என அறியலாம். ஆனால் அதில் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளுவரின் சமயத்தைத் ஆராய்பவர்கள், அதற்கு முன் குறளின் படி வாழ்க்கையை நடாத்த முயலலாம். திருக்குறளை நடைமுறையில் கொண்டாடத் தெரியாமல்  அவர் மதத்தை அறிந்து அல்லது மதத்தை மறுத்து அதில் இன்பம் காண்போர் போல் பயனற்றவர்கள் யாருமில்லை. ,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (355)
மேலும் வாசிக்க »

கச்சியப்பத் தமிழ்!

4 comments
படம்: ரமேஷ் ஹரிகிருஷ்ணசாமி
தமிழில் உருவான புராணங்களில் ஒன்று கந்தபுராணம். பன்னிரண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை வெவ்வேறு காலங்களை இதற்குச் சொல்வதுண்டு. இதைப் பாடிய கச்சியப்பர், வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பாகத்தையே தமிழில் கந்தபுராணமாகத் தான் பாடுவதாகச் சொல்லியிருந்தாலும், தமிழ் மரபுக்கேற்ப இதில் அவர் பல மாற்றங்களைச் செய்திருப்பது வெளிப்படை. இந்தப் புராணம், பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணத்தோடு இணைத்து,  தமிழ்ச்சைவர்களின் முப்பெரும் புராணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

நாவலரின் சைவமறுமலர்ச்சியின் பின்னணியில், தமிழகத்தை விட, இலங்கையில் கந்தபுராணம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணப் பண்பாட்டையே "கந்தபுராணக் கலாசாரம்" என்று மெச்சும் படி, அந்நூல் யாழ்ப்பாணத்தார் வாழ்வியலில் செலுத்துகின்ற தாக்கம் அதிகம். கந்த சஷ்டி விரதகாலம் முழுவதும் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது ஈழத்துச் சைவக்கோவில்களில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது. 

உண்மையில் கந்தபுராணத்தைப் படித்தால், அதற்கு இலங்கையில் கிடைக்கும்  முதன்மையில் தவறே சொல்ல முடியாது என்றே சொல்லத்தோன்றும். கம்பராமாயணத்தின் செல்வாக்குக்கு உள்ளான நூலாகச் சொல்லப்படுகின்ற கந்தபுராணத்தில், கம்பனை மிஞ்சிய மொழி விளையாட்டுக்களுக்கும் குறைவில்லை. 

சூரபதுமனுக்கும் முருகனுக்கும் பெரும்போர். இறுதியில் சூரன் கடல் நடுவே மாமரமாக நின்றதை, கந்தபுராணத்தின் யுத்தகாண்டத்தில் சூரபதுமன் வதைப் படலத்தில் நான்கு பாடல்களில் வருணிக்கிறார் கச்சியப்பர்.  தமிழிலக்கியத்தின் மிக அழகான இடங்களில் ஒன்று அது. 

சூரன் மாவாக மாறுகிறான். மா என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு மிருகம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.  இந்த சூர மிருகத்தைக் கண்டு  கலை (குரங்கு) , முயல், மான், புலி, கோ (பசு), யாளி, கரி (யானை), (ஆட்டுக்)கடா, மடங்கல் (சிங்கம்) முதலான விலங்குகள் பயந்து ஓடுகின்றனவாம். 

நெடும் கலை முயல்மான் கொண்டு நிலவும் அம்புலியும் நீத்தம்
அடும் கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானும்
கடம் கலுழ்கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்.  (471)

ஆனால், இதில் இன்னொரு சிலேடைப் பொருள் உண்டு. நிலவில் முயல் தெரிகிறது, மான் தெரிகிறது என்று காட்டி சிறுபிள்ளைகளுக்கு உணவூட்டுவது தாய்மாரின் வழக்கம்.  நிலவுக்கு இன்னொரு பெயர், அம்புலி. குபேரனின் நகரம் அளகாபுரி. எனவே அளகையை ஆளும் குபேரனுக்கு அளகையாளி என்று பெயர் இருக்கிறது. புராண மரபில் எட்டு யானைகள் எட்டுத்திசைகளையும் தாங்கிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. இயமனை 'மடங்கல்' என்றும் அழைப்பர். இந்தப் பொருள்களோடு இதே பாடலை நெருங்கினால்,

தன் களங்கத்தில் முயல், மான் என்பனவற்றைக் கொண்ட அம்புலியாகிய சந்திரனும், கதிர்களை வீசும் சூரியனும், அளகையாளி குபேரனும், மதம் பொழியும் எட்டு திக்கு யானைகளும், எருமைக்கடாவில் செல்லும்   இயமனும் அச்சமடைய சூரன் மாமரமாகி நிற்கிறான். தேவர்களுக்கு சிம்மசொப்பனம் அல்லவா சூரபதுமன்?

சூர மாமரம்
(ஓவியம்: மதுரை திரு. சந்திரசேகரன்)

மிருகங்களுக்கு அச்சமூட்டிய சூரன் இப்போது அதே மாமர வடிவில் பறவைகளுக்கும் அச்சமூட்டுகிறான். எப்படி? மாமரத்துக்கு ஒத்தகருத்துச் சொற்களில் ஒன்று கொக்கு என்பது. இந்தக் கொக்கு ஏனைய பறவைகளை பயம் காட்டுகிறது. உவணம் (கருடன்), எகினம் (அன்னம்), குயில், சேவல், மயூரம் (மயில்), வலியன் (ஆக்காட்டி), பூவை (மைனா), கோழி முதலிய பறவைகளை அஞ்சி ஓடச் செய்யும் படி சூரன் கொக்கு வடிவம் எடுத்திருக்கிறான்.   

மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவலாகிய மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடல் பூவையுங் கொடியதான
குக்குட முதலும் அஞ்சக் கொக்கு உருவாகி நின்றான்.      (472)

கச்சியப்பர் பாடுவது வெறும் பறவைகளைத் தானா? அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு கொஞ்சம் புராணங்கள் தெரிந்திருக்க வேண்டும்.  கருடனும் அன்னமும் முறையே விஷ்ணு மற்றும் பிரமனின் வாகனங்கள். அவர்கள் இருவருமே முன்பொருமுறை அன்ன வடிவம் எடுத்தவர்கள். விஷ்ணு ஹம்சமாக (அன்னம்) பிறந்து வேதங்களை அருளினார் என்றும், பிரமன் அடிமுடி தேடிய கதையில் அன்னமாக மாறினார் என்றும் புராணங்கள் உண்டு. 

அதே போல தக்க யாகத்தை வீரபத்திரர் அழித்த போது குயிலாக மாறி தப்பிப் பறந்து ஓடியவன்  இந்திரன். அவனே சேவல் வடிவெடுத்து  கூவி, கௌதமரைக் காலைக்கடன் கழிக்க வெளியே அனுப்பிவிட்டு அகலிகையோடு திருட்டுத்தனமாக சேர்ந்தான். முருகனுக்கு சூரன் போருக்குப் பிறகு தான் மயில் வாகனமும் சேவல் கொடியும் கிடைத்தது என்றில்லை. சூரன் போர் முடியும் வரை, அதே இந்திரன் மயில் வடிவில் முருகனைத் தாங்க, அக்கினி தேவன் சேவல் வடிவில் முருகனின் கொடியில் நின்று கொண்டிருந்தான். மேலும் சூரபதுமனுக்கெதிரான முருகனின் போரில் காளியும் தன் பூதப்படையுடன் கலந்து கொண்டிருந்தாள் என்கிறது கந்தபுராணம். 

இப்போது மீண்டும் பொருளைப் பாருங்கள். கருடனையும் அன்னத்தையும் வாகனங்களாக உடைய எகினங்களான விஷ்ணுவும் பிரமனும், முன்பு குயிலாகவும், சேவலாகவும், இப்போது மயிலாகவும் மாறி இருக்கிற வலியவனான இந்திரனும், போரில் புகுந்து (புக்கு) போர் (அமர்) புரியும் பெண் (பூவை) ஆகிய காளியும், ஆண் கோழி (குக்குடம்) வடிவக்  கொடியான (கொடி+அது+ஆன) அக்கினி தேவனும் அச்சம் அடைய மாமரமாகி நிற்கிறான் சூரபதுமன்.

கச்சியப்பனின் தமிழ் அச்சமூட்டுகிறது இப்போது! இதெல்லாம் போகட்டும். அடுத்த சிலேடைப் பாடல் தான்  கச்சியப்பரைப் பார்த்து "வேற லெவல்" சொல்ல வைக்கிறது. மாமரத்துக்கு சேகரம் என்ற ஒத்தகருத்து உண்டு. சேகரம் என்பதற்கு 'தலை' என்பதும் பொருள்.  சூரன் இப்போது தலையாக மாறியிருக்கிறான். அது எப்படிப்பட்ட தலை? கால்  வெட்கமடைய, கண்ணும் செவியும் சோர்ந்து கவிழ, வால் எனும் பெருமை ஏக்கமடைய, கைகள் உதற,  வலது நாசியும் (வெய்யோன்) இளம் உடம்பும் வியர்ந்து நிற்க, பருத்த மார்புகளும் நீண்ட விழிகளும் வெட்கப்பட்டு மூட, எல்லா உறுப்புகளையும் வென்ற தலை, இந்தத் தலை.

காலெனும் மொய்ம்பன் உட்க கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர் மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவைமார்கள்
சேலெனும் விழிகள் பொத்தச் சேகரம் ஆகி நின்றான்.     (473)

இதற்கும் சிலேடைப் பொருள் வேறு தான்.  காற்றாகிய (கால்)  வாயு தேவன் வெட்கமடைய, ஆதிசேடனாகிய கட்செவி (பாம்பு) கவிழ்ந்து சோர்வடைய, சிறந்த வசுக்கள் ஏக்கத்துடன் தங்கள் கைகளை அசைக்க, சூரியனின் (வெய்யோன்)  பாலகர்களான அசுவினி தேவர்கள் உடல் வியர்த்து நிற்க, பருத்த மார்புகளைக் கொண்ட தேவமகளிர் மீன் (சேல்) போன்ற கண்களைப் பொத்த சூரன் சேகரமாக நிற்கிறான். 

இத்தோடு முடியவில்லை! சூர மாமரம் ஏனைய மரங்களுக்கும் அச்சமூட்டுகிறது. அத்தியும் அரசும் பெயர, ஆலமரமும், எருக்கும் (முந்து + எருக்கில்) ஏக்கமடைய, வாகையும், வன்னிமரமும் மெலிய, வீரையும் இருப்பையும் (இலுப்பை) விலக,  நீபம் (கடம்பு), வேலை ஆகிய மரங்கள் முன்பு மாமரமாக மாறி நிற்கிறான் சூரன்.

அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவும்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான்.    (474)

உண்மையில் இந்தச் சிலேடையிலும் தேவர்களையே பாடுகிறார் கச்சியப்பர். அத்தி என்றால் கடல். கடலின் அரசன் வருணன். ஆலம் என்பது ஆலகால நஞ்சைக் குறிக்கும். வன்னி என்றால் நெருப்பு. சைவ வைணவப் புராணங்களில் கடலுக்குள் உறங்குகின்ற நெருப்பொன்று அடிக்கடி வரும். அதற்கு வடவைத்தீ என்று பெயர். உலகம் அழியும் போது அது வெளிவருவதாக புராணங்கள் சொல்லும். வீரை என்றாலும் கடல் தான். நீபத்தார் என்றால் கடம்ப மலர்களால் ஆன மாலை. அதை அணிந்தவன் கடம்பன்.  முருகன். ஆகவே அதன் இன்னொரு பொருள் இது. 

"கடலரசனான வருணன் கலங்கவும், அந்தக் கடலில் முன்பொருமுறை தோன்றிய ஆலகாலமே அச்சமடையும் படியும், எதையும் வெல்லும் வல்லமை படைத்த வடவை நெருப்பு மறையவும், கடல்கள் நிலைபெயரவும், கடம்ப மாலை அணிந்த முருகப்பெருமானின் தனி வேலாயுதத்தின் முன்பு அச்சமில்லாமல் மாமரமாகி நின்றான் சூரன்." 

இதற்குப் பிறகு முருகன் வேலை வீசியதும், மாமரம் சேவலும் மயிலுமானதும், இறுதியில் தேவயானையை முருகனுக்குக் கட்டிக்கொடுத்து 'சுபம்' போட்டதும் நமக்கெல்லாம் தெரியும். கதை பின்பு எப்படித் தொடர்ந்தாலும்  கந்தபுராணத்தில் மணத்துக்கொண்டே இருப்பது தமிழ் மட்டும் தான். கந்தன் தமிழ்! கச்சியப்பத் தமிழ்! 
மேலும் வாசிக்க »

மாகோன் மகளார்

1 comments

வரலாற்றறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி. கதிராமன் தங்கேஸ்வரி நேற்று 26 ஒக்டோபர் சனிக்கிழமை தன் அறுபத்தேழாவது வயதில் காலமானார். இலங்கை வரலாற்றுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர்.  கலிங்க மாகோன் பற்றியும் திருக்கோணமலையின் தொன்ம நாயகனான குளக்கோட்டன் பற்றியும் இவர் செய்த ஆய்வுகளே இவரை தமிழுலகுக்கு குறிப்பாக இனங்காட்டின எனலாம்.

மட்டக்களப்பு கன்னங்குடாவில் 1952ஆம் ஆண்டு  கதிராமன் - திருவஞ்சனம் தம்பதியரின் மகளாகப் பிறந்த தங்கேஸ்வரி அம்மையார், அதே ஊரின் மகாவித்தியாலயம்,  ஆனைப்பந்தி இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் பாடசாலையின் பழைய மாணவி. களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார். 'விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள்' என்பது 1982இல் வெளியான இவரது முதல் நூல். தொடர்ந்து குளக்கோட்டன் தரிசனம் (1985), மாகோன் வரலாறு (1995), கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (2007) முதலியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். அவற்றில் பலத்த வரவேற்பைப் பெற்ற குளக்கோட்டன் மற்றும் மாகோன் பற்றிய இரு நூல்களும் மணிமேகலைப் பிரசுரத்தால் மீள்பதிப்புக் கண்டன.


தங்கேஸ்வரி அம்மையாரின் குளக்கோட்டன் தரிசனம் நூலை சில ஆண்டுகளுக்கு முன் எங்களூர் நூலகத்தில் படித்தேன். ஆனால் "மாகோன் வரலாறு" நூலை அதற்கும் முன் என் பன்னிரண்டு வயதில் வாசித்தேன். அம்மப்பாவின் தனிப்பட்ட நூலகத்தில் நான் மீண்டும் மீண்டும் விரும்பி  வாசிக்கும் நூல்களில் ஒன்றாக அது இருந்தது. அதில் தான் திருக்கோவிலில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன என்ற தகவல் இருந்தது. இன்றைய என் வரலாற்றார்வத்தைத் தூண்டிய முதல் படிகளில் ஒன்று அந்த நூல். 

தங்கேஸ்வரி அம்மையாரின் ஆய்வு முறைமை சுவாரசியமானது.  முதலில் தான் ஆய்வு செய்கின்ற ஆளுமையைக் குறிப்பிடுகின்ற எல்லா வரலாற்று இலக்கியங்களையும் தொகுத்துக்கொள்வார். பின் அந்த ஆளுமை பற்றி அந்தந்த நூல்கள் என்ன சொல்கின்றன என்று பட்டியலிடுவார்.  பின்பு அந்தப் பட்டியலில் எவற்றை ஏற்கவேண்டும், எவற்றை விலக்க வேண்டும், காரணம் என்னென்ன என்று தர்க்கரீதியாகச் சொல்வார். பிறகு அனைத்தையும் சுருக்கி இறுதியில் இதுதான் இவர் என்ற முடிவுக்கு வருவார். எனவே இந்த முடிவு அத்தனை இலகுவாக மறுக்க முடியாததாக இருக்கும். 

தமிழகத் தமிழரை விட இலங்கைத் தமிழருக்கு வரலாற்றுத்தேவை அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே தமிழரிடம் தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.  நீண்ட ஆவணப் பாரம்பரியம் கொண்ட சிங்களவரின் மகாவம்ச மனநிலையை வெற்றி கொள்ள, கருத்தியல் ரீதியாக, தமிழரிடம் நம்பகரமான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் முதலான தொன்மக்கதைகளின் தொகுப்புகளே வரலாறாக முன்வைக்கப்பட்டன. கடந்த நூறாண்டில் வடகிழக்கில் எழுந்த 'வரலாற்று' நூல்கள் எல்லாமே  இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ வழிமொழிந்து எழுந்திருப்பதை நாம் காணலாம். 

கிழக்கிலங்கையில் வரலாற்றாய்வு செய்பவர்களிடம் உள்ள முதன்மையான குறைபாடும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை அல்லது மட்டக்களப்பு மான்மியத்தை அறுதியும் இறுதியுமான வரலாற்றுச் சான்றாகக் கொள்வது தான். அந்தக் கருத்தை உடைத்து முன்வந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் என்று அம்மையாரைச் சொல்லலாம். இன்னின்ன காரணங்களால் இந்த இடத்தில் இதை ஏற்கலாம் என்று கூறியே அவர் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மேற்கோள் காட்டுவதுண்டு. தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டியிருக்கிறார். "நமது ஆதாரங்களில் கதை அதிகம், வரலாறு குறைவு. கதை குறைவான, ஆனால் வரலாறு அதிகமான சான்றுகளையே நாம் உற்றுப்பார்க்கவேண்டும்" என்பது அவரது பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகளில் இடம்பெறுகின்ற வரியாக இருக்கிறது. 

சிங்கள அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக 1215இல் படையெடுத்த வீர சைவனான கலிங்க மாகோன், விஜயபாகு என்ற பெயரைச் சூடிக்கொண்டு பொலனறுவையிலிருந்து அரசாண்டான், பிற்காலத்தில் அவனே வடக்கே சென்று யாழ்ப்பாண அரசை தோற்றுவித்தான் என்பதும், அவனுக்கு துணையரசனாக 'ஜயபாகு' எனப் பட்டம் சூடியிருந்த  சோழகங்கதேவனே குளக்கோட்டன் என்பதும் அவரது இருபெரும் நூல்களும் சொல்லும் ஆய்வு முடிவுகள். இதற்கு இன்னோரன்ன  நூல்களை அவர் ஆதாரத்துக்கு எடுத்துக்கொள்கிறார். 

இன்றைய சூழ்நிலையில் வைத்து நோக்கும் போது, அவரின் ஆய்வுகளில் சில இடங்களில் மயக்கங்கள் இருந்தாலும், அந்த இரு நூல்களும் இலங்கைத் தமிழ் ஆய்வுலகைப் பொறுத்தவரை மாபெரும் பொக்கிஷங்கள். கடந்த நூற்றாண்டில் இலங்கையில் உருவான தமிழ் வரலாற்று நூல்களில் முதன்மையானது யாழ் பல்கலைக்கழக வெளியீடான "யாழ்ப்பாண இராச்சியம்". தங்கேஸ்வரி அம்மையாரின் நூல்கள், அதற்கு அடுத்த இரு இடங்களையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவை.

இத்தனைக்கும் மாகோன் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடரவேண்டும் என்ற கோரிக்கையோடே தன் மாகோன் வரலாறு நூலின் இறுதி அத்தியாயத்துக்கு "முற்றுப் பெறாத காவியம்" என்று தலைப்பிட்டிருக்கிறார் அவர்.  மாகோன் அப்படியே க வனிப்பாரற்றுக் கிடக்கிறான். குளக்கோட்டன் கிறிஸ்துவுக்கு முந்தையவன் என்றும் எட்டாம் நூற்றாண்டினன் என்றும் நிரூபிப்பதற்கான முயற்சிகள் இன்றைய ஈழத்து வரலாற்றுலகில் தொடர்கின்றன.  

இன்றைய அரசியல் சரிநிலைகளில் நின்று, தமிழர் இலங்கையில் வாழும் காலத்தை முன்னே கொண்டு செல்லவேண்டும் என்ற கரிசனை இருப்பது சரி தான். அதற்காக வரலாற்று மாந்தர்களை அவர்கள் வாழ்ந்த காலத்திலும் மிக அதிக தூரம் முன்னே கொண்டு சென்று வைப்பதிலோ, பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சோழ நாட்டு - பாண்டிய நாட்டு உறவுகளை மறைத்து அவற்றை மிகப்பழையவையாக சித்தரிப்பதிலோ எவ்வித அர்த்தமும் இல்லை. இதன் விளைவுகள் எந்த நோக்கத்துக்காக இந்த ஆய்வுகள் செய்யபப்டுகின்றனவோ அந்த நோக்கத்தை சிதறடித்து வாசகரிடத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என்பதை ஆய்வாளர்கள் உணர வேண்டும்.

எல்லா ஆளுமைகளுமே ஏதோ ஓரிடத்தில் காலத்திடம் தோற்கவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அம்மையாருக்கு அரசியல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். பின் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  வரலாற்று, இலக்கிய உலகோடு அவர் தொடர்பு நீங்கவில்லை எனினும் அரசியல் அவரை ஓரளவு தடுமாறச் செய்து விட்டது எனலாம்.


தங்கேஸ்வரி அம்மாவை  2014இல் எங்களூரில் இடம்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவில் முதன்முதலில் சந்தித்தேன். தம்பிலுவில் கண்ணகி வழிபாடு பற்றி அங்கு நான் ஆற்றிய உரை நன்றாயிருந்ததென்று சொல்லி கூப்பிட்டுப் பாராட்டினார்.. ஓரிரு ஆண்டுகள் கண்ணகி கலை இலக்கிய விழாவுக்கு தவறாமல் சென்று கொண்டிருந்ததால், அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. ஒருமுறை அந்நிகழ்வின் ஆய்வரங்கொன்றில் கண்ணகி வழக்குரையின் காலம் பற்றி ஒரு ஆய்வாளர் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார். அது பற்றி விவாதம் எழுந்த போது, அவர் சொன்ன கருத்தை அவர் முன்பும் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருப்பதை அவரது நூல்களை மீள வாசிக்கும் போது உணர்ந்தேன். இது அவரது "குளக்கோட்டன் தரிசனம்" நூலின் முன்னுரையில் அவர் கூறுவது:

"வரலாற்று ஆய்வுத்துறையில் எதையும் முடிந்த முடிபாகக் கொள்வதற்கில்லை. காலப்போக்கில் வெளிவரும் பல புதிய தகவல்கள் அடிப்படையில் பல முடிவுகளை மாற்றவும், மீளாய்வு செய்யவும், ஏன் நிராகரிக்கவும் வேண்டும். உதாரணமாக இலங்கையின் பிரபல வரலாற்று ஆய்வாளர் பரணவிதான அவர்களின் பல கருத்துக்கள் இன்று நிராகரிக்கப்படுவதை வரலாற்று அறிஞர்கள் அறிவர்.

வரலாற்று ஆய்வு நூல்களில் இன்னுமொரு பெரிய ஆபத்து உள்ளது.சில வரலாற்றாசிரியர்கள் தாம் வரித்துக்கொண்ட கருத்துகளை இலகுவில் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். கிடைக்கும் தகவல்களை எல்லாம் தமது கருத்துக்கு மாற்றிக்கொள்வதற்குப் பெரும் பிரயத்தனம் செய்வார்கள். அதனால் உண்மை வரலாற்றை அறிந்துகொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுவது உண்டு.

(இந்நூலில்) நிறுவப்பட்ட பல உண்மைகள் அனுமானத்திலும், ஊகத்திலும், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்தவை. இவற்றுக்கு மாறான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டிவை அல்லது திருத்தப்படவேண்டியவை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்."

போன ஆண்டு இறுதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அலகிலா ஆடல் நூலறிமுக விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதற்காக நானும் ஆய்வாளர் திரு.சொ.பிரசாத்தும் இரண்டு தடவை அவரைச் சென்று சந்தித்தோம். நோயில் மிகவும் நலிந்து போயிருந்தார். ஆனால் சமயம், வரலாறு என்று தொடங்கியதும் உற்சாகமாகப் பேசினார். நிகழ்வுக்கு அவரால் வரமுடியவில்லை. அடுத்தநாள் வேறொரு காரணத்துக்காக அழைத்து "ஏலுமெண்டா பிறகு வந்து சந்திங்க" என்றார். இறுதி வரை சந்திக்க முடியாமலே போய் விட்டது.  

மாகோன், குளக்கோட்டன் ஆகிய இருவரைப் பற்றியும் பிரக்ஞை பூர்வமான ஆய்வுகளைத் தொடக்கி வைத்து, இலங்கைத் தமிழர் வரலாற்றை புதிய திக்கில் மடைமாற்றி விட்டவர் என்ற விதத்தில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவர் தங்கேஸ்வரி அம்மையார். கிழக்கிலங்கை பற்றிய ஆய்வுகள் அறிவியல் பூர்வமாகத் தொடரவேண்டும் என்றே அவரும் விரும்பியிருந்தார். அவர் விரும்பிய வழியில் ஆய்வு வரன்முறைகளை மீறாமல் ஆய்வுகளைத் தொடர்வதும், அவர் சொல்வது போலவே வரலாற்றின் புதிய பக்கங்களை ஆதாரபூர்வமாக எழுதுவதுமே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.


இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மாகோனையும் குளக்கோட்டனையும் முழு ஈழவளநாடும் கொண்டாடும். அன்று வரலாற்றில் தொலைந்த அவர்களை மீட்டெடுத்து உலகுக்கு முன் வைத்தவர் என்ற புகழ்மாலை தங்கேஸ்வரி அம்மையாருக்கே சூட்டப்படும். வரலாறு மறைத்த ஒரு மூதாதையை மீட்ட பெருமாட்டி அவர். மாகோன் மகளாருக்கு என் பிரியாவிடைகள்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner