வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை




தேவதைகளெல்லாம்
அமுதம் அருந்த வேண்டும்
என்ற வழமை இருந்தது.
வெண்தேவதை
அமுதம் அருந்த ஆசைப்பட்டது.
அது கருந்தேவதை ஒன்றை
கையில் அமுதத்துடன் கண்டது.
கருந்தேவதையும் வெண்தேவதையும்
அமுதத்தைப் பரிமாறும் வழக்கம்
முன்பு இருந்ததில்லை.


'நான் இதை
இன்னொரு கருந்தேவதைக்கென
வைத்திருக்கிறேன்'
என்றது கருந்தேவதை.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் கருந்தேவதை
தனக்கே அமுதம் தரும்
என்று நம்பியது.


கருந்தேவதையின்
அமுதக்கோப்பையை
வேறு கருந்தேவதைகள்
தட்டி விளையாடின.
கருந்தேவதையே சில துளிகளை
ஒன்றுக்கு ஊட்டியும் விட்டது.
அதை வெண்தேவதையிடம்
காட்டிச் சிரித்தது.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
கருந்தேவதை
தனக்கும் அமுதம் தரும்
என்று நம்பியது.


வேறு வெண்தேவதைகள்
அமுதக்கோப்பையுடன் வந்தன.
இந்த வெண்தேவதையை
ஏக்கத்துடன் கடந்து சென்றன.
"இதை உனக்கென வைத்திருப்பேன்"
என்று சொல்லி அழுது சென்றது
ஒரு தூய வெண்தேவதை.
'ஏன்? இது கருந்தேவதைகளிலேயே
மிக அசிங்கமானது'
என்று கூவிச்சென்றது
ஒரு பசந்த வெண்தேவதை.
'இது நிகழ்ந்தால்
எல்லா தேவதைகளுமே
உங்களை தண்டிப்போம்'
என்று சீறியது
ஒரு சிவந்த வெண்தேவதை.


கருந்தேவதைக்கு
இது எதுவும் தெரியாது.
அல்லது தெரிந்தும்
தெரியாதது போலிருந்தது.
அது தனக்கான கருந்தேவதையுடன்
இன்பமாக அமுதம் அருந்திக்கொண்டிருந்தது.


வெண்தேவதை
ஒன்றும் சொல்லவில்லை.
அது மௌனமாக
கண்ணீர் வடித்தது.
கண்ணீர்த்துளிகள்
இதழில் இனித்தன.
அது அமுதத்தை விட
சுவையாக இருந்தது.
அது மெல்லப் புன்னகைத்தது.
"ஆம். இதுவே" என்றது.


அதன் பிறகு என்றைக்குமே
வெண்தேவதை
கருந்தேவதையிடம்
அமுதத்தைக் கேட்கவில்லை.
வேறு வெண்தேவதைகளின்
அமுதத்தைப் பருகவும் இல்லை.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner