தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள
கல்வெட்டுக்களும் கற்றூண்களும்


காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன முறையிலான கற்கைகள், 1850களுக்கு பின்பே ஆரம்பமாகின. இந்தப் பின்னணியில், பிரித்தானியக் குறிப்புக்களில் திருக்கோணமலை மாவட்டத்திலும் பொலனறுவை மாவட்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப்படும் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தவிர்த்தால், இலங்கைக் கல்வெட்டியலில்  முதன்முதலாக விரிவாக ஆராயப்பட்ட தமிழ்க் கல்வெட்டு என்று தம்பிலுவில் கல்வெட்டைச் சொல்லலாம். இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் பிரித்தானிய அலுவலர் ஹியூஜ் நெவில். கண்டறியப்பட்ட ஆண்டு 1885.


1847இல் பிறந்த ஹியூஜ் நெவில், தன் 17ஆவது வயதில் பிரித்தானிய நீதியரசரின் தனிப்பட்ட செயலாளராக இலங்கை வந்தவர். இலங்கையின் பல பாகங்களிலும் சிலோன் நிர்வாக சேவை எழுதுநர், மாவட்ட நீதிபதி, உதவி அரசாங்க அதிபர் போன்ற பதவிகளை வகித்த நெவில், மிகச்சிறந்த புலமையாளர். தொல்பொருளியல், கல்வெட்டியல், வரலாறு, இனவரைவியல், சமூகவியல், மானுடவியல், விலங்கியல், தொன்மவியல், புவியியல் என்று அவரது புலமைசார் பங்களிப்பின் பட்டியல் நீண்டது. சிங்களம், தமிழ், வேடர் மொழி என்பவற்றில் நல்ல சரளம் பெற்றிருந்த நெவில், தன் அறிவுசார் கண்டறிதல்களை, "தப்ரபேனியன்" எனும் ஆய்வேடொன்றில் பிரசுரித்து வந்தார். அதில் தான் "சிலோனில் தமிழ்க் கல்வெட்டு" என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது தம்பிலுவில் கல்வெட்டு.
நெவிலின் "தப்ரபேனியன்" ஆய்வேட்டில் வெளியான கட்டுரை, 1885 ஒக்டோபர் இதழ்


அப்போது மண்ணாலான ஓலைக்குடிசையாக இருந்த தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின், ஒரு சுவரோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது இக்கல்வெட்டு. அதைப் பிரித்தெடுத்து சுத்தம் பண்ணிய நெவில், அதில் மயில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, இது ஒரு முருகன் கோவிலுக்குரியது என்ற முடிவுக்கு வந்திருந்தார். எனவே அருகில் இருந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு இக்கல்வெட்டு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.  தற்போதும், இக்கல்வெட்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலேயே வைத்துப் பேணப்படுகின்றது. 


தம்பிலுவில் கல்வெட்டு சுமார் ஐந்தடி உயரமான கற்றூண் ஒன்றாகும். அதன் ஒருபுறம் திரிசூலமும் மறுபுறம் மயிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய இருபக்கங்களிலும் முப்பத்தெட்டு வரிகளில் கல்வெட்டு பொளியப்பட்டிருக்கிறது. கல்வெட்டு வாசகத்தின் ஆரம்பத்தில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சூரியன் சந்திரன் உள்ளவரை, கல்வெட்டு சொல்லும் செய்தி நின்று நிலவவேண்டும் என்பது இதன் பொருள்.

தம்பிலுவில் கல்வெட்டின் மைப்படி,
பத்மநாதன்.சி, 2013, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, நூலிலிருந்து

கல்வெட்டு வாசகம் இது தான்:
"ஸ்ரீ சங்கபோதி பற்மரான திறிபுவனச் சக்கிறவத்திகள் ஸ்ரீ விசயவாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் ௨௰ தியதி,சிவனான சங்கரர்க் கோவிலுக்குக் கொடுத்த வோவில். இன்த தன்மத்துக்கு அகித்தம் சேதானாகில் கெங்கைக் கரையில் காரம்பசுவைக் கொந்ற பாவத்தை கொள்ளக் கடவராகவும்"

"ஸ்ரீசங்கபோதி வர்மரும் திரிபுவனச் சக்கரவர்த்தியுமான ஸ்ரீ விஜயபாகு தேவரின் பத்தாவது ஆட்சியாண்டில் வருகின்ற தை மாதம் இருபதாம் திகதி, சிவனான சங்கரர் கோவிலுக்கு வோவில் கொடுக்கப்பட்டது. இந்த அறச்செயலுக்கு யாரும் தீங்கு செய்தால் அவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவாராக" என்பது இக்கல்வெட்டின் பொருள்.

இக்கல்வெட்டு கூறுகின்ற விசயவாகு தேவர் யார் என்பதில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆய்வாளர் அமரர்.க.தங்கேஸ்வரி அவர்கள் இக்கல்வெட்டு சொல்லும் விசயவாகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த கலிங்க மாகோன் என்கின்றார். பல்கலைக்கழக வரலாற்றறிஞர்களான சி.பத்மநாதன், கா.இந்திரபாலா, ஏ.வேலுப்பிள்ளை, செனரத் பரணவிதான உள்ளிட்டோர் இவனைக் கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1510 -  1521) என்கின்றனர். பெற்ற தந்தையை மூன்று மகன்மார் மண்ணாசைக்காகக் கொலை செய்த "விஜயபாகு கொள்ளை" என்ற துயர் மிகுந்த வரலாற்றுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவன்  இவனே. 

கல்வெட்டைப் பொறித்தது ஆறாம் விஜயபாகு தான் என்பதற்கு பேராசிரியர் பத்மநாதன் கொடுக்கும் வலுவான ஆதாரங்கள் இரண்டு. ஒன்று, இக்கல்வெட்டு பொலனறுவைக் காலக் கல்வெட்டுக்கள் போல் மன்னனை கிரந்தம் கலந்து 'விஜயBபாஹூ' என்று குறிப்பிடாமல், அவன் பெயரைத் தமிழ்ப்படுத்தி 'விசயவாகு' என்று குறிப்பிடுகின்றமை. இதே மன்னனின் கொழும்பு அருங்காட்சியகத் தமிழ்க் கல்வெட்டு, இதே போல இவனை "விசயவாகு தேவர்" என்றே அழைக்கிறது.

இரண்டாவது ஆதாரம் இக்கல்வெட்டின் வரிவடிவம். இன்றைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ வளர்ச்சி பெரும்பாலும் 16ஆம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்று விட்டது. இன்றும் ஓரளவு எளிதாக வாசிக்கும் நிலையிலுள்ள இக்கல்வெட்டு 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்கிறார் அவர். அந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

இங்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் என்றால் என்ன என்று இன்று யாருக்கும் தெரியாது. நூறாண்டுகளுக்கு முன் "Monograph of Batticaloa" எனும் நூலை (1921) எழுதிய கனகரெட்ணம் முதலியார்,  வோவில் அப்போது வேவில் என்று அழைக்கப்படுவதாகவும், திருக்கோவிலுக்குத் தெற்கே சுமார் நான்கு மைல் தூரத்தில்  அது இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெவிலும் இதையே சொல்வதை மேலே காணலாம்.

ஆனால் இன்று வோவில் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாத நிலையில், அதை  இனங்காணக் கைகொடுத்தது 1695இல் வரையப்பட்ட ஒரு இடச்சு வரைபடம். அதில், திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு நீர்நிலை வரையப்பட்டு, அது "Gravet van Bouwille" - போவில் மடு என்றும், அதற்கும் தெற்கே "Bouwilipattu" - போவில்பற்று என்ற இடமொன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகே இடச்சு மொழியில் "Tamblewielle: een groot vondel met v: water"  என்று எழுதப்பட்ட வரிகள் காணப்படுகின்றன.  "தம்பிலுவில்: இங்குள்ள ஒரு பெரிய நீர்நிலை" என்பது இதன் பொருள். எனவே தம்பிலுவில் கல்வெட்டில் சிவனான சங்கரர்க் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் ஒரு நீர்நிலை என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு அல்லது கோவில் சார்ந்தோருக்கு, நீர்நிலைகளை, அல்லது அவற்றால் பாசனம் செய்யப்படும் வயல் வெளிகளைக் கல்வெட்டு பொறித்து தானம் கொடுப்பது, அந்தக்கால வழக்கம். 



Gravet van Bouwille, Dutch Map of Ceylon (1685 CE)

சங்கமன்கண்டி அருகே மனுநேய கயவாகு மன்னனால், முப்பத்திரண்டு மதகுகளுடன் இருபத்தாறு ஏரிகளை இணைத்து பெரும் ஏரி அமைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பொன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலிலும் காணப்படுகின்றது. இன்று குறித்த பகுதியில் உவர்நீரேரியாகக் காணப்படும் "தாண்டியடிக் களப்பே" இந்த "வோவில்" ஏரி ஆகலாம்.

கல்வெட்டில் மயில் பொறித்திருப்பதால், அதை முருகன் கோவிலுக்குரியதெனச் சொல்வது எத்தனை உசிதமானது என்பதை ஆராயவேண்டும். திருக்கோவில் முருகன் அப்போது மட்டக்களப்புத் தேசத்தின் பெருந்தெய்வம் என்பதால், அவனால் காக்கப்படுவதைக் குறிக்கவும் மயில் பொறிக்கப்பட்டிருக்கலாம். மயிலை கோட்டை அரசின் அல்லது அப்போதைய மட்டக்களப்புச் சிற்றரசின் குலச்சின்னம் என்று கருதவும் இடமுண்டு.

ஒருவேளை கல்வெட்டுச் சொல்லும் "சிவனான சங்கரர் கோவில்" என்பது இன்றைய தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் அமைவிடத்தில் இருந்து பின் அழிந்தும் போயிருக்கலாம். பேராசிரியர்கள். கா.இந்திரபாலாவும் சி.பத்மநாதனும் இந்தச் சந்தேகத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊகத்துக்கு எதிரான இன்னொரு சான்றும் கிடைக்கிறது. திருக்கோவில் ஆலயத்தில் இன்று பேணப்படும் நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று சதுரப்பலகை வடிவில் கிடைக்கும் திருக்கோவில் கல்வெட்டு. "திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில்" என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடுகின்ற மிகப்பழைய ஆவணம் அது தான். 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞான சங்கரிகள் ஸ்ரீ விசயவாகு தேவர்க்கு யாண்டு ௰வதில் தை மாசத்தில் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் குணர் மேற்கு..." என்ற வரிகளின் பின் அது சிதைந்திருக்கிறது. வரிவடிவம், கல்வெட்டு வாசகம், பொறித்த மன்னன் முதலிய பல விடயங்களிலும் தம்பிலுவில் கல்வெட்டை ஒத்த  இக்கல்வெட்டில் வருகின்ற "சிவஞான சங்கரிகள்" என்பதை தம்பிலுவில் கல்வெட்டில் வரும் "சிவனான சங்கரரோடு" ஒப்பிடலாம்.

பேராசிரியர் பத்மநாதன் இதற்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்கிறார். சிவஞான சாகரி என்பது விஜயபாகு தேவரின் பட்டம் என்றும் கல்வெட்டைப் பொறித்தவர் சிவஞானசாகரி என்பதை, சிவஞான சங்கரி என்று தவறாகப் பொறித்துவிட்டார் என்றும் அவர் சொல்கிறார். தன் வாதத்துக்குத் துணையாக அவர் சொல்வது, ஆறாம் பராக்கிரமபாகுவின் முன்னேஸ்வரச் சாசனமொன்று அம்மன்னனை "சைவஞான மகோததி" என்று அழைப்பதாகும். மகோததி, சாகரம் இரண்டுமே பெருங்கடலைக் குறிக்கும். சிங்கள மன்னர்கள் பௌத்தம் சார்ந்த தானங்களில் "சங்கபோதி" என்றும், சைவம் சார்ந்த கொடைகளில் இப்படி "சிவஞானப்பெருங்கடல்" என்றும் தம்மைக் குறிப்பிட்டிருந்தால், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்கிறார் அவர்.

ஆனால் தம்பிலுவில் கல்வெட்டை வாசித்த யாருமே இரு கல்வெட்டுக்களிலுமுள்ள இந்த இரு ஒத்த சொற்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. 'சங்கரி' என்று முடிகின்ற ஆண்பால் பெயர்களைக் கொண்டிருந்த மட்டக்களப்பு வன்னியச் சிற்றரசர்கள் பற்றி ஐரோப்பியர் குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இக்கல்வெட்டு, அது பொறிக்கப்பட்ட காலத்தில் ஆண்ட கோட்டைப் பேரரசன் விஜயபாகுவையும், அவனுக்குக் கீழ் இருந்த உள்ளூர்ச் சிற்றரசன் சிவஞான சங்கரியையும் குறிப்பிடலாம் என்பது ஒரு ஊகம்.

அல்லது தம்பிலுவில் கல்வெட்டிலுள்ள சிவனான சங்கரர் என்பதையும் சிவஞான சங்கரி என்றே வாசித்து, அது ஒரே மன்னனின் பட்டமே என்று அமைதி காணலாம். இவ்வாறு வாசிப்பதே சரி என்றால், இக்கல்வெட்டும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரியது தான் என்று உறுதிப்படுத்த முடியும்.


சரி, இந்தக் கல்வெட்டில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? வெறுமனே ஒரு நீர்நிலையை தானம் செய்வதைச் சொல்லும் ஒரு கல்வெட்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் தான் என்ன?

அவசியம் இருக்கிறது. இந்தக் கல்வெட்டின் முதலாவது முக்கியத்துவம் ஒரு சைவக்கோவிலுக்கு இந்தக் கொடையைத் தமிழில் பொறித்த மன்னன்  விஜயபாகு எனும் சிங்கள அரசன் என்பது. இரண்டாவது முக்கியத்துவம், கோட்டை அரசனின் கை, கிழக்குக்கரையின் எல்லை வரை ஓங்கியிருந்தது என்பது. 

போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிந்தைய ஆவணங்களின் படி, கீழைக்கரையின் மட்டக்களப்பு வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் கீழ் திறைசெலுத்தி வரும் சிற்றரசுகளாகவே இருந்து வந்தன. அதற்கு முன் அவை என்னவாக இருந்தன என்ற விபரம் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த வரலாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மட்டும் நம்புவது நம்மைத் தவறாக வழிநடத்திவிடும்.

பொலனறுவை அரசு காலத்தில் கிழக்கு உரோகணமாக இருந்த மட்டக்களப்பு நாடு, முதலாம் விஜயபாகுவிலிருந்து  ( 1072 –1110)  மகா பராக்கிரமபாகு  (1123–1186) வரையான மன்னர்களின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தது என்பது, மகாவம்சத்திலிருந்து தெரிகிறது. பின்பு தெற்கே நகர்ந்த தம்பதெனியா, கம்பளை சிங்கள அரசுகளின் காலங்களில்  இங்கு யார் ஆண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. நம் ஊகம் சரி என்றால், சோழராட்சியின் எச்சங்களான வன்னியர்கள் அப்போது சுதந்திரச் சிற்றரசர்களாக இங்கு இருந்து வந்தார்கள் என்று கொள்ளலாம்.

ஆனால் 1546இல் "மட்டக்களப்பு" என்ற தனி அரசை வரலாற்றுலகுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்யும் போர்த்துக்கேயப் பாதிரியார் சைமாவோ கோயம்பரா, கோட்டை அரசனிடமிருந்து தமது அரசை விடுவிக்கும் படி மட்டக்களப்பு மன்னன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததை எழுதியிருக்கிறார். அப்போது கண்டி அரசு முற்றாக வலுப்பெற்று எழவில்லை என்பதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கவேண்டும். கோயம்பரா சொல்வதை உறுதிப்படுத்த நமக்குக் கிடைக்கும் இன்னொரு சான்று தான் தம்பிலுவில் கல்வெட்டு.

கோட்டை அரசானது, விஜயபாகுவின் மாயாதனு (சிங்களத்தில் மாயாதுன்னை) முதலிய மூன்று மைந்தர்களால், சீதாவாக்கை, இறைகமம், கோட்டை என்று மூன்றாகத் துண்டாடப்படுவதற்கு முன்பு, அதன் கிழக்கு எல்லை, வங்காள விரிகுடா வரை நீண்டிருந்ததையே தம்பிலுவில் கல்வெட்டுச் சொல்கின்றது. இக்கல்வெட்டைப் பொறித்து குறைந்தது ஐந்தாண்டுகளுக்குள் விஜயபாகு மன்னன் கொலை செய்யப்படுகிறான். அப்போதைய கோட்டை அரசின் கிழக்கு அந்தத்தில் அவன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது, அரசியல் குழப்பங்கள் நிறைந்த அந்தக் காலத்தில், போர்த்துக்கேயருக்கோ தன் மக்களுக்கோ ஏதோ செய்தியைச் சொல்லத் தான் என்று தோன்றுகிறது. அதை இன்றுள்ள தலைமுறையினருக்கும் சொல்ல முயன்றுகொண்டிருக்கும் இந்த முப்பத்தெட்டு வரிகளைக் கொண்டாடுவதில் என்ன பிழை?


ஆறாம் விஜயபாகு எப்போது சரியாக ஆட்சிபீடமேறினான் என்பது தெரியவில்லை. குறிப்புக்கள் 1507, 1509, 1513 ஆகிய மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. அவன் குறைந்தது 10 ஆண்டுகள் அரசு புரிந்திருக்கின்றான் என்பதாலும், 1521இல் தன் சொந்த மக்களால் கொலையுறுகிறான் என்பதாலும், 1513ஆமாண்டு பொருத்தமாக வரமுடியாது. ஏனைய இரண்டில் எது சரியாயினும் தம்பிலுவில் கல்வெட்டுக்கு இன்று வயது 500 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது. அதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் 1509 தான் ஆறாம் விஜயபாகுவின் சரியான பட்டாபிஷேக ஆண்டு என்றால், இன்று தான் அந்த நாள்.  அப்படியே ஓடிப்போய் 2020 பெப்ரவரி மூன்றாம் திகதி பஞ்சாங்க நாட்காட்டியின் தமிழ்த் தேதியைப் பாருங்கள். தை மாதம் 20ஆம் திகதி! விசயவாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20ஆம் திகதி. சரியாக 501 ஆண்டுகள்! ♥ 


காற்றுப் புகாத ஒரு அறையில், கொங்கிரீட்டைக் கொட்டி அதில் இனிமேல் என்றுமே வாசிக்கமுடியாதபடி நட்டு வைத்துப் பாதுகாக்கிறோம் ஒரு பெருஞ்சொத்தை! அறம் மட்டுமல்ல, அறச்செயலைப் பொறித்த சாசனமும் புனிதமானதே. "இந்த தர்மத்துக்கு அஹிதம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையக் கடவராகவும்" என்று இந்தக் கல்வெட்டு சபிப்பது யாரை? வீண்பெருமை மாத்திரமே பேசிக்கொண்டு, ஆனால் பெருமைக்குக் காரணமான பொக்கிஷங்களைக் கேட்பாரற்று  குப்பையாகப் போட்டு வைக்கும் நம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே அல்லவா?

1 comments:

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner