தைத்திருநாளும் தமிழுலகும்

வழக்கமாக தைப்பொங்கலன்று பேஸ்புக் வந்தாலே "சித்திரையா, தையா, எது தமிழர் புத்தாண்டு?" என்று, 'உலக தமிழ்ப்புத்தாண்டு பாதுகாவலர் சங்கம்' சார்பாக பொங்குவது தான் என் வழக்கம். இம்முறை அந்தச் 'சங்கம் முக்கியமில்லை; சாப்பாடு தான் முக்கியம்' என்ற சரித்திர முக்கியத்துவம் மிக்க முடிவை எடுத்திருப்பதால் ஒரு 'பொங்கல்' சாப்பாட்டுப் பதிவு. 😊

'பொங்கல்' என்ற சொல்லுக்கு சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை "கொதித்து மேலெழல்" அல்லது "செழித்தல்" என்ற பொருள் மட்டும் தான் உண்டு. அது ஒரு உணவுப்பொருளின்பெயராக முதன்முதலாக சீவக சிந்தாமணியில் தான் வருகிறது. "மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" என்கிறார் திருத்தக்கதேவர். சிந்தாமணியின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுகிறது.


அதற்கு முன் பொங்கல் என்று ஒரு சாப்பாடு இருக்கவில்லையா? என்று கேட்டால், சரியாகச் சொல்லமுடியாது. சம்பந்தர் தன் மயிலைப் பதிகத்தில் தைப்பூசத்தில் பெண்கள் தயாரிக்கும் "நெய்ப்பூசு ஒண்புழுக்கல்" எனும் உணவு பற்றிப் பாடுகிறார். ஆண்டாள், மார்கழி மாதப் பாவை நோன்பின் இறுதியில் "பாற்சோறு மூட நெய் பெய்து" அது முழங்கையில் வழிய இன்பமாக உண்பதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் இங்கு பாடிய உணவு, வைணவக்கோவில்களில் இன்றும் படையலிடப்படும் "அக்கார அடிசில்" என்று சொல்கிறார்கள். இதெல்லாம் பொங்கலுக்கு முந்திய, அல்லது பொங்கலை ஒத்த தமிழர் உணவுகள் ஆகக்கூடும். (சம்பந்தரின் "தை"ப்பூசம், ஆண்டாளின் "மார்கழித்" திங்கள், இரண்டையும் கவனியுங்கள்!)

சிங்களவரிடம் தேங்காய்ப்பாலில் சோற்றை புழுங்கச் செய்யும் 'கிரிபத்' முக்கியமான பண்பாட்டு உணவாக இருக்கிறது. கேரளாவில் அறுவடைக்குப் பின் புதிரை கோவிலுக்குக் கொடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வை 'பொங்காலா' என்கிறார்கள். கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் கண்ணகி கோவிலில் மாசி மாதம் நிகழும் 'ஆற்றுக்கால் பொங்காலா' மிக விசேடம். அங்கும் பெண்களுக்கே முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இலங்கையில், எங்களூர்ப் பக்கம், அறுவடை முடிந்த பின் 'களவட்டிப்பொங்கல்' (களம் வெட்டிப் பொங்கல்) வைத்து சூரியனுக்கும் பூமிதேவிக்கும் நன்றி சொல்லும் மரபு உண்டு. சோழர் கல்வெட்டுக்களில் சொல்லப்படும், அறுவடைத் திருநாளான 'புதுயீடு' என்பதே பின் தைப்பொங்கலாக வளர்ந்தது என்கிறார்கள்.

ஆக, தென்னகச்சமூகத்தின் முக்கியமான திரவ உணவான பால், திண்ம உணவான நெல்லரிசிச்சோறு, அந்த உணவைத் தந்த கதிரவன், அந்த உணவு கிடைக்கும் பிரதான வழிவகையான அறுவடை, இவையெல்லாமே இணையும் மையப்புள்ளி தான் தைப்பொங்கல். பொங்கல் நம் மத்தியில் விசேடமான உணவாக மாறியதிலும், இயல்பாகவே ஒரு கொண்டாட்ட நாளாக வளர்ச்சி கண்டதிலும் வியப்பேதும் இல்லை தானே?

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 😇🌾🌞🙏

(இந்தப் பதிவை நான் முகநூலில் பதிந்த பின்னர் சுவையான இரு கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தப் பின்னூட்டங்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே:



சங்க இலக்கியங்களில் தை நீராடல் மட்டும் தானே சுட்டப்படுகிறது? பிற்காலத்தைய ஆண்டாளும் நோன்பு, நீராடல் என்று தானே பாடுகிறார்!!

உழவர் திருநாள், பொங்கல், சூரிய வணக்கம் இவ்வாறு எப்படி மாற்றம் கண்டது? ஏதேனும் தரவுகள் உண்டா?





இது சற்று ஆர்வமூட்டும் கேள்வி தான். இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
1. இன்றைய தை மாதமும், தமிழ் இலக்கியங்கள் சொல்லும் தை மாதமும் ஒன்றல்ல.
2. அறுவடைத்திருநாளும் சூரியவணக்கமும் இணைந்தே தைப்பொங்கல்.
எப்படியென்றால்,

தமிழ் காலக்கணிப்பு சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. (பிறந்த நட்சத்திரம், இறந்த திதி, விரதங்கள்...). எனினும் நாம் இன்று பயன்படுத்தும் காலக்கணிப்பில் சூரியனின் இயக்கத்தையும் கருத்தில் கொள்கிறோம். தமிழ் நாட்காட்டி சூரிய - சந்திர கலப்பு நாட்காட்டியாக மாறியது எப்போது என்று சரியாகத் தெரியவில்லை. அதுவே குழப்பத்தின் ஆரம்பம்.

இராசிகளில் சூரியனின் நிலையை வைத்துக் கணிக்கும் மாதங்களை இராசிகளின் பெயரிலேயே அழைத்தார்கள். உதாரணமாக, சூரியன் மேட இராசியில் நிற்கும் முப்பது நாட்களும் 'மேட ஞாயிறு' என்று அழைக்கப்பட்டது. இப்படி, பன்னிரண்டு இராசிக்கும் பன்னிரண்டு ஞாயிறுகள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

ஆனால், சந்திர வழியில் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை, ஒரு திங்கள். பன்னிரண்டு திங்கள்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

சோழர் காலத்தில் தான் சூரியவழிக் கணிப்பு தமிழரிடம் புகழ்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கல்வெட்டுகளில் தான் சூரியவழி மாதப்பெயர்கள் (விருச்சிக ஞாயறு, மகர நாயிறு) காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த மாதப்பெயர்கள் கல்வெட்டுகளோடு நின்றுவிட்டன.அன்றாட வழக்கில் சூரியவழி மாதங்களுக்கும் சந்திரவழி மாதப்பெயர்களான சித்திரை, வைகாசி என்பனவற்றையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் விட்ட தவறு இதுவே. மாதக்கணிப்பில் மட்டும் சூரியவழிக்கு மாறிவிட்டு, சந்திரவழிப் பெயர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தி வந்தது. 

பழைய சந்திர வழியில் பார்த்தால்,தை மாதம் பிறப்பது, தைப்பௌர்ணமியில் - தைப்பூசத்தில்! அன்று தான் பெண்கள் தைந்நீராடல் செய்து, தமது மார்கழித்திங்கள் பாவை நோன்பை நிறைவு செய்கிறார்கள். ஆண்டாள் மார்கழி இறுதியில் பெண்கள் உண்பதாகச் சொல்லும் அதே நெய்ப்பாற்சோற்றையே, தைப்பூசமன்று பெண்கள் 'நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்' கொண்டாடுவதாக சம்பந்தர் பாடியிருக்கிறார். இப்படிப் போகும் போது தான், சங்க இலக்கியங்கள் புகழும் தைமாதமும், நமது இன்றைய தைமாதமும் வேறுவேறு என்பது தெரியவருகிறது. 

இனி சூரியவழி நாட்காட்டியில், சூரியனின் வடக்கு - தெற்கு நகர்வுகள் முதன்மையானவை. எனவே சூரியனின் வடக்குச் செல்கையான உத்தராயணம் துவங்கும் மகர சங்கிராந்தி குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது. 

அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத்திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில் எங்கள் பக்கம், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வது தான். காலக்கணிப்புக் குழப்பத்தோடு தை மாதம் சந்திரவழியிலிருந்து சூரியவழிக்கு மாற்றமுற்றதையும் சிந்திக்கவேண்டும்.) 

ஆக, , காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக, 
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு), 
2. பழைமையான அறுவடைத்திருநாள் 
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம். :)

ஆனால் "திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்ற நெடுநல்வாடை வரிகள்(வரிகள் 160 முதல்..) மூலம் சூரிய நாட்காட்டி முறையின் வழக்கம் சங்க காலத்திலேயே பழக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறதே?


ஆம். தமிழர் மத்தியில் மிகப்பழங்காலந்தொட்டே சூரிய நாட்காட்டியும் வழக்கில் இருந்திருக்கிறது எனலாம். ஆனால் சூரியவழி மாதங்களை தவறாக சந்திரவழி மாதங்களின் பெயர் கொண்டு அழைத்ததால் ஏற்பட்ட விபரீதத்தையே இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சந்திரவழியை நாட்காட்டியாக கைக்கொள்ளும் மரபு இன்றும் ஆந்திரா முதல் பல இடங்களில் உள. ஆனால் அது இன்று ஒரு வளர்பிறை பிரதமை தொட்டு அமாவாசை வரையான காலமாகவே கணிக்கப்படுகிறது. இதை சாந்த்ரமானம் என்கின்றனர். நமது நவராத்திரி, விநாயகசதுர்த்தி இவையெல்லாம் சாந்த்ரமானப்படியே அனுசரிக்கப்படுகின்றன.


ஆம். சந்திரவழிக் காலக்கணிப்பில் அமாந்தம், பூர்ணிமாந்தம் என்று இரு வகை உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு மாதமாகக் கணிப்பது அமாந்தம். அதையே இரு பௌர்ணமிகளுக்கு இடையே கணிப்பது பூர்ணிமாந்தம். நீங்கள் சொல்வது போல் இன்று பல இடங்களில் அமாந்த முறை நாட்காட்டியே பயன்படுகிறது.

ஆனால் மார்கழித்திருவெம்பாவை மார்கழிப்பௌர்ணமிக்கு முன் பத்து நாட்கள் அனுசரிக்கப்படுகிறதே?

ஆம். மார்கழித் திருவாதிரையில் கன்னியர் அம்பா ஆடுவதை "தைந்நீர் ஆடுதல்" என்று பரிபாடலும் குறிப்பிட்டிருக்கிறது. தை மாதம் தைப்பூசத்தில் (தைப்பௌர்ணமி) பிறந்தால், மார்கழிமாதம் பிறக்கும் மார்கழித் திருவாதிரையில் (மார்கழிப் பௌர்ணமி) எப்படி தைந்நீராட முடியும்?

உண்மையில், பூர்ணிமாந்த மாதம் துவங்கும், முடியும் இரு பௌர்ணமிகளில் எந்தப் பௌர்ணமியின் பெயரை அந்த மாதத்தின் பெயராகக் கொண்டார்கள் என்பது பற்றிய தெளிவான குறிப்பெதுவும் நம்மிடம் இல்லை. உதாரணமாக, தை மாதம் தைப்பௌர்ணமியில் முடிந்ததா அல்லது ஆரம்பித்ததா என்பது நமக்கு சரியாகத் தெரியாது. 

அப்படி ஒரேநேரத்தில் வெவ்வேறு கூட்டத்தினரால் இருவிதமாகவும் மாதம் கணிக்கப்பட்டிருக்கலாம் என்பதே நாம் ஊகிக்கக்கூடியது. அதனால் பரிபாடல் பாடும் இந்த ஒரு நோன்பு, ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாகவும் தை நீராடலாகவும் இருவேறு விழாக்களாக வளர்ந்திருக்கிறது. திருப்பாவையில் மார்கழித்திங்களைப் பாடும் ஆண்டாள், தன் நாச்சியார் திருமொழியில் "தையொரு திங்களை" பாடுவதால், இந்த வளர்ச்சி ஆண்டாள் காலத்தில் முற்றுப்பெற்றிருக்கக் கூடும். இந்த வேற்றுமை இன்னும் தெளிவடைந்து, இவை இரண்டும் இன்றுள்ளது போல், முறையே மார்கழிப் பாவை நோன்பாகவும், தைப்பூசமாகவும் மாறியிருக்கலாம் என்பது அடுத்த ஊகம். (ஊகம் மட்டுமே. இதில் முடிவெடுக்க இன்னும் ஆராய வேண்டும்.)

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்

சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner