சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்

0 comments



கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .


அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா?
உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க.

தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம் என்று தமிழ் சின்னத்திரைகளே இதிகாசங்களுக்காக விழுந்தடித்து ஓடும் இந்தக்காலத்தில், நம் மண்ணின் காப்பியமான சிலம்பை பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும் என்று, திரைத்துறையினர் யாருக்கும் தோன்றவே இல்லை என்பது வியப்பளிக்கிறது. இன்றுள்ள VFX - வரைகலை தொழிநுட்ப முன்னேற்றத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க யவன வீரர் நடைபயின்ற புகார்ப்பட்டினத் துறைமுகத்தை, மதுரைக் கூலவாணிகர் வீதியை, ஆரியக் கனகவிசயர் தலையேறி இமயக்கல்லாக அம்மை வந்த சேரநாட்டு வஞ்சியை, காண்பதற்கு, திரைத்துறையில் இருக்கும் ஒரு தமிழனுக்கு கூடவா ஆசை பிறக்கவில்லை?

ஆனால் கேரளப் பண்பாட்டிலும் சிங்களப் பண்பாட்டிலும் இன்றும் கண்ணகி கொண்டாடப்படுகிறாள். வெறும் நான்காண்டுகளுக்கு முன் சிங்களத்தில் கண்ணகி கதை "பத்தினி" என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியிருந்தது. பூஜா உமாசங்கர் தான் கண்ணகி
                                             


பத்தினி திரைப்படத்துக் கண்ணகி, தமிழ் மணிமேகலையும் சிங்கள நம்பிக்கையும் இணைந்த புள்ளியில் இறுதியில் பௌத்தத்தை தழுவுகிறாள் . இப்படி நம் பண்பாட்டு அம்சங்களை சிங்களவர்கள் கொண்டாடினால் நமக்கு எரியத் தொடங்கிவிடும். கதிர்காமம், இராவணன், கண்ணகி என்று பட்டியல் வாசிக்கத் தொடங்கிவிடுவோம்.

கேரளத்திலும் அதே நிலைமை தான். அங்கு கண்ணகி இன்று பகவதி. எனவே தெய்வமாகவும் அகத்துறை நாயகியாகவும் கேரளத் திரையிலும் நாட்டார் மரபிலும் அவள் மீண்டும் மீண்டும் பாடப்படுகிறாள். நந்திதாதாஸ் நடித்த ஒரு மலையாள அவலச்சுவை திரைப்படத்துக்கு பெயர் கண்ணகி. அதில் இடம்பெற்ற "கரிநீலக் கண்ணழகி கண்ணகி" எனும் பாடல் கேட்கும் போதே மனதை உருக்கும்.

                                            





ஆகாசகங்கா எனும் இன்னொரு மலையாள பேய்ப்படத்தில் திருவாதிரக்களி ஆடும் மகளிர் "கோவலனும் கண்ணகியும் ப்ரேமமோடே தம்மில்" என்று சிலம்புக்கதையைத் தான் பாடி ஆடுவார்கள். கேரள திருவாதிரைக்களி நடனம் பற்றி வேறு இடத்தில் விரிவாகப் பேசவேண்டும். அதற்கும் நம் திருவெம்பாவைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

 

இப்படி நம் இரு நெருங்கிய பண்பாட்டுப் பஙகாளிகளுமே ஒரு தமிழச்சியை தலையில் வைத்து ஆடுகிறார்கள். இப்போது தேமே என்று புதினம் பார்த்து அமர்ந்திருந்து விட்டு, நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து ஐயோ பறிபோய் விட்டதே பறிகொடுத்து விட்டோமே என்று குய்யோ முறையோ என்று குமுறத் தான் நாம் லாயக்கு. மரபின் மீது அத்தனை பற்று கொண்டவர்கள் நாம், இல்லையா. 😔

ஆற்றுக்கால் கண்ணகி கோவில் கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. பெண்கள் மட்டும் பொங்கல் வைக்க அனுமதியுள்ள "ஆற்றுக்கால் கும்ப மாச பொங்காலா" உலகிலேயே அதிகளவு பெண்கள் ஒன்றுதிரண்டதாக கின்னஸ் சாதனை படைத்த பெருவிழா. அக்கோவில் மீது நான்காண்டுகளுக்கு முன் பாடப்பட்ட மலையாளப்பாடல் இது. கண்ணகிப் பொன்கனியே. கேட்டுக்கொண்டே இருக்கத்தூண்டும் இனிய குரல். கேரளம் கண்ணகியை இன்றும் எப்படிக் கொண்டாடுகிறது என்பதற்கு சிறிய சான்று இந்தப்பாடல். ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

                                 

மேலும் வாசிக்க »

என்ன கொடுமை சந்திரமுகி இது!

0 comments
ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  


இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பேய்ப்படங்களுக்கான விதை, சந்திரமுகி போட்டது தான் என்று நினைக்கிறேன். 

சந்திரமுகியின் "ராரா"வுடன் தான் வாயில் நுழையாத வரிகள் கொண்ட திரைப்பாடல்களை பாடமாக்கும் என் விசித்திரமான பொழுதுபோக்கு ஆரம்பமானது. அப்போது குரலும் கொஞ்சம் கேட்கும்படி இருந்ததால் வகுப்புத் தோழர் - தோழிகள் உட்பட எல்லோரும் உட்கார வைத்து ராரா பாடச்சொல்லுவார்கள்.  மூச்சுவிடாமல் "ஜிகிபிகி ஜிகிபிகி சொகசுல மொரவினி" என்று கடைசி சரணத்தைப் பாடி, அவர்கள் முகத்தில் தெரியும் வியப்பைக் கண்டு பெருமிதத்தோடு புன்னகைப்பேன். (பல்கலைக்கழகம் போன பின்னர் தான்  எனக்கு மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கே ராரா தளதண்ணியாகப் பாடம் என்று அறிந்துகொண்டு வெட்கித் தலைகுனிந்தேன். 😞)

அப்போது  கல்முனைக் கல்வி மாவட்டத்தில்  சாரணர் பாசறைகள் இடம்பெறும் போதெல்லாம், பாசறைத்தீயில்,  எங்கள் பாடசாலை சார்பில் தவறாமல் இடம்பெறும் நாடகமாக "இலங்கையில் சந்திரமுகி" இருந்தது. பேய் புகுந்தவன் கட்டிலைத் தூக்கும் போது "உதறவா? பெட்சீற்ற நல்லா உதறவா?" என்று கேட்பதிலிருந்து, பேய் விரட்டும் மந்திரவாதி "ஊத்துங்கடா ஒயில" என்று சொல்வது வரை நாங்கள் அந்த நாடகத்தில் செய்த களேபரங்கள் ஏராளம். ஒருமுறை மாவட்ட சாரணர் பொறுப்பாளர் முஸ்தபா சேரே  தனியே கூப்பிட்டுத் திட்டிக் கெஞ்சிய பின்னர் தான், அந்த நாடகத்தை  நடிப்பதை நிறுத்தினோம். 😆


சந்திரமுகி வெளியான போதே, ஒளித்து வாசிக்கத் தொடங்கியிருந்த வீரகேசரி "நடுப்பூட்டு சினிமாத்துணுக்கு"களிலிருந்து அது ஒரு மொழிமாற்றப் படம் என்று தெரிந்திருந்தது. அது கன்னடத்தில் "ஆப்தமித்ரா" என்ற பெயரில் வெளிவந்திருந்தது என்பதும், ஆப்தமித்ராவுக்கு அடிப்படையே கூட "மணிச்சித்திர தாழ்" எனும் மலையாளப்படம் தான் என்பதும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தன. பெரியம்மா குடும்பத்தினர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார்கள். நான் ஆசையாகக் கேட்டவற்றில் முக்கியமாக அடங்கியிருந்தது மணிச்சித்திரதாழ் - ஆப்தமித்ரா இரண்டினதும் 'படச்சீடி'கள்.  


ஆனால் வீட்டில் 'டிஷ் அண்டனா' இணைப்புக் கிடைத்தபின்னர் 2010 முதல்  ஏசியாநெட் தொலைக்காட்சியில் அடிக்கடி  மணிச்சித்திரதாழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.   2011இல் இணையத்துக்கு அறிமுகமான போது, யூடியூப்பில் தேடி கன்னட ஆப்தமித்ரா, இந்தியில் போல் புலையா, வங்காளத்தில் ராஜ்மஹால் எல்லாவற்றின் உச்சக்கட்ட காட்சிகளையும் பார்த்துவிட்டேன். இவை எல்லாமே சந்திரமுகிக்கு முன்பின்னாக வந்த அதே கதையின் வெவ்வேறு மொழி வடிவங்கள்.  

மலையாளத்தில்  சோபனா,  தமிழ் நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?", கன்னடத்தில் சௌந்தர்யா, தெலுங்கு நாகவல்லியாக ஆடும் "ராரா சரசக்கு ராரா", இந்தியில் வித்யா பாலன் வங்கத்து மஞ்சுலிகாவாக ஆடும் "ஆமி ஜே தொமார்", வங்கத்தில் அனு சௌத்ரி ஒரிய (?) சந்திரமுகியாக ஆடும் "அமர் சோக்கே ஆகுன்" என்று, இந்தியப் பண்பாட்டுப் பல்வகைமையை திகட்ட திகட்ட பார்த்து இரசித்தேன்.

ஒரு முறை வந்து பார்த்தாயா?
(மணிச்சித்திரதாழ் 1993)



     


ராரா சரசக்கு ராரா
(ஆப்தமித்ரா 2004)




ராரா சரசக்கு ராரா
(சந்திரமுகி 2005)





அமர் சோகே ஆகுன்
(ராஜ்மகால் 2005)

ஆமி ஜே துமார்
(போல் பூலையா 2007)


இந்தப் படங்கள் எந்தளவுக்கு என்னைப் பாதித்திருந்ததென்றால், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, ஒரு குறும்படம் எடுக்கத் திட்டமிட்டோம். கண்டியின் இராஜசிங்க மன்னனால் படுகொலை செய்யப்பட்ட "சதுராங்கனி" என்ற சிங்கள நாட்டியமங்கையின் சாபம் இலங்கை மக்களை இன்றுவரை பீடித்திருப்பது தான் கதைக்கரு. நல்ல காலமாக அது நிறைவேறவில்லை. பின்பு அந்தக்கருவையே தமிழ் - சிங்கள நாட்டார் வழக்கிலுள்ள குமாரிஹாமி கதையோடு இணைத்து உவங்கள் இணைய இதழில் "அறவாழி" என்ற சிறுகதையை எழுதினேன்.

ஆனால் மணிச்சித்திரதாழைப் பார்த்த பின்னர் தான் தமிழில் அதன் கதை எத்தனை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கன்னட ஆப்தமித்ராவிலும் அதேதான். இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும் விஷ்ணுவர்த்தனும் அந்தப் படங்களில் நடித்ததால் அப்படி கதையை மாற்றுவது கட்டாயமாக இருந்திருக்கிறது. ஆனால், மலையாளத்தில்  முப்பதடிப் பாம்பும் இல்லை; பேயும் இல்லை. அது அருமையான ஒரு உளவியல் படம். அந்தக் கதை முழுக்க முழுக்க இயங்குவது ஷோபனா பாத்திரத்தின் பிளவாளுமை நோயை மையமாக வைத்துத் தான். 

மணிச்சித்திரதாழின் கங்கா, தான் தங்கியிருக்கும் தறவாட்டில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட  நாகவல்லி எனும் தமிழ் நடனமங்கையோடு தன் பிளவாளுமையை இனங்கண்டு கொள்கிறாள். உளவியல் மொழியில் சொன்னால், அவளது அகம் (Ego) கங்காவாக நீடிக்க, அவளது எதிர் அகம் (Alter Ego) நாகவல்லியாகி விடுகிறது. நாகவல்லி, கங்காவின் கணவனையும் தறவாட்டைச் சூழ வசிக்கும் ஒவ்வொருவரையும், தனது காலத்தவர்களாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறாள்.  தன்னை தமிழ் நாட்டிலிருந்து கடத்தி வந்து ஆசைநாயகியாக வைத்திருந்த தறவாட்டுக் காரணவர் சங்கரன் தம்பியாக நாகவல்லி நினைப்பது, கங்காவின் கணவனை! (மணிச்சித்திரதாழில் உள்ள கதை மாறுபாடும் முக்கியமானது. அங்கு  வேட்டையன்  சரவணன் அல்ல; செந்தில். என்னக் கொடுமை சரவணன் இது!)


மணிச்சித்திரதாழில் நாகவல்லியிலிருந்து கங்காவைக் காப்பாற்றும் இறுதிக்கட்டம், சந்திரமுகியில் இடம்பெறுவது போல் ஒரு பேய் விரட்டும் சடங்கும் இல்லை; "சங்கரன் தம்பி இறந்துவிட்டால் நீ கங்காவை விட்டு போய் விட வேண்டும்" என்ற ஆணை நாகவல்லிக்கு தாந்திரீகச் சடங்கு செய்யும் நம்பூதிரியால் வழங்கப்படுகிறது. சங்கரன் தம்பியை தான் கொன்றுவிட்டதாக நம்பும் கங்காவின் எதிர் அகமான நாகவல்லி, அடியோடு ஒழிந்துபோகிறாள். கங்கா குணமடைந்து விடுகிறாள்.

இந்த உளவியல் விளையாட்டு சந்திரமுகியில் தெளிவாக புரியும்படி இல்லை. அல்லது சாதாரண பாமர மனதுக்குப் புரியாது என்று வாசு அதை முழுக்க முழுக்க பேய்க்கதையாகவே மாற்றியிருக்கிறார். விஸ்வநாதன் கங்காவை  திட்டமிட்டு வேட்டையனின் மணிமண்டபத்துக்கு அழைத்துவருவதையோ, ராமச்சந்திர ஆச்சாரியார் "நீ அவனக் கொன்ன பிறகு இந்த தேகத்த விட்டு போய்டுவியா?" என்று கேட்பதையோ, தமிழ் இரசிகனால் பேய் விரட்டுவதற்கான இயல்பான காரணங்கள் என்றே புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்தக் காட்சிகளின் உளவியல் முக்கியத்துவம் என்ன என்பது, மணிச்சித்திரதாழில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

   


ஒரு வலைத்தளத்தில் இன்னொன்று படித்தேன். மலையாளப் பெண்ணான மணிச்சித்திரதாழ் கங்காவுக்கு பிளவாளுமை நோய் ஏற்பட்டால், அவளால் தமிழ் பேச முடியும் என்பதை உளவியல்படி ஏற்கலாம். ஏனென்றால் தமிழ் மலையாளத்தின் அன்னை மொழி. மலையாளியொருவனின் நனவிலி ஆழ்மனதில் எங்கோ சேரநாட்டுத் தமிழ் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகமும் எதிர் அகமும் மோதிக் கொள்ளும் போது, எப்போதோ கேட்க நேர்ந்த தமிழைக் கண்டறிந்து வெளியே உமிழ்வதற்கு மலையாள ஆழ்மனதால் முடியும். ஆனால் தமிழச்சி தெலுங்கு பேசுவதோ, கன்னடத்தி தெலுங்கு பேசுவதோ, இந்திக்காரி வங்காளம் பேசுவதோ, நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதை அமானுஷ்யமானதாக, ஆவியின் வேலையாக மட்டுமே சித்தரிக்கமுடியும். மணிச்சித்திரதாழிடம் அதன் வேற்று மொழி வடிவங்கள் தோற்று நிற்கும் இன்னொரு இடமாக இதைச் சொல்லலாம்.


மணிச்சித்திரதாழில் நான் கண்டுகொண்டது, சோபனா என்னும் மகத்தான நடிகையையும் கூட. கங்கா நாகவல்லியாக மாறி கட்டிலைத் தூக்கும் அந்த காட்சி ஒன்று போதும், சோபனா யாரென்று சொல்ல. சின்ன வயதில் அப்போது அச்சமூட்டிய ஜோதிகா, இந்த சோபனாவுக்கு ஒருபடி கீழ் தான் என்பேன்.  இன்னொரு இடமும் இருக்கிறது. கங்கா நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?" பாடலின் இரண்டாம் சரணத்தில் ஜேசுதாசின் காந்தர்வக் குரலில் ஒரு வரி வருகின்றது. "நாகவல்லீ மனோன்மணீ" என்று அவர் பாடும்போது  மத்தளம் சிணுங்கும் ஒரு இனிய இடம். அதற்கு சோபனா கொடுக்கும் அபிநயம் இருக்கிறதே, அப்பப்பா! 

                                             

 இந்தக் காட்சிக்கு அடுத்துவரும் மலையாள வரிகளும் பூரிக்கச் செய்பவை.

"மாணிக்ய வாசகர் மொழிகள் நல்கி தேவீ, 
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி.
தமிழகமாகெயும் ஸ்ருங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி"

மாணிக்கவாசகரின் திருவாசக மொழிகள். ஆனால் தமிழன் மறந்தாலும் மலையாளிக்கு கண்ணகியை மறக்க முடிவதில்லை. இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு, நாகவல்லி எங்கோ ஒரு இடத்தில்  கண்ணகியையே நினைவூட்டுகிறாள்.  இளங்கோவை மலையாளப்பாடலொன்றில் காணும் போது ஏற்படும் நெகிழ்வு வார்த்தைகளில் விளக்கமுடியாதது. அவன் கேரளத்தவரின் முப்பாட்டன் அல்லவா?

மணிச்சித்திரதாழுக்கு தன்னை இசையமைக்க அழைக்கவில்லை என்பதற்காக இசைஞானி வருத்தப்பட்டதை இப்படத்தின் இயக்குநர் பாசில் பதிவு செய்திருக்கிறார். "இது போன்ற படங்கள், இசையமைப்பாளனுக்கு உண்மையான சவால்கள். இப்படி ஒரு படத்துக்கு நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பேன்?" என்று கேட்டாராம் அவர். முரண்நகையாக  மணிச்சித்திரதாழின் பாடல்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாக்கிருஷ்ணன் "இப்படத்தை எடுக்காதே" என்று இயக்குநரிடம் அப்போது சொல்லியிருக்கிறார். "படம் தோற்கும். இது சொல்ல வரும் செய்தியை பாமர ரசிகனால் புரிந்துகொள்ள முடியாது." என்றிருக்கிறார் அவர். இன்று மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த பத்து படங்களுள் ஒன்று மணிச்சித்திரதாழ்.

மணிச்சித்திரதாழை சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அண்மையில் பார்த்தேன்.  ஆங்கில உபதலைப்புகளுடனேயே யூடியூப்பில் கிடைக்கிறது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் ஒருமுறை பாருங்கள். சந்திரமுகி தமிழுக்குச் செய்த கொடுமை என்ன என்பதை அது சொல்லும்.


பிகு: பிளவாளுமை நோய் பற்றி ஆசான் எழுதியிருக்கும் அருமையான இரு சிறுகதைகள் இருக்கின்றன. உற்றுநோக்கும் பறவை,  தம்பி. அண்மையில்  வெளியாகியிருக்கும் ஓநாயின் மூக்கு  பிளவாளுமையை மேலோட்டமாகத் தொட்டுச்செல்லும் ஒரு மகத்தான படைப்பு. 
மேலும் வாசிக்க »

உடுராஜமுகி

0 comments


ஒரு 18+ பதிவு.

பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம். 



2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம்.


2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிகை நேகா பாண்ட்சே ஆடுவது போலமைந்த காட்சியமைப்பு. படு மோசமான நடனக்காட்சி. 

உடுராஜமுகி - ஆண் வேற்றம்

பாடலை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. பாடல் வரிகளின் அர்த்தம் ஓரளவு புரிந்து பின்னர் அந்தப் பாடல் என் கைபேசி பாடல் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம்பெறத் தொடங்கியது. திரைப்படத்தில் இடம்பெற்றது மதுபாலகிருஷ்ணன் பாடிய ஆண் வேற்றம் (version). ஆனால் எனக்குப் பிடித்தது மஞ்சரி பாடுகின்ற பெண் வேற்றம் தான். 

உடுராஜமுகி - பெண் வேற்றம்

இந்தப் பாட்டின் பொருளை அறிந்தது உண்மையில் ஒரு சோகக்கதை. நான் முறைப்படி சமஸ்கிருதமோ மலையாளமோ கற்றவன் அல்லன். பாடலில் வந்த "சமுத்ரசுதா' (அலைமகள்) என்ற சொல்லை மட்டும் புரிந்து கொண்டு 'மகாலட்சுமியின் பக்திப் பாடல் போல. நன்றாக இருக்கிறது. நவராத்திரி காலத்தில் பாடுவோம்' என்று தான் இணையத்தில் பொருள் தேடிப் பாடமாக்கினேன். பிறகு தான் தெரிந்தது, வெறுமனே பெண்ணைப் பாடும் பாடல்தான் அது என்று. எப்படியோ பாடலாசிரியன் மகாரசிகன் என்று மட்டும் தெரிகிறது.
 ‌
ஏனென்றால் இது சிருங்கார ரசம் பொருந்திய இனிய பாடல். பொருளைப் பார்த்துவிட்டு நீங்கள் தலைதெறிக்க ஓடக்கூடாது என்று தான் முன்னெச்சரிக்கையாக ஒரு 18+ போட்டுவைத்தேன். (ம்கும். இவன் அப்படி என்ன 18+ எழுதியிருக்கிறான் என்று பார்க்கத்தான் நீங்கள் வந்தீர்கள் என்று எனக்கு தெரியாமலில்லை.) சரி, யூடியூப்பில் பாட்டை இயக்கியபடியே பாருங்களேன் பொருளை. 

"‌நிருபம ப்ரஹ்மாண்ட சம்மோஹினி
நிகில நித்யானந்த மந்தாகினி"
 ‌
நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினி.
முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறு. 

மந்தாகினி என்பது, மெதுவாக ஓடுவதால் அந்த நதி பெற்ற பெயர். பெண்ணை, நீராடும் நதிக்கு - அதுவும் மெதுவாக ஓடும் நதிக்குச் சொல்லும் அந்த ஒப்பீடே சிருங்காரம் கொப்பளிப்பது தான்

‌"உடுராஜமுகி ம்ருகராஜகடி"
 ‌
உடு என்றால் நட்சத்திரம். உடுராஜன் நட்சத்திரங்களின் அரசனான சந்திரன். உடுராஜமுகி என்பது நமக்கு பழக்கமான பெயர் தான். சந்திரமுகி. சந்திரன் போன்ற முகத்தைக் கொணடவள்.

கடி என்றால் இடுப்பு. மிருகராஜன் சிங்கம். மிருகராஜகடி. சிங்கம் போன்ற இடுப்பைக் கொண்டவள். சிங்கம் பிடரி மயிராலும் ஊனுண்ணுவதாலும் பெயர் பெற்றது. தோற்ற ஒப்பீட்டில் மட்டுமன்றி அது எப்படி பெண்ணின் இடுப்புக்கு உவமையாகிறது என்று நான் சொல்லப்போவதில்லை.‌

"கஜராஜ விராஜித மந்தகதி"

இந்த வரிக்கு விளக்கம் தேவையில்லை. பிடியன்ன மென்னடை. அரசியர்க்கு உரிய நடை. அந்த நடையுடைய இவள் பேரரசி.

"கணஸார சுகந்தி விலாசினி நீ‌"
‌கணசாரம் என்பது சந்தனம். அதன் சுகந்தத்தைக் கொண்ட விலாசினி. விலாசினி என்றால் விளையாட்டுக்களால் மகிழ்விப்பவள் (என்ன விளையாட்டுக்களால் என்றெல்லாம் கேக்கப்படாது). ஆந்திரத்து நடனவகைகளில் ஒன்றுக்குப் பெயர் "விலாசினி நாட்டியம்". அதன் "ஆஸ்தான சம்பிரதாயம்" எனும் பிரிவு அரண்மனையிலும் அந்தப்புரங்களிலும் ஆடப்பட்டது தான்.

"கனகாங்கி விகார ஸமுத்ரஸுதே‌" 
சமுத்ரசுதே ஏற்கனவே பார்த்தது தான். "வந்தாள் மகாலக்‌ஷ்மியே" என்று பாடுவதில்லையா? இவளை திருமகள் என்கிறான் கவிஞன். கனகாங்கி? கனகம் என்பது தங்கம். தங்கம் போன்ற அங்கங்களைக் கொண்டவள். இதைத்தான் அண்மைக்காலத்தைய புலவரான விவேகா, தனது "டாடி மம்மி வீட்டில் இல்லை" எனும் மகத்தான காவியத்தில் "தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே, தன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே" என்று பாடியிருக்கிறார். 
 ‌
"‌நயனங்களில் அஞ்சன காந்தகடம்"
இனி வருவது மலையாளம். அவள் கண்களில் மை காந்தம் போல் கவர்கின்றது. அஞ்சனம் என்பது மை. சிங்களத்தில் எனது துலாஞ்சனன் எனும் பெயருக்கு அர்த்தம், 'ஒளியையே கண்மையாகக் கொண்டவன்" என்பது இங்கு உங்களுக்குத் தேவையில்லாத - ஆனால் சின்ன விளம்பரமாக கொடுக்க வேண்டிய ஒரு கொசுறுத்தகவல்.

"அதரத்தில் அனந்தம் அருந்த ரசம்"
இந்தப் பெண்ணின் உதடுகளில் அருந்த அனேக இனிய பானங்கள் உள்ளன.

"ப்ரணயோஜ்வல காவ்ய கலாவதி நீ"
பிரணயோஜ்வல என்றால் எனக்கும் என்னவென்று தெரியாது. அடுத்து வருவது. காவியக்கலைகளில் வல்லவள் நீ.

"சுரலோக விஹாரிணி சாருலதே"
சுரலோகம் - தேவலோகம். விகாரிணி - இன்பத்துக்காக அங்குமிங்கும் அலைபவள். சாருலதா - அழகிய கொடி. அங்குமிங்கும் அலைந்து சொர்க்கத்தைக் காட்டும் பூங்கொடியே என்று ஒரு 'மார்க்கமாக' மொழிபெயர்க்கலாம்.

‌"கலரஞ்சித காஞ்சன காந்திமயம்
ஸ்தனகும்ப தரங்கித சஞ்சலனம்" 

"மன்மதனைப் போல் மயக்கும்படி ஒளிவீசுபவள். அவள் குடங்களை ஒத்த மார்புகள் அலைகளைப் போல் அசைந்தாடுகின்றன. வாயைத் துடைத்து விட்டு அடுத்த வரிக்கு வாருங்கள். 

"மணிமேகல பூண்ட நிதம்ப தடம்
நவ பத்மதளாப புணர்ந்ந பதம்"
ஒட்டியாணம் பூண்ட அல்குல். புத்தபுதுத் தாமரையிதழ்கள் இணைந்தது போன்ற பாதங்கள்.

இவ்வளவையும் பாடிவிட்டு மீண்டும், ‌நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினியே,‌ முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறே என்று கூவியபடி முடிகிறது பாடல்.

பாடல் இவ்வளவும் தான். ஆனால் பொருள் புரிந்து இந்த இன்னிசையை இரசித்தபடி கேட்கும் போது என்னவோ செய்யத்தான் செய்கிறது, இல்லையா?

மொழியறிஞர்கள் சமஸ்கிருத - மலையாள மொழிபெயர்ப்புகள் தவறென்றால், (இங்கு கூறப்பட்ட அர்த்தத்தில் சிருங்காரக்குறைவு இருந்தால் மாத்திரம்) திருத்தவும். இறுதியாக, 18+இற்காக மட்டும் என் முழுநீளப்பதிவை முதன்முறையாக வாசித்த மற்றும் 'பெரிதாக' எதிர்பார்த்த உங்களில் சிலர் "எங்கடா இதில நீ சொன்ன 18+" என்று என் கொலரைப் பிடிப்பதற்கு முன், தங்களிடம் வணக்கம் கூறி விடைபெறும் நான்... 


மேலும் வாசிக்க »

சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

0 comments
சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது (தி இந்து 2019).

சபரிமலைக்கோவிலுக்கு அதிகளவு அடியவர்களை அனுப்பிக்கொண்டிருப்பது தமிழகம். இப்போது  இலங்கையும் அடியவர்களை பெரும் எண்ணிக்கையில் அனுப்பத் தொடங்கியிருக்கிறது (Nagahawatte 2019). எனவே, சபரிமலைப் பிரச்சினையில் கருத்துக் கூறுவதற்கும், அதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும், கேரளத்துக்கு சமனான அளவு தார்மீக உரிமை, தமிழகம் மற்றும் இலங்கைக்கும் கிட்டியிருக்கிறது.

ஆனால் நம்மில் பலரும் சபரிமலைக் கோவிலின் பின்னணி, ஐயப்ப வழிபாட்டின் வரலாற்றுத் தோற்றம் இது எதுவுமே தெரியாமல், இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை அறியாமல், அந்தப் பிரச்சினை தொடங்கிய மையப்புள்ளியை நாம் அறிந்துகொள்ள முடியாது. 

சபரிமலைக் கோவில் (படம் நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்)
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு நம் கைகளில் இரண்டு வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்து, தமிழ் -  வடமொழி - மலையாள மொழிகளில் எழுந்த சபரிமலைத் தொன்மங்கள். இரண்டாவது ஓரளவு வரலாற்று நம்பகத்தன்மை கூடிய ஆவணங்களும் குறிப்புகளும். இவை இரண்டையும் சற்று விரிவாக ஆராய்வோம்.

1. சபரிமலைத் தொன்மங்கள்
'ஐயப்பன்' என்பது ஒரு அழகான தமிழ்ப்பெயர். அது ஐயன் + அப்பன் என்ற இரு சொற்களின் இணைவால் வந்தது. அப்பெயருக்கு ஆயிரம் ஆண்டு காலப் பழைமை உள்ளது என்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.

குமரி மாவட்டத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டுகளில் ஐயப்பன் என்பது ஆட்பெயராகவும் தெய்வப்பெயராகவும் பதிவாகி இருக்கிறது. உதாரணமாக,  கன்னியாகுமரி குகநாதசுவாமி ஆலயத்திலுள்ள இராஜாதிராஜசோழனின் 31ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (பொ.பி 1043) இடம்பெற்றுள்ள "ஐயப்பன் வேதிய சாஸ்தா"வைக் குறிப்பிடலாம் (Poduval 1990:76). (நாம் 'வேதிய சாஸ்தா' ஐயப்பனுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.)

ஆனால்,  இங்கு தவிர 'ஐயப்பன்' என்ற தனித்துவமான தெய்வமொன்று தமிழிலோ வடமொழியிலோ எங்குமே பதிவாகவில்லை. ஐயப்பன் பற்றிய  முதலாவது வடமொழி நூலான, பூதநாதோபாக்யானமே பொ.பி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது தான் (Sekar 1992:16). அத்தகைய தெய்வமொன்று பற்றிய பழைய இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைப்பதாயில்லை. பின்னர் ஐயப்பன் எனும் சபரிமலைத் தெய்வம் எப்படி வரலாற்றில் தோன்றினான்?

மகிஷி சங்காரம்
ஐயப்பன் பற்றிய பழைய இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்காதபோதும்,  அவன் மீதான பல நாட்டுப்புறப்பாடல்கள் கேரளப்பகுதியில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்படும் ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான கதை, பலரும் அறிந்தது தான்.  பாற்கடல் கடையும் போது திருமால் மோகினி வடிவெடுத்து அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். அதன் போது, சிவன் மோகினியின் அழகில் மயங்குவதை அடுத்து இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

பூவுலகில் தொல்லை கொடுத்துவரும்  மகிடாசுரனின் தங்கை மகிஷியை, அரிகரபுத்திரனான அக்குழந்தை அழிக்கும் என்று தேவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இரண்டு ஆண்களுக்குப் பிறந்த குழந்தையொன்றாலே தான் இறக்க வேண்டும் என்ற விபரீதமான வரத்தைப் பெற்றவள் அவள். அரிகரபுத்திரன் பந்தள நாட்டுக்கு அருகில் குழந்தையாகத் தோன்றுகிறார். குழந்தையில்லாமல் வருந்தி சிவனை நோக்கி நோன்பிருக்கும் பந்தள மன்னன் இராஜசேகரன், அப்பகுதிக்கு வேட்டையாட வரும் போது அந்தக்குழந்தையைக் கண்டெடுப்பதுடன், அதன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் 'மணிகண்டன்' (கண்டம் = கழுத்து) என்று பெயர் சூட்டி வளர்க்கிறான்.  

மணிகண்டன் வளர்கையிலேயே அரசனுக்கு இன்னொரு மகன் பிறக்கிறான். வளர்ப்பு மகனான மணிகண்டன் தன் சொந்த மகனின் அரசாட்சியில் உரிமை கோரலாம் என்ற அச்சத்தில் அவனை அழித்தொழிக்க முயல்கிறாள் பந்தள அரசி. அந்தத் திட்டன்படி அவள் தீராத தலைவலி வந்தவள் போல நடிக்க, அவள் குணமாவதற்கு புலிப்பால் தேவை என்று அறிவிக்கப்படுகிறது. அதை எடுத்துவரச் செல்லும் மணிகண்டன் காட்டில் மகிஷியுடன் போர் புரிந்து அவளை அழிக்கிறார். அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது.
மகிஷி மடிந்தாள்; மஞ்சள்மாது ஆனாள்!
(படம் நன்றி: Wings & Chirps)
சாபம் விலகி 'மஞ்சள்மாதா'வாக வடிவெடுத்த மகிஷி, மணிகண்டனை மணம்புரிய விரும்புகிறாள். இப்பிறவியில் தான் மணவொறுப்பு (பிரமச்சரிய) நோன்பு கைக்கொள்வதாகச் சொல்லும் மணிகண்டன், அவளை தன்னருகே மாளிகைபுரத்தம்மை என்ற பெயரில்  தெய்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.

மகிஷியின் கொட்டம் அடங்கியது என்று மகிழும் தேவர்கள், மணிகண்டன் புலிப்பால் பெற ஏதுவாக, புலிகளாக மாறி பந்தளம் வருகிறார்கள். அரசியும் ஏனையோரும் அதன் மூலம் மணிகண்டனின் தெய்வீக இயல்பை உணர்ந்து வணங்க, தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததாகச் சொல்லி விடைபெறும் மணிகண்டன் சபரிமலையில் யோகநிலையில் தவம் புரிய விரும்புகிறார். அங்கு அவர் தந்தை இராஜசேகரனால் ஒரு கோவில் அமைக்கப்படுகிறது. அதுவே இன்றைய சபரிமலை தர்மசாஸ்தா கோவில் (Jones & Ryan 2006:58-9). 

ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான இந்தக்கதை, சில இடங்களில் சிற்சில மாறுதல்களுடன் சொல்லப்படுகிறது. உதாரணமாக, தெய்வீகப் பெண்ணான லீலை, அவள் கணவன் தத்தாத்திரேயரின் சாபத்தால் மகிஷியாகப் பிறந்தாள் என்று ஒரு கதை சொல்கிறது (Sikand 2003:23-24). மற்றொரு கதை, தான் எய்யும் அம்பு சென்று வீழும் இடத்தில் தனக்குக் கோவில் அமைக்குமாறு பந்தள மன்னனுக்கு ஆணையிட்டு மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் வீழ்ந்ததாகச் சொல்கிறது (Varma 2018). இன்னொரு கதையில் மஞ்சள்மாதாவின் வேண்டுகோளை ஐயப்பனால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, 'சபரிமலைக்கு புதிய யாத்திரிகர்கள் (கன்னிச்சாமிகள்) யாரும் வருகை தராத ஆண்டில், தான் மணவொறுப்பு நோன்பை முடித்து, உன்னை மணப்பேன்' என்று மணிகண்டன் வாக்களிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கன்னிச்சாமிகள் யாத்திரை செய்வதை அறிந்து ஏமாந்தபடி மாளிகைபுரத்தம்மை காத்திருப்பதாகச் செல்கிறது அந்தக் கதை  (Haindavam Web 2011). இப்படிப் பல மாறுதல்களை ஐயப்பன் தொன்மங்களில் அவதானிக்கலாம்.

இந்த மகிஷி கதையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்ற, அதேவேளை வரலாற்று ரீதியில் முக்கியமான ஐயப்பன் பற்றிய தொன்மங்கள் இன்னும் நான்கு இருக்கின்றன. அவற்றில் ஒரு கதை மகிஷிக்குப் பதிலாக, மணிகண்டன் அழித்த உதயணன் எனும் கொள்ளையன் பற்றிச் சொல்கிறது. ஏனைய மூன்றும் முறையே சபரிமலை ஆளுகைக்கு உட்பட்ட பந்தள அரசகுலம்,  கேரளத்து சமூகங்களான ஈழவர், மலையரையர் ஆகிய மூன்று பிரிவினரிடையேயும் பிரபலமானவை.

அ) உதயணன் கதை
உதயணன் எனும் கொள்ளையன் சபரிமலை சாஸ்தா கோவிலை இடித்துக் கொள்ளையடித்து அதன் தந்திரியையும் (பூசகர்) கொல்கிறான். தந்திரியின் மகன் ஜயந்தன், மனம் வருந்தியபடி சாஸ்தாவைத் துதிக்கிறான். உதயணன் அருகிலிருந்த பந்தள அரசையும் சூறையாடி, அதன் இளவரசியைக் கவர்ந்து வருகிறான். சாஸ்தாவின் அருளால், ஜயந்தன் பந்தள இளவரசியைக் காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது. இருவரும் மறைவாக பொன்னம்பலமேட்டிற்குச் சென்று அங்கு மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகனாக சாஸ்தாவே ஐயப்பனாக அவதரிக்கிறார்.

எருமேலிக்கு அருகே  கோட்டைப்பாடியில் குடியிருந்த பட்டாணியரான (இஸ்லாமியர்) பாத்தும்மா -  அலிக்குட்டி தம்பதிகளின் மகன் வாவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஐயப்பன், உதயணனைக் கொன்று, சாஸ்தா கோவிலையும் மீட்கிறார் (Sadasivan 2000:123).. அங்கு பிற்காலத்தில் ஐயப்பன் தெய்வமாக வழிபடப்படுகிறார்.  

ஆ) பந்தள அரச குலக்கதை.
பந்தள அரண்மனை - இன்றைய தோற்றம்

பந்தள அரசகுலத்தின் நம்பிக்கையின் படி, அவர்கள் பாண்டியரில் ஒரு பிரிவினர்.  சோழர் மற்றும் முகலாயப் படையெடுப்புகளை அடுத்து மேற்கே இடம்பெயரும் அவர்களது மூதாதையர், இறுதியில் இந்த பந்தளத்தில் குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வந்த பந்தளத்து மூதாதையான இராஜசேகரனுக்கு மகனாகக் கிடைத்தவரே மணிகண்டன். 

சபரிமலை சாஸ்தா கோவிலை பந்தள அரசர்களிடமிருந்து தமிழ் மறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களை வெல்வதற்காக 'மூப்பில்' எனும் களரி ஆசான் துணையுடன் போருக்கு எழுகிறான் பந்தள இளவரசன் ஐயப்பன். இஞ்சிப்பாறையில் மறவரை வெல்லும் அவன், அங்குள்ள சாஸ்தா கோவிலில் துறவு பூண்டு யோகநிலையில் அமர்கிறான்.

இ) ஈழோதிசேஷம்
ஈழவர்கள் கேரளத்தின் முக்கியமான சமூகங்களில் ஒருவர்.  ஐயப்பன் பற்றிய ஈழவரின் தொன்மம், "ஈழோதிசேஷம்" எனும் நாட்டார் பாடல் வடிவில் கிடைத்திருக்கிறது. அதன்படி தண்ணீர்முக்கம் சீரப்பஞ்சிராவைச் சேர்ந்த 'மூப்பில்' எனும் ஈழவர் குல களரி ஆசானின் தலைசிறந்த மாணவன் ஐயப்பன். ஈழப்பயிற்று எனும் தற்காப்புக்கலையை மூப்பிலிடம் கற்றுக்கொண்ட ஐயப்பனுக்கும் மூப்பில் மகள் பூங்கொடிக்கும் காதல் மலர்ந்திருந்தது (Sadasivan 2000:123). மூப்பில் துணையுடன் சபரிமலையை ஆக்கிரமித்திருந்த மறவரை வெல்கிறான் ஐயப்பன். பின் அங்கேயே தங்கிவிடுகிறான். அவனைத் தேடி அங்கு வரும் பூங்கொடி, அவன் ஆணைக்கேற்ப தானும் துறவு பூண்டு பொன்னம்பலமேட்டில் தங்கியிருக்கச் செல்கிறாள். அவர்கள் மறைந்த பின்னர் தெய்வங்களாகி, ஐயப்பன் - மாளிகைபுரத்தம்மையாக கோவில் கொள்கிறார்கள்.

ஈ) மலையரையரின் மணிகண்டன்
1800களில் மலையரையர் குடியிருப்பு

இந்திய அரசால் பட்டியல் பழங்குடியினராக பதிவு செய்யப்பட்டுள்ள   மலையரையர்கள், கேரளத்தின் சபரிமலையை அண்டிய காடுகளில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்கள். அவர்களது நம்பிக்கையின் படி, கண்டன் -  கருத்தம்மை என்ற மலையரையத் தம்பதிகளுக்கு 41 நாள் நோன்பின் பயனாகப் பிறந்தவன் மணிகண்டன். மணிகண்டன் என்ற பெயர் அவன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் வந்ததல்ல; கண்டனின் மகன் அல்லது இளைய கண்டன் என்பதே 'மணிகண்டன்' என்ற பெயரின் பொருள். அவனையே பந்தள அரசர் தத்தெடுத்து வளர்க்கிறார்.

சபரிமலையின் பதினெட்டுப் படிகளும் மலையரையர் வாழும் பதினெட்டு மலைகளைக் குறிப்பது தான். மகிஷியை அழிப்பதற்காகவன்றி, சோழரின் ஆக்கிரமிப்பிலிருந்து தம்மைக் காக்கவே மணிகண்டன் சாஸ்தா அம்சமாக அவதரித்தான் என்கின்றார்கள் மலையரையர்கள்.  (Ayyappan 2018). அவர்களின் கதையிலும் மணிகண்டனின் சீரப்பஞ்சிராக் காதலி பூங்கொடி வருகிறாள். 

ஐயப்பன் தொடர்பான இன்னும் பல நாட்டார் பாடல்கள் கேரளத்தில் வழக்கில் உள்ளன. அவற்றில் கவனத்தை ஈர்க்கும் சில பாடல்கள் ஐயப்பனுடன் இலங்கையை இணைக்கின்றன. அதில் ஒன்றின் படி, ஐயப்பன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு இளவரசியொருத்தியை மணந்துகொள்கிறான். இன்னொரு பாடலின் படி, பூங்கொடியை உதயணன் கொலை செய்த பின்னர் மனமுடைந்து போகும் ஐயப்பன், இலங்கைக்குச் சென்று புத்த பிக்குவாக மாறுகின்றான் (Sadasivan 2000:124). 

ஐயப்ப வணக்கம் ஒரு மாவீர வழிபாடு
ஐயப்பன் ஒரு அவதாரம், இரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் நடமாடியவன் என்பதை ஐயப்ப அடியவர்களும் மறுப்பதில்லை. ஐயப்ப வழிபாடு, மறைந்த ஒருவர் தெய்வமாக மாறிய கதையே தான். மகிஷியின் கதை தவிர்த்து, ஏனைய நான்கு கதைகளிலும் ஒரு இயல்பான வரலாற்று அம்சம் இருப்பதைக் காணமுடிகின்றது. அந்த எல்லாக் கதைகளையும் தொகுத்து நோக்கும் போது, நமக்கு 'ஐயப்பன்' எனும் வரலாற்று நாயகன் ஒருவனின் வாழ்க்கை துலங்கி வருகின்றது.

அவன் மணிகண்டன் என்ற பெயரில் வாழ்ந்த பந்தள இளவரசன். எனினும் அவன் முறையான பந்தள அரச குலத்தவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மேற்படி எல்லாத் தொன்மங்களுமே உறுதி கூறுவதைக் காணலாம். ஆனால் அவனது வீரம், சபரிமலையை ஆக்கிரமித்திருந்த உதயணன் அல்லது சோழர் அல்லது மறவர் என்று இனங்காணப்பட்ட யாரோ ஒரு எதிரிகள் படையை வீழ்த்துவதில் உதவி இருந்திருக்கிறது.

மகிஷியின் கதையை, ஐயப்பனை அரிகரபுத்திரன் சார்ந்த பௌராணிக மரபுக்குள் உள்ளீர்க்க முயன்ற முயற்சியாகவே கொள்ளமுடியும். அல்லது சங்க இலக்கியங்களில்  'எருமை நாடு' என்று போற்றப்பட்ட இன்றைய மகிஷ ஊர் (மைசூரு) அரசுக்கும் சேர நாட்டுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடொன்றையும் அது மறைமுகமாகக் கூறக்கூடும். எவ்வாறெனினும், ஐயப்பன் வாழ்வில் பெண்ணொருத்திக்கு இடமிருந்தது என்பதை பூங்கொடி பற்றிய கதைகளும், அவனுக்கருகே இன்றும் கோவில் கொண்டுள்ள மாளிகைபுரத்தம்மை அல்லது மஞ்சள்மாதா சன்னதியும் சான்று கூறுகின்றன.

எந்தவொரு கதையிலும் ஐயப்பனுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. அவன் சபரிமலையில் யோகத்தில் அமர்வதாகவோ, அல்லது இலங்கைக்குச் செல்வதாகவோ அவை முடிவடைகின்றன. பூங்கொடியின் மறைவாலோ, அல்லது போரில் வெறுப்புற்றோ, அவன் மிக இளம்வயதிலேயே துறவு பூண்டிருக்கக்கூடும்; பல வரலாற்றாசிரியர்கள் ஊகிப்பது போலவே அவன் (இலங்கையில்?) பௌத்தத்தைத் தழுவியிருக்கவும் கூடும்.

மேற்படி தொன்மங்களில் துலங்கும் இன்னொன்றும் உள்ளது. சபரிமலையில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தது. மணிகண்டன் ஒரு உண்மையான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அந்த சாஸ்தா கோவில், அவனுக்கும் முந்தியது.  அவன் மறைந்த பிற்காலத்தில்,  சாஸ்தாவின் அவதாரம் ஆகின்றான். பின் சபரிமலையின் முதன்மைத் தெய்வமும் அவனே ஆகின்றான். 

2) ஆவணங்களும் குறிப்புகளும் 
மேலே, தொன்மங்களைப் பகுப்பாய்ந்து ஐயப்பன் என்ற வரலாற்றுப் பாத்திரமொன்றை மீள்கட்டமைக்க முயன்றிருந்தோம். மேலதிக வரலாற்றுத் தகவல்களை நாம் சேகரித்துக் கொள்வதற்கு, இருவகையான ஆவணங்கள் கைகொடுக்கின்றன. ஒன்று, பிரித்தானிய ஆவணங்கள், இரண்டு கடந்த நூற்றாண்டின் நேரடிச் சான்றுகள்.

வார்டின் கணக்கெடுப்பு அறிக்கை
பிரித்தானிய ஆவணங்களில் முக்கியமானது, 1819 அளவில் கொச்சி -  திருவிதாங்கூர் பகுதிகளைப் பற்றி மெட்ராஸ் அதிகாரி பி.எஸ்.வார்டு (B.S.Ward) என்பவர் எழுதிய கணக்கெடுப்பு அறிக்கை. இதுவே சபரிமலை பற்றி தற்போது கிடைத்துள்ள ஆவணங்களில் மிகப்பழைமையானது. கடந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தின் போது, 'இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் சூல்தகவு கொண்ட பெண்கள் இங்கு நுழைய அனுமதி இருக்கவில்லை' என்ற வாதத்திற்கு சார்பாக இந்த ஆவணமே முன்வைக்கப்பட்டது.  சபரிமலைக்கோவில் செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருப்பது, யனவரி மாதம் ஐந்து நாட்கள் அங்கு (மகரவிளக்கு) விழா நிகழ்வது, 10 - 15 ஆயிரம் அடியவர்கள் வருகை தருவது,  அங்குள்ள பதினெட்டு படிகள், பந்தள இராசாவின் பழைய வசிப்பிடம் பற்றிய குறிப்புகள் இதில் வருகின்றன. (Ward 1898:70, 71)
வார்டின் நூலில் வருகின்ற 'சௌரிமல்லை' (Chourymallay) பற்றிய குறிப்பு பப.69-70

சாமுவேலின் 'வேட்டைத்தெய்வம் ஐயப்பன்' 
இதற்குப் பின், சாமுவேல் மாட்டிர் (Mateer Samuel) என்ற பாதிரியாரால் 1883இல் எழுதப்பட்ட "Native life in Travancore" என்ற நூலில் வரும் குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதில் மலையரையர்கள் பற்றி எழுதும் போது சபரிமலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சாமுவேல். (Samuel 1883:75-77)  

"மலையரையர்கள் தமக்கு அருகிலிருந்த சபரிமலையை வழிபட்டு வந்தார்கள். தாளஞானி அல்லது தாலனானி என்ற மலையரையர், வேட்டைத்தெய்வமான ஐயப்பனின் வெளிச்சப்பாடாக (சாமியாடி) இருந்தவர். அவருடன் குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில், அருகில் குடியிருந்த சோக்கர் (ஈழவர்) குலத்தார் யாருக்கும் தெரியாமல் அவரைக் கொன்று  புதைத்து விடுகிறார்கள். ஐயப்பனின் வாகனமான புலிகள், அவரது புதைகுழியைத் தோண்டி பிணத்தை வெளியே எடுக்க, காட்டு யானைகள் அப்பிணத்தை இழுத்து வந்து, ஏனைய மலையரையர்கள் காணும் படி போட்டுச் செல்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து தீவிரமாகப் பரவிய அம்மை நோய், பல சோக்கர் உயிரைப் பறிக்கிறது. சோக்கரின் வெளிச்சப்பாடு, அது அவர்கள் செய்த கொடூரத்துக்காக சாஸ்தாவு தெய்வம் சீற்றம் கொண்டு தரும் தண்டனை என்று அறிவிக்கிறார். சாஸ்தாவு அல்லது சாத்தன் என்பது திருவிதாங்கூர் மலைப்பகுதி எல்லைத் தெய்வம்)
மலையரையர்கள் வழிபட்ட சிலை,
 சாமுவேலின் நூலிலிருந்து.

சோக்கர்கள் தம் தவறுக்குக் கழுவாயாக, கொல்லப்பட்ட மலையரைய வெளிச்சப்பாட்டை தெய்வமாக்கி ஒரு சிலை செய்து, ஒரு சிறுகோவில் கட்டிக்கொடுக்கிறார்கள். தாலஞானியின் வாரிசு ஒருவர் அக்கோவிலுக்கு பூசகராக அமர்கிறார். எனினும், ஹென்ரி பேகர் என்ற போதகரின் முயற்சியில் தாலனானியின் எல்லா வாரிசுகளும்  கிறிஸ்தவர்களாக மதம்மாறி விட்டார்கள். இறுதியாக  வழிபட்ட வாரிசும் அந்தச் சிலை, வாள், சிலம்பு உள்ளிட்ட வழிபாட்டுப்பொருட்களை இன்னொரு பாதிரியாரான டபிள்யூ ஏ ரிச்சர்டிடம் 1881இல் கொடுத்துவிட்டார்." 

சாமுவேலின் நூலிலுள்ள செய்தி இத்தனையும் தான்.  இந்த நூல்,  ஐயப்பனின் வாகனமாக புலியையும், கூடவே யானையையும் சொல்லும் தகவல் சிறப்பிடம் பெறுகின்றது. ஐயப்ப வழிபாட்டில் மலையரையர் மற்றும் ஈழவர் குடிகள் கொண்டிருந்த தொடர்பும் இந்நூலில் உறுதிப்படுத்தப்படுகிறது. ஐயப்பன் வேட்டைத்தெய்வம் என்றும் சாஸ்தாவு எல்லைத்தெய்வம் என்றும் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளதையும் நாம் ஊன்றி நோக்கவேண்டும்.

திருவிதாங்கூரும் பந்தளமும்
பிரித்தானியக் குறிப்புகளைத் தவிர, பந்தள மன்னர்கள் பற்றிய இரு குறிப்புகளும் இக்காலவேளையில் முக்கியம் பெறுகின்றன. திப்பு சுல்தானுக்கு எதிராக திருவிதாங்கூர் அரசு மேற்கொண்ட படையெடுப்புக்கு உதவித்தொகையாக அல்லது கப்பமாக, பந்தள அரசு சுமார் 2 இலட்சம் பெறுமதியான பணத்தைக் கொடுக்கவேண்டி இருந்தது. எனினும் அதைக் கொடுக்கமுடியாமையால் 1820இல் திருவிதாங்கூர் அரசிடம் தமக்கு வருமானம் அளிக்கின்ற தலமான சபரிமலையை ஒப்படைக்க நேர்ந்ததாக பந்தள அரசின் இக்கால சந்ததிகள் கூறிக்கொள்கிறார்கள் (Ayyappan 2018). அதே காலப்பகுதியிலேயே சபரிமலைப் பகுதியை மதிப்பாய்வு செய்த வார்டு, அங்கிருந்த குடில் முன்பு பந்தள ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததையும் தன் காலத்தில் அங்கு (திருவிதாங்கூர்?) அரசின் பணியாளர்களே இருப்பதையும் பதிவு செய்துள்ளார் என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

சபரிமலையிலுள்ள வாவர் சுவாமி நடை. (நன்றி: 'East Coast Daily' web)

இவற்றையெல்லாம் தவிர, வாவரின் வழியில் வந்ததாக உரிமைகோரிய ஒரு குடும்பத்தினர், சபரிமலை மீதான தமது பூசையுரிமையை நிலைநாட்ட கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்று கொல்லம் ஆண்டு 884 (பொ.பி 1708) இல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது (Sadasivan 2000:129). இந்த ஆவணம் எத்தகையது; இதில் சொல்லப்பட்ட தகவல் என்ன என்பது பற்றிய யாதொரு விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

1902  தீவிபத்தும் சிலை பிரதிஷ்டையும்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, சபரிமலை தொடர்பான சமகாலச் சான்றுகள் ஓரளவு தொடர்ச்சியாகக் கிடைத்தபடி இருக்கின்றன. அவற்றில் 1902இல் இடம்பெற்ற தீவிபத்து முக்கியமானது. இவ்விபத்தில் கோவிலின் பெரும்பாகம் சிதைந்தழிந்து போனதாகத் தெரிகின்றது (Daushanti & Panchajanyaa 2018).

கருவறையில் இருந்த ஐயப்பனின் திருவுருவத்தில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் அடுத்து முக்கியம் பெறுகின்றது. கொல்லம் ஆண்டு 1085இல் (பொ.பி 1910) அந்தப் பிரதிஷ்டையானது, பிரபாகர ஆச்சாரியாரால் செய்யப்பட்டதாக அச்சாசனம் சொல்கின்றது (Rao 1988:210). இதுவே ஐயப்பனின் முதலாவது உலோக வார்ப்பாகலாம். மேற்படி 1902இல் கோவில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பின் அங்கு இடம்பெற்ற திருப்பணிகளில் ஒன்றாகவே இந்த சிலை வார்ப்பைக் கொள்ளமுடிகின்றது. எனினும் இச்சிலை மீண்டும் 1950இல் கோவில் எரிக்கப்பட்டபோது சேதமானது.

1950 கோவில் எரிப்பு
இதை அடுத்து, சபரிமலை வரலாற்றில் முக்கியம் பெறுவது,  1950இல் நிகழ்ந்த கோவில் எரிப்பு. திட்டமிட்ட சதியாக அமைந்த இவ்வெரிப்பில் கோவிலின் கதவுகள், ஐயப்பன் திருவுருவம் என்பன கடுமையாகச் சேதமடைந்தன (OnManorama Web 2018).  இச்செயலின் சூத்திரதாரிகள் யாரென்பது இன்று வரை மர்மமாகவே இருக்கும் போதும், அப்போது சபரிமலை அருகே நிலங்களை வாங்கியிருந்த கிறிஸ்தவர்கள் (Daushanti & Panchajanyaa 2018) அல்லது தமிழர்கள் (Kjærholm 1984:5) இந்தச் சதியைச் செய்திருப்பார்கள் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. முரண்நகையாக, சபரிமலை மேலும் புகழ்பெறவும், தமிழரின் விருப்பத்துக்குரிய முதன்மைத் தெய்வமாக மாறவும், இந்த 1950 கோவில் எரிப்பே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

1950  சிதைப்பில் பின்னப்படுத்தப்பட்ட ஐயப்பன் திருவுருவமும் கோவிலும்
(நன்றி: 'My India My Glory' Web)

டென்மார்க்கின் மானுடவியல் ஆய்வாளரான லார் கியேர்கொல்ம் (Lars Kjærholm), தமிழகத்தில், குறிப்பாக மதுரைப்பகுதியில் 1940களுக்கு முன்பு ஐயப்ப வழிபாடு அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் (Kjærholm 1984:2-4). 1950 சபரிமலை தீவைப்பில் தமிழருக்கும் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு கழுவாய் தேடவேண்டுமென்று சில மதுரைவாசிகள் சிந்தித்தமை பற்றி அவர் தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் விவரிக்கின்றார். அவர்களில் முதன்மையானவர் தீவிர இறையன்பரான பி.டி.ராஜன்  என்று சுட்டிக்காட்டும் கியேர்கொல்ம், அவர் பின்னப்பட்ட ஐயப்பன் சிலைக்குப் பதிலாக புதிய சிலை செய்துகொடுப்பதில் முன்னின்றதையும், மதுரைப்பகுதி முழுவதும் ஐயப்ப வழிபாட்டுச் சங்கங்கள் பரவலடைவதற்கு காரணமாக இருந்ததையும் மேலும் குறிப்பிட்டுள்ளார் (Kjærholm 1984:4-6). இவ்வாறு உருவாக்கப்பட்டு இன்று சபரிமலையில் நிறுவப்பட்டுள்ள புதிய மூலவர் சிலை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு, செங்கன்னூரில் வசிக்கும் தட்டாவிழா குடும்பத்தைச் சேர்ந்த இரு சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டதாகும் (Sabarimalai Melsanthi Web n.d)

1975இல் தமிழ் -  மலையாளம் இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 'சுவாமி ஐயப்பன்' எனும் திரைப்படம் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைக்கிறது. மேற்படி "சுவாமி ஐயப்பன்" திரைப்படத்தில் தான் புகழ்பெற்ற ஐயப்பன் தாலாட்டான 'ஹரிவராசனம்' ஜி.தேவராஜன் இசையில் ஜேசுதாசால்  பாடப்படுகிறது. கும்பக்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பாடல், அத்திரைப்படம் வெளியான 1975இற்குப் பின் சபரிமலையில் தினமும் நடை அடைக்கும் போது ஒலிபரப்பப்படுவது கோவிலின் வழமையாகின்றது (MyNation 2018). அண்மையில், இப்பாடலைப் பாடியவர் ஸ்ரீநிவாச ஐயர் அல்ல; தனது பாட்டனாரின் தமக்கை 'கொன்னக்காது ஜானகி அம்மா' தான் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் திரு.பத்மகுமார் உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது (Kuttoor 2018

தொடர்ந்து,  தமிழகத்தை ஐயப்ப பக்தி அலை மிக வேகமாகத் தாக்க ஆரம்பிக்கின்றது. திரையுலக நட்சத்திரங்களான நம்பியார், பாடகர் கே.ஜேசுதாஸ் போன்றவர்கள் முன்னணியில் நிற்க, ஐயப்ப வழிபாடு பொதுமக்களை தீவிரமாகச் சென்றடைகிறது. தமிழகமெங்கும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் கோஷம் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

மகரவிளக்கு
பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு

சபரிமலை தொடர்பான முக்கியமான இன்னொரு நிகழ்வு, 2000களின் பிற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மகரவிளக்கு சர்ச்சை.  அதுவரை மகரவிளக்கு அல்லது மகரஜோதி என்பது, மகர சங்கிராந்தி அன்று,  பொன்னம்பலமேட்டில் கணநேரம் தோன்றி மறைகின்ற நட்சத்திரம்  என்றே அடியவர்களால் நம்பப்பட்டு வந்தது. 1990 மற்றும் 2011 மகரவிளக்கு  தரிசனங்களின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, மகரவிளக்கு அற்புதமல்ல; மனிதச்செயலே என்பதை கேரள அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முற்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில், சபரிமலை மேல்சாந்தியான கண்டரரு மகேஸ்வரரும் அதை அடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் அது மனிதர்களால் உண்டாக்கப்படுவது தான், கேரள மின்வாரியப் பணியாளர்களே மகர விளக்கை பொன்னம்பலமேட்டில் ஏற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர் (Kuttoor 2011).

மலையரையரும் நம்பூதிரிகளும்
மகரவிளக்கு தொடர்பான உண்மை வெளியான பின்னணியில்,  சபரிமலையில் மறக்கப்பட்ட சில விடயங்கள் வெளிவர ஆரம்பித்தன. சபரிமலையில் இன்று மேல்சாந்திகளாக இருப்பவர்கள், செங்கன்னூர்  முந்தன்காவு பகுதியைச் சேர்ந்த 'தாழமோன் மடம்' எனும் குடும்பத்து நம்பூதிரிகள். சபரிமலை தமது வழிபாட்டுத்தலம் என்றும்,  1902்இல் பந்தள அரசு தம்மை சபரிமலையிலிருந்து வெளியேற்றி, தாழமோன் மடம் நம்பூதிரி குடும்பத்தை ஆந்திரத்திலிருந்து வரவழைத்து பூசைக்கு அமர்த்தியது என்றும் மலையரையர்கள் சொல்கிறார்கள் (Rakesh 2018;  Konikkara 2018). இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், மலையரையரின் இந்த வெளியேற்றத்துக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும்.

எனினும் மகர விளக்கை ஏற்றும் உரிமை மாத்திரம் அவர்களால் சபரிமலைக்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாக  தொடர்ந்து வந்திருக்கிறது.  மகரவிளக்கேற்றும் வழக்கம் 55 ஆண்டுகளாகவே கேரள அரசிடம் இருப்பதாகவும், அதற்கு முன் சபரிகிரி நீர்மின் திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மலையரையர்  பழங்குடியினரே மகரவிளக்கேற்றி வந்ததாகவும், கேரள அரசு நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. (The Hindu 2011)

சபரிமலை ஐயப்பனுக்கு தேனபிஷேகம் செய்யும் உரிமை தமக்கு இருந்தது என்றும் தற்போது அது நெய்யபிஷேகமாக மாற்றமுற்றிருக்கிறது என்றும் கூறுகின்ற மலையரையர்கள்,  தமக்கென்றிருந்த வெளிச்சப்பாடு கட்டுச்சொல்லும் வழக்கமும் 1950இற்குப் பின் ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் (Sudheesh 2018). மேலே பிரித்தானியக் குறிப்பில் 1800களை அண்டி வாழ்ந்த தாலனானி எனும் ஐயப்ப வெளிச்சப்பாட்டை இங்கு நாம் நினைவுகூரலாம். மகரவிளக்கு பற்றிய உண்மை வெளியான பின், மீண்டும் தமக்கு பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கேற்றும் உரிமை தரப்பட வேண்டும் என்று மலையரையர்கள் நீதிமன்றம் ஏறியிருந்தார்கள் (Varier 2016).

ஒட்டுமொத்த வரலாற்றுச்சுருக்கம்
இப்படி தொன்மங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து சபரிமலையின் ஒட்டுமொத்த வரலாற்றை நாம் இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

சபரிமலையில் இருந்த ஐயப்பன் கோவில், மிகப்பழைமை வாய்ந்தது.  சாதிபேதமின்றி நிறையக்குலங்கள் அங்கு சாஸ்தாவை வழிபட்டு வந்திருக்கிறார்கள். மலையரையர்கள், ஈழவர்கள் முதலிய குலங்கள் அதில் முதன்மை வகித்தாலும், பிற்காலத்தில் அப்பகுதியை ஆண்ட பந்தள மன்னர்கள் வசம் அக்கோவில் உரிமை சென்றிருக்கிறது. பாண்டியர் கோமரபில் வந்த பந்தள மன்னர்கள், இவ்வாறு இங்கு வந்தது சுமார் 12ஆம் நூற்றாண்டளவில் என்று சொல்லப்படுகிறது. எனினும், அவர்களிடம் நிலவும் பழங்கதையொன்றில் மதுரை திருமலை நாயக்கருடனும் பாண்டிநாட்டு மறவர்களுடனும் இவர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு நினைவுகூரப்படுவதால், இவர்கள் 17ஆம் நூற்றாண்டளவில் பந்தளத்தில் குடியேறியிருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும்.

பந்தள அரசின் ஆரம்பக் காலத்தில் அவ்வரசால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மணிகண்டன் எனும் மலையரையர் குல இளைஞன், கிழக்கே ஏற்பட்ட மறவர் அல்லது தமிழர் ஆக்கிரமிப்பொன்றிலிருந்து சபரிமலைப் பகுதியை காப்பாற்றியிருக்கிறான். அம்முயற்சியில் அவன் காதலியும் நண்பர்களும் மரித்ததால், அல்லது வேறு காரணங்களால், அவன் துறவு பூணுகிறான் அல்லது யாரும் அறியாமல் இலங்கை செல்கிறான். அவனது செயற்கருஞ்செயல்களால் அவனை சாஸ்தாவின் அவதாரம் என்று குடிகள் சபரிமலையில் வழிபட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் காதலி பூங்கொடி அவனருகிலேயே மாளிகைபுரத்தம்மையாகக் கோவில் கொள்கின்ற போதும், அவனை நெருங்கவும் வழிபடவும் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவனது களரி ஆசானும், இஸ்லாமிய நண்பனொருவனும் முறையே கடுத்தசுவாமி, வாவர் சுவாமி என்ற பெயர்களில் கோவில் கொள்கிறார்கள்.  இறுதியில் மணிகண்டனே ஐயப்பன் கோவிலின் மூலவரும் ஆகின்றான்.  


மலையரையர்களால் பொன்னம்பலமேட்டில் செய்யப்பட்ட விளக்கு வழிபாடு, மகரவிளக்கு எனும் சடங்காக வளர்ந்து சபரிமலையின் திருவிழாவாக மலர்கிறது. தொடர்ந்தும் சாதிபேதமின்றி பல குலங்கள் அவ்விழாவில் கலந்து கொள்கின்றன. தெற்கே திருவிதாங்கூர் அரசு பலம் வாய்ந்ததாக வளர்ச்சி கண்டபோது, பந்தள அரசு அதற்கு கீழ்ப்படிய நேரிட்டதுடன், ஒரு கட்டத்தில் சபரிமலையையும் அவ்வரசின் வசம் கையளிக்கவேண்டி ஏற்பட்டது.  


கேரளத்தின் எல்லா நாட்டார் தெய்வக் கோவில்களும் போலவே, சபரிமலையிலும் பிற்காலத்தில் நம்பூதிரிகளின் பூசனை ஏற்(கப்)பட்டிருக்கிறது. மலையரையர்கள் கோவிலிலிருந்து விலக்கப்பட்டு  தாழமோன் மடத்து நம்பூதிரிகள் பூசகர்களாக அமர்த்தப்படுகிறார்கள். இந்த முரண்பாட்டுக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும். கேரள மேல்சாந்திகளில் முதலாமவர் என்று கருதக்கூடிய கண்டரரு பிரபாகரரால் ஐயப்பனின்   திருவுருவம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவிதாங்கூரிலிருந்து கிழக்குப்புறமாக பாண்டிநாட்டிலும் ஐயப்ப வழிபாடு அறிமுகமாகின்றது. கோவில் தொடர்பில் முரண்பட்ட ஒரு குழுவினரால் 1950இல் கோவில் தீவைத்து சிதைக்கப்படுகிறது.  அது அக்கோவிலை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்தி, கோவிலின் பிரபலத்தை அதிகரிக்கிறது. திரைப்படங்கள், திரையுலக நட்சத்திரங்கள் என்போரால் சபரிமலை மேலும் புகழ் பெறுகிறது. ஐயப்பன் கலியுக வரதனாக தென்னகம் தாண்டி வளர்ந்தெழுகின்றான்.


சபரிமலை வரலாறு தொடர்பாக, நம் முன் இன்னும் சில கேள்விகள் பேருரு எடுத்து நிற்கின்றன.

1. ஐயப்பன் வரலாற்றில் சாஸ்தா தொடர்புறுவதைக் காணமுடிகின்றது. தமிழகத்தின் ஐயனாருடனும் அவரை அதிகம் தொடர்புபடுத்துகிறார்களே, இது சரியா?
2. வெறும், ஊடகப் பரப்புரை மாத்திரமே ஐயப்ப வழிபாட்டை ஊக்குவிக்கப் போதுமானதாக
இருந்திருக்குமா? ஐயப்பன் பிரபலமடைந்ததன் பின்னணியில் இருந்த வேறு வரலாற்றுக் காரணிகள் என்னென்ன?
3. இப்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூல்தகவு மகளிரின் கோவில் நுழைவு பற்றிய முடிவு எத்தகையதாக இருக்கவேண்டும்?

இவை இன்னும் முக்கியமான, சற்று ஆழமான கேள்விகள். இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் சற்று ஆறுதலாக விரிவாகப் பார்ப்போம்.



உசாவியவை:
மேலும் வாசிக்க »

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

0 comments
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில்.
  
முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதெல்லாம் ஏன் இன்று குற்ற உணர்வுடனும், ஒவ்வாமையுடனும் பார்க்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இன்றைய சமூக விழுமியங்களுக்கு அந்நியமானவை; பொருத்தமற்றவை. ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அவை நம் இதே சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத அம்சங்களாக நிலவியிருந்திருக்கும். இதில் மரபுவாதிகள் அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.  காலத்திற்கேற்றால் போல் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இன்று தவிர்க்கப்படுகிறது என்பதற்காக, அது என்றுமே தவிர்க்கப்பட்டது, தவிர்க்கப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை.  எதையும் காலமே தீர்மானிக்கிறது. இந்தத் தீர்ப்புகள் நடைமுறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால், சபரிமலை தொடர்பான மூன்றாம் தீர்ப்பு விடயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். நான் சைவம் மீது பற்றுள்ளவன் என்ற வரையில் ஐயனை நேசிப்பவன். எனவே, சிவாகமப் புறம்பான ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமற்றவன். தலயாத்திரைக்கென நூற்றுக்கணக்கான தலங்களை தமிழ்ச்சைவர் பண்டுதொட்டே கொண்டிருக்கையில், நவீன ஊடக மற்றும் அரசியல் காரணங்களால் ஊக்குவிக்கப்படும் ஐயப்ப வழிபாடு மீது தனிப்பட்ட விமர்சனங்களும் உண்டு. 

ஆனால் இன்னொரு புறம்  ஐயப்ப பக்தர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை மாதமானாலே இங்கு இலங்கையில் கூட கறுப்பாடைகளில் சுற்றிவரும் ஐயப்பன் அடியார்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள். ஏனைய நாட்களில் குடி, புகை, கலாட்டா என்று வாழ்க்கையைக் கழிப்பவர்கள். ஆனால், ஐயப்ப விரத காலம் முழுவதும் அவர்களில் வந்து கூடும் அமைதியைக் கண்டால் வியப்பு ஏற்படும்.

சபரிமலை 2010 யாத்திரைக்காலத்தில்

இடையே நீங்கள் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கலாம். நாளெல்லாம் ரவுடித்தனம் செய்துவிட்டு நாற்பத்தெட்டு நாள் மட்டும் மாலை போட்டு நல்லவனுக்கு நடித்தால் போதுமா? நிச்சயம் போதும். அதற்குப் பெயர் பயிற்சி. சமயத்தின் பெயரில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மரக்கறி உணவு உண்டு, ஏனைய நாட்களில் மாமிசம் உண்டு பம்மாத்து காட்டுகிறீர்களே, அதனால் என்ன பயன்  என்று உங்களில் சிலர் கேட்கும் மொண்ணைத்தனமான கேள்விக்கும் பதில் இது தான். பயிற்சி.

பரமசாதுவான பிள்ளைப்பூச்சி ஒருவன் அமைதியாக இருந்தால் யாராவது வியப்படைவீர்களா?  ஒரு பிராமணன் மரக்கறி உணவை உண்டால் பார்த்து ஆச்சரியம் அடைவீர்களா? இல்லை, ஏனென்றால் அது இயல்பு. அமைதியானவனால் அமைதியாக இருப்பதோ, தொடர்ந்து மரக்கறி உணவை உண்பவன் அதே உணவை உண்பதோ கடினமான செயல் அல்ல. ஆனால் பயங்கர அட்டகாசம் செய்யும் ஒருவன் ஐந்தாறு நாள் அமைதியாக இருக்கிறான் என்றால், மாமிசம் தவிர வேறேதும் உண்ணாத ஒருவன் ஏழெட்டு நாள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருக்கிறான் என்றால் ஊரே வாயில் விரல் வைக்கும். "அதெப்படி, சாத்தியமே இல்லையே?" என்று தானே நாம் கேட்போம்?

வாரத்துக்கொருநாள் மரக்கறி வழக்கத்தில் நான் காண்பது இதைத்தான். அசைவப்பிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த ஒரு நாள் அதை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள். அல்லது வாழ முயல்கிறார்கள். "வாரத்துக்கொரு நாள்" என்று விதியைப் போட்டு அன்று மட்டுமாவது மாமிசம் ஒறுத்து வாழமுயல்வது. முடியாவிட்டால் அடுத்தமுறை முயல்வது. இது மெல்ல மெல்ல, வாரத்துக்கு இரண்டு நாள், மூன்று நாள், நாளுக்கு ஒரு வேளை என்று அதிகரித்து இறுதியில் முற்றிலும் புலால் மறுத்தோராக வாழ்வதற்கான பயிற்சியை வழங்கும். ஐயப்ப விரதம் என்பதும் அதே கதை தான். முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் ஆறு வாரங்கள்! இன்று அவர்கள் எப்படி என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் சீர்திருந்துவார்கள். அந்த விரதம், அந்தப் பயிற்சி, அவர்களை சீர்திருந்த வைக்கும்.

சரி, மீண்டும் சபரிமலை விடயத்துக்கு வருவோம். இன்றைய நவீன உலகில் மதத்தின் பெயரில் பாலினப் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தகாததே. சபரிமலையில் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அந்த விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், பொதுச்சமூக மனப்பான்மையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

உண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது தடை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பருவமடைந்ததிலிருந்து விலக்குநிறுத்தம் (Menopause) வரையான காலப்பகுதி மட்டுமே அங்கு பெண்கள் நுழைய முடியாது. பெண்குழந்தைகளும் முதிய பெண்டிரும் இன்றும் அங்கு வழிபட்டு வருகிறார்கள். ஐயப்பன் மணவொறுப்பு (பிரமச்சர்யம்) கைக்கொண்ட தெய்வம் என்பது அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, ஆணையோ, பெண்ணையோ தன் வழிபாட்டுக்கு அனுமதிக்காத தெய்வங்கள் இன்றும் நிறைய உண்டு. சபரிமலை அமைந்துள்ள அதே கேரளத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் அவர்களில் குறிப்பிடத்தக்கவள். அவள் உண்மையில் கண்ணகி. ஆண்குலத்தால் வஞ்சிக்கப்பட்ட அன்னைத்தெய்வமொன்றின் கடுங்கோபத்துடன் அங்கு வீற்றிருக்கிறாள். மாசி மாதம் அங்கு இடம்பெறும் பொங்காலா வைபவத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்கள் கோவில் வளாகத்தில் என்ன, ஊருக்குள்ளே கூட நுழைய முடியாது. அதுவே அங்கு விதி. அது ஆணின் எந்த உரிமையையும் பறிக்கவில்லை. அதில் -  அந்த நம்பிக்கையில் பாலினப்பாகுபாடு, பாலினச்சமத்துவம் என்றெல்லாம் புரட்சி பேசிக்கொண்டு ஆண்கள் உள்நுழைந்தால் அந்தக் குறியீடு, அந்தப் படிமம் என்ன ஆவது?
ஆற்றுக்கால் பொங்காலா -  பெண்களாலான உலகு.

இன்றும் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் கண்ணகிக்குக் கொம்புமுறிக்கும் போது அப்பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொம்புமுறி மழை வேண்டி நிகழும் ஒரு வளச்சடங்கு. ஆணும் பெண்ணும் பத்தியம் காத்து பிள்ளை பெறுவது போல் வானாகிய தந்தைத் தெய்வமும் மண்ணாகிய அன்னைத் தெய்வமும்  ஊடல் முறிந்து கலவி கொள்ளவேண்டும்; மழை எனும் உயிர்த்துளிகளை மண் அன்னை மீது வான் தந்தை பொழியவேண்டும் என்பதே கொம்புமுறியின் மானுடவியல் நோக்கு. கொம்புச்சந்தி ஆண்களால் மட்டுமே ஆனது. பாலியல் கிளர்ச்சியூட்டும் பாடல்களும், ஆபாச வார்த்தைகளும் அங்கு சர்வசாதாரணம். ஆனால், கொம்புமுறி என்பது மழைவேண்டி பத்தியம் காக்கும் ஒரு விரதம். எனவே பெண்கள் விலக்கப்படுகிறார்கள். கொம்புமுறியின் இறுதி நாட்களில் அவர்கள் அங்கு வரலாம். ஊடல் தவிர்ந்து தத்தம் ஆடவருடன் கூடல் கொள்ளலாம். வெளியே மழைத்துளிகள் பெருகும்; வீடுகளில் உயிர்த்துளிகள் பெருகும். 

தமிழகத்தின் சில ஔவையாரம்மன் கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குமரிப் பகுதியில் பெண்கள் ஆடி மாதம் கடைப்பிடிக்கும் அவ்வை நோன்பைப் பார்க்கவோ கலந்துகொள்ளவோ ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வடநாட்டின் கார்த்திகேய மந்திர்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. "ஆண்வாடை" பிடிக்காமல் காட்டிலும் ஊர் ஒதுக்குப்புறத்திலும் போய் அமர்ந்துகொண்ட காளிகள், பேச்சிகள் பற்றிய கதைகளை இன்றும் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதெல்லாம் அந்தந்தத் தெய்வங்கள், அவை சார்ந்த தொன்மங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள், படிமங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது அந்தத் தெய்வத்தின் தனித்துவத்தை இல்லாமல் செய்கின்ற காரியங்கள். தெய்வத்துக்கு அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்னவோ அவற்றை வழிபடுகின்ற பாமர மக்களுக்குத் தான்.  

சபரிமலை ஐயப்பன் கோவில், உண்மையில் ஒரு ஐயனார் கோவிலே. கேரளத்து தாந்திரீக வழிபாட்டு நடைமுறை மாற்றங்களால் அது ஐயப்பனை தனித்துவமான தெய்வமாக மாற்றிக்கொண்டது.  1940களுக்குப் பின்பு திரைப்படங்கள், வெகுசன ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்கள் என்பன காரணமாக யாத்திரைத் தலமாகப் புகழ்பெறத் தொடங்கியது. ஆயினும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபின் படி, அந்த இறைவன் மணவொறுப்பு நோன்பு கொண்டவன். எனவே அவனைப் பெண்கள் நெருங்கக்கூடாது. அவனை வழிபடும் அடியவர்களும் மணவொறுப்பும் கடுமையான விரதங்களும் மேற்கொண்டே அவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.  

கேரளத்தின் பழைய ஐயன் கோவில்கள் பல இன்று ஐயப்பன் கோவில்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. எனினும் அங்குள்ள மூலவர்கள் "தர்மசாஸ்தா" என்ற பெயரில் தம் பழைய ஐயன் அடையாளத்தை எஞ்சவைத்திருக்கிறார்கள். (சாஸ்தா என்பது ஐயனின் "சாத்தன்" எனும் பெயரின் வடமொழி மரூஉ.) குளத்துப்புழாவில் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா பாலகன். அதே போல், அச்சன்கோவில் எனும் தலத்தில், பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா  மணக்கோலநாதன். அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபடத் தடையில்லை. ஆனால், சபரிமலை போல்  தர்மசாஸ்தா மணவொறுப்பு நோன்பு மேற்கொண்டுள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலிலும் பத்து முதல் ஐம்பது வரையான வயதுள்ள பெண்கள் உள்நுழைய முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருவர் இன்னொருவருக்கு கீழடங்குபவர் அல்லர். ஒருவரை ஒருவர் நிரப்புவதாலேயே ஒருவருக்கொருவர் சமனானவர், ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாதவர்.  மற்றும்படி, ஆண் ஆண் தான்; பெண் பெண் தான்.  அதற்கு மேல் இயற்கையாலோ அறிவியலாலோ வேறெந்த விதத்திலும் அந்தச் சமத்துவத்தை நிரூபிக்கமுடியாது என்பதே உண்மை.   இந்த விடயத்தில் பெண்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்படவும் இல்லை. இன்றும் பெண்கள் உலாவும் ஐயப்ப அடியவர்கள் பலரது வீடுகளில் ஐயப்பனின் உருவப்படம் வைத்து வழிபடப்படுகிறது. ஐயப்பன் பெயரில் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியுள்ள ஓரிரு ஆலயங்களிலும் பெண்கள் சாதாரணமாகத் தான் சென்று வருகிறார்கள். 

குறிப்பிட்ட பாலினத்தவர் குறித்த தெய்வத்தின் கோவிலுக்குள் நுழையமுடியாது, நுழையக்கூடாது என்பது மிகத்தொன்மையான நாட்டார் நம்பிக்கை. ஆண்மை, பெண்மை சார்ந்த சிக்கலான மானுட உறவுகள் மோதும் சமர்க்களங்கள் அவை. அவற்றின் குறியீட்டு அழகியலை இரசிக்கலாமே தவிர,  பாலினச்சமத்துவம் முதலான நவீனக்கொள்கைகளை அங்கு திணிப்பது அர்த்தமற்றது. அப்படி, பாலினச்சமத்துவம் தான் நோக்கம் என்றால் அதேபோல் பெண்கள் 'ஒடுக்கப்படும்'  ஆரியங்காவு மீதோ, ஆண்கள் 'ஒடுக்கப்படும்' ஆற்றுக்கால் மீதோ ஏன் இத்தகைய நீதிமன்ற வழக்குத்தாக்கல்கள் செய்யப்படவில்லை? சிக்கல், சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது என்பது தான். அந்தக் கொண்டாட்ட மனநிலையை, சிலர் பெண் என்ற ஒரே காரணத்தால் ஏன் அனுபவிக்கக்கூடாது என்று கேட்கும் அறியாமை.

காலவோட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இயல்பாக மாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ஐயப்பனை மணமுடிக்கக் காத்திருக்கும் மஞ்சள்மாதாவின் வேண்டுகோள் ஐயனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தொன்மத்தை ஏற்றி அதை நிகழ்த்திக்காட்டவும் முடியும். அப்படி இயல்பாக நிகழும் போதே அதை சமூகக்கூட்டுமனம் ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இப்படி சட்டம் போட்டு  நம்பிக்கையைச் சீண்டுவதை, தன் அடிவயிற்றில் கைவைப்பதாகவே அடியவன் ஒருவன் உணர்வான். அதன் விளைவுகள் விரும்பக்கூடியவை அல்ல. ஐயனுக்கு நீதிமன்று தீர்ப்பளித்து விட்டது. மாளிகைபுரத்தம்மைக்கு அவன் தீர்ப்பு என்ன?

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மை 



மேலும் வாசிக்க »

வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

0 comments
கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள்
படம்: tripadvisor.in
மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு.

ஆனால், தமிழருக்கென்று இத்தகைய நிற விதிகள் எதுவும் இல்லை. தமிழரின் ஆடை அலங்காரங்கள் பகட்டானவை. சில இடங்களில் அவை சமூக ஏற்றத்தாழ்வை வெளிக்காட்டுவனவாகவும் அமைவதுண்டு. இதுபற்றிய விவாதமொன்றில் , மலையாளிகளும் சிங்களவரும் தமிழருக்கு எத்தனை நெருக்கமான பண்பாட்டுப் பங்காளிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைப் போலவே தமிழரும் வெண்ணிறாடையை தம் சீருடையாக ஏற்றுக்கொண்டால் நல்லது என்று கருத்துத் தெரிவித்திருந்தேன்.

குறைந்தபட்சம் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும்போதாவது தமிழச்சிகள் அதைக் கடைப்பிடிக்கலாமே என்று அந்த விவாதம் வளர்ந்தது (ஆண்கள் ஏற்கனவே வெள்ளை வேட்டி அணிகிறார்கள்) பின்பு அது “விதவையரின் ஆடைநிறம்” (மெச்சிங்கா தலையில மல்லிகைப்பூ வைங்களன்?) என்றும் “அவள் உடை அவள் உரிமை” (ஏன் வெள்ளைச்சாறி கட்ட விருப்பமான பொம்பிளையள் இல்லையா?) என்றும், பெண்ணிய விவாதமாக மாறிவிட்டதால் அத்தோடு விவாதம் நின்றுபோனது. :)

ஆனால், இந்த திருவிழா நாட்களில், கோயில் கோயிலாகச் சுற்றும்போது தான் அக்கருத்து எத்தனை தவறு என்று உணர்கிறேன். பஞ்சவர்ணத்திலிருந்து பஞ்சுமிட்டாய் நிறம் வரை, இளவட்டங்கள் ஜொலிக்கின்றன. மின்மினிகள் போல மின்னும் சரிகைச்சேலைகளும் ஜிங்கிச்சா ஜிங்கிச்சா ஆடைகளும், உண்டாக்கும் களிவெறிக்கு வேறெதையும் ஈடு இணை கூறமுடியாது. :)

நம் பண்பாடு தான் எத்தனை வண்ணமயமானது? இதையே முன்பு கனவுகண்டவாறு, வெண்ணிறத்தோடு எல்லோரும் உலவுவதாக கற்பனை பண்ணிப் பார்த்தேன். அதில் கருத்தைக் கவரும் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கும். ஆனால் வெவ்வேறு நிறங்களின் சீரின்மையில் ஏற்படுகின்ற இந்த வினோதமான கவர்ச்சி, அந்தத் தனிநிறத்தில் கிடைத்துவிடாது. ஆம். வேறுபாடுகள் இருப்பதால் - உயிர்ப்பல்வகைமை என்பதால் தானே இயற்கையும் பேரழகாகக் காட்சியளிக்கிறது?
தமிழர் திருவிழாக் காட்சி ஒன்று, பெரம்பலூர், தமிழ்நாடு
(படம்:travelwhistle.com)

தூவெள்ளைச் சீருடை என்பதன் அபத்தத்தை எண்ணி ஒருதடவை எனக்குள் சிரித்துக்கொண்டேன். கூடவே அப்படி விதியொன்றும் உருவாகி எழாதவாறு, பண்பாட்டை வண்ணமயமாகவே வளர்த்தெடுத்த நம் முப்பாட்டனார்களின் கலாரசனையையும் எண்ணி வியந்துகொண்டேன்.  
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner