மரபு : எஞ்சியிருப்பதைத் தக்க வைத்தல்.
நிறையத்தடவை எழுதி அழித்துவிட்டுப் பதிவு செய்கிறேன். இதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இதை வாசிக்கும் பெரும்பாலானோரை இந்தப்பதிவு மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை என்பதை அறிவேன். அப்படி இருந்தும் எழுதுவதற்கான காரணம் மூன்று. முதலாவது, இந்தச் சம்பவம் ஒரே ஒரு ஊரில் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இரண்டாவது, முழு தமிழ்க் கூட்டு மனமுமே இதை சரியென அங்கீகரிக்கின்றது. இதில் தவறேதும் இருப்பதாக அது எண்ணவில்லை. அந்த அபத்தத்தை யாராவது சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். மூன்றாவது நடந்தது நடந்தது தான். எதிர்காலத்திலாவது கொஞ்சம் இருப்பவற்றை காத்துக்கொள்ள மாட்டோமா என்ற நப்பாசை. சரி. என்ன தான் பிரச்சினை? தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு இடம்பெற்று இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம், அதனால் என்ன? கோவில்களில் திருப்பணிகள் இடம்பெறும்போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாவது, கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பில் பழைமை மாறுமளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை. இரண்டாவது, கோவிலின் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...