சாகாமம்

0 comments

சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக.

மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப் படையடுத்தது இப்படிச் சொல்லப்படுகிறது. "சோழர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, (விஜயபாகு) மன்னனின் இன்னும் இரு திறமை வாய்ந்த அதிகாரிகள் கரையோர 'வெள்ள மகாபத' பெருஞ்சாலை வழியே அனுப்பப்பட்டார்கள்...... அவர்கள் சாக்காமத்திலும் அதன் அருகே அங்குமிங்கும் இருந்த (சோழர்) காவலரண்களை சூறையாடினார்கள்." (மகாவம்சம் 58:41 - 47). 

சோழர்களின் ஆதிக்கம் கிழக்கிலங்கையில்  சாகாமம் வரை பரந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்வார்கள். சாகாமத்துக்குக் கிழக்கே உள்ள திருக்கோவில் ஆலயத்தை சோழர்களுடன் இணைக்கும் மரபுரைகளையும் இங்கு இணைத்து நோக்கலாம்.

விஜயபாகுவுக்கு நூறாண்டுகள் பிந்திய மகா பராக்கிரமபாகு மன்னனும் சாகாமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறான் என்பதையும் அதே மகாவம்சம் பதிவுசெய்திருக்கிறது. அதன் 75ஆம் அத்தியாயத்தில் இபப்டி வருகிறது. "இப்போது (மகா பராக்கிரமபாகுவின்) சகல பிரமுகர்களும் தலைவர்களும் தீகவாபிமண்டலத்தைக் கைப்பற்ற பெரும் படையுடன் வந்தார்கள். சவனவியளத்திலிருந்த பன்னிரு வாயில் கொண்ட அரணையும், கோமயகாமத்தையும் சாக்காமத்தையும், பின்னர் பலபாசாணத்தையும் அவர்கள் நிர்மூலமாக்கினார்கள்."  (மகாவம்சம் 75:1-4.

இதில் சொல்லப்படும் தீகவாபிமண்டலம், அம்பாறை மாவட்டம் இறக்காமத்துக்கு கிழக்கே அமைந்திருந்தது. கோமயகாமம் இன்று பொத்துவிலுக்கு வடக்கே உள்ள கோமாரி ஆகலாம். சவனவியளம், பலபாசாணம் ஆகிய மற்ற இடங்கள் எங்கெங்கு இருந்தன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தீகவாபிமண்டலத்தில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஏனைய சிங்கள அரசரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கவிரும்பவில்லை என்பதற்கு இந்தக் கிளர்ச்சி பற்றிய தகவல்கள் முக்கியமான ஆதாரங்கள்.      
மொட்டையாகல்லு மலை

சாகாமத்துக்கு வடக்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள மொட்டையாகல்லு மலை இன்னொரு விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வயல் நிலங்களின் மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்தக் குன்றின் கம்பீரம் வார்த்தைகளால் விளக்க முடியாதது.  அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் நடமாடிய இடம் என்பதற்கான ஆதாரம் அங்குள்ள பிராமிக் கல்வெட்டு.

மொட்டையாகல்லு பிராமிக் கல்வெட்டு.



அது பொ.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு. "தச பதிகன சவ கனய உபரஜ நாக" என்ற பாகதப் பொறிப்புக்குப் பொருள், "பத்து சகோதரர்களில் இளையவரான உபராஜன் நாகன்." என்பதாகும். பத்து சகோதரர்கள் என்பதை,  கிழக்கு உரோகணத்தை அல்லது இன்றைய மட்டு - அம்பாறை - அம்பாந்தோட்டைப் பகுதிகளை ஆண்ட கதிர்காம ஷத்திரியர்கள் பதின்மராக வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். 

மொட்டையாகல்லு குன்றின் உச்சியில் படிக்கட்டுகளும் சிதைந்த இடிபாடு ஒன்றும் அமைந்திருக்கின்றன. அதை புத்த தாதுகோபமொன்றின் சிதைவாகச் சொல்வதுடன், மொட்டையாகல்லையும் அதைச் சூழ சாகாமத்தில் சில இடங்களையும் தொல்லியல் பூமியாக வர்த்தமானிப் படுத்தி இருக்கிறார்கள். 


கழிகாம மலை

மொட்டையாகல்லு மலையிலிருந்து தென்மேற்கே பார்த்தால் கழிகாம மலையைக் காணமுடியும். அதன் இன்றைய பெயர் கோவிந்தஹெல. பழைய மட்டக்களப்புத் தேசத்தின் மேற்கெல்லை அது. வெள்ளையர்கள் அம்மலையை "Westminister Abey" என்று அழைத்தார்கள். கழிகாம மலையைக் குறிப்பிடும் சிதைந்த பதினாறாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கிடைத்திருக்கிறது. 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞானசங்கரிகள் ஸ்ரீவிசயவாகு தேவருக்கு யாண்டு 10வதில் தை மாசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் மேற்கு களி[காமமலை தெற்கு அறுகமனப்பூமுனை வடக்கு அன்பிலான்துறை]" என்பது சிதைந்த கல்வெட்டு வாசகம். கோட்டை அரசின் மன்னன் விஜயபாகு பொ.பி 1519இல் பொறித்ததாகக் கருதப்படுகிறது.



மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 02

3 comments


கைலாசபுராணத்தை அடுத்து உருவான கோணேசர் கல்வெட்டும், திரிகோணாசலபுராணமும் 17 - 18ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்க வேண்டும். கோணேசர் கல்வெட்டில் பாட்டு வடிவிலும், எழுத்து நடையிலும் சொல்லப்படும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்தோடு சொல்வது திரிகோணாசல புராணம். எனவே கோணேசர் கல்வெட்டைப் பின்பற்றியே திரிகோணாசல புராணம் தோன்றியிருக்கிறது எனலாம். அவை இரண்டும் தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் கோவில் பற்றியும் குறிப்பிடுகின்றன. திருக்கோணேச்சரம் 1624இல் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னரே, தம்பலகாமத்தில் ஆதிகோணை நாயகர் கோவில் உருவானது. எனவே கோணேச்சரம் இடிக்கப்பட்டு ஒரு சில தசாப்தங்கள் கழிந்தே இவை பாடப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

கோணேசர் கல்வெட்டின் பத்தாம் பாடல் “வார் குலவு களப முலைப் பிடிநடையை” குளக்கோடன் வழிபட்டதைப் பாடுகிறது. திரிகோணாசல புராணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பிடியன்ன மென்னடை என்ற பெயர் வந்திருக்கிறது. அதன் கடவுள் வாழ்த்திலும் மாதுமை அம்மையின் இடத்தில் “பிடியன்ன மென்னடை”யைத் தான் காண்கிறோம். மூன்றாவது திருநகரப் படலத்தில் “மங்கையாள் பிடியன்ன மென்னடையுடன் மருவி” என்றும், நான்காவது கோணவரைப் படலத்தில் “பெண்ணினுக்கரசாகிய பிடியன நடையும்” என்றும் வந்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் கடைசியாக இணையும் நூல்கள்  வெருகல் சித்திரவேலாயுதர் காதலும் கோணமலை அந்தாதியும். வெருகல் சித்திரவேலாயுதர் காதல், பதினேழாம் நூற்றாண்டில் தம்பலகாமத்து வீரக்கோன் முதலியாரால் பாடப்பட்டது. இதன் கடவுள் வாழ்த்திலும் இறுதிப்பாடலான வாழியிலும் “பிடியன்ன மென்னடை” தான் போற்றப்படுகிறாள்.  

கோணமலை அந்தாதி 1806ஆம் ஆண்டு திருக்கோணாசல சைவ ஆதீனத்தைச் சேர்ந்த புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகத்தால் பாடப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் நல்லை ஆதீனத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் தமிழகத்தில் திருவாவடுதுறை, பேரூர்,  மதுரை முதலிய சைவ ஆதீனங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆதீனங்கள்,  சைவ சமயம் சார்ந்த கோவில் நிர்வாகத்திலும் சமூக மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருபவை. திருக்கோணமலையில் சில ஆண்டுகளுக்கு முன் தென்கைலை ஆதீனத்தை தாபித்திருக்கிறார்கள். ஆனால் பன்னெடுங்காலமாக அங்கு திருக்கோணாசல சைவ ஆதீனம் இருந்ததென்பது பலருக்கும் தெரியாது. உப்புவெளியிலுள்ள சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோவிலடியில் இயங்கி வந்த இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் தான் புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகம்.   

ஆறுமுகப் புலவரால் பாடப்பட்ட கோணை அந்தாதியின் முப்பத்தைந்தாம் பாடல் “பிடியன்ன மென்னடைப் பெண்ணரசே” என்று தான் உமையை விளிக்கிறது. இந்த எல்லா நூல்களிலும் கிடைக்கின்ற  திருக்கோணேச்சரம் பற்றிய தொன்மங்களனைத்தையும் தொகுத்து “திரிகோணாசல வைபவம்” எனும் நூலை 1889இல் எழுதிய புலவர் திருமலை வ.அகிலேசபிள்ளை அவர்களும் மூலங்களில் உள்ளபடியே “பிடியன்ன மென்னடை” என்ற பெயரைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆக, இத்தனை சான்றுகளாலும், கோணேச்சரத்தில் வீற்றிருந்த அம்மனின் பெயர் “பிடியன்ன மென்னடை” தான் என்பது தெளிவாகப் புலனாகின்றது. பின்பு மாதுமை என்ற பெயர் எப்படி வந்தது? அது தான் கோணேச்சரத்து இறைவியின் பெயர் என்று யார், எப்போது கதை கட்டி விட்டிருக்கிறார்கள்?

போர்த்துக்கேயர் அழித்த பின்னர் மீளத் திருப்பணிகள் ஆரம்பமாகி, 1963இல் இன்றைய கோணேச்சரத்துக்கு முதலாவது குடமுழுக்கு இடம்பெற்ற போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாதுமையம்மையார் என்ற பெயர் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை அதற்கு முன்பு யார் எப்போது முதன்முதலாக பாவித்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே 1889இற்கும் 1963இற்கும் இடையில் இந்தப் பெயர் யாராலோ சூட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது அம்மையின் பழைய பெயர் வழக்கிழந்த பின் திருக்கோணேச்சர இலக்கியங்களில் தேடிய சிலர் இப்பெயரை அங்கு கண்டடைந்திருக்கலாம். உமையைப் பலவாறாக வருணிக்கும் போது ‘மாதுமை’ என்ற பெயர் திரிகோணாசல புராணத்திலும் கோணமலை அந்தாதியிலும் சில இடங்களில் வந்திருக்கிறது. ஆனால் அப்பெயர் கோணேச்சர இறைவியின் பெயராக இல்லாமல், இமயமலையில் தோன்றிய மலைமகள் உமையைக் குறிப்பிடவே எடுத்தாளப்பட்டிருக்கிறது.  

மாதுமை என்பது பிற்காலத்தில் அறியாமல் சூட்டப்பட்ட பெயராகவே இருக்கட்டும். மாது + உமை. அதுவும் அழகான தமிழ்ப் பெயர் தான். ஆனால் பிடியன்ன மென்னடை என்ற பெயரை அன்றாட வழக்கத்தில் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

உங்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம். நம் சமயத்திலும் இனத்திலும் மாற்றுவதற்கும் தீர்ப்பதற்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, கோணேச்சர இறைவி மாதுமையின் பெயரை ‘பிடியன்ன மென்னடை’ என்று பழையபடி மீட்பது தான் முக்கியமான பிரச்சினையா இப்போது? இந்தப் பெயரை விட அந்தப் பழைய பெயருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால், காரணம் இருக்கிறது, மொத்தம் நான்கு காரணங்கள்.

முதலாவது அதன் தமிழ் அழகு. ‘பிடியன்ன மென்னடை’ என்பது அசாதாரணமான ஒரு தமிழ்ப்பெயர். நாம் முன்பே பார்த்த யாழைப்பழித்த மொழி, பண்ணினேர்மொழி, சுரும்பார்குழலரிவை என்பன போல, பொருள் உள்ள, நயம் பொருந்திய இனிய பெயர். உச்சரிப்பின் இடையே ‘ஷ்’ஓ ‘ஸ்’ஓ வராத பெயர்கள் ஓசைநயமற்றவை என்று கண்டபடியெல்லாம் பெயர் வைக்கின்ற நாம், இனி எதிர்காலத்தில் கூட இப்படி ஒரு பெயரை குழந்தைகளுக்குச் சூட்டப்போவதில்லை. அந்தப் பெயர் ஒரு மறைந்த பாரம்பரியத்தின் அடையாளமாக எஞ்சியிருக்கட்டும். எஞ்சியிருக்கவும் வேண்டும். அந்தப் பெயரையும் வடமொழிக்கு மாற்றி உச்சரிக்க சிலர் விரும்பலாம். அதற்கு அனுமதிக்கவேண்டிய அவசியம் இப்போது இல்லை.

இரண்டு, அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி. குறைந்தது 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒரு பெயர், தமிழ் ஞானசம்பந்தன் திருவாய் மலர்ந்த ஒரு பெயர், நூறாண்டுகளுக்கு முன் வரை வழக்கில் இருந்த பெயர், மறக்கடிக்கப்பட்டு, யாரோ ஒருவரால் முன்மொழியப்பட்ட பெயரொன்றால் இன்று அங்குள்ள தேவியை அழைக்கிறோம். அது அறியாமல் மரபில் ஏற்பட்டு விட்ட ஒரு இடைவெளி.  அந்த வரலாற்றுச் சரடு அறுபட்டு விடக்கூடாது. அவள் பழைய பெயரிலேயே அறியப்பட வேண்டும்.

மூன்று, அப்பெயரின் வரலாற்று முக்கியத்துவம். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணிக மையமாக, இயற்கைத் துறைமுகமாக, முக்கியமான அரசியல் களமாக, இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது திருக்கோணமலை. இலங்கைப் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கப்படும் சின்னங்களில் யானையும் ஒன்று. வரலாற்றுக் காலத்திலிருந்து பிரித்தானியர் காலம் வரை இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் முக்கியமானவை யானைகளும் யானைத்தந்தங்களும் யானைத்தந்தங்களில் விளைந்த முத்துக்களும். வியாபாரம், படையெடுப்பு என்று இங்கு பெருமளவு யானைகள் ஒருகாலத்தில் கூடியிருக்கும். ஆக, கோணமலைத் துறைமுகத்தின் கரையில் வீற்றிருக்கும் உமையவள் பிடிநடையாக இனங்காணப்பட்டதன் பின்னுள்ள கவித்துவம் அற்புதமானது. அப்படி அவளை கண்டவன் மகத்தான ஒரு கவிஞனே தான்.   

மிக முக்கியமானது இறுதிக் காரணம். அந்தப் பெயரை வெறுமனே இலக்கிய அழகு, பெண்ணின் நடை அழகு என்று சுருக்காமல், அந்தப் பெயரின் பின்னுள்ள குறியீட்டை புரிந்துகொள்வது. சோழர் காலத்தில் கொடை அளிக்கப்படும் நிலங்களை பெண் யானைகளைக் கொண்டு அளந்து கொடுப்பது வழக்கமாக இருந்தது. இலங்கையில் கூட அந்த வழக்கம் இருந்திருக்கிறது. கந்தளாயில் கிடைத்த இரண்டாம் கஜபாகுவின் கல்வெட்டொன்றில் “கந்தளாய்ப் பிரமதேயம் பிடி நடந்த பூமி” என்ற வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிடி நடந்த பூமியைக் கொடையளிப்பது அரச வழக்கம். எனவே ஒரு மறைந்து போன வழக்கத்தின் சாட்சி நம் பிடியன்ன மென்னடை அம்மை. 

கோணமாமலையில் வீற்றிருக்கும் மாதரசி, பிடி போல நடப்பவள். அவள் நடக்கும் இடமெல்லாம் தானம் அளிக்கத் தகுதி பெற்று விடுகின்றன. இலங்கைத்தீவின் தொன்மையான நகரொன்றில் பிடியானையின் மதர்ப்போடு நின்றிருக்கும் அந்த மூதன்னை மிக மெதுவாகத் தான் நடை பயில்கிறாள். இல்லாதவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தை அளந்து அளந்து அள்ளிக் கொடுத்துக்கொண்டே செல்கிறாள். நிலத்தை, நிம்மதியை, நீதியை இழந்து கொண்டிருப்பவர்கள் சென்று கையேந்த வேண்டியது அந்தப் பிடியானையிடம் அல்லவா? அந்த யானையோடு மண்ணாளும் கோணை மன்னனிடம் அல்லவா?

மேலும் வாசிக்க »

கூத்து என்னும் மக்கள் கலை

0 comments
விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல்
கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி. சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தித்து தனது ஆய்வுத்தலைப்பு திருக்கோவில் பிரதேச கூத்துக்கலையை மையமாகக் கொண்டது என்பதைக் கூறி, அது தொடர்பான ஓரிரு வாய்மொழி வரலாறுகளை சேகரித்துச் சென்றிருந்தார்.

திருக்கோவில் பிரதேசம் பழைய மட்டக்களப்புத் தேசத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த தொட்டில். அங்கு நீடிக்கின்ற கலைக்கும் நீண்ட வரலாறு உண்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில், காலனித்துவ காலம் வரை ஆடல் பெண்கள் பணியாற்றிய தகவல் கிடைக்கிறது. அக்கோவிலின் நிர்வாகத்தில் முதன்மை இடம்பிடிக்கும் சமூகப்பிரிவொன்று தனது பட்டமாக "நட்டுமுட்டு நாடகசாலை கொண்ட கோத்திரம்" என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. நட்டுமுட்டு என்றால் மேளதாளம். திருக்கோவிலின் வரலாற்று பூர்வமான தோற்றத்திலிருந்து இங்கு மேளதாளத்திற்கும் நாடகசாலைக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக அப்பெயரைப் புரிந்துகொள்ளலாம்.

வசந்தன் ஆட்டத்துக்கு (சிறுவர் கோலாட்டக்கலை) ஒருகாலத்தில் புகழ்பெற்ற இரு ஊர்களில் ஒன்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிலுவில் (மற்றைய ஊர்  காரைதீவு).  மட்டக்களப்புக் கூத்தின் இரு வகைகளில் ஒன்றான தென்மோடிக்கூத்தைப் பழக்குவிப்பதில் பெயர் போன பழைய அண்ணாவிமார் கோளாவில் மற்றும் தம்பிலுவில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். ஆண்கள் கைகொட்டி ஆடும் "பள்ளுக்கு வளைதல்" எனும் கலையாடல் இங்குள்ள தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலை மையமாக வைத்து உருவாகி, இங்கு மட்டும் நீடிக்கின்ற தனித்துவமான கலை. இவை எல்லாம் இப்பிரதேசம்  முற்காலத்தில் கலைவளர்ச்சியில் ஆற்றிய தவிர்க்கமுடியாத பங்கைச் சொல்வன.

சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்து
திரு.மு.பராந்தகன், திருமதி.சிவகாமிதேவி முருகமூர்த்தி, திரு.மு.விஜயாலயன்

இன்று இங்கு ஆடப்பட இருப்பது வெடியரசன் கூத்து. கண்ணகியின் காற்சிலம்பில் நாகமணிகளை இடுவதற்காக மீகாமன் இலங்கை வருவதும், அவனை வெடியரசனும் தம்பியரும் எதிர்ப்பதும், அவர்களை வென்று மீகாமன் நாகமணி பெற்றுச் செல்வதும் கதை. கூத்தைப் பழக்கிய விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தினர் எனக்கு ஏற்கனவே நெருக்கமானவர்கள். இந்தக் கூத்தின் அண்ணாவியார் திரு.முருகமூர்த்தி விஜயாலயன் அண்ணாவின் வழிகாட்டலிலேயே  நான் நான்கைந்து தடவை கூத்தாடியிருக்கிறேன். அவரது தமையன் திரு.மு.பராந்தகனே பன்னிரண்டு வயதில் எனக்குக் கூத்தைப் பழக்குவித்த அண்ணாவியார்.  பல அண்ணாவிமார் இன்றும் கூத்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், தம்பிலுவில் கிராமத்தின் மரபுவழிக் கூத்து இவர்கள் பழக்குவிக்கும் கூத்தில் இன்றும் பொலிவுடன் பிரகாசிக்கக் காரணம், அவர்களது மறைந்த தந்தையார் அமரர் திரு.முருகமூர்த்தி அண்ணாவியாரும், அவர் மறைவுக்குப் பின்னும் கூத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த அவர்களது தாயார் திருமதி. சிவகாமிதேவி அம்மையாரும் தான் என்பேன்.

            
கொழும்புப் பல்கலைக்கழக விண்ணகர் விழாவில் விஜயாலயன் அண்ணாவியாரின் வழிகாட்டலில் கட்டுரையாசிரியனும் பல்கலை நண்பர்களும் டிய "பாசுபதாஸ்திரம்" வடமோடிக்கூத்து


பதினேழாம் திகதி மாலை, விநாயகபுரம் சிவன் கோவில் முன்றலுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கே சென்று விட்டேன். வட்டக்களரியை அழகாக சோடனை செய்திருந்தார்கள். கோவிலின் தலைவர் திரு.வி.ஜெயச்சந்திரன் அவர்கள், ஆசிரியை மற்றும் எழுத்தாளரான திருமதி. ஜெகதீஸ்வரி நாதன் அம்மையார், திருக்கோவில் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிரோஜினி தவநீதன் அவர்கள், கிராம சேவையாளர் திரு.அ.அனீர்த்தன் முதலிய விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் ஐயா மற்றும் விரிவுரையாளர் திரு.கௌரீஸ்வரன் ஐயா, ஆய்வுமேற்பார்வையாளரான திரு.ச.சந்திரகுமார் ஐயா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.  சந்திரகுமார் சேரை பாடசாலைக் காலத்திலேயே அறிவேன். ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் கூத்து பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் இரசிகர்களுக்கு, தாங்கள் ஏற்கும் பாத்திரங்களை விட நடிகர்களே முனைப்பாகத் தெரிவார்கள்.  கூத்திலும் பாத்திரத்தை விட தங்களில் ஒருவரான நடிகரையே மக்கள் அதிகம் இரசிப்பார்கள். அவர் உறவினர் என்றால் மாலை அணிவிப்பது, அன்பளிப்புக் கொடுப்பது, சால்வை அணிவிப்பது இதெல்லாம் கூத்து இடம்பெறும் போதே நடக்கும். அதை யாரும் இடையூறாகவோ, கூத்தின் தொடர்ச்சித்தன்மை தடைப்படுவதாகவோ கருதுவதில்லை. மாறாக பார்வையாளர், நடிகர்கள் இருதரப்பினரையும் குதூகலமூட்டும் நிகழ்வாகவே அது கருதப்படும்.

வட்டக்களரி

வட்டமாகக் களரி கட்டி அதில் ஆடப்படுவது தான் கூத்து. இதனால் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பார்வையாளர்களால் கூத்தைக் கவனிக்க முடியும்.  இப்போது வசதி கருதி ஒருபக்க மேடையில் கூத்து ஆடப்படுவதால், அதன் மரபார்ந்த மக்கள் ஊடாட்டத் தன்மை குறைந்து விடுகிறது.  வட்டக்களரிக்குள் தைரியமாக நுழையும் ஒரு உறவினனுக்கு மேடை சற்று உயரமான - அசௌகரியமான நுழைவிடமாகத் தோன்றுகிறது. இன்றைய சமூகக் கலை மாற்றங்களிலுள்ள இந்த  இடைவெளியைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டோம்.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தலைமை உரை, விருந்தினர் உரை, ஆய்வுமாணவி உரை முதலிய அம்சங்கள் முதலில் இடம்பெற்றன. மாணவர்களை மக்கள் கலைஞர்களிடம் அனுப்பி, மக்கள் கலையை முறைப்படி கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கும் தமது, "அடிப்புறத்திலிருந்து அடிப்புறத்திற்கு" எனும் கற்கை முறைமை பற்றி தலைமையுரையாற்றிய சந்திரகுமார் சேர் விளக்கமளித்தார். 
சந்திரகுமார் சேர் உரையாற்றுகிறார்

சிற்றுரை ஆற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கூத்துக்கலையை இலங்கைத் தமிழரின் தேசியக்கலையாக வளர்த்தெடுப்பது பற்றியும் கலைகளைப் பொதுமைப்படுத்தலிலுள்ள அபத்தம் பற்றியும் பேசினேன்.  இவை முன்பொருமுறை பேராசிரியர் மௌனகுரு ஐயாவுடனும் உரையாடிய விடயங்கள் தான். தேசியக்கலையாக கூத்து வளர்க்கப்படவேண்டும் என்றால், அது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவை எடுக்க வேண்டும். ஆனால் கூத்தில் இங்கு ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான ஆட்டமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக "தாளம் தீர்தலை" சொல்லலாம்.

ஆட்டம் முடிந்துவிட்டதை, அல்லது பாத்திரம் பேசுகின்ற வசனம் முடிந்துவிட்டதைச் சொல்கின்ற ஆட்டமும் அதற்கேயான மத்தள அடியும்  தாளம் தீர்தல் எனப்படும். நான் அவதானித்த கொக்கட்டிச்சோலை மரபில் அல்லது வடமட்டக்களப்பு மரபில் "தாம்தாம் தரிகிட தெய்" என்ற தாளக்கட்டுடன் தாளம் தீர்க்கப்படுகிறது.   ஆனால் தம்பிலுவில் மரபில் அல்லது திருக்கோவில் பிரதேச மரபில் "தாம்தாம் தரிகிட தெய் ததிங்கிண" என்று 'ஒரு தாளம்' கூட்டப்பட்டே தாளம் தீர்க்கப்படுகிறது. கூத்துக்கான ஒரு பொதுவடிவம் உருவாக்கப்படும் என்றால் இதில் எதை ஏற்பது, எதை விடுவது, இந்த ஏற்பையும் விடுகையையும் தீர்மானிப்பது எது - எப்படி? போன்ற கேள்விகள் இலகுவில் விடைகூற முடியாதவை.  ஈழத்தமிழர் தேசியக்கலையாக கூத்தை வளர்க்கும் போது, அந்தந்த ஊர் மரபை தனி ஆட்டமுறையாக (style)  உள்வாங்கி பொதுமைப்படுத்தலைச் செய்து முடிப்பதே சாத்தியமானது என்பதைச் சொன்னேன்.

உரை முடிந்து வந்தமர்ந்ததும், கௌரீஸ்வரன் சேர் உரையில் நான் பயன்படுத்திய 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லாடல் தொடர்பில் தன் கருத்தைச் சொன்னார். அது மக்கள் கலையான கூத்தை இழிவுபடுத்துவதற்காக குறிப்பிட்ட தரப்பினர் வலிந்து உருவாக்கிய சொல்லாடல் என்றும், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம் என்றும் குறிப்பிட்டார். 

இதில் என் கருத்து வேறாக இருந்தது. முன்பொருமுறை கூத்தாடிய ஒரு பெரியவர் சொன்ன விடயம் அது. சாஸ்திரிய பரதநாட்டியத்தில் தட்டடவு, நாட்டடவு எனும் ஆட்டவகைகள் உண்டு. கூத்தில் பெரும்பாலும் கால்களைத் தட்டி ஆடுவதே வழமை. ஆனால் விறுவிறுப்பான மற்றும் இரசிக்கத்தக்க இடங்களில் எல்லாம் கால்கள் வேகமாக நாட்டப்பட்டே ஆடுகின்றன. எனவே நாட்டுக்கூத்து என்பது ஆட்டங்களில் கால்களின் அமைவை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல்லாடல் என்பதே என் கோணம் என்பதைத் தெரிவித்தேன். அவர் உள்ளூர் வழக்கை விசாரித்தார். அப்போது தான் பழையவர்கள் சாதாரணமாக 'கூத்து' என்றே பயன்படுத்துவதையும், இளந்தலைமுறையினரும் கூத்து அருகிய காலத்தைச் சேர்ந்த மூத்தவர்களுமே 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவதையும் உணர்ந்தேன். இன்றைய பயன்பாட்டில் அதை இயல்பாக கூத்து என்றே சொல்லலாம். வலிந்து நாட்டுக்கூத்து என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. தேவையான இடங்களில் மட்டும் வடமோடி -  தென்மோடி என்றோ, வடபாங்கு - தென்பாங்கு என்றோ,  அதன் வகை சார்ந்து குறிப்பிட்டுக்கொள்ளமுடியும் என்றார் கௌரீஸ்வரன் சேர். அவர் கருத்து சரியானதே என்பதை ஏற்றுக்கொண்டேன்.  

கூத்து 9 மணியளவில் துவங்கியது. வட்டக்களரி பொலியத் தொடங்கியது. வேட்டி மறைப்பில் பாத்திரங்கள் உள்நுழைந்தார்கள். நண்பர்களும் உறவினர்களும் மலர்மாலைகள், சால்வைகள் அணிவித்து  நடிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆடிய எல்லோருமே பதின்பருவத்தினர் என்பதாலும், அது அவர்களுக்கு புதிய அனுபவம் என்பதாலும், இரசிக்கத்தக்க வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டு ஆடினார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் வட்டக்களரியை நெருங்கி அமர்ந்து நாடிகளை கைகளால் தாங்கியபடி ஆட்டத்தை உன்னித்துக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஏனைய பார்வையாளர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிப்படும்படி இருந்தது. ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் அவர்களையே சுட்டிக்காட்டி பூரித்துக்கொண்டிருந்தார்கள். "மக்கள் கலைகள் மக்கள் மத்தியிலேயே ஆடப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புவது இதற்காகத்தான்" என்றார்கள்.  

கூத்து நடிகர்களை தனிப்பட்ட ரீதியிலும் அறிவேன். அவர்களுடன் இரண்டு தடவை கூத்தாடிய அனுபவம் எனக்குண்டு. ஒருபுற மேடைக்கு பயின்றுவிட்டிருந்ததால், ஓரிருவர் வட்டக்களரி ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறினார்கள். ஆனால் பயின்ற விழிகளும் இலகுவில் அடையாளம் காணமுடியாதபடி இலாவகமாக அந்தத் தடுமாற்றத்திலிருந்து மீண்டு ஆடினார்கள்.  வழக்கத்தை விடச் சிறப்பாக விஜயாலயன் அண்ணாவியாரின் மத்தளம் 'பேசியது'. கோலாகலமாக கூத்து இடம்பெற்று முடிந்ததும் தங்கை விலோஜினியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

கூத்துக்கலைஞர்கள் மற்றும்  விருந்தினர்கள்
இறுதியாக அன்றைய நிகழ்வு பற்றிய சில கண்ணோட்டங்களை கலாநிதி.ஜெயசங்கர் ஐயா அவர்கள் பகிர்ந்துகொண்டார். மக்கள் கலையான கூத்து இன்று இருப்பதை விட சீரிய நிலையை சீக்கிரமே அடையவேண்டும். சிறுவர்களுக்கான கதைகளை வைத்து சிறுவர் கூத்துக்கள், சமூகக் கூத்துக்கள் அதிகம் எழுதப்பட்டு ஆடப்படுகின்றன, இனியும் ஆடப்படவேண்டும் என்பதைத் தெரிவித்த அவர், மண் சார்ந்த கதைகளும் கூத்து வடிவம் பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதே திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலின் தோற்றம் பற்றிய மனுராசா - தம்பதிநல்லாள் தொன்மங்களைக் கூத்தாக்கலாம், தம்பிலுவில் கண்ணகி அம்மனோடு தொடர்புடைய செண்பகநாச்சியார் - நாகமங்கலை - பொற்புறா முதலிய தொன்மங்களை கூத்து வடிவமாக்கலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவை செயலுருவாக்கம் அடைந்தால் நன்றாக இருக்கும்.    

நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றதற்காக சகோதரி விலோஜினிக்கும், விஜயாலயன் அண்ணா மற்றும் சிவகாமி அம்மாவுக்கும் நன்றி கூறி, அனைவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினேன். விடைபெறும் போதும், விருந்தினர்கள் பார்வையாளர்கள் காட்டிய ஈடுபாட்டைச் சொல்லி வியந்து கொண்டார்கள். உண்மையில் கலைகளை இரசிப்பதற்கு ஒரு மனநிலை வேண்டும். திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமில்லாத நண்பனோடு நீங்கள் திரையரங்கு போக முடியாது. சங்கீத ஞானம் இல்லாத துணையோடு நீங்கள் கர்நாடக இசைக்கச்சேரியில் அமர்ந்து தலையாட்ட முடியாது. கூத்தும் அப்படித்தான். அதற்கும் ஒரு ஆர்வம், ஒரு தயார் மனநிலை வேண்டும். ஆனால் சுமார் நூறு அளவில் கூடியிருந்த இந்தக் கூட்டம் சொல்லி வைத்தால் போல் வயது வித்தியாசமின்றி கூத்தோடு ஒன்றித்து நின்றது ஆச்சரியம் தான். இந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே இந்தக்கலை அத்தனை நெருக்கமானதா?  அல்லது இந்தக்கதையை  விரும்பி இரசிக்கும் பழந்தமிழ் ஆழ்மனம் இவர்களில் விழித்துக்கொண்டதா? விழித்துக்கொண்டால் நல்லது தான். முழுத்தமிழ்ச்சமூகமும். 

மேலும் வாசிக்க »

உடுராஜமுகி

0 comments


ஒரு 18+ பதிவு.

பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம். 



2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம்.


2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிகை நேகா பாண்ட்சே ஆடுவது போலமைந்த காட்சியமைப்பு. படு மோசமான நடனக்காட்சி. 

உடுராஜமுகி - ஆண் வேற்றம்

பாடலை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. பாடல் வரிகளின் அர்த்தம் ஓரளவு புரிந்து பின்னர் அந்தப் பாடல் என் கைபேசி பாடல் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம்பெறத் தொடங்கியது. திரைப்படத்தில் இடம்பெற்றது மதுபாலகிருஷ்ணன் பாடிய ஆண் வேற்றம் (version). ஆனால் எனக்குப் பிடித்தது மஞ்சரி பாடுகின்ற பெண் வேற்றம் தான். 

உடுராஜமுகி - பெண் வேற்றம்

இந்தப் பாட்டின் பொருளை அறிந்தது உண்மையில் ஒரு சோகக்கதை. நான் முறைப்படி சமஸ்கிருதமோ மலையாளமோ கற்றவன் அல்லன். பாடலில் வந்த "சமுத்ரசுதா' (அலைமகள்) என்ற சொல்லை மட்டும் புரிந்து கொண்டு 'மகாலட்சுமியின் பக்திப் பாடல் போல. நன்றாக இருக்கிறது. நவராத்திரி காலத்தில் பாடுவோம்' என்று தான் இணையத்தில் பொருள் தேடிப் பாடமாக்கினேன். பிறகு தான் தெரிந்தது, வெறுமனே பெண்ணைப் பாடும் பாடல்தான் அது என்று. எப்படியோ பாடலாசிரியன் மகாரசிகன் என்று மட்டும் தெரிகிறது.
 ‌
ஏனென்றால் இது சிருங்கார ரசம் பொருந்திய இனிய பாடல். பொருளைப் பார்த்துவிட்டு நீங்கள் தலைதெறிக்க ஓடக்கூடாது என்று தான் முன்னெச்சரிக்கையாக ஒரு 18+ போட்டுவைத்தேன். (ம்கும். இவன் அப்படி என்ன 18+ எழுதியிருக்கிறான் என்று பார்க்கத்தான் நீங்கள் வந்தீர்கள் என்று எனக்கு தெரியாமலில்லை.) சரி, யூடியூப்பில் பாட்டை இயக்கியபடியே பாருங்களேன் பொருளை. 

"‌நிருபம ப்ரஹ்மாண்ட சம்மோஹினி
நிகில நித்யானந்த மந்தாகினி"
 ‌
நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினி.
முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறு. 

மந்தாகினி என்பது, மெதுவாக ஓடுவதால் அந்த நதி பெற்ற பெயர். பெண்ணை, நீராடும் நதிக்கு - அதுவும் மெதுவாக ஓடும் நதிக்குச் சொல்லும் அந்த ஒப்பீடே சிருங்காரம் கொப்பளிப்பது தான்

‌"உடுராஜமுகி ம்ருகராஜகடி"
 ‌
உடு என்றால் நட்சத்திரம். உடுராஜன் நட்சத்திரங்களின் அரசனான சந்திரன். உடுராஜமுகி என்பது நமக்கு பழக்கமான பெயர் தான். சந்திரமுகி. சந்திரன் போன்ற முகத்தைக் கொணடவள்.

கடி என்றால் இடுப்பு. மிருகராஜன் சிங்கம். மிருகராஜகடி. சிங்கம் போன்ற இடுப்பைக் கொண்டவள். சிங்கம் பிடரி மயிராலும் ஊனுண்ணுவதாலும் பெயர் பெற்றது. தோற்ற ஒப்பீட்டில் மட்டுமன்றி அது எப்படி பெண்ணின் இடுப்புக்கு உவமையாகிறது என்று நான் சொல்லப்போவதில்லை.‌

"கஜராஜ விராஜித மந்தகதி"

இந்த வரிக்கு விளக்கம் தேவையில்லை. பிடியன்ன மென்னடை. அரசியர்க்கு உரிய நடை. அந்த நடையுடைய இவள் பேரரசி.

"கணஸார சுகந்தி விலாசினி நீ‌"
‌கணசாரம் என்பது சந்தனம். அதன் சுகந்தத்தைக் கொண்ட விலாசினி. விலாசினி என்றால் விளையாட்டுக்களால் மகிழ்விப்பவள் (என்ன விளையாட்டுக்களால் என்றெல்லாம் கேக்கப்படாது). ஆந்திரத்து நடனவகைகளில் ஒன்றுக்குப் பெயர் "விலாசினி நாட்டியம்". அதன் "ஆஸ்தான சம்பிரதாயம்" எனும் பிரிவு அரண்மனையிலும் அந்தப்புரங்களிலும் ஆடப்பட்டது தான்.

"கனகாங்கி விகார ஸமுத்ரஸுதே‌" 
சமுத்ரசுதே ஏற்கனவே பார்த்தது தான். "வந்தாள் மகாலக்‌ஷ்மியே" என்று பாடுவதில்லையா? இவளை திருமகள் என்கிறான் கவிஞன். கனகாங்கி? கனகம் என்பது தங்கம். தங்கம் போன்ற அங்கங்களைக் கொண்டவள். இதைத்தான் அண்மைக்காலத்தைய புலவரான விவேகா, தனது "டாடி மம்மி வீட்டில் இல்லை" எனும் மகத்தான காவியத்தில் "தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே, தன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே" என்று பாடியிருக்கிறார். 
 ‌
"‌நயனங்களில் அஞ்சன காந்தகடம்"
இனி வருவது மலையாளம். அவள் கண்களில் மை காந்தம் போல் கவர்கின்றது. அஞ்சனம் என்பது மை. சிங்களத்தில் எனது துலாஞ்சனன் எனும் பெயருக்கு அர்த்தம், 'ஒளியையே கண்மையாகக் கொண்டவன்" என்பது இங்கு உங்களுக்குத் தேவையில்லாத - ஆனால் சின்ன விளம்பரமாக கொடுக்க வேண்டிய ஒரு கொசுறுத்தகவல்.

"அதரத்தில் அனந்தம் அருந்த ரசம்"
இந்தப் பெண்ணின் உதடுகளில் அருந்த அனேக இனிய பானங்கள் உள்ளன.

"ப்ரணயோஜ்வல காவ்ய கலாவதி நீ"
பிரணயோஜ்வல என்றால் எனக்கும் என்னவென்று தெரியாது. அடுத்து வருவது. காவியக்கலைகளில் வல்லவள் நீ.

"சுரலோக விஹாரிணி சாருலதே"
சுரலோகம் - தேவலோகம். விகாரிணி - இன்பத்துக்காக அங்குமிங்கும் அலைபவள். சாருலதா - அழகிய கொடி. அங்குமிங்கும் அலைந்து சொர்க்கத்தைக் காட்டும் பூங்கொடியே என்று ஒரு 'மார்க்கமாக' மொழிபெயர்க்கலாம்.

‌"கலரஞ்சித காஞ்சன காந்திமயம்
ஸ்தனகும்ப தரங்கித சஞ்சலனம்" 

"மன்மதனைப் போல் மயக்கும்படி ஒளிவீசுபவள். அவள் குடங்களை ஒத்த மார்புகள் அலைகளைப் போல் அசைந்தாடுகின்றன. வாயைத் துடைத்து விட்டு அடுத்த வரிக்கு வாருங்கள். 

"மணிமேகல பூண்ட நிதம்ப தடம்
நவ பத்மதளாப புணர்ந்ந பதம்"
ஒட்டியாணம் பூண்ட அல்குல். புத்தபுதுத் தாமரையிதழ்கள் இணைந்தது போன்ற பாதங்கள்.

இவ்வளவையும் பாடிவிட்டு மீண்டும், ‌நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினியே,‌ முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறே என்று கூவியபடி முடிகிறது பாடல்.

பாடல் இவ்வளவும் தான். ஆனால் பொருள் புரிந்து இந்த இன்னிசையை இரசித்தபடி கேட்கும் போது என்னவோ செய்யத்தான் செய்கிறது, இல்லையா?

மொழியறிஞர்கள் சமஸ்கிருத - மலையாள மொழிபெயர்ப்புகள் தவறென்றால், (இங்கு கூறப்பட்ட அர்த்தத்தில் சிருங்காரக்குறைவு இருந்தால் மாத்திரம்) திருத்தவும். இறுதியாக, 18+இற்காக மட்டும் என் முழுநீளப்பதிவை முதன்முறையாக வாசித்த மற்றும் 'பெரிதாக' எதிர்பார்த்த உங்களில் சிலர் "எங்கடா இதில நீ சொன்ன 18+" என்று என் கொலரைப் பிடிப்பதற்கு முன், தங்களிடம் வணக்கம் கூறி விடைபெறும் நான்... 


மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 01

0 comments


திருக்கோணேச்சரப் பக்கம் போயிருக்கிறீர்களா? போகாவிட்டாலும் பரவாயில்லை. அது சம்பந்தமாக கேள்வி ஒன்று. திருக்கோணமலையில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், உமையையும் என்னென்ன பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்?

கொஞ்சம் யோசித்துவிட்டு பதினோராம் ஆண்டு படித்த சமய பாடத்தை ஞாபகப்படுத்தி “மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரர்” என்று நீங்கள் பதில் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பேர் இது பெரிய கஷ்டமான கேள்வியொன்றும் இல்லையே என்று புன்னகைக்கலாம். இல்லை. உங்கள் விடை பிழை. கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் சிவன் - உமையின் பெயரை நீங்கள் சரியாகச் சொல்லவில்லை.

அதை ஒரு பக்கம் வையுங்கள். நாம் முதலில் தலைப்புக்கு வருவோம். பிடியன்ன மென்னடை. ஏதாவது புரிகிறதா? பிடி + அன்ன + மெல் + நடை. பிடி என்றால் பெண் யானை. அன்ன என்றால் ‘போல’ என்று பொருள். பெண் யானையைப் போல மென்மையாக நடப்பது அல்லது நடப்பவர் தான் பிடி அன்ன மென்னடை.

ஆண்கள் கவிழ்வது பெரும்பாலும் பெண்களின் நடையில் தான். இக்காலப் பாடலாசிரியர்களே கூட “நடையா இது நடையா” என்று தான் பாடித் தீர்க்கிறார்கள். தமிழ் இலக்கியங்களும் பெண்களின் நடையை பலவாறு வருணிக்கின்றன. அப்படி வர்ணிக்க நினைக்கும் போது தமிழ்க் கவிஞர்களை அதிகம் பித்துப் பிடிக்கச் செய்தவை அன்னமும் யானையும் தான். திருக்குற்றாலக் குறவஞ்சியில் “மட அன்ன நடையிலொரு சின்ன நடை பயிலும் நடையினாள்” ஆடி வருகிறாள். சகலகலாவல்லி மாலையில் “நற்குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாள்” என்று பாடுகிறார் குமரகுருபரர். சரஸ்வதியின் நடையழகைப் பார்த்து பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படுகின்றனவாம்.

நீங்கள் அன்னமோ யானையோ நடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பக்கத்தில் கைபேசி இருந்தால் யூடியூப்பில் போய் தட்டித் தேடிப் பாருங்கள். பார்க்கப் பார்க்கத் தீராது. விலங்குகளிலேயே ஒய்யாரமாகவும் கவர்ச்சியாகவும் நடந்து செல்பவை அன்னமும் யானையும் தான். முதன் முதலாக எழுந்து நடக்கப் பயிலும் குழந்தையின் நடையின் அழகை மட்டும் தான் அவற்றின் நடைக்கு ஒப்பிட முடியும். 



ஆனால் இரண்டின் நடைக்கும் சிறிய வேறுபாடு இருக்கிறது. அன்னம் நடை பயிலும் போது அதில் குழைவும் மென்மையும் தென்படும். யானையின் நடையில் ஒரு ஒயில் இருந்தாலும் கூடவே கம்பீரம் இருக்கும். அன்னநடையை எல்லா வயதுப் பெண்களுக்கும் சொன்னாலும்,  யானை நடை பேரிளம்வயதுப் பெண்களுக்குத் தான் அதிகம் ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. யானை உருவத்திலும் வயதிலும் பெரியது. இலக்கியத்தில் அன்னையரும் அரசியருமே யானை நடைக்கு ஒப்பிடப்படுகிறார்கள். யானையின் நடை கம்பீரமான பெண்களின் நடைக்கு ஒப்பிடப்படுவதை தமிழ் மரபில் மாத்திரமல்ல,  ஏனைய இந்திய மொழி இலக்கியங்களிலும் கூட காணலாம்.

அயிகிரி நந்தினி என்று துவங்கும் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதன் 12ஆம் பாடலில் “மத்தமதம் கஜராஜ பதே” என்று தேவி போற்றப்படுகிறாள். மதயானையின் ராஜநடை கொண்டவளாம். இங்கு திறன்பேசிகள் அறிமுகமான 2010களின் ஆரம்பத்தில் நம்மவர் பலரின் கைபேசி அழைப்போசையாக இருந்தது “உடுராஜமுகி” எனும் பாடல். மலையாளத்தில் 2007ஆமாண்டு வெளியான ஆப்பிரகாம் லிங்கன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது. அதில் “கஜராஜ  விராஜித மந்தகதி” என்றோர் வரி வருகின்றது. யானையரசனின் இணையற்ற மந்தமான நடையைக் கொண்டவள். இந்த வரி கவி காளிதாசனின் வடமொழி சுலோகமொன்றிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள்.


உடுராஜமுகி ம்ருகராஜகடி கஜராஜ விராஜித மந்தகதி

சரி, இப்போது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பெண்களின் நடை பற்றிய இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒன்றுமில்லை. இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்கு விடை இது தான். திருக்கோணமலையில் வீற்றிருக்கும் தம்பதியரின் பெயரில் நீங்கள் சொன்ன பாதி விடை சரி. கோணேசர் – கோணைநாயகர் - கோணேச்சரர். ஆனால் அம்மையின் பெயர் மாதுமை அல்ல. பிடியன்ன மென்னடை!

கேள்விப்பட்டதே இல்லையா? ஆம். வியப்பாகத் தான் இருக்கும். திருக்கோணேச்சரம் மீது பாடப்பட்ட எந்தவொரு பழைய இலக்கியங்களிலுமே கோணேஸ்வரரின் தேவியின் பெயர் மாதுமை இல்லை. அவை எல்லாமே ஒரே பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன. “பிடியன்ன மென்னடை”, “பிடியன்ன நடை”, “பிடிநடை”, பெண்யானை போல் நடை பயில்பவள்.

சரி. உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், ஒவ்வொரு இலக்கியமாகவே போய் பார்த்து விட்டு வருவோம், வாருங்கள். அதற்கு முன், அவற்றை காலத்துக்கேற்ப ஒழுங்குமுறைப்படுத்துவது அந்தப் பெயர் விடயத்தில் நாம் சொல்வது சரி தானா என்பதை உறுதி செய்ய உதவலாம்.

திருக்கோணேச்சரம் பற்றிய மிகப்பழைய இலக்கியச் சான்று சம்பந்தர் தேவாரம். அது பொ.பி 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. (பொ.பி என்றால் பொது ஆண்டுக்குப் பின். கி.மு, கி.பி என்ற சுருக்கங்களுக்குப் பதிலாக இப்போது பொ.மு, பொ.பி என்று பயன்படுத்துகிறார்கள்).

தமிழகத்தின் பாடல் பெற்ற தலங்களிலுள்ள அம்மன்களின் பெயர்கள் பெரும்பாலும் தேவாரங்களில் இடம்பிடித்த பெயர்களாகவே இருக்கின்றன. உதாரணமாக மதுரைப்பதிகத்தில் “அங்கயற்கண்ணி”,  இராமேஸ்வரப் பதிகத்தில் “மலைவளர்காதலி”, திருவண்ணாமலைப் பதிகத்தில் “உண்ணாமுலை”, இப்படிப் பல பெயர்களைக் காணலாம். இன்றும் இந்தப் பெயர்களே அங்கங்கு உள்ள அம்மன்களை அழைக்க பயன்படுகின்றன. என்ன, நமது வடமொழி மோகத்தால் அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொஞ்சம் மாற்றிவிட்டோம்.

அங்கயற்கண்ணி ‘மீனாட்சி’ ஆகிவிட்டாள். உண்ணாமுலை அம்மைக்கு இன்று ‘அபீதகுஜாம்பாள்’ என்று பெயர். மலைவளர்காதலி ‘பர்வதவர்த்தனி’ ஆகிவிட்டாள். தேவாரங்களில் நாயன்மார் பதிவு செய்த வண்டார்குழலி (சூடிய மலர்களின் நறுமணம் காரணமாக வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்டவள்), சுரும்பார் குழல் அரிவை (அதே பொருள் தான். சுரும்பு என்றால் வண்டு), யாழைப்பழித்த மொழி (பேச்சின் இனிமையில் யாழை வெட்கப்பட வைத்தவள்) முதலிய அருமையான பெயர்களை இன்றும் அரிதாக தமிழகத் தலங்களில் காண முடிகின்றது.

இதே நியதிப்படி, பாடல் பெற்ற தலமான கோணேச்சரத்து அம்மனின் பெயர், அந்தத் தலம் மீது பாடப்பட்ட தேவாரத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், மாதுமை என்ற பெயரை சம்பந்தரின் பதிகத்தில் காணமுடியவில்லை. அப்படி என்றால் பிடியன்ன மென்னடை? அது இருக்கிறது. இரண்டாம் பதிகத்திலேயே. “பிடியன நடையாள் பெய்வளை மடந்தை”

தேவாரத்தை அடுத்து, காலம் இன்னதென்று சரியாகக் கூறமுடியாத கோணேச்சர இலக்கியங்கள் பல கிடைக்கின்றன. அவற்றின் மொழிநடை, பாடல் பொருத்தம், கூறப்படும் செய்திகள் என்பன கருதி, அவை 15ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடையே உருவானவை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவற்றில் மிகப்பழையதாகக் கருதப்படுவது கைலாச புராணம். இதை சிலர் ‘தட்சிணகைலாச புராணம்” என்று அழைக்கிறார்கள். இதன் .காலம் 16ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். கைலாச புராணத்தின் கடவுள் வாழ்த்தின் ஐந்தாம் பாடல் மாதுமை அம்மையைத் துதிக்கின்றது. ஆனால் பாடலில் மாதுமை என்ற பெயர் இல்லை. “சீர்புரந்த பிடியன்ன மென்னடை அம்பிகை பாதம் சிந்தை செய்வாம்!” என்றே பாடுகிறது அது. அதன் ஏழாவது திருநகரச் சருக்கப் படலத்தில் “பிரை செய்த அமுதமொழிப் பிடியன்ன மென்னடைக்கு”, “அமையனைய திருத்தோளின் அணங்கு பிடி அன்ன நடை”க்கு குளக்கோட்டன் கோவில் அமைத்த செய்தி வருகிறது.

(தொடரும்)




மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner