மேதியவுணன் கொல்பாவை

1 comments
"அயிகிரி நந்தினி" என்று துவங்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். பொருள்புரியாது கேட்டாலே சந்த அழகாலும் இனிமையாலும் மயக்கும் வடமொழித் துதி அது. ஆதிசங்கரர் இயற்றியது என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கிடைக்கின்ற மரபுரைகளின் படி அதை இயற்றியவர், இராமகிருஷ்ணகவி. அந்தப்பெயரில் ஒரு வடமொழி அறிஞர் கடந்த நூற்றாண்டில் (1866 - 1957) தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார். பரதரின் நாட்டிய சாத்திரத்துக்கு காஷ்மீர சைவ அறிஞர் அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி எனும் உரையை நூலாகப் பதிப்பித்தவர். நாட்டிய - இசை வடமொழிக் கலைச்சொல் அகராதியான பரதகோசமும் இவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.


மேதிகொல்மாது சிற்பம், மாமல்லபுரம்

உண்மையில் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்பது, பகவதி பத்ய புஷ்பாஞ்சலி ஸ்தோத்ரம் எனும் துதியின் ஒரு பாகம் தான். மொத்தம் 30 சுலோகம் கொண்ட புஷ்பாஞ்சலி தோத்திரத்தில் 7 - 27 ஆவது வரையான 21 சுலோகங்களே இன்று மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்று அறியப்படுகின்றன. 29ஆம் சுலோகத்தில் தான் இதைப்பாடியது "ராமகிருஷ்ணகவி"யாகிய நான் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

சிறுவயதிலிருந்தே இத்தோத்திரம் மீது நல்ல ஈர்ப்பு எனக்கு. உமா மோகன், சைந்தவி குழுவினரால் பாடப்பட்டு, ஸ்டீபன் தேவஸ்ஸியால் இசையமைக்கப்பட்ட சேக்ரெட் சாண்ட்ஸ் (Sacred Chants) எனும் இசைத்தொகுப்பின் மூன்றாம் தொகுதியில் இப்பாடல் வெளியாகியிருந்தது. 2008இல் இப்பாடலை நவீன மெட்டுக் கலப்பிசையில் கேட்டபோது மீண்டும் இதற்கு அடிமையானேன். எந்த அளவுக்கு என்றால், ஒருகட்டத்தில் இணையத்தில் தேடி பொருள்புரிந்து படிக்கவேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு.

பம்பாய் சகோதரிகள் பாடிய இதன் தமிழ் மொழிபெயர்ப்பு எங்கள் வீட்டில் அடிக்கடி இறுவட்டில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த மொழிபெயர்ப்பில் எனக்கு அத்தனை திருப்தி இருக்கவில்லை. 2011ஆம் ஆண்டு, உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னரான இடைவேளையில் இதை தமிழில் மொழிபெயர்த்தாலென்ன எனும் யோசனை எழுந்தது. குறைந்தபட்ச சந்த அழகாவது அதில் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஆங்கில மொழிபெயர்ப்புகளை பல வலைத்தளங்களில் சேகரித்து, கொஞ்சநஞ்ச வடமொழி அறிவையும் பயன்படுத்தி இதை தமிழில் மொழியாக்கினேன்.

ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் எனக்கு ஏற்பட்ட ஐயம், மகிடாசுரமர்த்தினியை தமிழில் எப்படி அழைப்பது என்று தான். அது தூய வடமொழிப்பெயர். மஹிஷாஸுரமர்த்தினி என்றால் எருமைத்தலை அசுரனைக் கொன்றவள் என்று பொருள். மகிடம், அசுரன், மர்த்தனம் இந்த மூன்று சொற்களுக்கும் இணையான மேதி+அவுணன்+கொல்லுதல் என்ற தமிழ்ச்சொற்களை இணைத்து, அப்போது சூட்டப்பட்ட பெயர், “மேதியவுணன்கொல்பாவை”.

"ஜய" என்பதை மணிவாசகர் "வெல்க" என்று எடுத்தாண்டிருக்கிறார் என்பது அப்போது தெரியாததால், அச்சொல்லை வாழி என்று மாற்றினேன். “ஓம் கபர்தினே நம:” என்பது சிவனாரின் நூற்றியெட்டு போற்றிகளில் ஒன்று. அவனது நாயகி என்பதால் அன்னைக்கு “கபர்த்தினி” என்றும் பெயர். சுருண்ட அல்லது பின்னப்பட்ட தலைமுடியைக் கொண்டவள் என்று பொருள். எனவே “ரம்யகபர்த்தினி” இங்கே, “புரிகுழல் எழில் உமை” ஆகியிருக்கிறாள். (குழல்=கூந்தல்) எனவே அதன் சுலோகங்கள் முடிவுறும் "ஜயஜயஹே மகிஷாசுரமர்த்தினி ரம்யகபர்த்தினி சைலசுதே" என்பது தமிழில் "வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் புரிகுழல் எழிலுமை மலைமகளே" என்று ஆனது.

மேதி என்றால் எருமை. நேரடியாக மகிடாசுரன் என்ற பொருளும் உண்டு. அவுணன் = அசுரன். தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மேதியைத் தமிழ் வேர்ச்சொல் என்று குறிப்பிட்டபோதும், அது அவுணன் என்ற சொல்லையே குறிப்பிடவில்லை. அவுணன் திசைச்சொல்லா என்பது எனக்குத் தெரியாது. இத்தனைக்கும் அவுணன் என்பது, அசுரரைக் குறிக்க முருகாற்றுப்படையிலும் சிலம்பிலும் இடம்பெற்ற சொல்.

அண்மையில் சொல்லாய்வு குழுமத்தில் "மகிடாசுரமர்த்தினி" என்ற சொல்லை எப்படித் தமிழில் அழைப்பது என்ற உரையாடல் எழுந்தபோது, அகராதிகளில் "மகிடற்செற்றாள்" என்ற பெயர் இருப்பதையும், தேவாரத்தில் "மகிடற் செற்றுநிகழ்நீலி" (திருமுறை 2:74:7) என்ற பெயர் பதியப்பட்டிருப்பதையும் மணி மணிவண்ணன் ஐயா குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். சிலப்பதிகாரத்தில், "பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி" எனும் பெயர் பயில்வதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிலம்பில் மயிடற்செற்றாள் என்ற அதே பெயர் நேரடியாக இன்னோரிடத்தில் வருகிறது. அழற்படுகாதையில் மதுரையை எரிக்கும் கண்ணகியை அமைதிப்படுத்த மதுராபதித் தெய்வம் தயங்கியபடி வந்தபோது, அவள் முன்னே முத்தேவியரின் மொத்த வடிவாக கனன்றுகொண்டிருக்கும் கண்ணகியை "மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றிகந்த கோமகளும் தான் படைத்த கொற்றத்தாள்" என்று வருணிக்கிறார் சேர இளவல். மாமயிடன் செற்றிகந்த கோமகள். மகிடாசுரமர்த்தினி.

வைகாசி இங்கு கண்ணகியின் மாதம். அடுத்த வாரம் எங்களூரிலும் அவள் எழுகிறாள். இளங்கோத் தமிழில் மயிடற்செற்றாளாய் நின்ற அவளை வரவேற்க, தமிழாக்கிய மேதியவுணன்கொல்பாவை வாழ்த்தை இங்கு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். அந்தப் பெயர் மயிடற்செற்றாளுக்கு எத்தனை பொருந்தும் என்று எனக்குத் தெரியாது. வடமொழி அறிவு சிறிதுமின்றி அகராதிகளின் - ஆங்கில மொழிபெயர்ப்புகளின் உதவியோடு செய்த இந்த மொழியாக்கம் எத்தனை திருத்தமானது என்பதும் தெரியாது. வெறும் இருபது வயதில் ஒரு வேகத்தில் செய்த அந்தக் காரியத்தில் அந்த வயதுக்குரிய அறியாமையும் சேர்ந்திருக்கலாம். அதனால் பாதகமில்லை. அடியவர் - அறிஞரை எண்ணி தயக்கம் இருந்தாலும், அவள் மீது அச்சமின்றிப் பகிர்கிறேன். குழந்தையின் மழலையில் மகிழாத அன்னை உண்டா, என்ன?



முழுமையான மொழிபெயர்ப்பு வரிகள் இங்கு:

வையம் வியந்திட வரைதனில் வந்தனை
வந்திப்ப நந்தியும் வரமருள்வாய்
பைய மிளிர்நடை பழகுவை மாலுடன்
பலர்புகழ் விந்தியம் வாழ்பவளே!
கையது தொழுதிட ககனர்கோன் பணிந்திடும்
கறைக்கண்டன் காதலி யாதும்நீயே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 1

(ககனர்கோன் – இந்திரன், வரை - மலை)

அளிக்கும் அந்தரர்க்கு அழிக்கும் துர்தரற்கு
அறந்தவிர் துன்முகன் தடிந்தவளே
முழுவதும் ஆள்வாய் முக்கணன் தோழீ
மறைந்ததெம்மாயை, உன் சமரொலியில்
இழிந்திட தனுகுலம், திதிமக நடுங்கிட
ஈனரை இழித்தனை ஆழிபெண்ணே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 2

(அந்தரர் – தேவர்; தடிதல் – அழித்தல்: துர்தரன்,துன்முகன் – அன்னை அழித்த அசுரர்கள், சமர்ஒலி – யுத்தகோசம், தனுகுலம், திதிமக – தனுவின் குலமான தானவர், திதியின் மக்களான தைத்தியர்; ஆழிபெண் – கடல்மகள்,இலக்குமி.)


கடம்ப வனந்தனில் கனிந்து நகைத்தமர்
காரணி உலகுதன் நாயகியே!
கொடுமுடி இமயம் குன்றங்கள் மலர்வாய்
குவிமலர்த் தேறலின் இனியவளே
கைடபன் மதுவின் கூற்றமும் ஆனாய்
களங்களில் கூச்சலில் களிப்பவளே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 3

(தேறல் – தேன்; களம் - போர்க்களம்)


தீயவர் சிரங்கள் சிதைந்தன நூறாய்
தும்பியர் துதிக்கைகள் வீழ்ந்தனவே!
கயத்தலை கிழிந்திட சமர்க்களம் நுழைந்திடும்
கடிதரிமா தனில் இவர்பவளே!
கயவர்கள் தளபதி கரங்கொண்டு தலைபறி
கவறிட ஏதிலர் கனன்றுநின்றாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 4

(தும்பி,கயம் – யானை; அரிமா – சிங்கம்; கவறுதல்- வருந்துதல்; ஏதிலர் – பகைவர்.)


அமர்க்களம் புகுந்து அரக்கரை அழிக்கும்
அம்மையே, குறையா வீறுடையாய்!
அமலனை அறிவனை பூதங்கள் அடிபணி
அம்மைநின் தூதனாய் அமர்த்தியன்று
இமக்குலக்கொடியே கொடுமதியாளரின்
இழுக்கன்று ஒழிந்திட வழிவகுத்தாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 5

(அமர்க்களம் – போர்க்களம், அமலன், அறிவன் – சிவன்; இழுக்கு – குற்றம்.)


பகைவர்தம் தேவியர் அபயமும் வேண்டிட
பகைவர்க்கும் அருளும் கனிமனத்தாய்!
புகையென சூழ்ந்து மூவுலகாட்டிடும்
புல்லியர் சிரந்துணி சூலங்கொண்டாய்!
தகையென திகையெங்கும் இரலைகள் இமிர்ந்திட
திமிதிமி இமிழென திறல்களும்காண்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 6

(புல்லியர் – தீயவர்; தகை – பெருமை; திகை – திசை; இரலை – ஊதுகொம்பு, துந்துபி; இமிர், இமிழ் – ஒலியெழுப்புதல், ஒலி; திறல் – வெற்றி.)


புகைக்கணான் கயவன் நுக்குநூறாகிட
பிணித்தனை உம் எனும் உரப்பினிலே
கூகைசேர் களத்தில் குருதியில் துளிர்க்கும்
கூடலன் கொடியோன் உயிர்குடித்தாய்
நகைசிவன்நாயகி நனைசெருக்களத்தில்
நிசும்பனை சும்பனை நறுக்கினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 7

(புகைக்கணான் – தூம்ரலோசனன் எனும் அசுரன்; நுக்குநூறு – சுக்குநூறு; உரப்பு – ஒலி; கூகைசேர்களம் – ஆந்தைகள் சேரும் போர்க்களம்; குருதியில் துளிர்க்கும் கூடலன் – இரத்தத்துளிகளில் மீண்டெழும் இரத்தபீசன் எனும் அரக்கன்; செருக்களம் – போர்க்களம்.)

எடுத்தனை சிலையை எதிரிகள் சரிய
எழிலுடல் கைவளை குலுங்கிடவே
தடுத்தனை தமனியச் சரம் சிவந்தழிக்க
தரியலர் தபுகுரல் தாவியெழ
அடுத்தனை நிருதர் நாற்படை நசிய
அமர்க்கள மேடையில் ஆடினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 8


(சிலை – வில்; தமனியச்சரம் – பொன்அம்புகள்; தரியலர் – பகைவர்; தபுகுரல் – மரணஓலம்; நிருதர் – அசுரர், நாற்படை- தேர், யானை, குதிரை, காலாள் எனும் சதுரங்கப்படை.)


அரம்பையர் திதிதெய் திதிதெய் தகதிமி
அவிநய நடமிட அகமகிழ்வாய்
தரங்கமெனத் துகுடத்துகுடத் கடதாகட
தாளம் குதூகலிப்பாய்
மருங்கினில் தக்கிட தகிகிடதிம்திமி
மத்தளம் தொட்டிசை கொட்டிடுதே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 9
(தரங்கம் - இசையசைவு)

சயசய போற்றிகள் சகமெங்கும் ஒலித்திடும்
சகலம் உன் வெற்றியைப் புகழ்ந்திடுமே
சலசல சிலம்புகள் சதிர்நடம் பயின்றிடும்
சங்கரன் சிந்தை கவர்ந்திடுமே
சடசட ஒலியெழ திறன்மிகு பயில்வர்கள்
சதுரிட மகிழிறை பாதிநடீ!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 10

(சதுர் – நடனம்; இறைபாதி – இறைவனில் பாதியான அம்மை; நடி – நடனமாடும் பெண், அம்மை.)

அருள் ஒழுகும் கருணை பொழியும்
இளகும் எளியார்நல் லுளம் கவரும்
மருள் அழியும் ஒளிசேர் குளிரும்
மதிபோல் முகமும் மிளிர் மாயவளே!
விழிமலர்கண்டு வண்டார்த்திடவும் - விஞ்சை
வாழ்நரும் விமலனும் வியந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 11

(விஞ்சைவாழ்நர் – தேவர், விமலன் – சிவன்.)

மல்லிகை போல்வர் மல்லரைச் சமரில்
மாய்த்திடும் களங்கண்டு மகிழ்ந்திடுவாய்!
மல்லிகைக் கொடியென மருள்வண்டு இசையன்ன
படர்ந்திடும் சேனையுன் மருங்கினிலே!
அல்லிமென் அலர்மலர் முறுவலுன் இதழ்களில்
அடியவர் போற்றும்எம் கொற்றவையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 12

மதம்பொழி வாரணம் அயர்ந்து கலங்கிட
மதநடை பயின்றிடும் பேரரசி!
நிதம்கலை எழில்வளம் மூவுலகணிந்திட
நிதம்பணி இமவான் திருமகளே!
பதம்பணி அடியவர் தாபமும் மோகமும்
பலித்திட நகைபுரி மன்மதையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 13

(வாரணம் – யானை)

தாமரையிதழென மாசறு நுதலுடன்
தாயவள் தூயநல் திருவதனம்
மாமலர்நாடும் அன்னங்கள் நாணும்
மாதுநின் ஒயில்பயில் நடையழகும்
தாமம்பூ வகுளம் தூயநல் நீலம்
தேன்நிறை குலவு வண்டார் குழலும்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 14

(வகுளம் – வகுளம்பூ; தாமம் – மலர்; நீலம் – நீர்நீலஅல்லி; குழல் - கூந்தல்)


குயில்பழி கரமமர்குழல் பழிகுரலில்
குவலயம் குளிர்ந்திட குழைபவளே
உயிர் உருக்கிடும் மொழி, மலைமலரடவியில்
உலவுவை புளிஞர்தம் மகளிருடன்
பயில்விளையாடலும் பாடலும் ஆடலும்
பாவையர் நல்லுளம் மகிழ்ந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 15
(கரம் அமர் குழல் - கையிலேந்திய புல்லாங்குழல்; மலைமலரடவி – மலையிலுள்ள பூங்கா, புளிஞர் – புலிந்தர், வேடர்)

மதியொளி மறைத்திடும் துவண்டிடும் இடையில்
மிகுபல நிறத்துகில் மிளிர்ந்திடவும்
மதியென ஒளிர்ந்திடும் பதம்விழும் சுரசுரர்
மகுடத்து மணி விம்ப விரலுகிரும்
பதிவிக்க நாணத்தின் மத்தகம் மலைபொன்
பெருமையின் நிமிர்ந்திட்ட கும்பதனம்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 16

(துகில் – ஆடை; உகிர் – நகம்; மத்தகம் – யானைமத்தகம்.)
அஞ்சலர் ஆயிரம் கரங்கொண்டுன் ஆயிரம்
அழித்திட ஆயிரம் வணங்கினவே
தீஞ்சொலன் தீயோன் சூர்தடி சேயோன்
தேவர்தம் சேயோன் தாயவளே
மஞ்சனோர் சேந்தன் சுரதன்நல் வேந்தன்
மாந்தன் சமாதிக்கும் ஈந்தனையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 17

(அஞ்சலர் – பகைவர்; தீயோன் சூர் – தீய சூரபதுமன்,; சேயோன் –முருகன்; மஞ்சன் – மகன்; சுரதன், சமாதி – அம்பிகை அருள்பெற்ற ஒரு மன்னனும் வணிகனும்,)

கருணையின் உருவென கனிந்திடும் உனகழல்
கமலபதம்நிதம் கைதொழுதார்
திருமகள் பணிந்திட திரண்டிடும் செல்வமும்
கமலையின் உறைவிடம் ஆவரன்றே!
அருள்வடிவாயின அம்மையுன்பாதங்கள்
அடியவன் அறியேன் பரவுமாறே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 18

மெல்லென நகரும் பொன்னனை நதிநீர்
மொண்டுநின் சன்னதி தொழுதெழுவார்
அல்லன அகற்றிடும் அருள்பொருள் போகங்கள்
அடைந்தனர் போல்வரே அன்னைநகில்
நல்லவர்நாடிடும் நாயகி வாணிநீ
நாமகளுந்தன் கழல் சரணம்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 19

(நகில் – மார்பு, கழல் - பாதங்கள்)

நிலவுமுகம் நிறைதூயவகம் நினைவோடுதினம்
நனவாய் நினையும்
நிலவுசுகம் அரர்கோனுலகம் நயவாது
நல்தோகையர் நாடும்சுகம்
மலருமுளம் மடமாதுன்னகம் மகிழாதென்னை
சீவனில் காண்பன் சிவம்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 20

(அரர்கோனுலகம் – இந்திரலோகம், தோகையர் – அரம்பையர்,)

இழிந்தவர்க்கிரங்கிடும் இளகிய உமையே
இவனு(ளு)க்கும் தயைபுரிந்தருள் தருவாய்.
குழைபவர்க்களிக்கும் மறவரை அழிக்கும்
திறமிது என்னை, எம் உலகம்மே!
சூழ்துயர் துன்பங்கள் சுமந்திடும் சிறியேன்
சுவறிடும் தருணமிது அருள்புரியாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 21

(மடுப்பாய் – அழிப்பாய், சுவறுதல் – வற்றுதல் - மறைதல்)
மேலும் வாசிக்க »

ராஜாங்க சைவம்

0 comments
அந்த நண்பன் இறைமறுப்புவாதி. அவனோடு அடிக்கடி கடவுள், சமயம் என்று முரண்படுவேன். ஆனால் இருவருமே வாசிப்பவர்கள் என்பதால், எங்கள் விவாதம் வெறும் உணர்ச்சிபூர்வமாக இராமல், வரலாறு - மனித உளவியல் - எதிர்கால விஞ்ஞானப்புரட்சி - அதில் சமயத்தின் தேவை,   என்று கொஞ்சம் அறிவுபூர்வமாகத் தான் நடக்கும். ஆனால் அன்று விவாதத்தின் உச்சியில் ஒரு கேள்வி கேட்டான்.


"சமயங்களால் எப்போதுமே பிறசமயங்களுக்கு  பக்கச்சார்பற்ற ஆட்சியைக் கொடுக்கமுடியாது. குறிப்பிட்ட மதச்சார்பு நாடுகளில் பிற மதத்தவர் மீது  ஒடுக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுவதையும், மதச்சார்பின்மை பேசுகின்ற இந்தியா முதலிய நாடுகளிலேயே சிறுபான்மைச் சமயங்கள் தாக்கப்படுவதையும் காண்கிறாய். ஏனென்றால் மதங்கள் அரசியல் வெறி கொண்டவை. பிறமதத்தை அடியோடு அழித்து உலகெல்லாம் தன் மதமொன்றை நிறுவுவதே அவற்றின் கனவு. அப்படி உலகெல்லாம் வென்றுவிட்டால் அந்த மதம் தனது உட்பிரிவுகளுக்குள் அடித்துக்கொண்டு சாகும். அதையெல்லாம் மீறி ஒரு சமயத்தால் பக்கச்சார்பற்ற அரசை உருவாக்க முடியுமென்றால், அது எதிர்காலத்தில் எப்படி அமையும் என  எதிர்பார்க்கிறாய்?"

அந்தக் கேள்வி அதிலிருந்த அதிரவைக்கும் உண்மையால் என்னை தடுமாறவைத்தது. ஆனால் உடனேயே மீண்டுகொண்டு பதில் கூறினேன்.

"எனக்கு என் நெறி சைவம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஏனைய சமயங்களின் மீது படிந்துள்ள இரத்தக்கறைகளோடு ஒப்பிடும் போது அதில் கறையே இல்லை. அல்லது மிகக்குறைவு. இன்று கூட ஒப்பீட்டளவில் மிக உச்சமான மதச்சகிப்புத்தன்மை கொண்டவர்கள் சைவர்கள் தான். மற்றோரை வலிந்து வம்புக்கு இழுப்பதென்பதோ  மதமாற்றுவதோ சைவத்தில் கட்டாயமானதாக இருந்ததில்லை.

இன்று காதலுக்கு  - கலியாணத்துக்கு - பொருளாதாரத்துக்கு, சைவத்தை தூக்கியெறிந்து மதமாறுபவர்கள் அதிகரிக்க காரணம் சமய அறிவின்மை தான் என்பது ஒரு பார்வைக்கோணம். ஆனால் மற்ற மதங்கள் போல இல்லாமல், "நீ எளியவன் என்றால், ஒரு சமயமாக, நான் உன் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்த ஒரு கருவி மட்டுமே. அதை நான் பூர்த்தி செய்யாதபோது நான் இல்லாமலும் உன்னால் வாழமுடியும்" என்ற அடிப்படை பகுத்தறிவு நம்பிக்கையை ஒரு சைவனுக்கு பிறப்பிலிருந்தே சைவம் ஊட்டுகிறது என்பது இன்னொரு  பார்வைக்கோணம்.

எனவே சைவம் பிற சமயங்களை அடியோடு அழிக்க முனையாது. அதற்கென உலகளாவிய ஒற்றை மதப்பேரரசு என்ற கனவும் இல்லை. அந்தந்த சமயத்தை அந்தந்த இடத்திலேயே வைத்துக்கொள்ள விரும்பும். பௌத்தன் பௌத்தனாயிரு, கிறிஸ்தவன் கிறிஸ்தவனாயிரு, இஸ்லாமியன் இஸ்லாமியனாயிரு. உங்கள் இடத்தில் நான் தலையிடமாட்டேன். அதேபோல் என் இடத்துக்குள் நீங்கள் தலையிடக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு தன் எல்லையில் அது நின்றுகொள்ளும். அப்படி ஆட்சிபீடமேறும் சைவத்தின் ஆட்சியில் மத வன்முறையே இருக்காது என்று என்னால் உத்தரவாதம் அளிக்கமுடியாத போதும், ஒப்பீட்டளவில் வன்முறை மிகக்குறைவான ஆட்சியை சைவத்தால் வழங்கமுடியும்"  என்று சொல்லிமுடித்தேன். அவன் புன்னகைத்து அதோடு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

ஆனால் பின்பு யோசித்தபோது  வழக்கமான அறிவுபூர்வமான உரையாடலில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ என்று தோன்றியது. ஆனால் நான் சொன்ன கருத்தில் உண்மை இல்லாமலில்லை என்பதை உறுதிப்படுத்த உதவியது,  முகநூல் நண்பர் விக்கி நண்பன் பதிந்த ஒரு பதிவு. அவரது கேள்வி இதுதான்.

 


இந்தியாவில் தோன்றிய சமயங்களான சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் போன்ற மதங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதை கல்வெட்டு, இலக்கிய, தத்துவ ரீதியில் பதிவு செய்திருக்கின்றன. ஒரு மதம்  மற்ற மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு முரண்பட்டுக்கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது சாதாரண நிகழ்வு  தான். ஆனால் இந்த மதங்கள் தங்கள்  உட்பிரிவுகளுக்குள்ளே ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. பௌத்தத்துக்குள் மகாயான - தேரவாத முரண்.  சைனத்தில் சுவேதாம்பர - திகம்பர - யப்பனிய முரண், வைணவத்துக்குள் வடகலை - தென்கலை முரண். இப்படிப் பல பதிவாகியிருக்கின்றன.  ஆனால் சைவத்தின் உட்பிரிவுகள்,  காபாலிகம் - காளாமுகம் - பாசுபதம் முதலியவை ஒன்றுக்கொன்று தங்களுக்குள்ளாகவே எதிர்த்துக்கொண்ட தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?


சைவத்தின் பிரதானமான இயல்புகளில் ஒன்று . Integrity.  ஒருங்கிணைப்பு என்று சொல்லலாம். சைவத்தில் கிளைகள் புதிது புதிதாக உருவான போதெல்லாம், அவை, தன் பழைய கிளைகளை ஏற்றுக்கொண்டு ஆனால் அவற்றை விட தாம் சிறந்தவை என்ற கொள்கையுடனேயே வளர முயன்றிருக்கின்றன.

உதாரணமாக காஷ்மீர சைவ அறிஞர் அபிநவகுப்தர் , ஏற்கனவே வழக்கில் இருந்த ஐந்து மந்திரமார்க்க சைவப்பிரிவுகள் (சித்தாந்தம், வாமம், தட்சிணம், பூதம், காருடம்) சதாசிவனின் ஐம்முகங்களில் தோன்றியவை என்பதை மறுக்காத அதேவேளை, தான் பரப்புகின்ற கௌல சைவம் ஈசனின் ஆறாவது ஊர்த்துவோர்த்த முகத்தில் தோன்றியதாகவும், எனவே ஏனைய ஐந்தையும் விட சிறந்தது என்றும் உரிமை கோருகிறார்.

சித்தாந்தத்தில் இருந்து பிற்காலத்தில் கிளைத்த பைரவசுரோக்த சைவப்பிரிவுகள் (வைரவனுக்கு கூடிய முன்னுரிமை கொடுத்த தட்சிண, வாம, நேத்ர, யாமள, கௌல சைவப்பிரிவுகள்) மிகக்கடுமையான தாந்திரீக வழிபாடுகளை முன்வைத்தபோதும், தம்மைப் பின்பற்றுவோர் சித்தாந்தத்தை பின்பற்றுவோரை விட விரைவில் பலன் பெறுவர் என்று அறைகூவின. தெளிவாகச் சொன்னால் சித்தாந்தத்தைக் கைவிட்டு என்னைக் கடைப்பிடியுங்கள் என்று அவை கோரவில்லை.

சமணரைத் தோற்கடித்த  ஏகாந்தட ராமையா எனும் காளாமுக சைவரை பிற்கால வீரசைவர்கள் போற்றியிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்ச்சைவத்தின் அறுபத்துமூவருக்கு கன்னடத்து வீரசைவத்தில் "புராதனரு" என்ற பெயரில் மரியாதை அளிக்கப்படுகின்றது.

காளாமுகரின் முதன்மையான வழிபாட்டுத் தலங்களான கேதாரமும் ஸ்ரீசைலமும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின், வீரசைவர்கள் கையில் வருகின்றன. நாத் சைவர்களின் முக்கியமான மடமான கன்னடத்து கத்ரி மடம், அதற்கு முன் பாசுபத அல்லது காளாமுக குறுங்குழு ஒன்றுக்கு சொந்தமாக இருந்தது என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பெரிய போராட்டமேதும் இடம்பெற்று இந்த உரிமைமாற்றங்கள் நிகழ்ந்ததாக எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை.

சைவ சித்தாந்தத்துக்கும் சிவசமவாத சைவத்துக்கும் இன்றும் மெய்யியல் முரண்பாடு இருக்கிறது. அதனாலேயே சிவசமவாத நூலான அகோர சிவாச்சாரியார் பத்ததியை ஏற்பதில்  சித்தாந்திகள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இது மெய்யியல் தளத்தில் மட்டும் தான். வழிபாட்டுத்தளத்தில் இன்றும் பல சிவாலயங்களில் அகோர சிவ பத்ததி பயன்பாட்டில் இருக்கிறது.

அவ்வளவு ஏன், பிற்கால சித்தாந்த நூல்களில் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்று தலைக்கு ஆறாக இருபத்து நான்கு சமயங்களை மெய்யியல் ரீதியில் மறுத்து தன்னை தாபிக்கும் சைவ சித்தாந்தம், அந்த இருபத்து நான்கு சமயங்களின் பௌதீக இருப்பை எங்குமே மறுக்கவில்லை என்பதையும் காணலாம். அந்த இருபத்து நான்கில் பன்னிரண்டு தான் சைவப்பிரிவுகள். ஏனைய பன்னிரண்டில் பௌத்தம், சுமார்த்தம், வைணவம், சமணம், ஏன் நாத்திகவாத உலோகாயதமும் அடக்கம்.

பிற மதங்கள் தனக்குச் சமனல்ல என்ற சுயபெருமிதத்தை விட்டுக்கொடுக்காத போதும், புறச்சமயங்களின் இருப்பை, அவற்றின் தொடர்ச்சியை சைவம் அங்கீகரித்திருக்கிறது என்பது மதச்சகிப்பற்ற உலகில் மானுடத்தை முன்னிறுத்தும் மிக ஆரோக்கியமான பாய்ச்சல். பௌத்தம் - வைணவத்தில்  மட்டுமல்ல; மேலைத்தேய மதங்களில் கூட நாம் காணமுடியாத இந்தப் பரந்த மனப்பாங்கே சைவம் ஆசியாவெங்கும் தான் பரவிய இடங்களில் பேரரசுகளை அமைத்ததற்கான முதன்மையான காரணம் என்பதை ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதேவேளை, இயல்பிலேயே வருண - சாதிப் பிரிவினைகளை கடக்க முயன்ற சைவம், பேரரசுகளை அமைத்தபோது, தவிர்க்கமுடியாமல் வர்ணாச்சிரமக் கட்டமைப்பை ஆதரிக்க முயன்றதும், அதுவே சைவம் சுமார்த்தத்திடம் முற்றாக வீழ்ந்து இன்றைய பரிதாபகரமான நிலையை அடையக் காரணமானது என்பதையும் கூட அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மதச்சார்பின்மையை இலட்சியமாகக் கருதி நகர்ந்துகொண்டிருக்கும் நவீன உலகில், இப்போது இந்து எனும் அடையாளத்துக்குள் சுயமிழந்து, சுமார்த்தத்துடன் இரண்டறக் கலந்து, வர்ண - சாதியப் பாகுபாடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் சைவம், எதிர்காலத்தில் எப்போதாவது தூய நிலையில் அரசியல் பலம் பெறுமா என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியவில்லை. ஆனால் அது நிகழ்ந்து சைவம் ஆட்சிபீடமேறினால் உலகம் இதுவரை காணாத மகத்தான மதச்சகிப்பு அரசாக அது அமையும் . அதற்காக இப்போதைக்கு அரசியல் பலம் பெறக் கனவு காண்பதெல்லாம் பேராசை தான். முதலில்,  சைவம், அதன் அதிகாரபீடங்கள், அதன் பின்பற்றுநர்கள், தங்கள் தவறுகளைக் களைந்து, பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ளி எதிர்காலத்துக்கான சமயிகளாக தங்களை இற்றைப்படுத்திக்கொள்ளட்டும். அதற்குப் பிறகு "விளங்குக உலகெலாம்" என்பதை மனப்பூர்வமாகச் சொல்லி வாழ்த்த முயலுவோம்.  🔱
மேலும் வாசிக்க »

நன்னலப் புள்ளினங்காள்....!

0 comments
எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஏதாவது வாசித்துக்கொண்டிருப்பேன். அதில் ஏதாவது ஒற்றைச்சொல்லை கண்கள் பிடித்துக்கொள்ளும். பிறகு, அந்தச் சொல் இடம்பெறும் சினிமாப் பாடலொன்று நினைவுக்கு வந்துவிடும். பிறகு கொஞ்சநாட்கள் அந்தப் பாடல் தான். மீளவே முடியாது. இது அடிக்கடி தலைகீழாகவும் நடக்கும். பாட்டுக் கேட்டுவிட்டு அதில் ஒரு சொல்லைப் பிடித்து அதைப் பற்றித் தேடி வாசிப்பது. சிலநேரம் சலித்துப் போனாலும் சிந்தனை மீளவிடாது. என்னடா இது என்று அலுத்தாலும் அதிலேயே உழன்று கொண்டிருக்கும்.

இப்படித்தான் சில வாரங்களுக்கு முன் பகிர்ந்த ஈஷாவின் கயிலைப்பதிகத்தை காது குளிரக் கேட்டபோது மூலத்திலுள்ள அப்பரின் பத்து தேவாரங்களையும் வாசித்தேன். ஒருவரி பாய்ந்து ஒட்டிக்கொண்டது. ""வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன்" இணை பிரியாத அன்றில் பறவைகள் இரண்டு வருவதைக் கண்டேன். அதில் செல்லமாகப் பற்கள் பதிய கவ்விக் கொண்டது ஒற்றைச்சொல். பகன்றில். பிரியாத அன்றில். அன்றில் பறவை.

பிறகென்ன, மண்டைக்குள் நிரம்பியிருக்கும் பாட்டுவரிப் புத்தகங்களெல்லாம் தூசு தட்டப்பட்டு, எந்தெந்தப் பாட்டில் அன்றில் இடம்பெற்றிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று சினிமாப் பாடல்கள் வெளியே எடுத்துப் போடப்பட்டன. போன கிழமை இவை மூன்றும் தான் திகட்ட திகட்ட முணுமுணுத்த பாடல்கள்.

முதலாவது, என் ஜி கே திரைப்படத்தின் அன்பே பேரன்பே பாடல். "உறவே நம் உறவே நம் அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே."
இரண்டாவது, ஜீன்ஸில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் - "அன்றில் பறவை ரெட்டைப்பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே"
மூன்றாவது எனக்கு 20 உனக்கு 18இன் அழகின் அழகி - அற்றைத் திங்களில் அன்றில் பறவையாய் ஓடிப்போக நீயும் வஸ்தாவா?





மனிசன் என்றால் மூளையில் பிரயோசனமாக ஏதாவது இருக்கவேண்டும். இங்கே முழுக்க முழுக்க பாட்டு வரிகளே நிரம்பியிருந்தா, வேறென்ன செய்றது சென்ட்ராயன்

பிறகு தொற்றுநோயின் இரண்டாம் கட்டம் தாக்கியது. பாட்டுக் கேட்டு சலித்து அன்றில் பறவை பற்றி வாசிக்கத் தொடங்கினேன். அன்றில் என்று தேடியதும் இணையம் அரிவாள்மூக்கன் எனும் பறவையிடம் கொண்டு சேர்த்தது. அதன் ஆங்கிலப்பெயர் Glossy Ibis. அறிவியல் பெயரீடு Plegadis falcinellus. இங்கு இலங்கையில் இப்பறவைக்கு என்ன உள்ளூர்ப்பெயர் என்று எனக்குத் தெரியாது.

அரிவாள்மூக்கன்

சங்க இலக்கியங்கள் சொல்வதன் படி, அன்றில்கள் கூரிய அலகைக் கொண்டிருக்கும். கடற்கரை நிலங்களில் நீர்நிலைகளை அண்டி வாழும். மீன் முதலியவற்றையே உண்ணும். முக்கியமாக இவை இணை பிரியாது. பிரிவுத்துயரால் வருந்துகின்ற சங்க இலக்கியக் காதலர்கள், அன்றில் சத்தமிடுவதைக் கேட்டால் துடித்துப்போவார்கள். ஐயோ நீயும் இணை பிரிந்து வருந்துகிறாயா என்று.

ஆனால் இந்த அரிவாள்மூக்கன்கள் இலக்கியம் சொல்வது போல் இணைபிரியாமல் வாழ்கின்றனவா என்பதை பறவையியலாளர்கள் இன்னும் மிகத்திருத்தமாக உறுதிப்படுத்தவில்லை. தமிழில் அன்றிலைப் போலவே வடமொழி இலக்கியங்களில் இப்படி துணையைப் பிரிந்தால் வருந்தும் கிரௌஞ்சம் எனும் பறவை குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிரௌஞ்ச இணைகளில் ஒன்றை வேடனொருவன் கொன்றதைக் கண்ட வருத்தத்தில் தான் வான்மீகி உலகின் முதல் கவிதையை இயற்றினார். அந்தக் கவிதையே வான்மீகி இராமாயணம் பிறக்கக் காரணமானது என்பது வடமொழித் தொன்மம். கிரௌஞ்சத்தை வட இந்தியாவில் வாழும் சரசக்கொக்கு அல்லது Sarus Crane எனும் ஒரு கொக்கு இனமாக இனங்காண்கிறார்கள். துணையைக் கவர்வதற்காக இது அழகாக நடனமாடுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

சரசக்கொக்கு துணையாடல்


இலக்கியங்களின் இன்னும் பல வினோதமான பறவைகள் சொல்லப்படுகின்றன. இசையால் மயக்கி வேட்டையாடப்படும் அசுணங்கள், எட்டுக்கால் கொண்ட சிம்புள்கள், இருதலை கொண்ட பேருண்டப் பறவைகள். சந்திரன் ஒளியைக் குடித்து வாழும் சகோரப்பட்சிகள். மழைநீரை மட்டுமே அருந்தி வாழும் சாதகப் பறவைகள் அல்லது சக்கரவாகப் பறவைகள். "சக்கரவாகமோ மழையை அருந்துமாம்" பாட்டு நினைவுக்கு வருகிறதா? (ஐயோ, இங்கும் சினிமாப்பாட்டா 🤦‍♂️)

கந்தபுராணத்தில் முருகனின் படையை அழிப்பதற்காக சூரபதுமன் ஏற்கும் மாய வடிவங்களில் ஒன்று சக்கரவாகப் பறவை. விஷ்ணுவின் நரசிங்க வடிவை அழிக்க சிவன் எடுத்த வடிவம் சிம்புள் அல்லது சரபம். அதை வெல்ல நரசிங்கர் மீண்டும் எடுத்த வடிவம் இருதலைப்புள் எனும் "கண்டபேருண்டப் பட்சி" வடிவம். இந்தப் பேருண்டப்பறவை சிங்களப்பண்பாட்டிலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. கேகாலை மாவட்டத்தின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம் கண்டபேருண்டப் பறவை தான்.

செங்கிளுவை

சகோரம்?
சக்கரவாகம், சகோரம், சாதகம் எல்லாம் இணை பிரியாதவை என்ற குறிப்பு சில இடங்களில் கிடைக்கின்ற போதும், வடமொழி இலக்கியங்களில் இடம்பெற்ற அளவு இவை தமிழில் விரிவாகப் பதிவாகவில்லை. உண்மையில் சந்திரன் ஒளியைக் குடித்தோ, மழைநீரை மட்டுமோ அருந்தி வாழும் பறவைகள் எதுவும் உலகில் இல்லை. இன்று சக்கரவாகம் என்றால் செங்கிளுவை (Brahminy duck) என்றும், சகோரம் என்றால் Chukar Partridge என்றும் இனங்காண்கிறார்கள். அதிலும் செங்கிளுவை வலசை வரும் பறவை. இன்னும் சிலர் வலசை வரும் சுடலைக்குயில் (Jacobin Cuckoo) எனும் பறவையையே சாதகப்பறவை என்கிறார்கள். இதையெல்லாம் எதை வைத்து உறுதி செய்தார்கள் என்று தெரியவில்லை.
சுடலைக்குயில்

இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற குருகு என்னும் பறவை உரையாசிரியர்கள் தவறாக இனங்கண்டது போல, நாரை அல்ல; அது Cinnamon bittern எனும் பறவை என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அதே போல், திருக்குறளில் வரும் மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் என்பது மான்வகை அல்ல; அது கவரிமா - மலையெருது Yak தான் என்பதும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், இப்போது அன்றில் பற்றி இணையத்தில் தேடியபோது அதையும், சக்கரவாகம், சகோரம் முதலியவற்றையும் ஒன்றோடொன்று குழப்பித் தான் பலர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

பண்பாடு என்பது பன்முகத் தன்மை வாய்ந்தது. பண்பாட்டு அடையாளங்களான இலக்கியங்களில் இடம்பெறும் வரலாறு என்ன என்பதைச் சொல்லவேண்டியவர்கள், வரலாற்றறிஞர்கள். அதில் குறிப்பிடப்படும் பறவைகள் மிருகங்களை ஆராயவேண்டியவர்கள், விலங்கியலாளர்கள். தாவரங்களை விவரிக்கவேண்டியவர்கள் தாவரவியலாளர்கள். ஆனால் தமிழ் உலகைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றையுமே தமிழறிஞர்கள் மட்டுமே செய்கிறார்கள். நம் பிரச்சினை இது தான். இலக்கியத்தை மொழி அறிஞர்கள் மட்டுமே ஆராய்வது. தங்களுக்குத் தெரிந்ததை மட்டுமே அவர்கள் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அது பரிசீலனை செய்யப்படாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது. துறைசார் அறிஞர்களும் இதுவரை தங்கள் கோணத்தில் இலக்கியங்களை விரிவாக ஆராய்ந்து பொதுவெளிக்குக் கொண்டுவந்ததில்லை. இதனால் நாம் இழந்ததும் பல.

என் சூழலில் வளர்கின்ற பல மரங்களின் பெயர் எனக்குத் தெரியாது. வேடிக்கை பார்க்கும் போது ஊடே பறந்துபோகும் பறவையின் பெயர் என்னவென்றும் தெரியாது. காட்டில் மேய்ந்த மரையைப் பார்த்து "ஏன் அந்த மான் அப்படி பெரிதாக இருக்கிறது" என்று கேட்ட என் சம வயது நண்பனைக் கண்டிருக்கிறேன். நமக்கு சூழல் பற்றிய அறிவு எந்த மட்டத்தில் தான் இருக்கிறது?

இப்போதெல்லாம் உலக அழிவு பற்றி அடிக்கடி அஞ்சிக் கதைக்கிறோமே, அப்படி ஒன்று இடம்பெற்று, நம்மை மட்டும் இயற்கை மனுக்குலத்தின் ஒற்றைப் பிரதிநிதியாக தப்பிக்க வைத்தால், பசியில் என்னவென்று தெரியாமல் காஞ்சிரம்விதையை உண்டு செத்துத் தொலையும் நிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்? உங்களை நம்பிக் காப்பாற்றிய இயற்கை "என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா" என்று தலையில் அடித்துக் கொள்ளாது?

பாடசாலையின் பாடநூல் கல்வியை விட நாம் படிப்பதற்கு நிறைய இருக்கின்றது. நம் இளந்தலைமுறைக்கும் படிப்பிப்பதற்கு நிறைய இருக்கிறது. இன உணர்வு, மொழி உணர்வு என்பதெல்லாம் நமக்கு அரசியலோடு நின்று விடுகிறது. அப்படி அல்ல. இனத்தில் - மொழியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த அனுபவ அறிவையும் தலைமுறைக்குத் தலைமுறை கடத்துவது தான் உண்மையான இனவுணர்வு. மெய்யான மொழியுணர்வு. அதை எப்போது செய்யப்போகிறோம்? 😏
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner