தைப்பூச விழாக் கண்ட சங்கமன்கண்டி மலைக்குமரன்!

0 comments



கதிர்காமப் பாதயாத்திரையில் தென்கிழக்கிலங்கையின் காட்டுவழி நோக்கி நகர்பவர்கள் திருக்கோவிலை அடுத்துச் சென்றுசேரும் பதி சங்கமன்கண்டி. மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவில் திருக்கோவிலுக்குத் தெற்கே சரியாக 13 கிமீ தொலைவில் அத்திருத்தலம் அமைந்துள்ளது. மரபாக அதை "திருக்கோவிலிருந்து ஒருகாமூச்சு" என்பார்கள். கதிர்காமப் பாதயாத்திரையின் போது பொருட்களை காவுதடியில் (கா) சுமந்து செல்வோர் நடைக் களைப்புத் தீர தங்கியிருந்து மூச்செடுக்கும் - ஓய்வெடுக்கும் தூரம் தான் ஒருகாமூச்சு.

சங்கமன்கண்டி என்பது இங்குள்ள சிறுகுன்றின் பெயர். சிங்களத்தில் கந்த என்பது மலை. சங்கமன்கந்த என்றால் சங்கமனின் மலை என்று பொருள். ஆனால் தமிழில் கண்டி என்பது மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய பாதை, நுழைவாயில், மேடான இடம் என்றெல்லாம் பொருள் கொண்ட சொல். அதனாலேயே மலைநாட்டில் ஒடுங்கிய பாதையோரம் உருவாகி எழுந்த நகரொன்றும் அப்பெயரைப் பெற்றது. பொலிகண்டி, கோவிலாக்கண்டி என்று இடங்களெல்லாம் வட இலங்கையிலும் உள்ளன. எனவே சங்கமன்கண்டி என்பது சங்கமனின் நகரம் என்று பொருள். யார் அந்த சங்கமன் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பண்டையகால நாக மன்னனென்றும், மட்டக்களப்பின் சிற்றரசனொருவன் என்றும் பலர் சொல்லுவர். தொன்றுதொட்டு அப்பெயர் இப்பகுதி மக்களால் சங்குமண்கண்டி,சங்குமக்கண்டி, சங்கமான்கண்டி என்றெல்லாம் பல்வேறு விதமாக அழைக்கப்பட்டு வந்துள்ளது.


நாமெல்லோருமே பாடசாலைக் காலத்தில் இலங்கையின் நீளம், அகலம் சொல்லும் போது, வடக்கு தெற்காக பருத்தித்துறை முனை, தெய்வேந்திரமுனை என்றும், கிழக்கு மேற்காக சங்கமன்கண்டிமுனை, கொழும்பு முனை என்றும் அளந்திருப்போம். ஆக, இலங்கையின் அதிகிழக்கில் இருக்கும் புள்ளி இம்மலை. எனவே கடல் வழி ஆக்கிரமிப்பு, படையெடுப்புகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய புவியியல் முக்கியத்துவமும் இம்மலைக்கு இருந்தது. இன்றும் இம்மலையுச்சியில் நின்றால் நெடுந்தொலைவு கடலைக் கண்காணிக்க முடியும்.


சோழர்கள் சங்கமன்கண்டி மலைக்கு வடக்கே இருந்த சாகாமம் வரை இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள் என்கின்றது மகாவம்சம். ஒல்லாந்தர் காலத்தில் பழைய மட்டக்களப்புப் பகுதி "ஏறாவூர் தொடக்கம் சங்கமன்கண்டி வரை" என்றே எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் சங்கமன்கண்டியோடு மட்டக்களப்பின் தென்பகுதியான அக்கரைப்பற்று முடிவடைந்து பாணமைப்பற்று தொடங்குகிறது. பாணமைப்பற்று கண்டி அரசோடு நேரடித் தொடர்பு கொண்ட பகுதி. பாணமையில் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சமரபாகு என்பவன், போர்த்துக்கேயரின் உதவி பெற்று கண்டி அரசன் செனரத்தை (1604 - 1635) ஆட்சி கவிழ்த்து கண்டி அரியணையில் ஏறுவதற்காக சதித்திட்டம் தீட்டும் அளவு பலம் கொண்டிருந்தான் என்றால் பார்க்கலாம்.

                                                    அருணகிரியார்

இப்படி பாணமை ஆரம்பத்தில் மட்டக்களப்புத் தமிழரசின் கீழ் நேரடியாக இருந்ததில்லை என்பதால் சங்கமன்கண்டியே அதன் தென்னெல்லையாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலயத்துக்குரிய எருமைமாட்டுத் தொழுவம் ஒன்று இம்மலையில் அமைந்திருந்தது. விந்தையாக, கண்டி என்பது தொல்காப்பிய காலத்திலிருந்தே எருமைக்கடாவைக் குறிக்கும் சொல் . சோழர் காலத்திற்குப் பின் காலிங்க மாகோன் காலத்தில் வீரசைவ வழிபாட்டு மரபுக்குள் வந்துவிட்ட திருக்கோவில் ஆலயத்தில் "சங்கமர்" எனும் வீரசைவக் குருக்களே பூசனையாற்றி வந்திருக்கிறார்கள். என்றால் சங்கமரின்+ கண்டி பராமரிக்கப்பட்ட மலை தான் சங்கமன்கண்டி மலையா?


சிவபூமியாகிய இலங்கையில் வடக்கே கரம்பகம், மேற்கே முனீச்சரம் என்று எல்லை வகுக்கப்படும் திருக்கோணேச்சரப் பெருமானின் தனிப்பெரும் ஆட்சிக்குத் தென்னெல்லையாக சங்கமன்கண்டியைக் கருதும் ஒரு மரபும் நீடித்து வருகிறது. இங்கு பண்டு ஒரு சிவாலயம் அமைந்திருந்ததாகவும் ஒரு ஐதிகக் கதை விளங்குகின்றது. மகாசேனன் கிழக்கிலங்கையில் இடிப்பித்து விகாரங்களாக மாற்றிய சிவாலயங்களில் ஒன்றான ஏரகாவில் இங்கு தான் இருந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளபோதும் அதை நிரூபிக்க சான்றுகள் போதுமாகக் கிடைக்கவில்லை. தொல்லியல் சான்றுகள் கிடையாத இன்னொரு ஐதிகக் கதை, சோழரிடமிருந்து இலங்கையை மீட்ட விசயவாகு மகாராசாவிற்கு திரிலோகசுந்தரி எனும் கலிங்க நங்கை பட்டத்தரசியாக இருந்தாளென்றும், சைவசமயம் சார்ந்திருந்த அவள் உரோகண நாட்டின் நடுவே அமைந்திருந்த சங்கமன்கண்டியில் அரண்மனை அமைத்துத் தங்கியிருந்து அங்கோர் சிவாலயம் இயற்றி வழிபட்டு வந்தாள் என்றும் சொல்லுகின்றது. சங்கமன்கண்டிக்கு மேற்கே ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட கட்டடச் சிதைவுகளும் தொல்லியல் இடிபாடுகளும் இன்றும் காணப்படுகின்றன.


சங்கமன்கண்டி மலைக்கு மேற்குப்புறம் அக்குன்றை விட உயரமான இன்னொரு மலை அமைந்துள்ளது. அதை மகாதுவட்டா மலை என்றும் துவட்டா எனும் முனிவரொருவர் அங்கு தங்கி தவமியற்றி வந்ததாகவும் அவர் வசித்த குகை இன்றும் அங்கு இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். அம்மலைச்சாரலில் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏராளமான துறவிகள் தங்கித் தவமிருந்து வந்திருக்கிறார்கள். அப்படி இங்கு இறுதியாகத் தங்கியிருந்த மயில்வாகன சாமியார் என்பவரின் சமாதி இன்றும் காட்டுப்பிள்ளையார் கோவிலருகே அமைந்துள்ளது. அம்மலையிலும், அம்மலையைத் தாண்டி மேற்கே பெரிய பரப்பில் காணப்படும் பழங்காலக் கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலும் அமானுஷ்யமான பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் சொல்லுகிறார்கள். அப்படிப் புகழ்பெற்ற ஒரு கதை இன்றும் இந்தக் கோவிலின் அருகே உள்ள ஊர்களில் வாய்மொழிக் கதையாக சொல்லப்பட்டு வருகின்றது.

  

அது ஒரு சித்திராபௌர்ணமி. இந்தப்பகுதியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த தம்பிலுவில்லைச் சேர்ந்த ஒருவர் தன் மாடொன்றைக் காணாமல் தேடிவந்தபோது அவருக்கு வழி தவறிவிட்டது. மெல்ல இருட்டிவர அவரைப் பயம் பிடித்துக்கொண்டது. அங்கும் இங்கும் வனவிலங்குகளின் ஓலம். தூரத்தே ஒரு இடிந்த மண்டபம் ஒன்று தென்பட்டதால், அங்கே ஓடிச்சென்று ஒதுங்கிக்கொண்டார். வீட்டில் தனக்காக உணவு சமைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளைகளின் முகம் கண்முன் எழுந்தது. "இங்கிருந்து எப்படி வெளியேறுவது, எப்படி ஊர் திரும்புவது, சிவசிவா வழிகாட்டு" கண்ணீர் வழிய இறைவனைப் பிரார்த்தித்தார். கண் திறந்தபோது காவியுடையும் தாழ்வடக்க மாலையும் அணிந்த ஒருவர் தன் முன் புன்னகையுடன் நிற்பதை அவர் கண்டார். "வழிதவறிவிட்டாயா, சரி. உனக்கு இரண்டு வாய்ப்புகள். திரும்பிப்பார்க்காமல் நேரே நடந்தாயென்றால் கொத்து முறித்துப் போட்டிருக்கும். அந்த வழியில் சென்றால் மலையடிவாரம் வரும். அங்கு நிற்கும் உன் ஊரவர்களோடு இணைந்துகொள்ளலாம். நாளை காலை வந்து மீண்டும் உன் மாட்டைத் தேடி பிடித்துச் செல்லலாம். அல்லது இங்கேயே இரவு தங்கியிருக்கலாம். காலையில் உனக்கு மாடு கிடைக்கும். என்ன செய்யப்போகிறாய்?"


கும்மிருட்டில் தனியே காட்டுக்குள் நடப்பதை நினைக்க அவருக்கு குலை நடுங்கியது. "தனியப்போக பயமாய் இரிக்கி. காலமே மாட்டோடயே போறன்"


"சரி. இங்கு இன்றிரவு தங்கிவிட்டுச் செல். ஆனால் ஒரு நிபந்தனை இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை!" 

அவர் ஒப்புக்கொண்டு தலையாட்டினார்.

முழுநிலவு எறிக்கத் தொடங்கியது. நல்ல அகிற்புகை வாசம் வீசியது. நேரம் ஆக ஆக, அந்த இடத்தில் மெல்ல மெல்ல வெளிச்சம் பரவுவதையும் தனக்கு வழிகாட்டியவர் போலவே ஏராளமான சாமியார்கள் அங்கு ஒன்றுகூடுவதையும் அவர் கண்டார். யாரோ வரிசையாக தாமரையிலைகளைப் பகிர, பந்தியில் அமர்ந்து உணவுண்ணுமாறு அவர் பணிக்கப்பட்டார். அருகிலிருந்த மடுவில் கை கழுவி நிலவொளியில் பரிமாறப்பட்ட உணவைக் குழைத்து வாயில் வைத்தார். அப்பப்பா! அப்படி ஒரு உருசியான உணவை அவர் உண்டதே இல்லை. இதென்ன இப்படி தேவாமுறுதம் போல தித்திக்கிறது! ஒருகணம் அவரில் சராசரிக் குடும்பஸ்தன் எழுந்தான். அடடே, வீட்டில் மனைவி பிள்ளைகள் இந்த அமுதை உண்டால் என்னென்னவெல்லாம் சொல்லி மகிழ்வார்கள். அரைக்கண்ணால் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு மெல்ல தன் வேட்டித்துணியில் அந்த சாப்பாட்டைக் கிள்ளி வைத்து முடிந்துகொண்டார். அருகில் இருந்தவர் ஏதோ எண்ணி சத்தமிட்டுச் சிரிக்க, திடுக்கிட்டுத் திரும்பி ஒன்றும் நடவாதது போல் இலையை வழித்து உண்டு கைகழுவினார்.


அந்தத் தண்ணீர் சாப்பாட்டின் உருசியை இன்னும் கூட்டியது போல் இருந்தது. கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. இரத்தநாளங்களில் ஏதோ சுற்றிச்சுற்றி போதை போல் ஏறி தலைக்குள் வெப்பமான நீர்க்குமிழிகள் வெடித்தன. பளிச்சென்று மின்னல் போல் ஏதோ வெட்ட, கண்ணை மூடித் திறந்தவர் திகைத்தார்.அவர் அமர்ந்திருந்தது ஒரு இடிந்த கட்டடம் அல்ல; அது ஆயிரங்கால் மண்டபம்! பொன்னும் மணியும் பூட்டி தகதகவென மின்னிக்கொண்டிருந்த தூண்கள், வண்ண மலர் மாலைகள், நட்சத்திரங்களென மின்னிக்கொண்டிருந்த பாவை விளக்குகள். தன்னிருபுறமும் அமர்ந்திருந்தவர்கள் அணிமணி ஆபரணங்கள் சூடிய தேவர்கள் என்பதை அவர் கண்டார். தானும் பட்டாடை சூடியிருப்பதை, தேவவடிவம் கொண்டிருப்பதை உணர்ந்தார். வானிலிருந்து அரம்பையர் வந்திறங்கினர். ஆடலும் பாடலும் தொடங்கியது. கிண்கிணி துந்துபி முழங்கியது. அவர் என்றும் முகர்ந்திராத சுகந்தத்துடன் மலர்கள் சொரிந்தன. சட்டென அரகர ஓசை எழ, ஆயிரங்கால் மண்டபத்தின் மறு அந்தத்தில் திரை விலகி, தீபாராதனையில் ஓங்கி உயர்ந்த சிவலிங்கம் ஒளிப்பிழம்பென மின்னித் தெரிந்தது. பறையும் தம்பட்டமும் உச்சகதியில் ஒலித்தன. அவர் விக்கித்துப் போனார். அந்த நிகழ்வின் இன்பம் தாங்கமாட்டாமல் மேனிசிலிர்த்து சிவசிவா என்று கண்ணீர் விட்டுக் கதறினார். கைகூப்பித் தொழுது அரற்றினார். தேவகணங்களுடன் இணைந்து ஆடிப்பாடியபடியே மெய் சோர்ந்து மெல்லச் சரிந்தார். கண்கள் சொக்கி மூடின.  


முகத்தில் சூரிய ஒளி சுட்டு அவர் தலைவலியுடன் எழுந்தபோது, அவருக்கு அருகே அவரது காணாமல் போன மாடு "அம்மா" என்று முக்காரமிட்டு கழுத்து மணி அசைய தலையாட்டிக்கொண்டிருந்தது. திடுக்கிட்டு எழுந்து அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். நன்கு விடிந்திருந்தது.அவர் அதே உடைந்த மண்டபத்தின் தூணொன்றில் சாய்ந்திருந்தார். முதனால் அணிந்திருந்த கல்லும் முள்ளும் கிழித்த அதே வேட்டி. சுற்றிவர அதே காடு, அதே இருள். அவர் இரவு அனுபவித்த விடயங்கள் நடந்ததற்கான தடயங்கள் எதையுமே காணோம். ஆனால் அவருக்கு முன்புறமாக யாரோ கொத்து முறித்துப் போட்டிருந்தார்கள். தான் கனவேதும் கண்டேனா? ஆனால் யார் இந்த மாட்டைக் கொணர்ந்து விட்டார்கள்? அந்த சாமியார் சொன்னமாதிரி எனக்கு வழி காட்டுவதற்காக காட்டுமரக் கிளைகளை வேறு கொத்துமுறித்துப் போட்டிருக்கிறதே!  


சட்டென ஏதோ நினைவுவர, தன் இடுப்பைத் தடவிப் பார்த்தார். அடிவயிறு சில்லிட்டது. அங்கு அவர் முதனாள் இரவு முடிந்துவைத்த அமுது முடிச்சு இருந்தது! என்றால்.... என்றால்.... அது உண்மை, அத்தனையும் உண்மை, அவர் இரவு அங்கு வந்தது, சாமியார் தன்னை அமரச்சொன்னது, இன்னும் பல சாமியார்கள் வந்தது, எல்லோரும் சுவையான அமுதுண்டது... இதோ உண்மைக்குச் சாட்சியும் இருக்கிறது... ஆனால்... அமுதுண்ட பின்னர் கண்ட அந்த மயிர்கூச்செறியும் காட்சிகள்.... தேவர்கள், அரம்பையர், முனிவர்கள், வாத்தியங்கள், நடனங்கள், அதெல்லாம் உண்மை இல்லையா? ஆகா, என்னையாளும் அப்பனை அத்தனை உயரத்தில் பேருருவச் சிவலிங்கமாகத் தரிசித்தேனே.. அது உண்மை இல்லையா? ஐயோ தலைவலிக்கிறதே!


அவருக்கு அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அச்சமாக இருந்தது. வேகமாக மாட்டை இழுத்துக்கொண்டு "கொத்து முறித்துப்" போடப்பட்டிருந்த வழியில் வேகமாக ஓடினார். சீக்கிரமே சங்கமன்கண்டி மலையடிவாரத்தை வந்தடைந்தார். வேகவேகமாக மாட்டை காளையடியில் கட்டிவிட்டு வீட்டுக்கு சிட்டாகப் பறந்தார்.

பாம்பன் சுவாமிகள்

இரவெல்லாம் அழுதழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். நன்கு விடிந்திருந்ததால் உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதாள். அடுத்த கணமே தோளில் அறைந்து திட்டினாள் "ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...." ஒருகணம் நடந்ததெல்லாம் பெருமிதத்துடன் சொல்ல வாயைத் திறந்தவர் அடுத்தகணமே அந்த முனிவரின் எச்சரிக்கை நினைவில் வர மெல்ல வார்த்தைகளை விழுங்கினார்.

"ஆனால் ஒரு நிபந்தனை இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது"


"அது ஒண்டுமில்ல... மாடு காணாத்துப் பொயித்து. தேடிக் காட்டுக்க போனநான் வழிமாறித்தனே..."


"ஆ.. செரி செரி... நானும் வேறங்கயும் பொய்த்தயோண்டு நினைச்சன்"


மனைவியையும் பிள்ளைகளைம் ஆறுதல்படுத்தி குளிக்கப் போனவருக்கு வேட்டியில் முடிந்திருந்த அமுது ஞாபகம் வந்தது. மனைவிக்குக் கொடுப்பதா, பேசாமல் எறிந்துவிடுவதா... சே சே எறிவதற்கா இவ்வளவு தூரம் மினக்கெட்டு எடுத்துவந்தோம். சரி தான்... நடந்த ஒன்றையும் சொல்லக்கூடாது என்று தானே சாமியார் சொன்னார், சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லையே!


"இஞ்சே கேட்டயோ..."

"ஆ.. என்ன"

"இஞ்சொள்ளம் வாவன், இத சும்ம சாப்புட்டுப் பாரு, புள்ளேலுக்கும் கிள்ளிக்குடு"

"இதென்னது... எங்கால இது உனக்கு.."

"அதென்னத்துக்கு உனக்கு, சும்ம சாப்புட்டுப் பாரன்"


தூக்கிய புருவங்களுடன் மனைவி அந்த அமுதை வாங்கி கேள்விக்குறி மறையாத முகத்துடன் சற்று வாங்கி வாயிலிட்டு உமிழ்ந்தாள்


"ஆய்..இதென்ன உவளவு ருசியாரிக்கி.. புள்ளே இஞ்ச வா"


அமுதை உண்ட குழந்தைகள் வியப்புடன் அம்மாவைப் பார்த்தன. அப்படி ஒரு சுவையான உணவை அம்மா அதற்கு முன்பு செய்ததே இல்லையே


"சரி, அங்கிட்டுப் போய் விளாடுங்கோ"... பிள்ளைகளை வேகமாக அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு விடுவிடுவென்று கிணற்றடியில் குளிக்கத் தயாராகிக்கொண்டிருந்த கணவனை நெருங்கினாள்.


"இஞ்செண்டுறன்... அம்மாளறிய உண்மையச் சொல்லு.. இது உனக்கு ஆரு செஞ்சி தந்த.... ராவு நீ எவள் வீட்ட கிடந்து வந்த நீ" சொல்லும் போதே அவளது நாக்குளறியது.. "கண் மூடுற வரைக்கும் நீ எனக்குத் துரோகம் செய்யமாட்டாயெண்டு தான் சீவிச்சித்திருக்கன் நான்.. என்ன ஏமாத்திராதை.." அவள் விம்மியழத் தொடங்கினாள்.


"ஏ.. ஏ.... பைத்தியமா உனக்கு.. என்ன பேய்க்கத கதைக்கிராய் நீ உப்ப"


"நீ அம்மாளறிய சொல்லு நீ ஆரு வீட்ட நிண்டண்டு மட்டும் சொல்லு நேத்து ராவு.."

மனைவியின் அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் கெஞ்சினார், ஒரு கட்டத்தில் "தயவுசெஅது சொல்லக்கூடாத இரகசியம் என்று சத்தியம் செய்திருக்கிறேன்" என்றும் சொல்லிவிட்டார். அதன்பிறகு அவள் ஓவென விம்மியழத் தொடங்கினாள். அப்போது தான் அவர் காணாமல் போனதைப் பார்க்க வந்து கலைந்திருந்த அடுத்த வீட்டு எல்லைமானம் மீண்டும் குழுமத் தொடங்கியது. மனைவி உறுதி செய்தே விட்டாள். கணவன் யாரோ சககிழத்தி வைத்திருக்கிறார், அவள் செய்து கொடுத்த சாப்பாடு தான் அது, தங்கள் உறவு ஊருக்குத் தெரிந்துவிடும் என்பதால் சத்தியம் வாங்கியிருக்கிறாள். குய்யோ முறையோ என்று மாரிலும் வயிற்றிலும் அடித்து அவள் அரற்ற பக்கத்துவீட்டுப் பெண்கள் அவளருகே அமர்ந்து கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள்.


அவர் ஒரு முடிவுக்கு வந்தார். "மரியாதயா எல்லாரும் வெட்டக்கிறங்குங்கோ... எண்ட மனிசிர பிரச்சினைய நானே பாக்குறன்"

அவரது குரலிலிருந்த தீர்க்கத்தைக் கண்டதும் பெண்கள் ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே நடந்தார்கள். விடுப்புப் பார்க்கும் கிழவிகள் மட்டும் கிடுகு வேலிகளுக்கு அப்பால் மணலைக் காலால் ஒதுக்கி, காதைத் தீட்டிக்கொண்டு தரையில் குந்தினார்கள்.


அவர் நடந்த முழுக்கதையையும் ஒரு வரி விடாமல் விளக்கினார். குடும்பப் பாசத்தால் ஒரு பிடி அமுதை முடிச்சிட்டுக் கொண்டு வந்ததையும் அது இன்று இவ்வளவு பிரச்சினைக்கு ஆளாக்கியதையும் அவரது மனைவியும் பிள்ளைகளும் நம்பியும் நம்பாமல் பேந்தப் பேந்த விழித்தார்கள். கடைசியாக அவர் சற்று சத்தமாகச் சொன்னதை அக்கம்பக்கம் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கிழவிகள் நன்றாகவே கேட்டார்கள்.


"எண்ட தலையறியச் சொல்லுறன், இந்த ஒருவாய் அமுது நேத்து ராவு அந்த சாமியாராக்களோட சாப்புட்டது... சத்தியமா வேறொருதரும் தரல" ஏதோ சன்னதம் வந்ததுபோல் கிணற்றுக்கட்டில் இருந்த முடிச்சில் கடைசிப் பிடி அமுதை அள்ளித் தன் வாயிலிட்டார். அதை அவர் வாயிலிட்டு மெல்லும் சத்தம் மட்டும் கொஞ்சநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. மனைவி தரையில் அமர்ந்து அவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்றும் அப்போது வீசாமல் நின்றது போலிருந்தது. கிடுகுவேலிக்கு அந்தப்பக்கம் ஒட்டுக்கேட்ட ஒரு கிழவி பெருமூச்சு விட்டு காய்ந்த இலை ஒன்றை எடுத்து தரையில் படம் வரைந்தாள்.


மனைவி எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிச்சிட்டுக் கொண்டையிட்டாள்.

"சரி, இத ஏன் அந்த சாமியார் ஊட்ட போய் ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினாரு... நான் எப்புடி நம்புற இத"

அவர் அவளை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னார்..

"பே... பே.."

"என்ன?"


"பே... பே...."


"என்ன பெப்பே எண்டுறாய்... இத நான் எப்பிடி நம்புற எண்டு சொல்லு..."


"பே... பே...." அவர் கண்ணீர் வழிய தொண்டையைக் காட்டி கைகளை விரித்தார். மனைவிக்கு அப்போது தான் புரிந்தது..

"ஐயோ சங்கமக்கண்டியானே... எண்ட மனுசண்ட நாக்கிளுத்துத்தே... "


சங்கமன்கண்டிக் காட்டில் சாமியாருக்குக் கொடுத்த வாக்கை மீறி மனைவியிடம் நடந்ததைச் சொன்ன அவருக்கு வாய் பேசமுடியாமற் போன கதை ஊர் முழுக்கப் பரவியது. ஒன்றிரண்டு பேராசைக்காரர்கள் தங்கத்தாலான ஆயிரங்கால் மண்டபத்தைத் தேடி காட்டில் அலைந்து வெறும் கையோடு திரும்பிவந்தார்கள் ஊர்ச் சண்டியர்கள் சிலர் அவர் சொன்னது பொய்யென்று நிரூபிக்கிறோம் என்று அந்தக் காட்டுக்குப் போய் ஓரிரவு தங்கித் திரும்பி வந்தார்கள். அதெல்லாம் பொய், அவர்கள் காட்டில் தங்கவில்லை. துவட்டா மலை எல்லையில் யானையும் சிறுத்தைப் புலியும் துரத்தியடித்து பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததாக அவர்களது நண்பர்கள் கேலி செய்தார்கள். அங்கு முனிவர்கள் வசிப்பது உண்மை என்றும், அது தெய்விக பூமியா என்பதையெல்லாம் சோதித்துப் பார்க்காதீர்கள் என்றும் நம்பிக்கையுள்ள சிலர் சொன்னார்கள். எது எப்படியோ சங்கமக்கண்டி மலை ஆயிரங்கால் மண்டபத்தின் மகிமைக்குச் சாட்சியாக அவர் இறுதிவரை வாய்பேசாதவராகவே வாழ்ந்து மடிந்ததாக அவர் காலத்தவர்கள் கதை கதையாகச் சொல்லுவார்கள்.


இத்தகு பெருமை வாய்ந்த சங்கமன்கண்டி மலையடிவாரத்தில் முன்பு வில்வமரத்தடியொன்றின் கீழ் அமைந்திருந்த மூன்று சிவலிங்க வடிவக் கற்கள் கதிர்காம நடைச்செலவு செய்யும் அடியவர்களால் சிவபெருமானும் அவரது திருக்குமாரர்களான பிள்ளையாரும் முருகனும் என தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வந்தன. இப்படி மூவர் வழிபடப்பட்டு வந்தபோதும், பின்னாளில் சங்கமன்கண்டிப் பிள்ளையாரையே அத்தலத்தில் அடியவர்கள் முதன்மையாக வழிபட்டு வருவதற்குத் திருவருள் கைகூடியது. ஆனால், சங்கமன்கண்டி மலையில், திருக்கோவில் சித்திரவேலாயுதப் பெருமானின் மாட்டுப்பட்டி பராமரிக்கப்பட்டதாலோ என்னவோ, கதிர்காம யாத்திரிகர்கள், அம்மலையுச்சியை கதிர்காமக் கந்தனின் படைவீடுகளில் ஒன்றாகவே நீண்ட நாள் போற்றி வந்திருக்கிறார்கள். பொத்துவில் வீதியில் போக்குவரத்து வசதிகள் முன்னேறாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சங்கமன்கண்டி மலையிலிருந்து அடர்காடு ஆரம்பிப்பதாகவும், அருள்வேலனின் ஆடல்கள் கதிர்காம அடியவர்களுக்கு அங்கு தான் ஆரம்பிப்பதாகவும் கதை சொல்லுவார்கள். இன்றும் சங்கமன்கண்டி மலையில் வீற்றிருக்கும் முதன்மையான இறைவன் பிள்ளையாரல்ல; முருகப்பெருமானே என்ற நம்பிக்கையை அசராது கொண்ட ஆறுமுகன் அடியவர்கள் பலருண்டு. சரி தான், அப்பன் கோவில் கொண்ட தலத்தில் இன்று அவனது அருட்குமாரர்கள் இருவருமே ஆட்சி செய்கிறார்கள்!


மலையுச்சியில் குமார தெய்வத்துக்கென வேடர்களால் முன்பு வழிபடப்பட்டதாக நம்பப்பட்ட இடத்தில் "கல்லு வைக்கும்" வழிபாடும் பலன் தரலாயிற்று. "கல்லு வைத்தல்" என்பது தென்மட்டக்களப்புக்குச் சிறப்பான நேர்த்தி வழிபாடுகளில் ஒன்றாகும். குழந்தைப்பேறு, எடுத்த காரியத்தில் வெற்றி முதலிய பல்வேறு நம்பிக்கைகளுக்காக குறித்த இடமொன்றில் கல்லொன்றை எடுத்து வைத்து நேர்த்தி செய்து வழிபடுவதும், அந்நேர்த்தி நிறைவேறியதும் அங்கு மீண்டும் வந்து பொங்கலோ அவலோ படைத்து வணங்கி ஏற்றிய கல்லை "இறக்கி வைத்தல்" வழிபாடும் இடம்பெறும். கல்லு வைத்தல் வழிபாடு இன்றும் சங்கமன்கண்டியிலும் உகந்தமலையிலும் இடம்பெற்று வருகின்றது. (கல்லு வைத்தல் வழிபாடு இடம்பெறும் இடங்களிலெல்லாம் பெருங்கற்காலச் சின்னங்களின் சிதைவுகளை இக்கட்டுரையாளன் அவதானித்துள்ளான். அது உண்மையென்னில் இவ்வழிபாட்டுக்கு மூவாயிரமாண்டுத் தொடர்ச்சியுள்ளது என நம்பலாம்). 


கதிர்காம அடியவர்களும் இப்பகுதியில் வேளாண்மை செய்து வந்த அக்கரைப்பற்று, தம்பிலுவில், திருக்கோவில் மக்களும், அவ்வப்போது இங்கு வந்து சங்கமன்கண்டியானுக்கு நேர்த்திக்கடன் வைத்துச் செல்லலாயினர். வேளாண்மைச் செழிப்பு, குழந்தைப்பேறு என்று சங்கமன்கண்டியானும் கைமேல் பலன் தர, அவ்வப்போது நேர்த்திபொங்கலைச் சந்திக்கும் தலமாக சங்கமன்கண்டி வளர்ச்சி காணலாயிற்று. அக்கம்பக்கம் சங்கமக்கண்டியானின் அருள் திறம் பரவ அவனை வழிபட வரும் அடியார் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. மலையடிவாரத்தில் பிள்ளையாரும் மலையுச்சியில் முருகனும் இப்பகுதி மக்களின் அன்புக்குரிய தெய்வங்களாக அரனார் திருமகன்மார் அருளாட்சி புரியலாயினர்.


சங்கமன்கண்டி மலைக்கு அருகாக கடலோரம் விளங்கிய சல்லித்தீவு எனும் பகுதியில் தென்னந்தோட்டமொன்று அமைத்திருந்த தனவந்தரான மட்டக்களப்பு மார்க்கண்டு முதலியார் என்பவர், 1915ஆம் ஆண்டில் இம்முடிக்குரிய நிலத்தை ஆங்கில அரசிடமிருந்து விலைகொடுத்து வாங்கினார். உகந்தமலையிலும் சல்லித்தீவில் மங்கைமாரி அம்மனுக்கும் முதன்முதலில் கல்லால் கோவில் கட்டிய அப்பெருமகனார் சங்கமன்கண்டியிலும் பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்ட மனம் கொண்டிருந்தபோதும், இறைவன் திருவுளமென அவரால் இங்கு கோவிலமைக்க முடியாது போயிற்று. ஆனால் பின்னாளில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை ஓடாவியார் எனும் சைவத்திருமகனார், தன் விடாமுயற்சியாலும் அடியவர் ஒத்துழைப்பாலும் இங்கு ஒரு சிறிய கோவிலொன்றை 1950ஆம் ஆண்டு பிள்ளையாருக்கென அமைத்தார். கோவிலைச் சூழ கனிதரும் மரங்கள், சோலைகள் அமைத்தும் கிணறு வெட்டியும் அன்னார் செய்த பணிகள் இன்றும் சங்கமன்கண்டி அடியவர்களால் பக்திப் பரவசத்துடன் நினைவுகூரப்படுகின்றன.


கோவிலைப் பராமரித்து வந்த வேலுப்பிள்ளையார் தன் அந்திமக்காலத்தில் கோவிலுக்கு ஒரு அறங்காவலர் சபையை உண்டாக்கி அதன்வசம் பொறுப்பை ஒப்படைத்தார். 1960இல் கல்லால் கட்டப்பட்டு முதல் குடமுழுக்குக் கண்ட அக்கோவில் 1979.10.19 அன்று அலங்கிருதமான அர்த்தமண்டபம், மகாமண்டபத்துடனும் அழகான பண்டிகை வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டு இரண்டாவது குடமுழுக்குக் கண்டது. 


கருங்கல் வேற்பெருமான்


கோவில் மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவிலிருந்து சற்று உட்புறமாக காட்டில் அமைந்துள்ளதால், பெருந்தெருவில் செல்லுவோரின் வசதி கருதி வீதியோரம் இன்னொரு சிறுகோவில் அமைக்கப்பட்டுள்ளது. தெருப்பிள்ளையார் என்றும் றோட்டுப்பிள்ளையார் என்றும் அடியவர்களால் அன்போடு அழைக்கப்படும் இப்பிள்ளையாருக்கு அருகே முருகப்பெருமானும் கோவில் கொண்டுள்ளான். றோட்டுப்பிள்ளையாரிடமிருந்து வேறுபிரித்தறிய பழைய சங்கமன்கண்டிக் கோவில் சிலவேளைகளில் காட்டுப்பிள்ளையார் என்று அழைக்கப்படுவதுமுண்டு. சித்திராபூரணை, ஆடிப்பூரணை, ஆகிய தினங்களில் பிள்ளையாரை அருகிலுள்ள வட்டவான் குளத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தமாடச் செய்வது இங்குள்ள விசேட மரபு.


2009ஆம் ஆண்டு சங்கமன்கண்டியானுக்கு திருப்பணிகள் இடம்பெற்று அடுத்த குடமுழுக்கு இடம்பெற்றதுடன், மலையுச்சியில் முருகன் கோவிலொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அக்கோவில் அமைக்கப்பட்டபோது தொல்லியல் பொருட்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தமையால் அக்கோவில் அமைப்பு தடைப்பட்டதெனினும், இன்று மலைக்குமரன் கோவில் மலையேறும் அடியார்களுக்கு நல்வரங்கள் அருளும் கோவிலாக அமைந்துவிளங்குகின்றது. மலைக்குமரன் கோவிலின் முன்புறத்தில் தான் தொன்றுதொட்டு கல்லு வைத்து வழிபடும் சிறிய புராதான கல்வட்டம் அமைந்து விளங்குகின்றது.


வேண்டியதெல்லாம் அருளும் சங்கமன்கண்டிப் பிள்ளையாரும் பிள்ளைப்பேறும் பீடும் வழங்கும் மலைக்குமரனும் அருவமாக அருளும் சங்கமேசுவரரும் வீற்றிருக்கும் தலம், சங்கமன்கண்டி. இம்முறை தைப்பூசமன்று (2026.01.31), இலங்கைச் சைவநெறிக் கழகம், சிறீலசிறீ ஆறுமுகநாவலர் சபை உட்பட பல்வேறு மட்டு - அம்பாறை சைவ அமைப்புகளின் அனுசரணையுடன் தைப்பூசப் பெருவிழா இடம்பெற்றதுடன், கருங்கல்லாலான அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வேலாயுதப்பெருமான் ஆகிய மூன்று திருவுருவங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கரங்களாலேயே திருமுழுக்காட்டி பூசனை செய்யக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈழவளநாட்டின் சைவ அடியவர்கள் சங்கமன்கண்டித் திருப்பதி சென்று இறைவன் திருவருள் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



(தென்னாடு இதழில் வெளியான கட்டுரை பாகம் 01, பாகம் 02 ) 

மேலும் வாசிக்க »

விபுலானந்த அடிகளார் வழியில் தமிழ்க் கலைச்சொல்லாக்கம்

0 comments

திறவுச் சொற்கள்:  இலக்குமொழி (Target Language), ஒலிபெயர்ப்பு (Transliteration), கலைச்சொல் (Technical Term), சொல் வாங்குதல் (Calque), ஞால மாமொழி (Lingua Franca),  தடந்தகை (Strategy), புதுச்சொல்லாக்கம் (Neologism), பொருளுறை மொழியாக்கம் (Semantic Translation),  மூலமொழி (Source Language).


1.0 அறிமுகம்

தமிழின் முதற்பேராசிரியர், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர், மறைந்த யாழ் இசைக்கருவியையும் நாடகத்தமிழையும் மீட்க முயன்றவர் முதலிய பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் விபுலானந்த அடிகளார். பிறமொழியில் அமைந்துள்ள அறிவுச்செல்வங்கள் ஒரு  மொழிக்கு மொழிமாற்றப்படுவது, அம்மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்திருந்த அடிகளார், தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாகவேண்டும் என்றும் விடாது வலியுறுத்திவந்தவர். கலைச்சொல்லாக்கத் துறை சார்ந்த அடிகளாரின் சிந்தனைகள் இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அடிகளார் கலைச்சொல்லாக்கம், மொழியாக்கம் தொடர்பில் கொண்டிருந்த கோட்பாடுகளை மதிப்பிட முயலும் இவ்வாய்வுக்கட்டுரை, சமகாலத்தைய கலைச்சொல்லாக்கத் தடந்தகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு ஆராய முனைகிறது. அதன் வழியே சமகாலத் தமிழ் கலைச்சொல்லாக்கத்திலும் மொழியாக்கத்திலும் காணப்படும் இடைவெளிகளை சீர்செய்வதற்கான சில விதந்துரைகளையும் பட்டியலிட விழைகிறது.


2.0 இன்றைய உலகில் கலைச்சொல்லாக்கம்

வெறுமனே பிற பண்பாடுகள் உருவாக்கிய அறிவுத்தொகையை அடைவதற்காக மாத்திரமன்றி, அரசியல் கருத்தியல்களுக்காகவும் பண்பாட்டுச் சுய அடையாளப்படுத்தலுக்காகவும், பூகோள நலன்களை வென்று அடைவதற்காகவும் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த ஆயுதமாக,  மொழிபெயர்ப்பு சமகாலத்தில் மாறியிருக்கிறது 1 . பிரித்தானியக் காலனிய ஆட்சியின் பின்னர் ஆங்கிலம், தன் “ஞால மாமொழி” (Lingua Franca) என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கும் போதும், சீனம், எசுப்பானியம் (Spanish) போன்ற தனி மொழிகளும் அரபுக்கூட்டமைப்பு (Arab League), பிரெஞ்சு பேசி நாடுகள் (Francophonie) முதலிய மொழிக்குழுக்களும் ஆங்கில ஆதிக்கத்தை தாக்குப்பிடிப்பதற்குப் பல்வேறு மொழிபெயர்ப்புத் தடந்தகைகளை (strategies) கடைப்பிடித்து வருகின்றன 2,3. உலகின் முதல் இருபது பெரிய மொழிக்குடும்பத்துள் ஒன்றாகவும் இன்றுள்ள பழம்பெரும் மொழிகளுள் ஒன்றாகவும் திகழும் தமிழ், மொழிபெயர்ப்புக்கெனவும் கலைச்சொல்லாக்கத்துக்கெனவும் தனக்குரித்தான பல தடந்தகைகளைப் பண்டுதொட்டு பயின்று வந்திருக்கிறது4


மொழிபெயர்ப்பின்போது உலகமொழிகள் பொதுவாக இரு பொறிமுறைகளைக் கையாள்கின்றன. முதலாவது பிறமொழிச் சொல்லை அவ்வாறே ஏற்பது, அடுத்தது தனது தனித்துவத்துக்கேற்ப அச்சொல்லை சிறிது உருமாற்றி ஏற்றுக்கொள்வது. ஆங்கிலத்தில் Foreignization, Domestication என்ற பெயர்களில் ஆராயப்படும் இப்பொறிமுறைகள்5  தற்சமம், தற்பவம்  என்ற பெயர்களில் ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருப்பவை தான். காட்டாக, தமிழில் “கமலம்” எனும் வடமொழிச்சொல் மாற்றமேதுமின்றி தமிழில் அவ்வாறே – தற்சமமாக - ஆளப்படுகிறது. ஆனால் “லக்ஷ்மி” எனும் வடமொழிச்சொல், தமிழில் கிரந்தம் நீக்கி “இலக்குமி” அல்லது "இலட்சுமி" என்று தற்பவமாக எழுதப்படுகிறது. 


2.1 கலைச்சொல்லாக்கத் தடந்தகைகள்

இந்த மொழிபெயர்ப்புப் பொறிமுறைகளின் அடிப்படையில் தமிழ் மொழியும் ஏனைய உலக மொழிகளும் கலைச்சொல்லாக்கத்தை மேற்கொள்வதற்கு நான்கு தடந்தகைகளைப் பயன்படுத்துகின்றன.  ஒலிபெயர்ப்பு (Transliteration), சொல் வாங்குதல் (Calque), பொருளுறை (Semantic), புதுச்சொல்லாக்கம் (Neologism) என்பன அவை6.


2.1.1 ஒலிபெயர்ப்பு

பிறமொழிச்சொல்லின் பொருளை நோக்காமல், மேலோட்டமாக அதன் ஒலிப்பை மட்டும் மொழிபெயர்ப்பது இம்முறை. செல்ஃபி, தேங்யூ, டின்னர் என்பதெல்லாம் ஒலிபெயர்ப்பு முறையில் தமிழர் பயன்படுத்தும் மொழிபெயர்ப்புகள்.


2.1.2 சொல்வாங்குதல் 

மூலமொழியிலிருந்து சொல்லுக்குச் சொல் பொருள்கூட்டி இலக்குமொழியில் சொல்லொன்றை உருவாக்குதல் “சொல்வாங்குதல்” என்று அழைக்கப்படுகிறது. இன்று தமிழில் பெரிதும் பயன்படும் நீர் + வீழ்ச்சி எனும் சொல் இம்முறையில் தான் Water + Fall எனும் ஆங்கிலச்சொல்லிலிருந்து பிறந்தது. 


2.1.3 பொருளுறை மொழியாக்கம்

பொருளுறை மொழியாக்கம் என்பது மூலமொழிச்சொல்லை முற்றாக உள்வாங்கி,  இலக்குமொழியின் இலக்கணம் மாறாத வகையில் புதுச்சொல்லொன்றைப் படைப்பது. காட்டாக, Personality என்ற ஆங்கிலச்சொல்லின் பொருள் மாறாவண்ணம் தமிழில் “ஆளுமை” எனும் கலைச்சொல் உருவானதைச் சொல்லலாம்.


2.1.4 புதுச்சொல்லாக்கம்

மூலமொழிச்சொல்லுக்கான இலக்குமொழிச்சொல் முன்னொருபோதும் இல்லாதபோது புத்தம்புதிதான சொல்லொன்றைப் படைப்பது புதுச்சொல்லாக்கம். காட்டு, Internet எனும் ஆங்கிலச்சொல்லின் பொருளை உள்வாங்கி 2000களின் ஆரம்பத்தில் படைக்கப்பட்ட “இணையம்” எனும் சொல். இவ்வாறே மின்சாரம், பேருந்து முதலிய கலைச்சொற்கள் தமிழில் உருவாகியுள்ளன.



சற்று எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம். Computer என்ற சொல்லை ஒலிபெயர்த்தால் “கம்ப்யூட்டர்”. சொல் வாங்கினால் “Computing Machine” என்பதன் நேரடிப்பொருளில் “கணிப்பொறி”. பொருளுறை மொழியாக்கினால் “கணினி”. புதுச்சொல்லாக்கம் என்றால் இதை இன்னும் சுருக்கி “கணி”.  இன்றுவரை இந்நான்கு சொற்களும் கணினியைக் குறிக்கத் தமிழில் பயன்பட்டுள்ளதை நாம் கடந்த  முப்பதாண்டு தமிழ்க் கணினி வரலாற்றில் காணலாம்7.


3.0 கலைச்சொல்லாக்கத்தின் சவால்கள்

கலைச்சொல்லாக்கத்திற்கென இரு பொறிமுறைகள், அவற்றினூடாக நான்கு தடந்தகைகள் பயன்பாட்டிலுள்ள போதும், கலைச்சொல்லாக்கம் பல்வேறு சவால்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. காட்டாக, மொழிபெயர்ப்பு பெரிதும் மொழிவல்லுநர்களாலே செய்யப்படுகிறது. அவர்கள் மொழிவல்லுநர்களே தவிர, தொழினுட்ப வல்லுநர்கள் அல்லர் என்பதால், அவர்கள் படைக்கும் சொல், சிலநேரங்களில் முழுமையான அர்த்தத்தைச் சுட்டாமல் போய்விடுவதுண்டு8.


கலைச்சொல்லை உருவாக்குவோரும், அதைப் பயன்படுத்துவோரும்,  வேறுவேறு துறை சார்ந்தோராக இருப்பதால் இன்னொரு இடரும் விளைந்திருக்கிறது. மொழிவல்லுநர்களால் உருவாக்கப்படும் கலைச்சொல் செயற்கைத்தன்மையுடனும் நீளமானதாகவும் விரிந்த பொருளைக் கொண்டிராததாகவும் அமைந்துவிடுகிறது. (உதாரணம் – கையடக்கத் தொலைபேசி). அத்தகைய சொற்கள் சில நேரங்களில் பொதுப்புழக்கத்துக்கு வந்து நிலைபெற்று விடுகின்றபோதும் நடைமுறையில் பயன்பாட்டுச் சிக்கலையே தோற்றுவிக்கின்றன 


அப்படியே சரியான கலைச்சொல் உருவானாலும் அவை பொதுப்புழக்கத்தில் வருவதற்கு நேரமெடுப்பதும், பொதுமக்களால் புறக்கணிக்கப்படுவதும் மாபெரும் சவாலாகக் காணப்படுகின்றன. ஏனெனில், தங்களுக்குச் சொந்தமான இலக்குமொழி பற்றிய அக்கறையின்றி, ஆனால் மூலமொழிக்குச் சார்பான ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தவே பொதுமக்கள் விரும்புகின்றனர். தகவல் தொழிநுட்பம், சமூக வலைத்தளங்களின் பெருக்கம் என்பன காரணமாக மூலமொழிச் சொல்லை முன்கூட்டியே அறிந்துவிடும் மக்கள், அதை மீள இலக்குமொழியில் மாற்றி வழங்கினாலும், அந்த இலக்குமொழி அவர்களது தாய்மொழியாகவே இருக்கும்போதும், அச்சொல்லைக் கற்பதற்கு சோம்பல் படுகிறார்கள்9. வேலைப்பழு நிறைந்த அவசரமான சமகாலத்தில் புதிதாக ஒரு சொல்லை அறிவதும் கற்பதும் மேலதிக சுமை என்றும் நேரவீண் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்10,11.


உண்மையில், தாய்மொழியில் கலைச்சொற்கள் உருவாவதைத் தவிர்ப்பது, அம்மொழியின் கூர்ப்பையும்  பேணுகையையும் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்குவதுடன், அம்மொழி சார்ந்த அறிவியல் மற்றும் நுட்பவியல் துறைகள் மருவி மறையவும் வழிவகுக்கும். நாளடைவில் அம்மொழி பேசும் இனத்தின் பண்பாட்டு அடையாளம் மறைந்தொழிந்து போம்.  யுனெசுகோ சுட்டிக்காட்டுவது போல்12, உள்நாட்டு மொழிகளை புத்துயிர்ப்பூட்டலும், அறிவியல், தொழினுட்பம் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையின் அனைத்து அமிசங்களிலும் அவற்றை இணையச்செய்தலும் அம்மொழிகள் கொண்டுள்ள பண்பாட்டு அறிவுத்தொகையை கட்டிக்காக்கவும், அவை பிழைத்திருக்கவும் இன்றியமையாதனவாகும். 



4.0 கலைச்சொல்லாக்கமும் அடிகளாரும்

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் வரிகளை தன் கட்டுரைகளில் வழிமொழியும் அடிகள், “பிறநாட்டாரிடத்துள்ள அரிய பெரிய விஞ்ஞான நூல்களையும் பிறவற்றையும் மொழிபெயர்த்துத் தமிழுக்கு உரிமையாக்க வேண்டும். அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளத்தக்க இலகுவாகிய தமிழ்நடையில் உயிர்க்குறுதி படைக்கும் உயர்ந்த சாத்திரங்களை எழுதுவித்தல் வேண்டும்….. வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய நூல்கள் மிகப்பல இருக்கின்றன….”  என்று ஓரிடத்தில் சொல்கிறார்13. அவ்வாறு சொன்னது மாத்திரமன்றி, தானே  உலகமொழிகளில் கற்ற பல நூல்களை தமிழ்ப்படுத்தி எழுத முயன்றார். 


விஞ்ஞானதீபம் எனும் கட்டுரை, அவர் தமிழில் அறிவியலை எழுத முயன்ற முயற்சியாகும்14.  விஞ்ஞானக் கலைச்சொற்களை தமிழில் மொழியாக்குவதற்கான அடிப்படைகளை ஆராய்ந்து “மொழிபெயர்ப்பு முறை” என்ற கட்டுரையொன்றையும் வரைந்தார்15. சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1936.09.26 அன்று சென்னை மாகாணத் தமிழர் மகாசங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாட்டிற்கு அடிகளார் தலைமை தாங்கியதுடன், கலைச்சொல்லாக்கம் பற்றிய உரையொன்றையும் ஆற்றியுள்ளார்16. இவற்றில் கூறப்பட்ட விடயங்களும் மொழிபெயர்ப்பு சார்ந்த அடிகளாரின் வேறு கட்டுரைகளில்17  கண்ட விடயங்களும் இங்கு சுருக்கமாக ஆராயப்படுகின்றன.


4.1 திசைச்சொல் ஏற்பு

நல்ல தமிழில் கட்டுரைகளையும் கலைச்சொற்களையும் ஆக்கிய அடிகளார், கலைச்சொல்லாக்கத்தில் நெகிழ்வுப் போக்கையே கடைப்பிடித்தார். “தமிழ் மொழி இல்லாத வழி பொருத்தமுள்ள பிறமொழியை ஆளுதல் தகுதியாகும். தமிழ் வழக்கிருப்பின் உள்ள மொழியையே ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும்.” என்று சொல்லும் அவர், “ஆரியம் நன்று தமிழ் தீது, தமிழ் நன்று ஆரியம் தீது….. என்று இவ்வாறெல்லாம் பக்கம் பற்றிக் கூறுவாரது உரை அனைத்தும் மரபுநிலை திரிந்த வெற்றுரை” என்றும் சொல்கிறார்18. “வடமொழியிலிருந்து எடுத்துத் தமிழ் ஆன்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவை தம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக்கொள்வதே முறையாகும்”19 . “ஆரிய மொழியினும் ஏற்புடையனவற்றை ஆளுதல் இழுக்காகாது”20  என்றமையால் அவரது காலத்தில் நீடித்த தனித்தமிழ் இயக்கத்துக்கு அடிகளார் முற்றாக ஆதரவானவர் அல்லர் என்பது தெரிகிறது.


விஞ்ஞானதீபம் கட்டுரைத்தொடரில் கலைச்சொற்கள் பலவற்றை உருவாக்கிய அடிகளார் “யாம் ஆராய்ந்துணர்ந்த கருத்தினை உரைத்தற்கு ஏற்புடைய தமிழ்ச்சொல், வடசொல் இல்லாதவழி பொருத்தமுள்ள புதிய சொற்களை ஆக்கிகொள்வோம். யவனபுர மொழி (கிரேக்கம்), உரோமபுர மொழி (இலத்தீன்) ஆங்கிலமொழி இவற்றிலிருந்து தக்க சொற்களைத் திசைச்சொற்களாக எடுத்தாள்வோம்”21  என்று கூறியுள்ளமை, கலைச்சொல்லாக்கத்தில் தேவைக்கேற்ப ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்துவது தவறில்லை என்று அடிகளார் கருதியதை உறுதிசெய்கிறது.  


இக்கருத்தில் இக்கட்டுரையாளனுக்கு மாற்றுக்கருத்து உள்ளது. பிறமொழிச் சொற்களை அவ்வாறே - தற்சமமாகவோ தற்பவமாகவோ - ஏற்கலாம் எனில் "எந்த எல்லை வரை ஏற்பது?" என்ற கேள்வி முக்கியமாகின்றது. பிறமொழிச்சொற்கள் அளவு கணக்கின்றி தமிழில் ஊடுருவும் இக்காலத்தில் ஊடுருவும் அத்தனை சொற்களையும் அவ்வாறே ஏற்றுக்கொண்டால், மொழித்தனித்துவம் பற்றி எதிர்காலத்தில் பேசமுடியாது போகும். மேலோட்டமான ஒலிபெயர்ப்பே கலைச்சொல்லாக்கத்தின் முதன்மைத் தடந்தகையாகக் காணப்படும் சமகாலத்தில் அடிகளாரின் “திசைச்சொல் ஏற்பு” சிந்தனையை இன்னும் அழுத்தம் திருத்தமாக வரையறுக்கவேண்டிய தேவைப்பாடு நிலவுகின்றது.  


4.2 சுருக்கமும் தெளிவும்

புதிதாக உருவாக்கும் போதும், திசைச்சொற்களை எடுத்தாளும் போதும், கலைச்சொற்கள், சுருக்கம், விளக்கம், தெளிவு, தமிழுருவம் ஆகியவை பொருந்தியிருக்கவேண்டும் என்று அடிகள் கருதினார். “தனித்தமிழ் மொழிகள் ஓரெழுத்தாலும் ஈரெழுத்தாலும் ஆகிய மணி போன்ற சிறிய மொழிகளாம்” என்பதாலும் நீண்ட சொற்கள் “மாணாக்கனுடைய நாவுக்கு இடர் விளைவிப்பனவாக அமையும்” என்பதாலும், “நீண்ட சொற்களைக் கண்முன் வரவொட்டாது துரத்தவேண்டும்”22


சிக்கலான வேதியியல் தனிம / மூலகப் பெயர்களை தமிழ்ப்படுத்துவது பற்றி ஆய்ந்த அடிகள், ஏற்கனவே தமிழர் மத்தியில் வழக்கிலுள்ள பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய சொற்களை அவ்வாறே ஏற்று, கண் மையிலுள்ள “Antimony”ஐக்  கருத்தில் கொண்டு அம்மூலகத்துக்கு “மை” என்றும், யவனமொழியில் நிறம் எனும் பொருளினதாகிய Chlorineஐ “நிறம்” என்றும், மொழியாக்கினார்23


Oxygenஇற்கு மதி என்று பெயர் சூட்டிய அவர் ஒட்சைட்டு / ஆக்சைடு எனும் வகுப்புப்பொருட்களுக்கும் அப்பெயரையே ஆண்டு பொன்மதி – Gold Oxide, செம்மதி – Copper Oxide போன்ற பெயர்களைப் பரிந்துரைத்தார். வேதியியல் குறியீடுகளையும் தமிழாக்க முயன்று, சோடியம் – லவம், ஒட்சிசன் – மதி ஐதரசன் – அம் என்பதால், NaOH என்பதை லவமதியம் = "லமஅ" என எழுத முயன்றார்24

NaOH + HCl ® NaCl + H2 எனும் அடிப்படை வேதியியல் சமன்பாட்டை

லமஅ + அநி ®  லநி + அ2ம 

என்று எழுதலாம் என்றும் அதை

“லவ்மவ்அவ் உடன் அவ்நிய் சமம் லவ்நிய் உடன் அவ்விரண்டுமவ்”

என்பதையொத்து25  வாசிக்கமுடியும் எனவும் முன்மொழிந்தார்.


வேதியியலைத் தமிழில் கற்பிக்க முயன்ற அடிகளாரின் முயற்சி மெச்சத்தகுந்தது. ஆனால் அது இலங்கையிலோ தமிழகத்திலோ தோல்வியில் முடிந்த முயற்சி.  சீனம், யப்பானியம் முதலிய மொழிகளில் தனிம வரிசை அட்டவணையை / ஆவர்த்தன அட்டவணையை தாய்மொழியில் கற்பிக்கும் முயற்சி நீண்டநாளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டபோதும், அதில் பல்வேறு சாதக பாதகங்கள் ஆராயப்பட்டுள்ளபோதும்26,27, தமிழில் அது நடைமுறைக்கு வரவில்லை. எனினும் ஏனைய துறைகளில் கலைச்சொற்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் உருவாக்கலாம் என்ற அடிகளின் கருத்து இன்றும் ஓரளவு பயன்பாட்டில் இருப்பது ஆரோக்கியமானது எனலாம்.

முழுக்க முழுக்க அவ்வவ் மொழிகளில் பாடசாலைகளில் கற்பிக்கப்படும்
சீன மற்றும் யப்பானிய தனிம / ஆவர்த்தன அட்டவணைகள்.
(படங்கள்: விக்கிமீடியாவிலிருந்தும் Pinterestஇலிருந்தும்)


4.3 வேறுபிரித்தறியக்கூடிய தெளிவு

கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் அடிகள் அதிக கவனம் செலுத்தினார். “இருவேறு பொருளுக்கு ஒரு சொல்லைக் குறியீடு செய்தாளுதல் மலைவுறுதலுக்கு இடமாகும்” என்பதால் Mirror =  முகம் பார்க்கும் கண்ணாடி என்றும், அதையொத்த Glass எனும் சொல்லை படிகம் என்றும் வேறுபிரித்தே சொல்லவேண்டும் என்றும் வரையறுத்தார். இப்படி, Figure – உருவம், Image – படிமம் என்றின்ன பல கலைச்சொற்களை அடிகள் ஆக்கியுள்ளதைக் காணலாம்28.


இன்றைய அறிவியலில் mirror என்ற சொல் ஆடி என்று பயன்படுகின்றது. Image என்பதை படிமம் அல்லது உருவம் என்றும் Figure என்பதை உரு என்றும் பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு கலைச்சொல் குழப்பமில்லாதவாறு தெளிவுத்தன்மையோடு உருவாக்கப்படவேண்டும் என்ற அடிகளாரின் கோட்பாடு கலைச்சொல்லாக்கத்தில் இன்றைய மொழியறிஞர் பலரும் வலியுறுத்திவருவதே.


4.4 ஒலிப்பொருத்தம்

அடிகள் Barium, Helium என்ற வேதித் தனிமங்களுக்கு / மூலகங்களுக்கு பாரம், எல் என்ற சொற்களில் பொருட்பொருத்தத்தோடு ஒலிப்பொருத்தமும் கருதி அவற்றை தமிழ்ப்பெயர்களாகச் சூட்டினார். poly – பல, gonos – கோணம் எனும் மொழித்தொடர்பு உள்ளதால் Polygonal Prism என்பதை பலகோணப்படிகம் என்றார்.29 அடிகள் பரிந்துரைக்கும் இக்கருத்து கலைச்சொல்லாக்கத் தடந்தகைகளுள் ஒன்றான “பொருளுறைக்கு” மாறானதல்ல.


சமகாலத் தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இராம கி அவர்கள் ஒலிப்பொருத்தத்தோடு நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை ஆக்கியிருக்கிறார்30. அவரது கலைச்சொற்கள் பல ஆங்கிலச்சொல்லை அவ்வாறே ஒத்திருப்பதால் ( பரி – free, game – கும்மை, Gene - ஈன் ), பலரது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு. எனினும், விபுலானந்த அடிகள் பரிந்துரைத்தவாறு மொழித்தொடர்பும் சொற்பிறப்பியலும் நோக்கியே இராம.கியின் கலைச்சொற்கள் பல இருப்பதால் அவற்றில் ஏற்கக்கூடியவையே ஏராளமாக உள்ளன. அப்படியே ஆங்கிலத் தழுவலாகத் தென்பட்டாலும், ஒலிபெயர்ப்பே கலைச்சொல்லாக்கத்தின் முதன்மை முகமாக இருக்கும் இக்காலத்தில்  பிறமொழித்தோற்றம் காட்டும் பொருளுறை மொழியாக்கங்கள் ஒப்பீட்டளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே அன்றி தள்ளத்தக்கவை அல்ல. 


4.5 தமிழுருவம்

கலைச்சொற்கள் இயன்றவரை தூயநடையில் இருக்கவேண்டும் என்பதை அடிகள் விரும்பினார். “தமிழில் மொழிபெயர்ப்பு நூல் எழுத முன்வருவார் சிலர் நிரம்பிய தமிழறிவு இன்மையால் ஆங்கில மக்களும் தமிழ் மக்களும் ஒருங்கு வெறுக்கத்தக்க பயற்றுப்பச்சரிசி நடையில் மணிப்பிரவாளம் என்றாற்போல் நூல் எழுதி முடிக்கின்றார்கள். பைந்தமிழும் வெள்ளையர் ஆங்கிலமும் சரிக்குச்சரி கலந்த நடையைப் பயற்றுப்பச்சரிசி நடை என்றாம்” என்கிறார் அடிகள்31. இன்று தமிங்கிலம் அல்லது தமிங்கிலீசு என்று சொல்லப்படும் கலப்புமொழியை அடிகள் பயறும் பச்சரிசியும் கலந்த நடை என்று சொல்லி எள்ளுவதிலுள்ள நயம் இன்புறத்தக்கது.


சேக்சுபியருக்கு  தமிழ்த் தோற்றம் காட்டும் “செகசிற்பியர்” என்ற கவித்துவமான பெயரை சூட்டியவர் அடிகளார் தான். ரோமியோ, யூலியட் எனும் செகசிற்பியரின் புகழ்பெற்ற பாத்திரங்கள் அவரால் “இரம்மியன், சுசீலை” என்று அழைக்கப்பட்டன32. அவரது மேற்றிசைச் செல்வம்33, ஏநேய காவியம்34, ஆங்கிலவாணி35  முதலிய கட்டுரைகள் இப்படி அவர் தமிழ்ப்படுத்திய பல்வேறு அழகான சொற்களைக் கொண்டமைந்துள்ளன.  இலியட்டில் வரும் Paris, Achiles, Helena, Menelans முதலிய பெயர்கள் அடிகளாரால் பரீசன், அகிலேசன், ஏலேனா, மேனிலாவன் என்று மாற்றப்பட்டுள்ளன. Iliad, Odyssey, Troy, Aphrodite, Venus  முதலிய பெயர்களும் ஈலியம், உலீசம், துரோயம், ஆவிரதை, வீநசை என்று  தமிழ்ச்சாயலில் எழுதப்பட்டுள்ளன.


பிறமொழிச்சொற்களுக்குத் தமிழுருவம் கொடுப்பது சரி போலத் தென்படினும், இது மொழிபெயர்ப்பாளரின் தமிழறிவுக்கேற்ப மாறுபடலாம் என்பதால் ஒருங்கிசைவு ஏற்படாது போகக்கூடும். காட்டாக ஆவிரதை என்று அடிகளார் மொழிபெயர்த்த Aphrodite என்ற கிரேக்கப்பெயரை, ஒலிப்பும் கவித்துவமும் கருதி வேறு மொழிபெயர்ப்பாளர்கள் அப்பிராட்டியார், அப்பிரதிட்டி, ஏவிரதத்தி என்றெல்லாம் விதவிதமாக மொழியாக்க முடியும். இது கலைச்சொல்லில் சீரின்மையையே கொணரும். இத்தகைய பெயர்ச்சொற்களைத் தற்சமமாகவும், தமிழல்லாத (கிரந்தம் முதலிய) ஒலிப்பு இருப்பின் தற்பவமாகவும் எழுதுவது ஒன்றே இயலக்கூடியது. எனவே Aphrodite = அப்ரோடைட்(டு).


4.6 புதிய எழுத்துக் குறியீடுகள்

தமிழில் எல்லா ஒலிப்புக்களுக்கும் உரிய எழுத்துக்கள் இல்லை என்பதை அடிகள் ஒரு குறைபாடாகக் கருதினார் என்பது அவரது “தமிழில் எழுத்துக்குறை” எனும் கட்டுரை மூலம் தெரியவருகிறது36. இக்காரணமே கிரந்த எழுத்துக்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை என்ற முடிவுக்கு அவரை இட்டுவந்திருக்கக்கூடும்.


வடமொழியில் பெரும்பாலான வல்லின ஒலிப்புகளுக்கு நான்கு ஒலிப்புகள் உண்டு, உதாரணமாக க என்ற ஒலிக்கு வடமொழியில் ka, kha, ga, gha  என்று நான்கு ஒலிப்புகள் உள்ளன.  அவ்வொலியின் இயற்கையொலியும் அதன் மூன்று வர்க்கங்களும் தமிழில் உரப்பு ஒலி, எடுப்பு ஒலி, கனைப்பு ஒலி என்று அழைக்கப்படும். வடமொழி ஒலிப்புக்களை எழுத்தில் காட்டக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்த அடிகள், இரண்டாம் வர்க்க உரப்பொலிக்கு மேற்கோள் புள்ளி இட்டும், மூன்றாம் வர்க்க எடுப்பொலிக்கு கீழ்க்கோடு அல்லது இத்தாலியம் (underline or italic) இட்டும், நான்காம் வர்க்க கனைப்பொலிக்கு, எடுப்பொலி எழுத்தில் மேற்கோள்புள்ளி இட்டும் காட்டலாம் என விதந்துரைத்தார். அடிகளாரின் பரிந்துரையின் படி, நான்கு பகர வருக்க எழுத்துக்களும் வருமாறு அமையும் (அட்டவணை 01)


அட்டவணை 01. பகர வருக்க நான்கு வடமொழி ஒலிப்புக்களும் அவற்றுக்கான விபுலானந்தர் வழியிலான குறியீடுகளும்


இந்த இடத்தில் நாம் கவனிக்கவேண்டியது, வெறுமனே பொதுப்படச் சொல்லிச் செல்லாமல், ஒலிப்பு நுணுக்கங்களையும் எழுத்து வேறுபாடுகளையும் அடிகள் தெளிவாக இனங்கண்டே தன் முடிவுகளைச் சொல்லியிருக்கிறார். என்பதைத் தான் உதாரணமாக, “நன்னூலார் டகர வருக்க முதலெழுத்தை இருமொழிக்கும் பொதுவாகக் கூறினாரெனினும், உண்மையிலேயே வருக்கத்து மூன்றாம் எழுத்தே பொதுவெழுத்தாக உச்சரிக்கப்படுகின்றது” என்கிறார் அடிகள்37   .  இது மிக முக்கியமான அவதானிப்பாகும். ஏனெனில், வடமொழி வருக்க வரிசையில் நான்கு டகர எழுத்துக்களையும், கண்ணை மூடிக்கொண்டு இயல்பொலி, உரப்பொலி, எடுப்பொலி, கனைப்பொலி என்று வரிசைப்படுத்திவிட முடியாது (அட்டவணை 02).


இங்கு “ṭa” என்ற வடமொழியின் இயல்பொலி தமிழில் இல்லை. எடுப்பொலியான  மூன்றாம் வருக்க டகர எழுத்தே (da) தமிழில் இயல்பாக உள்ள டகரம் ஆகும். எனவே இயல்பு, உரப்பு, எடுப்பு, கனைப்பு மாத்திரம் கருதி வடமொழி மரபுக்கேற்ப எழுத்துக்குறியீடுகளைப் பயன்படுத்தும்போது, தமிழ் மரபில் வழுக்கள் ஏற்படச் சாத்தியமுள்ளது. (ஆனால் இன்று அவ்வாறு தான் பயன்படுத்தப்படுகிறது.  மொழிபெயர்ப்பில் வருக்க எழுத்துக்களுக்கு வடமொழி ஒழுங்கில்  ட1, ட2, ட3, ட4 என்று இலக்கமிட்டுப் பயன்படுத்தும் இன்றைய வடமொழி அறிஞர்களால்,  ட3 என்பது தான் தமிழின் இயல்பொலி ட என்ற கருத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. )


வருக்க எழுத்துக்களுக்கு குறியீடுகளை முன்மொழியும் அடிகள், இன்று பயன்பாட்டிலுள்ள எல்லாக் கிரந்த எழுத்துக்களையும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்றும், முப்பதாம் மெய்யான வடமொழிச் சகரத்தை தமிழில் வியப்புக்குறி சேர்த்து ச! என்று காட்டலாம் என்றும் கூறுகிறார். அவர் தமிழுக்கு மட்டும் எழுத்தில்லா ஒலிப்புகளுக்கு குறியீடுகளை முன்மொழியவில்லை. வடமொழியிலும் “தமிழை எழுதுவதற்கு ற, ன, ழ, எ, ஒ என்பவற்றுக்கு புது சமற்கிருத எழுத்துக்கள் அமைக்கவேண்டும் என்பதோடு”… “இருபக்கமும் நோக்கி ஆலோசனை செய்தாற்றான் விசயம் தெளிவுபடும்” என்கிறார்38

அடிகளாரின் மொழிபெயர்ப்புக்கான பரிந்துரைகளில் புரட்சிகரமானதும் மிக முக்கியமானதுமாகக் கருதக்கூடியது இந்த எழுத்துக்குறியீடுகள் ஆகும். தமிழில் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துவது எப்போதும் எழுத்துச் சீர்திருத்தமாகவே கருதப்படும் சூழலில், தமிழில் இல்லாத ஒலிப்புகளை எழுத்தில் கொணரவேண்டியது, தமிழை ஞாலமாமொழி அல்லாவிடினும் ஞாலமாமொழிக்கு அருகிலேனும் உயர்த்த நினைக்கும் தமிழ்க்குடிமகன் ஒவ்வொருவனும் சிந்திக்கவேண்டிய விடயம் ஆகும். 


ஏனெனில் பிறமொழி ஒலிப்புகளுக்கான குறியீடுகளின் தேவையை இன்றியமையாததாக்கும் காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, பிறமொழியைத் தமிழிலே கற்றல், இரண்டு, அவ்வொலிப்புகள் தொடர்பான ஆய்வுகளை நேரடியாகத் தமிழிலேயே வெளியிடும் அறிவியல் படைப்பாக்க வசதிகள். 

இவை குறியீடுகள் மாத்திரமே என்பதால் அவை எழுத்தாகிவிடமுடியாது. அக்குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ள சொல் தமிழ்ச்சொல் அல்ல என்ற தெளிவும் இயல்பாகவே அதைப் பார்ப்பவருக்கு வந்துவிடும். இத்தகைய குறியீடுகளின் பாவனையை தமிழறிஞர்கள் எதிர்க்க எதிர்க்க, அந்த இடைவெளியை நிரப்ப வேறு வழியின்றி கிரந்த எழுத்துக்களின் பாவனை அதிகரித்தவாறே உள்ளது என்பதை அவர்கள் அறியாதுள்ளனர்.


துறவியொருவருக்குரிய சமரச மனநிலையில் இருந்த அடிகளார் கிரந்த எழுத்துக்களை ஏற்கப் பரிந்துரைத்ததும் வடமொழி வருக்க எழுத்துக்களுக்கு மட்டும் குறியீடுகளைப் பரிந்துரைத்ததும் இயல்பே. ஆனால் நீண்டகால நோக்கில் பார்த்தால், கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குப் பெரும் கேட்டையே ஏற்படுத்தியுள்ளதைக் காண்கிறோம். பிறமொழிக்கலப்பையும் ஒலிபெயர்ப்பு வழியான மொழிபெயர்ப்பையும் திணிப்பதற்கு கிரந்த எழுத்துக்களே காரணமாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. காட்டாக, அடிகளார் ச! என்ற குறியீட்டைப் பரிந்துரைத்த வடமொழி முப்பதாம் சகர மெய்யான “ஶ” இன்று அச்சுவாகனமேறி கணினி விசைப்பலகையிலும் இடம்பிடித்துவிட்டது. விபுலானந்த அடிகள் காலத்திலே தமிழ் அச்சியந்திரத்தில் கூட பெருமளவு பயன்படுத்தப்படாத ஒரு கிரந்த எழுத்து இன்று சமூக வலைத்தளங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு எழுத்தாக நிலைபெற்றுவிட்டது என்றால், அது ஏனைய கிரந்த எழுத்துக்களை தமிழ் வண்ணமாலையில் அனுமதித்தமையால் ஏற்பட்ட தீயவிளைவே ஆகும்.

ஒரு சமூக வலைத்தளத் தமிழ்ப் பதிவில் இயல்பாக எடுத்தாளப்பட்டுள்ள ஶகரம்.

எத்தனை தான் தமிழறிஞர் தலையிலடித்துக் கொண்டாலும், தமிழில் தற்பவ மொழிபெயர்ப்பையோ ஒலிப்புத் தவிர்ப்பையோ சமகாலத் தமிழர் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பது வெள்ளிடைமலை. அதற்கு ஒரேயொரு மாற்று பிறமொழி ஒலிப்புகளுக்கான கிரந்தமல்லா எழுத்துக்குறியீடுகளை அறிமுகம் செய்வது தான். முள்ளை முள்ளால் எடுக்க முனைவது போல், கிரந்த எழுத்துக்களுக்கு மாற்று அதையொத்த இவ்வாறான வேறு குறியீடுகளாகவே இருக்கமுடியும். ஆங்கிலத்தில் இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்காக நியமத் தராதரமாக உருவாக்கப்பட்டுள்ள ISO 15919 போல ஒரு தமிழ்க்குறியீட்டு நியமம், புலமைத்தளத்திலும் பிறமொழி ஒலிப்புகளைக் கற்கவும் ஆராயவும் பேருதவி புரியக்கூடும்39


பல்வேறு மொழிகளின் ஊடாட்டத்தில், வடமொழி எழுத்துக்களுக்காக மாத்திரமன்றி, பிறமொழி ஒலிப்புக்களுக்கான குறியீடுகளும் அறிமுகப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக சிங்களத்திலுள்ள மூன்றாம் நான்காம் உயிரெழுத்துக்கள்,  ஆங்கில 26ஆம் எழுத்துக்கான ( z ) ஒலிப்பு என்பவற்றைச் சொல்லலாம். விபுலானந்த அடிகளாரின் குறியீட்டுப் பயன்பாட்டை சமகாலத்துக்கேற்ப இற்றைப்படுத்தி தமிழறிஞர் அமைப்புகள் பரிந்துரைக்கும் பட்சத்தில், நீண்டகால நோக்கில் தமிழுக்கு பெருத்த நன்மையாக அமையும் என்பதில் ஐயமில்லை.


5.0 கலந்துரையாடல்

கலைச்சொல்லாக்கத்தில் 

அ) இயன்றவரை தமிழையும் இயலாதபொழுது பிறமொழிகளையும்  பயன்படுத்தல், 
ஆ)  சொற்சுருக்கம், 
இ) ஒன்றோடொன்று வேறுபிரித்தறியக்கூடிய தெளிவு, 
ஈ) ஒலிப்பொற்றுமை கொண்ட கலைச்சொற்கள்
உ) தமிழுருவம், 
ஊ) எழுத்துக்குறியீடுகள்
ஆகிய ஆறும் விபுலானந்த அடிகளின் மொழிபெயர்ப்புக் கொள்கையில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளாகும். 


இவற்றில் இயலாதபொழுது பிறமொழிகளைச் சார்ந்திருக்கக் கோரும் முதல் பரிந்துரை நீண்டகால நோக்கில் தமிழ் மொழிவளர்ச்சிக்கு சாதகமற்றது. “இயலாதபொழுது பயன்படுத்தல்” என்பதில் அந்த “இயலாமை”யை வரையறுத்துக்கொள்வது சிக்கலானது. வரையறை இல்லாவிடின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் பிறமொழிச்சொற்கள் எண்ணிக்கையில் கூடி மொழித்தனித்துவம் சீர்குலையக்கூடும். அந்தத் இயலாமை வரையறுக்கப்படாமையால், வடமொழி வரையறையின்றிக் கலந்த சேரத்தமிழ், மலையாளம் என்ற மொழியாக மாறி, பழந்தமிழர் சந்ததியினர் பலர் தனித்தேசியமாகப் பிரிந்து நிற்கும் அவல வரலாறு தமிழருக்கு உண்டு. 


இன்று அதே வரையறையின்மை காரணமாக நடைமுறையிலும் பொதுப்புழக்கத்திலும் எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் கலைச்சொற்களாக வலம் வருவதைக் காண்கிறோம் (ட்ரெண்டிங், ஸ்பெஷல், பிஸி… ). ஒலிபெயர்ப்பை வரையறுப்பது கடினம் என்பதால், இப்போதைக்கு பிறமொழி கலவாத தமிழ்வழிக் கலைச்சொல்லாக்கம் மாத்திரமே வேண்டுவது என்பது இக்கட்டுரையாசிரியனின் தரப்பு. அது அடிகளாரின் தரப்புக்கு எதிரானது.  ஆனால் சமகால நுகர்வுசார் தொழினுட்ப உலகில் இவ்விரு தரப்பினருமே தோற்ற தரப்பினராகி தலைகுனிந்து நிற்கும் அளவுக்கு, தமிழில் ஒலிபெயர்ப்பு மூலமான கலைச்சொல்லாக்கம் காட்டுத்தீ போல – அல்ல – “வைரலாக” பரவிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனை.


அடிகளின் இரண்டாம் மூன்றாம் பரிந்துரைகள் தமிழறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும், இன்று தமிழர் பரந்து வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் உயர்கல்விக்கும் அறிவியல் கற்கைக்குமுரிய மொழியாக ஆங்கிலமே நீடிப்பதாலும், செய்தி ஊடகங்களின் அக்கறையின்மையாலும், சுருக்கமும் தெளிவும் பொருள் தனித்துவமும் கொண்ட கலைச்சொற்கள் உருவாவதிலும் அவை பொதுமக்களிடையே பரவலடைவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.   


நான்காம் பரிந்துரை, கலைச்சொற்களை முதலில் வேற்றுமொழியிலேயே அறிந்துகொள்ளும் இன்றைய சந்ததியினருக்கு இலகுவானது. வேலைப்பழுவையும் நேரவிரயத்தையும் காரணம் காட்டும் புதிய தலைமுறையினருக்கு ஒலிப்பொற்றுமை கொண்ட கலைச்சொற்கள் நினைவுகூர்தலை எளிதாக்கும். அதில் வேர்ச்சொல் அடிப்படையும் அடங்குவதால், மொழிவளர்ச்சிக்கு அது தடங்கலாக இராதவொன்று. ஆனால் இத்தடந்தகைக்கு தமிழறிஞர் எதிர்ப்பு நிரம்பவுண்டு என்பதால் பொதுப்புழக்கத்துக்கு வருவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.


ஐந்தாம் பரிந்துரை, கலைச்சொல் ஆக்குநருக்கேற்ப வேறுபட்ட கலைச்சொற்களை ஆக்கும் இடரைக்கொண்டுள்ளமையால் வரவேற்கத்தக்கதன்று. மேலும் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது எப்போதும் அவசியமாக இல்லாதபடியால், அதில் கூடிய கவனம் செலுத்தத் தேவையில்லை. அடிகளாரே முன்மொழிந்துள்ள ஆறாம் பரிந்துரை மூலம் இப்பரிந்துரை  எதிர்கொள்ளும் சிக்கலுக்குத் தீர்வு காண இயலும்.


இறுதியான ஆறாம் பரிந்துரை புரட்சிகரமானது. எழுத்துக்குறியீடுகள் கல்வி நோக்கங்களால் சமகாலத்துக்கு அத்தியாவசியமானது. ஆனால் இதற்கும் தமிழறிஞர் எதிர்ப்பு உண்டு. அவ்வெதிர்ப்பையும் மீறிச் செய்வதென்றால், அதைச் செய்வது எவர் என்பது ஆயிரம் பொற்கிழிக்குரிய கேள்வி. அப்படியும் ஒருவரோ ஒரு அமைப்போ செய்ய முயன்றால்,  நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாகியுள்ள ஊடகங்களும் இன்றைய அரசுகளும் முழுத்தமிழ்ச்சமூகமும் அதை ஏற்குமா என்பது பதினாயிரம் பொற்கிழிக்குரிய கேள்வி.







6.0 பரிந்துரைகள்

விபுலானந்தரின் கலைச்சொல்லாக்கக் கொள்கைகளைப் பின்பற்ற விழையும் சமகாலத் தமிழர், தம் மொழிவளர்ச்சிக்கென கூடிய கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான விடயங்கள்; பல உள்ளன. 


அ) ஆங்கிலம் உள்ளிட்ட உலகமொழிகளின் தற்சம – தற்பவச் சொற்களை எந்த எல்லை வரை ஏற்றுக்கொள்வது என்ற வரையறையை திருத்தமாக இட்டுக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் உதாரணமாக தகவல் தொழினுட்பத்துறையில் மாத்திரம் தற்பவ ஒலிபெயர்ப்புச் சொற்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ளலாம். ஏனைய துறைகளில் தனித்தமிழ் சார்ந்த பொருளுறை மற்றும் புதுச்சொல்லாக்கத் தடந்தகையைப் பயன்படுத்தி மொழியாக்கங்களைச் செய்யும் அணுகுமுறைகளை மொழியறிஞர்கள் மேற்கொள்ளவேண்டும் 


ஆ) பொதுநிதி அமைப்புக்களின் உதவியுடன், கலைச்சொல் வங்கிகளை உருவாக்கி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மொழியியல் சமூகங்களில் திறந்த அல்லது நிகழ்நிலை உரையாடல்களை மேற்கொண்டு மொழிவளப்படுத்தலை ஊக்குவிக்கவேண்டும். 


இ) செயற்கை நுண்ணறிவு மூலம் பல்மொழி அகராதிகள், பொதுமக்களுக்கான மொழிபெயர்ப்புச் செயலிகள் என்பன எண்ணிம சாதனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படவேண்டும். 


ஈ) தமிழர் வதியும் நாடுகளின் அரச கொள்கைவகுப்பாளர்கள்; தமிழ் மொழிக்கான உரிய இடம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். காட்டாக, ஆரம்பப்பாடசாலைகளில் கட்டாயத் தாய்மொழிக் கற்றல், செய்தி ஊடகங்களில் கட்டாயத் தமிழ்ப் பாவனை, கேளிக்கைத் துறையில் தமிழ் மேம்பாட்டுக்கு உழைப்போருக்கு சலுகைக் கொடுப்பனவுகள், சமூக வலைத்தளங்களில் தமிழ் மூலம் அறிவியல், தொழினுட்பக் கல்வி மேம்பாட்டுக்கு உழைப்போருக்கு அரச அல்லது அமைப்புசார் விருது வழங்கல் என்பனவற்றைச் சொல்லலாம். 


உ) ஆங்கிலத்தைத் தாக்குப்பிடிக்க போராடிவரும் பிரெஞ்சுக் கலைக்கழகம் (Académie Française), சீன அரச மொழி ஆணைக்குழு, யப்பானின் நிஞ்சல் (NINJAL) போன்ற மொழிவளர்ச்சி அமைப்புகளை ஆராய்ந்து, தமிழ் மொழிவளர்ச்சிக்கான அமைப்பொன்றை அரசோ தனியாரோ நிறுவ முயல்வதன் மூலம் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். 


7.0 முடிவுரை

முதற்றமிழ்ப் பேராசிரியராக விபுலானந்த அடிகளார் முன்வைத்த கலைச்சொல்லாக்க – மொழிபெயர்ப்புப் பரிந்துரைகளில் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும் போதும், அவற்றில் பெரும்பாலானவை இக்கால மொழிபெயர்ப்புப் பொறிமுறைகளுக்கும் தடந்தகைகளுக்கும் பெரிதும் ஒத்திசைவாகவே உள்ளதுடன், இடைப்பட்ட நூறாண்டு காலத்தில் அந்தத் தடந்தகைகளை அடியொற்றியே இக்காலத் தமிழ் வளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 


பூகோளமயமாக்கம், நுகர்வுப்பண்பாட்டின் அதிகரிப்பு என்பன பெருவளர்ச்சி பெற்றுள்ள இக்காலம், மொழியையும் மொழிபெயர்ப்புக்களையும் கூட வணிகநோக்கம் சார்ந்த ஒன்றாகவே காண்கின்றது. இன்றுள்ள ஒரு புலமையாளர், பிறமொழிச் செல்வங்களையும் தன் சொந்த அறிவையும் எந்தளவு தன் தாய்மொழிக்குக் கொணர்ந்து பயனுள்ளதாக்குகிறார் என்பது ஒரு பொருட்டே அல்ல. அந்த அறிவை ஒரு புலமைச்சொத்தாக அவர் சர்வதேச சந்தையில் கூவி விற்றாகவேண்டும், அதுவும் சர்வதேச சந்தைக்குப் புரியும் ஆங்கிலம் அல்லது வணிகப்பெருமொழியொன்றில் இரந்து அழைத்தாக வேண்டும். எனவே தமிழ் போன்ற வணிக முக்கியத்துவத்தை இழந்துவிட்ட மொழியொன்றைப் பேசும் ஒருவர் எவ்வாறேனும் ஆங்கிலம் போன்ற உலகப்பெருமொழி ஒன்றைக் கற்றாகவேண்டிய கட்டாயம் இன்றைய முதலாளித்துவ உலகில் ஏற்பட்டிருக்கிறதே தவிர, பிறமொழி அறிவை தாய்மொழிக்குக் கொண்டுவரவேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவைப்பாடு கூட இன்றைய சராசரி புலமையாளனுக்கு இல்லை. 


தற்போதைய செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளால் இவ்விடைவெளி நிரப்பப்பட்டால் தவிர, பொருளீட்ட உதவாத மொழி மீதான புறக்கணிப்பும் பாகுபாடும் தேசிய, சர்வதேச ரீதியில் என்றும் நீடிக்கும் என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.  மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் மொழிசார் செயற்பாடுகள் அல்ல: அவை பண்பாட்டு இயக்கங்கள். சரியான ஆதரவைப் பெற்றுக்கொண்டால் தமிழ் போன்ற ஒரு பழைமையான மொழியால் நவீன அறிவை அடுத்த தலைமுறைக்கு இலகுவில் கடத்த இயலும். ஏனைய நாடுகளின் அணுகுமுறைகளைக் கற்று, மரபை தொழினுட்பத்துடன் கைகோர்க்கச் செய்யும் போது, மெல்லத்தமிழ் இனி வாழும்.  


அடிக்குறிப்புகள்

1. Venuti, 1995, pp. 170 - 176 2. Lo Bianco, 2010, pp.150 - 160 3. Jost, 2021, pp. 45–62. 4. Rajendran, 2015, pp. 55 – 78. 5. Venuti, 1995a. 6. Karakoç, 2014, p.1611. 7. இராம.கி, 2006.03.21 8. Khan, 2023, pp. 1 - 5 9. Paas, Renkl, & Sweller, 2003, pp.1 – 4. 10. Wadeea, 2024, pp. 2751 – 2756. 11. Jafari, 2023, 4 – 11. 12. UNESCO, 2023
13. தொண்டன், (2020), ப.524 - 525 14. மயில்வாகனன். 1922அ. 15. மயில்வாகனன். 1922ஆ. 16. செல்வநாயகம், 1961, பப. 1 - 11 17. விபுலாநந்தர், 1941, பப.249 - 253 18. மயில்வாகனன். 1922அ, ப.432 19. செல்வநாயகம், 1961, பப. 3 20. மயில்வாகனன். 1922ஆ. ப.62 21. மயில்வாகனன். 1922அ. ப.439 22. மயில்வாகனன். 1922ஆ, பப. 61, 65 . 23. மேலது. ப.64 24. மேலது. ப.64 - 65 25.“லவ்வொன்று மவ்வொன்று அவ்வொன்று உடன் அவ்வொன்று நிய்யொன்று சமம், லவ்வொன்று நிய்யொன்றுடன் அவ்விரண்டு மவ்வொன்று” என்பது அடிகளாரின் வாசகமாகும். மேலது. ப.66 26. Liu & Li. 2017, pp. 1053–1059.
27. Chik, 2019, pp. 339–353.
28. 
மயில்வாகனன். 1922ஆ. பப.67 - 68
29. மேலது. பப. 65, 67
30. இராம கி, தி.இ.
31. மயில்வாகனன். 1922. பப.383.
32. அடிகள், 1987: X, XI 
33. மயில்வாகனன் 1922, பப. 381 – 390.
34. மயில்வாகனன் 1916, பப. 289 – 300.
35. விபுலாநந்தர், 1941அ, 1- 24
36. விபுலாநந்தர், 1941, பப.249 - 253
37. மேலது, 249
38. மேலது, 253
39. தமிழில் இல்லாத சிங்கள ஒலிப்புக்களைக் காட்டுவதற்காக ஒலிக்கீறுகளை (diacritics) பயன்படுத்தி ஒரு சோதனை முயற்சி, இரண்டாண்டுகளுக்கு முன் இக்கட்டுரையாசிரியனால் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்டுரையாசிரியனின் ""ஈழத்துக் கீழைக்கரை" தொடர் பெரிதும் இவ்வொலிக்கீறுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகும். அவ்வொலிக்கீறுகளின் பட்டியலை இங்கு காணலாம். இப்பட்டியலின் நடைமுறைச்சாத்தியம், செய்ய வேண்டிய திருத்தங்கள் என்பன விரிவாக ஆராயப்படவேண்டியது. இன்னொரு சோதனை முயற்சியாக அண்மையில் தமிழ் ஒலிப்பில் (phonetic) பிறமொழிகளை எழுதுவதற்காக கணியறிஞர் திரு.வினோத் ராசன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள சக்ரேசுவரி எழுத்துருவைச் சொல்லலாம். 


உசாத்துணை

முதன்மை மூலங்கள்.

அடிகள், விபுலானந்த. (1987). மதங்க சூளாமணி, கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு. • செல்வநாயகம், அ. (1961). “கலைச்சொல்லாக்கம்”, விபுலானந்த வெள்ளம், குருமண்வெளி, மட்டக்களப்பு. • தொண்டன், த. (2020). “தமிழ்த்தொண்டு”, க.இரகுபரன் (பதி). விபுலாநந்தம் இல். 523-525. • மயில்வாகனம், எஸ். (1916) ஏநேய காவியம், செந்தமிழ், தொகுதி 14, பகுதி. 8, 289 – 300. • மயில்வாகனன், பண்டித. (1922) மேற்றிசைச்செல்வம், செந்தமிழ், தொகுதி 20, பகுதி. 10, 381 – 390. • ______________. (1922அ) விஞ்ஞானதீபம், செந்தமிழ், தொகுதி 20, பகுதி. 11, 431 – 440. • ______________. (1922ஆ). விஞ்ஞானதீப மொழிபெயர்ப்பு முறை, செந்தமிழ், தொகுதி 21, பகுதி. 2, 61 – 68. • விபுலாநந்தர், சுவாமி. (1941). தமிழில் எழுத்துக்குறை, கலைமகள், தொகுதி 20, இல. 117. 249 – 253. • விபுலாநந்தர், சுவாமி. (1941அ). ஆங்கிலவாணி, மணிமலர்: பண்டிதமணி முதுபெரும்புலவர் திருவாளர். மு.கதிரேசச்செட்டியார் அவர்களுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் செட்டிநாட்டரசர் திருமிகு. ராஜா.சர்.மு.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தலைமையில் அளித்த கட்டுரைத்தொகுதி, புதுக்கோட்டை.


துணை மூலங்கள்

·   இராம. கி. (2006.03.21). “கணி”, வளவு வலைப்பதிவு, https://valavu.blogspot.com/2006/03/blog-post_21.htmlஇலிருந்து மீள்விக்கப்பட்டது.
·   இராம. கி. (தி.இ). கலைச்சொல்லாக்கம், வள்ளுவர் வள்ளலார் வட்டம். https://www.archive.org/இலிருந்து மீள்விக்கப்பட்டது.
·   Chik,S. S. (2019). Translating Science: The Challenges and Benefits of Translating Technical Terms in Education. Language and Education, 33(4), 339–353.

·   Jafari, Z. (2023). The Role of AI in Supporting Indigenous Languages. AI and Tech in Behavioral and Social Sciences, 1(2), 4–11.

·    Jost, F. (2021). Language Policies and the Battle Against Anglicisms in French. Journal of Language and Politics, 20(1),  45–62.

·    Karakoç, N.Y. (2014). Structural Calques in Neologism Translation and Unintelligibility: The Case of Generation X. International Journal of Language Academy, 2(3), 1611–1619.

·   Khan, N. (2023). Unveiling the Challenges of Translating Neologisms: A comparative study between human and machine translation. Eurasian International Journal of Philosophy, Science and Communication, 3(12), 55–64.

·    Liu, Y., & Li, M. (2017). The Impact of Teaching the Periodic Table in Native Languages: A Comparative Study Between English and Mandarin Chinese. Journal of Chemical Education, 94(8), 1053–1059.

·   Lo Bianco, J. (2010). Language Policy and Planning. In N. Hornberger & S. McKay (Eds.), Sociolinguistics and Language Education (pp. 143–176).

·   Rajendran, S. (2015). A comprehensive study of word formation in Tamil. International Journal of Dravidian Linguistics, 44(1), 55–78.​

·   UNESCO. (2023). Indigenous Languages Matter for Peace and Development. Retrieved from https://www.unesco.org/en/articles/indigenous-languages-matter-peace-and-development

·   Venuti, L. (1995). Translation and the Formation of Cultural Identities. In M. Baker (Ed.), Routledge Encyclopedia of Translation Studies (pp. 170–176). London: Routledge.

·   ________. (1995a). The Translator’s Invisibility: A History of Translation. Routledge.

·   Wadeea, S. J. (2024). The Cultural Impact of Generation Z on Neologism and its Translation: Internet Slangs as a Model. Educational Administration: Theory and Practice, 30(6), 2751–2756. 

 

(விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட "தமிழில் கலைச்சொல்லாக்கம்: விபுலானந்த அடிகளாரின் பரிந்துரைகளை முன்வைத்து ஒரு பார்வை" எனும் ஆய்வுக்கட்டுரை.யின் திருத்திய வடிவம்)

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner