பெரியசாமியின் கப்பல்

0 comments

பாற்சேனை பெரியசாமி கோவில்


 "பெரிய சாமி கோவில் நாளையோடு முடிகிறது. போகிறேன். வரப்போகிறீர்களா?"

போன கிழமை, அலுவலகத்தில் பணி முடிந்து கிளம்புகையில் நண்பர் ஒருவர் வந்து இப்படி சொன்னதும் நான் வியப்படைந்தேன்.

"பெரியசாமியா? அது யார்?"

"பெரியசாமி தெரியாதா? அந்தக்கோவில் பாற்சேனையில் இருக்கிறது. இப்போது திருவிழா. கொரோனாவால் இந்த முறை சிறப்பாக இருக்காது. ஆனால் சும்மா போய் வரலாம். வருவதென்றால் வாருங்கள்."

பெரியசாமி, பாற்சேனை முதலிய பெயர்கள் விந்தையாகவும் ஆர்வமூட்டுவனவாகவும் இருந்தன. கரும்பு தின்னக் கைக்கூலியா? மறுவார்த்தை பேசாமல் புறப்பட்டுவிட்டேன்.

திருக்கோணமலை மாவட்டத்தின் தெற்கே பாயும் வெருகல் கங்கையுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஆரம்பிக்கிறது. அங்குள்ள எல்லைக் கிராமம் கதிரவெளி. கதிரவெளிக்குத் தெற்கே மூன்று கிமீ பயணித்தால் பாற்சேனை கிராமம். பழைமை வாய்ந்த ஊர்களில் ஒன்று தான். அங்கு கடலோரமாக அமைந்திருக்கிறது பெரியசாமி கோவில்.

கோவில் ஆரவாரமாகத் தான் இருந்தது. சூழ்நிலை நல்லபடி இருந்திருந்தால் கூட்டம் இன்னும் அதிகம் என்பது தெரிந்தது. கோவில் அண்மையில் ஆகமவிதிப்படி புதுக்கிக் கட்டப்பட்டு குடமுழுக்கு கண்டிருக்கிறது. பிள்ளையார் சன்னதி, வைரவர் சன்னதி, வசந்த மண்டபம் என்பன அழகுற அமைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இங்கு பிரதானமான வழிபடு பொருள் கொடிமரம் தான். அங்கு நின்று பூசகர்கள் அடியவர்களுக்கு கட்டுச்சொல்வதும் ஆசீர்வதிப்பதுமாக இருந்தார்கள்

பெரியசாமியை கப்பல் தெய்வம் என்றும் சொல்கிறார்கள். கோவில் முழுவதும் கப்பல் சின்னம் பொறித்த வண்ணக் கொடிகள் அசைந்தாடுகின்றன. அவர் தமிழகத்திலிருந்து கப்பலில் வந்தவர் என்று நம்பிக்கை. ஆனால் அவர் முதலில் வந்திறங்கிய இடமாகச் சொல்லப்படுவது இலங்கைத்துறை முகத்துவாரம்.

இலங்கைத்துறை முகத்துவாரம், பாற்சேனையிலிருந்து 25 கிமீ வடக்கே உள்ளது. அது இன்று "லங்காபட்டுன" என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். சற்று ஒதுக்குப்புறமாக உள்ளதால், மட்டக்களப்பு - திருக்கோணமலை நெடுஞ்சாலையில், வெருகல் கங்கைக்கு 2 கிமீ வடக்கே உள்ள முத்துச்சேனை சந்தியில் வலப்புறமாக திரும்பி 13 கிமீ செல்லவேண்டும். கடலும் காயலும் (களப்பு) இணையும் முகத்துவாரத்தில் ஒரு சிறிய குன்றொன்று இருக்கிறது. அது தான் பெரிய சுவாமி வந்திறங்கிய முதல் இடம். உள்ளூரில் குஞ்சிமாப்பா மலை என்றும் குஞ்சிதபாத மலை என்றும் சொல்கிறார்கள்.

குஞ்சிமாப்பா மலையில் வைகாசி முழுநிலவை ஒட்டி வரும் நான்கு நாள்கள் பெரிய சுவாமிக்கு கொடிமரம் நாட்டி சடங்கு இடம்பெற்று வந்திருக்கிறது. குன்றின் உச்சியில் இருந்த அவர் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. எனினும் பொது வழிபாட்டுக்காக குன்றின் மையப்பகுதியில் இருந்த சமநிலத்தில் அவருக்கு இன்னொரு சிறுகோவில் இருந்தது. நிலவு எறிக்கும் வைகாசி முழுமதி நாளில், கடற்காற்று வீச குன்றில் மக்கள் குழுமி, கலைநிகழ்ச்சிகள்,ஆடல், பாடல் என்று பார்க்கவே இரம்மியமாக இருக்குமாம்.

2000களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் வசித்த அமெரிக்கத் துறவி தந்திரதேவா அடிகளாரால் இந்த பெரியசாமி கோவில் திருத்திக் கட்டப்பட்டு கருவறையில் ஒரு முருகன் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் யுத்த காலத்தில் இவை அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. தற்போது இது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பௌத்தத் தலம். இங்கு பெருமளவு உல்லாசப் பயணிகளைக் கவரும் சமுத்திரகிரி ரஜமகா விகாரை அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் புத்தபிரானின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டிருக்கிறது. போதிமாதவனின் புனித தந்ததாது இந்த லங்கா பட்டுனவில் தான் வந்து இறங்கியதாக தற்போது ஐதிகங்கள் தோன்றிப் பரவுகின்றன. இலங்கைக்கு கலிங்க நாட்டிலிருந்து திருப்பற்சின்னத்தைக் கொண்டுவந்த இளவரசி ஹேமமாலை, இளவரசன் தந்தகுமாரன் ஆகியோரின் சிற்பங்களும் அங்கு வடிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைத்துறை முகத்துவாரம் என்ற பெயரும் இப்போது மக்கள் வழக்கில் "லங்கா பட்டினம்" என்று மாறிவிட்டது. முரண்நகை என்னவென்றால் பிரித்தானிய, ஒல்லாந்துக் குறிப்புகளின் படி, இவ்வூரின் பெயர் இலங்கைத்துறை அல்ல; இலந்தைத் துறை. இலந்தை மரங்கள் சூழ்ந்த துறை.

குஞ்சிதபாத மலையின் அருகே, கழிமுகத்தின் அக்கரையில் இலங்கைத்துறை முகத்துவார பத்தினியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. பெரிய சுவாமி, தற்போது கொடிமரம் நாட்டப்பட்டு இங்கும் வழிபடப்பட்டு வருகிறார். இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கு அயலிலுள்ள வாழைத்தோட்டம், வெருகல் முகத்துவாரம் முதலிய ஊர்களிலும் பெரியசாமிக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலும் பெரியசாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குஞ்சிமாப்பா மலைக் கோவில் அழிக்கப்பட்ட பின்னர், இன்று பாற்சேனைக் கோவில் மட்டுமே பிரசித்தமான பெரியசாமிக் கோவிலாக இருக்கிறது.

சரி, யார் தான் இந்த பெரியசாமி? அது தெரியவில்லை. தமிழகத்தில் பிரபலமான நாட்டார் தெய்வங்களுள் ஒருவரான பெரியண்ணசாமியை பெரியசாமி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அவருக்கும் இந்த பெரிய சாமிக்கும் தெளிவான தொடர்பேதும் இல்லை. இவர் போல கப்பலும் கொடிமரமும் தமிழக பெரியண்ணசாமி வழிபாட்டில் பயன்படுவதில்லை. அவரை வழிபடும் மக்களிடம் விசாரித்தால், பெரியசாமி, கப்பல் தெய்வம், குஞ்சிமாப்பா என்ற மூன்று பெயர்களும் ஒரே தெய்வத்தைக் குறிப்பிடும் பெயர் தான் என்றும், இல்லை மூவரும் வேறுவேறு என்றும், அது தனியே ஒரு தெய்வமல்ல; நிறைய குழுத்தெய்வங்களுக்கான பொதுப்பெயர் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

பெரியசாமியின் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களில் "வண்ணான்" என்ற சொல் அடிக்கடி வருகிறது. சலவைத்தொழிலாளர்களுக்குத் தனித்துவமான தெய்வங்கள் பெரிய தம்பிரானும் நீலாசோதையனும். இங்கே குஞ்சிமாப்பா மலையில் பெரியசாமிக்கும், அருகே வெருகல் கல்லடியில் நீலி அம்மனுக்கும் கோவில்கள் அமைந்திருப்பது தற்செயலா என்பது தெரியவில்லை. வெருகல் கல்லடி மலைநீலி ஒருகாலத்தில் கொட்டியாரப்பற்றின் புகழ்பெற்ற தெய்வம். கோணேசர் கல்வெட்டின் படி கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்த நீலாசோதையன் படையினர் வழிபட்ட அம்மன் இவள் என்று மரபுரைகள் நிலவுகின்றன. இன்று கல்லடி மலைநீலி கோவிலும் ஒரு பௌத்த விகாரமாக மாறியிருக்கிறது.

பெரியசாமியை சலவைத்தொழிலாளரின் பெரியதம்பிரானோடு இணைப்பது முடியாத காரியம் என்றால், தமிழகத்திலிருந்து வந்திறங்கி இங்குள்ள மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வேறொரு இனக்குழுவின் குலதெய்வ வழிபாடு என்றே கொள்ளமுடிகிறது. அல்லது கப்பல் பயணத்தில் மரித்தோருக்கு நிகழ்ந்த ஒரு இறந்தோர் வழிபாடும் பெரிய சாமி வழிபாடாக பரிணமித்திருக்கலாம். இலங்கைத்துறை முகத்துவாரத்தில் கப்பல் வடிவில் கடலுக்குள் தெரிந்த ஒரு பாறையை பெரியசாமி வந்த கப்பல் கல்லாகி விட்டது என்று காட்டினார்கள். கடந்த உள்நாட்டு யுத்தகாலத்தில் இரவு வேளைகளில் கடல் ரோந்து போகும் இரு தரப்பினரும் எதிரிப்படையின் கப்பல் என்றெண்ணி இதை மாறிமாறிச் சுடுவதுண்டாம்.

பாற்சேனை பெரியசாமிக்கும் உருவம் இருக்கவில்லை. கொடிமரமாகவே வழிபடப்பட்டிருக்கிறார். எனினும் தற்போது ஆகமவிதிக்கு உட்பட்டு மேல்நிலையாக்கம் அடைந்தபோது, மாலொருபாகன் வடிவாக மாற்றப்பட்டிருக்கிறார். அர்த்தநாரீஸ்வரரை ஒத்த சிவன் - விஷ்ணுவின் இணைந்த வடிவம் அது. அரைவாசி சிவனாக, அரைவாசி திருமாலாக வடிக்கப்பட்ட பெரியசாமியின் திருவுருவமொன்று கோவில் நுழைவாயில் மேலே அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, வசந்த மண்டப விமான மேற்பகுதிகளில் இடபமும் கருடனுமே பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கருவறையில் திருமாலின் ஐம்பொன்னாலான திருவுருவம் நிறுவப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக பெரியசாமியை திருமாலாக அடையாளம் காணும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பாற்சேனை பெரியசாமியின் கொடிமரத்தில் சுற்றப்பட்டிருந்த கொடியில் எட்டெழுத்து மந்திரம் எழுதப்பட்டிருப்பதை அவதானித்தேன். கோவில் திரைச்சீலைகளிலும் ஆழிவண்ணனே புன்னகைக்கிறார். வாசலில் அனுமன் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நான் சென்றிருந்த அன்றிரவு அனுமான் வசந்தனாட்டம் நடக்க இருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். வசந்தனாட்டம் ஆண்களால் ஆடப்படும் கீழைக்கரையின் பாரம்பரியக் கோலாட்டக் கலை. அனுமன் வேடத்தில் சிறுவர்கள் கோலடித்து நடிப்பது தான் அனுமன் வசந்தன். அவசரமாகக் கிளம்பி வேண்டி இருந்ததால், இரவுச் சடங்கோ வசந்தனாட்டமோ பார்க்க முடியவில்லை.

அங்கு சென்று ஓரிருநாட்களிலேயே தற்செயலாக இலங்கைத்துறை முகத்துவாரம் சமுத்திரகிரி விகாரைக்கு போகக்கிடைத்தது. அங்கு பெரியசாமிக்கு முன்பு கோவில் இருந்தது என்பதற்கான தடயமெதுவும் இன்றில்லை. ஆனால் கீழே அக்கரையில் பத்தினியம்மன் கோவிலில் கொடிமரமாக நின்றுகொண்டிருந்த பெரியசாமியை குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். தொன்மங்கள், வரலாறுகள் கண் முன்னே எத்தனை மாற்றமடைகின்றன? பெரியசாமி நின்றிருந்த குன்றில் இன்று புத்தபிரான் வீற்றிருக்கிறார். பெண்கள் போகக்கூடாது என்ற மரபு நிலவிய மலையுச்சியில், புதிய தாதுகோபத்தின் அடியில், சிங்கள அன்னையரும் கன்னியரும் சூட்டுகின்ற மலர்கள் கடற்காற்றில் வாடி அசைந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே பற்சின்னமாக புத்தபிரான் வந்தடைந்ததை நினைவுகூர்ந்து தான் பெரியசாமி தொன்மம் உருவானதா? மெய்வடிவில் மீண்டும் தானே அங்கே அமர புத்தர் திருவுளம் கொண்டாரா? ஆக்கிரமிப்பு, அழிப்பு, திணிப்பு என்றெல்லாம் நாம் புலம்புகின்ற எல்லாமே, நம் கண்ணுக்குத் தெரியாத நுண்சரடுகளைக் கொண்டு நம்மைப் பிணைத்து தெய்வங்கள் கண்சிமிட்டி மகிழ்ந்தாடும் மாய விளையாட்டுக்கள் தானா?

குஞ்சிமாப்பா மலை உச்சியில் நின்று பார்க்கும் போது, பத்தினியம்மன் கோவில் சற்று தெளிவில்லாமல் தான் தெரிகின்றது. அதன் உச்சியில் சிலம்பேந்தி கைநீட்டிக் கூவி, சம்பந்தமில்லாத யாரோ ஒருவரிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறாள் பத்தினி. அருகே வானை முட்டி எழுந்து வண்ணக் கொடிக்கரங்களை அசைத்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது பெரியசாமியின் கொடிமரம். இதோ, என்னருகே, குஞ்சிமாப்பா மலையில், மறுபக்கம் கடலை நோக்கித் திரும்பி ஆசீச முத்திரை காட்டியபடி நிற்கும் ததாகதன் போதிமாதவன் யாரைத் தான் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான்? அல்லது அத்தனை பேரும் சேர்ந்து, அவர்களின் பாராமுகம் கண்டு நெஞ்சம் வெதும்புவோரைஒற்றைச் சொல்லில் சபித்துக் கொண்டிருக்கிறார்களா?

"இதோ புறப்பட்டுவிட்டேன்.", "இல்லை, புறப்படவில்லை" என்று ஒரு நேரத்தில் சொல்வது போல் கடலுக்குள் நின்றுகொண்டிருக்கிறது, கல்லாகிப் போன பெரிய சாமியின் கப்பல். எதிரிப்படையுடையது என்று தவறாகக் கருதப்பட்டு இரு தரப்பினராலும் மாறிமாறித் தாக்கப்பட்ட கப்பல். அங்கிருந்து எழுந்து வந்து ஓலமிட்டபடி என் முகத்தில் அறையும் இந்தக் கடற்காற்று அத்தனை உப்பாக இருக்கிறது. உள்ளே இனம்தெரியாத கசப்பு ஊறிப்பெருக முகம் சுழித்தபடி குஞ்சிமாப்பா மலையிலிருந்து கீழே இறங்குகிறேன்.


மேலும் வாசிக்க »

காலம் மறைத்த ஒரு காப்பியக்கோவில்

0 comments
யாழ்ப்பாணத்தின்  வலிகாமம் மேற்கு பகுதியில் சண்டிலிப்பாய்க்கு  அருகே அமைந்துள்ள ஒரு ஊருக்கு மாசியப்பிட்டி என்று பெயர். அதை மாகியப்பிட்டி என்றும்  சொல்வார்கள்.அந்தப்பெயர் என் கருத்தைக் கவர்ந்த  ஊர்ப்பெயர்களில் ஒன்று. ஏனென்றால் சிங்களத்தில்  தமிழ்த் திசைச்சொற்கள் வந்து சேரும் போது சகரம் ஹகரம் ஆவது வழமை. சந்தி - ஹந்தி. சொதி - ஹொதி, இப்படிப் பல உண்டு. ஆனால் சகரம் ககரமாகத் திரியும் இலக்கண விதி ஈழத்தமிழுக்கும் பொருந்துமா என்று சிந்திக்கவைத்த பெயர்களில் ஒன்று இது. மாசியப்பிட்டி - மாகியப்பிட்டி.  

மாகியப்பிட்டிக்கு மிக அருகே தான் பிரசித்தமான பௌத்தத் தொல்லியல் மையமான கந்தரோடை அமைந்திருக்கிறது.  யாழ் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரம். 

இந்தக் கட்டுரையாசிரியன் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்துக்கு  அடுத்தமுறை போகக் கிடைக்கும்  போது,  மாகியப்பிட்டிக்குப் போகவேண்டும் என்பது அவன் திட்டம். மாகியப்பிட்டிக்கா? காரணம் இருக்கிறது. அதற்கு முதல் ஒரு விடயம் சொல்லவேண்டும்.

ஒரு  தெய்வத்தை புகழ்ந்து பாடும் போது அத்தெய்வம் கோவில் கொண்ட எல்லாத் தலங்களையும் பாடுவது தமிழ் மரபில் வழக்கமான ஒன்று. அந்த மரபை கிழக்கிலங்கையில் கடந்த முந்நூறாண்டுகளில் எழுதப்பட்ட பல கண்ணகி இலக்கியங்களிலும் காணலாம்.   கீழைக்கரையின் கண்ணகி இலக்கியங்களெல்லாம், ஒரு தலம் மீது பாடப்பட்டவை எனினும், தங்கள் இறுதிப்பாடல்களில் தங்களுக்கு அருகே அமைந்துள்ள ஏனைய கண்ணகியின் தலங்களையும் புகழ்ந்தபடி நிறைவுறுகின்றன. தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், செட்டிபாளையம் அம்மன் காவியம், பட்டிமேட்டு ஊர்சுற்று காவியம், உடுகுச்சிந்து,  முதலிய  இலக்கியங்களை இதற்கு  உதாரணமாகச் சொல்லலாம்.

இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பல தலங்களை இந்த ஒன்றுக்கு மேற்பட்ட கோவில்களின் பட்டியலில் மீண்டும் மீண்டும் காணமுடிகின்றது. உடுகுச்சிந்தில் மட்டும் திருக்கோணமலையின்  நீலாப்பளை, மாகாமம் மற்றும் கண்டி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் பத்தினியர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.  ஆனால் அந்த மண்ணில் தோன்றிய கண்ணகி இலக்கியங்களில், கிழக்கிலங்கைக்கு வெளியே அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள ஆலயம் ஒன்றே ஒன்று தான். அங்கணாமைக்கடவை.

அங்கணாமைக்கடவை பற்றி தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், மண்முனை அம்மன் காவியம், குயில் வசந்தன், ஊர்சுற்றுக்காவியம் ஆகிய ஐந்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  25 தலங்களில் வீற்றிருக்கும் கண்ணகியைப் பாடும் எழுபத்திரண்டு பாடல்கள் கொண்ட ஊர்சுற்றுக் காவியத்தின் நான்கு பாடல்கள் அங்கணாமைக்கடவையைப் புகழ்கின்றன.

 மாகியப்பிட்டிக்கு போகும் ஆசை இருந்தது என்று சொன்னேனே, அதற்குக் காரணம் ஒன்று தான்.  கீழைக்கரை கண்ணகி இலக்கியங்கள் பாடும்  அங்கணாமைக்கடவைக் கோவில் அங்கு தான் அமைந்திருக்கிறது. இன்று அதன் பெயர் சண்டிலிப்பாய் மாகியம்பதி கந்தரோடை அங்கணாக்கடவை ஸ்ரீ மீனாட்சி கண்ணகை அம்பாள் ஆலயம்.  மீனாட்சிக்கே இன்று கூடிய முன்னுரிமை இருக்கும் போதிலும், மக்கள் வழக்கில் கண்ணகையம்மன் கோவிலாகவே அறியப்படுகிறது.


அங்கணாக்கடவை மீனாட்சி கண்ணகி அம்மன் ஆலயம்

நாவலர் காலத்து சைவ எழுச்சியின் பின்னரான மேனிலையாக்கத்துடனேயே  அங்கணாக்கடவையில் மீனாட்சி வழிபாடு, ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் அங்கு மீனாட்சியையும் கண்ணகியையும் இணைத்து ஒரு மரபுரை, இவ்வூருக்கு அருகே அமைந்துள்ள அளவெட்டி வெளிவயல் முத்துமாரியம்மன் கோவிலில் வழங்குகிறது. 

முன்பொருமுறை கடும் வரட்சி நிலவிய காலத்தில் முக்காடு போட்டு வெள்ளைச்சீலை உடுத்த மூன்று பெண்கள் தாகத்துக்குப் பசும்பால் கேட்க, அங்கு வயல் உழுதுகொண்டிருந்த ஒரு உழவனின் பால்வற்றிய மாட்டில் பால் சுரந்ததாகவும், அவர்களின் ஆணைப்படி அவன் எறிந்த மூன்று எலுமிச்சைக்கனிகள் விழுந்த இடங்களில் மூன்று கோவில்கள் எழுந்ததாகவும் கதை செல்கின்றது. இரண்டு எலுமிச்சைகள் விழுந்த மாகியப்பிட்டியில் கண்ணகியும் மீனாட்சியும் கோவில் கொண்டனராம்.  வெளிவயலில் மூன்றாமவள் முத்துமாரி.

இன்னொரு கதையின் படி, சேரநாட்டில் கண்ணகி அருள்பெற்று யாழ்ப்பாணத்தின் மாதகல்லில் இறங்கிய கயவாகு மகாராசன் அனுராதபுரம் சென்றபோது, கண்ணகிக்கென அமைத்த முதற்கோவில் அங்கணாக்கடவை. மதுரையை எரித்த பின் மனம் வெதும்பி இலங்கை வந்த கண்ணகி ஐந்துதலை நாகவடிவில் நயினாதீவு வந்ததாகவும், அங்கிருந்து களையோடை, சீரணி, கந்தரோடை வழியாக நாகர்கோவில் வரை சென்றதாகவும் இன்னொரு தொன்மம் செல்கிறது.  
 
யாழ் குடாநாட்டின் ஒரேயொரு ஆறான  வழுக்கையாறு,   அங்கணாக்கடவையை அடுத்து ஓடி அராலியில் கடலில் கலக்கிறது. அதற்கு கண்ணகி வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புண்டு.  கண்ணகி ஐந்துதலைப் பாம்பாக மாறி வழுக்கிச் சென்ற பாதை அது தான்  என்பது தொன்மம். அதன் இருகரையிலும் பல நாகதம்பிரான் கோவில்கள் அமைந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். கிழக்கிலும் கண்ணகி நாகத்தோடு இணைத்து தான் சொல்லப்படுகிறாள். கீழைக்கரையில் கண்ணகியின் ஆதித்தலங்களாகச் சொல்லப்படும் தம்பிலுவில்லிலும் பட்டிமேட்டிலும் அவளுக்குப் பெயரே "நாகமங்கலை" என்பது தான்.

கடந்த பெப்ரவரி மாதம் வேறொரு தேவைக்காக யாழ் சென்றிருந்த போது, அக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கோவிலின் முன்புறம் வழுக்கையாறும், சுற்றிவர மரங்களும் என்று கோவில் அழகாகத் தான் அமைந்திருக்கிறது. வெயிலேறத் தொடங்கிய பொழுது. நாங்களும் கோவிலுக்குள் நுழைய அர்ச்சகரும் கோவிலைப் பூட்ட நேரம் சரியாக இருந்தது.   நிலைமையை விளக்க அர்ச்சகர் பின்கதவை பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். நாங்கள் விட்ட தவறு, அவர் தொடர்பிலக்கத்தையோ, நிர்வாகத்தார் யாருடைய தொடர்பிலக்கத்தையுமோ பெற்றுக்கொள்ளவில்லை. இல்லாவிட்டால் இக்கட்டுரைக்குத் தேவையான மேலதிக தகவல்கள் பல கிடைத்திருக்கக்கூடும். 

ஒரே வளாகத்தில் கண்ணகிக்கும் மீனாட்சிக்கும் அருகருகே கோவில்கள். மீனாட்சியின் கோவிலை நோக்கித் தான் பிரதான வாசல். கண்ணகிக்கும் ஒரு சிறிய நுழைவாயில் இருந்தது. கோவிலில் இப்போதும் திருப்பணி வேலைகள் இடம்பெறுகின்றன. மீனாட்சி அம்மன் சன்னதி ஓரளவு வலம் வந்து வணங்கும் அளவு இருக்கிறது. ஆனால் கண்ணகி கோவில் பற்றை மண்டிக்கிடந்தது. அறிவித்தல் பலகையில் இருந்த அறிவித்தலொன்றில் குளிர்த்தி என்ற சொல்லைக் காணமுடிந்தது. அது கிழக்கில் இன்றும் கண்ணகி வழிபாட்டில் முக்கியமான சொல். 



சரி. வடக்கில் பல கண்ணகி கோவில்கள் இருக்க, அங்கணாமைக்கடவை மட்டும் ஏன் கிழக்கில் போற்றப்பட வேண்டும்? அதற்கு இரண்டு ஊகங்களை முன்வைக்கலாம். 

முதலாவது ஊகம், கிழக்கில் நிலவும் ஒத்துக்குடா கந்தன் பற்றிய தொன்மத்துடன் தொடர்புடையது. போர்த்துக்கேயர் காலத்தில் இடம்பெற்ற சமய ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி, ஏழு அம்மன் விக்கிரகங்களை எடுத்துக்கொண்டு நாடார் குலத்தவரையும் தன் குடும்பத்தவரையும் அழைத்துக்கொண்டு ஒத்துக்குடா கந்தன் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வந்ததாகவும், தகவல் பரிமாறலில் ஏற்பட்ட தவறால், அவரை போர்த்துக்கேய உளவாளி என்று அஞ்சி கண்டியரசனின் ஆளுகையின் கீழிருந்த மண்முனை அரசன் கொன்றதையும் அத்தொன்மம் விவரிக்கின்றது. 

பின்பு அவர் கொணர்ந்த ஏழு விக்கிரகங்களும் வட மட்டக்களப்பில் ஏழு இடங்களில் கோவில் கொள்கின்றன. அந்த ஏழு தலங்களும் எவை எவை என்பதற்கு இன்று சரியான தரவு இல்லை. பிற்காலத்தில்  இந்த கோவில்களிலிருந்து இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் பிரிந்த தரப்பினர் தங்கள் புதிய அல்லது பூர்வீக இடங்களில் தனிக்கோவில்கள் அமைத்திருக்கிறார்கள்.  இன்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆரையம்பதிக்கும்  மகிழூருக்கும் இடைப்பட்ட, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் எழுவான்கரையிலும் படுவான்கரையிலும் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்த ஏழு தலங்களின் பின்னணியில் எழுந்தவை ஆகலாம். 

ஏழுகோவில் தொன்மத்தில் சொல்லப்படும் கந்தனின் சொந்த ஊரான ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் எங்கிருந்தது என்பது இன்று தெரியவில்லை . ஆனால் அங்கணாக்கடவைக்கு கிழக்கில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை சிந்தித்து, ஒத்துக்குடாவானது அங்கணாமைக்கடவைக்கு அருகாக  வழுக்கையாற்றின் கரையில் அல்லது அராலிப்பகுதியில் அமைந்திருந்த ஏதேனும் பழைய ஊர்  என சந்தேகிக்கலாம்.

எனினும் இதை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அங்கணாமைக்கடவையை முன்னிலைப்படுத்தும் தம்பிலுவில் மற்றும் பட்டிமேடு கோவில்களுக்கு ஒத்துக்குடா கந்தன் தொன்மத்துடன் நேரடித் தொடர்பேதும் இல்லை.

எனவே அடுத்த இரண்டாவது ஊகத்தைப் பார்த்தோமானால், கயவாகு தொன்மம் சொல்வது போல, இலங்கையில் எழுந்த முதல் கண்ணகி கோவில் அது ஆகலாம். இலங்கை முழுவதும், வற்றாப்பளைக்குச் சமனான, அல்லது வற்றாப்பளையை விட அதிகமான முக்கியத்துவம் ஒருகாலத்தில் குடாநாட்டு அங்கணாமைக்கடவைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே  மட்டக்களப்பில் உருவான கண்ணகி கோவில்களெல்லாம், அதை ஆதி கண்ணகி தலமாக போற்றி தங்கள் தங்கள் இலக்கியங்களில்  பதிவு செய்து வைத்திருக்கின்றன.


இந்த இரண்டாவது ஊகம் தான் சரி என்றால், இன்று அங்கணாமைக்கடவை கோவிலின் இன்றைய நிலையைப் பார்த்து நாம் பரிதாபம் மட்டுமே படமுடிகின்றது. 

வரலாற்றின் செல்திசை புரிந்துகொள்ளமுடியாதது. தெய்வங்களே அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைவதுண்டு. ஒரு காலத்தில்  கண்ணகியின் மண்ணாக விளங்கிய யாழ்குடாநாடு, இன்று அவளை பெருமளவு மறந்து நிற்பது காலத்தின் விபரீதச் சிரிப்பு என்றால், கிழக்கிலங்கை வரை புகழ்பெற்று பாடல் பெற்ற  பழம்பெரும் கண்ணகி கோவிலொன்று, இன்று அடையாளமிழந்து கேட்பாரற்று  உருத்திரிந்து நிற்பது தான் இன்னொரு சோகம். எளிய மானுடர்கள் நாம். ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடியும். 


கோவிலை விட்டு வெளியேறும் போது ஆற்றாமையுடன் அவள் கோவிலை திரும்பிப் பார்த்தேன். அங்கணாமைக்கடவையாள் ஓவியமாக அப்போதும் புன்னகைத்துக்கொண்டு தான் இருந்தாள். இந்தக் கணக்கெல்லாம் உன்னைப் போன்ற சிறியவர்களுக்குப் புரியப்போவதில்லை என்று சொல்லியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டேன்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner