அன்பென்று கொட்டு முரசே

0 comments



வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க. இது ஹலால். உங்கட ஊர்ல வாங்கின கோழி இறைச்சி தான்" அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "தேங்ஸ். " என்றாள்.

இது ஒரு நண்பனுக்கு நடந்தது. தனது இஸ்லாமியத் தோழன் ஒருவன் வீட்டுக்கு முதன்முதலாகப் போயிருக்கிறான். இவன் முன் சிற்றுண்டி கொணர்ந்து வைக்கப்பட்டது. இவன் உண்ணவில்லை. அவன் "டேய் இது மாட்டிறைச்சி இல்லடா, நீ சாப்பிடலாம்" என்றிருக்கிறான். இவன் பேசாமலிருக்க, அவன் புன்னகை மாறாமல் சொன்னானாம் "வெள்ளிக்கிழமை தானே. நீ வாறாயெண்டு மரக்கறி ரோல்ஸ் தான் எடுத்து வெச்சன். சாப்பிடு." நண்பன் நெகிழ்ந்து விட்டான். அவன் உள்ளூர் வழக்கப்படி வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உண்பவன்.
முன்பொருமுறை பிள்ளையாருக்கென பொங்கிய பொங்கலை "இது படையலில வைக்காத பொங்கல். சாப்பிடுங்க" என்று சொல்லி கிறிஸ்தவ நண்பனொருவனுக்கு பகிர்ந்தளித்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் பிற தெய்வங்களுக்கென சமர்ப்பிக்கப்பட்ட உணவை கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ உண்பதில்லை.
இந்த மூன்றுமே மதம் அல்லது மதம் சார்ந்த வாழ்வியலால் உணவுப்பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள். ஆனால் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே குதூகலித்துப் போயிருக்கிறார்கள். அடுத்தவன் பண்பாட்டை தான் அறிந்திருந்ததால் நாகரிகமாக நடந்துகொள்ள முடிந்தது என்ற பெருமிதம், அவ்வாறு நடந்து கொண்டவருக்கு. தன் பண்பாட்டை இவர் இத்தனை மதிக்கிறாரே என்பதை அறிந்துகொண்டதால் நட்புணர்வு பலமடங்கான பூரிப்பு அவ்வாறு நடத்தப்பட்டவருக்கு.
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. நமது அன்றாட வாழ்க்கை முறைமையே சிறந்தது - உயர்ந்தது என்ற எண்ணம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் நமக்குக் கீழானவர்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த மேல் தட்டு எண்ணம் தனிமனிதனுக்கு என்று இல்லாமல், ஒரு குடித்தொகைக்கு இருக்கும் போது, அது அங்கீகாரமும் பெற்றுவிடுகிறது. எனவே தான் தனிமனிதனை விட சமூக உணர்வு முன்னிலைப்படுத்தப்படும் சமயம்-இனம்-சாதி-பிரதேசம் முதலிய பிரிவினைகளில் வன்மம் சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.
இன்றும் உலகின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று மதச்சகிப்பின்மை தான். தன் மதத்தின் வழக்கம் தான் உசத்தி; மற்றவனுடையது கீழானது என்ற மேலாதிக்க மனப்பான்மை எழும்போது சிக்கல் பெரிதாகிறது. நான் என் மதவழக்கப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறேன். அவன் தன் விருப்பப்படி வாழ்க்கைமுறையை அமைத்திருக்கிறான். அவன் அவனுக்கு விதித்தபடி நடக்கட்டும்.ஆனால் நான் எனக்கு விதித்தபடி நடப்பேன். இருவரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை. இப்படி எண்ணிக் கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் தான், யதார்த்தத்துக்குப் பொருத்தமான தீர்வு.
ஆனால் இறைமறுப்பு தரப்பினர் இந்த சந்தர்ப்பங்களுக்குச் சொல்லும் எளிய தீர்வொன்று இருக்கிறது. "இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே தயங்கிய முதல் தரப்பினர் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாகவேனும் விட்டொழித்து விட்டு அப்போதைக்கு இயல்பாக நடந்துகொண்டிருக்க வேண்டும்".
அது அத்தனை இலகுவானதல்ல. அவர்கள் எண்ணுவது போல் சராசரி மனிதன் ஒருவனால் இலேசில் தன் உணவுப் பழக்கவழக்கத்திலிருந்து வெளியேறமுடியாது. ஏன் இறைமறுப்பர்களாலேயே கூட. "பூகோள வெப்பமயமாதலுக்கு கால்நடைகள் தான் காரணம். இனி ஆயுள் முழுக்க அனைவரும் மரக்கறி உணவு மட்டும் உண்ணவேண்டும்" என்று அரசாங்கம் சட்டம் கொணர்ந்தால் அவர்கள் ஆமாம் சாமி போட்டுவிட்டு பேசாமல் அமர்ந்து விடுவார்களா? ஊரே ரணகளம் ஆகியிருக்காது?
🙂
உணவுப் பழக்கவழக்கம் என்பது உணர்வு சார்ந்தது. மத அடையாளம் இல்லாவிட்டாலும், கிழக்கு ஆசியர் நாயையும் பூச்சிகளையும் உண்ணுவதைக் காணும் போது நமக்குக் குமட்டிக்கொண்டு வருவதற்கும், 'வௌவால் சாப்பிட்டு கொரோனா தொற்றை உலகெலாம் பரப்பினான் சீனன்' என்று குரூரமாக இனவாதம் பேச நம்மை அனுமதித்ததும், இந்த அன்றாட வாழ்க்கை முறைமை சார்ந்த 'மேற்றட்டு உணர்வு' தான் முக்கியமான காரணம்.
சுவாரசியம் என்னவென்றால் அதே உணர்வு சம்பந்தப்படுவதால் தான், முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டிய இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், எல்லாத் தரப்பினர் இடையேயும் அன்யோன்னியமும் நெருக்கமும் கூடும் வாய்ப்பு ஏற்பட்டது.
இப்படியும் சொல்லலாம். இறைமறுப்பர்கள் பரிந்துரைப்பது, வண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லாவற்றையும் வெள்ளை நிறமாக்கி விடுவோம் என்ற ஒரு இலட்சிய (ideal) கருதுகோளை. இலட்சியம் என்பதாலேயே அது நடக்காது. நடக்கவும் முடியாது. ஏனென்றால் இயற்கை என்பதே பல்வகைமை (diversity) தான். மாறல்கள் (variation) இருப்பதால் தான் கூர்ப்பு அல்லது பரிணாமமே இடம்பெறுகிறது என்பது அடிப்படை விஞ்ஞானம் தெரிந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
எந்த சமயம் அதிகமான பின்பற்றுநர்களை வைத்திருக்கிறது, எது சமகாலத்துக்குப் பொருத்தமான கருத்துக்களை தன் வசம் வைத்திருக்கிறது என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. எந்த சமயம் ஏனைய சமயத்தை பின்பற்றுபவனின் உணர்வுகளை மதிக்கிறது, அவனையும் அங்கீகரிக்கிறது என்பது தான் சமகாலத்தில் முக்கியமாகக் கருதவேண்டிய பிரச்சினை. ஆம் அங்கீகாரம் தான் முதன்மையான பிரச்சினை.
மதம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதன் என்றால் உங்களால் சகமனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அடுத்த சமயத்தவனோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனது வாழ்வியலை நீங்கள் மதிக்கிறீர்கள், அங்கீகரிக்கிறீர்கள் என்பதற்கு ஒரு சிறு சான்றையாவது காட்டிவிடுங்கள். அப்போது அவன்/ அவள் முகத்தில் பூக்கும் புன்னகைக்கு விலை இல்லை. அப்படி விலை தீர்மானிக்க முடிந்தால் அதன் பெறுமதி தான் உங்களுக்கான அங்கீகாரம். மாற்றுமதத்தவனின் உங்கள் மதத்துக்கான அங்கீகாரம் கூட.
அன்பென்று கொட்டு முரசே.
❤
மேலும் வாசிக்க »

உயிர் மெய்

0 comments



வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் உன் பெயர் அழகாக இருக்கிறது என்று நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் துலாஞ்சனன் என்பது சிங்களப்பெயர். சிங்களவரிடம் அந்த உச்சரிப்பை ஒத்த "டுலங்ஜன்" என்ற பெயர் நல்ல பிரசித்தம். (ஒளிர்கின்ற கண் இமையைக் கொண்டவன் என்ற விந்தையான பொருள்.

சிங்களத்தில் "ஞ்ச" என்ற ஒலிக்கூட்டு வழக்கத்தில் இல்லை. அது ஞ்ஞ அல்லது ங்ஜ என்று தான் வரும். என்றாலும் அங்கு ஞகரத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன. தமிழ் போலவே சிங்களத்திலும் ஞகரம் அரிதான ஒலிப்பு. எனவே துலாங்ஜனன், துலான்ஸனன், துலாஞ்ஞனன் என்றெல்லாம் என் பெயர் சிங்களத் தோழர்களால் கடித்துக் குதறப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு ஒரு தமிழ் ஆசிரியரே கஷ்டப்பட்டு துலாங்ஙன் என்று அழைத்த கிருபை.. ச்சீ பெருமை அதற்குண்டு.

உத்தியோகபூர்வ ஆவணங்களில் என் பெயரை சிங்களத்தில் எழுதும்போது சிக்கலாக இருந்தது. கடந்த ஆண்டு தொழில் நிமித்தம் முறைப்படி சிங்களத்தை கற்கத் தொடங்கியபோது ஆசிரியையிடம் என் சிக்கலைச் சொன்னேன். அவர் பூர்வீக சிங்களவர். இளம்பெண் கூட. மொழி இலக்கணத்தை தாங்கள் பெயர் எழுதும் போது பார்ப்பதில்லை. விரும்பியபடி எழுதுங்கள் என்று அவர் சொன்ன பின்னர் தான் என் சந்தேகம் தீர்ந்தது. ஆங்! நான் சொல்லவந்தது என் பெயர் பற்றியோ அழகான சிங்கள ஆசிரியை பற்றியோ இல்லை. சிங்களம் கற்றது பற்றி.

போன ஆண்டு முறைப்படி கற்ற போது தான் சிங்கள அரிச்சுவடியை கவனித்தேன். சிங்கள உயிரெழுத்துக்கள் 20. தமிழ் பன்னிரண்டுடன் எஹ், ஏஹ், ருஹ், ரூஹ், லுஹ், லூஹ், அங், அஃ என்று எட்டு எழுத்துக்கள் மேலதிகம்.
ஆனால் சிங்கள மெய்யெழுத்துக்களுக்கு நிலையான எண்ணிக்கை இல்லை. அது மாறிக்கொண்டே செல்லும் என்பதால் இத்தனை தான் என்று எண்ணிக்கை சொல்லிக் கற்பிக்கமாட்டார்கள். எஃப்பிற்கான சிங்கள எழுத்து அண்மையில் தான் சிங்கள அரிச்சுவடியில் சேர்க்கப்பட்டது. தற்போது இஸ்ஸட்டிற்கான எழுத்தைச் சேர்க்கும் திட்டம் வரைவில் இருக்கிறது.

என்றாலும் சிங்கள மெய்யெழுத்துக்களைக் கற்பிக்கும் போது ஒரு ஒழுங்கில் கற்பிக்கிறார்கள். முதலில் க, ச, ட, த, ப என்னும் ஐந்து எழுத்துக்களும் அவற்றுக்கான மூன்று வர்க்க எழுத்து வகைகளும் ('க'விற்கு ka, kha, ga, gha, 'ச'விற்கு cha, ccha, ja, jha, 'ட'விற்கு ta, tta, da, dda, 'த'விற்கு tha, ttha, dha, ddha, 'ப'விற்கு pa, pha, ba, bha) கற்பிக்கப்படுகின்றன.

பிறகு ங, ஞ, ண, ன, ம என்னும் ஐந்து எழுத்துக்களும், அவற்றை முறையே க, ச, ட, த, ப உடன் புணர்த்தி, ங்க, ஞ்ஞ, ண்ட, ந்த, ம்ப ஆகிய ஐந்து கூட்டெழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன.

அடுத்து ய, ற, ல, வ எனும் நான்கு எழுத்துக்கள். இறுதியாக அந்த அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட ஶ, ஷ, ச, ஹ, ள, ஃப மெய்களுடன் அரிவரிப் பயிற்சி ஏறத்தாழ நிறைவுறுகிறது.

தமிழ் அரிச்சுவடியை சிங்கள அரிச்சுவடியோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தமிழ் அரிச்சுவடியும் ஒரு ஒழுங்கிலேயே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் தலா ஆறாக பதினெட்டு மெய்யெழுத்துக்கள் என்று படித்திருக்கிறோமல்லவா? அந்த ஒழுங்கில் தான் வண்ணமாலை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி?

வல்லினம் ஆறில் க,ச,ட,த,ப என்னும் ஐந்தும், மெல்லினம் ஆறில் ங, ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும் மாறி மாறி ஒன்று விட்டு ஒன்று என்ற ஒழுங்கில் வருகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம.
இந்தப் பத்துக்குப் பின்னர் ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறு இடையினங்கள் வருகின்றன. விடுபட்ட வல்லினம் றவும், விடுபட்ட மெல்லினம் னவும் இணைக்கப்பட்டு இறுதியில் தமிழ் வண்ணமாலையின் 18 மெய்களும் பூர்த்தியாகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம
ய, ர, ல,வ, ழ, ள
ற, ன
ஏன் இந்த ஒழுங்கு? றகரமும், னகரமும் ஒழுங்கு மாறி ஏன் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன?
இந்தக் கேள்விக்கான விடை எளிமையானது. சிங்கள அரிச்சுவடி சுட்டிக் காட்டுவது போல, தமிழிலும் ஆரம்பத்தில் வல்லினமும் மெல்லினமும் ஐந்து ஐந்து தான். தமிழ் மொழி வளர்ச்சி கண்டபோது, அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் தான் றவும் னவும். ரகரத்தின் வலிய பலுக்கல் றகரம். ஒரே உச்சரிப்பு போல இருக்கும் நகரமும் னகரமும் தமிழில் பல்லாண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்தியதை கல்வெட்டுக்களிலேயே காணலாம். அங்கெல்லாம் னக்குப் பதில் ந பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்களை நாம் தமிழி எழுத்துருவில் மிக எளிதாக கண்டுகொள்ளலாம். தமிழி எழுத்துரு அல்லது தமிழ்ப்பிராமி எழுத்துரு, கி.பி முதலாம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். புரிகிற மாதிரிச் சொன்னால் நாம் குறுஞ்செய்தியில் roman ezuththil thamizai ezuthuvathu pola. எழுத்து வடிவம் வேறு. ஆனால் எழுதப்பட்ட மொழி தமிழ். திருக்குறள் முதலிய பழந்தமிழ் இலக்கியங்கள் தாம் எழுதப்பட்ட போது, தமிழி எழுத்துருவில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழி அரிச்சுவடியில் 'ற'வை எழுதப் பயன்படும் எழுத்து 𑀶. உரோமன் Cயும் கிரேக்க லம்டாவும் (𑀢) இணைந்த வடிவம். உரோமன் C என்பது தமிழியில் ட. கிரேக்க லம்டா 𑀢 என்பது தமிழியில் த.
ற என்பது டகரத்திகற்கும் தகரத்திற்கும் இடையே ஒலிப்பதால், ற என்ற புதிய ஒலிப்பை அரிச்சுவடியில் சேர்த்த போது அந்த 'ட'வையும் 'த'வையும் சேர்த்து (C+𑀢) புதிய எழுத்தை ( 𑀶) உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல், தமிழியில் ந என்பது தலைகீழ் T (𑀦). ன என்ற எழுத்தை இறுதியாக இணைத்தபோது ந எழுத்தின் உச்சியை சுழித்து தலைகீழ் J என்ற எழுத்தை (𑀷) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதே எழுத்து மாற்றத்தை, ஒத்த உச்சரிப்புக் கொண்ட ல, ள எழுத்துக்களிலும் காணலாம். ல என்பது தமிழியில் பக்கவாட்டு கேள்விக்குறி 𑀮 . ள என்ற எழுத்துக்கு அந்த எழுத்தோடு சிறு கால் - 𑀴 - இணைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் அரிச்சுவடியின் இறுதி மூன்று எழுத்துக்களும், தேவைக்காக, ஏற்கனவே இருந்த மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பை ஒத்து உருவாக்கி சேர்க்கப்பட்டவை என்பது இப்படித் தெளிவாகிறது.
சிங்கள அரிச்சுவடி சுட்டிக்காட்டுவது போல ஆதியான தமிழ் அரிச்சுவடியும் ஒரு காலத்தில் 'வ'கரத்துடனேயே நின்றிருக்கலாம். அதற்குப் பிறகு தமிழின் சிறப்பெழுத்தான ழகரமும், அடுத்த மூன்று எழுத்துக்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சேர்ப்பெல்லாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால், 12,18, 1, 216, என்ற திருத்தமான எழுத்துக் கணக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் நீடித்திருக்க முடியாது.
ஆனால், இதையெல்லாம் கண்டறிந்து வியப்பதற்கு முறைப்படி சிங்களம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. சிங்களம் இந்தோ - ஆரியத் தோற்றம் காட்டினாலும், அதன் மொழியமைப்பு அது அப்பட்டமாக திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்று சுட்டிக்காட்டப் போதுமானதாகி விடுகிறது.
இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழியில் லகரத்திலிருந்து ளகரத்தை வருவித்துக்கொண்டது போல, நகரத்திலிருந்து னகரத்தை வருவித்துக் கொண்டது போல, றகரத்தை உருவாக்கிய மொழியறிஞன், அதை ரகரத்திலிருந்து வருவிக்கவில்லை.
இரண்டின் உச்சரிப்பும் ஒத்தது என்றாலும், இனம் வேறு என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ர இடையினம், ஆனால் ற வல்லினம். அதனால் 'ர'வின் வலிந்த உரப்பாக 'ற' பிறக்கும் என்று சொல்லாமல், தகரத்துக்கும் டகரத்துக்கும் இடையே இன்னொரு வல்லினமாக ற பிறக்கும் என்பதை அந்த ஆசான் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறான்.
மொழி என்பதை வெறுமனே தொடர்பாடல் ஊடகம் என்று வரையறுத்து விட்டு எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால் அதை உருவாக்குவதற்கு, இலக்கணம் படைத்து வரையறுப்பதற்கு, எத்தகைய ஆழ்ந்த ஞானம் படைத்திருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு.
மொழியை வரம்பறுத்தவனை இறைவன் என்பதில் என்ன தவறு?
அந்த ஆலமர் செல்வனை வியந்து பணிகிறேன்.
அவன் படைத்த தமிழ் காலம் தாண்டித் திகழ்க.
குறிப்பு 01:
வட இந்திய, அல்லது ஏனைய திராவிட மொழிக்குடும்பங்களின் வண்ணமாலைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியாது. வேறு மொழிகளில் வல்லின - மெல்லின - இடையின பாகுபாட்டோடு அரிச்சுவடி கற்பிக்கப்படுகிறதா, அவற்றில் தமிழின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதை பன்மொழி அறிஞர்களே கூறவேண்டும்.
குறிப்பு 02:
சிங்கள அரிச்சுவடியைக் கற்றபோது நான் அடைந்த ஊகத்தை, தமிழி எழுத்துவடிவத்தின் தோற்றம் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். என் ஐயம் சரி என்றால், அது பெரும்பாலும்
கி இராம
ஐயாவின் வளவு வலைத்தளத்தில் வெளியாகியிருக்கவேண்டும். அந்த இணைப்பைக் கண்டறிந்தால் இங்கு பகிர்கிறேன்.
குறிப்பு 03:
மொழிக்கட்டமைப்பின் வரலாற்றை ஆராயும் போது, மொழிப்பற்றுக் கடந்து அறிவியலோடு இணைத்து நிறைய சிந்திக்கவேண்டி இருக்கிறது. சிங்களம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதன் மொழியமைப்பு திராவிடச் சாயல் கொண்டது என்பதை பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதன் அரிச்சுவடியிலிருந்து தமிழ் வரிவடிவ வளர்ச்சியையும் ஊகிக்க முடிவதால், அதில் உண்மை இருக்கக்கூடும். சிங்களம் எத்தனை பழைய மொழி, தமிழுக்கும் அதற்குமான உறவென்ன, தமிழின் ஆதிமொழி உரிமைகோரல் முதலிய பொருட்கோடல்கள் எல்லாம் தனியே ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
மேலும் வாசிக்க »

ஒரு விசுவசிப்பு

0 comments

 


“சுவாமி,
அருட்தந்தை சிமோ டீ கோயம்பரா இங்குள்ள விருத்தாந்தங்களை தங்களுக்கு அறிவிப்பதற்காக இந்தியாவுக்கு யாத்திரைப்படும் போது இங்கு எழுந்தருளினதை தேவரீர் அறிவீர். அவர், சத்தியத்தை நோக்கி அடியேன் மனத்தை திறந்ததுடன், தங்கள் கத்தோலிக்க வேதம் பற்றியும் பிரசங்கித்தார். அடியேன் ஜீவனை இரட்சிக்கவும், போர்த்துக்கேய சக்கரவர்த்திகளுக்கு அன்யோன்யச் சிற்றரசாக மாறவும் நீண்ட நாட்களாக வெகு விருப்பமாயிருக்கிறேன்.
இப்போது யான் மனதளவில் சத்திய கிறிஸ்தியானி என்றாலும், ஞானஸ்நானத்துக்கான முழுக்காட்டு தீர்த்தத்தைப் பெறாததனால் மிக வருத்தமுற்றவனாயிருக்கிறேன். யான் இன்னும் கிறிஸ்தியானியாகவில்லை என்றால், அது தமியேனின் அபிலாஷையால் அல்ல சுவாமி; தேசத்தின் நிலைமையை அறியவொண்ணாததினாலேயே.
எதுவாகினும் சுவாமி, அடியேனின் இராச்சியத்துக்கான வாரிசான என்னுடைய குமாரன், சத்திய வேதத்தைத் தழுவி, தொம் லூயிஸ் என்ற நாமத்தையும் பெற்றிருக்கிறான். நான் என் எல்லா இனசனங்களோடும், என்னால் ஆளப்படுகின்ற எல்லா மக்களோடும் சுவிசேஷத்தை அறிவதற்காக தேவரீர் அல்லது தேவரீரின் புதல்வர் வரவேணுமென்று பிரயாசைப்பட்டுக் காத்திருக்கிறேன். தேவரீர் இவ்விடம் எழுந்தருளும்போது தேவபக்தி இங்கு பரவுமென்று நான் பரிசுத்த மரியன்னை மீது விசுவசிக்கிறேன்.
ஆகையால் சுவாமி, ஆண்டவரின் திருப்பெயரால், மரியாளின் திருப்பெயரால் மன்றாடுகிறேன். என்னையும் கண்டி இளவரசனையும் கிறிஸ்தவர்களாக்குவதற்கு, தேவரீர் வரவேணும். அல்லது தேவரீரின் புதல்வரை அனுப்பி வைக்கவேணும். ஏற்கனவே கிறிஸ்தவனாயிருக்கப்பட்ட என் குமாரனும், அவ்வாறு விசுவசிக்கும் நானும், போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் திருக்கரங்களிலும் இரட்சிப்பிலும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஒரு கிறிஸ்தியானியாக, போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் சைனியத்துணைவனாக, உபராசனாக, தேவரீர் எனக்கு சகாயமும் இரட்சையும் தரவேணும்.
இப்போதிருந்து என்னையும் என் தேசத்தையும் தங்கள் சொந்த ஆஸ்தி போலவே தாங்கள் பயன்படுத்தக் கூடுமாயிருக்கும். என் துறைமுகத்தில் படகுகளும் கப்பல்களும் தெப்பங்களும் கட்டுமரங்களும் கட்டுவதற்கு, தாங்கள் கட்டளை வழங்க முடியுமாயிருக்கும். தங்களுக்குத் தேவையான அளவு மரக்கட்டைகளை தமியேன் தரக்கூடுமாயிருக்கும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேணுமென்றால், இந்தப் பாதிரியாரைக் கேட்கவும். அவரிடம் நான் கூறச்சொன்ன காரியங்களெல்லாம் அவர் அறிவிப்பார். தேவன் தங்களுக்கு சொஸ்தம் தருவாராக.”
-----------------------------------------------------------
மட்டக்களப்பின் மன்னன், போர்த்துக்கேய பிரான்சிஸ்கன் பாதிரியாரான சிமோ டீ கோயம்பரா ஊடாக கோவாவின் போர்த்துக்கேய ஆளுநருக்கு அனுப்பி வைத்த 1546 டிசம்பர் 25ஆம் திகதியிட்ட கடிதத்தின் தமிழாக்கம்.
கிழக்கிலங்கையில் கண்டி, சீதாவாக்கை, வியாளை (யால) ஆகிய அரசுகளை எல்லையாகக் கொண்ட "மட்டக்களப்பு" (மட்டிக்கலோ/Matecalo) எனும் சிற்றரசு நிலவியது என்பதைச் சொல்லும் மிகப்பழைய காலனித்துவ ஆவணம் இக்கடிதமாகும். இந்த மன்னனின் உண்மைப் பெயர் தெரியவில்லை.
இங்கு சொல்லப்படும் கண்டி இளவரசன், குசுமாசன தேவியின் தந்தை கரலியத்தை பண்டாரம்(ஆட்சி 1552 - 1582) என்று கருதப்படுகிறான்.போர்த்துக்கேய அரசுக்கு ஆதரவாக, மட்டக்களப்பு அரசன் கண்டி அரசோடு இணைந்து படைக்கூட்டு கொள்ள முயல்வது, கோட்டை அரசுக்கு எதிராக என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கடிதம் எழுதப்பட்டு ஆறாண்டுகளில் கோட்டை அரசு போர்த்துக்கேயர் கைகளில் வீழ்கிறது.
இந்தக் கடிதம், பெரும்பாலும் மட்டக்களப்பு மன்னன் சொல்லச்சொல்ல பாதிரியார் கோயம்பரா தன் கைப்பட எழுதியதாக இருக்கவே வாய்ப்பதிகம். அந்தப் போர்த்துக்கேய கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம், சுவாரசியத்துக்காக இங்கு கத்தோலிக்கத் தமிழில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது.


மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner