இல்லிறப்பு: கண்ணகியும் கார்வண்ண இராமனும்

0 comments

 இரண்டு பதிவுகளைக் கடந்துவர முடிந்தது.

ஒன்று இராவணனை தங்கள் முப்பாட்டனாகப் புகழ்ந்து இராமனை இகழும் பதிவு. அது சூர்ப்பனகை மூக்கறுப்பு, வாலிவதம், சீதையின் தீக்குளிப்பு என்று இராமனை விமர்சித்தபடி சென்றது.


இன்னொன்று, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை கேலி செய்வது. மாற்றாளிடம் சென்று திரும்பிய கணவனை கையாலாகாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, வெளியூர் போய் அங்கும் பிரச்சினை ஏற்படுத்திய கண்ணகியை வெட்கமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்றது அது.

அதிகம் உறுத்தியது அந்தப்பதிவுகள் அல்ல. அவை இரண்டின் சாராம்சமும் என்னவென்றால், சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற வசனம். இரண்டுமே இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் வைத்து எண்ணப்படுபவை. இவர்கள் சொல்வது போல, இந்த இரு நூல்களும் காலாவதியாகி விட்டனவா? இவற்றை தமிழர்கள் கொண்டாடத் தேவையில்லையா?

இவற்றில் சரிபிழை கூற முன்பு, இரண்டு இலக்கியங்களும் சந்திக்கும் முக்கியமான புள்ளி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மணவாழ்க்கை.

இரு துணைகளுக்கிடையிலான கலவி, திருமணம் மூலமே சமூக அங்கீகாரம் பெறுகிறது. திருமணத்துக்கு முந்திய உறவும், திருமணத்துக்கு அப்பாலான உறவும் சமகாலத்திலும் பரவலாக நீடிக்கின்ற போதும், அவை சமூக அங்கீகாரம் பெறாமல், இழிவாகவே பார்க்கப்படுகின்றன.

சற்று முற்போக்காகவே சிந்திப்போம். இந்த இரு துணைகளுக்கிடையிலான உறவு என்பது இரு எல்லைகளுக்கிடையிலேயே நீடிக்க முடியும். ஒரு எல்லை, மூன்றாமவர் ஒருவரை அனுமதிக்கக்கூடாது எனும் புரிதலுடன், இருவர் திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். உலகெங்கும் பரவலாக சமூக அங்கீகாரம் பெற்றது இதுவே.

அடுத்த எல்லை, இணைந்து வாழும் இருவரும், அல்லது இருவரில் ஒருவர், மற்றவரின் ஒப்புதலுடன், மூன்றாமவருடன் கலவி கொண்டு வாழ்தல். இங்கு இணைந்து வாழ்தல் எனும் போது, திருமணம் என்பது கட்டாயமான நிபந்தனையாக இருப்பதில்லை.

இதில் இரண்டாவது எல்லை, நம்மில் பலருக்கு நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கலாம். அசௌகரியத்தைக் கொடுக்கலாம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை மட்டுமே நாகரிகமாகக் கருதும் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாம். திருக்குறள் காலத்திலிருந்தே "பிறனில்விழையாமை" என்பதை முக்கியமான அறமாக தமிழ்ப் பண்பாடு முன்வைத்து வந்திருக்கிறது.தமிழருக்கு மட்டுமன்றி உலகெங்குமே அது அறப்பிழை தான். பிறனில் விழைதலுக்கு ஆங்கிலத்தில் "Adultery" என்று பெயர். அது மேற்குலகிலும் கூட பல நாடுகளில் ஒழுக்கமீறலாக சட்ட, சமய, சமூக, கோணங்களில் இன்றும் பரவலாக விவாதிக்கப்பட்டே வருகிறது.

(பிறனில் விழைதல், பிறன்மனை நோக்கல் என்ற சொற்கள் ஏற்கனவே தமிழில் வழக்கில் இருக்கின்றன. இவை ஆண்பால் மையச் சொற்கள். பிறன்மனை நாடுபவனை "அடுத்தவன் வீட்டுக்கு செல்பவன்" என்ற பொருளில் "இல்லிறப்பான்" என்கிறார் வள்ளுவர். இல்+இறத்தல் = [அடுத்தவன்] இல்லத்துக்கு இறங்குதல். சொற்சுருக்கம், பொருத்தம், எளிமை கருதி Adultery என்ற கலைச்சொல்லுக்கு "இல்லிறப்பு" என்ற சொல்லையே இனிப் பயன்படுத்துகிறேன்.)

ஆனால், யதார்த்தத்தில் இத்தகைய உறவுகள் நீடித்துத் தான் வருகின்றன என்பதைக் காண்கிறோம். ஒரு இணையின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்றாவது நபரால் பாதிப்பேதும் வரவில்லை எனும் போது, அல்லது அந்த உறவை மற்றைய இணை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் போது, அந்த உறவு சமூக அங்கீகாரம் பெறுகிறதோ இல்லையோ, அடிப்படை அறத்தினடிப்படையில் அங்கீகரிக்கத் தகுதி பெற்று விடுகிறது.

சற்று அதிர்ச்சியாக இருக்கும், இல்லையா? ஒரு மணவுறவில் மூன்றாம் நபரின் இடையீட்டை ஏன் எதிர்க்கிறோம்? முந்தைய இருவரில் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதால் தானே? தனக்கு மேலதிகமான தன் துணையின் இன்னொரு உறவை ஏற்கும் பக்குவம் மற்றைய துணைக்கு இருந்தால், அத்தகைய இருவரின் அல்லது மூவரின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இல்லை என்பதே அடிப்படை அறம். சரியான முற்போக்கு.


2016இல் இந்திய உச்ச நீதிமன்றம் இல்லிறப்பை குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் மணமான ஒருத்தி இல்லிறந்தால், அவள் கணவனின் - ஒரு ஆணின் - உடைமையாக இருந்து தவறிழைத்து விட்டாள் என்ற கோணத்திலேயே தண்டிக்கப்பட்டாள். சட்டரீதியாக ஒரு தவறுக்கு பால் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதே அத்தீர்ப்பின் பொருள். இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையிலும் இல்லிறப்பு குற்றமாகச் சொல்லப்படவில்லை. சட்டம் எவ்வாறு சொன்னாலும், சமூகம் எவ்வாறு சொன்னாலும், தன் கையாலாகாத்தனத்தால், அல்லது 'அவன் ஆண் தானே' என்று காரணம் சொல்லி, பெண்ணொருத்தி தன் கணவனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்வது இந்த முற்போக்குக்குள் வராது.

இனி சிலப்பதிகாரத்துக்கு வாருங்கள். வேறுவழியில்லாமல் அல்லது தான் பெண் என்பதால் தான், கண்ணகி கோவலனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்கிறாளா?

மாதவி - கோவலன் இணைவால் கண்ணகி வருந்துகிறாள். துடிதுடித்துப் போகிறாள். "மங்கல அணி தவிர பிற அணிகள் அவள் அணியவில்லை" என்று தொடங்கி சிலம்பு கண்ணகியின் வேதனையைச் சொல்லும் வரிகள் நீள்கின்றன. ஆனால் கோவலன் தன் முன் வந்து வருத்தத்துடன் நிற்கும் போது, ஊடலோ கோபமோ எதையும் காட்டிக்கொள்ளாமல், "முறுவல் நகைமுகம் காட்டி சிலம்புள, கொண்ம்" (புன்னகைத்தபடி சிலம்புகள் தான் இருக்கின்றன. எடுத்துக்கொள்ளுங்கள்) என்கிறாள்.

கண்ணகிக்கு முன்பின்னாக சங்க கால - பக்தி இலக்கிய கால தலைவியர், தன் தலைவர்கள் இல்லிறந்து மீண்டும் தன்னிடம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது, கண்ணகியின் ஆளுமைப்படைப்பு . கோவலன் திரும்பி வரும்போது, கண்ணகி கத்தி கூப்பாடு போடவில்லை. கட்டிலில் குப்புறப்படுத்து விம்மி அழவில்லை. "வெளியே போடா நாயே" என்று சத்தமிட்டு கதவை அடைக்கவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால், கண்ணகிக்கு இருந்தது இன்றைய துரோகமிழைக்கப்பட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்க இயலாத மிகப்பெரும் மனத்திடம்.

அது சாத்தியமா? சாத்தியம். இன்றைய முற்போக்கு வரைவிலக்கணத்தின் படி, துணையின் கலவிச்சுதந்திரத்தில் நம்மில் பலர் எண்ணிப்பார்க்கவே அஞ்சும் இரண்டாவது எல்லையில் நிற்கிறாள் கண்ணகி.

அதற்காக கண்ணகி கோவலனின் இல்லிறப்பு பற்றி பேசாமல்இருக்கவும் இல்லை. அவள் மதுரையில் கோவலனுக்கு உணவு பரிமாறும் போது, அவனுக்கு தன் தவறு நினைவுவருகிறது. அப்போது மெதுவாக ஆனால் அழுத்தமாக "போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன்" (நீ செய்தது இழிவான செயல் தான். ஆனால் நான் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை) என்கிறாள் கண்ணகி. கோவலனைக் குத்திக்காட்டவும் வேண்டும். தன் சமநிலையில் பிறழவும் கூடாது. "சூரரைப்போற்று" பொம்மி, "பாகுபலி" தேவசேனா இவர்களின் பாத்திரப்படைப்பெல்லாம் கண்ணகிக்கு கிட்டே வரத்தான் முடியுமா?

இனி இராமனை எடுத்துக்கொள்ளுங்கள். சூர்ப்பனகை மூக்கறுக்கப்பட்டது, அவள் இராமன் மீது ஆசைப்பட்டு அவனை அடைவதற்காக சீதையை சிறைப்பிடிக்க (அல்லது கொல்ல?) முயன்றதால். வாலிவதம் நிகழ்ந்தது, அவன் தன் தம்பி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால். இராவணன் கொல்லப்பட்டது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதுவரை ஆண்களுக்குச் சொல்லப்பட்ட பிறனில் விழையாமையை சூர்ப்பனகை மூலம் பெண்களுக்கும் வரையறுத்து புரட்சி செய்தவன் கம்பன். சூர்ப்பனகை மூக்கறுந்ததும் அவள் முதலில் கண்ணீரும் இரத்தமும் வழிய உதிர்க்கும் முதல் வசனமே "பெண் பிறந்தேன் பட்ட பிழை" (நான் பெண்ணாய்ப் பிறந்து தான் பிழை) என்பது தான். கம்ப இராமாயணம் தலையில் அடித்து அடித்து சொல்லும் அறம் ஒன்று தான், "இல்லிறத்தல் தவறு". கம்பனுக்கும் ஆயிரமாண்டுகள் முன்பு வாழ்ந்த வள்ளுவனின் அதே குரல். பிறனில் விழையற்க.

உண்மையில் பாத்திரப்படைப்பில் இராமன் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் கொண்ட சாதாரண மானுடனாகத் தான் வலம் வருகிறான். காந்தி, கலாம் உட்பட மாபெரும் சமகால ஆளுமைகளும் முன்னுதாரண அறிஞர்களும் கூட வாழ்க்கையில் சறுக்கிய இடங்களைப் பார்த்திருக்கிறோம். இராமன் வாழ்வை அப்படிக் கொண்டு, இலக்கியப் பார்வையிலோ சமகால அற மதிப்பீடுகளின் அடிப்படையிலோ விமர்சிக்கும் உரிமை இங்கு அத்தனை பேருக்கும் உண்டு. எதிர்மறைப் பாத்திரமான இராவணனின் தரப்பு நியாயங்களைச் சொல்லவும் எவருக்கும் இயலும். (அதற்காக இராவணனை முப்பாட்டன் என்பதும், அவனை வரலாற்றுப் பாத்திரமாக கொண்டாடுவதும் ஓவர். அதைத் தனியே பேசுவோம்)

ஆனால் எல்லாம் சரி. இராமனின் பாத்திரத்திலுள்ள குறைபாடுகளுக்காக இராமாயணத்தையே நிராகரிக்கவேண்டும் என்பது? நூறு வீதம் ஒரு சிறு பிழை கூட விடாமல் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த - வாழும் ஒரு வரலாற்று நாயகரைக் காட்ட முடியுமா இவர்களால்? நடிகர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று நம் ஆதர்ச நாயகர்கள் அத்தனை பேருமே சிறிதளவாவது வாழ்க்கையில் தவறிழைத்தவர்கள் தானே? அதற்காக அவர்களை கொண்டாடாமல் தவிர்க்கிறோமா?

இவர்கள் உண்மையிலேயே முற்போக்கு பேசுபவர்கள் என்றால், வாழ்க்கைத்துணை விடயத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்கவேண்டும். ஏகபத்தினி விரதன் இராமன் போல ஒரு எல்லை. கணவனின் இல்லிறப்பை பக்குவத்தோடு ஏற்கும் கண்ணகி போல மறு எல்லை. இரண்டுமே பிழை என்றால் இவர்கள் சொல்லும் முற்போக்குத் தான் என்ன? என்ன அறத்தைச் சொல்லவருகிறார்கள் இவர்கள்?

இன்று இந்தியாவில், இலங்கையில் இல்லிறத்தல் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தை சிதைக்கும் வல்லமை இல்லிறப்புக்கு உண்டு என்பதை அவை உட்பட பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலைநாடுகள் பலவற்றில் கூட, இல்லிறத்தல் குற்றமில்லை என்றாலும், அது மணமுறிவுக்கு வலுவான சட்டக்காரணம் தான். இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போதே, "அவர்கள் சொன்னபடி அச்சட்டத்தில் பாலினப்பாகுபாட்டை நீக்கியிருக்கலாம். ஆனால் அதைக் குற்றமில்லை என்றாக்கியது தவறு" என்று வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.

சட்டத்தை விடுங்கள். வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆசாபாசமுள்ள சாதாரண மனிதர்கள் நாங்கள். "துணையின் இல்லிறப்பை ஏற்றல்" எனும் எல்லை அத்தனை சீக்கிரம் நம்மால் அடையப்படமுடியாதது. கண்ணகி கணவனைக் கூடையில் விலைமாது வீட்டுக்கு கொண்டு சென்ற நளாயினி, கணவனின் பள்ளித்தோழிக்காக அவனை ஒருநாள் விட்டுக்கொடுத்து அனுப்பிவைத்த "ஜில்லுனு ஒரு காதல்" குந்தவை, என்று காவிய நாயகிகளுக்கே அது கைவரக்கூடும். மேலும்  தொழிநுட்பம் எத்தனை வளர்ந்தாலும் துணையின் இன்னொரு துணையை ஏற்று அங்கீகரிப்பதற்கு சராசரி மனிதர்கள் எல்லோருக்குமே நீண்டகாலம் தேவை. ஏனெனில் இது இயந்திரவழு அல்ல; பாகத்தை மாற்றித் திருத்துவதற்கு. மானுட உணர்வு சார்ந்த விடயம்.  அதை இயல்பாக ஏற்கும் தைரியம் பெரும்பாலானோருக்கு வரும் வரை, சமூகத்தில் "குடும்பம்" எனும் அடிப்படை அலகின் நிலைத்திருத்தலுக்கு இல்லிறப்பு ஒரு அச்சுறுத்தல் என்றே கற்பிக்கப்படவேண்டும். அது ஒரு ஒழுக்கமீறலாகவும் அறப்பிழையாகவும் தொடரவேண்டும். வள்ளுவர், இளங்கோ, கம்பர் எனும் தமிழ் மூவரும் ஒரேகுரலில் வலியுறுத்திய "பிறர்மனை விழையாமை" எனும் விழுமியத்தை சமூகம் கொண்டாடவேண்டும்.

கோவலன் இல்லிறக்காமல் சிலப்பதிகாரம் இல்லை. சூர்ப்பணகையும் இராவணனும் பிறர்மனை விரும்பாமல் இராமாயணம் இல்லை. இரண்டுமே பிறர்மனை விழைதலின் பயங்கர விளைவுகளைச் சொன்ன இலக்கியங்கள். ஒன்று அவற்றையெல்லாம் "ஊழ்" என்று சொல்லி அமைதி அடைகிறது. இன்னொன்று "அவதாரநோக்கம்" என்று சொல்லி புன்னகைக்கிறது. அவை தமிழின் மகத்தான காப்பியங்கள். அவை என்றென்றும் திகழட்டும்.

பிகு: இராமாயணம் என்று இப்பதிவில் நான் குறிப்பிட்டது கம்பராமாயணத்தை மாத்திரமே. தமிழ்நிலம் இன்று கொண்டாடுவது கம்ப ராமனையே. வேறு இராமர்களை அல்ல.

மேலும் வாசிக்க »

தெய்வத்தை விழுங்குதற்கான அரக்கனின் தவம்

0 comments



ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் 21இல் "ஈழத்தில் கண்ணகி வழிபாடு" என்ற தலைப்பில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடல் யூடியூப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பளித்த லம்போதரன் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

(உரை- 4:45 - 47:00 தொடர்வது: கலந்துரையாடல்)


அந்த உரையின் தொடர்ச்சியாக ஒரு விடயத்தைப் பதிவுசெய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது கிழக்கிலங்கையை மையமாக வைத்த கருத்து என்றாலும், முழு தமிழ் கூறு நல்லுலகுக்கும் பொருந்தும்.

தமிழகத்திலும் வட இலங்கையிலும் முழு முன்னெடுப்பில் எடுத்துச் செல்லப்படும், தனித்தமிழ் வழிபாடு என்ற கோட்பாடு கிழக்கிலங்கையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது முக்கியமான சமூகவியல் அவதானிப்பு. காரணம் எளிமையானது தான். இங்கு தனித்தமிழில் வழிபாடு செய்வது புதுமை இல்லை. தமிழ்ப் பத்ததிகளின் வழியில், தமிழ் மந்திரங்களும் அகவல் காவியங்களும் பாடி , சடங்கு இடம்பெறும் மரபார்ந்த நாட்டார் தெய்வக் கோவில்கள் இங்கு ஏற்கனவே ஊருக்கு ஊர் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் (வட) இலங்கையில் கண்ணகி வழிபாடு மருவியதற்குக் காரணமாக பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, நாவலரின் தலைமையில் கண்ணகி கோவில்கள் சைவத்தேவியரின் பெருங்கோவில்களாக மாற்றப்பட்டன என்பது. அந்தக் குற்றச்சாட்டில் முழுமையாக உண்மை இல்லை. ஒரு சமூகத்தின் இயல்பான "மேல்நிலையாக்க" மனநிலையின் முகவராக நாவலரின் தரப்பு செயற்பட்டது என்பதே சரி.

தனித்தமிழ் வழிபாடு இடம்பெற்று வந்த எல்லா நாட்டார் கோவில்களும் தற்போது ஆகமக்கோவில்களாக மாறி வருகின்றன. இப்படி தமிழ் முறை வழிபாடு விலக்கப்பட்டு, வடமொழிப் பூசை வழிபாட்டுக்கு இடம் கொடுப்பதை, பொதுவாக "சமஸ்கிருதமயமாக்கம்" என்று அழைத்து வந்தனர் நாட்டாரியல் ஆய்வாளர்கள். ஆனால் அது சமூகத்துக்கு உள்ளிருந்தே நடத்தப்படுவதும், அவ்வாறு செய்வது சமூகத்தில் பெரும்பான்மையினரால் வரவேற்கப்படுவதும் பரவலாக கவனிக்கப்பட்டதால், இப்போது "மேல்நிலையாக்கம்" என்ற சொல்லாடலையே ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.

எளிமையான வாய்ப்பாடு இது தான். பாமர மனதுக்கு தமிழில் வழிபடுவதும், தம்மில் ஒருவர் பூசகராக இருப்பதும், சாதாரணமாக அமைந்த கோவிலின் மடாலயக் கட்டிடமும், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. அந்தணரை நியமித்து, வடமொழி வழிபாடு நிகழும், ஆகம விதிப்படி அமைந்த பெருந்தெய்வக் கோவில்களே நியமமானவை (Standard) - இலட்சியமானவை (ideal) என்ற பொதுப்பார்வை, பாமர மனதுக்கு உள்ளது. கோவில்கள் கௌரவம், அந்தஸ்து என்பவற்றுக்கான போட்டிக்களங்களாக இன்று எஞ்சியிருப்பதால், இலட்சிய - நியமக் கட்டமைப்புக்கு தாங்கள் மாறினால் தமக்கு/தம் குடும்பத்துக்கு/தம் சாதிக்கு/தம் ஊருக்கு, கௌரவமும் அந்தஸ்தும் கிடைத்து விடும் அல்லது இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்றே பாமர மனது எதிர்பார்க்கிறது .

உண்மையில் நாவலர் சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், அல்லது நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த முரண் இடம்பெற்று இருக்காது. கண்ணகி உமையவளாக முடியாது என்பது நாவலரின் தரப்பு. இன்னொரு பக்கம், 'உமையவளுக்கே பெருங்கோவில் கட்ட முடியும் - ஆகம விதிப்படி மகோற்சவம் முதலியன நிகழ்த்த முடியும்' என்று சொன்னதும் அவரது தரப்பே. நம்மவர்கள் இரண்டையும் இணைத்து விளங்கிக் கொண்டு, கண்ணகி கோவில்களை ஆகம விதிப்படி மாற்றி அமைத்து, அவளை அகற்றி மூலவராக உமையவளை அமர்த்தி, ஆகம விதிப்படி திருவிழா செய்ய முன்வந்து விட்டார்கள். அது தான் அவர்களுக்கும் வசதியாக இருந்தது என்பதே உண்மை.

என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நாவலர் சொன்னபடி உமையவளுக்கு தனிப்பெருங்கோவில்கள் புதிதாக அமைத்திருக்கலாம். மகோற்சவமும் நடாத்தியிருக்கலாம். ஆனால் கண்ணகியை 'உமையவளாக' மாற்றாமல் வைத்திருக்கலாம். எப்படி? அவள் கோவிலை இடித்து ஆகமவிதிப்படி தூபி, கோபுரத்துடன் அமைத்திருக்கத் தேவையில்லை. பழையபடி மடாலயமாகவே மீளக்கட்டியிருக்க முடியும். ஆகம விதிக்குள் அடங்காத திருக்குளிர்த்தி முதலிய சடங்குகளை தொடர்ச்சியாக செய்திருக்கவும் முடியும்.

"கண்ணகி உமையவள் அல்ல" என்று நாவலர் சொன்னதை "கண்ணகியை மேல்நிலைப்படுத்தாதீர்கள்" என்று புரிந்துகொண்டிருக்க முடியும். அப்படி புரிந்து கொண்டிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது. நகைமுரணாக நாவலரையே வட இலங்கையில் மேல்நிலையாக்கத்தை துரிதப்படுத்தியவராக அடையாளம் காண்கிறோம். அவர் சொன்னது ஒருவிதத்தில் சரி, ஆனால் அதை நாம் செயற்படுத்தியது முற்றாகப் பிழை.

ஆனால் இந்த மனப்போக்கை மாற்றியாகவேண்டியது கட்டாயம். இன்றைக்கு குக்கிராமங்களில் எல்லாம், கோவில்கள் இடிக்கப்பட்டு ஆகமவிதிப்படி பெருங்கோவில்களாக மாற்றப்படுகின்றன. அதன் முதலாவது எதிர்விளைவு தமிழ் வழிபாடு அங்கிருந்து இயல்பாகவே அகன்று போவது தான். கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் முறை சடங்குக்கோவில்கள், வடமொழி மந்திரபூசைக்கு மாறுவதற்கான முதல் படி இதுவே. மடாலயக் கோவில்கள் இடிக்கப்பட்டால், அவை ஆகமவிதிப்படி பிரஸ்தரம், சிகரம், தூபியுடன் அமைக்கப்படுவது தான், தமிழ் வழிபாட்டை அங்கிருந்து அகற்றும் முதன்மையான காரணம்.

ஏனென்றால், சிகரம் - தூபியுடன் அமைந்த ஆகமக்கோவிலொன்றே நம் நியமக் (Standard) கோவில் என்று நம் ஆழ்மனது நம்புகிறது. ஓட்டுக்கூரை வேய்ந்த மடாலயமொன்று, அம்மனதுக்கு "இது நம் கோவில்" என்ற பிடிப்பை உருவாக்கவில்லை. அல்லது, சிற்ப அலங்காரங்கள் கொண்ட கண்டம் -சிகரம் - தூபியே தங்கள் கோவிலுக்கு அந்தஸ்தையும் பெருமிதத்தையும் தருகிறது என்று பாமர மனது எண்ணுகிறது. மேல்நிலையாக்கம்!

செய்யவேண்டியது ஒன்று தான். ஆகமவிதிப்படி அமையாத மடாலயங்களும் நம் கோவில்களே என்பதை நம் ஆழ்மனதை நம்பச் செய்ய வேண்டும். கேரளக்கோவில்கள் அத்தனையும் ஓடுவேய்ந்த கூரையமைப்பைக் கொண்டவை. இலங்கையில் பதினான்காம் நூற்றாண்டில் 'ஸ்தபதி ராயர்' எனும் தென்னகச் சிற்பியால் அமைக்கப்பட்ட பௌத்தக் கோவிலான இலங்காதிலகம், கூரை வேய்ந்தது தான். அதே காலப்பகுதியில் கம்பளை அரசின் அனுசரணையுடன் தேவேந்திர மூலாச்சாரியார் என்பவரால் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் கோவில், அதன் அற்புதமான கூரை வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது. ஆக, கூரை வேய்ந்த கோவில்களையும் நியமமாக அமைக்கச் சொல்லும் சிற்ப நூல்கள் தென்னகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.

ஒரு உதாரணம் கிடைக்கிறது. அண்மையில் வாசித்த ஒரு குறிப்பின் படி, பாரமேஸ்வர ஆகமத்தில், ஓட்டுக்கூரை வேய்ந்த அமைப்பில் கருவறையை அமைப்பதற்கான விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அங்கு "சூர்ப்பாகாரம்" என்று பெயர். தஞ்சைப்பெருங்கோவிலின் சோழர் கால ஓவியங்களிலிருந்து சிதம்பரத்தில் இத்தகைய விமானமே முன்பு இருந்திருக்கிறது என ஊகிக்க முடியும். பாரமேஸ்வரம், உப சிவாகமங்களில் ஒன்று என்பதால்,அதில் சூர்ப்பாகாரம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓட்டுக்கூரை வேய்ந்த கோவில்களை, மடாலயங்கள் என்று ஒதுக்காமல், சைவர்கள் நியமமாக ஏற்றுக்கொள்ளமுடியும்.

நியாயமாகப் பார்க்கப் போனால், நூறு நூறாண்டுகளாக தென்னகத்தின் எளிமையான எந்தவொரு தங்குமிடமுமே கூரை வேய்ந்தது தான் என்பதால், கோவில்களையும் கூரை வேய்ந்தவையாக அமைப்பதில் தவறிருக்க முடியாது. எனவே நம் கோவில்களின் கருவறை கூரை வேய்ந்திருந்தால் , அதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அவற்றை தூபி - சிகரத்தோடு அமைத்தால் தான் அவை நியமக்கோவிலாகும் என்று அவற்றை மாற்றியமைக்கவும் தேவையில்லை.

ஆனால், மேல்நிலையாக்கத்துக்கு ஆதரவளிப்பவர்கள் கூறும் ஒரு வலுவான வாதம் மட்டும் இலேசாக இடிக்கின்றது. "எந்தத் தமிழ் அடையாளத்தைக் காப்பாற்ற, கோவில்கள் ஓட்டுக்கூரைகளோடு நீடிக்கலாம் என்று சொல்கிறாயோ, அதே ஓட்டுக்கூரைகளே தமிழ் அடையாளத்தை முற்றாக இல்லாதொழித்து பிற்கால ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கலாம்" என்பது அது. மடாலயமாக அமைந்த காரணத்தாலேயே கதிர்காமத்தின் நிர்வாகம் முற்றாகப் பெரும்பான்மையினருக்குக் கைமாறியதையும், ஆகம விதிப்படி அமைந்ததால் முன்னேச்சரத்தில், கோணேச்சரத்தில், அது இன்றுவரை கைகூடாமல் இருப்பதையும் அவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள்.

இது நம் பிழை. கேரளமும் சிங்களமும் ஓட்டுக்கூரைகளை தம் தனித்துவமான சமயக் கட்டிடக்கலை அம்சமாக முன்வைக்க, அதை சமயக் கட்டிடக்கலையில் முற்றாகத் தவிர்த்தது நம் தவறே. ஆனால் அதைத் தொடரமுடியும். இது சைவக்கோவில் / வைணவக்கோவில் என்று காண்பிப்பதற்கான நுணுக்கமான கட்டிடக்கூறுகளை உள்ளீர்த்து ஓட்டுக்கூரைகளோடு கோவில்களை அமைப்பதொன்றும் பெரிய வேலையில்லை. கருவறைச் சுவரை மட்டும் அதிஷ்டானம், பாதம் முதலிய தென்னக கட்டிடக்கலைக்கூறுகளோடு அமைத்து, பிரஸ்தரம் - சிகரம் - தூபிக்குப் பதில் மேலே கூரை வேய்ந்துவிடலாம். அங்கு ஆகமவழிப்படி வழிபாடு நடைபெறப் போவதில்லை என்பதால், இதில் ஆகமமீறல் என்று அஞ்சத்தேவையில்லை . கிழக்கைப் பொறுத்தவரை, கட்டிடக்கலை அம்சம் ஒன்றும் இல்லாமலேயே கூட மண்டூர் முருகன் கோவிலும், கல்லடி பேச்சியம்மன் கோவிலும் இன்றும் புகழ்வாய்ந்த சைவ மடாலயங்களாக நீடிக்கின்றன. இதில் பின்னையது கீற்றுக்கொட்டகை.

ஆகமப்பெருங்கோவில்கள் எப்படியும் அமைக்கப்படட்டும். என் தனிப்பட்ட நப்பாசை ஒன்றே. இலங்கையில், நாட்டார் கோவில்கள் இடித்துக் கட்டப்படுகின்றதென்றால், அவை ஓட்டுக்கூரையோடே மீளக் கட்டப்படவேண்டும். அதன் மூலம் அங்கு சடங்குவழித் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்படும் முதன்மையான அச்சுறுத்தல் நீங்க வேண்டும்.

இலங்கையின் கிராமப்புறங்களூடே பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அங்குள்ள நாட்டார் கோவில்களுக்குச் சென்று பாருங்கள். "நல்லாப் பேசின சாமி இது," "துடியான அம்மாள் தம்பி இது", "ஏனோ தெரியா, இப்பல்லாம் ஒண்டும் காட்டுது இல்ல" என்று பெருமூச்சு விடும் பலரைக் காண்பீர்கள். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் தெரியும், ஓட்டுக்கட்டிடம் அல்லது ஓலைக்குடிசை ஒன்றில் அந்த நாட்டார் தெய்வம் பரிதாபமாக வீற்றிருக்க, அருகே ஆகமப்படியான கருவறை, செங்கல்லில் பிரமாண்டமாக எழுந்து கொண்டிருக்கும். அந்தத் தெய்வத்தை விழுங்குவதற்காகத் தவம் தொடங்கும் அரக்கன் போல! அந்தக் கருவறையில் அமர்ந்து நித்திய பூசையை ஏற்கத் தொடங்கும் ஐயன், கண்ணகி, மாரி முதலிய நூறு நூறு தெய்வங்கள், அதன் பிறகு ஒன்றும் பேசுவதில்லை. அல்லது, அவை பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. அவை என்றைக்குமென அமைதியாகிவிடுகின்றன.
💔
மேலும் வாசிக்க »

பின்னை எனும் நித்தியகன்னி

0 comments

  
"கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?
பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம்.

எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

"நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.வியின் இசையில் ஜேசுதாசும் வாணி ஜெயராமும் இதே பாடலைப் பாடியிருக்கிறார்கள். இசைநிகழ்ச்சியொன்றில் பாடப்பட்ட இதன் கீழ்வரும் வடிவமும் நன்றாயிருக்கிறது. (அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பன்
Natharuban
)




ஏனைய கண்ணம்மாப் பாடல்களோடு ஒப்பிடும் போது, "நின்னையே இரதி என்று" அப்படி ஒன்றும் சிறப்பான பாடல் இல்லை தான்.

"புராணங்கள் சொல்லும் கட்டழகி இரதி நீயாகத் தான் இருக்கவேண்டும். எனக்கு உன்னை விட்டால் தோழி என்று யாரும் இல்லை. பொன் போன்ற உடலும் மின்னலின் சாயலும் கொண்டவள் நீ. மன்மதனின் அம்புகள் உன்னால் என் மீது பாய்கின்றன. கொஞ்சம் கண் பார், என்னோடு சேர வா. எங்கு பார்த்தாலும் முனிவர்களுக்கு இறைவனே தெரிவது போல, எனக்கு நீ தான் தெரிகிறாய்." இவ்வளவும் தான் அந்தப்பாடலின் சாரம்.

என்றாலும், இறுதி வரியில் கொஞ்சம் கவித்துவ அழகு இருப்பதாகச் சொல்லலாம். "யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"

சுகமுனி வேதவியாசரின் மகன். எல்லாவற்றிலும் பரம்பொருளையே கண்டதால், சுகப்பிரம்மம் என்று அவரை புராணம் அழைக்கும். சுகமுனிக்கு எல்லாமே ஈசனாகத் தெரிந்தது. எனக்கு எல்லாமே நீயாகத் தெரிகிறது என்கிறான் பாரதி.

ஆனால், அந்தப் பாடலின் "தன்னையே சகி என்று சரணம் எய்தினேன்" எனும் இரண்டாம் வரியில் "சகி" (தோழி) என்ற சொல்லுக்கு "சசி" என்று பாடபேதம் இருக்கிறது.

சசி என்றால் இந்திராணி என்றும் சந்திரன் என்றும் பொருள் உண்டு. இந்திரனின் தேவியான இந்திராணி, புராணங்களின் படி பேரழகி. முதல் வரியில் மன்மதனின் தேவியான இரதியைப் பாடுவதால் இரண்டாம் வரியில் இந்திராணியை பாரதி பாடியிருக்கலாம் என்பர் சிலர். அல்லது"உன்னையே என் நிலவாக எண்ணி சரண் புகுந்தேன்" என்ற பொருளிலும் பாடியிருக்கக் கூடும். "பாயும் ஒளி" பாட்டிலும் "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்றல்லவா அவன் உருகுகிறான்?

ஆனால்"தூண்டில் புழுவினைப் போல்" முதலிய தன் வேறு பாடல்களிலும் பாரதி சகி பற்றிப் பாடுவதால் சகி என்பதே பொருத்தமான பாடபேதமாகப் படுகிறது. நண்பியை "தோழி" என்று அழைப்பதை விட "சகி" என்று அழைக்கும் போது கொஞ்சம் நன்றாக இருக்கிறதல்லவா?

சகி ஆண்பாலுக்கும் பொருந்துவதால், இன்று கழுவி ஊற்றப்படும் "Bestie" என்ற ஆங்கிலச்சொல்லுக்கான கலைச்சொல்லாக சகியைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

வழமை போல ஒரு நாள் சைந்தவியின் "நின்னையே இரதி என்று" பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த வரியை திகைப்போடு கவனித்தேன். "பின்னையே நித்யகன்னியே"

நித்யகன்னி என்றால், என்றென்றும் இளங்கன்னி என்று பொருள். காதலியோ நாயகியோ, அடுத்தடுத்த நாட்களில் பழையவர்களாகி விடுவார்கள். ஆனால் இந்தக் கண்ணம்மா நித்யகன்னி. ஒவ்வொரு நாளுமே புத்தம்புதிதாகத் தெரிகிறாள், கன்னி என்று எண்ணச் செய்கிறாள் என்று 'மார்க்கமாக' விளக்கம் கொடுக்கலாம். சரி. பின்னை?

வடநாட்டு இராதைக்கு பலநூறாண்டுகள் முன்பே தமிழ் இலக்கியங்களில் தோன்றி, இன்று முற்றாக மறக்கடிக்கப்பட்டு விட்ட கண்ணனின் காதலியான "நப்பின்னை" பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்திலிருந்து வைணவ - சைவ பக்தி இலக்கியங்கள் வரை, திருமாலின் தேவியாகத் தமிழர் கொண்டாடிய நப்பின்னை, வடநாட்டு பண்பாட்டு ஆதிக்கத்தால் புகழ் பெற்று விட்ட "ராதா - கிருஷ்ண"ருக்கு முன் காணாமலே போய் விட்டாள்.

தமிழ்ப் பண்பாட்டில் நப்பின்னையின் மறைவு படிப்படியாகத்தான் நடைபெற்று முடிந்தது என்றே எண்ணி இருந்தேன். ஆனால் "நின்னையே இரதி என்று" பாடலில் பாரதி எடுத்தாளும் படி, இருநூறாண்டுகளுக்கு முன் கூட, பின்னை புகழ் பெற்றுத் தான் இருந்திருக்கிறாள்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இருநூறாண்டுகளுக்கு உட்பட்ட நப்பின்னை பற்றிய இன்னொரு இலக்கியக் குறிப்பை, என் தாயகத்திலேயே என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது என்பது தான்.

கிழக்கிலங்கையில் உள்ளூர் செவிவழிச் செய்திகளை, கல்வெட்டு, காவியம், அகவல் என்ற பெயர்களில் செய்யுள்களாக எழுதிக் கோவில்களில் பேணும் வழக்கம் நிலவி வந்திருக்கிறது. அவற்றில் கற்பனையும் உயர்வு நவிற்சிகளும் அதிகம் என்றாலும், வரலாற்று நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை. இப்படிப் பேணப்பட்ட சில பாடல்கள் தான் உரைநடையில் எழுதி இணைக்கப்பட்டு "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்" என்ற பெயரில் ஏட்டுப்பிரதியாக தொகுக்கப்பட்டிருந்தன.

அதில் ஒரு பகுதியை சிற்சில திருத்தங்களோடு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் "மட்டக்களப்பு மான்மியம்" என்ற பெயரில் எப்.எக்ஸ்.சி.நடராசா வெளியிட்டார். இப்போது கிடைக்கும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் முழுமையான வடிவம் 2005இல் வித்துவான் கமலநாதன் தம்பதியினரால் அச்சு வாகனமேறியது. இப்போதைக்கு கிழக்கிலங்கை வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கான தவிர்க்க முடியாத ஆதாரங்களில் ஒன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூல்.

ஆனால், மட்டக்களப்புப் பிராந்தியத்தில் வழக்கத்தில் இருந்த எல்லா பாடல்களும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆனைகட்டுக் காவியம், பண்டுபரவணிக் கல்வெட்டு, ஊரெழு காவியம், சோனக வரலாற்றுக் காவியங்கள் பற்றி வாய்மொழியில் மட்டும் அறிய முடிகிறது. களுதேவாலயக் கல்வெட்டு, துறைநீலாவணை சீர்பாதச் செப்பேடு, குகன்முறை அகவல் முதலியன வெவ்வேறு இடங்களில் ஏட்டுப்பிரதிகளாகக் கிடைத்திருக்கின்றன. கமலநாதன் தம்பதியினரே, தங்களுக்குக் கிடைத்த பூர்வ சரித்திர ஏட்டுப்பிரதியிலிருந்த அன்பிலாலந்துறைச் சரித்திரம், அயோத்திகாசி பூர்வ சரித்திரம், கலிங்கதேசச் சரித்திரம் முதலியவற்றை "பொருட்பொருத்தம் கருதி தவிர்த்து விட்டோம்" என்று சொல்கிறார்கள். அவை அச்சில் வெளிவராததால் ஏற்பட்டு விடுகின்ற இடைவெளி பூர்வ சரித்திரத்தை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

இப்படி பூர்வ சரித்திரத்தில் வெளியாகாத "குகன்முறை அகவல்" எனும் பாடலைப் படிக்கும் வாய்ப்பு, அண்மையில் கிடைத்தது. மட்டக்களப்பின் முதன்மைக் குடிகளில் ஒருவரான முக்குகர், தமிழகத்திலிருந்து வந்து குடியேறியதைச் சொல்லும் பாடல் அது. கண்டி மன்னர் பற்றிய குறிப்பு வருவதால், அது பெரும்பாலும் கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

குகன்முறை அகவலில் ஓரிடத்தில் இப்படி வருகிறது.
"இராம இராம அரிராமா என்று
சேமமுடனே செங்கோலோச்சி
நாராயணனை தொழுது அடிபணிந்து
காரார் குழலி கணவனை வணங்கி"

முக்குகர்கள் இங்கு குடியேறும் போது பரம வைணவர்கள். அவர்கள் பழுகாமத்தில் தங்கள் குலதெய்வமான திருமாலுக்கு கோவில் கட்டி வணங்கியதை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். மேற்படி வரிகளை வாசிக்கும் போது ஒருகணம் என்னை தரித்து நிற்கச் செய்தது இந்தச் சொல். "காரார் குழலி கணவனை வணங்கி". திருமால் காரார்குழலியின் கணவனா? யார் அது?

கண்ணனின் தமிழ் நாயகி நப்பின்னைக்கு, அப்பெயர், நல்ல கூந்தலைக் கொண்டவள் (நல்+பின்னை) என்ற பொருளில் வந்தது தான். அவளை வேறு இலக்கியங்களும் கூந்தல் மலர் மங்கை, பிஞ்ஞை, உபகேசி என்றெல்லாம் அழைக்கின்றன. பிஞ்ஞை, கேசம் எல்லாம் கூந்தலைக் குறிக்கும் சொற்கள். குழல் என்றாலும் கூந்தல் தான். காரார்குழலி = கார்+ஆர்+குழலி. கார்மேகம் போல கறுத்த கூந்தலை உடையவள்.

குகன்முறை அகவல் கூறும் காரார்குழலி, நப்பின்னை தவிர, வேறு யாராக இருக்க முடியும்? வெறும் இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் இலங்கையின் கிழக்குக் கரையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்த நாட்டார் இலக்கியத்தில் பதிவாகி இருக்கிறாள், அந்தத் தமிழர் மறந்த தலைவி. நமக்குத் தலைவி அல்ல; அந்தத் தலைவி பதிவாகி இருக்கும் பாட்டைப் பற்றியே தெரியாது. மண்ணின் மரபு தெரியாமல் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி கூட நமக்கு இருப்பதில்லை.

ஒரு சாரார் சொல்வதன் படி, கண்ணம்மா என்பது பாரதி கற்பனையில் கண்ட கண்ணனின் பெண் வடிவம் என்பது உண்மையானால் கண்ணம்மா, நப்பின்னையே தான். உங்களுக்குத் தெரியாமல் இருப்பதாலோ, அல்லது தமிழ் கூறு நல்லுலகம் என்னை மறந்து விட்டதாலோ, நான் இல்லாமல் போவதில்லை. சின்னஞ்சிறு கிளியாய், சுட்டும் விழிச்சுடராய், காற்று வெளியிடையாய், ஏன் "றெக்க" - "காலா"விலிருந்து ஊரூராய் நடந்து சிரிக்க வைத்த சின்னத்திரை கண்ணம்மா வரை, நீங்கள் செல்லம் கொஞ்சும் காதலியர் வரை, என்றென்றும் நீடிப்பேன் நான் என்று நப்பின்னை புன்னகைக்கிறாள் போலும்.

"யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம், எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"
சந்தேகமென்ன,
தமிழ் உள்ளவரை
பின்னை, நித்ய கன்னி தான்.
அவள் வாழி.
❤

மேலும் வாசிக்க »

கார்த்திகைத் திருநாள்

0 comments


 "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலில் ஒரு வரி வரும். “கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே”. போதாக்குறைக்கு "வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்" பாட்டிலும் அதே வரி வருகிறது. "கார்த்திகை போனால் மழை இல்லை மானே". அது உண்மையா? கார்த்திகை பிறந்தால் தானே இப்போதெல்லாம் மழையே வலுக்கிறது?

வேறு காரணமொன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது. காலநிலை மாற்றம் அவ்வளவு தான். ஆனால் "கார்த்திகை போனால் கடும் மழை இல்லை" என்ற பழமொழிக்கு ஈராயிரம் ஆண்டு அனுபவமும் வானியல் அறிவும் இருக்கிறது. அதற்கு ஆதாரம் சங்க இலக்கியமான அகநானூறு. அதன் 141ஆம் பாடல் அப்படித் தான் சொல்கிறது.
கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி அண்ணாந்து பார்க்கிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இந்தப் பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள்.
“வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று தலைவி சொல்வது, "கார்த்திகை போனால் மழை இல்லை" பழமொழியைத் தான். கார்த்திகை நட்சத்திரம் இப்பாடலில் “அறுமீன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கார்த்திகைப் பூரணையில் விளக்கேற்றி, மாலை தோரணம் கட்டித் தமிழர் கொண்டாடினர் என்பதற்கான மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது.
கார்த்திகை விளக்கீட்டுக்கு இன்னொரு சங்கச் சான்று இருக்கிறது. நற்றிணையின் 202ஆம் பாடலில் தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். ஓடிப்போவதை அப்போது 'ஸ்டைலாக' "உடன்போக்கு" என்று அழைப்பார்கள். அவளது கவலையைப் போக்குவதற்காக பாதை நெடுகிலும் “புதினம்” காட்டிச் செல்கிறான் தலைவன். வீதியோரம் கோங்கு மரங்கள் பூத்துக்குலுங்குகிறது. அதைக்காட்டி “உன் தந்தை பல தருமகாரியங்கள் செய்யும் கார்த்திகைத் திங்களில் வரிசையாகச் செல்கின்ற தீபங்கள் போல பல கோங்க மலர்களைச் சூடி நிற்கும் இக்காட்டைப் பார்” என்கின்றான் தலைவன். கோங்கமரத்தின் மஞ்சள் பூக்களை தீபங்களோடு ஒப்பிட்டது சரியான உவமை தான். கார்த்திகை விளக்கீட்டை இப்பாடலில் “அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கள்” என்று பாடுகிறார், புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

கோங்கம் பூக்கள் - Cochlospermum religiosum.


“கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை முதன்முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர். மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது, விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் “கார்த்திகைச் சாறு” (சாறு = விழா) என்று பாடியிருக்கிறது. (திருவண்ணா)மலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி “குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன” என்று பாடுகிறது. இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற “வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (பொருளதிகாரம் புறத்திணையியல், 35) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர். இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழையும் விளக்கப் போதுமானவை.
தீபாவளியும் கார்த்திகையும் உண்மையில் ஒரே மூலத்தைக் கொண்டவை தான். தீபாவளி கொண்டாடப்படவேண்டிய திதி, ஐப்பசி மாத பதினான்காம் தேய்பிறை. கார்த்திகை கொண்டாடப்படவேண்டிய திதி, கார்த்திகை மாத பூரணை. இரண்டு நாட்களுக்கும் கணக்கிட்டால் பெரும்பாலும் பதினைந்து நாள், சிறுபான்மை நாற்பத்தைந்து நாள் வித்தியாசமே வரும். சுமார் ஒரு மாத இடைவெளிக்குள், அமாவாசையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும், பூரணையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும் முறையே தீபாவளியாகவும், கார்த்திகையாகவும் மாறி வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதே உண்மை. இதற்கு இன்னொரு சான்றாக, ஐப்பசி பதினான்காம் தேய்பிறைக்குப் பதில், தமிழகம் தவிர்ந்த அனைத்து இந்தியப்பகுதிகளிலும், ஐப்பசி அமாவாசையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுவருகிறது என்பதைக் காணலாம்.
இரண்டு விழாக்களும் ஒன்று தான் என்பதற்கு இன்னொரு வலுவான சான்றும் உள்ளது. பெரும்பாலான தமிழருக்கு இன்றும் தீபாவளி முன்னோர் வழிபாட்டு நாள் தான். பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு மேல் அதுவே தீபாவளியன்று முதலிடம் பிடிக்கின்றது. கார்த்திகையும் அதே முன்னோர் வழிபாட்டு நாள் தான் என்பதை நாம் இன்றும் காண்கிறோம். தீபாவளி பற்றிய மிகப்பழைய குறிப்புகளில் ஒன்று இலங்கையிலும் கிடைத்திருக்கிறது. 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் எழுந்த சரசோதிமாலை நூல். அதில் “பிதிர்கள் இன்பமுறு தீபாவலி” என்று தான் தீபாவளி சொல்லப்பட்டிருக்கிறது. பிதிர்கள் என்றால் முன்னோர்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும் அது முன்னோர் வழிபாட்டு நாளே தான் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்கவேண்டும்.
சரி, இரண்டும் ஒரே பண்டிகை தான் என்றால், இரு வேறு தினங்கள் எப்படி வந்திருக்கின்றன? ஒன்று பூரணை, ஒன்று அமாவாசை, ஒரே விழா எப்படி இரு வேறு சம்பந்தமில்லாத நாட்களுக்கான விழாக்களாக உருத்திரிந்திருக்க முடியும்?

ஒரு விழா கொண்டாடப்படுவதற்கும் கைவிடப்படுவதற்கும் புவியியல் பிரதேசம் முக்கியமான காரணியாக அமைகின்றது. சில இந்திய நாட்காட்டிகள் மாதத்தை அமாவாசையிலிருந்து தொடங்க, இன்னும் சில நாட்காட்டிகள் பூரணையிலிருந்தே மாதத்தை ஆரம்பிக்கின்றன. நாம் தமிழில் இவை இரண்டின் படியும் இல்லாமல் சூரிய வழியில் மாதத்தைக் கணிக்கின்றோம். என்றாலும், பாரம்பரியமாக நாம் கொண்டாடிவந்த சந்திர வழியிலான பண்டிகைகள் இன்றும் தொடர்கின்றன.

அமாவாசையில் மாதம் தொடங்குவோர் அந்நாளிலும், பூரணையில் மாதம் தொடங்குவோர் பூரணையிலும் கார்த்திகை விளக்கீட்டைக் கொண்டாடி வந்திருக்கின்றனர். அல்லது, பாவை நோன்பு போல அது மாதம் முழுவதும் கொண்டாடப்பட்ட நோன்பாகவும் இருந்திருக்கலாம். அப்படி அந்த விழா தொடங்கிய மற்றும் முடிந்த நாட்கள், வடக்கே தீபாவளியாகவும் தெற்கே கார்த்திகை விளக்கீடாகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. தமிழரின் தீபாவளி அமாவாசைக்கு ஒருநாள் முன்பே கொண்டாடப்படுவதால், இதற்கு பழைய முன்னோர் வழிபாட்டுத் தொடர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய்லாந்திலும் கேரளத்திலும் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படும் சான்றுகள் கிடைத்தாலும், இன்று அது தமிழரால் மாத்திரமே பெருவாரியாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி மவுசின் முன்னிலையில் நாம் நம் எஞ்சியிருக்கும் மிக நீண்ட பாரம்பரியத்தை மறுதலித்து வருகிறோம்.

அதற்காக ஏற்கனவே இந்துப் பண்பாட்டுத்திருவிழாவாக புகழ்பெற்றிருக்கும் தீபாவளியைக் கைவிடுவதோ, புறக்கணிப்பதோ சாத்தியமல்ல. அதற்கும் மேல், ஆரியப்பண்டிகை, திட்டமிட்ட சதி என்றெல்லாம் சொல்லப்படும் மொண்ணைத்தனமான பரப்புரைகளில் எந்த உண்மையும் இல்லை. அதுவும் நம் கார்த்திகையின் திரிந்த வடிவம் தான். கார்த்திகையை, தீபாவளியை விட விமரிசையாகக் கொண்டாடுவது ஒன்றே நாம் செய்யக்கூடியது.

இந்தக் “கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். இது சம்பந்தர் காலத்தில் புழங்கிய சொல். குறைந்தது, 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சொல் என்று எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. சங்க இலக்கியங்கள் என்று செல்லும் போது, அதன் பழைமை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுமார் 2000 வருடங்கள் என்று செல்கின்றது. சாதாரண மனித ஆயுள் வெறும் 70 – 80 ஆண்டுகள் இருக்குமா? சும்மா கணக்குப் போட்டுப் பாருங்களன், 2000 ஆண்டு என்றால் எத்தனை தலைமுறை தாண்டிச் சென்றிருக்கும்?

அத்தனை ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் முப்பாட்டி ஒருத்தியோடு, முப்பாட்டன் ஒருவனோடு நாம் கொள்ளும் உறவு தான் இந்தக் கார்த்திகைத் திருவிழா. அவனும் அவளும் கொண்டாடியது போலவே அகல் விளக்கில் தீபமேற்றி, முன்னோரைப் போற்றிக் கொண்டாடுகிறோம், நாம் அவர்களை இக்கணத்தில் எண்ணிப்பார்ப்பது போலவே, அவர்கள் அவர்களுக்கும் முந்திய முன்னோரை இதே நாளில் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் இரத்தசொந்தம் ஒன்றுடன் மானசீகமாக உறவாடுகிறோம். எண்ணிப் பார்க்கவே கண்கள் பனிக்கச் செய்யும் அற்புதமான தருணங்களுள் ஒன்று அது!

இனிய கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
(இரண்டாண்டுகளுக்கு முன் "தமிழரின் விளக்கொளி விழா" என்ற தலைப்பில் அரங்கம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் திருத்திய வடிவம்)
மேலும் வாசிக்க »

விருந்து

0 comments




போனவாரம் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாயின. அந்தப் பரீட்சையை நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அந்தப் பரீட்சையில் மறக்கமுடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐந்து வசனம் எழுதுமாறு கோரி, வினாத்தாளில் வந்த கேள்வி "எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தபோது..." என்று ஆரம்பித்திருந்தது.

நான் இப்படி எழுதினேன்.
1. எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் மாலை நேரத்தில் வந்தார்.
2. அவர் என் பெற்றோரைப் பார்த்து "பசி பசி" என்று அழுதார்.
3. அம்மா வீட்டில் இருந்த கொஞ்ச மாவைப் பயன்படுத்தி உரொட்டி தயாரித்தார்.
4. நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரொட்டி சாப்பிட்டோம்.
5. விருந்தினர் எங்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
வினாத்தாள் அத்தனை கடினமாக இருக்கவில்லை. பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலை அதிபர் ஓடோடி வந்தார். அந்தப் பாடசாலையிலேயே அதிகம் பேர் சித்தியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி எங்களுடையது. "வசனம் எழுதுற கேள்வி என்ன தலையங்கம் வந்தது? என்ன எழுதினேல்?" என்று அதிபர் பதகளிப்புடன் கேட்டார். கூடியிருந்த என் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எழுதிய பதில்களைச் சொன்னார்கள். நானும் பெருமிதத்துடன் என் பதிலைச் சொன்னேன். அவர் முகம் மாறியது. "முழுப்பிழை. என்ன தம்பி, உங்கட வீட்ட விருந்தினர் வந்தா பசிக்குது பசிக்குது எண்டு வாயால கேட்டுத் தான் சாப்பாடு போடுவேலா?"
எல்லோரும் கொல்லென்று சிரிக்க, திடுக்கிட்ட நான் "இல்ல ரீச்சர்..." என்று இழுத்தேன். அவர் கவனிக்காமல் அடுத்த மாணவரிடம் பதில் கேட்கச் சென்றுவிட்டார்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒருபக்கம் எல்லோருக்கும் முன் அதிபர் ஏசிவிட்டார் என்ற அவமானம். மற்றப் பக்கம் பரீட்சையில் புள்ளிகளை இழந்த சோகம். வீட்டுக்கு வந்து சொன்னால் அங்கு அதிபரை விட அதிகமாக கிழி விழுந்தது. சோகம் தாங்காமல் விம்மி அழுதபடியே போய் படுத்து விட்டேன்.
பயந்தது போல் இல்லாமல், நான் சித்தியடைந்து விட்டேன். 16 பேர் சித்தியடைந்து, அதிகம் பேர் ஒரே தடவையில் சித்தியடைந்த அணி என்று என் அணியினர் பெயரும் பெற்று விட்டோம். அதே பாடசாலையில் கற்ற ஒரு மாணவி, 2010ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியிலும் முதலிடம் பெற்றார்.
ஆனால் நான் ஏன் அப்படி விருந்தினர் என்பதைத் தவறாகப் புரிந்து அப்படி 'சின்னப்பிள்ளைத்தனமான' வசனங்களை எழுதினேன்? உண்மையிலேயே சின்னப்பிள்ளை - விருந்தினர் என்பதற்கு வரைவிலக்கணம் தெரியாத பத்து வயது - என்பதாலா?
இல்லை. அந்தப் பிழைக்குக் காரணம், வாசிப்புப் பழக்கம்.
என்ன? வாசிப்புப் பழக்கத்தால் பிழையா? அதெப்படி?
இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட "விவேகானந்தர் சொன்ன கதைகள்" என்றோர் சிறுவர் புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது. அதில் இருந்த பொற்கீரி கதை மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்று. உங்களுக்கும் முன்பே தெரிந்திருக்கலாம்.
தருமர் இராசசூய வேள்வி செய்து முடித்த பின்னர் ஒரு விந்தையான கீரி அங்கு வருகிறது. அதன் பாதியுடல் பொன்னிறத்தில் இருக்கிறது. அங்கு விழுந்து புரண்டெழுந்து விட்டு "இங்கு அப்படி ஒன்றும் சிறப்பான தர்மச்செயல் இடம்பெறவில்லை" என்கிறது கீரி. ஏன் என்று அங்கிருந்தோர் கேட்க அது சொல்கிறது.
"என் பாதியுடல் பொன்னிறமானது ஒரு ஏழையின் வீட்டில். பஞ்சகாலத்தில் அவன் கஷ்டப்பட்டு கொஞ்சம் தானியம் சேகரித்து வீட்டில் கொணர்ந்து கொடுத்தான். அதில் மனைவி ஒரு சிறிய உரொட்டி சுட, மகன், மருமகள் என்று அவர்கள் நால்வர் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது பார்த்து ஒரு விருந்தினர் அங்கு வந்துவிட்டார். இவர்களைப் பார்த்து 'பசிக்கிறது' என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார்.
தந்தை தன் பங்கு உரொட்டியைக் கொடுத்தான். விருந்தினர் பசி அடங்கவில்லை. தாய் தன் பங்கைக் கொடுத்தாள். அப்போதும் அவர் பசி அடங்கவில்லை. இறுதியில் மகனும் மருமகளும் தங்கள் தங்கள் பங்கைக் கொடுத்துவிட்டார்கள். அவர் பசியாறி மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார். அந்தக் குடும்பத்தினர் பசி தாங்காது அன்றிரவே இறந்துவிட்டனர். அங்கு அடுப்பின் அருகே சிந்திக்கிடந்த மாவு என் பாதி உடம்பில் பட்டதும் அது பொன்னாகி விட்டது. மீதியைப் பொன்னாக்க பல இடங்களிலும் சுற்றி வருகிறேன். உங்கள் இந்த வேள்விச்சாலை உட்பட எங்கும் என் மீதி உடல் பொன்னாகவில்லை. அப்படி, தன் உயிரையும் துச்சமென மதித்து, பசித்து வந்தவனுக்கு தன் உணவை வழங்கும் அறச்செயலுக்கு இந்த இராசசூயம் நிகரில்லை. " என்று சொல்லிச் சென்றுவிடுகிறது கீரி. வேள்வியில் தான் செய்த தானதருமங்கள் பற்றி தலைக்கனம் கொண்டிருந்த தரும மகாராசா வெட்கித் தலைகுனிந்து விடுகிறார்.
இந்தக் கதையும் அது சொன்ன நீதியும் அப்போதே என் மனதில் ஆழப்பதிந்து விட்டிருந்தது எனவே தான் பரீட்சையில் "விருந்தினர்" என்ற சொல்லைக் கண்டதுமே வேறெதையும் சிந்தியாது பொற்கீரிக்கு மனம் தாவிவிட்டது. வீட்டிற்கு வந்த விருந்தினர் "பசி பசி" என்று அழுததும், எங்கள் அம்மாவும் கூட கொஞ்ச மாவைப் பயன்படுத்தி விருந்தினருக்கு உரொட்டியே சுட்டதற்கும் அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்பே காரணம்.
சரி. விருந்தினர் என்ற சொல்லைப் பிழையாகப் புரிந்துகொண்டது என் தவறு தான். அதற்காக வாசிப்பைக் குற்றம் சொல்லக்கூடாதே.
ஆனால் விருந்தோம்பல் நம் பண்பாட்டில் எத்தகைய இடம் வகிக்கிறது?
விருந்து என்ற சொல்லுக்கு "புதுமை" என்றும் பொருள் உண்டு. விருந்தினர் என்றால் புதியவர். நம் இருப்பிடத்துக்குப் புதிதாக அல்லது மேலதிகமாக வருபவர் விருந்தினர். விருந்தினரை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறது, திருக்குறளின் பரிமேலழகர் உரை. திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று தனி அதிகாரமே எழுதி வைத்திருக்கிறார். நேரங்கெட்ட நேரத்தில் வந்து தொலைத்துவிட்டார்கள் என்று விருந்தினரை முகம் சுருங்கிப் பார்ப்பதே தவறு என்ற விழுமியத்தைச் சொல்லும் "மோப்பக்குழையும் அனிச்சை" திருக்குறள் இக்காலத்துக்கும் பொருந்துவது தான்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை" எனும் இன்னொரு திருக்குறள், தனக்குச் சமனாக, இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் எனும் நால்வரையும் சமனாகக் கருதக் கோரிய அக்கால வழமையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு விருந்தினன் இறைவனுக்குச் சமன் என்று கூறுகின்ற "அதிதி தேவோ பவ" என்பது புகழ் பெற்ற உபநிடத வாக்கியம். வாளைமீன், ஆமையிறைச்சி, கரும்புத்தேன், குவளைமலர் என்பன விருந்தினர்களை மகிழ்விக்க வழங்கப்பட்டதை புறநானூறு ஓரிடத்தில் (42) பாடுகிறது.
சைவ நாயன்மார் வரலாற்றில், தண்ணீர்ப்பந்தல் அமைப்பது, காட்டுப்பாதையில் பொதிசோறு வழங்குவது, பஞ்சத்தில் நாடு வாடியபோது நெல்லுப் பெற்றும், படிக்காசு பெற்றும் ஏழை எளியோருக்கு உணவிடுவது என்று பல விருந்தோம்பல் செயல்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. விருந்தினர் மனம் கோணி விடுமே என்பதற்காக விருந்து தயாரிப்பில் மகன் இறந்ததை மறைத்த அப்பூதி அடிகள் நாயனார் வரலாறும், விருந்தினரின் அதிர்ச்சி தரும் வழக்கத்தை ஏற்று, பெற்ற மகனையே கொன்று கறியாக்கிய சிறுத்தொண்ட நாயனாரின் வரலாறும், விருந்தோம்பலுக்காக எந்த எல்லை வரை செல்லமுடியும் என்பதைக் காட்டும் இருபெரும் உச்சங்கள்.
விருந்தோம்பல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், பசி என்ற உணர்வு மனிதனுக்கு இருப்பதால் தான். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது புகழ்பெற்ற பழமொழி.
வெட்கம், குலப்பெருமை, கற்ற கல்வி, புகழ், அறிவு, தானம் செய்யும் பண்பு, இறைபக்தி, தங்களது உயர்வு, விடாமுயற்சி, பெண்ணாசை எதுவுமே பசிக்கு முன் நிற்காது, பறந்துபோகும் என்கிறார் ஔவையார். கவலையாக இருக்கிறேன் என்பதையே "என்னால் சாப்பிட முடியவில்லை" என்று சொல்பவர்கள் இங்குண்டு. பசியே மிகப்பெரிய விடயம். அதைவிடப் பெரிது தன் சோகம் என்று காண்பிக்கிறார்கள்.
பசியின் அருமை தெரிந்ததால் தான் ஏழை எளியவருக்கு உணவளித்தல் ஒரு மகத்தான பண்பாடாக நம் மத்தியில் வளர்ந்து வந்திருக்கிறது. குன்றாமல் உணவளிக்கக்கூடிய பாண்டவரின் அட்சய பாத்திரம், ஆபுத்திரனின் அமுதசுரபி இதெல்லாம் பசி தீர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சொல்கின்ற மரபுரைகள் தான். மனிதனாய்ப் பிறந்தவன் செய்யவேண்டியவை என்று மரபாக முப்பத்திரண்டு அறங்கள் சொல்லப்படுவதுண்டு. அவற்றில் பதினொரு அறங்கள் உணவளிப்பதோடு தொடர்புடையவை. ஆதுலர்சாலை (அனாதை இல்லம்), ஓதுவார்க்குணவு (வேதியருக்கு உணவு),
அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு (கைதிகளுக்கு உணவு), ஐயம் (பிச்சை), நடைத்தின்பண்டம் (யாத்திரிகருக்கு உணவு), மகச்சோறு (சிறுவர்க்கு உணவு), மகப்பால் (தாயிழந்த பிள்ளைக்குப் பாலூட்டல்), அட்டூண் (அயலவருக்கு உணவு வழங்கல்), தண்ணீர்ப்பந்தர் என்ற பதினொன்றும் அவை.
நிற்க;
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். .படத்தின் அருமையான கதைக்கரு, நயன்தாரா அம்மன், ஆர்ஜே பாலாஜியின் திரைக்கதை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது ஒரு பாடல். "பார்த்தேனே விழியின் வழியே". மனதை இலேசாக்கும் இசை. என்ன காரணத்தாலோ "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடலை நினைவுகூரச் செய்த மெட்டு. ஜெய்ராம் பாலசுப்பிரமணியன் எனும் புதுமுகம் பாடியிருக்கிறார். அவர் பாடிய வேறு பாடல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் அற்புதமான குரல்.



பா.விஜய் எழுதிய அந்த அருமையான பாடலில் ஒரு வரி வருகிறது.
"வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூசிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்.
பசி என்று தன் முன் வந்து கை ஏந்திக் கேட்கும் போது தன் உணவைத் தந்தால் கூட உன்னைக் காணலாம்"
இது திருமந்திரத்தில் ஒலித்த ஒரு குரல்.
"படமாடக் கோவில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஆகா
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோவில் பகவற்கு அது ஆமே"
மாடத்தில் சுவாமிபடம் வைத்த கோவிலிலுள்ள இறைவனுக்கு நீங்கள் ஒன்றைக் கொடுக்கும் போது, நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு அது பயன்படாது. ஆனால் நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு ஒன்றை நீங்கள் கொடுத்தால், அது அதே கோவில் இறைவனுக்குக் கொடுத்ததாகிவிடும்.
நம்பர் என்றால் நம்மவர்கள் என்று பொருள். அதை நம் போன்ற அடியவர் என்று சுருக்காமல், நம்மைப் போன்ற மனிதர்கள் என்றும் விரிக்கலாம். அதே போல் கோவிலில் கொடுக்கும் காணிக்கையை உணவு அல்லது பிரசாதம் என்று கொண்டால் மேற்படி பாடல் வரி வந்துவிடும். திருமந்திரம் சொல்வதும் இது தான். பொற்கீரி சொன்னதும் இது தான். பசி எனும் மானுட இயல்பு. பசி தீர்க்க எழுந்த விருந்தோம்பல் எனும் விழுமியம். இரண்டையும் இணைத்து இறைபக்தி தருகின்ற சமரசப்பார்வையில் எழுகின்றது மானுடப் பெருங்கருணை.
கடந்தவாரம் புலமைப்பரிசில் பெறுபேறு வெளிவந்தபோது மூக்குத்தி அம்மன் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். "பார்த்தேனே" பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கையில், பத்து வயதில் என் மனதில் பதிந்திருந்த "விருந்தினர்" என்ற உருவகமும் இயல்பாகவே கண் முன் எழுந்து விட்டது.
இந்தப் பெருந்தொற்று சீர்குலைத்துள்ள அறங்களில் விருந்தோம்பலும் ஒன்று. வீட்டுக்கு வீடு விருந்தினர் வருகைகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. நாமும் இன்னொருவர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்வதில்லை. தப்பித்தவறி யாரும் விருந்தினர் வந்துவிட்டால் சந்தேகக்கண்ணோடு பார்த்து "எப்போது செல்வார்களோ, எங்கிருந்து நோய் காவி வந்திருப்பார்களோ" என்ற அச்சத்திலேயே பொழுது கழிகிறது.
அது விரைவில் மாறவேண்டும். செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருக்கும் நிலைமை மீண்டும் திரும்பவேண்டும். அது விரைவில் நிகழவேண்டும் என்று இறைவனை வேண்டுவது தவிர வேறு வழி ஏது?
மேலும் வாசிக்க »

மாவடி வைகும் செவ்வேள்

0 comments


 மிளகாய்த்தூளோடு அல்லது உப்புத்தூளோடு பச்சை மாங்காய் சாப்பிட்ட பால்ய கால அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். மாங்காய் தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம். Mangifera Indica என்பது தாவரவியற் பெயர்.

மேங்கோ என்ற ஆங்கிலச்சொல் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. ஆனால் ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியில் பார்த்தால், அது மலையாளச் சொல்லிலிருந்து வந்தது என்று போட்டிருக்கும். மலையாளத்திலும் மாங்காய் "மாங்ஙா" தான். ஆரம்பகால காலனித்துவக் குறிப்புகளின் படி மாங்காய் என்பது மலபார் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொல். அப்போது மலபார் என்பது மலையாளிகளை மாத்திரமன்றி தமிழர்களையும் குறித்தது.

இலங்கை பற்றிய பழைய ஐரோப்பியக் குறிப்புகளில் சிங்களீஸ் மற்றும் மலபார் என்று இரண்டு மொழி இங்கு பேசப்படுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்குத் தனித்துவமான தேசவழமைச் சட்டம், மலபார்களுக்கான சட்டமாகவே இன்றுவரை உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன் பொருள் இலங்கையில் இருந்தவர்களும் இருப்பவர்களும் மலையாளிகள் என்பதல்ல; காலனித்துவ காலத்தில் மலபார் என்பது தமிழரையும், அரைத்தமிழரான மலையாளிகளையும் ஒட்டுமொத்தமாகக் குறித்தது என்பதே சரியான பொருள்கோடல்.

சமகாலத்து பொதுவழக்கில் மலபார் என்பது மலையாளி என்று சுருங்கிவிட்டதால், பழைய ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியை மீள்பதிப்புச் செய்தவர்கள், மலபார் எல்லாவற்றையும் மலையாளம் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் மேங்கோவின் மூலமொழியும் மலையாளம் ஆகிவிட்டது.

மா, வடமொழியில் ஆம்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒற்றை மாமரத்தின் (ஏக+ஆம்ரம்) அடியில் வீற்றிருந்த சிவனுக்கு வடமொழியில் ஏகாம்ர ஈஸ்வரர் என்று பெயர். தமிழில் மகர மெய்க்கு அருகே ரகர வர்க்க எழுத்து வராது என்பதால் ஏகாம்ரம் என்பது ஏகாம்பரம் ஆகிவிட்டது. அதை ஏகம்பம் என்றும் சொல்லுவார்கள். இதே இலக்கணப்படி சிம்ரன் என்ற பெயர் சிம்பிரன் என்று தான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சரி, எதுக்கு சிம்ரன் அதெல்லாம்! நாம் மீண்டும் மாமரத்துக்கே போவோம்.

தென்னை, பனை, என்பது போல மா என்ற சொல்லை நாம் மரத்துக்கான தனிச்சொல்லாகப் பயன்படுத்துவது குறைவு. ஆனால் பேச்சுவழக்கிலேயே மா பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாந்தோட்டம், மாங்காடு, மாந்தீவு, மாவடிச்சேனை, மாவடிவேம்பு என்றெல்லாம் இங்கு பல ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன.

சிங்களத்தில் மாவை அம்ப என்கிறார்கள். கறுத்தக்கொழும்பான் என்பது இலங்கையின் உள்ளூர் மா இனங்களில் ஒன்று. அதற்கு சிங்களத்திலும் அதே பெயர் தான். வெள்ளைக்கொழும்பானும் உண்டு. இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்புக்குச் சொல்லப்படும் சிங்களச் சொற்பிறப்புகளில் ஒன்று அதை கொலம்ப தோட்ட = பச்சை மாமரங்கள் (கொல+அம்ப) அடர்ந்திருந்த துறைமுகம் (தோட்டம்) என்கிறது. திருக்கேதீச்சரம் அமைந்திருந்த மாந்தைத் துறைமுகமும் மாதோட்டம் தான். தெற்கே இருக்கும் மாத்துறையையும் சில சிங்கள நூல்கள் மாதோட்ட என்று அழைக்கின்றன. இன்னொரு விதத்தில் மாத்துறை-மாதோட்ட இரண்டுக்கும் ஒரே பொருள். பெரிய துறைமுகம்.

தமிழ்ப்பண்பாட்டில் மாமரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. சங்க இலக்கியங்களிலிருந்தே அதற்கு தொடர்ச்சியான இலக்கியப்பதிவு இருக்கிறது. மா முக்கனிகளில் ஒன்று. அன்றிலிருந்து இன்றுவரை பொதுவான உடம்பு நிறத்தைச் சொல்ல தமிழில் "மாநிறம்" என்ற சொல் தான் பயன்படுகிறது. மாந்தளிர் நிறம். சங்ககால நாயகிகள் மாமை நிறம் கொண்டவர்கள். "திதலை அல்குல் என் மாமைக்கவினே" என்பது புகழ்பெற்ற குறுந்தொகை வரி.

கலித்தொகையின் ஓரிடத்தில் பெண்ணொருத்தியின் கண்ணை வருணிக்க,"இளமாங்காய் போழ்ந்தன்ன" என்ற உவமை கையாளப்பட்டிருக்கிறது. பிளந்த மாங்காய். அரிதான உவமை தான். "கனிகளிலே அவள் மாங்கனி", "குண்டுமாங்காத் தோப்புக்குள்ள", "மாம்பழமாம் மாம்பழம்" என்றெல்லாம் தமிழ்த் திரையுலகமும் மாம்பழத்தை புகழ்ந்து பாடித்தான் வந்திருக்கிறது.

தமிழுக்கும் வெளியே பண்பாட்டு ரீதியில் நிறைய இனக்குழுக்களிடையே மா முக்கியத்துவம் பெறுகிறது. தென்னகம், வங்கம் போன்ற பகுதிகளில், நிறைகுடங்கள் மாவிலை வைத்துத் தான் அலங்கரிக்கப்படுகின்றன. மங்கல - அமங்கல நிகழ்வுகளில் மாவிலையைத் தோரணமாகக் கட்டுவது அங்கெல்லாம் பொதுவாகக் காணக்கூடிய அலங்காரம்.

மாம்பூ மன்மதனின் ஐங்கணைகளில் ஒன்று. அதற்கு மதனம் என்று பெயர். மதனத்தை மன்மதன் தன் கரும்புவில்லில் பூட்டி காதலரின் மார்பில் எய்யும் போது அவர்களுக்கு "விப்பிரயோகம்" எனும் அவஸ்தை உண்டாகுமாம். விப்பிரயோகம் என்றால் பிரிவாற்றாமை.

பௌத்தத்தில் மாமரத்தையும் புத்தரையும் இணைத்து பல ஜாதகக் கதைகள் இருக்கின்றன. பெயரில் மாவைக் கொண்ட "ஆம்ரபாலி" எனும் நாட்டியமங்கை பற்றிய கதை அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையின் தமிழ் - சிங்கள தொன்மங்களின் படி பத்தினி கண்ணகி மாங்கனியில் தோன்றியவள். தெய்வம், பெண்ணாகத் தோன்றிய அதே மாங்கனி காரணமாக, இன்னொரு பெண் பேயாகி இருக்கிறாள். காரைக்காலம்மையார்.

தன் கணவன் தந்த மாம்பழமொன்றை அடியவர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டு, இறைவனருளால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக்கொடுத்ததால் கணவன் அவள் மீது அச்சம் கொண்டு கைவிட, அதனால் பேயாக மாறிய அபலைப் பெண் தான் காரைக்காலம்மை. மாம்பழத்தால் மண்ணில் இப்படி சம்பவங்கள் நடக்க, விண்ணிலோ, ஒரு தெய்வக்குடும்பத்தில் பயங்கர களேபரம் ஏற்பட்டிருக்கிறது. "ஞானப்பழம்!".

ஞானப்பழம் கிடைக்காத காலத்திலிருந்தே முருகனுக்கு மா எதிரி தான் போல. சூரபதுமனை முருகன் அழிக்கும் போது அவன் கடல் நடுவே போய் மாமரமாகத் தான் நிற்கிறான். முருகனின் வேல் அம்மரத்தை இருகூறாக்கும் போது சேவலும் மயிலுமாக மாறி முறையே முருகனின் கொடியும் வாகனமும் ஆகின்றான்.

சரி, இப்போது ஏன் இந்த'மா'புராணம்?

நம் பண்பாட்டை உற்றுப்பார்த்தால், அங்கு முக்கியத்துவம் பெறும் தாவரங்கள் அல்லது விலங்குகள் பற்றிய ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அவை நம் மண்ணுக்கே உரித்தான உயிரினங்கள். முக்கனிகளான மா,பலா, வாழை தென்னகத்தில் பிறந்தவை. தெய்வங்களோடு பெரும்பான்மையாக இணைத்துச் சொல்லப்படும் மாடு, சுண்டெலி, மயில், நாகபாம்பு, யானை, கோழி, செம்பருந்து/கலுழன் (கருடன்), குரங்கு எல்லாமே இந்தியத் துணைக்கண்டத்தை முதன்மையான தாயகமாகக் கொண்டவை. இவற்றின் அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இனங்கள் உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும், தொன்மங்களிலும் சித்தரிப்புகளிலும் சொல்லப்படுவது உள்ளூர் இனங்கள் தான்.

ஏனென்றால், அவை தான் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை. நம் பாட்டன், முப்பாட்டன், கொள்ளுப்பாட்டன் முதல் நூறு நூறு தலைமுறைகளாக நம்மோடு கூடி வாழ்கின்றவை. அந்த உறவைப் புரிந்துகொள்ளாமல் சில மெத்தப்படித்தவர்கள் மொண்ணைத்தனமாகக் கேட்பார்கள். "அது ஏன் நம் தெய்வங்கள் உள்ளூர் மிருகங்களோடும் தாவரங்களோடும் தான் சம்பந்தப்படுகிறார்கள், ஏன் கடவுளரின் வாகனமாக கங்காருவோ பென்குயினோ இல்லை; ஒலிவ் மரத்தையோ டியூலிப் மரத்தையோ அம்மனாக வெள்ளைக்காரன் ஏன் வழிபடவில்லை?" என்று.

இந்த சமயம் - இந்த வாழ்வியல் - இந்த மண்ணில் பிறந்தது. இந்த மண்ணின் உயிர்ப்பல்வகைமையோடு தான் இந்தப் பண்பாடு ஒத்துப்போகும். இந்த மண் இல்லாமல் நாம் இல்லை. இப்படி அன்றாட வாழ்வியலிலும் வழிபாட்டிலும் அதே மண்ணின் உயிர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் அவற்றை மதிக்கிறோம். மரியாதை செலுத்துகிறோம். வாழ்த்துகிறோம். நன்றி செலுத்துகிறோம்.

இப்போது கந்தசஷ்டி நோன்பு நோற்கப்படுகிறது. அதன் முத்தாய்ப்பாக நிகழும் சூரன் போரில் கடலுக்கு நடுவே நிற்கும் சூர மாமரம் முருகனால் இரு கூறாக்கப்பட்டது நடித்துக் காட்டப்படும். சூரபதுமன் சைவ சித்தாந்த நோக்கின் படி மூன்றாவது மலமான ஆணவம். இலக்கியத்தில் இனிமை, அழகு, ஞானம், கற்பு என்று பல படிமங்களாக உருவகிக்கப்படும் மா, இங்கு முழுமையான ஆணவத்தின் குறியீடாக கிளைபரப்பி நிற்கிறது. அளவுக்கு மீறிய அமுதம் நஞ்சல்லவா? அளவுக்கு மீறிய அழகும் அறிவும் கல்வியும், ஆணவமாகத் தானே மாறிவிடுகின்றன?

ஆனால் முழுத்த ஞானத்தின் வடிவான வேலால் பிளக்கப்பட்டதும், மாமரம் சேவலும் மயிலுமாக மாறுகிறது. சேவல் சூரியன் வரவை அறிவிப்பது. மயில் மழையின் வரவில் மகிழ்வது. அது செம்மை. இது கருமை. அது விடிவானம். இது இருள்மேகம். முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான முரண் இருமை.

தூய ஞானம், ஆணவத்தை இருகூறாக்கிவிடும். ஞானத்தால் ஆணவம் வலிகெட்ட ஆன்மா, தன் இருமையைக் கண்டுகொள்கிறது. அந்த ஆன்மாவை இறைவன் அன்போடு அணைக்கிறான். சேவலைக் கொடியாக்கி மயிலை வாகனமாக்குகிறான். ஆன்மாவின் ஒளியறிவு கொடியாக உயர்ந்து பட்டொளி வீசுகிறது. இருளறிவில் இறைவனே ஏறி அமர்ந்து வழிநடத்துகிறான்.

இரண்டையும் ஒன்றே எனக் கண்டுகொள்ளும் மனநிலைக்கு சித்தாந்தத்தில் கலைச்சொல் ஒன்று உண்டு. இருவினையொப்பு. இன்று ஒப்பாரி வைத்து அழுத ஒரு சம்பவத்தை எண்ணி கொஞ்ச நாட்களுக்குப் பின் விழுந்து விழுந்து சிரிப்போம். அன்புக்குரியவரோடு மகிழ்ந்திருந்த நாட்கள், அவர் நம்மை விட்டு விலகிய பின் துன்பம் தரும் நாட்களாகி விடுகின்றன. எனவே நன்மையும் தீமையும் நிரந்தரமல்ல; நல்வினையோ தீவினையோ இரண்டும் ஒத்தவை என்று சொல்வது தான் இரு-வினை-ஒப்பு.

இன்று முருகனை வழிபடும் எல்லா அடியாரும் சேர்த்தே வழிபடுவது அவனது கொடியும் வாகனமுமாக வீற்றிருக்கும் அவன் எதிரி சூரபதுமனையும் கூட. அவனைப்பிளந்த வேல் கூட அருகே தான் தோளில் சார்த்தி இருக்கும். இறைவன் என்றால் அப்படித்தான். அவனுக்கு எதிலும் பேதமில்லை. எல்லாமே ஒன்று தான். சைவசித்தாந்தம் சொல்லும் இறைவன் அவன் தான். "கரைந்து கை தொழுவாரையும் காதலன், வரைந்து வைதெழுவாரையும் வாடலன்" உருகி கைகூப்புவோர் மீது அதிக அன்பு கொண்டவன்; ஆனால் அதற்காக திட்டி ஏசுவோர் மீது கோபம் கொள்ளாதவன். ஏனென்றால் அதுதான் இறைவனின் குணம். "அனாதிபோதன்" என்று சொல்வார்கள். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவன் என்று பொருள்.இறைவனின் இக்குணத்தை வியந்த மெய்யடியார்கள் தான் இருமையாய் நிற்கும் சூரபதுமன் எனும் ஆணவத்துக்கும், அதை வலுக்குறைத்த மெய்ஞ்ஞான வடிவான வேலுக்கும் ஒருசேர வணக்கம் செலுத்துகிறார்கள் "சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி" என்று!

இப்படி முரண்களைக் கடந்த இறைவன் வீற்றிருக்கும் இடமும் வியப்பளிப்பது தான். மாமரத்தின் கீழ். மாமரமொன்றைப் பிளப்பித்தவன் வீற்றிருக்கும் இடமும் ஒரு மாமரத்தடி தான். காஞ்சிபுரத்து மாமரத்தடி. காஞ்சி மாவடி.

"மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி" - கந்தபுராணம்
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner