“தென்னம்பிள்ளைக் கலியாணம்” என் நைண்டிஸ் கிட் நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று. புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுந்த பின்னர், முதலில் வைக்கப்படும் தாவரங்களில் ஒன்று, தென்னை. அப்படி ஒரு வளவில் வளர்ந்து நிற்கும் தென்னை ஒருத்தி ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்கத்தொடங்கிய நாளிலிருந்து வீட்டிலுள்ள பெண்கள் அவளை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவளைக் கடக்கும் போதெல்லாம் ஆண்கள் படபடப்புடன் பார்வையாலேயே உச்சி முதல் பாதம் வரை அளந்து நகர்ந்து செல்வார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்துவிடும். கூரிய மடல் பாளை அவளில் தோன்றி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றிருக்கும். அதைக் கண்ட முதல் நாளில் பெண்கள் குரவையிடுவார்கள். வீட்டு ஆண்கள் வெடி சுடுவார்கள். ஆம், அந்த வீட்டில் ஒரு குலமகள் வயதுக்கு வந்துவிட்டாள்.