கூத்த யாத்திரை: இலங்கைக் கூத்துக்கலையின் குறுக்குவெட்டுப் பார்வை

கூத்து, இலங்கைத்தமிழரின்  ஆடற்கலைகளில் ஒன்று. கூத்துக்கலையில் செவ்வியல் கூறுகள்  இனங்காணப்பட்டிருப்பதால், அதை நாட்டார் கலை என்று மட்டும் முத்திரை குத்த இயலாது என்ற கருத்து தற்போது ஈழத்து ஆய்வுலகில் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலனாக,  சுமார் பத்தாண்டுகளாக  கூத்து தொடர்பாக என்னை அரித்துக்கொண்டிருக்கும் வினாக்கள் இரண்டு. இன்றுவரை, இலங்கையில் தமிழர் தேசிய நடனம் என்றால், பரதநாட்டியமே முன்வைக்கப்படுகிறதே, கூத்துக்கு அந்த இடம் ஏன் வழங்கப்படவில்லை?   என்பது முதலாவது வினா. இரண்டாவது வினா, அப்படி தமிழர் தேசிய நடனமாகக் கூத்துக்கு இடம் கொடுப்பதென்றால், கூத்தில் ஊருக்கு ஊர், இடத்துக்கிடம் ஆட்டமுறைகளில் வேறுபாடு நிலவுகையில், அதில் எதை சரியான வடிவமாகக் கருதி, அரங்காற்றுகைக்கென அங்கீகரிப்பது?




சில மாதங்களுக்கு முன்னர், பேராசிரியர் மௌனகுரு அவர்களுடன் வழக்கம் போல், உரையாடிக்கொண்டிருக்கையில் என் இரண்டாவது சந்தேகம் தொடர்பாக வினவினேன். அவர் சிறு புன்னகை உதிர்த்து மிகச்சுருக்கமாக பதிலளித்தார். “இந்தக் கேள்வியை நான் பல ஆண்டுகளாக எனக்குள்ளேயே எழுப்பி விவாதித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, கூத்தின் பல்வேறு வடிவங்களுக்குள் இது சரியானது, இது பிழையானது என்றெல்லாம் பேதமில்லை. எல்லாமே கூத்துத் தான். ஆனால் கூத்துக்கு பொதுவடிவமொன்றை உருவாக்குவது பெரிய வேலை.  கதக்களி போன்ற நடனங்களில் ஒரு குறித்த ஊர் மரபு சார்ந்து, அல்லது பயிற்றப்படும் ஆசிரியப்பள்ளி (School) சார்ந்து ஆட்டமுறைகளில் (style) வேறுபாடுகள் சொல்லப்படுவதுண்டு. அப்படி, இன்றுள்ள எல்லா கூத்து வடிவங்களையும் அந்தந்த ஊர் அல்லது ஆசிரியப்பள்ளி சார்ந்த ஆட்டமுறைகளாக  தனித்தனியே அழைத்தபடி, அந்தப் பொதுக்கூத்துக்குள் நீடிக்க விடலாம்” என்பது அவர் சொன்ன பதிலின் சாராம்சம். 


இந்த அருமையான பதிலை வந்தடைவதற்கும், அதன் வழியே தமிழ்க் கலையுலகை வழிப்படுத்துவதற்கும் அவர் எத்தனை பரீட்சார்த்த முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்பதும், எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதும், எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் அதில் ஒரு சிறுபகுதியை படித்தறியும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அது, குமரன் புத்தக இல்லத்தின் வெளியீடாக கடந்த 2021இல் வெளியான அவரது  “கூத்தயாத்திரை:நான் கொண்டதும் கொடுத்ததும்” எனும் நூல். 



கூத்தயாத்திரை நூலை, ஒரு விதத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் தன்வரலாறு  என்று சொல்லலாம். இன்னும் திருத்தமாகச் சொல்வதென்றால் தன்வரலாற்றில் கூத்து தொடர்பான நினைவுகளை குறிப்பாக மீட்டுப்பார்க்கும் ஒரு நினைவேடு (Memoir). தன் பிறப்பிலிருந்து இன்றுவரை, கூத்திலிருந்து தான் கொண்டதென்ன, கூத்துக்கும் சமூகத்துக்கும் தான் கொடுத்ததென்ன என்பதை விரிவாகக் கூறிச் செல்கிறார் பேராசிரியர். நூல் முழுவதும் தன்மையிலேயே கூறப்பட்டிருப்பதால்,  நினைவுகளை அசைபோட்டு மகிழும் பெருந்தந்தை ஒருவரின் அருகே வாஞ்சையுடன் அமர்ந்து கதை கேட்டும் மனநிலையை இந்நூல் ஏற்படுத்தி விடுகிறது. இந்த மொழிநடை புரிதலுக்கு இலகுவானதாகவும் இருப்பது இந்நூலின் சிறப்பு.  


நூல் ஒன்பது அத்தியாயங்களாக அமைந்திருக்கிறது. முதல் அத்தியாயம் “கூத்தைக் கண்டமை (1943-1960)”. கமலாவதி எனும் கூத்தைக் கேட்டபடியே  நூலாசிரியரின் அன்னை அவரைப் பெற்றெடுத்த சுவையான சம்பவத்துடன் ஆரம்பமாகும் இவ்வத்தியாயம், அவர் பிறந்த மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமம், அங்கிருந்த கூத்தோடு ஒன்றிய வாழ்க்கைமுறை உள்ளிட்ட விடயங்களை விவரிக்கின்றது. கூத்துப்பார்ப்பதற்காக கடலை அவித்தெடுத்து பாய், தலையணை, அரிக்கன் லாம்புடன்  அயலூருக்குப் பயணிக்கும் குடும்பங்கள் என்று அக்கால வாழ்வியல் கண் முன் விரிகின்றது. ஊடே, இன்று கூத்துக்கலையில் இடம்பெறும் “ஏட்டு அண்ணாவியார், சதங்கையணி விழா ஆகிய இரண்டு பதங்களும் முறையே கொப்பி பார்ப்பவர், சதங்கை கட்டல் என்று தான் அன்றைய கிராமப்புறங்களில் அழைக்கப்பட்டு வந்தன என்பதையும்  கூறிச் செல்கிறார், நூலாசிரியர்.


இரண்டாவது அத்தியாயம், “கூத்துப்பழகியமை (1957-1960)”. தான் கற்ற வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் “பாசுபதாஸ்திரம்” எனும் வடமோடிக்கூத்தை ஆடும் வாய்ப்புக் கிடைத்தமையும், மட்டக்களப்பிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும்  சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி,  சி.கணபதிப்பிள்ளை, பேரா.சரத்சந்திரா, வீ.சீ.கந்தையா, வித்துவான் கமலநாதன் உள்ளிட்ட இலங்கைப்பேராளுமைகளுக்கு முன்னர் தனக்கு அரங்கேறக் கிடைத்த அரிய வாய்ப்பையும்   இதில் விரிவாகக் கூறிச் செல்கிறார் நூலாசிரியர்.  ஆனால், ஒரு வாசகனாகவும் கலை ஆர்வலனாகவும் இங்கு இந்தக் கட்டுரையாசிரியனை இறும்பூது எய்தச் செய்வது, நூலாசிரியர் முதன்முதலில் ஆடிய அதே பாசுபதாஸ்திரம் கூத்தும், அதே சிவவேடன் பாத்திரமுமே அவனையும் அவனது பதின்மூன்று வயதில் முதன்முதலாகக் கூத்துக்கலைக்கு அறிமுகப்படுத்தின  என்பது தான். (இந்த இடத்தில் தனது அண்ணாவிமாரான சகோதரர்கள் திரு.மு.பராந்தகன், மு.விஜயாலயன், அவர்களது அன்னை திருமதி.மு.சிவகாமிதேவி ஆகியோரை அவன் நன்றியோடு நினைவுகூர்கிறான்). 


மூன்றாவது அத்தியாயம், “பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துப் பழகியமை (1961 - 1965)”.  கலாநிதி.வித்தியானந்தன் மற்றும் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூத்து மீளுருவாக்க முயற்சிகள் அவற்றை அருகிலிருந்து பார்த்த இன்னொரு ஆளுமையின் கண்ணோட்டத்தின் வழியே இங்கு பதிவு செய்யப்படுகின்றன.  “காலனித்துவம் தந்த நவீன நாடகத்திற்கு எதிராக மண் சார்ந்த நமது நாடக மரபை மீள்கண்டுபிடித்து நிறுத்தி பண்பாட்டுப் போர் புரிந்த வித்தியானந்தனையும் சிவத்தம்பியையும் காலனித்துவ சிந்தனையாளர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களின் கூத்துச் செயற்பாடுகளை மறைக்க முயலும் முதிரா இளைஞர்கள், கிளையில் இருந்து கொண்டு அடிமரம் தறிக்கும் புத்திசாலிகளே” என்று இங்கு சாடுகிறார் நூலாசிரியர். 

பேரா.சி.மௌனகுரு

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கீழ் மேற்கொண்ட முனைவர் பட்டப்படிப்புக்காக மட்டக்களப்பில் நூலாசிரியர் கிராமம் கிராமமாக அலைந்தமையும், அதன்மூலம் அவருக்குக் கிடைத்த அரிய அனுபவங்களும் அடுத்து விவரிக்கப்படுகின்றன. “மட்டக்களப்புக் கூத்து மட்டக்களப்பில் ஏற்கனவே இருந்த ஆடல் பாடல்களையும் வெளியிலிருந்து வந்த ஆடல் பாடல்களையும் சேர்த்துக்கொண்டு மட்டக்களப்பிற்கேயுரிய கூத்தாக மேற்கிளம்பியமையும் மட்டக்களப்பின் சமூக அமைப்புக்கு இயைய அது மட்டக்களப்புக்கிராமங்களில் பதியம் இடப்பட்டமையும்” தனக்குத் தெரிய வரத்தொடங்கியதையும், அதன் விளைவான முடிவுகள் கொண்ட அவரது கலாநிதிப் பட்ட ஆய்வேடு “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” என்ற பெயரில்  1998இல் அச்சுவாகனமேறியதையும் இவ்வத்தியாயத்தில் விவரிக்கிறார் நூலாசிரியர்.


யாழ்ப்பாணம்,  கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம், நோர்வே நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த பன்னாட்டு மாணவர்கள், இலங்கை அழகியற் கற்கைகள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் உள்பட  தன்னிடம் கூத்துப்பயின்ற பல்வேறு தரப்பினரை அடுத்து உற்சாகத்துடன் விவரிக்கிறார் நூலாசிரியர். கூத்து ஆடுவது எப்படி, என்று விளக்கும் முதலாவது கைநூலான “”கூத்துக்கலை - வடமோடி ஆட்டப்பயிற்சிக்கான கைநூல்” 2010இல் நோர்வேயில் எழுதப்பட்டதும் இங்கு  கூறப்படுகிறது. “நந்தவனத்துக்கு அழகு பல்வகைப் பூக்களே” என்ற இந்நூலின் இறுதி அத்தியாயம், பலவிதங்களிலும் முக்கியமானது. நூலாசிரியரின் கூத்துத் தொடர்பாக மாறிவந்த பார்வை இதில் பதிவாகி இருக்கிறது. இந்த இறுதி அத்தியாயம் சீர்செய்யப்பட்டு “கூத்தே உன் பன்மை அழகு!” என்ற பெயரில் அதே குமரன் இல்ல பதிப்பக வெளியீடாக தனிநூலாகவும் வெளிவந்திருக்கிறது.



இந்த அத்தியாயத்தில் கூத்து, சமூகத்துக்குள் நிலவிய ஒரு மேல் - கீழ் அமைப்பான அதிகாரச் சட்டகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியது என்பதை, தன் பால்ய கால நினைவுகளிலிருந்து அவர் மீட்டுப்பார்க்கிறார். கூத்து உயர்மட்ட அங்கீகாரம் பெறுவதில், அக்கால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக அலையடித்துக்கொண்டிருந்த தேசியவாத மற்றும் மார்க்கசியவாத கருத்தியல்கள்   தாக்கம் செலுத்தியதும் இங்கு ஆராயப்பட்டிருக்கிறது. 


காலகதியில், பல்வேறு சமூகங்கள், கருத்தியல்கள், சூழல்களுடனான ஊடாட்டத்தின் பாதிப்பால், நூலாசிரியரின் சிந்தனைப்போக்கு வளம் பெறலாயிற்று. அதன் காரணமாக கூத்துப்பயிற்றுவித்தலில் அவர் மேற்கொண்ட மாற்றங்களை அவர் இங்கு பட்டியற்படுத்துகிறார். நாம் புரிதலுக்கு வசதியாக அதை ஐந்து படிநிலைகளாக தொகுத்துப் பார்க்கலாம். 


முதலாவது மார்க்கசிய சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட பற்றால், தொன்மங்களை மட்டுமே கதைக்கருவாகக் கொண்ட கூத்துக்களில் சமகால சமூகக் கதைக்கருக்களை அறிமுகம் செய்கிறார். 1998இல் மேடையேற்றப்பட்ட சங்காரம் கதை அவற்றில் ஒன்று. இரண்டாவதாக, அவரது கலாநிதிப் பட்ட ஆய்வின் வழியே வாய்மொழியில் புழங்கிய கூத்து சார் தாளக்கட்டுக்கள், ஆட்டமுறைகள் எழுத்தில் பதிக்கப்பட்டன. அதை அடிப்படையாகக் கொண்டு கைநூலொன்றும் உருவானது. இது வாய்மொழிக் கலையாக நீடித்த கூத்தின் பிரதேசம் சார் பன்முகத்தன்மையைத் தொகுத்து, ஒரு ஒட்டுமொத்தச் சித்திரமொன்றை  வரைந்து பார்ப்பதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. 


மூன்றாவதாக, தன் கலாநிதி ஆய்வின் வழியே கிடைத்த ஒட்டுமொத்தச் சித்திரத்தின் மூலம், இன்றைய மட்டக்களப்புக் கூத்தானது செந்நெறிப்பட்ட ஒரு புராதனமான தமிழ் நாடக வடிவமொன்றின் நலிந்துபோன எச்சம் என்பதை அவர் கண்டடைகிறார். எனவே அதை சீர்படுத்தி மீண்டும் செவ்வியல் கலையாக மாற்றமுடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே கூத்தை இன்றுள்ள நிலையில் அப்படியே பேணுவதும், காலமாற்றத்துக்கேற்ப நவீன முறையில் வளர்த்தெடுப்பதும் சமாந்தரமாக ஒரேநேரத்தில் (simultaneously) நிகழ்த்தப்படவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். 

அதன்படி நவீனக் கூத்துக்கள், மீளுருவாக்கக் கூத்துக்கள் என்று அவரால் வரையறுக்கப்பட்டதுடன், அவை, சாரத்தில், மரபார்ந்த கூத்துக்களை ஒட்டியே படைக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். இந்த விடயங்கள் விபுலம் வெளியீடாக 1992இல் வெளியான நூலாசிரியரது “பழையதும் புதியதும்” நூலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 


நான்காவது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மரபார்ந்த கூத்துக்களை மாணவர்களுக்கு வட்டக்களரியில் கற்பித்துக்கொண்டே, புதிய (மீளுருவாக்கக்) கூத்துக்களை இயற்றி தன் சோதனை முயற்சியை மீள மீளக் கையாண்டு பார்த்தபடியிருக்கிறார் நூலாசிரியர். மரபார்ந்த கலையின் அடிப்படை அறிவுடன் மீளுருவாக்கக் கலைக்கு அறிமுகம் செய்யப்படும் மாணவர்கள், இரண்டையும் பயன்படுத்தி மேலும் மேலும் அக்கலையை முன்னேற்றுவார்கள் என்று அவரால் எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய கபுகி, நோ, கேரளத்தின் கதக்களி, கர்நாடக யக்சகானம் இவை போல, ஒருநாள், கூத்து தொடர் செயற்பாட்டின் வழியே ஈழத்தமிழரின் செந்நெறிக்கலையாக மிளிரும் என்பது அவரது நம்பிக்கை.


இறுதிப்படி, கூத்தைப் பல்துறையடிப்படையில் திறனாய்வு செய்வது. அந்தத் திறனாய்வுகள் கூத்தின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிக்கொணரும். அவை கூத்தில் காலமாற்றத்துக்கேற்ப செய்யப்படும் மீளுருவாக்கங்களைக் கட்டுப்படுத்தும் காரணிகளாக இயங்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.


இந்த அத்தியாயத்தில், நூலாசிரியராலும் ஏனையோராலும் மேற்கொள்ளப்பட்ட பல கூத்து மீளுருவாக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கூத்து மூலம் சூழலியல் பேசிய காண்டவ தகனம் முதலிய நாடகங்கள், பரதநாட்டியத்தை அடியொற்றி, கூத்தை முழுமையான மேடைக்கச்சேரியாக நிகழ்த்திக்காட்டும் மீளுருவாக்கம், இலங்கையின் சகல பிராந்தியக் கூத்து ஆடல்முறைகளையும் இணைத்துச் செய்யப்பட்ட கூத்துரு நாடகங்கள் எனும் மீளுருவாக்கம் என்பவற்றைச் சொல்லலாம். 


ஆனால் தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கூத்து மீளுருவாக்கம் என்பது வேறு பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறார் நூலாசிரியர். மரபார்ந்த கூத்திலிருந்து வேறுபடாமல், அதே வட்டக்களரியில், அதே மரபான ஒப்பனை, நேர அவகாசத்துடன், புதிய கருத்துக்களை கூத்தில் காட்டுவது தான் மீளுருவாக்கம் என்று அங்கு கொள்ளப்படுகிறது. இதை பின்நவீனத்துவ மற்றும் பின்காலனித்துவ கோட்பாடுகளின் தாக்கத்தால் விளைந்த போக்காக ஏற்றுக்கொள்ளும் அவர், ஆனால் அதை மட்டுமே மாணவர்கள் அறிவதால், கூத்தின் ஏனைய மீளுருவாக்கங்களுக்கான சாத்தியங்களை அறியும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று அங்கலாய்ப்பதையும் காணமுடிகிறது. 


எவ்வாறெனினும் இது தனது மார்க்கசிய கருத்தியலுக்கும், தற்போதைய புலமைசார் மட்டத்தில் செல்வாக்குடனுள்ள பின்காலனித்துவக் கருத்தியலுக்கும் இடையிலான கருத்தியல் ரீதியான முரண்பாடே   என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. இது சமூக - பொருளாதாரச் சுரண்டலில் கவனம் செலுத்தாமல், மேலோட்டமாக கலாசார அடையாள அரசியலிலும் மட்டும் ஆர்வம் கொண்டுள்ள பழைமைவாதப் போக்குக்கே கூத்தை இட்டுச்செல்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் இரு கருத்தியல்களும் மக்கள் நலன் நாடுதல், கூத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லல் என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருப்பதால், இந்தக் கருத்துமுரண்பாடு, ஆக்கபூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது அவரது நம்பிக்கை.


கூத்து பற்றிய நூலாசிரியரின் அண்மைய சிந்தனைப்போக்கோடு இந்நூல் நிறைவுறுகின்றது. கூத்தின்  இருமையை இங்கு புடம்போட்டுக் காட்டுகிறார் அவர்.  கூத்து ஒருபுறம் சமூகத்தின் அழகியலையும், சமூக - உளவியல் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கிறது.  மறுபுறம் பொருளாதாரச் சுரண்டலையும் அதிகார ஒடுக்குமுறைகளையும் திணிக்கும் பிற்போக்குச் சாதனமாக கூத்து விளங்குகிறது.                                                     


நிலமானிய சமூகத்தில் அதிகார வர்க்கத்தால் மக்கள் அதிக உழைப்புக்கு உள்ளாக நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஓய்வான காலத்தில் அவர்கள் கூத்து உள்ளிட்ட கலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் உபரியானது, கூத்தாடுவதில் செலவழிக்கப்படுகிறது. எனவே கூத்தும் ஒரு பொருளாதாரச் சுரண்டல் சாதனமாகிறது. பெண்களை பங்குபற்ற அனுமதிக்காமையால், அது பாலின ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கிறது என்பது இங்கு கூறப்படும் வாதம்.


இதில் நாம் ஊன்றி நோக்கவேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன. கூத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தால் மாத்திரமன்றி ஆதிக்க சமூகத்தாலும் ஆடப்படுகின்ற கலைவடிவம். கூத்து ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் திணிக்கப்படாமல், கொண்டாட்ட மனநிலைக்காக அவர்களாலேயே உவந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியும். அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்திடமிருந்தே ஆதிக்க வர்க்கம் கூத்தைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்கும் சான்றுகள் அதிகமாகக் கிடைக்கின்றன. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் சார் அடையாளங்களை இழக்காத கணியான் கூத்து, குறவர் கூத்து என்பனவற்றை உதாரணமாகக் காட்டலாம்  


மேலும் கூத்தாடுவது அத்தனை செலவு மிகுந்த ஒரு கலையாடல் அல்ல என்பதால், அதில் பொருளாதாரச் சுரண்டல் இடம்பெற்று வந்தது என்பதை உறுதியாகக் கூறுமாறில்லை. சாதி கலந்து கூத்தாடும் வழக்கமும் அந்நாளில்  இருக்கவில்லை என்பதால், ஒரு பார்வையாளரால் தன் சமூகக் கூத்தரின் ஆட்டத்திறனை மெச்சுவதற்காக கையுறையாக வழங்கப்பட்ட பணத்தாள்கள், சால்வைகள் குறித்த கூத்தருக்கு பொருளாதார உதவி புரிந்திருக்குமே தவிர, சுரண்டலுக்கு உதவியிராது.  ஊர் தாண்டிக் கூத்துப் பார்க்கும் மரபும் நீடித்ததால், ஒரு சமூகத்தால் மாற்று சமூகங்களின் கூத்துத்திறனை அங்கீகரிக்க வழங்கப்பட்ட கையுறைகளை, பொருளாதாரச் சுரண்டல் என்றன்றி, பொருளாதார ஒத்துழைப்பு என்றே கொள்ள முடியும்.


இனி பாலின ஒடுக்குமுறையைப் பார்த்தால், கூத்தில் பெண்களின் நேரடிப்பங்கெடுப்பு இல்லை என்று காலனித்துவ கால  நடைமுறைகளைக் கொண்டு இன்று உறுதிப்படுத்துகிறோம். ஆனால்  சிலப்பதிகார மாதவியிலிருந்து சோழர் காலக் கல்வெட்டுக்களில் வரும் தேவரடியார் வரை தமிழ் வரலாறு நெடுகிலும் பெண்களில் நல்ல கூத்தர்கள் இருந்திருக்கிறார்கள். கூத்துக்கு சமாந்தரமாக, ஒருவிதத்தில் கூத்துக்குச் சமனான புகழுடன் கணிகையரின் கோவில் ஆடற்கலை அதே காலனித்துவ காலத்தில்  புகழ்பெற்று விளங்கி இருந்திருக்கிறது. மட்டக்களப்பிலும் கோவில் ஆடற்கலை புரிந்த தேவரடியார் வசித்ததை ஐரோப்பியக் குறிப்புக்களில் அறிகிறோம்.  


கூத்து ஒரு பழைய செவ்வியல் நாடகக்கலையின் சீணித்த வடிவம் என்று நூலாசிரியர் வேறோரிடத்தில் சொல்கிறார். பிரதி அல்லது மூலநூல் (கொப்பி) எனும் பொருள்கொண்ட ஐரோப்பியச்சொல் இடம்பெறும் "கொப்பி பார்ப்பவர்" என்ற சொல் வருவதால், இன்றைய சீணித்த கூத்து, ஐரோப்பியர் காலத்திலேயே தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அது அவ்வாறு சீணித்ததாக ஊகிக்கக்கூடிய ஐரோப்பியர் வருகைக்கு முந்தைய காலகட்டத்தில் பெண்களின் நேரடிப்பங்களிப்போடு ஆடப்பட்டிருக்கலாம் என்பது பொருத்தமான ஊகம்.  "பெண் பாத்திரத்துக்கு சிறப்பாக ஆடுவோரே நல்ல கூத்தர்" என்ற கருத்து முன்பு இருந்ததும் தெரியவருகிறது. பெண்கள் கூத்திலிருந்து விலகிய பின்னர் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப ஆண்கள் முயன்றபோதே இக்கருத்து வழக்கில் ஊன்றியிருக்க வேண்டும்.


என்றால் பொருளாதாரச் சுரண்டலும் அதிகார ஒடுக்குமுறையும் கூத்தில் அடியோடு இருக்கவில்லையா? அப்படியும் முழுமையாகச் சொல்லமுடியாது தான்.  கூத்தில் பாத்திரம் வருகையில் திரை பிடித்தல் உள்ளிட்ட சில கடமைகளைச் செய்வதற்கு சில தாழ்த்தப்பட்ட சமூகங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். கூத்திலும் கூட அவர்கள் மேற்றட்டு வர்க்கத்தினரிடம் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையே நிலவியிருக்கிறது என்பதை இங்கு காண்கிறோம். கூத்து முடிந்தபின்னர், பகலில் கூத்தர்கள் கூத்தாடிச் செல்லும் ஒழுங்கில் நூலாசிரியர் கண்ட அதிகார அடுக்கும் மெய்யானது தான்.


பெண்களை நேரடியாக ஒடுக்காவிட்டாலும்  கூத்து  பெண்மையை ஒடுக்கியது. பெண்பாத்திரங்களேற்று நளினம் கைவரப்பெற்ற ஆண் கூத்தர்களை சமூகம் தரம் தாழ்த்தியே நடத்தியிருக்கிறது. பெண்களின் நளினத்துடன் மாணவர்களை அன்போடு தடவும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஆறுமுகம் அண்ணாவியார் கூத்துப்பயிற்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதை ஓரிடத்தில் நூலாசிரியர் ஏமாற்றத்தோடு குறிப்பிடும் இடத்திலும் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். "கூத்தாடிக் கு** நெளிப்பது ஆத்தாதவன் செயல்" என்ற பழமொழி, கூத்தாடுபவர்கள், கூத்தாடாதவர்களை விட ஒருபடி கீழானவர்கள் என்ற மனப்பாங்கு பெருகியபோது தோன்றியிருக்க வேண்டும். 


ஆக, நாம்  இப்படிச் சொல்லமுடியும். பொருளாதாரச் சுரண்டலோ பாலின அல்லது வர்க்க அதிகார ஒடுக்குமுறையோ கூத்தின் இயல்பாக இல்லாதபோதிலும், சமூகம் அவற்றைக் கூத்தில் திணித்திருக்கிறது. இதை நிலமானியச் சமூகத்தின் பிற்போக்காக இனங்காணவேண்டுமே தவிர, கூத்தின் பிற்போக்காக அடையாளங்காண இயலாது. சமூகம் மாறுகின்ற போது, கூத்தும் மாறுவதைக் காண்கிறோம். இன்று கூத்தில் பெண்களின் பங்கெடுப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சாதி கலந்த, பிரதேசங்கள் கலந்த கூத்து அரங்க அளிக்கைகள், அப்படியொன்றும் பெரிய சமூகப் புரட்சியெதுவும் நிகழாமல் இயல்பாகத் தான் நிகழ்ந்தேறியிருக்கிறது.  


எனில், கூத்தில் இன்றுள்ள தேக்கத்துக்கான முதன்மைக்காரணம் தான் எது? ஒரு கலையாடல், அதற்கான தேவை சமூகத்தில் இல்லாமல் போகும் போது, அல்லது வேறொரு கலையாடலால் அது பிரதியிடப்படும் போது, அந்த சமூகத்திலிருந்து மறைந்தொழிந்துபோகின்றது. நிலவுடைமைச் சமூகம் முதலாளித்துவ சமூகமாக மாற்றமடையும் இன்றைய நிலைமாறு காலத்தில் ஏற்பட்ட விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சி, கைத்தொழிற்புரட்சி என்பன கலையாடல்களுக்கான நெடிய ஓய்வுக்காலங்களை இல்லாமல் செய்துவிட்டன. அவசரமான வேலைகளுக்கு இடையில் மிகக்குறுகிய நேரம் இடம்பெறும் கலையாடல்களே இன்றைய மனிதனுக்குத் தேவையானதாக இருக்கிறது.


இன்னொரு விதத்தில் கூத்து ஒரு பிரதியீட்டால் பாதிக்கப்பட்டது. கூத்து இன்று மறைந்துவிட்டது என்றால் அதற்கான முதன்மையான காரணம், கூத்தை விட மெய்நிகர் (virtual) உணர்வை அதிகம் ஏற்படுத்துகின்ற திரைப்படங்களின் வருகை தான். திரையுலகும் புதிய புதிய சாத்தியங்களைக் கண்டடைந்து முன்னகர்ந்துகொண்டே செல்வதால், கூத்துக்கான சமகாலத் தேவை கணிசமான அளவு இல்லாமலே போய்விட்டது எனலாம். ஆனால் கூத்தைப் பொழுதுபோக்கு அம்சமாக தக்கவைக்க முடியும். திரையுலகோடு போட்டிபோடக்கூடிய புதுமையான நாடக நிகழ்த்துகையாக அதை நவீனப்படுத்தி, அதன் நிகழ்பொழுதைக் குறைத்து அரங்கேற்றும் போது, கூத்தால், தொடர்ந்தும் மனிதனின் பொழுதுபோக்குத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும்.


அதையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். கூத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருப்போர் இங்கு பல வகையினர். அவர்களில் மரபுவாதிகளும், மீளுருவாக்கவாதிகளும், பொதுமைவாதிகளும் அடக்கம். இவர்கள் ஒவ்வொருவரும், என் வழியே சரி, ஏனையோருடையது தவறு என்று உக்கிரமாக மோதிக்கொண்டிருப்பதால், கூத்தின் அடுத்த கட்ட நகர்வு தேங்கிப்போயிருக்கிறது. கூத்தில் புதிய சிந்தனைகள் தோன்றுவதும், மாற்றங்களுக்கான குரல்கள் எழுவதும் இயல்பே. அவற்றை நிராகரித்து பாரம்பரியக் கூத்து மட்டுமே நீடிக்கவேண்டும் என்று குரல் எழுப்பாமல், பாரம்பரியக் கூத்தை வளர்ப்பவர்கள் வளர்க்கட்டும், நவீனக் கோட்பாடுகளைப் பிரயோகிப்பவர்கள் பிரயோகிக்கட்டும் என்று அவர்களுக்கும் வழிவிடும் சமரச மனப்பாங்கு வளரவேண்டும். “ஆயிரம் பூக்கள் பூக்கட்டும், அவற்றால் நந்தவனம் நிறையட்டும், பல்வேறு வகை பூக்கள் நிறைந்திருப்பதுவே நந்தவனத்திற்குப் பேரழகு தரும்.” என்று முடிகின்றது - இல்லையில்லை - தொடர்கின்றது, கூத்த யாத்திரை.


கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் கூத்துக்கலையில் என்னென்ன மாறுதல்கள் இடம்பெற்றது, அதில் புலமைச்சமூகத்தின் பங்களிப்பு எதுவரை இருந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு கூத்தயாத்திரை நூல், ஒரு சோறு பதம்.  அதிலும் இந்நூலாசிரியர், தானும் ஒரு கூத்துக் கலைஞர், துறைசார் விற்பன்னர் என்பது இந்நூலின் பெறுமதியை அதிகரித்து விடுகிறது. கூத்து பற்றிய திறனாய்வுக்கு இந்நூல் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாத உசாத்துணையாக நீடிக்கக்கூடும்.


இக்கட்டுரையாசிரியனோடு தனிப்படப் பேசும்போதெல்லாம், பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், ஓய்வெடுப்பதா, தொடர்ந்து களப்பணியாற்றுவதா என்று தெரியவில்லை, பேசாமல் களப்பணியையே ஓய்வாக்கிக்கொள்கிறேன் என்று முறுவலுடன் சொல்வதுண்டு. மனுக்குலம் மீதான அக்கறை காரணமாக அவரிடம் சொல்லக்கூடிய பதில் ஒன்றே. அவர் ஓய்வெடுக்கக்கூடாது. இந்நூலிலேயே அவர் செய்யத்திட்டமிட்டுள்ளதாகச் சொல்லியுள்ள கூத்துக்கச்சேரியை செய்துமுடிக்கவேண்டும்.  கூடவே, கூத்தயாத்திரையை விரித்து அவர் தன்வரலாறொன்றும் எழுதவேண்டும். முழுமையான தன்வரலாறு ஒன்றாக இல்லாவிட்டாலும் கூட, “தன் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான பயணங்களை தனி நூலாகவே எழுதலாம்” என்று இந்நூலில் அவர் சொல்லியிருக்கின்ற அந்தப்பயணங்களை மட்டுமேனும் அவர் எழுத முயல வேண்டும். 


ஏனெனில் ஊரூராய்த் திரியவும், அவ்வவ் ஊர்களின் பண்பாட்டு வித்தியாசங்களை அறிந்துகொள்ளவும் உலகில் வெகுசிலருக்கே வாய்ப்புக் கிட்டுகின்றது. அத்தகையவர்களிலும் பேரா.சி.மௌனகுரு போன்ற ஓரிரு புலமையாளர்களுக்கே பொதுமகன் ஒருவன் வெற்றுக்கண்களால் காணமுடியாத வாழ்வியல் கோலங்களையும், பண்பாட்டு நுட்பங்களையும் தெள்ளிதின் இனங்கண்டுகொள்ள முடிந்திருக்கும்.  எதிர்கால உலகுக்கு தேவையானவை இத்தகைய துறை அறிஞர்களின் சமூகவியல் - மானுடவியல் பார்வைக்கோணங்களே. ஏனென்றால் அந்த நுண்ணிய வேறுபாடுகள் தெரியவரும் போது தான், மானுடனுக்கு தான் மற்றவரோடு எத்தனை நெருக்கமானவன் என்பது தெரியவரும். ஆம், வேற்றுமைகள் தான் ஒற்றுமைகளை இறுக்கமாக்குகின்றன. பேராசிரியரே தன் நூலில் சொல்வது போல், ஆயிரம் மலர்கள் மலரும் போது தான் நந்தவனம் நிறைகின்றது.


ஓய்வெடுக்க ஆசைப்படுபவரை ஓய்வெடுக்கவேண்டாம், இன்னும் எங்களுக்காக பாடுபட்டு எழுதுங்கள் என்று ஆணையிடுவது கடைந்தெடுத்த சுயநலம் இல்லையா? இல்லை. அது பெருந்தந்தை ஒருவரிடம் பேரப்பிள்ளைகள் உரிமையோடு கேட்கும் நிலாக்கதை. பெருந்தந்தையர் ஒரு சிலர் தான் கதைகளை தம் வசம் நிறைத்து வைத்திருக்கிறார்கள். கதை சொல்லும் போது அவர்கள் தங்கள் இளமைக்கு மீள்கிறார்கள். இளைஞர்கள் ஆகிறார்கள். பேரப்பிள்ளைகளை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உண்டு. அந்தப் பொறுப்பு அவர்களை அவ்வண்ணம் எஞ்சவைத்த அவர்களது முதுதந்தையரிடமிருந்து அவர்களுக்குக் கைமாறியது. பொறுப்புக்கள் கைமாறலாம். யாத்திரைகள் முடிவதில்லை. கூத்தயாத்திரையும் அப்படித்தானே?

2 comments:

  1. வணக்கம். தங்களின் கட்டுரை, கூத்த யாத்திரையை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டமையின் பதிவு. மகிழ்ச்சி; பாராட்டுகள்.
    - கி.பார்த்திபராஜா, தமிழ்நாடு.

    ReplyDelete
  2. வணக்கம். மிக்க நன்றி.

    ReplyDelete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner