குரவை என்னும் ஆதியொலி


குரவைச்சத்தம் கிழக்கிலங்கை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. திருமணமா, நல்ல காரியங்களா, கோவில் திருவிழாக்களா, எல்லாமே குரவையொலியோடு ஆரம்பமாவதே இங்கு வழக்கம். இப்போது பெருமளவு அருகி விட்டாலும், இன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குரவை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ்க் கிராமங்களில் மட்டுமன்றி முஸ்லிம் கிராமங்களிலிருந்து வீசும் காற்றும் அரிவையரின் குரவையொலியைத் தாங்கி வந்து வரவேற்றதை எண்ணி ஏக்கப்பெருமூச்சு  விடுவோர் இன்றும் இருக்கிறார்கள்.


குரவை அயரும் வங்கக் குமரியர் 


குரவை என்பது நாக்கையும் மேல் அண்ணத்தையும் மிக வேகமாக பயன்படுத்தி உயர்ந்த மீடிறனில் உருவாக்கப்படும் ஒரு மங்கல ஒலி.  பொதுவாக பெண்களே குரவையிடுவது வழக்கம். இதை பேச்சு வழக்கில் குலவை என்பார்கள். தமிழ்ப் பெண்கள் குரவையிடும் போது  வாயை வலக்கையால் மூடியபடி இடக்கையால் வலது முழங்கையைத் தாங்கியபடித் தான் குரவையிடுவது வழக்கம்.  அல்லது இடது கையை அருகிலுள்ள இன்னொரு பெண்ணின் தோளில் வைத்திருக்க வேண்டும். 

உலகெங்கும் பழங்குடிப் பண்பாடுகளில் குலவையிடுதல் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் குலவைக்கு  யுல்யுலேஷன் (Ululation) என்று பெயர். ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும்  தென்னிந்தியா, வங்கம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களிடம் தான் குலவை அவதானிக்கப்பட்டிருக்கிறது.  மிஸ்ராகி எனும் யூதப்பிரிவினர், எதியோப்பிய கிறிஸ்தவர்கள் போன்றோர் சமயச்சடங்குகள் செய்யும் போது  குலவையிடுவது வழமை. மத்திய கிழக்கு முஸ்லிம்கள், சமயச் சடங்குகளில் மாத்திரமன்றி, திருமணம், இறப்பு போன்ற  நிகழ்வுகளின் போதும் குலவையிடுகிறார்கள்.  ஆபிரிக்க சமூகங்களிடமும் குலவை அதிகளவு அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் வங்கமும் தென்னகமுமே இன்றும் குலவை நீடிக்கும் மையங்கள். வங்கத்திலும் ஒடிசாவிலும் குலவைக்கு உலுல்லத்வனிஎன்று பெயர். அவர்களும் சமயச் சடங்குகளுக்கும் திருமணம் முதலான மங்கல நிகழ்வுகளுக்குமே உலுல்லத்வனியை பயன்படுத்துகிறார்கள். தென்னகத்தில் தமிழில் குலவை என்றும்  மலையாளத்தில் குரவ என்றும் அழைக்கப்படும் இது, இன்றும் சமயச்சடங்குகளிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் ஒலிக்கப்படுகிறது.
    தேர்தலில் வாக்களித்த பின் குலவையிட்டு மகிழும் எகிப்திய மூதாட்டி, 2014

எகிப்தில் குலவையிடல் பற்றிய மிகப்பழைய எழுத்து பூர்வமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.  கிரேக்கப் பண்பாட்டிலும் முன்பு குலவையிடல் வழக்கில் இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குலவையிடல் கைக்கொள்ளப்படுகின்ற நாடுகளை ஒப்பிட்ட சில அறிஞர்கள், அவை பொதுவாக அரேபிய வணிகர்களின் வசிப்பிடம் அல்லது வருகை தரும் இடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டுமத்திய கிழக்கே குலவையின் தாயகம் என்கிறார்கள். 

ஆண்கள் அல்லாமல்பெண்களே குரவையிடுவதில் பெருமளவில் ஈடுபடுவதை சான்று காட்டி இதை மறுப்போர் உண்டுஆபிரிக்கா, இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதுமே குரவையொலி பழங்குடிகளில் அவதானிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு இடத்திலேயே தோன்றிப் பரவியது என்று கூறுவதற்கில்லை. கவனத்தைத் தூண்டும் எச்சரிக்கை, அபாயத்தை உணர்த்தும் பதகளிப்பு, மகிழ்ச்சியை சொல்லும் குதூகலிப்பு எல்லாமே குலவையொலியில் கலந்திருப்பதை நாம் காணலாம். காட்டுமிராண்டியாக மனிதன் உலவிய தொல்காலமொன்றில் தொடர்பாடலுக்கு உதவியிருக்கக்கூடிய ஒலி வடிவங்களில் ஒன்று அது. எனவே, பேச்சையும் எழுத்தையும் மனித இனம் அறியாத காலத்தில் பிறந்த ஆதியொலிகளில் ஒன்று அது என்பது சாதாரணமாகவே புரியும்.  ஆபிரிக்காவில் தோன்றிய மனுக்குலம் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பரவிய போது, இந்த ஒலி வடிவம் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்று கொள்வதே பொருத்தம் போலப் படுகிறது.

குலவையிடும் தமிழச்சி.

அதை ஆதியொலி என்பது சரி தானென்றால், இப்போது அதற்கு வயது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும். எத்தனை எத்தனை மூதாதையர் வாய்களில் ஒலித்திருக்கும் அந்த ஒலி? கொஞ்சமும் மாறாமல், குறைந்தது வழிபாட்டு நோக்கிலோ, அன்றாடப் பாவனையிலோ மட்டுமாவது, அந்த ஆதியொலியைப் பேணி வருகிறோம் என்பது மகிழ்ச்சியடைய வைப்பது தானே? அதுவும் தமிழ் மரபின் அம்சமாக குரவையொலிக்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது என்பதும், தமிழரில் மைய நீரோட்ட குடித்தொகையினரில் பெரும்பாலானோர் அதை இன்று மறந்துவிட்டனர் என்னும் போது, நம் சூழலில் மட்டுமாவது அது எஞ்சியிருக்கிறது என்பது எத்தனை நெகிழ்வை ஏற்படுத்தும் உணர்வு?


தமிழ்ப்பண்பாட்டில் குரவை பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியத்தில் தான் முதன்முதலாகக் கிடைக்கின்றன. குரவை அயர்தல் பற்றி பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பிட்டிருக்கின்றன. குரவையை தனியே ஒலிவடிவமாக ஒலிக்காமல் சேர்ந்து கூடவே நடனமாடும் குரவைக்கூத்தும் தமிழ்நிலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. தொல்காப்பியம் அரசனின் தேருக்கு முன்னும் பின்னும் குரவை ஆடிச்சென்றதை பதிவு செய்திருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு குரவையாடியதையும், காஞ்சி, வேங்கை முதலான மரங்களின் நிழல்களில் குரவை ஆடப்பட்டதையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

வழிபாட்டில் தமிழரால் குரவைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். முருகனை வணங்கி குறவர்கள் குன்றக்குரவையாடும் சித்திரமும், திருமாலைப் போற்றி ஆய்ச்சியர் குரவையாடும் காட்சியும் அந்நூலில் அழகுற வந்திருக்கிறது.


ஆரம்பத்தில் முருகனோடும்  திருமாலோடுமே குரவை இணைத்துப் பார்க்கப்பட்டது என்றாலும், குரவை அயர்வது போர்க்களத்திலும் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது என்ற குறிப்பை  திருமுருகாற்றுப்படையும் பதிற்றுப்பத்தும் தருவதால், போர்த்தெய்வமான கொற்றவை வழிபாட்டிலும் குரவை நீடித்தமை தெரிகிறது. இன்றும் தமிழக மாரியம்மன் வழிபாட்டில் குரவைக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. புரிகிற மாதிரிச் சொல்வதென்றால், பக்திப் படங்களின் இறுதிக்கட்டத்தில்  அம்மன்  ஆத்திரமுற்று தாண்டவமாடும் போது பின்னணியில் குலவை ஒலிக்குமே, அது அந்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கும் குரவைக்குமான உறவைச் சொல்வது தான்.


இன்று தாய்த்தெய்வ வழிபாட்டில் குலவையொலி கேட்க, குலவையை பதிவு செய்துள்ள இலக்கியங்களில் சிலம்பு குறிப்பிடத்தக்க இடம் வகிக்க, அந்த சிலம்பே புகழும் சிலப்பதிகார நாயகியின் கோவிலில் இன்றும் குலவையொலியைக் கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றவன் இக்கட்டுரையாளன். வைகாசி மாதத்தில் அவனது பிறந்தகம் தம்பிலுவில்லில் உள்ள கண்ணகி கோவில் குலவையொலியால் நிறைந்துவிடும்.

அவன் சிறுவயதில் குலவையொலி கேட்டு மகிழ்ந்த இன்னொரு கோவில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில். இப்போது அங்கு அரோகரா சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.  முருகன் திருவீதியுலாவுக்கு புறப்படும் போதும், பின் உலா முடிந்து வசந்த மண்டபம் திரும்பும் போதும், குரவையொலி விண்ணைப் பிளக்கும் பால்யகால நினைவுகள் எப்போதாவது இருந்துவிட்டு அவன் நினைவில் வருவதுண்டு.

இன்று வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆர்வம் ஏற்பட்டு விட்ட பிறகு, குரவையின் தொன்மையையும் அபூர்வத்தையும் அறிந்த பிறகு, அதைக் கேட்பது எப்போதுமே எனக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அதிலும் குரவை அயர்வது குறிப்பாக தமிழ் மரபில் முருகனுக்குரியது என்பதை திருமுருகாற்றுப்படையிலும் சிலம்பிலும் படித்து முடித்த பிறகு, எப்போதாவது முருகன் கோவிலொன்றில் குரவையொலியைக் கேட்டுவிடக்கூடாதா என்று கொஞ்ச நாட்களாகவே ஏக்கம்.  வேறு சில முருகன் கோவில்களில் இப்போதும் திருவிழாக் காலங்களில் குரவை ஒலிப்பதாகக் கேட்டு அதைக் கேட்கச் சென்று முடியாமல் ஏமாந்திருக்கிறேன்.

கடந்த வாரம் ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  இரவுத் திருவீதியுலா முடிந்து இறைவன் வசந்த மண்டபத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அருகிலேயே நாதஸ்வரத்துடன் இணைந்து மெல்லிய பறையொலியை அடக்கமுயன்றுஆணவத்துடன் முனகிக் கொண்டிருந்தது மிருதங்கம்சலவைத்தொழிலாளர் நிலப்பாவாடையை விரிக்க, தீவட்டியும் கொடி, குடை ஆலவட்டங்களும் மெல்லப் பின்னகர, முருகன் மண்டபத்துக்குள் புறம் காட்டி நுழைந்தான்.  நல்லா ஆட்டி ஆட்டிக் கொண்டு போங்கோ என்று ஒருவர் உரத்துச் சொல்ல வாய் கட்டி வாகனம் காவியிருந்த இளைஞர்கள் வலம் இடமாக ஏடகத்தை அசைக்கத் தொடங்கினர். மென்மையாக ஊஞ்சலில் அசைந்தாடுவது போல அலைந்த படி பின்னகர்ந்தான் அழகு வேலன்
                

சட்டென நாதஸ்வரத்தின் தொனியைக் கிழித்தபடி எங்கோ வீறிட்டெழுந்தது குரவையொலி.  மண்டபத்துக்குள்ளே  பின்னகர்ந்து கொண்டிருந்த முருகன் அலையும் வேகம் கூடத் தொடங்கியது போலிருந்தது. அவன் ஆனந்தமாகக் கூத்தாடிக்கொண்டிருந்தான். நான் காத்திருந்த அரிய கணம். குமரன் கோவிலில்  குரவையொலி. சங்க காலத்திலிருந்தே நீடிக்கும் குன்றக்குரவை ஒலி. ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டியும் தமிழ் நிலத்தில் ஒலிக்கும் மானுட இனத்தின் ஆதியொலி. 


நான் ஒருகணம் நடுங்கினேன். உடல் சில்லிட்டது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கண்ணீர் பெருகி வந்து பார்வையை மறைத்தது. சட்டென விழிகளைத் துடைத்தபோது, மாடத்தூண்களும் மண்டபமும் மறைந்து அடர்ந்த மரங்களும் கொடிகளும் மேலெழுந்து வந்து சூழ்ந்து கொண்டன. எங்கும் காரிருள் பரவியது. தொலைவில் இரு தீவட்டிகள் உயர்ந்தன. இலைதழைகள் தீயில் கருகி கற்பூர வாசனை எழுப்பி நிமிர்ந்தன. சிறுபறைகள் ஒலிக்க குறமகளிர் கும்மி கொட்டி கூத்தாடிக் கொண்டிருந்தனர். நடுவில் வேலன் வெறியாடியபடி நின்றிருந்தான். மிக அருகில் தீனமாக ஒரு குரல் எழுந்தது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே, அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேலன்றேஆயிரமாண்டுகள் அகவை முதிர்ந்த அதே மூதாட்டி அப்போதும் விடாமல் ஓங்கிய குரலில் குரவை அயர்ந்து கொண்டிருந்தாள். அந்த ஆதியொலி என்னவோ செய்தது. விம்மியபடி முகத்தை மூடிக் கீழே அமர்ந்து கொண்டேன். குரவையொலி நில்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.


(அரங்கம் பத்திரிகையின் 2019.08.02ஆம் திகதிய இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner