சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில்.
  
முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதெல்லாம் ஏன் இன்று குற்ற உணர்வுடனும், ஒவ்வாமையுடனும் பார்க்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இன்றைய சமூக விழுமியங்களுக்கு அந்நியமானவை; பொருத்தமற்றவை. ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அவை நம் இதே சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத அம்சங்களாக நிலவியிருந்திருக்கும். இதில் மரபுவாதிகள் அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.  காலத்திற்கேற்றால் போல் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இன்று தவிர்க்கப்படுகிறது என்பதற்காக, அது என்றுமே தவிர்க்கப்பட்டது, தவிர்க்கப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை.  எதையும் காலமே தீர்மானிக்கிறது. இந்தத் தீர்ப்புகள் நடைமுறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால், சபரிமலை தொடர்பான மூன்றாம் தீர்ப்பு விடயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். நான் சைவம் மீது பற்றுள்ளவன் என்ற வரையில் ஐயனை நேசிப்பவன். எனவே, சிவாகமப் புறம்பான ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமற்றவன். தலயாத்திரைக்கென நூற்றுக்கணக்கான தலங்களை தமிழ்ச்சைவர் பண்டுதொட்டே கொண்டிருக்கையில், நவீன ஊடக மற்றும் அரசியல் காரணங்களால் ஊக்குவிக்கப்படும் ஐயப்ப வழிபாடு மீது தனிப்பட்ட விமர்சனங்களும் உண்டு. 

ஆனால் இன்னொரு புறம்  ஐயப்ப பக்தர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை மாதமானாலே இங்கு இலங்கையில் கூட கறுப்பாடைகளில் சுற்றிவரும் ஐயப்பன் அடியார்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள். ஏனைய நாட்களில் குடி, புகை, கலாட்டா என்று வாழ்க்கையைக் கழிப்பவர்கள். ஆனால், ஐயப்ப விரத காலம் முழுவதும் அவர்களில் வந்து கூடும் அமைதியைக் கண்டால் வியப்பு ஏற்படும்.

சபரிமலை 2010 யாத்திரைக்காலத்தில்

இடையே நீங்கள் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கலாம். நாளெல்லாம் ரவுடித்தனம் செய்துவிட்டு நாற்பத்தெட்டு நாள் மட்டும் மாலை போட்டு நல்லவனுக்கு நடித்தால் போதுமா? நிச்சயம் போதும். அதற்குப் பெயர் பயிற்சி. சமயத்தின் பெயரில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மரக்கறி உணவு உண்டு, ஏனைய நாட்களில் மாமிசம் உண்டு பம்மாத்து காட்டுகிறீர்களே, அதனால் என்ன பயன்  என்று உங்களில் சிலர் கேட்கும் மொண்ணைத்தனமான கேள்விக்கும் பதில் இது தான். பயிற்சி.

பரமசாதுவான பிள்ளைப்பூச்சி ஒருவன் அமைதியாக இருந்தால் யாராவது வியப்படைவீர்களா?  ஒரு பிராமணன் மரக்கறி உணவை உண்டால் பார்த்து ஆச்சரியம் அடைவீர்களா? இல்லை, ஏனென்றால் அது இயல்பு. அமைதியானவனால் அமைதியாக இருப்பதோ, தொடர்ந்து மரக்கறி உணவை உண்பவன் அதே உணவை உண்பதோ கடினமான செயல் அல்ல. ஆனால் பயங்கர அட்டகாசம் செய்யும் ஒருவன் ஐந்தாறு நாள் அமைதியாக இருக்கிறான் என்றால், மாமிசம் தவிர வேறேதும் உண்ணாத ஒருவன் ஏழெட்டு நாள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருக்கிறான் என்றால் ஊரே வாயில் விரல் வைக்கும். "அதெப்படி, சாத்தியமே இல்லையே?" என்று தானே நாம் கேட்போம்?

வாரத்துக்கொருநாள் மரக்கறி வழக்கத்தில் நான் காண்பது இதைத்தான். அசைவப்பிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த ஒரு நாள் அதை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள். அல்லது வாழ முயல்கிறார்கள். "வாரத்துக்கொரு நாள்" என்று விதியைப் போட்டு அன்று மட்டுமாவது மாமிசம் ஒறுத்து வாழமுயல்வது. முடியாவிட்டால் அடுத்தமுறை முயல்வது. இது மெல்ல மெல்ல, வாரத்துக்கு இரண்டு நாள், மூன்று நாள், நாளுக்கு ஒரு வேளை என்று அதிகரித்து இறுதியில் முற்றிலும் புலால் மறுத்தோராக வாழ்வதற்கான பயிற்சியை வழங்கும். ஐயப்ப விரதம் என்பதும் அதே கதை தான். முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் ஆறு வாரங்கள்! இன்று அவர்கள் எப்படி என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் சீர்திருந்துவார்கள். அந்த விரதம், அந்தப் பயிற்சி, அவர்களை சீர்திருந்த வைக்கும்.

சரி, மீண்டும் சபரிமலை விடயத்துக்கு வருவோம். இன்றைய நவீன உலகில் மதத்தின் பெயரில் பாலினப் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தகாததே. சபரிமலையில் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அந்த விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், பொதுச்சமூக மனப்பான்மையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

உண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது தடை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பருவமடைந்ததிலிருந்து விலக்குநிறுத்தம் (Menopause) வரையான காலப்பகுதி மட்டுமே அங்கு பெண்கள் நுழைய முடியாது. பெண்குழந்தைகளும் முதிய பெண்டிரும் இன்றும் அங்கு வழிபட்டு வருகிறார்கள். ஐயப்பன் மணவொறுப்பு (பிரமச்சர்யம்) கைக்கொண்ட தெய்வம் என்பது அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, ஆணையோ, பெண்ணையோ தன் வழிபாட்டுக்கு அனுமதிக்காத தெய்வங்கள் இன்றும் நிறைய உண்டு. சபரிமலை அமைந்துள்ள அதே கேரளத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் அவர்களில் குறிப்பிடத்தக்கவள். அவள் உண்மையில் கண்ணகி. ஆண்குலத்தால் வஞ்சிக்கப்பட்ட அன்னைத்தெய்வமொன்றின் கடுங்கோபத்துடன் அங்கு வீற்றிருக்கிறாள். மாசி மாதம் அங்கு இடம்பெறும் பொங்காலா வைபவத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்கள் கோவில் வளாகத்தில் என்ன, ஊருக்குள்ளே கூட நுழைய முடியாது. அதுவே அங்கு விதி. அது ஆணின் எந்த உரிமையையும் பறிக்கவில்லை. அதில் -  அந்த நம்பிக்கையில் பாலினப்பாகுபாடு, பாலினச்சமத்துவம் என்றெல்லாம் புரட்சி பேசிக்கொண்டு ஆண்கள் உள்நுழைந்தால் அந்தக் குறியீடு, அந்தப் படிமம் என்ன ஆவது?
ஆற்றுக்கால் பொங்காலா -  பெண்களாலான உலகு.

இன்றும் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் கண்ணகிக்குக் கொம்புமுறிக்கும் போது அப்பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொம்புமுறி மழை வேண்டி நிகழும் ஒரு வளச்சடங்கு. ஆணும் பெண்ணும் பத்தியம் காத்து பிள்ளை பெறுவது போல் வானாகிய தந்தைத் தெய்வமும் மண்ணாகிய அன்னைத் தெய்வமும்  ஊடல் முறிந்து கலவி கொள்ளவேண்டும்; மழை எனும் உயிர்த்துளிகளை மண் அன்னை மீது வான் தந்தை பொழியவேண்டும் என்பதே கொம்புமுறியின் மானுடவியல் நோக்கு. கொம்புச்சந்தி ஆண்களால் மட்டுமே ஆனது. பாலியல் கிளர்ச்சியூட்டும் பாடல்களும், ஆபாச வார்த்தைகளும் அங்கு சர்வசாதாரணம். ஆனால், கொம்புமுறி என்பது மழைவேண்டி பத்தியம் காக்கும் ஒரு விரதம். எனவே பெண்கள் விலக்கப்படுகிறார்கள். கொம்புமுறியின் இறுதி நாட்களில் அவர்கள் அங்கு வரலாம். ஊடல் தவிர்ந்து தத்தம் ஆடவருடன் கூடல் கொள்ளலாம். வெளியே மழைத்துளிகள் பெருகும்; வீடுகளில் உயிர்த்துளிகள் பெருகும். 

தமிழகத்தின் சில ஔவையாரம்மன் கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குமரிப் பகுதியில் பெண்கள் ஆடி மாதம் கடைப்பிடிக்கும் அவ்வை நோன்பைப் பார்க்கவோ கலந்துகொள்ளவோ ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வடநாட்டின் கார்த்திகேய மந்திர்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. "ஆண்வாடை" பிடிக்காமல் காட்டிலும் ஊர் ஒதுக்குப்புறத்திலும் போய் அமர்ந்துகொண்ட காளிகள், பேச்சிகள் பற்றிய கதைகளை இன்றும் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதெல்லாம் அந்தந்தத் தெய்வங்கள், அவை சார்ந்த தொன்மங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள், படிமங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது அந்தத் தெய்வத்தின் தனித்துவத்தை இல்லாமல் செய்கின்ற காரியங்கள். தெய்வத்துக்கு அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்னவோ அவற்றை வழிபடுகின்ற பாமர மக்களுக்குத் தான்.  

சபரிமலை ஐயப்பன் கோவில், உண்மையில் ஒரு ஐயனார் கோவிலே. கேரளத்து தாந்திரீக வழிபாட்டு நடைமுறை மாற்றங்களால் அது ஐயப்பனை தனித்துவமான தெய்வமாக மாற்றிக்கொண்டது.  1940களுக்குப் பின்பு திரைப்படங்கள், வெகுசன ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்கள் என்பன காரணமாக யாத்திரைத் தலமாகப் புகழ்பெறத் தொடங்கியது. ஆயினும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபின் படி, அந்த இறைவன் மணவொறுப்பு நோன்பு கொண்டவன். எனவே அவனைப் பெண்கள் நெருங்கக்கூடாது. அவனை வழிபடும் அடியவர்களும் மணவொறுப்பும் கடுமையான விரதங்களும் மேற்கொண்டே அவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.  

கேரளத்தின் பழைய ஐயன் கோவில்கள் பல இன்று ஐயப்பன் கோவில்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. எனினும் அங்குள்ள மூலவர்கள் "தர்மசாஸ்தா" என்ற பெயரில் தம் பழைய ஐயன் அடையாளத்தை எஞ்சவைத்திருக்கிறார்கள். (சாஸ்தா என்பது ஐயனின் "சாத்தன்" எனும் பெயரின் வடமொழி மரூஉ.) குளத்துப்புழாவில் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா பாலகன். அதே போல், அச்சன்கோவில் எனும் தலத்தில், பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா  மணக்கோலநாதன். அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபடத் தடையில்லை. ஆனால், சபரிமலை போல்  தர்மசாஸ்தா மணவொறுப்பு நோன்பு மேற்கொண்டுள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலிலும் பத்து முதல் ஐம்பது வரையான வயதுள்ள பெண்கள் உள்நுழைய முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருவர் இன்னொருவருக்கு கீழடங்குபவர் அல்லர். ஒருவரை ஒருவர் நிரப்புவதாலேயே ஒருவருக்கொருவர் சமனானவர், ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாதவர்.  மற்றும்படி, ஆண் ஆண் தான்; பெண் பெண் தான்.  அதற்கு மேல் இயற்கையாலோ அறிவியலாலோ வேறெந்த விதத்திலும் அந்தச் சமத்துவத்தை நிரூபிக்கமுடியாது என்பதே உண்மை.   இந்த விடயத்தில் பெண்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்படவும் இல்லை. இன்றும் பெண்கள் உலாவும் ஐயப்ப அடியவர்கள் பலரது வீடுகளில் ஐயப்பனின் உருவப்படம் வைத்து வழிபடப்படுகிறது. ஐயப்பன் பெயரில் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியுள்ள ஓரிரு ஆலயங்களிலும் பெண்கள் சாதாரணமாகத் தான் சென்று வருகிறார்கள். 

குறிப்பிட்ட பாலினத்தவர் குறித்த தெய்வத்தின் கோவிலுக்குள் நுழையமுடியாது, நுழையக்கூடாது என்பது மிகத்தொன்மையான நாட்டார் நம்பிக்கை. ஆண்மை, பெண்மை சார்ந்த சிக்கலான மானுட உறவுகள் மோதும் சமர்க்களங்கள் அவை. அவற்றின் குறியீட்டு அழகியலை இரசிக்கலாமே தவிர,  பாலினச்சமத்துவம் முதலான நவீனக்கொள்கைகளை அங்கு திணிப்பது அர்த்தமற்றது. அப்படி, பாலினச்சமத்துவம் தான் நோக்கம் என்றால் அதேபோல் பெண்கள் 'ஒடுக்கப்படும்'  ஆரியங்காவு மீதோ, ஆண்கள் 'ஒடுக்கப்படும்' ஆற்றுக்கால் மீதோ ஏன் இத்தகைய நீதிமன்ற வழக்குத்தாக்கல்கள் செய்யப்படவில்லை? சிக்கல், சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது என்பது தான். அந்தக் கொண்டாட்ட மனநிலையை, சிலர் பெண் என்ற ஒரே காரணத்தால் ஏன் அனுபவிக்கக்கூடாது என்று கேட்கும் அறியாமை.

காலவோட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இயல்பாக மாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ஐயப்பனை மணமுடிக்கக் காத்திருக்கும் மஞ்சள்மாதாவின் வேண்டுகோள் ஐயனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தொன்மத்தை ஏற்றி அதை நிகழ்த்திக்காட்டவும் முடியும். அப்படி இயல்பாக நிகழும் போதே அதை சமூகக்கூட்டுமனம் ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இப்படி சட்டம் போட்டு  நம்பிக்கையைச் சீண்டுவதை, தன் அடிவயிற்றில் கைவைப்பதாகவே அடியவன் ஒருவன் உணர்வான். அதன் விளைவுகள் விரும்பக்கூடியவை அல்ல. ஐயனுக்கு நீதிமன்று தீர்ப்பளித்து விட்டது. மாளிகைபுரத்தம்மைக்கு அவன் தீர்ப்பு என்ன?

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மை 



0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner