ஆழ்ந்த இரங்கல்கள், RIP!

2 comments
பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன்.  அதற்குக் காரணம்  இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd"

பிறந்தநாள் ஒவ்வொன்றும் நாம் கடந்த பாதையையும் கடக்கப் போகும் பாதையையும் நினைவுறுத்தும் மைல்கற்கள் என்பதாலேயே முக்கியம் பெறுகின்றன. அதில் உண்மையான அன்புடனும், மனம் நிறைந்த கனிவுடனும் வாழ்த்தும் ஆசியும் தெரிவிப்போர் என்றென்றும் நம் நன்றிக்குரியவர்கள் தான். நான்கைந்து நாள் கடந்து சென்ற பின்னாலும், பேஸ்புக்கிலோ கைபேசியிலோ வாழ்த்துச் சொன்ன யாரையுமே தவறவிடாமல் நன்றி சொல்வதே என் வழக்கம். உண்மையைச் சொல்லப்போனால், பேஸ்புக்கில் பிறந்தநாள் தென்படுவதை முடக்கி வைத்திருப்பதே வாழ்த்துவோர் எண்ணிக்கை அதிகரித்து யாரும் தவறவிடப்படக் கூடாதே என்ற அச்சத்தால் தான். 

ஆக, இந்த 'HBD' பேர்வழிகளைப் பொறுத்தவரை, 'கடமைக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து விட வேண்டும்', அவ்வளவு தான். நம் பிறந்தநாளுக்காக தன் வாழ்க்கையின் ஒரு சில கணங்களைக் கூட, "பிறந்தநாள் வாழ்த்து" என்றோ "Happy Birthday" என்றோ தட்டச்சுவதில் செலவழிக்க விரும்பாத இவர்களின் வாழ்த்தால் நமக்கு அப்படி என்ன ஆசி கிடைத்துவிடப் போகிறது?  நெருங்கியவர்கள் என்றால் 'ஏண்டா இவனுக்கு விஷ் பண்ணம்?' என்று யோசிக்க வைக்குமளவுக்கு, நேரில் காணும் போது நன்றாகக் கிழிப்பேன்.  கொஞ்சம் மரியாதை கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் என்றால் வேறு வழியில்லை. எனவே அவர்களுக்கு மட்டும்  பதில் அளிப்பதுண்டு "T.u" 😊


பிறப்பு அளவுக்கு அதே முக்கியத்துவத்தைப் பெறுவது, மரணம். இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எங்கேனும் மரணச் செய்திகளைக் காணக்கிடைத்தால் கருத்துரைப் பெட்டிகள் முழுவதும் ஒரே வார்த்தையால் நிரம்பி இருக்கும். "RIP".


HBD அளவுக்கு எனக்கு அருவருப்பூட்டும் இன்னொரு சொல் இந்த RIP. ஆங்கிலத்தில் சொற்குறுக்கம் (Abbreviation) என்பது அனுமதிக்கப்பட்டது தான். அதற்காக எதற்கு எதற்கெல்லாம் சொற்குறுக்கம் செய்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா? மரணச்செய்தியில் துயர் பகிர்வதற்கு, ஆறுதல் சொல்வதற்குக் கூட சொற்குறுக்கமா? 😕

 RIP தட்டச்சும் பலருக்கும் அதன் முழு விரிவாக்கம் என்னவென்றே தெரியாது. அது Rest In Peace. இலத்தீன் "Requiescat in pace" என்ற கிறிஸ்தவ பிரார்த்தனையின் ஆங்கிலவாக்கம் அது. இரண்டுக்கும் பொருள்  "அமைதியில் ஓய்வு பெறுக". 

இறந்தவர்கள் மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதன் மூலம் நித்தியமான சொர்க்கத்தை அல்லது நரகத்தை அடைவர் என்பது கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான ஆபிரகாமிய நெறிகளின் நம்பிக்கை.  தீர்ப்புநாள் வரை அந்த ஆன்மா ஓய்வாக இருக்கட்டும் என்ற பிரார்த்தனையே "அமைதியில் ஓய்வு பெறுக." என்று கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிறது. 

எனினும் இவ்வழக்கம் கத்தோலிக்கர், ஆங்கிலிக்கர் மெதடிஸ்தர் முதலிய சில திருச்சபைகளில் மட்டுமே வழக்கமாக இருக்கின்றது. சில புரட்டஸ்தாந்து திருச்சபைகள், இது திருவிவிலியத்தில் குறிப்பிடப்படாத வழக்கம் என்பதால் தங்கள் பின்பற்றுநர்கள் "RIP" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ளன


'RIP'இன் பயன்பாடு நம் மரபுக்கும் பண்பாட்டுக்கும் அந்நியமானது.  அது  மேலைநாட்டு ஆதிக்கம் சார்ந்த ஓர் அடையாளம், இறந்தோரை ஓய்வெடுக்கக் கோருவது.  இதையெல்லாம் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் அடிக்கடி விவாதிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  அந்த விவாதங்களில் முக்கியமாக எழுந்த கேள்வி, இந்தியப் பண்பாட்டினர் அல்லது சைவர்கள், 'RIP'இற்குப் பதிலாக என்ன சொல்லலாம் என்பது.



இஸ்லாத்தில் ஒருவர் இறந்ததும், "இன்னாலில்லாஃகி வ இன்னா இலைஃகி ரச்சிவூன்"(ஆண்டவனிடமிருந்தே வந்தோம், ஆண்டவனிடமே செல்வோம்) என்பார்கள்.  யூதர்களிடம்  எல் மலே ரச்சமிம் (El Malei Rachamim) என்று அறியப்படும் இறந்தோர் பிரார்த்தனை ஒன்று உள்ளது. பௌத்தர்கள் இப்போது உலகளாவிய ரீதியில்  "May he attain supreme bliss of Nibbana" (பரிநிர்வாணப் பேரின்பத்தை அடைவாராக!) என்று சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் இந்து மதங்களையோ, சைவ - வைணவ நெறிகளையோ பார்த்தால், அவர்களுக்கென்று இத்தகைய இறந்தோர் பிரார்த்தனை எதையும் வளர்த்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

(Nibbana - நிப்பான என்பது நிர்வாண என்பதற்குச் சமனான பாலி மொழிச் சொல். சமஸ்கிருதம் சார்ந்தும் வளர்ந்திருந்தாலும், பௌத்தம் பாலிக்குக் கொடுத்து வந்த முன்னுரிமையை இன்றும் கைவிடவில்லை. எங்களுக்கு இஸ்கோன் இருக்கிறது என்று வைணவர்களும், எங்களுக்கு ஹவாய் சைவ ஆதீனம் இருக்கிறது என்று சைவர்களும் பெருமைபீற்றிக் கொண்டாலும், பௌத்தம் அளவுக்கு இந்துக்கிளைநெறிகள் அறிவியல் பூர்வமாக சர்வதேசத்தைச் சென்றடையவில்லை என்பதே உண்மை).

இத்தனைக்கும் இந்தியப் பண்பாடு இறந்தோர்க்கு மிகுந்த மரியாதையும் வழிபாடும் செலுத்தும் மரபைக் கொண்டது. பிராந்திய மொழி இலக்கியங்களிலிருந்து நமக்கேற்ற இத்தகைய பொதுப்பிரார்த்தனை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். கல்வெட்டியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள், இன்று பொதுவெளியில் பயன்படுத்தக்கூடியதாக,   இத்தகைய மரித்தோர் மரியாதை வாசகங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்வது?

இந்திய மரபில் பிறவிச்சுழல், நல்வினை -  தீவினை முதலிய கோட்பாடுகள் வேரூன்றி இருந்தாலும், ஒரு ஆன்மாவின்  இறுதி இலக்கு மோட்சம், முக்தி (வீடுபேறு, விடுதலை) என்று கொள்வதே வழக்கம். இந்த வீடுபேறு பழந்தமிழில் "துறக்கம்" (துறக்கப்பட்டது) என்று அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது.  மோட்சத்தை அல்லது துறக்கத்தை ஒரு விடுதலையுணர்வு என்றே நம் மெய்யியல்கள் குறிப்பிட்டாலும், அதை  ஒரு இன்ப நிலையாகவே அவை இனங்காண்கின்றன. விடுதலை என்பதே இன்ப உணர்வு தானே?

ஆக, இந்தியப்பண்பாட்டினர் நமக்கு நெருக்கமான பௌத்தர்கள் சொல்லிக்கொள்வது போல, "அன்னார் மோட்சப் பேரின்பத்தை அடைவாராக" - "May (s)he attain the supreme bliss of Moksha(m)" என்று பிரார்த்திக்கலாம்.

சைவர்களும் வைணவர்களும் முறையே தத்தம் இறைவர்களின் உறைவிடங்களான திருக்கயிலை, வைகுண்டம் ஆகியவற்றை உயிர்கள் அடைவதாக நம்புகின்றனர். எனவே விரும்பினால், முக்தி, மோட்சம் என்பவற்றை கைலாசம், வைகுண்டம் மூலம் அவர்கள் பிரதியிட்டுக்கொள்ளலாம்.
"May (s)he attain the supreme bliss of Kailāṣam"
"May (s)he attain the supreme bliss of Vaikuntham"

சைவம், வைணவம் என்று வரும் போது, சிக்கல் ஒன்று இருக்கிறது. முக்தி, மோட்சம், கைலாயப்பேறு, வைகுந்தப்பேறு என்றெல்லாம் பொதுவாக சொல்லிக்கொண்டாலும் அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரபார்ந்த பிரிவும் சொல்கின்ற வரைவிலக்கணங்கள் வேறுபடுகின்றன.

உதாரணமாக சைவ சித்தாந்தத்தில் முக்தி என்பது நான்கு வகை. தான் ஆள் உலகு இருத்தல் (சாலோகம்), தன்பாடு இருத்தல் (சாமீபம்), தான் ஆம் பதம் பெறல் (சாரூபம்), தான் ஆகுதல் (சாயுச்சியம்). சித்தாந்தம்,  சிவமாம் தன்மை (சிவனோடு இரண்டறக் கலத்தல்) என்று இன்னும் கூர்ந்து சொல்வதை, மேலைத்தேய ஆய்வாளர்கள், Śivahood அல்லது Śivaness என்று மொழியாக்குக்கிறார்கள்.  எனவே ஆழ்ந்த சைவமொழியில் "May (s)he attain the supreme bliss of Śivahood / Śivaness" என்றும் சொல்லமுடியும். இப்படியே வைணவத்தில் கைவல்யம் முதலிய வீடுபேறு சார் கலைச்சொற்கள் பயன்பட்டுள்ளன. இவற்றில் எவற்றை பொதுத்தளத்தில் எடுத்துச் செல்வது, எவ்வாறு ஆள்வது என்பதில் முரண்கள் ஏற்படக்கூடும்.

ஆக, ஒரு இந்துப் பண்பாட்டினனாக Moksham சார்ந்த முதல் பிரார்த்தனையையே பரிந்துரைப்பேன். சைவனாக  Kailasam, Sivahood சார்ந்த இரு பிரார்த்தனைகளுமே எனக்கு திருப்தியானதாக இருக்கிறது. இறந்தவர் சைவர் என்றால், இரண்டாம் மூன்றாம் பிரார்த்தனைகளையும், பொதுவாக என்றால் முதலாம் பிரார்த்தனையையும் பயன்படுத்துவேன்.

இந்தச் சமய வெங்காயங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை; மறுமை, மோட்சம், மறுபிறவி இந்த நம்பிக்கையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள், நான் இறைமறுப்பன் (Atheist), இறைநொதுமலன் (Agnostic) என்று கூறியபடி சண்டைக்கு வருவீர்களென்றால், இருக்கவே இருக்கிறது "ஆழ்ந்த இரங்கல்கள்". நீங்கள் "Deepest Condolences" அல்லது "Sincere Sympathies" ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:
இந்தப் பதிவு, இந்து சமயிகள் RIPஇற்கு மாற்றாக, உலகளாவிய ரீதியில் முன்வைக்கக் கூடிய பண்பாட்டு ரீதியான மாற்றுச் சொல்லாடல் தொடர்பானது. தமிழில் "அன்னார் இறைவன் திருவடிக்கீழ் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்" என்றே சாதாரணமாகச் சொல்லலாம். அதிலும் மதங்கடந்த பரந்த மனப்பான்மையே போதும் என்று விரும்பினீர்கள் என்றால் மேலே சொன்ன அதே "ஆழ்ந்த இரங்கல்கள்" போதும்.
மேலும் வாசிக்க »

குடைந்தாடாய் திருத்தும்பீ! திருவெம்பாவை இன்பம்

0 comments

கணினியிலோ கைபேசியிலோ, எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் என்று ஒரு பாடல்கள் பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். என் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு பாடல், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த றெக்க திரைப்படத்தின் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல். ஆனால், கேட்கும் போதெல்லாம், இமானின் இசையை விட, அதில் வருகின்ற பாரதியின் காதலி "கண்ணம்மா"வை விட, அந்தப் பெண் குரல் என்னவோ செய்யும். மிக நெருக்கமாகப் பழகி மறந்த யாரையோ நினைவுகூரச் சொல்கின்ற இனிய குரல். கூகிளில் தேடிய போது அது "நந்தினி ஸ்ரீகர்" என்று அறிந்தேன். 




முன்பெல்லாம் வானொலிகளில் பாடல் ஒலிபரப்பானால்,  அந்தப் பாடலை இசையமைத்தவர் யார், பாடியவர் யார், எழுதியவர் யார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி வானொலியில் பல தடவை சொல்லிச் சொல்லி மனப்பாடமான பெயர் அது. நந்தினி ஸ்ரீகர். பள்ளிப்பருவத்து மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றான "நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே" (திரைப்படம்: உற்சாகம்) பாடலைப் பாடியவர்.

அந்தப் பாடல், அந்தச் சிறுவயதிலேயே பிடித்துப்போனதற்கு காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, அதன் தூய தமிழ் வரிகள். இன்னொன்று அப்பாடலில் வரும் சொல்லொன்று என் பட்டப்பெயராக இருந்தது.   

சங்கத்தமிழின் சாயலில் எழுதப்பட்ட அந்த வைரமுத்துவின் வரிகளில்,  என்னை மிகவும் கவர்ந்த வரி "குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன் குடமா?" தன்னைப் பூவாகவும், நாயகனை தும்பியாகவும் உருவகிக்கும் நாயகி பொய்க்கோபத்துடன் இப்படிக் கேட்கிறாள். ஆனால் நீங்கள் விபரீதமாக நினைப்பது போல், அந்த வயதில் இப்படி அர்த்தம் புரிந்தெல்லாம் அந்த வரி பிடிக்கவில்லை! 😄 உண்மை என்னவென்றால், வரி பிடித்தற்கான காரணம், அந்தக் "குடைந்தாட" என்ற ஒரு சொல். ஒரேயொரு சொல்.

அந்தச் சொல், மெல்லிய மழை துமிக்கும் அதிகாலைப் பொழுதொன்றில் குடை பிடித்தபடி கடற்கரையோரம் நடக்கும் காட்சியை  என் மனத்திரையில் விரிக்கும். காரணம், திருவெம்பாவை.

இலங்கையின் எல்லா ஊர்க்கோவில்களும் போலவே, எங்கள் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலிலும் மார்கழி மாதம் திருவாதிரையை அண்டி, திருவெம்பாவை விழா பத்து நாட்கள் இடம்பெறும்.  கடற்கரையோரம் தாழம்புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகான சிறிய கோவில் அது. இன்று தாழம்புதரும் இல்லை, மண்ணரிப்பால் கடற்கரையும் இல்லை.  கோவிலும் 2004 ஆழிப்பேரலையால் சிதைந்து இன்று மீளக்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கும் மார்கழிக் குளிரில் நடுங்கியபடி, அந்தக் கோவிலின் வாசலில் நின்று,  அதிகாலையில் கடல் மீது கதிரவன் எழுவதைக் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.

எங்களூர்ச் சிவன் கோவில், 2015இல் (நன்றி: கூகிள் வரைபடம்)

அதெல்லாம் சரி, உன் ஊர்க்கோவிலுக்கும், "குடைந்தாட"வுக்கும் என்ன சம்பந்தம்?
 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள். 'மொய்யார் தடம் பொய்கை' என ஆரம்பிக்கும் பதினோராம் பாடலைப் பாடியதும், 'திருவெம்பாவை அரைவாசிப்பாட்டு முடிந்தது, விரைவில் பிரசாதம் கிடைத்துவிடும்' என்று ஒரு மெல்லிய பூரிப்பு ஏற்படும்  😁.  சில நேரங்களில் அதிகாலையில் தட்டுத்தடுமாறி எழுந்து குய்யோ முறையோ என்று கதறியபடி குளிர்நீரில் நீராடி, இந்தப்பாடல் பாடும் போது தான் கோவிலுக்குப் போய்ச் சேருவேன். ஆக, இருபது பாவைப்பாட்டுகளிலும் என்னால் அதிகம் கவனிக்க முடிந்த பாடல் இது.

அந்தப் பதினோராம் பாடலில் "கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி" என்றோர் வரி வரும். மார்கழி மாத அதிகாலை மென்பனி மழையில் குடை பிடித்தபடி விரைந்த எனக்கு, அந்தக் "குடைந்து குடைந்து" என்ற சொல் இப்படி நிலக்காட்சியாகப் பதிந்து போனதில் சந்தேகம் இல்லை தானே?😊

திருவெம்பாவை, அதிகாலைக் குளியல், சிவன் கோவில் போவது எல்லாம் பழங்கதைகள் ஆகி நெடுங்காலம். 😔 ஆனால் அதையெல்லாம் பெருமூச்சோடு எண்ணிப்பார்க்கும் சந்தர்ப்பம் சில நாட்களுக்கு முன் ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு செவிபன்னியில் கண்ணம்மா பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். மனம் நந்தினி ஸ்ரீகரிடம் போய், அங்கிருந்து "நறும்பூக்கள் தேடு"முக்கு நகர்ந்து, ஒருகணம் "குடைந்தாடவே"யில் மயங்கி, அப்படியே சிவன் கோவிலடியில் சென்று நின்று, அங்கிருந்து திடுக்கிட்டு திருவெம்பாவைக்கு வந்து சேர்ந்தது. அடடே மணிவாசகா, உன் தேன்தமிழை நெருங்கித் தான் எத்தனை காலம் ஆயிற்று?  

திருவெம்பாவையில் "குடைந்து" என்ற சொல்லை பதினோராம் பாட்டில் மட்டுமன்றி, அதற்கு மேலும் கீழும் வந்த ஓரிரு பாடல்களிலும் வாதவூராளித் தேவர் எடுத்தாண்டிருக்கிறார். அப்படி  "கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கும்" எனும் வரி வருகின்ற 13ஆம் பாடலுக்குக் கண்கள் நகர்ந்த போது விவரிக்கவியலாத வியப்பை அனுபவித்தேன். அந்த வரியிலுள்ள சொற்களைப் பார்த்து விட்டு எடக்கு மடக்காக யோசிக்காமல், முதலில் பாடலைப் பருகுங்கள்.  😁

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பெண்கள் நோற்ற நோன்பு என்பதையும், அந்நோன்பில்  பாவைப்பாடல்கள் பாடியபடி அதிகாலையில் நீர்நிலையொன்றில் நீராடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது என்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் திருவெம்பாவையில் இந்தப் பாடல் கவனத்தைப் பெறுவது இது ஒரு சிலேடைப் பாடல் என்பதால் தான். ஒரே நேரத்தில் தாங்கள் நீராடும் நீர்நிலையையும் சிவசக்தியையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு பாடும் இதன் கவித்துவ அழகு. 






நீர்நிலையை அதிகாலை அரையிருட்டில் பார்க்கிறார்கள் பெண்கள். "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"
அடர்ந்த நிறத்தில் குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர் மொட்டுக்களும் நிறைந்து காணப்படுகிறது நீர்த்தடாகம். அது கறுப்பு நிறத்து உமையையும், சிவந்த சிவத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. 


(இக்கால ஓவியர்கள் சிவனை நீலமாகவும், உமையை சிவப்பாகவும் வரைகிறார்கள். மரபு அதுவல்ல.  சிவந்தவன் என்பதால் தான் அவன், சிவன். தேவி கறுத்தவள். கறுப்பி என்பதால் காளி. உலகின் முதல் கறுப்பழகி.  திருமாலும் கறுத்தவனே. 'மால்', 'கண்ணன்' என்ற தமிழ்ப்பெயர்களுக்கும் 'க்ருஷ்ண' என்ற வடமொழிப்பெயருக்கும் நேரடிப்பொருளே கறுப்பன் என்பது தான். தெய்வங்களின் உடல் வண்ணத்தை கறுப்பு என்று சொல்லாமல், பச்சை அல்லது நீலம் என்று  சொல்லுவது இலக்கிய வழக்கு.)


அடுத்த வரிக்கு வருவோம்.
'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'
தடாகத்தின் கரைகளில் குருகுப் பறவைகளும், அங்கங்கே தண்ணீர்ப்பாம்புகளும் தென்படுகின்றன. குருகு என்பது ஆங்கிலத்தில் Cinnamon Bittern என்று அறியப்படும் பறவை. விலங்கியல் பெயர் Ixobrychus cinnamomeus. தெற்கு -  தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவை. சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும், அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குருகு -  Cinnamon Bittern
குருகு என்று சங்கையும் சொல்வதுண்டு. சங்கை அறுத்துச் செய்வதால் வளையலுக்கும் குருகு என்று பெயர். அல்லது ஒன்றோடொன்று உரசும் போது, குருகுப்பறவை போல் ஒலிப்பதாலும் வளையலுக்கு அப்பெயர் வந்திருக்கலாம். ஆக, குளத்தின் கரையிலுள்ள குருகுகள் உமையவளின் கைகளிலுள்ள வளையலையும், நீர்ப்பாம்புகள் சிவனுடலில் நெளிந்தாடும் பாம்புகளையும் பாவைப்பெண்களுக்கு நினைவூட்டுகின்றன. 

'தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்'
காலைக்கடன் முடிப்போர் 'கழுவ' வந்து சேரும் இடமும் அதே நீர்நிலை தான். உயிரின் அழுக்கையும் சைவம் 'மலம்' என்றே சொல்கிறது. மும்மலம். அதை நீங்கச்செய்வது சிவம். உடலழுக்கை நீக்கும் தடாகம், அவர்களுக்கு உயிரழுக்கை நீக்கும் சிவசக்தியாகத் தோன்றுகின்றது. சைவத்தின் சிறப்பே, அருவருப்பையும் அச்சத்தையும் ஊட்டும் அம்சங்களிலும் இறைவனைக் காணும் பார்வையை பின்பற்றுநனுக்கு வழங்குவது தான். நீர்நிலையில்  காலைக்கடன் முடித்தோர் கழுவுவதையும், இறைவன் உயிர்களின் மும்மலத்தை கழுவுவதையும் ஒப்பிடுவதிலுள்ள கவித்துவம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஆக, இப்படியெல்லாம் ஒப்பிட முடிவதால், இந்த நீர் பொங்கும் மடு, எங்கள் அரசனும் எங்கள் பிராட்டியுமான சிவனும் சக்தியும் போல் தோன்றுகிறது.
'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கு மடு'
சொல்லி வியக்கிறார்கள் பெண்கள். 

அதே வியப்போடு அவர்கள் நீரில் மூழ்கி பாய்ந்து நீராடி மகிழ்கிறார்கள். கைகளில் சங்குவளையல்கள் சத்தமிடுகின்றன, கால்களில் சிலம்புகள் சலசல ஒலியெழுப்புகின்றன.
'புகப் பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்ப, சிலம்பு கலந்து ஆர்ப்ப'

மார்கழிக் குளிரில், நீரின் குளிரில், மார்பகங்கள் மயிர்க்கூச்செறிந்து விம்முகின்றன. நீரில் குடைந்து குடைந்து ஆடுகையில், நீரும் பொங்கிக் குதூகலிக்கிறது. 
'கொங்கைகள் பொங்க குடையும் புனல்பொங்க'

தாமரை மலர்கள் செறிந்த இந்தப்பூம்புனல் நீர்த்தடாகத்தில் பாய்ந்தாடுக எம்பாவாய் 
'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்'
என்று முடிகிறது பாடல். 

பக்திச்சுவை சொட்டும் திருவாசக வரிகளைப் படித்து, பல தடவை மெய்மறந்து கண்ணீர் உகுத்திருக்கிறேன். ஆனால், அதன் குறியீட்டு அழகியலை உணர்ந்து மகிழச் செய்த அற்புதமான சந்தர்ப்பம், இப்பாடலை இரசித்த போது தான் கிடைத்தது. இயற்கையைப் போற்றும் மரபு, நமக்குத் தொன்றுதொட்டே உண்டு. ஒரு நீர்நிலையில் ஆண் பாதி, பெண் பாதியாக அமைந்த இறைவனைக் கண்டு மகிழ்வதும், அதிலே மகளிர் மகிழ்ந்தாடும் காட்சியை கண் முன்னே காட்டும்படி சொல்லோவியம் எழுதுவதும் தான் மணிவாசகத் தமிழின் அழகு. 

எங்கோ "கண்ணம்மா"வில் துவங்கிய என்னை, "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை" கண்ட மணிவாசகனிடம் இட்டு வந்த  கவிதையை, கடவுளை, கற்பனையை, வியப்போடு எண்ணிப் பார்த்தேன்.  மனம் ஒரு பெரும்போதை நாடும் தும்பி.  குடம் குடமாய் தேன் பருகினாலும், போதாதே அதற்கு!
குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன்குடமா?
இவ்வுலகே மலர்வனம்.
கவியின்பமே தேன்குடம்.
குதித்தாடாய் திருத்தும்பி!
குடைந்தாடாய் திருத்தும்பி!
ஆடேலோர் எம்பாவாய்! 💓


மேலும் வாசிக்க »

அறுகம்பைக் கடலோரம் - ஒரு இடப்பெயர் ஆய்வு

0 comments

கிழக்கிலங்கை என்றதும் இரு சுற்றுலாத்தலங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். ஒன்று, பாசிக்குடா இன்னொன்று அறுகம்பே.  நாம் இப்போது வந்திருப்பது அறுகம்பேக் கடலோரம்.  என்ன முழிக்கிறீர்கள்? சீசன் இல்லாத காலத்தில் ஏன் நாம் அறுகம்பைக்கு வரவேண்டும் என்றா? ஹலோ, நாம் இங்கு வந்திருப்பது, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை புதினம் பார்த்து வாய் பிளக்கவோ, கடலில் குதித்து குளித்து மகிழவோ இல்லை. இந்த இடத்தின் பெயரை ஆய்வு செய்ய. கவனம் அலைகளில் கால் படாமல் தள்ளி நின்றுகொண்டே சொல்வதைக் கேளுங்கள். 

“அறுகம் மட்டக்களப்புக்குக் கிழக்குப்புறம் 64 மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமம். அதேபெயரிலுள்ள ஒரு குடாவின் கரையில் அது அமைந்திருக்கிறது. அங்கு  களியாலான சிறுகோட்டையொன்று இடச்சுக்களால் ஒருமுறை இராணுவ முகாமாகப் பயன்பட்டது. தற்போது அங்கு நெல் சேமிக்கப்படும் ஒரு களஞ்சிய அறை உள்ளது" என்று 1834இல் எழுதுகிறார் சைமன் காசிச்செட்டி. 

யாரிந்த சைமன் காசிச்செட்டி? இலங்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் சைமன் காசிச் செட்டி. புத்தளம் கற்பிட்டியில் பிறந்த இவர், இலங்கையின் சட்டவாக்கக் கழகத்தில் தமிழ்ப்பிரதிநிதியாகப் பதவி வகித்தவர். இலங்கைத் தமிழர் மற்றும் தமிழ் மொழி பற்றி பிரித்தானியரின் கவனத்தை அதிகம் ஈர்த்தவை, இவரது ஆக்கங்களே என்றால் மிகையாகாது. உதயாதித்தன் என்ற தமிழ்ச்சஞ்சிகை, தமிழ்ப்புலவர் வரலாறு கூறும், "தமிழ் புளூடாக்", இலங்கை வரலாற்றைக் கூறும் சரித்திர சூதனம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. 
சைமன் காசிச்செட்டி

எனினும் இவை எல்லாவற்றையும் விட அதிகம் புகழ்பெற்றது, இலங்கையின் மாவட்டங்கள், கிராமங்கள், சாதிகள், சமயங்கள் பற்றிய சுருக்கமான சமகாலத் தொகுப்பான சிலோன் கசெற்றியர். கொட்டாவை தேவாலய திருச்சபையால் 1834இல் வெளியிடப்பட்ட இந்நூலில் உள்ள தகவல்கள், அவற்றின் சமகால இயல்பால் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. அந்நூலில் தான் அறுகம் பற்றிச் சொல்கிறார் காசிச்செட்டி.

அறுகம் என்று காசிச்செட்டி சொல்லும் இந்தக் கிராமம் வேறெதுவுமில்லை. இன்றைய புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான அறுகம்பை தான். அறுகாமம் என்பதே அதன் சரியான பெயர். பசறையில் தோன்றி கிழக்கே ஓடிவந்து அறுகாமத்துக்கு அருகில் கடலில் கலக்கும் ஆற்றுக்கும் அறுகாம ஆறு என்று தான் பெயர். இன்று அதை குருந்த ஓயா என்கிறார்கள். 

அறுகாம ஆற்றினால்  அறுக்கப்பட்டதால் தான் இவ்வூருக்கு அறுகாமம் என்று பெயர் வந்ததோ, தெரியவில்லை.  அல்லது அறுகம்புற்கள் செறிந்து வளர்ந்த பகுதியாகவும் இருந்திருக்கலாம்.  கிழக்கிலங்கைத் தொன்மங்களில் இது "அறுகமனப் பூமுனை" என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் இறைவனான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமியின் ஆளுகைக்குட்பட்ட வட எல்லையாக அம்பிளாந்துறையையும், தென்னெல்லையாக இந்த அறுகமப்பூமுனையையும் சொல்வது மரபு. 

அறுகம், அறுகாமம் என்பவற்றுக்கு சம்பந்தமின்றி, அறுகம்பையில் வரும் அந்த 'பை” ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? வேறொன்றுமில்லை. நம்மவர்கள் தான் அதீத அறிவாளிகள் ஆயிற்றே. அறுகம் குடா என்ற தமிழ்ச்சொல்லை வெள்ளையன் அறுகம்பே (Arugam Bay) என்று  மொழியாக்கினால், நாம் அதை மீண்டும் அறுகம்பை என்று தமிழ்ப்'படுத்தியிருக்கிறோம்'. 

பழைய பாணமைப்பற்றில் முக்கியமாக இருந்த இரு ஊர்களில் ஒன்று அறுகாமம். மற்றையது பெரிய பாணகை என்று அறியப்பட்ட இன்றைய பாணமை. பிற்காலத்தில், அறுகாமம் என்ற தனி ஊர்,  பொத்துவில், அறுகம் என்று இரு தனித்தனி ஊர்களாக இனங்காணப்படத் தொடங்கிவிட்டது என்பது வேறு ஐரோப்பியப்   பதிவுகளில் தெரியவருகிறது. 

பொத்துவில் இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரம். பொத்துவில் என்ற இடப்பெயரை ஆராய்ந்தால், அது பொதுவில் அல்லது புற்றுவில் அல்லது போதிவில் என்ற சொற்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடும். வில் என்றால் ஈழத்தமிழில் சிறுகுளத்தைக் குறிக்கும். வில் வடிவில் வளைந்திருக்கும் இந்தச் சிறுகுளங்களின் இன்னொரு குறிப்பிடத்தக்க இயல்பு, இவை கோடைகாலத்தில் வற்றி மேய்ச்சல் நிலமாக மாறிவிடும் என்பது. அப்படி பல சமூகத்தவருக்கும் பொதுவாக இருந்த, அல்லது புற்றுக்கு அண்மையில் இருந்த, அல்லது போதிமரத்துக்கு (அரசமரம்) அருகில் இருந்த வில்லொன்றின் காரணமாக பொத்துவில் என்ற பெயர் தோன்றியிருக்கலாம். ஒரு காலனித்துவ வரைபடத்தில் 'போதிவில தூபி' (Potevila Pagoda) என்று உச்சரிக்கக்கூடிய ஒரு இடமொன்று குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் உற்றுநோக்கவேண்டும்.

பொத்துவில் முகுது மகா விகாரையிலுள்ள தொல்லெச்சங்கள்

இது மகாயான பௌத்த மையமாக இருந்திருக்கக்கூடும் என்பது, பொத்துவில் கடற்கரையோரமாக அமைந்திருந்த பழைமை வாய்ந்த முகுது மகா விகாரையில் கிடைத்துள்ள போதிசத்துவர் சிலைகள் மூலம் தென்படுகிறது. எனினும், சமீப காலமாக,  துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கடலில் வந்து ஒதுங்கிய இடம் பொத்துவில் தான் என்றும், இங்கு தான் உரோகண மன்னன் காக்கைவண்ண தீசன் ஒரு விகாரம் எழுப்பினான் என்றும் ஐதிகங்கள் உருவாகிப் பரவுகின்றன. ஆரம்பத்தில்  இப்படி விகாரமாதேவி கடலில் அடைந்த இடம் என்று, அம்பாந்தோட்டையிலுள்ள கிரிந்த பகுதியைத் தான் சொல்லி வந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொத்துவில் இருக்கட்டும். உல்லைப் பக்கம் காலாற நடப்போம் வாருங்கள். அதென்ன உல்லை?  அறுகம்பையின் உள்ளுர்ப் பெயரான “உல்லை" என்பது எப்படி வந்ததென்று சரியாகத் தெரியவில்லை. அது 'நுல்லை” அல்லது 'நுள்ளை” என்ற மட்டக்களப்பு வட்டாரவழக்குச் சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம். நுல்லை என்ற சொல், இங்கு மாரி கால வெள்ளத்தால் கடக்கமுடியாதபடி பாதிக்கப்படும் சிறுவழிகளைக் குறிக்கும்.  அறுகங்களப்பின் இரு கரைகளையும் இணைத்த நுல்லை என்ற சிறுவழியின் பெயரே பின்பு உல்லை ஆகியிருக்கலாம். பேச்சுவழக்கு நுல்லை என்பது, பழந்தமிழில் 'நுழை' என்று எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அடடே! சைமன் காசிச்செட்டி சொன்ன ஒரு முக்கியமான குறிப்பை நான் தவற விட்டுவிட்டேன். என்னவென்று கண்டுபிடித்தீர்களா?. அதே தான். அறுகங்குடாவில் இருந்த களிமண்ணாலான ஒல்லாந்தரின் சிறுகோட்டை. 
1813 பிரித்தானிய வரைபடமொன்றில் அறுகம் குடா,  பொத்துவில், பொத்துவில் தூபி, அப்புறத்தோட்டக் குடா, நாவலாறு.

ஆம்,  காசிச்செட்டியார் சொல்வது உண்மை தான். பழைய ஒல்லாந்து இலங்கை வரைபடங்களைத் தட்டினால், பாணகைக்கு வடக்கே  "அப்புறத்தோட்டை" அல்லது "அப்பர்ர தோட்டம்" என்ற பெயரில் அமைந்திருந்த சிறு இடச்சுக்கோட்டை ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒல்லாந்து ஆளுநராக விளங்கிய வான்கூன்ஸ் என்பவர், தென்கிழக்கிலங்கையை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக வைத்திருக்க, இந்தக் கோட்டையைப் பெருப்பித்துக் கட்டும் திட்டம் கொண்டிருந்தாராம். இப்போது இந்தக் கோட்டையின் அடையாளம் எதுவும் இல்லை.  இது அறுகாமத்தின் அருகே இருக்கும் பசறிச்சேனை பகுதியில் அமைந்திருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.

இப்படி பல வரலாற்றுத்தகவல்கள் நமக்கு அறுகம்பை சார்ந்து கிடைக்கின்றன. அடுத்த தடவை அறுகம்பைப் பக்கம் போகக்கிடைத்தால், தொபுக்கடீர் என்று தண்ணீரில் பாய்ந்து குளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்தப் பெயர் விடயங்களையும் மறக்காமல் அசைபோடுங்கள். ஏனென்றால், வரலாறு முக்கியம் அமைச்சரே!


(அரங்கம் இதழின் 2018.12.14 இதழில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

அலகிலா ஆடல் நூல் விமர்சனம் | நடேசபிள்ளை சிவேந்திரன்

0 comments


அலகிலா ஆடல் வாங்க: 

எழுத்தாளர் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட “அலகிலா ஆடல்:சைவத்தின் கதை” என்ற நூல், இலங்கை சைவநெறிக்கழகத்தால் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சைவத்தின் கதை என்று உப தலைப்பு அளிக்கப்பட்டிருக்கும் இந்நூல் பழங்குடிகளின் தெய்வமாக இருந்து பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி தனி ஒரு பெருந்தெய்வமாகி சிவம் என்று தத்துவத்தளத்தில் விரியும் பரம்பொருளின் கதையைக் கூறுகிறது என்று சொன்னால் அது, மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கும்.

பெயரே சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த “அலகிலா ஆடல்” எவ்வகையான நூல்? சொல்லப்போனால் இது சைவ நம்பிக்கை சார்ந்த சமய நூல் அல்ல. சைவத்தை புறவயமாக வரலாற்றுப் போக்கில் அள்ள முனையும் நூல். மிகப்பெரும் காட்டினுள் அதனூடாக ஓடும் ஆறொன்றின் கரையோரமாக உள் நுழையும் அனுபவத்தையே இந்த நூல் தருகின்றது. பயணத்தில் ஒவ்வொரு மரமாக, செடி, கொடியாக, பறவைகள், விலங்குகளாக, ஒன்றையும் விட்டுவிடப் போவதில்லை என்று அறிமுகப்படுத்திச் செல்கிறார் நூலாசிரியர். சைவ வரலாற்றுக் கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அத்தனை தகவல்கள். அவர் குறிப்பிட்டுச் செல்லும் ஒவ்வொன்றையும் ஆர்வமுள்ளவர்கள் மேலும் மேலும் தேடியறிந்து சென்று கொண்டே இருக்கலாம். உண்மையிலேயே அலகிலா ஆடல்தான்.

இன்று சைவம், இந்து என்ற இரண்டு சொற்களையும் வைத்து விவாதங்கள் நடைபெறுவதை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகின்றது. இரண்டு சொற்களையும் சரியான விதத்தில் புரிந்துகொண்டால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற தவறான நோக்கில் எழும் வாதங்கள் தேவையற்றனவாகிவிடும்.

இந்து என்பது இந்தியாவில் உருவான ஊடும் பாவும் உடைய பல்வேறு மதங்களுக்கான பொதுப் பெயர். இந்து என்பதை இந்து மதம் என்று தனியொரு மதமாக கருதுவது தவறு/ இந்து என்றால் இந்துமதங்கள் என்று கொள்வதே சரி. சைவம் அதில் பழமையான முதன்மையான மதம். இதைத்  தெளிவுபடுத்தும் விதமாக ‘ஓங்காரம்’ என்னும் அறிமுக அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்திய தெய்வ வடிவங்கள் பொது ஆண்டுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் நடந்த அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப் பின்னரான கிரேக்க செல்வாக்கின் தாக்கத்தால் உருவானவை என்ற வாதம் வரலாற்றாய்வாளர்களிடம் உள்ளது.

சைவத்தின் ஆரம்பகாலச் சுவடுகளை விபரிக்கும் ‘படைத்தல்’ என்னும் முதல் அத்தியாயத்தில் பொது ஆண்டு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குஷாணர் இலச்சினையில் காணப்படும் மூன்று முக சிவ வடிவம்,  சிந்துவெளி நாகரிக மூன்று முக முந்து சிவ வடிவத்தின் நீட்சியாக இருக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டு எலிபண்டா குகை திரிமூர்த்தியும் இந்த மூன்று முக சிவ வடிவத்தின் வளர்ச்சியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தொடர்புடுத்தல் கிரேக்க செல்வாக்கால் இந்திய தெய்வ வடிவங்கள் உருவானவை என்ற கருத்துக்கு வலுவான எதிர்வாதமாக இருக்கின்றது. ‘காத்தல்’ என்னும் இரண்டாம் அத்தியாயம் பல்வேறுபட்ட சைவப்பிரிவுகளை ஆராய்கின்றது.

அண்மையில் கோசைநகரான் என்பவர் தமிழகத்தில் நடத்திவரும் திருமுறைத் தமிழ்வழித் திருமணமொன்றின் ஒளிப்பதிவைப் பார்த்தபோது ஒரு நிகழ்வு கவனத்தை ஈர்த்தது. சிவபூசை செய்த பின்னர் மணமகன் ஏனையோருடன் இணைந்து ஒரு மின்னல் வேக நடனமொன்றை ஆடி முடிக்கிறார். இன்று மேலைநாடுகளின் வீதிகளில் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் பாடலுடன் ஆடிச் செல்லும் முறையின் மூலம் சைவத்தில் இருந்து சென்றிருக்கவேண்டும் என்று தோன்றியது.

ஆதிசைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதம், சிவ வழிபாட்டில் சிரித்தல், ஆடுதல்,பாடுதல், வணங்குதல், செபித்தல், ஹூடுக் என்னும் மந்திரம் உச்சரித்தல் என்னும் ஆறு உபசாரங்கள் செய்யப்படவேண்டும் என்று கூறுகின்றது என்பதை வாசித்தபோது அது சரியாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகின்றது. பழங்குடிகள் நிகழ்த்திய வேலன் வெறியாட்டு போன்ற தெய்வம் இறங்கும் ஆடல்களின் செம்மையான மீள் நிகழ்த்துகையாக,  நடனத்தை சைவம் உள்வாங்கி வளர்த்திருக்கக்கூடும்.

‘அழித்தல்’ என்னும் மூன்றாம் அத்தியாயம் ஏனைய இந்திய மதங்களுடனும் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களுடனுமான சைவத்தின் ஊடாட்டங்களையும் முரண்பாடுகளையும் பேசுகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் காலத்தின் பின்னர் ஆண்ட இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் ஒரு வைணவனாவான். பல்லவ நாட்டை ஆண்ட சிம்மவிஷ்ணுவுடன் பல்லவ பரம்பரை முடிவுற்றதால் கம்புஜதேசத்தில் (இன்றைய கம்போடியா) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவ கிளை மரபினைச் சேர்ந்த இவனை, பல்லவ நாட்டிலிருந்து சென்ற குழு அழைத்து வந்து அரசுக்கட்டிலேற்றியது. இவனே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாள் சிலையை வைத்ததாகக் கூறப்படுகின்றது. ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அந்தச் சிலை அகற்றப்பட்டது. சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தவே கோவிந்தராஜர் சிலை அகற்றப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் குலோத்துங்க சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர்,
"தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து” என்று பாடுகிறார்.
கோவிந்தராஜனால் ஏற்பட்ட தொல்லைக் குறும்பு என்னவாக இருக்கக்கூடும் என்பதற்கு ‘அழித்தல்’ என்னும் இந்த அத்தியாயத்தில் வைணவம் குறித்து வரும் பகுதியில் ஒரு பிடி கிடைக்கிறது.
"விஷ்வக்சேன சம்ஹிதை எனும் வைணவ நூலும், 14 ஆம் நூற்றாண்டு வேதாந்த தேசிகரின் பாஞ்சாராத்திரரக்ஷா எனும் நூலும், கிரண, காமிக ஆகமங்களிலுள்ள விஷ்ணு ஸ்தாபன வரிகளைக் குறிப்பிட்டு, வேதத்தால் கண்டிக்கப்படும் சைவரின் இம்மரபை ஏற்கக்கூடாதென்றும் சைவ ஸ்தாபனம் செய்யப்பட்ட விஷ்ணு விக்கிரகங்களை பாஞ்சாராத்திர முறையில் மீண்டும் ஸ்தாபனம் செய்யவேண்டும் என்றும் ஆயிரம் குடங்களால் அபிஷேகம் செய்து கழுவாய் தேடவேண்டும் என்று சொல்கின்றன” என்ற வரிகள். 

சைவ ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த தில்லை கோவிந்தராஜர் விக்கிரகத்தை இராமானுஜர் காலத்தில் வைணவர் பாஞ்சாராத்திர முறைப்படி மீள் ஸ்தாபனம் செய்ய முனைந்திருக்கவேண்டும். இதுவே பூசலுக்கு வழிவகுத்த காரணமாக இருக்கலாம். இராமானுஜர் பாஞ்சாராத்திர முறைப்படி வைணவக் கோயில்களை மாற்றியமைத்த வரலாற்று நிகழ்வுகள் இந்தக் கோணத்தை வலுப்படுத்துகின்றன.

‘மறைத்தல்’ என்னும் நான்காம் அத்தியாயம் பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் தென்னக ஆசியாவில் (தெற்கு - தென்கிழக்கு ஆசியா) அரச மதமாக பல்வேறு நாடுகளில் கோலோச்சிய சைவத்தின் பெருமையையும் அதற்கு அடித்தளமாக அமைந்த, அனைவரையும் உள்வாங்கும் அதன் தன்மைகளையும் விபரிக்கின்றது.

சில சைவ நூல்களில் அரச பட்டாபிஷேகத்திற்கென இடம்பெற்றுள்ள விரிவான கிரியைகள் அளவுக்கு வேறெந்த பழைய வைணவ, பௌத்த, வைதீக நூல்களிலும் இடம்பெறவில்லை என்று குறிப்பு சைவம் இராஜாங்க சைவம் என்று பெயர்பெற்றது வெற்றுப் புகழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகின்றது.


வைதீகப் பிராமணர்கள் அரசனுக்கு புரோகிதர்களாகவே இருந்தார்கள், சைவ சித்தாந்த வழியிலான சிவப்பிராமணர்கள் மன்னனுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறும் இராஜகுரு என்னும் உயரிய பொறுப்பில் இருந்தார்கள் என்ற தகவலும் அதை உறுதி செய்கின்றது.

“மனிதர் என்ற ஒரேயொரு சாதியே உள்ளது. பிறப்பை வைத்தோ நிறத்தை வைத்தோ எவரையும் அளவிடக்கூடாது. எல்லோரும் சாதாரண கலவி மூலம் பிறந்த உயிர்களே. தவிர ஆன்மாக்களில் ஒன்று உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்று இல்லை” என்று சொல்கின்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் கூற்று, சைவத்தின் முடிசூடிய வெற்றியின் அடித்தளமாக இருந்தது மானிட சமத்துவமே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இதுவே சைவ அரசர்களின் காலத்தில் பல்வேறு குடிகளை உள்வாங்கி சிற்றரசுகள் பேரரசுகளாக உருவாக அடிப்படையாக அமைந்த உந்துவிசையாகும்.

மேலும் சாதாரண கலவியில்தான் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள் என்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் பிரகடனம் வைதீகம் தூக்கிப் பிடிக்கும் முகம், தோள், தொடை, கால் வர்ணத் தோற்றத்தை நேராகவே நிராகரிக்கும் தன்மையுடன் அமைந்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ஐந்தாவதும் இறுதியுமான ‘அருளல்’ என்னும் அத்தியாயம் சைவத்தின் எதிர்காலம் குறித்தும் இனி அதை எவ்வாறு காலத்துக்குத்தக நிலைநிறுத்துவது என்பது குறித்தும் பேசி நிறைகின்றது. அதேவேளை அது காலத்துக்கேற்ற மாற்றம் என்பது சைவத்தின் தனித்துவத்தை சிதைத்து ஆப்ரஹாமிய மதங்களைப் போன்று மாற்றுவதல்ல என்பதையும் வலியுறுத்துகின்றது.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், பௌத்தர்களுக்கு திரிபிடகம் போன்று சைவர்களுக்கு என்ன என்ற கேள்வி சாதாரணமாகவும், பொது அறிவுக் கேள்வியாகவும் எழுப்பப்படுவதும் அதற்கு அறியாமை காரணமாக எவரேனும் பகவத்கீதை என்று பதில் கூறுவதும் நாம் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுதான்.

சைவர்களுக்கு தனியொரு புனித நூல் கிடையாது. புனித நூல் தொகுதியே உள்ளது. வடமொழியில் உள்ள வேதங்கள், ஆகமங்கள்,  தென்மொழியாகிய தமிழில் உள்ள திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்னும் திருநெறிகள் ஆகிய நான்கும் புனித நூல் தொகுதியில் முக்கியமானவை. உங்கள் புனித நூல் எது என்ற கேள்விக்கு குறைந்தபட்சம் இந்த நான்கு நூல் தொகுதிகளையும் கூறக்கூடியவர்களாக சைவர்கள் இருக்கவேண்டும்.

சைவர்களைப் பொறுத்தவரை பகவத்கீதை ஒரு துணை நூல் மாத்திரமே என்பதை மறந்துவிடக்கூடாது. ‘அலகிலா ஆடல்’ நூல் தரும் தகவல்களை நான் என் சிந்தனையுடன் எவ்வாறு இணைத்துக்கொண்டேன் என்ற விளக்கவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓரிரு பொறிகளை எடுத்துக்காட்டினேன். இந்த நூல் முன்னரே குறிப்பிட்டது போன்று ஒரு கானகப் பயணம். இது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய திறப்புகளை அளித்துக்கொண்டே இருக்கும்.

இந்த நூலின் பின்னணியில் இருக்கும் உழைப்பு சாதாரணமானதல்ல என்பதை வாசிப்பவர் அனைவரும் உணர்வர். இந்த நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்த இலங்கை சைவநெறிக் கழகத்துக்கு பாராட்டுகள்.

(25 நவம்பர் 2018 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

சைவநெறிக் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா

0 comments

இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் வெளியீட்டு விழா, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2018 ஒக்டோபர் 20 (சனிக்கிழமை) கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சைவப்புலவர் திரு ந.சிவபாலகணேசன் எழுதிய "சிவப்பிரகாசக் கதவம்", கழகப் பொதுச் செயலாளர் திரு வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.  யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.



விழா அரங்கில் விருந்தினர்கள்
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி. திருமதி. சாந்தி கேசவன் "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு அறிமுகவுரை ஆற்றுகிறார்.





யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர், சைவப்புலவர் திரு.சி.ரமணராஜா "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு நயவுரை ஆற்றுகிறார்





சித்தாந்தரத்தினம் திரு.சிவபாலகணேசன் அவர்களின் "சிவப்பிரகாசக் கதவம்" நூல் வெளியிடப்படுகிறது.

"அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலை யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் வெளியிட, பெற்றுக்கொள்பவர் திருமதி.கைலாசபிள்ளை அம்மையார் அவர்கள். 



மேலும் வாசிக்க »

மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!

0 comments


கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன. தனித்துவம் என்னவென்றால், விளக்கீடு தமிழர் மத்தியில் மட்டுமே வழக்கில் இருக்கின்றது.

தீபாவளி, தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் (பொ.பி 17ஆம் நூற்றாண்டு) பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்கின்றது என்பது பொதுவான தகவல். ஆனால் தீபாவளி தொடர்பான மிகப்பழைய தமிழ்ச்சான்று எங்கு கிடைக்கின்றது தெரியுமா? இலங்கையில்.

தம்பைமாநகர் (குருணாகல் - தம்பதெனியா) அரசனான (3ஆம் அல்லது 4ஆம்) பராக்கிரமபாகு முன்னிலையில், போசராச பண்டிதரால் பொ.பி 1310இல் அரங்கேற்றப்பட்ட சோதிட நூல் சரசோதிமாலை. இதன் ஏழாவது தெய்வவிரதப் படலத்தில் தீபாவளி கடைப்பிடிப்பது எப்படி என்பது பற்றிய செய்யுளொன்று காணப்படுவதுடன், அதில் "பிதிர்கள் இன்பமுறு தீபாவலி" என்ற வரியைக் காணமுடிகின்றது. (அடுத்த செய்யுளில் 'ஆரல் நலமாமதி' என்று கார்த்திகை தீபம் சொல்லப்படுவதால், அதுவும் இதுவும் அப்போதே தனித்தனியாகவே வழக்கில் இருந்தமை தெரிகின்றது).

ஒரு சோதிட நூலாக இருந்த போதும், 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் நூல், சரசோதிமாலை. ஆர்வமுள்ளோர் இங்கு தரவிறக்கிப் படிக்கலாம்: 



சரி. அதை விட மேலதிகமாக, மூன்று குறிப்புகளை நாம் கவனிக்கவேண்டும். 

குறிப்பு 01:
தமிழில் "குன்றில் இட்ட தீபம் போல" என்றோர் உவமை இருக்கிறது. பலர் காண, அல்லது பலர் புகழ வாழும் ஒருவரைக் குறிப்பிட இந்த மரபுத் தொடர் பயன்படுவதுண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி "குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன" என்று இதே உவமையை எடுத்தாண்டிருக்கிறது. இன்றும் கார்த்திகைத் தீபமன்று, திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் விளக்கு புகழ்பெற்ற ஒன்று. திருப்பரங்குன்றம் போன்ற வேறு சில கோவில்களிலும், கார்த்திகை விளக்கீடன்று மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

குறிப்பு 02:
இலங்கையில், குறிப்பாக எங்கள் ஊர்ப்பக்கம் மூதாட்டிகள் வாழ்த்தும் போது, "கதிரமலைல வச்ச விளக்குப் போல வாழுங்கோ" என்று வாழ்த்துவார்கள். கதிரமலை, கதிர்காமத்திலுள்ள மலை. அங்கு இன்று விளக்கேதும் எரிவதாகத் தெரியவில்லை. ஆனால், கார்த்திகை விளக்கீட்டின் தொடர்ச்சியாக, இப்போதும் கதிர்காமத்தில் "இல் மஹ கச்சி பெரகரா" இடம்பெறுகிறது. பொதுவாக நவம்பரில் (தமிழ் கார்த்திகை) வருகின்ற முழுநிலவைத் தான் சிங்களப் பஞ்சாங்கம் 'இல்' என்று அழைக்கிறது. மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழா, வருடாந்த ஆடிவேல் விழாவுக்கு அடுத்தபடியாக கதிர்காமத்தில் புகழ்பெற்ற ஒன்று.

குறிப்பு 03:
கிழக்கிலங்கைத் தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் "ஆடகசௌந்தரியின் மகன் சிங்ககுமாரன் ஆடித்திங்கள், அமாவாசை இருநாளும் இராவணேஸ்வரன் பெயரில் உக்கந்தத்திருப்பணியில் பெரிய தீபம் ஏற்றும்படி திட்டம்செய்தான்" என்ற குறிப்பு உள்ளது. இங்கு சொல்லப்படுவது கீழைக்கரையின் தென்கோடியிலுள்ள உகந்தமலை.

இப்போது கேள்வி இது தான். மலையுச்சியில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம், குறிப்பாக முன்னோர் வழிபாடாக மலையுச்சியில் தீபமேற்றும் வழக்கம், பண்டு தொட்டே நம் மத்தியில் இருந்திருக்கிறதா? பலர் காண மலையுச்சியில் தீபம் ஏற்றுவதற்கு, ஏற்றியதற்கு, சடங்கு - மரபு தவிர்ந்த வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக்கூடுமா? பழந்தமிழ் இலக்கியங்களில் வேறு எங்கேனும் இத்தகைய தகவல்கள் பதிவாகி இருக்கின்றனவா? எல்லாவற்றுக்கும் மேல், என்றோ நம் தொல்மூதாதை ஒருவர் கண்ட எரிமலை வெடிப்பு, அல்லது மலைச்சரிவுக் காட்டுத்தீ தம் முன்னோரை அழித்ததை நினைவுகூரவே இது நோன்பாக மாறித் தொடர்ந்ததா? 

அறிந்தவர் விளக்கினால், விளக்கெனத் தொழுவேன்.
பிந்திய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 
மேலும் வாசிக்க »

திரையிசை இலக்கியம்

12 comments

நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும்.

சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.
                                             

அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தாதி ஆறாம் பாடல். இதையெப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம்? 

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

தேவியின் அடியவன் அவளது பாதங்களைத் தலையில் சூடியிருப்பான். சிந்தனை முழுக்க அவளது மந்திரமே ஓடும். ஏனைய அடியார்களுடன் சேரும் போதும், அவன் அவளது புகழ்மொழிகளையே கூறுவான்.

இந்த வரிகளை, நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடுகிறான் என்று கொண்டால், அவ்வரிகள், அக்காதலை வேறொரு தளத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, இல்லையா?

பக்தி மார்க்கத்து வரிகள், உலகியல் சார்ந்து நாயகனால் நாயகி மீது பாடப்படும் என்றால், உலகியல் சார்ந்து நாயகி மீது பாடப்பட்ட வரிகளை, பக்தி மார்க்கத்திலும் தெய்வம் மீது பயன்படுத்தலாம் தானே? வைஸ் வேர்சா.

திரையிசை அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.  தமிழகத் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பாடல் "சொல்லடி அபிராமி". 1971இல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அது. சாதாரணமாகக் கேட்பவர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அப்பாட்டில் வரும் இடம் ஒன்றுண்டு.
                                             

இந்த வரிகளும் தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமானவை தான். குற்றாலக் குறவஞ்சி. அதன் பாட்டுடைத் தலைவியான வசந்த சுந்தரி பந்து விளையாடுகிறாள். எப்படியென்றால்,


செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட, இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே! 

சிவந்த கையிலுள்ள வளையல்கள் கலிங் கலிங்கென்ற ஒலியுடன் "வெற்றி வெற்றி" என்று கோஷம் இடுகின்றன. செம்மையான இசை என்று சொல்லும் படி,  சிலம்பும் தண்டையும் கலந்து ஒலிக்க இடை அசைந்தாடுகின்றது. இரு தனங்களும் "கொடிய பகையை வென்றுவிட்டோம்" என்று குழைந்து ஆட, மலர்க்கொடி போன்ற பெண்ணான வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாளாம். 

இன்பச்சுவை சொட்டும் இந்த வரிகளை, பக்திச்சுவை எனும் தட்டில் கொட்டி, "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட" என்று உருகுகிறார் கண்ணதாசன். அங்கு அன்னை காதலி ஆகிறாள். இங்கு காதலி அன்னை ஆகிறாள்.  இலக்கியத்தின் அழகு!

யூரியூப்பில் தேடிய போது, இதைவிடப் பழைய இன்னொரு படமான "குறவஞ்சி"யில் இதே பாடல் வேறொரு விதமாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது.
                                             

என்ன கறுப்பு வெள்ளை சலிப்பூட்டுகிறதா? சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா? என்ன? இசைப்புயலா? குற்றாலக் குறவஞ்சிக்கு இசையமைத்திருக்கிறாரா? அதிர்ச்சி எல்லாம் அடையவேண்டாம். கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆறுதலாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.



இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம்
முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கு அணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொண்டாடினளே!

இவள் திருமகளோ, பேரழகியோ, ரம்பையோ, மோகினியோ என்றெல்லாம் பார்த்தவர் வியக்க, பந்தை அடிக்க மனம் விரைகிறதா, விழிகள் முந்துகின்றனவா, கை முந்துகின்றதா என்று சிந்திக்க வைக்க, சந்திரனைச் சூடிய குற்றாலநாதரின் வீதியிலே மணியாபரணம் அணிந்த வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாள் என்பது பாடல் வரிகள். இரட்சகன் திரைப்படத்தில் பிரிந்திருந்த காதலர் சேரும் காட்சியில் மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல்.உள்ளத்தால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உடலால் இருவரும் விலகி நிற்கும் அந்தக் காட்சியில் இந்தப் பாட்டு வரிகள் எப்படிப் பொருந்துகின்றன? யூரியூப்பில் "ரீப்ளே" கொடுத்தபடி யோசியுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற இந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பாக, கீழ்வரும் நான்கையும் சொல்லலாம். "கோச்சடையான்" திரைப்படத்தில் வரும் தாண்டவக் காட்சிக்கு முன் ஒலிக்கும் "மாசில் வீணையே" எனத் தொடங்கும் வரிகள். அப்பர் தேவாரத்திலிருந்து பெறப்பட்டது அது.
                                             

அதே போல், "காவியத் தலைவன்" திரைப்படத்தில் இடம்பெறும் "ஏவினை நேர்விழி" எனத் துவங்கும் திருப்புகழ். வாணி ஜெயராமின் குரல். வேதிகாவின் அற்புதமான அபிநயம். மயிற்பீலி போல வருடும் மெல்லிசை. அப்படியே உள்ளம் உருகச் செய்யும். பௌர்ணமி நள்ளிரவுகளுக்கான என் இசைத்தொகுதியில் இடம்பிடித்துள்ள முக்கியமான பாடல் இது.
                                             


இவற்றுக்கு கொஞ்சமும் குறையாமல், "மார்கழித் திங்களல்லவா"வுக்கு முன்பு வருகின்ற "மார்கழித் திங்கள்",  சிவாஜி திரைப்படத்தில் ஒலிக்கும் "மாலே மணிவண்ணா" ஆகிய இரு ஆண்டாள் பாசுரங்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மெய் சிலிர்க்க வைப்பவை.  (இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதில் வரும் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் தான் இந்தப் பாசுரத்தையே இனங்காட்டியது 😇).

சரி, சரி, இசைப்புயல் புகழ் போதும்.. எங்கள் இசைஞானி மட்டும் சளைத்தவரா என்று  எதிர்க்கோஷ்டியினர் கிளம்பி விடாதீர்கள். இசைப்புயலை விட, இசைஞானியின் பாடல்களில் தான் அதிகம் தமிழ் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது என்று பட்சி சொல்கிறது.  உடனடியாக நினைவுக்கு வரும் இளையராஜாவின் புதுப்பாடல், தாரை தப்பட்டை "பாருருவாய". முழுக்க முழுக்க திருவாசக வரிகள் அப்பாடல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் தடவை கேட்டபோதே ஏனென்று தெரியாமல் கண் கலங்கியிருக்கிறேன். காட்சியோடு பார்க்கும் போது மனதை அப்படியே பிழிந்து போடும். இந்தப்பாடலில் இரு வேறுமங்கள் (versions) இருக்கின்றன. ஒன்று கீழே. இன்னொன்று இங்கே.
                                             


திருப்புகழ், குறவஞ்சி என்று பிற்கால இலக்கியங்கள் தானா. வைரமுத்தரின் துண்டு துக்கடா வரிகள் போலன்றி, சங்க இலக்கியங்கள் ஒன்றும் முழுமையாக திரையிசையில் எடுத்தாளப்படவில்லையா என்று கேட்பீர்களென்றால்,  இருக்கிறது. மிக அண்மைக்காலத்தில் வெளியான ஒரு பாடல் இருக்கிறது. நம்மவர் சினமா "யாழ்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிவயநம' பாடல். அதில் பாடப்படுவது, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "பொருநராற்றுப்படை". பாடகர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பாடியிருந்தால், இப்பாடல்  அடைந்திருக்கக்கூடிய உயரமே வேறு.
                                              



அத்தனை பிரபலமாகாத இன்னொரு பாடல் இருக்கிறது. "திங்கள் மாலை வெண்குடையான்".   'கரும்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கானல் வரிகள். 70களில்  தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லையாம். புகழ்பெற்ற இந்திய இசைமேதை சலீல் சௌத்ரியால் இசையமைக்கப்பட்ட பாடல் இது. 
                                             

இப்படி, நேற்றைய கண்ணதாசனிலிருந்து, இன்றைய வைரமுத்து வரை,  நேற்றைய எம். எஸ்.வி, ராமமூர்த்தியிலிருந்து, இன்றைய இசைஞானி, இசைப்புயல் வரை எல்லோருமே மரபைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் தான். திரையிசையில் இன்னும் மூழ்கினால்  இந்தப்பட்டியலில் நிறையப்பாடல்கள் இருப்பதைக் காணலாம்.

நூறு நூறாண்டுகள் கடந்த வரிகளை வெறும் இசையாக, வெறும் சொல்லாக  இரசிப்பதற்கும், "ஓ! இது இந்த இலக்கியத்தில் வந்த வரிகள்" என்று உணர்ந்து மகிழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த சுகமே அலாதியானது. புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'மீம்'களைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு அந்த மீமில் இடம்பெறும் திரைப்படத் தருணமோ, அல்லது வசனங்களோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்களுக்கு அந்த மீமிலுள்ள நகைச்சுவை முழுதாகப் புரியாது. திரையிசையும் அப்படித்தான்.

இலக்கியத் தமிழை திரையிசையில் இரசிக்க வேண்டுமென்றால்,  அகநானூறு, புறநானூறெல்லாம் படித்திருக்கவேண்டும், பாடமாக்கி இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வெறும் பாரதியார் பாடல்கள், அன்றாடம் சொல்கின்ற தேவார, திருவாசக வரிகள் கூட  அப்படியே; அல்லது கொஞ்சம் மாற்றப்பட்டு திரையிசையில் ஒலிக்கலாம். அடுத்த தடவை ஏதேனும் பாடல்களைக் கேட்கும் போது, வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் ஒரேயொரு சொல்லில் கூட இலக்கியமொன்றை உங்களால் அடையாளம் காணமுடியும். அதைக் கண்டுகொள்ளும் போது நீங்கள் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தை இருக்காது. 
     

மேலும் வாசிக்க »

திருக்கோவில் முருகு

0 comments
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி
(நன்றி: Akish 4K Studio )

இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.  

அறிமுகம்


திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில் என்று போற்றுவது நமது பண்பாடு. ஆனால் ஒரு கோவில் மாத்திரமன்றி, அது அமைந்த தலமும் கூட “திருக்கோவில்” என்று அழைக்கப்படும் பெருமையை, தமிழ் கூறு நல்லுலகில், ஈழவளநாட்டின் ஒரேயொரு பதி மாத்திரமே பெற்றுள்ளது. கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தப் பேர் பெற்ற திருக்கோவில் பதியில், கடலோரம், இயற்கை எழில் கொஞ்சும் அமைவிடத்தில், “ஈழத்துச்சீரலைவாய்”  எனும் செல்லப்பெயருடன்  அமைந்து விளங்குகின்றது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். 

கதிர்காம முருகனின் நிரந்தர வசிப்பிடமாகப் போற்றப்பட்ட இத்திருத்தலம், ‘கந்தன் கதிரையாண்டவன் கோவில்’ என்றும் போற்றப்பட்டிருக்கிறது (Nevill 1885:04; Vimala n.d). ஆரம்பத்தில் மூலவராக வேலாயுதத்தைக் கொண்டிருந்ததால், இங்குள்ள இறைவனுக்கு "சித்திரவேலாயுதர்" என்று பெயர். இந்த ஆய்வுக்கட்டுரையில், மரபுரைகள், கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள், காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப்புகள் ஆகிய மூன்று வகை ஆவணங்களைப் பயன்படுத்தி, இக்கோவிலின் ஆதாரபூர்வமான வரலாற்றை நாம் கட்டியெழுப்ப இருக்கிறோம்.

மரபுரைகள்

திருக்கோவில் பற்றிய மரபுரைகளை தொன்மங்கள் என்றும் இலக்கியங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்கலாம். தொன்மங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரையாக நீடித்து நிலைப்பவை. இலக்கியங்கள் என்னும் போது, அவை எழுத்தில் - ஏட்டுருவில் பேணப்பட்ட தொன்மங்கள் என்று கொள்ளலாம். தொன்மம் -  இலக்கியம் என்பதெல்லாம், நமது வசதிக்காக  மேலோட்டமாகப் பிரித்துக்கொண்ட வகைப்பாடு என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

திருக்கோவிலின் தோற்றம் பற்றி மூன்று தொன்மங்கள்  கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று கதிர்காமத்துடனும், இன்னொன்று திருக்கோணேச்சரத்துடனும், திருக்கோவிலை இணைக்கின்றன. சூரபதுமனை கதிர்காமத்தில் அழித்த முருகனின் வேலானது உக்கிரம் தணியாமல் மாணிக்க கங்கையில் நீராடி எழுந்து, எதிர்ப்பட்ட வாகூரமலையை இரு கூறாக்கி இங்கிருந்த வெண்ணாவல் மரத்தின் கீழ் அமர்ந்ததாகச் சொல்கிறது முதல் தொன்மம் (நடராசா 1998:04). இங்கு வாழ்ந்த வேடர்கள், அவ்வாறு வந்தடைந்த வேலாயுதத்தைக் கண்டு வியந்து, கொத்துப்பந்தரிட்டு வழிபடுகிறார்கள். 

இந்தத் தொன்மம், பிற்காலத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து, மாணிக்க கங்கையில் நீராடிய போது வேலாயுதத்திலிருந்து மூன்று கதிர்கள் தோன்றியதாகவும், அவை வாகூர மலையைப் பிளந்து உகந்தை, திருக்கோவில், மண்டூர் ஆகிய மூன்று இடங்களிலும் கோவில் கொண்டதாகவும் சொல்கிறது (கந்தையா 1983:51). இன்னொரு கதை, இந்தக் கதிர்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்து,  சித்தாண்டி, வெருகல், போரதீவு ஆகிய மூன்று கோவில்களையும் கூடச் சேர்த்துக்கொள்கிறது (கணபதிப்பிள்ளை 2000:16). 

திருக்கோவிலை கோணேச்சரத்துடன் இணைக்கும் இன்னொரு தொன்மத்தின் படி, திருக்கோவில் இராவணனால் வழிபடப்பட்ட ஒரு சிவாலயம் (Shanmugalingam n.d). கீழைக்கரையில் அமைந்திருந்த திருக்கோணேச்சரம், திருக்கோவில், உகந்தை ஆகிய மூன்று சிவாலயங்களையும் இராவணன் மூன்று வேளைகளிலும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்று அந்தக்கதை நீள்கின்றது.

திருக்கோவிலை கதிர்காமத்துடனும் திருக்கோணேச்சரத்துடனும் இணைக்கும் இந்த இரு தொன்மங்களிலிருந்தும் நாம் இரண்டு விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, வேடர்கள் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட ஈழத்துத் தொல்குடிகளால் இங்கு வழிபாடு ஆரம்பமாகி இருக்கிறது. இன்னொன்று திருக்கோவிலை இரு செவிவழிச்செய்திகளும் திருக்கோணேச்சரம் மற்றும் கதிர்காமத்துடன் இணைக்க முயல்வதால், அதுவும் அவ்விரு கோவில்களின் அளவு அல்லது அவற்றுக்குச் சற்று முன் பின்னான அளவு பழைமை வாய்ந்தது என ஊகிக்கலாம். 

திருக்கோவில் பற்றிய மூன்றாவது தொன்மம், அது தானாகவே திரும்பிய கதையைச் சொல்கின்றது. திருக்கோவில் முன்பு வடக்கு நோக்கிய கோவிலாக இருந்ததாகவும், அடியவர் ஒருவர் இது கிழக்கு நோக்கி இருந்தால் கதிரவன் எழுகையில் அழகாகத் தோன்றுமே என்று எண்ணியபடி உறங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது மூலவர் வேலாயுதம் கிழக்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்ததாகவும், அன்று முதல் திரும்பிய கோவில் என்ற பொருளில் அது “திருக்கோவில்” ஆனது என்றும் இக்கதை செல்லும் (கந்தையா 1983:56-57). 

திரும்பிய கோவிலே திருக்கோவில் ஆனது என்று சொல்வதை ஒரு நாட்டார் நம்பிக்கையாகவே கருதமுடியும். திருக்கோவில் என்ற பெயருக்கான காரணம், கிழக்கிலங்கையில் இக்கோவில் பெற்றிருந்த முதன்மையும் புகழுமே. திரும்பிய கோவில் திருக்கோவில் என்று ஆவதற்கு தமிழில் சொற்புணர்ச்சி விதிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்த ஆலயத்தின் முகப்பு முன்பு வடக்கு நோக்கி இருந்து பின்பு கிழக்கு நோக்கி மாறியிருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு. 

சில ஆண்டுகளுக்கு முன் வரை, திருக்கோவிலுக்கு வடக்கும் கிழக்கும் இரு வாயில்கள் இருந்ததையும், அவை இரண்டும் முறையே வேட முகப்பு, சாமி முகப்பு என்று அழைக்கப்பட்டதையும் இங்கு நாம் பொருத்திப் பார்க்கலாம். “வேடமுகப்பு” எனும் வடதிசை வாயில் இத்தலத்துக்கும் வேடருக்கும் இருந்த உறவைத் தெற்றெனக் காட்டுகிறது. வேடரின் வழிபாடு வடக்கு முகமாகவும், மேல்நிலையாக்கப்பட்ட ஆகம வழிபாடு கிழக்கு முகமாகவும் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதையே வேடமுகப்பு – சாமிமுகப்பு ஆகிய பெயர்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. இரு வழிபாட்டு முறைகளும் இணைந்த புள்ளியை, கோவில் திரும்பியது எனும் தொன்மம் சுட்டிக்காட்டுகிறது என்று கொண்டால் அது தவறாகாது.

இனி தொன்ம இலக்கியங்களை எடுத்துக்கொண்டால், திருக்கோவில் பற்றிக் குறிப்பிடுகின்ற தொன்ம இலக்கியங்கள் இரண்டு. ஒன்று கண்ணகி வழக்குரை.  அடுத்தது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். 

கண்ணகி வழக்குரையோ அதன் வடபுலப் பிரதியான கோவலனார் கதையோ, யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவரான செயவீரனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. கண்ணகி வழக்குரையின் காலத்தை திருத்தமாகக் கண்டறியமுடியவில்லை. பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு நூலாக அது வரையறுக்கப்படுவதே வழக்கம் (நடேசன் 2014). கண்ணகியின் சிலம்புக்குப் பரல் தேடி கீழைக்கரையோரமாகச் செல்லும் தூரி (படகு) ஒன்று, மட்டக்களப்பையும் அடுத்து கண்டபாணத்தையும் கடப்பதை, வழக்குரை ஓரிடத்தில் பாடுகிறது (கந்தையா 1968:42). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும் திருக்கோவிலை கண்டபாணத்துறை என்றே சில இடங்களில் அழைக்கிறது (நடராசா 1998:07). 

கிழக்குக் கடலோர வாணிப மையங்களில் திருக்கோவிலும் ஒன்று என்பதற்கு, துறை என முடியும் இப்பெயரும், ஒல்லாந்தர் வரைபடங்களும், தெளிவான ஆதாரங்களாக அமைகின்றன. பிரித்தானியர் காலம் வரை, இக்கோவிலின் அருகே கடல்மார்க்கமாக கொப்பரை ஏற்றுமதி இடம்பெற்றது என்ற தகவலையும் நாம் இணைத்துப் பார்க்கலாம். சமகாலத்தில் கண்டபாணத்துறை என்பதைக் கந்தபாணத்துறை என்று உச்சரிப்பதுடன், கந்தனின் பாணமான வேலாயுதத்தின் துறைமுகம் என்றும் விளக்கம் தருகிறார்கள் (சகாதேவராஜா 2018:22). எனினும் இரு மூலநூல்களிலும் அது கந்தபாணம் என்றில்லாமல், கண்டபாணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் அவதானிக்கவேண்டும். அப்பெயரின் பொருள் தெளிவாக விளங்கவில்லை. ஈழக்கரையோரம் வடக்கே யாழ்ப்பாணத்துறை, கிழக்கே கண்டபாணத்துறை, மேற்கே பாணந்துறை ஆகிய கடலோரப்பதிகள் ஒத்தபெயரில் இருப்பதற்குப் பின்னுள்ள காரணத்தை ஆராய்ந்தால் மேலும் பல  செய்திகள் கிடைக்கக் கூடும்.  


ஆலயத்தின் இன்றைய தோற்றம் 
இனி மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தை எடுத்துக்கொண்டால், 1962இல் எஃப்.எக்ஸ்.சீ.நடராஜா அவர்களால் மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரிலும், 2005இல் கமலநாதன் தம்பதியினரால் முற்குறித்த பெயரிலும், நூல்வடிவில் வெளியான ஏட்டுச்சுவடி அது. வம்சவரலாறுகளைச் சொல்லும் இதையொத்த ஏட்டுச்சுவடிகள் “திருப்படைப்பத்ததி” என்ற பெயரில் திருக்கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் முதலான கோவில்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன (தட்சிணாமூர்த்தி 1992:1-3). அவற்றில் ஒன்றே வெளியாகி இந்த நூல் வடிவைப் பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் படி, கி.பி 08இல் மட்டக்களப்பை பிரசன்னசித்து எனும் மன்னன் ஆண்டுவரும் போது,  திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளும், அவள் கணவன் கலிங்க இளவரசன் புவனேய கயவாகுவும் தம் பிள்ளையில்லாக்குறை தீர்க்க கதிர்காமத்துக்கு யாத்திரை வருகிறார்கள். பிரசன்னசித்து, அவர்கள் தன் உறவினர் என்றறிந்து வரவேற்று, தன் நாட்டிலுள்ள நாகர்முனைச் சுப்பிரமணியர் கோவில் பாழடைந்து கிடப்பதையும், அதைத் திருத்தித் தரும்படியும் கோரிக்கை விடுக்கிறான். புவனேயகயவாகு, தன் மாமனிடம்  செய்தியனுப்பி குடிகளும் உதவியும் பெற்று அக்கோயிலைத் திருத்தி அமைக்கும் போது, தம்பதி நல்லாள் கருப்பமடைகிறாள். பிரசன்னசித்து அவர்களுக்கு மட்டக்களப்பின் தென்பகுதியைப் பரிசளிக்க அங்கு உன்னரசுகிரி எனும் இராசதானி தோன்றுகிறது. 

அவர்களுக்குப் பிறக்கும் மேகவண்ணன், மனுநேயகயவாகு என்ற பெயரில் அரசுக்கட்டிலேறி திருக்கோவிலைக் கற்றளியாகப் புனரமைத்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனபுரத்திலிருந்து வீரசைவக்குருக்களை வரவழைத்து ‘தம்பட்டர் ஊரில்’ குடியேற்றி, தன் தாய் நினைவாக ஒரு குளம் கட்டி அதற்குத் ‘தம்பதிவில்’ எனப் பெயர் சூட்டுகிறான் (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19). மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தின் இன்னோரிடம் சிவாலயங்களுக்குத் அரனூழியம் செய்ய கலிங்க மாகோனால் கோவசிய குலத்தார் நியமிக்கப்பட்டதை விவரிக்கின்றது. 

இந்தச் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் மன்னர்கள், கோவிலை புதிதாக அமைக்கவில்லை; பாழடைந்த கோவிலையே திருத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். அது இக்கோவிலின் பழைமைக்கு இன்னொரு சான்று. பூர்வசரித்திரம் சொல்லும் தம்பட்டை, தம்பிலுவில் (தம்பதிவில்) ஆகிய இரு ஊர்களை இன்றும் திருக்கோவிலின் அருகே காணமுடியும். வீரசைவ சங்கமரின் பரம்பரையினரான குருக்கள் குடியினரும், மாகோன் அரனூழியம் வகுத்ததாகச் சொல்லப்படும் கண்டன், சருகுபில்லி, கட்டப்பத்தன் ஆகிய மூன்று கோவசியர் குலத்தவரும், இன்றும் அவ்விரு ஊர்களிலும் வசித்து வருகிறார்கள்.  இவை சார்ந்த தகவல்களை மட்டுமே பூர்வசரித்திரத்திலிருந்து நம்மால் உறுதியாக ஏற்றுக்கொள்ளமுடிகின்றது. 

பூர்வ சரித்திரமானது, சில இடங்களில் திருக்கோவிலை “புவனத்திருப்பணி” என்னும் பெயரால் அழைக்கின்றது (கமலநாதன் கமலநாதன் 2005:119-121). அதிலுள்ள “புவனேசர் கல்வெட்டு” எனும் பாடல், புவனேயகயவாகுவால் அக்கோவில் அமைக்கப்பட்ட வரலாற்றைப் பாடுகின்றது. எனினும், பூர்வ சரித்திரம் குறிப்பிடும் காலவரிசை ஆண்டுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, திருச்சோழனை திருமாவளவன் கரிகால் சோழனாக இனங்காணும் போக்கு ஆய்வுலகில் உண்டு (கோபால் 2005:49-50).

கற்றளிகள் பல்லவர் காலத்துக்குப் பிந்தியவை என்பதாலும், மட்டு பூர்வ சரித்திரம் வரலாற்று ரீதியில் அத்தனை நம்பகமானதல்ல (McGilvray  2008:58-63) என்பதாலும், வேறு சரித்திரச் சான்றுகள் கிடைக்காத வரை, திருக்கோவில் தொடர்பான இத்தொன்மங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் இன்றும் அப்பகுதி மக்களின் வாய்மொழியில் “மனுராசா” (மனுநேய கயவாகு?), “காலிங்க மாகோன்” “தம்பதியம்மாள்” முதலியோர் திருக்கோவிலைக் கட்டியது பற்றிய நம்பிக்கைகள் நிலவுவதால் அவர்களை வரலாற்று மாந்தர்களாகக் கொள்வதற்கு இடமிருக்கிறது. இவ்வாறு கொண்டால், திருக்கோவிலின் சரித்திர பூர்வமான தோற்றம் மாகோனுக்கு (1215 - 1256) சற்று முன், இலங்கை சோழராட்சியின் கீழ் இருந்தபோது, பத்தாம் – பதினோராம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தது என வரையறுக்கலாம். 

திருக்கோவிலை மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், “நாகர்முனை” என்றும் அழைக்கின்றது. இப்பெயரை வைத்து, இது ஈழத்து ஆதிக்குடிகளான நாகர் செறிந்து வாழ்ந்த பதி என்று கூறுகின்றனர் (Nirmala 2004:103). கீழைக்கரையின் மிகப்பழைமையான கண்ணகி வழிபாட்டு மையங்கள், தம்பிலுவில்லும் பட்டிமேடும். இவை இரண்டும் திருக்கோவிலுக்கு மிக அருகே உள்ள இடங்கள். இந்த இரு ஆலயங்களோடும் தொடர்புடைய நாட்டார் இலக்கியங்களில், கயிலையில் உமையின் அம்சமாக விளங்கிய “நாகமங்கலை” எனும் அணங்கு, கண்ணகியாக அவதரித்தாள் என்று சொல்லப்படுகிறது (கணபதிப்பிள்ளை 1971:67>99). இந்த இரண்டு தலங்களின் இலக்கியங்களிலுமே “நாகமங்கலை” என்ற பெயர் குறிப்பாக அழுத்திச் சொல்லப்படுவதன் மூலம், திருக்கோவில் பகுதி நாகர் வாழ்ந்த இடம் என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாகமங்கலை எனும் நாகரின் தாய்த்தெய்வ வழிபாடு, பின்னாளில் அறிமுகமான பத்தினி வழிபாட்டுடன் இணைந்து, இன்றுள்ள தம்பிலுவில், பட்டிமேடு கண்ணகி ஆலயங்கள் உருவாகி இருக்கின்றன என்று இதை மேலும் விரித்துப் பார்க்கமுடியும்.  திருக்கோவிலின் அருகே அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு, சங்கமன்கண்டி ஆகிய இடங்களில் நாகர் தொடர்பான தொல்பொருட்சான்றுகள் அண்மையில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டமை இங்கு இணைத்துப்பார்க்கத்தக்கது. 

தொல்பொருட் சான்றுகள்:

பழைய மன்னர் காலத்து நாணயங்களும், துருப்பிடித்த மணிமாலைகள், பதக்கங்கள், ஆபரணங்கள் என்பனவும், 2004 கடற்கோள் அனர்த்தத்துக்கு முன்பு, இவ்வாலய உள்வீதியில் இருந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை இக்கட்டுரையாளனால் நினைவுகூரமுடிகின்றது. இன்று அவை எவற்றையும் காணும் பாக்கியமோ, அவற்றின் மூலம் வரலாற்றைக் கட்டியெழுப்பும் தவப்பயனோ நமக்கு இல்லை. இதுபோலவே ஆலயத்தில் சேமிக்கப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இவையொழிய தொல்பொருள் சான்றுகள் என்னும் போது திருக்கோவிலில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு  கல்வெட்டுக்களே எஞ்சியுள்ளன.

அக்கல்வெட்டுக்களில் ஒன்று, தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலிலிருந்து இங்கு கொணர்ந்து நிறுவப்பட்ட தம்பிலுவில் கல்வெட்டு (Nevill 1885:04; இந்திரபாலா 1968:42). விசயவாகு தேவர் என்ற மன்னரின் பத்தாம் ஆட்சியாண்டில், சிவஞானசங்கரரின் கோவிலுக்கு, “வோவில்” கொடையளிக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கின்றது (பத்மநாதன் 2013:429-446). சில ஒல்லாந்து வரைபடங்கள் மூலம் “வோவில்” என்பது திருக்கோவிலுக்குத் தெற்கே இருந்த ஒரு பாரிய நீர்நிலை என்பதை அறியமுடிகின்றது (Nationaal Archief n.d). இக்கல்வெட்டின் படி, அக்குளமும் அதன் விவசாய உற்பத்தியும் திருக்கோவிலுக்கோ அல்லது அதன் அருகில் அமைந்திருந்த இன்னொரு கோவிலுக்கோ மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

பூர்வ சரித்திரத்திலும், சங்கமண்கண்டி அருகே, இருபத்து நான்கு குளங்களை இணைத்து முப்பத்திரண்டு மதகுகள் வைத்து மனுநேயகயவாகுவால் அமைக்கப்பட்ட மாபெரும் ஏரி பற்றிய குறிப்பு வருவதை (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19) நாம் அவதானிக்கலாம்.  அவ்விடத்தில் ஒன்றோடொன்று நீர்த்தொடர்பு கொண்டு இன்று காணப்படும் தாண்டியடிக்களப்பு – உமிரிக்களப்பு – முள்ளியடிக்களப்பு – கோரைக்களப்பு ஆகிய வாவிகளை, இந்த வோவில் ஏரியின் எச்சங்களாக இனங்காணலாம்.

இந்திரபாலா, பத்மநாதன் போன்ற வரலாற்றறிஞர்கள் தம்பிலுவில் கல்வெட்டைப் பொறித்த மன்னனை, கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1509 - 1521) என்று இனங்காணுகிறார்கள் (இந்திரபாலா 1968:42; பத்மநாதன் 2013:429-446). வரலாற்றுலகில் புகழ்பெற்ற “விஜயபாகு கொள்ளை” அல்லது “விஜயபாகு படுகொலை” என்ற சம்பவத்தில் மடிந்த மன்னன் இவன்.  எனவே, இக்கல்வெட்டு கி.பி 1519 இல் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, கோட்டையின் விஜயபாகு ஆறாம் விஜயபாகு அல்ல, ஏழாம் விஜயபாகு ஆகின்றான் (Sivaratnam 1968:52; Mendis 1996:69). எனினும் இவனால் பொறிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளமையாலும் (பத்மநாதன் 2013:429-446), இக்கல்வெட்டின் எழுத்தமைதி, 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்பதை வரலாற்றறிஞர்கள் உறுதிப்படுத்துவதாலும், இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1519இலேயே என்று உறுதியாகச் சொல்லலாம்.

விசயவாகு தேவரைக் குறிப்பிடும் இன்னொரு கல்வெட்டு, முழுமையாக வாசிக்க முடியாத நிலையில் இங்கு காணப்படுகிறது. அது நாம் மேலே பார்த்த தம்பிலுவில் கல்வெட்டுக்குச் சமகாலத்தியது. இக்கல்வெட்டிலேயே “திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம்” என்ற பெயரை முதன்முதலாகத் தெளிவாகக் காணமுடிகின்றது. இக்கல்வெட்டின் இன்னொரு சிதைந்த வடிவத்தை சி.கணபதிப்பிள்ளை தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அதில்  ‘கிழக்கு கடல், மேற்கு கழிகாமமலை, தெற்கு அறுகமனப்பூமுனை, வடக்கு அன்பிலாந்துறை’ என்ற வரிகள் காணப்படுகின்றன (கணபதிப்பிள்ளை 1981:31-42). இதுதான் உண்மையான கல்வெட்டு வாசகமா, அல்லது தான் கேள்வியுற்ற வாய்மொழி மரபுரையொன்றை அவர் தன் நூலில் எழுதினாரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. 
கோவில் கல்வெட்டுகளும் தூண்களும்

இவை இரண்டையும் விட, ஆலய வெளிவீதியில் மண்மூடிக் காணப்படும் பழைய திருச்சுற்று மதிலொன்றின் அத்திவாரம், மிகப்பழைமையான செங்கல் கட்டுமானமாகும். பழைமையான எழுத்து வரிவடிவங்களைக் கொண்ட உடைந்த சாசனங்களும் சிதைந்த கற்றூண்களும் இக்கோவில் வளாகத்தில் இன்றும் காணக்கிடைக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறைப்படி ஆய்வுக்குட்படுத்தும் போது, மேலும் பல தகவல்கள் பெறப்படலாம்.

திருக்கோவிலின் கருவறை விமானம் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பல வரலாற்றறிஞர்கள் கருத்துக்கூறியுள்ளனர். போர்த்துக்கேயரிடமிருந்து தப்பிய பழைய கொக்கட்டிச்சோலை ஆலயமும், பொலனறுவை வானவன் மாதேவீச்சரமும் கிட்டத்தட்ட இதே விமான அமைப்பையே கொண்டிருப்பதைக் காணலாம். எனவே கற்றளி மண்டபங்கள் இடிக்கப்பட்டு ஆலயம் சூறையாடப்பட்டாலும் கருவறை இடிக்கப்படவில்லை என்று கொள்ளமுடியும். இதில் மேலதிக ஆய்வுகள் தேவை.

காலனியக் குறிப்புகள்:

காலனியக் குறிப்புகளில் திருக்கோவில் பற்றிக் குறிப்பிடும் மிகப்பழைய குறிப்பு ஒல்லாந்தருடையது. 1602ஆமாண்டு மே 30ஆம் திகதி,  மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து ஒரு முகத்துவாரத்துக்கு அருகே தங்கள் கப்பலைச் செலுத்தும் ஒல்லாந்தர்கள், அங்கு ஓர் ஆலயமும் கிராமமும் இருப்பதைக் காணுகிறார்கள். பின்பு அங்கிருந்து தாம்; மட்டக்களப்பை அடைய உதவும் அம்மக்களுக்கு ஒல்லாந்தர் கத்திகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். ஒல்லாந்தர் குறிப்பிடும் அந்த ஆலயம், திருக்கோவில் (Ferguson 1998:14-15).

ஒல்லாந்து வணிகரான ஜொகன்னஸ் வொன் ப்ரீ என்பவர்;, 1603 யூலை 13ஆம் திகதியிட்ட தன் நாட்குறிப்பில், முழுநிலவை அண்மித்து திருக்கோவிலில்  நடக்கும் திருவிழாவில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவதையும், மட்டக்களப்பு அரசனும் அங்கு செல்ல இருப்பதையும், அந்நாட்கள் தங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்பதையும்  பதிவு செய்திருக்கிறார் (Ferguson 1998:112-113). இவர் சொல்வதை ஒட்டி,  1603இல் முழுநிலவு நாள், யூலை 23ஆம் திகதி வந்திருந்தது என்பதால், அப்போது திருக்கோவிலில் ஆடிப்பூரணையே விழாக்காலமாக இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம். 

இவை இரண்டையும் அடுத்து, 1687இல் எழுதப்பட்ட போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான குவரோஸ் பாதிரியாரின் குறிப்புகளும் கவனிக்கத்தக்கவை.  அவர் திருக்கோவிலின் உண்மையான பெயர் “மூன்று கோவில்கள்” (திரி + கோவில்?) என்றும் அது அசவீடோவால் இடித்தழிக்கப்படும் வரை, இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமாக நிலவியது என்றும், அசவீடோ அக்கோவிலுக்குப் பொறுப்பாக இருந்த கணேசர்களைக் (?) கொன்று ஆலயத்தைச் சூறையாடியதால், மக்கள் இடப்பெயர்ந்து, அக்கோயிலும் சூழலும்; பாழடைந்துவிட்டதாகவும், இங்கு போல் யானைத்தந்தம், சாயவேர், தேன்மெழுகு, எலுமிச்சை, நெல் என்பன இலங்கையில் வேறெங்கும் சிறப்பாக விளைவதில்லை என்றும் பதிவுசெய்துள்ளார் (Queirós 1992:65). 

அவர் குறிப்பிடும் ஜெரோனிமோ டி அசவீடோ, இலங்கையின் போர்த்துக்கேய தளபதியாக கி.பி 1594 முதல் 1613 வரை பதவி வகித்தவன் (University of Ceylon  1948:282). ஜொகன்னசின்  திருக்கோவில் ஆடிவிழா சிறப்பாக இடம்பெற்ற 1603ஆம் ஆண்டுக் குறிப்போடு ஒப்பிட்டால், 1604 முதல் 1612இற்கு இடைப்பட்ட காலத்தில் தான் திருக்கோவில் போர்த்துக்கேயரல் இடிக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கலாம். குவரோஸ் சந்தேகிப்பது போல, மூன்று கோவில்கள் அன்றி, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மூன்று கோபுரங்கள் சிதைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

திருக்கோவிலுக்காக குடியேறிய சங்கமக்குருக்களின் பரம்பரையினரான குருக்கள் குடியினர் தற்போது திருக்கோவிலுக்கு வடக்கே பன்னிரண்டு கி.மீ தொலைவிலுள்ள அக்கரைப்பற்றில் தான் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தம்பட்டையிலிருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்று சென்றதும், திருக்கோவிலின் ஊழியக்குலங்களான கலிங்க வெள்ளாளர் தம்பிலுவில்லுக்கு இடம்பெயர்ந்ததும் இந்த இடைப்பட்ட காலத்திலேயே இடம்பெற்றிருக்கவேண்டும். இதனாலேயே திருக்கோவில் சூறையாடப்பட்டு சுமார் 70 ஆண்டுகளின் பின், கோயிலும் சூழலும் பாழடைந்து கிடப்பதாக குவரோஸ் எழுதியிருக்கிறார்.

அடுத்த ஒரு நூறாண்டு காலத்துக்கு திருக்கோவில் பற்றிய எந்த வரலாற்றுத்தகவல்களும் சிக்கவில்லை. கண்டி மன்னர்களான இரண்டாம் இராஜசிங்கனும் அவனுக்குப்பிந்திய விமலதர்மன், நரேந்திரசிங்கன் போன்றோரும் மட்டக்களப்போடு கொண்டிருந்த உறவுகளுக்கு கண்ணகி இலக்கியங்கள் சான்றாவதால், அவர்கள் காலத்தில் தமிழகச்செட்டிகளின் உதவியுடன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்று கொள்ளமுடியும். இராசசிங்கனையும் நரேந்திரசிங்கனையும் புகழும் நரேந்திரசிங்கன் பள்ளு (ஐயர் 1940:41-45), தம்பிலுவில் கண்ணகி அம்மன் பள்ளு(31), தம்பிலுவில் மழைக்காவியம் (நவநாயகமூர்த்தி 1999:42-43) ஆகிய சிற்றிலக்கியங்கள் திருக்கோவில் பற்றியும் குறிப்பிடுவதால், இராசசிங்கன் (1635 - 1687)  மற்றும் நரேந்திரசிங்கன் (1707 - 1739)  காலத்தில் திருக்கோவில் அவர்களது மானியங்களைப் பெற்றிருக்கலாம் அல்லது, அவர்களுக்கு நன்கு அறிமுகமானதாக இருக்கலாம் என்பதற்குச் சான்றாகின்றன.

இனி, 1802ஆமாண்டு பிரித்தானிய ஆளுநர் பிரடரிக் நோர்த்தின் உதவியாளர் தோமஸ் கிறிஸ்டி திருக்கோணமலையிலிருந்து மாத்துறை நோக்கி கரையோரமாகப் பயணிக்கிறார். மே ஆறாம் திகதி, திருக்கோவிலுக்குத் தாங்கள் சென்றதையும், திருக்கோவிலின் புராதனமான விமானம் பற்றியும், ஆலயத்திலுள்ள சிற்பங்கள், தேர்கள், நடனமாதர் பற்றியும் அவர் தன் நாட்குறிப்பில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் (Cordiner 1807:137)

திருக்கோவில் 1807ஆம் ஆண்டு மட்டக்களப்பு முதலியார் ஒருவரால் திருத்திக் குடமுழுக்குக் கண்;டதுடன், அங்கு கந்தபுராண படனம் நிகழ்த்துவதற்கான அனுமதியும் காலனிய அரசாங்கத்திடம் பெறப்பட்டிருக்கிறது (Vimala n.d). திருக்கோவிலின் அழகிய தேர்களும், மரத்தாலான மகாமண்டபமும் 1823 செப்டம்பர் 19இல் இடம்பெற்ற தீவிபத்தில் எரிந்து சாம்பலாகி விட்டன. அதற்குப் பின்னர், 1826 நவம்பர் ஆறாம் திகதி, திருக்கோவிலில் இன்னொரு குடமுழுக்கு இடம்பெற்ற குறிப்பைக் காணமுடிகின்றது. தீவிபத்தில் அழிந்துபோன மகாமண்டபம், 1851 ஒக்டோபர் 30ஆம் திகதி புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டது (25). 

1803ஆமாண்டு அளவில் இக்கோயிலில் திருவேட்டைத் திருவிழா இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு அதேயாண்டில் எழுதிய ஓலைச்சுவடியொன்றில் காணப்படும் “திருவேட்டைக்கவி” பாடல்கள் சான்றாகின்றன. 1803இற்கும்  1820இற்கும் இடையே, வையாளிப்போடியார் என்பவர் இக்கோயிலின் நிலைமைப்போடியாக (தலைவராக) விளங்கிய காலத்தில், இங்கு கொள்ளையடிக்கப்பட்ட பெருமளவு செல்வம் மீட்கப்பட்டதை ஒரு ஓலைச்சுவடி அலங்கார அணிகளுடன் விவரிக்கின்றது (கணபதிப்பிள்ளை 1981:31-42). திருடப்பட்ட பொருட்கள் என்று அது பட்டியலிடும் ஆபரணங்களின் எண்ணிக்கையை நம்மால் முழுமையாக நம்பமுடியாது எனினும், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் போர்த்துக்கேயரால் கொள்ளையடிக்கப்பட்டு இருநூறாண்டுகளுக்குப் பின்பும், பெருமளவு செல்வங்களுடன் திகழ்ந்திருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்துசேர முடியும். 

1603 அளவில், ஆடிப்பூரணையே திருக்கோவிலின் உற்சவ காலமாக இருந்தது என்பதை ஒல்லாந்து வணிகரின் குறிப்பின் மூலம் அறிந்தோம். இடைப்பட்ட காலத்தில் கேதாரகௌரி - கந்தசஷ்டி விரத நாட்களும் உற்சவகாலமாக இருந்திருக்கிறது.  இதற்குச் சான்றாக, மட்டக்களப்பு எட்டுப்பகுதியும் கூடி, 1870 ஐப்பசி ஒன்பதாம் திகதி (1870.10.24) தேரோட்டம் நிகழ்த்தியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏட்டுக்குறிப்பைச் சொல்லலாம். பஞ்சாங்கத்தின் படி, அன்று ஐப்பசி அமாவாசை. அதாவது, தீபாவளிக்கு அடுத்த நாள். தற்போது ஆடி அமாவாசையே திருக்கோவிலின் தீர்த்தோற்சவ தினமாகக் காணப்படுகிறது.

திருக்கோவிலின் தலவிருட்சம் வெண்ணாவல் மரம். அதன் தீர்த்தமாக வங்கக்கடலே கொள்ளப்படுவதுடன்,  ஆடி அமாவாசையில் நீத்தார் வழிபாடும், சமுத்திர தீர்த்தோற்சவமும் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஆலாத்திப்பெண்டான எண்பது வயது தங்கம்மைப் பாட்டி, ஏழு வயதுச் சிறுமியாக மாறி நின்றதையும், கிழக்குக்கரையையே புரட்டிப்போட்ட 2004 ஆழிப்பேரலை, கோவிலை வெறுமனே தழுவி வணங்கிச்சென்றதையும், இங்கிருக்கும் இறைவனின் அற்புதங்கள் என்று கூறி நெக்குருகுவார்கள் அடியவர்கள். வேண்டியதெல்லாம் அருளும் திருக்கோவில் சித்திரவேலாயுதனின் அருட்கோவில்,  2018 யூன் மாதம் இனிதே குடமுழுக்குக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


உசாத்துணைகள்:

இந்திரபாலா, கா. (யூலை - அக்டோபர் 1968). "ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள்" கட்டுரை, சிந்தனை.
ஐயர், சதாசிவ. (1940). வசந்தன் கவித்திரட்டுகல்முனை:மட்டக்களப்பு தெற்கு ஆசிரியர் சங்கம்.
கணபதிப்பிள்ளை, க. (2000) முருக வழிபாடும் கதிர்காமப் பாதயாத்திரையும்,  கொழும்பு:பெ.கந்தக்குட்டி வெளியீடு.
கணபதிப்பிள்ளை, சி. (1971). மகாமாரித் தேவி திவ்விய கரணியாழ்ப்பாணம்:விவேகானந்தா அச்சகம்.
————. (1978). பத்தினி வழிபாடு, அட்டப்பள்ளம்.
————. (1981). பூர்வீக சப்த ஸ்தலங்கள், அட்டப்பள்ளம்.
கந்தையா, வீ.சீ. (பதி.) (1968). கண்ணகி வழக்குரை, காரைதீவு:இந்து சமய விருத்திச்சங்கம்.
————. (1983). மட்டக்களப்பு சைவக்கோவில்கள், பாகம் 1, மட்டக்களப்பு:பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சு, 
கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
கோபால், வெல்லவூர். (2005). மட்டக்களப்பு வரலாறு – ஒரு அறிமுகம்மட்டக்களப்பு:மனு வேதா வெளியீடு.
சகாதேவராஜா, வி.ரி. (2018.02.23). "திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குடமுழுக்கு", அரங்கம், 1(4).
தட்சணாமூர்த்தி, சி. (1992). கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், காரைதீவு.
நடராசா, எஃப்.எக்ஸ்.சி. (1998). மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு: மாவட்ட கலாசார பேரவை.
நவநாயகமூர்த்தி, நா. (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, பனங்காடு:வானதி வெளியீடு.
பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு:இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  • Cardiner, James. (1807). A Description of Ceylon containing an account of the country, inhabitants and natural productions, Volume II, London:Longman, Hurst, Rees, and Orme.
  • Ferguson, Donald. (1998).  The Earliest Dutch Visits to Ceylon, New Delhi:Asian Educational Services.
  • McGilvray, Dennis B. (2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East coast of Sri Lanka,  Durham (NC):Duke University Press.
  • Mendis, G.C. (1996). The Early History of Ceylon and Its Relations with India and Other Foreign Countries, New Delhi:Asian Educational Services.
  • Nevill, Hugh. (1885 September - October). The Taprobanian, Bombay:London Education Society’s Press.
  • Queirós, Fernão de, (1992). The Temporal and Spiritual Conquest of Ceylon, (S.G.Perera Trans.), Volume I,  New Delhi:Asian Educational Services.
  • Ramachandran, Nirmala. (2004). The Hindu Legacy to Sri Lanka, Pannipitiya:Stamford Lake (Pvt) Limited.
  • Sivaratnam, C.  (1968). The Tamils in early Ceylon, Colombo.
  • University of Ceylon, (1948), University of Ceylon Review, Volumes 6-8, University of Ceylon Publication, Colombo

வலைத்தளங்கள்:


இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெற்ற மலேசிய திருமுருகன் திருவாக்கு பீடத்தின் நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் வெளியிடப்பட்ட "முருகு" சிறப்புமலரில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். 
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner