இல்லிறப்பு: கண்ணகியும் கார்வண்ண இராமனும்

0 comments

 இரண்டு பதிவுகளைக் கடந்துவர முடிந்தது.

ஒன்று இராவணனை தங்கள் முப்பாட்டனாகப் புகழ்ந்து இராமனை இகழும் பதிவு. அது சூர்ப்பனகை மூக்கறுப்பு, வாலிவதம், சீதையின் தீக்குளிப்பு என்று இராமனை விமர்சித்தபடி சென்றது.


இன்னொன்று, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை கேலி செய்வது. மாற்றாளிடம் சென்று திரும்பிய கணவனை கையாலாகாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, வெளியூர் போய் அங்கும் பிரச்சினை ஏற்படுத்திய கண்ணகியை வெட்கமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்றது அது.

அதிகம் உறுத்தியது அந்தப்பதிவுகள் அல்ல. அவை இரண்டின் சாராம்சமும் என்னவென்றால், சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற வசனம். இரண்டுமே இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் வைத்து எண்ணப்படுபவை. இவர்கள் சொல்வது போல, இந்த இரு நூல்களும் காலாவதியாகி விட்டனவா? இவற்றை தமிழர்கள் கொண்டாடத் தேவையில்லையா?

இவற்றில் சரிபிழை கூற முன்பு, இரண்டு இலக்கியங்களும் சந்திக்கும் முக்கியமான புள்ளி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மணவாழ்க்கை.

இரு துணைகளுக்கிடையிலான கலவி, திருமணம் மூலமே சமூக அங்கீகாரம் பெறுகிறது. திருமணத்துக்கு முந்திய உறவும், திருமணத்துக்கு அப்பாலான உறவும் சமகாலத்திலும் பரவலாக நீடிக்கின்ற போதும், அவை சமூக அங்கீகாரம் பெறாமல், இழிவாகவே பார்க்கப்படுகின்றன.

சற்று முற்போக்காகவே சிந்திப்போம். இந்த இரு துணைகளுக்கிடையிலான உறவு என்பது இரு எல்லைகளுக்கிடையிலேயே நீடிக்க முடியும். ஒரு எல்லை, மூன்றாமவர் ஒருவரை அனுமதிக்கக்கூடாது எனும் புரிதலுடன், இருவர் திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். உலகெங்கும் பரவலாக சமூக அங்கீகாரம் பெற்றது இதுவே.

அடுத்த எல்லை, இணைந்து வாழும் இருவரும், அல்லது இருவரில் ஒருவர், மற்றவரின் ஒப்புதலுடன், மூன்றாமவருடன் கலவி கொண்டு வாழ்தல். இங்கு இணைந்து வாழ்தல் எனும் போது, திருமணம் என்பது கட்டாயமான நிபந்தனையாக இருப்பதில்லை.

இதில் இரண்டாவது எல்லை, நம்மில் பலருக்கு நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கலாம். அசௌகரியத்தைக் கொடுக்கலாம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை மட்டுமே நாகரிகமாகக் கருதும் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாம். திருக்குறள் காலத்திலிருந்தே "பிறனில்விழையாமை" என்பதை முக்கியமான அறமாக தமிழ்ப் பண்பாடு முன்வைத்து வந்திருக்கிறது.தமிழருக்கு மட்டுமன்றி உலகெங்குமே அது அறப்பிழை தான். பிறனில் விழைதலுக்கு ஆங்கிலத்தில் "Adultery" என்று பெயர். அது மேற்குலகிலும் கூட பல நாடுகளில் ஒழுக்கமீறலாக சட்ட, சமய, சமூக, கோணங்களில் இன்றும் பரவலாக விவாதிக்கப்பட்டே வருகிறது.

(பிறனில் விழைதல், பிறன்மனை நோக்கல் என்ற சொற்கள் ஏற்கனவே தமிழில் வழக்கில் இருக்கின்றன. இவை ஆண்பால் மையச் சொற்கள். பிறன்மனை நாடுபவனை "அடுத்தவன் வீட்டுக்கு செல்பவன்" என்ற பொருளில் "இல்லிறப்பான்" என்கிறார் வள்ளுவர். இல்+இறத்தல் = [அடுத்தவன்] இல்லத்துக்கு இறங்குதல். சொற்சுருக்கம், பொருத்தம், எளிமை கருதி Adultery என்ற கலைச்சொல்லுக்கு "இல்லிறப்பு" என்ற சொல்லையே இனிப் பயன்படுத்துகிறேன்.)

ஆனால், யதார்த்தத்தில் இத்தகைய உறவுகள் நீடித்துத் தான் வருகின்றன என்பதைக் காண்கிறோம். ஒரு இணையின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்றாவது நபரால் பாதிப்பேதும் வரவில்லை எனும் போது, அல்லது அந்த உறவை மற்றைய இணை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் போது, அந்த உறவு சமூக அங்கீகாரம் பெறுகிறதோ இல்லையோ, அடிப்படை அறத்தினடிப்படையில் அங்கீகரிக்கத் தகுதி பெற்று விடுகிறது.

சற்று அதிர்ச்சியாக இருக்கும், இல்லையா? ஒரு மணவுறவில் மூன்றாம் நபரின் இடையீட்டை ஏன் எதிர்க்கிறோம்? முந்தைய இருவரில் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதால் தானே? தனக்கு மேலதிகமான தன் துணையின் இன்னொரு உறவை ஏற்கும் பக்குவம் மற்றைய துணைக்கு இருந்தால், அத்தகைய இருவரின் அல்லது மூவரின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இல்லை என்பதே அடிப்படை அறம். சரியான முற்போக்கு.


2016இல் இந்திய உச்ச நீதிமன்றம் இல்லிறப்பை குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் மணமான ஒருத்தி இல்லிறந்தால், அவள் கணவனின் - ஒரு ஆணின் - உடைமையாக இருந்து தவறிழைத்து விட்டாள் என்ற கோணத்திலேயே தண்டிக்கப்பட்டாள். சட்டரீதியாக ஒரு தவறுக்கு பால் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதே அத்தீர்ப்பின் பொருள். இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையிலும் இல்லிறப்பு குற்றமாகச் சொல்லப்படவில்லை. சட்டம் எவ்வாறு சொன்னாலும், சமூகம் எவ்வாறு சொன்னாலும், தன் கையாலாகாத்தனத்தால், அல்லது 'அவன் ஆண் தானே' என்று காரணம் சொல்லி, பெண்ணொருத்தி தன் கணவனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்வது இந்த முற்போக்குக்குள் வராது.

இனி சிலப்பதிகாரத்துக்கு வாருங்கள். வேறுவழியில்லாமல் அல்லது தான் பெண் என்பதால் தான், கண்ணகி கோவலனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்கிறாளா?

மாதவி - கோவலன் இணைவால் கண்ணகி வருந்துகிறாள். துடிதுடித்துப் போகிறாள். "மங்கல அணி தவிர பிற அணிகள் அவள் அணியவில்லை" என்று தொடங்கி சிலம்பு கண்ணகியின் வேதனையைச் சொல்லும் வரிகள் நீள்கின்றன. ஆனால் கோவலன் தன் முன் வந்து வருத்தத்துடன் நிற்கும் போது, ஊடலோ கோபமோ எதையும் காட்டிக்கொள்ளாமல், "முறுவல் நகைமுகம் காட்டி சிலம்புள, கொண்ம்" (புன்னகைத்தபடி சிலம்புகள் தான் இருக்கின்றன. எடுத்துக்கொள்ளுங்கள்) என்கிறாள்.

கண்ணகிக்கு முன்பின்னாக சங்க கால - பக்தி இலக்கிய கால தலைவியர், தன் தலைவர்கள் இல்லிறந்து மீண்டும் தன்னிடம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது, கண்ணகியின் ஆளுமைப்படைப்பு . கோவலன் திரும்பி வரும்போது, கண்ணகி கத்தி கூப்பாடு போடவில்லை. கட்டிலில் குப்புறப்படுத்து விம்மி அழவில்லை. "வெளியே போடா நாயே" என்று சத்தமிட்டு கதவை அடைக்கவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால், கண்ணகிக்கு இருந்தது இன்றைய துரோகமிழைக்கப்பட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்க இயலாத மிகப்பெரும் மனத்திடம்.

அது சாத்தியமா? சாத்தியம். இன்றைய முற்போக்கு வரைவிலக்கணத்தின் படி, துணையின் கலவிச்சுதந்திரத்தில் நம்மில் பலர் எண்ணிப்பார்க்கவே அஞ்சும் இரண்டாவது எல்லையில் நிற்கிறாள் கண்ணகி.

அதற்காக கண்ணகி கோவலனின் இல்லிறப்பு பற்றி பேசாமல்இருக்கவும் இல்லை. அவள் மதுரையில் கோவலனுக்கு உணவு பரிமாறும் போது, அவனுக்கு தன் தவறு நினைவுவருகிறது. அப்போது மெதுவாக ஆனால் அழுத்தமாக "போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன்" (நீ செய்தது இழிவான செயல் தான். ஆனால் நான் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை) என்கிறாள் கண்ணகி. கோவலனைக் குத்திக்காட்டவும் வேண்டும். தன் சமநிலையில் பிறழவும் கூடாது. "சூரரைப்போற்று" பொம்மி, "பாகுபலி" தேவசேனா இவர்களின் பாத்திரப்படைப்பெல்லாம் கண்ணகிக்கு கிட்டே வரத்தான் முடியுமா?

இனி இராமனை எடுத்துக்கொள்ளுங்கள். சூர்ப்பனகை மூக்கறுக்கப்பட்டது, அவள் இராமன் மீது ஆசைப்பட்டு அவனை அடைவதற்காக சீதையை சிறைப்பிடிக்க (அல்லது கொல்ல?) முயன்றதால். வாலிவதம் நிகழ்ந்தது, அவன் தன் தம்பி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால். இராவணன் கொல்லப்பட்டது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதுவரை ஆண்களுக்குச் சொல்லப்பட்ட பிறனில் விழையாமையை சூர்ப்பனகை மூலம் பெண்களுக்கும் வரையறுத்து புரட்சி செய்தவன் கம்பன். சூர்ப்பனகை மூக்கறுந்ததும் அவள் முதலில் கண்ணீரும் இரத்தமும் வழிய உதிர்க்கும் முதல் வசனமே "பெண் பிறந்தேன் பட்ட பிழை" (நான் பெண்ணாய்ப் பிறந்து தான் பிழை) என்பது தான். கம்ப இராமாயணம் தலையில் அடித்து அடித்து சொல்லும் அறம் ஒன்று தான், "இல்லிறத்தல் தவறு". கம்பனுக்கும் ஆயிரமாண்டுகள் முன்பு வாழ்ந்த வள்ளுவனின் அதே குரல். பிறனில் விழையற்க.

உண்மையில் பாத்திரப்படைப்பில் இராமன் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் கொண்ட சாதாரண மானுடனாகத் தான் வலம் வருகிறான். காந்தி, கலாம் உட்பட மாபெரும் சமகால ஆளுமைகளும் முன்னுதாரண அறிஞர்களும் கூட வாழ்க்கையில் சறுக்கிய இடங்களைப் பார்த்திருக்கிறோம். இராமன் வாழ்வை அப்படிக் கொண்டு, இலக்கியப் பார்வையிலோ சமகால அற மதிப்பீடுகளின் அடிப்படையிலோ விமர்சிக்கும் உரிமை இங்கு அத்தனை பேருக்கும் உண்டு. எதிர்மறைப் பாத்திரமான இராவணனின் தரப்பு நியாயங்களைச் சொல்லவும் எவருக்கும் இயலும். (அதற்காக இராவணனை முப்பாட்டன் என்பதும், அவனை வரலாற்றுப் பாத்திரமாக கொண்டாடுவதும் ஓவர். அதைத் தனியே பேசுவோம்)

ஆனால் எல்லாம் சரி. இராமனின் பாத்திரத்திலுள்ள குறைபாடுகளுக்காக இராமாயணத்தையே நிராகரிக்கவேண்டும் என்பது? நூறு வீதம் ஒரு சிறு பிழை கூட விடாமல் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த - வாழும் ஒரு வரலாற்று நாயகரைக் காட்ட முடியுமா இவர்களால்? நடிகர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று நம் ஆதர்ச நாயகர்கள் அத்தனை பேருமே சிறிதளவாவது வாழ்க்கையில் தவறிழைத்தவர்கள் தானே? அதற்காக அவர்களை கொண்டாடாமல் தவிர்க்கிறோமா?

இவர்கள் உண்மையிலேயே முற்போக்கு பேசுபவர்கள் என்றால், வாழ்க்கைத்துணை விடயத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்கவேண்டும். ஏகபத்தினி விரதன் இராமன் போல ஒரு எல்லை. கணவனின் இல்லிறப்பை பக்குவத்தோடு ஏற்கும் கண்ணகி போல மறு எல்லை. இரண்டுமே பிழை என்றால் இவர்கள் சொல்லும் முற்போக்குத் தான் என்ன? என்ன அறத்தைச் சொல்லவருகிறார்கள் இவர்கள்?

இன்று இந்தியாவில், இலங்கையில் இல்லிறத்தல் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தை சிதைக்கும் வல்லமை இல்லிறப்புக்கு உண்டு என்பதை அவை உட்பட பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலைநாடுகள் பலவற்றில் கூட, இல்லிறத்தல் குற்றமில்லை என்றாலும், அது மணமுறிவுக்கு வலுவான சட்டக்காரணம் தான். இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போதே, "அவர்கள் சொன்னபடி அச்சட்டத்தில் பாலினப்பாகுபாட்டை நீக்கியிருக்கலாம். ஆனால் அதைக் குற்றமில்லை என்றாக்கியது தவறு" என்று வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.

சட்டத்தை விடுங்கள். வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆசாபாசமுள்ள சாதாரண மனிதர்கள் நாங்கள். "துணையின் இல்லிறப்பை ஏற்றல்" எனும் எல்லை அத்தனை சீக்கிரம் நம்மால் அடையப்படமுடியாதது. கண்ணகி கணவனைக் கூடையில் விலைமாது வீட்டுக்கு கொண்டு சென்ற நளாயினி, கணவனின் பள்ளித்தோழிக்காக அவனை ஒருநாள் விட்டுக்கொடுத்து அனுப்பிவைத்த "ஜில்லுனு ஒரு காதல்" குந்தவை, என்று காவிய நாயகிகளுக்கே அது கைவரக்கூடும். மேலும்  தொழிநுட்பம் எத்தனை வளர்ந்தாலும் துணையின் இன்னொரு துணையை ஏற்று அங்கீகரிப்பதற்கு சராசரி மனிதர்கள் எல்லோருக்குமே நீண்டகாலம் தேவை. ஏனெனில் இது இயந்திரவழு அல்ல; பாகத்தை மாற்றித் திருத்துவதற்கு. மானுட உணர்வு சார்ந்த விடயம்.  அதை இயல்பாக ஏற்கும் தைரியம் பெரும்பாலானோருக்கு வரும் வரை, சமூகத்தில் "குடும்பம்" எனும் அடிப்படை அலகின் நிலைத்திருத்தலுக்கு இல்லிறப்பு ஒரு அச்சுறுத்தல் என்றே கற்பிக்கப்படவேண்டும். அது ஒரு ஒழுக்கமீறலாகவும் அறப்பிழையாகவும் தொடரவேண்டும். வள்ளுவர், இளங்கோ, கம்பர் எனும் தமிழ் மூவரும் ஒரேகுரலில் வலியுறுத்திய "பிறர்மனை விழையாமை" எனும் விழுமியத்தை சமூகம் கொண்டாடவேண்டும்.

கோவலன் இல்லிறக்காமல் சிலப்பதிகாரம் இல்லை. சூர்ப்பணகையும் இராவணனும் பிறர்மனை விரும்பாமல் இராமாயணம் இல்லை. இரண்டுமே பிறர்மனை விழைதலின் பயங்கர விளைவுகளைச் சொன்ன இலக்கியங்கள். ஒன்று அவற்றையெல்லாம் "ஊழ்" என்று சொல்லி அமைதி அடைகிறது. இன்னொன்று "அவதாரநோக்கம்" என்று சொல்லி புன்னகைக்கிறது. அவை தமிழின் மகத்தான காப்பியங்கள். அவை என்றென்றும் திகழட்டும்.

பிகு: இராமாயணம் என்று இப்பதிவில் நான் குறிப்பிட்டது கம்பராமாயணத்தை மாத்திரமே. தமிழ்நிலம் இன்று கொண்டாடுவது கம்ப ராமனையே. வேறு இராமர்களை அல்ல.

மேலும் வாசிக்க »

தெய்வத்தை விழுங்குதற்கான அரக்கனின் தவம்

0 comments



ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் 21இல் "ஈழத்தில் கண்ணகி வழிபாடு" என்ற தலைப்பில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடல் யூடியூப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பளித்த லம்போதரன் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

(உரை- 4:45 - 47:00 தொடர்வது: கலந்துரையாடல்)


அந்த உரையின் தொடர்ச்சியாக ஒரு விடயத்தைப் பதிவுசெய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது கிழக்கிலங்கையை மையமாக வைத்த கருத்து என்றாலும், முழு தமிழ் கூறு நல்லுலகுக்கும் பொருந்தும்.

தமிழகத்திலும் வட இலங்கையிலும் முழு முன்னெடுப்பில் எடுத்துச் செல்லப்படும், தனித்தமிழ் வழிபாடு என்ற கோட்பாடு கிழக்கிலங்கையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது முக்கியமான சமூகவியல் அவதானிப்பு. காரணம் எளிமையானது தான். இங்கு தனித்தமிழில் வழிபாடு செய்வது புதுமை இல்லை. தமிழ்ப் பத்ததிகளின் வழியில், தமிழ் மந்திரங்களும் அகவல் காவியங்களும் பாடி , சடங்கு இடம்பெறும் மரபார்ந்த நாட்டார் தெய்வக் கோவில்கள் இங்கு ஏற்கனவே ஊருக்கு ஊர் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் (வட) இலங்கையில் கண்ணகி வழிபாடு மருவியதற்குக் காரணமாக பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, நாவலரின் தலைமையில் கண்ணகி கோவில்கள் சைவத்தேவியரின் பெருங்கோவில்களாக மாற்றப்பட்டன என்பது. அந்தக் குற்றச்சாட்டில் முழுமையாக உண்மை இல்லை. ஒரு சமூகத்தின் இயல்பான "மேல்நிலையாக்க" மனநிலையின் முகவராக நாவலரின் தரப்பு செயற்பட்டது என்பதே சரி.

தனித்தமிழ் வழிபாடு இடம்பெற்று வந்த எல்லா நாட்டார் கோவில்களும் தற்போது ஆகமக்கோவில்களாக மாறி வருகின்றன. இப்படி தமிழ் முறை வழிபாடு விலக்கப்பட்டு, வடமொழிப் பூசை வழிபாட்டுக்கு இடம் கொடுப்பதை, பொதுவாக "சமஸ்கிருதமயமாக்கம்" என்று அழைத்து வந்தனர் நாட்டாரியல் ஆய்வாளர்கள். ஆனால் அது சமூகத்துக்கு உள்ளிருந்தே நடத்தப்படுவதும், அவ்வாறு செய்வது சமூகத்தில் பெரும்பான்மையினரால் வரவேற்கப்படுவதும் பரவலாக கவனிக்கப்பட்டதால், இப்போது "மேல்நிலையாக்கம்" என்ற சொல்லாடலையே ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.

எளிமையான வாய்ப்பாடு இது தான். பாமர மனதுக்கு தமிழில் வழிபடுவதும், தம்மில் ஒருவர் பூசகராக இருப்பதும், சாதாரணமாக அமைந்த கோவிலின் மடாலயக் கட்டிடமும், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. அந்தணரை நியமித்து, வடமொழி வழிபாடு நிகழும், ஆகம விதிப்படி அமைந்த பெருந்தெய்வக் கோவில்களே நியமமானவை (Standard) - இலட்சியமானவை (ideal) என்ற பொதுப்பார்வை, பாமர மனதுக்கு உள்ளது. கோவில்கள் கௌரவம், அந்தஸ்து என்பவற்றுக்கான போட்டிக்களங்களாக இன்று எஞ்சியிருப்பதால், இலட்சிய - நியமக் கட்டமைப்புக்கு தாங்கள் மாறினால் தமக்கு/தம் குடும்பத்துக்கு/தம் சாதிக்கு/தம் ஊருக்கு, கௌரவமும் அந்தஸ்தும் கிடைத்து விடும் அல்லது இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்றே பாமர மனது எதிர்பார்க்கிறது .

உண்மையில் நாவலர் சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், அல்லது நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த முரண் இடம்பெற்று இருக்காது. கண்ணகி உமையவளாக முடியாது என்பது நாவலரின் தரப்பு. இன்னொரு பக்கம், 'உமையவளுக்கே பெருங்கோவில் கட்ட முடியும் - ஆகம விதிப்படி மகோற்சவம் முதலியன நிகழ்த்த முடியும்' என்று சொன்னதும் அவரது தரப்பே. நம்மவர்கள் இரண்டையும் இணைத்து விளங்கிக் கொண்டு, கண்ணகி கோவில்களை ஆகம விதிப்படி மாற்றி அமைத்து, அவளை அகற்றி மூலவராக உமையவளை அமர்த்தி, ஆகம விதிப்படி திருவிழா செய்ய முன்வந்து விட்டார்கள். அது தான் அவர்களுக்கும் வசதியாக இருந்தது என்பதே உண்மை.

என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நாவலர் சொன்னபடி உமையவளுக்கு தனிப்பெருங்கோவில்கள் புதிதாக அமைத்திருக்கலாம். மகோற்சவமும் நடாத்தியிருக்கலாம். ஆனால் கண்ணகியை 'உமையவளாக' மாற்றாமல் வைத்திருக்கலாம். எப்படி? அவள் கோவிலை இடித்து ஆகமவிதிப்படி தூபி, கோபுரத்துடன் அமைத்திருக்கத் தேவையில்லை. பழையபடி மடாலயமாகவே மீளக்கட்டியிருக்க முடியும். ஆகம விதிக்குள் அடங்காத திருக்குளிர்த்தி முதலிய சடங்குகளை தொடர்ச்சியாக செய்திருக்கவும் முடியும்.

"கண்ணகி உமையவள் அல்ல" என்று நாவலர் சொன்னதை "கண்ணகியை மேல்நிலைப்படுத்தாதீர்கள்" என்று புரிந்துகொண்டிருக்க முடியும். அப்படி புரிந்து கொண்டிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது. நகைமுரணாக நாவலரையே வட இலங்கையில் மேல்நிலையாக்கத்தை துரிதப்படுத்தியவராக அடையாளம் காண்கிறோம். அவர் சொன்னது ஒருவிதத்தில் சரி, ஆனால் அதை நாம் செயற்படுத்தியது முற்றாகப் பிழை.

ஆனால் இந்த மனப்போக்கை மாற்றியாகவேண்டியது கட்டாயம். இன்றைக்கு குக்கிராமங்களில் எல்லாம், கோவில்கள் இடிக்கப்பட்டு ஆகமவிதிப்படி பெருங்கோவில்களாக மாற்றப்படுகின்றன. அதன் முதலாவது எதிர்விளைவு தமிழ் வழிபாடு அங்கிருந்து இயல்பாகவே அகன்று போவது தான். கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் முறை சடங்குக்கோவில்கள், வடமொழி மந்திரபூசைக்கு மாறுவதற்கான முதல் படி இதுவே. மடாலயக் கோவில்கள் இடிக்கப்பட்டால், அவை ஆகமவிதிப்படி பிரஸ்தரம், சிகரம், தூபியுடன் அமைக்கப்படுவது தான், தமிழ் வழிபாட்டை அங்கிருந்து அகற்றும் முதன்மையான காரணம்.

ஏனென்றால், சிகரம் - தூபியுடன் அமைந்த ஆகமக்கோவிலொன்றே நம் நியமக் (Standard) கோவில் என்று நம் ஆழ்மனது நம்புகிறது. ஓட்டுக்கூரை வேய்ந்த மடாலயமொன்று, அம்மனதுக்கு "இது நம் கோவில்" என்ற பிடிப்பை உருவாக்கவில்லை. அல்லது, சிற்ப அலங்காரங்கள் கொண்ட கண்டம் -சிகரம் - தூபியே தங்கள் கோவிலுக்கு அந்தஸ்தையும் பெருமிதத்தையும் தருகிறது என்று பாமர மனது எண்ணுகிறது. மேல்நிலையாக்கம்!

செய்யவேண்டியது ஒன்று தான். ஆகமவிதிப்படி அமையாத மடாலயங்களும் நம் கோவில்களே என்பதை நம் ஆழ்மனதை நம்பச் செய்ய வேண்டும். கேரளக்கோவில்கள் அத்தனையும் ஓடுவேய்ந்த கூரையமைப்பைக் கொண்டவை. இலங்கையில் பதினான்காம் நூற்றாண்டில் 'ஸ்தபதி ராயர்' எனும் தென்னகச் சிற்பியால் அமைக்கப்பட்ட பௌத்தக் கோவிலான இலங்காதிலகம், கூரை வேய்ந்தது தான். அதே காலப்பகுதியில் கம்பளை அரசின் அனுசரணையுடன் தேவேந்திர மூலாச்சாரியார் என்பவரால் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் கோவில், அதன் அற்புதமான கூரை வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது. ஆக, கூரை வேய்ந்த கோவில்களையும் நியமமாக அமைக்கச் சொல்லும் சிற்ப நூல்கள் தென்னகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.

ஒரு உதாரணம் கிடைக்கிறது. அண்மையில் வாசித்த ஒரு குறிப்பின் படி, பாரமேஸ்வர ஆகமத்தில், ஓட்டுக்கூரை வேய்ந்த அமைப்பில் கருவறையை அமைப்பதற்கான விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அங்கு "சூர்ப்பாகாரம்" என்று பெயர். தஞ்சைப்பெருங்கோவிலின் சோழர் கால ஓவியங்களிலிருந்து சிதம்பரத்தில் இத்தகைய விமானமே முன்பு இருந்திருக்கிறது என ஊகிக்க முடியும். பாரமேஸ்வரம், உப சிவாகமங்களில் ஒன்று என்பதால்,அதில் சூர்ப்பாகாரம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓட்டுக்கூரை வேய்ந்த கோவில்களை, மடாலயங்கள் என்று ஒதுக்காமல், சைவர்கள் நியமமாக ஏற்றுக்கொள்ளமுடியும்.

நியாயமாகப் பார்க்கப் போனால், நூறு நூறாண்டுகளாக தென்னகத்தின் எளிமையான எந்தவொரு தங்குமிடமுமே கூரை வேய்ந்தது தான் என்பதால், கோவில்களையும் கூரை வேய்ந்தவையாக அமைப்பதில் தவறிருக்க முடியாது. எனவே நம் கோவில்களின் கருவறை கூரை வேய்ந்திருந்தால் , அதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அவற்றை தூபி - சிகரத்தோடு அமைத்தால் தான் அவை நியமக்கோவிலாகும் என்று அவற்றை மாற்றியமைக்கவும் தேவையில்லை.

ஆனால், மேல்நிலையாக்கத்துக்கு ஆதரவளிப்பவர்கள் கூறும் ஒரு வலுவான வாதம் மட்டும் இலேசாக இடிக்கின்றது. "எந்தத் தமிழ் அடையாளத்தைக் காப்பாற்ற, கோவில்கள் ஓட்டுக்கூரைகளோடு நீடிக்கலாம் என்று சொல்கிறாயோ, அதே ஓட்டுக்கூரைகளே தமிழ் அடையாளத்தை முற்றாக இல்லாதொழித்து பிற்கால ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கலாம்" என்பது அது. மடாலயமாக அமைந்த காரணத்தாலேயே கதிர்காமத்தின் நிர்வாகம் முற்றாகப் பெரும்பான்மையினருக்குக் கைமாறியதையும், ஆகம விதிப்படி அமைந்ததால் முன்னேச்சரத்தில், கோணேச்சரத்தில், அது இன்றுவரை கைகூடாமல் இருப்பதையும் அவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள்.

இது நம் பிழை. கேரளமும் சிங்களமும் ஓட்டுக்கூரைகளை தம் தனித்துவமான சமயக் கட்டிடக்கலை அம்சமாக முன்வைக்க, அதை சமயக் கட்டிடக்கலையில் முற்றாகத் தவிர்த்தது நம் தவறே. ஆனால் அதைத் தொடரமுடியும். இது சைவக்கோவில் / வைணவக்கோவில் என்று காண்பிப்பதற்கான நுணுக்கமான கட்டிடக்கூறுகளை உள்ளீர்த்து ஓட்டுக்கூரைகளோடு கோவில்களை அமைப்பதொன்றும் பெரிய வேலையில்லை. கருவறைச் சுவரை மட்டும் அதிஷ்டானம், பாதம் முதலிய தென்னக கட்டிடக்கலைக்கூறுகளோடு அமைத்து, பிரஸ்தரம் - சிகரம் - தூபிக்குப் பதில் மேலே கூரை வேய்ந்துவிடலாம். அங்கு ஆகமவழிப்படி வழிபாடு நடைபெறப் போவதில்லை என்பதால், இதில் ஆகமமீறல் என்று அஞ்சத்தேவையில்லை . கிழக்கைப் பொறுத்தவரை, கட்டிடக்கலை அம்சம் ஒன்றும் இல்லாமலேயே கூட மண்டூர் முருகன் கோவிலும், கல்லடி பேச்சியம்மன் கோவிலும் இன்றும் புகழ்வாய்ந்த சைவ மடாலயங்களாக நீடிக்கின்றன. இதில் பின்னையது கீற்றுக்கொட்டகை.

ஆகமப்பெருங்கோவில்கள் எப்படியும் அமைக்கப்படட்டும். என் தனிப்பட்ட நப்பாசை ஒன்றே. இலங்கையில், நாட்டார் கோவில்கள் இடித்துக் கட்டப்படுகின்றதென்றால், அவை ஓட்டுக்கூரையோடே மீளக் கட்டப்படவேண்டும். அதன் மூலம் அங்கு சடங்குவழித் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்படும் முதன்மையான அச்சுறுத்தல் நீங்க வேண்டும்.

இலங்கையின் கிராமப்புறங்களூடே பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அங்குள்ள நாட்டார் கோவில்களுக்குச் சென்று பாருங்கள். "நல்லாப் பேசின சாமி இது," "துடியான அம்மாள் தம்பி இது", "ஏனோ தெரியா, இப்பல்லாம் ஒண்டும் காட்டுது இல்ல" என்று பெருமூச்சு விடும் பலரைக் காண்பீர்கள். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் தெரியும், ஓட்டுக்கட்டிடம் அல்லது ஓலைக்குடிசை ஒன்றில் அந்த நாட்டார் தெய்வம் பரிதாபமாக வீற்றிருக்க, அருகே ஆகமப்படியான கருவறை, செங்கல்லில் பிரமாண்டமாக எழுந்து கொண்டிருக்கும். அந்தத் தெய்வத்தை விழுங்குவதற்காகத் தவம் தொடங்கும் அரக்கன் போல! அந்தக் கருவறையில் அமர்ந்து நித்திய பூசையை ஏற்கத் தொடங்கும் ஐயன், கண்ணகி, மாரி முதலிய நூறு நூறு தெய்வங்கள், அதன் பிறகு ஒன்றும் பேசுவதில்லை. அல்லது, அவை பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. அவை என்றைக்குமென அமைதியாகிவிடுகின்றன.
💔
மேலும் வாசிக்க »

பின்னை எனும் நித்தியகன்னி

0 comments

  
"கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?
பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம்.

எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

"நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.வியின் இசையில் ஜேசுதாசும் வாணி ஜெயராமும் இதே பாடலைப் பாடியிருக்கிறார்கள். இசைநிகழ்ச்சியொன்றில் பாடப்பட்ட இதன் கீழ்வரும் வடிவமும் நன்றாயிருக்கிறது. (அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பன்
Natharuban
)




ஏனைய கண்ணம்மாப் பாடல்களோடு ஒப்பிடும் போது, "நின்னையே இரதி என்று" அப்படி ஒன்றும் சிறப்பான பாடல் இல்லை தான்.

"புராணங்கள் சொல்லும் கட்டழகி இரதி நீயாகத் தான் இருக்கவேண்டும். எனக்கு உன்னை விட்டால் தோழி என்று யாரும் இல்லை. பொன் போன்ற உடலும் மின்னலின் சாயலும் கொண்டவள் நீ. மன்மதனின் அம்புகள் உன்னால் என் மீது பாய்கின்றன. கொஞ்சம் கண் பார், என்னோடு சேர வா. எங்கு பார்த்தாலும் முனிவர்களுக்கு இறைவனே தெரிவது போல, எனக்கு நீ தான் தெரிகிறாய்." இவ்வளவும் தான் அந்தப்பாடலின் சாரம்.

என்றாலும், இறுதி வரியில் கொஞ்சம் கவித்துவ அழகு இருப்பதாகச் சொல்லலாம். "யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"

சுகமுனி வேதவியாசரின் மகன். எல்லாவற்றிலும் பரம்பொருளையே கண்டதால், சுகப்பிரம்மம் என்று அவரை புராணம் அழைக்கும். சுகமுனிக்கு எல்லாமே ஈசனாகத் தெரிந்தது. எனக்கு எல்லாமே நீயாகத் தெரிகிறது என்கிறான் பாரதி.

ஆனால், அந்தப் பாடலின் "தன்னையே சகி என்று சரணம் எய்தினேன்" எனும் இரண்டாம் வரியில் "சகி" (தோழி) என்ற சொல்லுக்கு "சசி" என்று பாடபேதம் இருக்கிறது.

சசி என்றால் இந்திராணி என்றும் சந்திரன் என்றும் பொருள் உண்டு. இந்திரனின் தேவியான இந்திராணி, புராணங்களின் படி பேரழகி. முதல் வரியில் மன்மதனின் தேவியான இரதியைப் பாடுவதால் இரண்டாம் வரியில் இந்திராணியை பாரதி பாடியிருக்கலாம் என்பர் சிலர். அல்லது"உன்னையே என் நிலவாக எண்ணி சரண் புகுந்தேன்" என்ற பொருளிலும் பாடியிருக்கக் கூடும். "பாயும் ஒளி" பாட்டிலும் "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்றல்லவா அவன் உருகுகிறான்?

ஆனால்"தூண்டில் புழுவினைப் போல்" முதலிய தன் வேறு பாடல்களிலும் பாரதி சகி பற்றிப் பாடுவதால் சகி என்பதே பொருத்தமான பாடபேதமாகப் படுகிறது. நண்பியை "தோழி" என்று அழைப்பதை விட "சகி" என்று அழைக்கும் போது கொஞ்சம் நன்றாக இருக்கிறதல்லவா?

சகி ஆண்பாலுக்கும் பொருந்துவதால், இன்று கழுவி ஊற்றப்படும் "Bestie" என்ற ஆங்கிலச்சொல்லுக்கான கலைச்சொல்லாக சகியைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

வழமை போல ஒரு நாள் சைந்தவியின் "நின்னையே இரதி என்று" பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த வரியை திகைப்போடு கவனித்தேன். "பின்னையே நித்யகன்னியே"

நித்யகன்னி என்றால், என்றென்றும் இளங்கன்னி என்று பொருள். காதலியோ நாயகியோ, அடுத்தடுத்த நாட்களில் பழையவர்களாகி விடுவார்கள். ஆனால் இந்தக் கண்ணம்மா நித்யகன்னி. ஒவ்வொரு நாளுமே புத்தம்புதிதாகத் தெரிகிறாள், கன்னி என்று எண்ணச் செய்கிறாள் என்று 'மார்க்கமாக' விளக்கம் கொடுக்கலாம். சரி. பின்னை?

வடநாட்டு இராதைக்கு பலநூறாண்டுகள் முன்பே தமிழ் இலக்கியங்களில் தோன்றி, இன்று முற்றாக மறக்கடிக்கப்பட்டு விட்ட கண்ணனின் காதலியான "நப்பின்னை" பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்திலிருந்து வைணவ - சைவ பக்தி இலக்கியங்கள் வரை, திருமாலின் தேவியாகத் தமிழர் கொண்டாடிய நப்பின்னை, வடநாட்டு பண்பாட்டு ஆதிக்கத்தால் புகழ் பெற்று விட்ட "ராதா - கிருஷ்ண"ருக்கு முன் காணாமலே போய் விட்டாள்.

தமிழ்ப் பண்பாட்டில் நப்பின்னையின் மறைவு படிப்படியாகத்தான் நடைபெற்று முடிந்தது என்றே எண்ணி இருந்தேன். ஆனால் "நின்னையே இரதி என்று" பாடலில் பாரதி எடுத்தாளும் படி, இருநூறாண்டுகளுக்கு முன் கூட, பின்னை புகழ் பெற்றுத் தான் இருந்திருக்கிறாள்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இருநூறாண்டுகளுக்கு உட்பட்ட நப்பின்னை பற்றிய இன்னொரு இலக்கியக் குறிப்பை, என் தாயகத்திலேயே என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது என்பது தான்.

கிழக்கிலங்கையில் உள்ளூர் செவிவழிச் செய்திகளை, கல்வெட்டு, காவியம், அகவல் என்ற பெயர்களில் செய்யுள்களாக எழுதிக் கோவில்களில் பேணும் வழக்கம் நிலவி வந்திருக்கிறது. அவற்றில் கற்பனையும் உயர்வு நவிற்சிகளும் அதிகம் என்றாலும், வரலாற்று நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை. இப்படிப் பேணப்பட்ட சில பாடல்கள் தான் உரைநடையில் எழுதி இணைக்கப்பட்டு "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்" என்ற பெயரில் ஏட்டுப்பிரதியாக தொகுக்கப்பட்டிருந்தன.

அதில் ஒரு பகுதியை சிற்சில திருத்தங்களோடு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் "மட்டக்களப்பு மான்மியம்" என்ற பெயரில் எப்.எக்ஸ்.சி.நடராசா வெளியிட்டார். இப்போது கிடைக்கும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் முழுமையான வடிவம் 2005இல் வித்துவான் கமலநாதன் தம்பதியினரால் அச்சு வாகனமேறியது. இப்போதைக்கு கிழக்கிலங்கை வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கான தவிர்க்க முடியாத ஆதாரங்களில் ஒன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூல்.

ஆனால், மட்டக்களப்புப் பிராந்தியத்தில் வழக்கத்தில் இருந்த எல்லா பாடல்களும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆனைகட்டுக் காவியம், பண்டுபரவணிக் கல்வெட்டு, ஊரெழு காவியம், சோனக வரலாற்றுக் காவியங்கள் பற்றி வாய்மொழியில் மட்டும் அறிய முடிகிறது. களுதேவாலயக் கல்வெட்டு, துறைநீலாவணை சீர்பாதச் செப்பேடு, குகன்முறை அகவல் முதலியன வெவ்வேறு இடங்களில் ஏட்டுப்பிரதிகளாகக் கிடைத்திருக்கின்றன. கமலநாதன் தம்பதியினரே, தங்களுக்குக் கிடைத்த பூர்வ சரித்திர ஏட்டுப்பிரதியிலிருந்த அன்பிலாலந்துறைச் சரித்திரம், அயோத்திகாசி பூர்வ சரித்திரம், கலிங்கதேசச் சரித்திரம் முதலியவற்றை "பொருட்பொருத்தம் கருதி தவிர்த்து விட்டோம்" என்று சொல்கிறார்கள். அவை அச்சில் வெளிவராததால் ஏற்பட்டு விடுகின்ற இடைவெளி பூர்வ சரித்திரத்தை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

இப்படி பூர்வ சரித்திரத்தில் வெளியாகாத "குகன்முறை அகவல்" எனும் பாடலைப் படிக்கும் வாய்ப்பு, அண்மையில் கிடைத்தது. மட்டக்களப்பின் முதன்மைக் குடிகளில் ஒருவரான முக்குகர், தமிழகத்திலிருந்து வந்து குடியேறியதைச் சொல்லும் பாடல் அது. கண்டி மன்னர் பற்றிய குறிப்பு வருவதால், அது பெரும்பாலும் கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

குகன்முறை அகவலில் ஓரிடத்தில் இப்படி வருகிறது.
"இராம இராம அரிராமா என்று
சேமமுடனே செங்கோலோச்சி
நாராயணனை தொழுது அடிபணிந்து
காரார் குழலி கணவனை வணங்கி"

முக்குகர்கள் இங்கு குடியேறும் போது பரம வைணவர்கள். அவர்கள் பழுகாமத்தில் தங்கள் குலதெய்வமான திருமாலுக்கு கோவில் கட்டி வணங்கியதை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். மேற்படி வரிகளை வாசிக்கும் போது ஒருகணம் என்னை தரித்து நிற்கச் செய்தது இந்தச் சொல். "காரார் குழலி கணவனை வணங்கி". திருமால் காரார்குழலியின் கணவனா? யார் அது?

கண்ணனின் தமிழ் நாயகி நப்பின்னைக்கு, அப்பெயர், நல்ல கூந்தலைக் கொண்டவள் (நல்+பின்னை) என்ற பொருளில் வந்தது தான். அவளை வேறு இலக்கியங்களும் கூந்தல் மலர் மங்கை, பிஞ்ஞை, உபகேசி என்றெல்லாம் அழைக்கின்றன. பிஞ்ஞை, கேசம் எல்லாம் கூந்தலைக் குறிக்கும் சொற்கள். குழல் என்றாலும் கூந்தல் தான். காரார்குழலி = கார்+ஆர்+குழலி. கார்மேகம் போல கறுத்த கூந்தலை உடையவள்.

குகன்முறை அகவல் கூறும் காரார்குழலி, நப்பின்னை தவிர, வேறு யாராக இருக்க முடியும்? வெறும் இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் இலங்கையின் கிழக்குக் கரையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்த நாட்டார் இலக்கியத்தில் பதிவாகி இருக்கிறாள், அந்தத் தமிழர் மறந்த தலைவி. நமக்குத் தலைவி அல்ல; அந்தத் தலைவி பதிவாகி இருக்கும் பாட்டைப் பற்றியே தெரியாது. மண்ணின் மரபு தெரியாமல் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி கூட நமக்கு இருப்பதில்லை.

ஒரு சாரார் சொல்வதன் படி, கண்ணம்மா என்பது பாரதி கற்பனையில் கண்ட கண்ணனின் பெண் வடிவம் என்பது உண்மையானால் கண்ணம்மா, நப்பின்னையே தான். உங்களுக்குத் தெரியாமல் இருப்பதாலோ, அல்லது தமிழ் கூறு நல்லுலகம் என்னை மறந்து விட்டதாலோ, நான் இல்லாமல் போவதில்லை. சின்னஞ்சிறு கிளியாய், சுட்டும் விழிச்சுடராய், காற்று வெளியிடையாய், ஏன் "றெக்க" - "காலா"விலிருந்து ஊரூராய் நடந்து சிரிக்க வைத்த சின்னத்திரை கண்ணம்மா வரை, நீங்கள் செல்லம் கொஞ்சும் காதலியர் வரை, என்றென்றும் நீடிப்பேன் நான் என்று நப்பின்னை புன்னகைக்கிறாள் போலும்.

"யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம், எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"
சந்தேகமென்ன,
தமிழ் உள்ளவரை
பின்னை, நித்ய கன்னி தான்.
அவள் வாழி.
❤

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner