சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

0 comments
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில்.
  
முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதெல்லாம் ஏன் இன்று குற்ற உணர்வுடனும், ஒவ்வாமையுடனும் பார்க்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இன்றைய சமூக விழுமியங்களுக்கு அந்நியமானவை; பொருத்தமற்றவை. ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அவை நம் இதே சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத அம்சங்களாக நிலவியிருந்திருக்கும். இதில் மரபுவாதிகள் அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.  காலத்திற்கேற்றால் போல் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இன்று தவிர்க்கப்படுகிறது என்பதற்காக, அது என்றுமே தவிர்க்கப்பட்டது, தவிர்க்கப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை.  எதையும் காலமே தீர்மானிக்கிறது. இந்தத் தீர்ப்புகள் நடைமுறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால், சபரிமலை தொடர்பான மூன்றாம் தீர்ப்பு விடயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். நான் சைவம் மீது பற்றுள்ளவன் என்ற வரையில் ஐயனை நேசிப்பவன். எனவே, சிவாகமப் புறம்பான ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமற்றவன். தலயாத்திரைக்கென நூற்றுக்கணக்கான தலங்களை தமிழ்ச்சைவர் பண்டுதொட்டே கொண்டிருக்கையில், நவீன ஊடக மற்றும் அரசியல் காரணங்களால் ஊக்குவிக்கப்படும் ஐயப்ப வழிபாடு மீது தனிப்பட்ட விமர்சனங்களும் உண்டு. 

ஆனால் இன்னொரு புறம்  ஐயப்ப பக்தர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை மாதமானாலே இங்கு இலங்கையில் கூட கறுப்பாடைகளில் சுற்றிவரும் ஐயப்பன் அடியார்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள். ஏனைய நாட்களில் குடி, புகை, கலாட்டா என்று வாழ்க்கையைக் கழிப்பவர்கள். ஆனால், ஐயப்ப விரத காலம் முழுவதும் அவர்களில் வந்து கூடும் அமைதியைக் கண்டால் வியப்பு ஏற்படும்.

சபரிமலை 2010 யாத்திரைக்காலத்தில்

இடையே நீங்கள் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கலாம். நாளெல்லாம் ரவுடித்தனம் செய்துவிட்டு நாற்பத்தெட்டு நாள் மட்டும் மாலை போட்டு நல்லவனுக்கு நடித்தால் போதுமா? நிச்சயம் போதும். அதற்குப் பெயர் பயிற்சி. சமயத்தின் பெயரில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மரக்கறி உணவு உண்டு, ஏனைய நாட்களில் மாமிசம் உண்டு பம்மாத்து காட்டுகிறீர்களே, அதனால் என்ன பயன்  என்று உங்களில் சிலர் கேட்கும் மொண்ணைத்தனமான கேள்விக்கும் பதில் இது தான். பயிற்சி.

பரமசாதுவான பிள்ளைப்பூச்சி ஒருவன் அமைதியாக இருந்தால் யாராவது வியப்படைவீர்களா?  ஒரு பிராமணன் மரக்கறி உணவை உண்டால் பார்த்து ஆச்சரியம் அடைவீர்களா? இல்லை, ஏனென்றால் அது இயல்பு. அமைதியானவனால் அமைதியாக இருப்பதோ, தொடர்ந்து மரக்கறி உணவை உண்பவன் அதே உணவை உண்பதோ கடினமான செயல் அல்ல. ஆனால் பயங்கர அட்டகாசம் செய்யும் ஒருவன் ஐந்தாறு நாள் அமைதியாக இருக்கிறான் என்றால், மாமிசம் தவிர வேறேதும் உண்ணாத ஒருவன் ஏழெட்டு நாள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருக்கிறான் என்றால் ஊரே வாயில் விரல் வைக்கும். "அதெப்படி, சாத்தியமே இல்லையே?" என்று தானே நாம் கேட்போம்?

வாரத்துக்கொருநாள் மரக்கறி வழக்கத்தில் நான் காண்பது இதைத்தான். அசைவப்பிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த ஒரு நாள் அதை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள். அல்லது வாழ முயல்கிறார்கள். "வாரத்துக்கொரு நாள்" என்று விதியைப் போட்டு அன்று மட்டுமாவது மாமிசம் ஒறுத்து வாழமுயல்வது. முடியாவிட்டால் அடுத்தமுறை முயல்வது. இது மெல்ல மெல்ல, வாரத்துக்கு இரண்டு நாள், மூன்று நாள், நாளுக்கு ஒரு வேளை என்று அதிகரித்து இறுதியில் முற்றிலும் புலால் மறுத்தோராக வாழ்வதற்கான பயிற்சியை வழங்கும். ஐயப்ப விரதம் என்பதும் அதே கதை தான். முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் ஆறு வாரங்கள்! இன்று அவர்கள் எப்படி என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் சீர்திருந்துவார்கள். அந்த விரதம், அந்தப் பயிற்சி, அவர்களை சீர்திருந்த வைக்கும்.

சரி, மீண்டும் சபரிமலை விடயத்துக்கு வருவோம். இன்றைய நவீன உலகில் மதத்தின் பெயரில் பாலினப் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தகாததே. சபரிமலையில் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அந்த விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், பொதுச்சமூக மனப்பான்மையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

உண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது தடை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பருவமடைந்ததிலிருந்து விலக்குநிறுத்தம் (Menopause) வரையான காலப்பகுதி மட்டுமே அங்கு பெண்கள் நுழைய முடியாது. பெண்குழந்தைகளும் முதிய பெண்டிரும் இன்றும் அங்கு வழிபட்டு வருகிறார்கள். ஐயப்பன் மணவொறுப்பு (பிரமச்சர்யம்) கைக்கொண்ட தெய்வம் என்பது அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, ஆணையோ, பெண்ணையோ தன் வழிபாட்டுக்கு அனுமதிக்காத தெய்வங்கள் இன்றும் நிறைய உண்டு. சபரிமலை அமைந்துள்ள அதே கேரளத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் அவர்களில் குறிப்பிடத்தக்கவள். அவள் உண்மையில் கண்ணகி. ஆண்குலத்தால் வஞ்சிக்கப்பட்ட அன்னைத்தெய்வமொன்றின் கடுங்கோபத்துடன் அங்கு வீற்றிருக்கிறாள். மாசி மாதம் அங்கு இடம்பெறும் பொங்காலா வைபவத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்கள் கோவில் வளாகத்தில் என்ன, ஊருக்குள்ளே கூட நுழைய முடியாது. அதுவே அங்கு விதி. அது ஆணின் எந்த உரிமையையும் பறிக்கவில்லை. அதில் -  அந்த நம்பிக்கையில் பாலினப்பாகுபாடு, பாலினச்சமத்துவம் என்றெல்லாம் புரட்சி பேசிக்கொண்டு ஆண்கள் உள்நுழைந்தால் அந்தக் குறியீடு, அந்தப் படிமம் என்ன ஆவது?
ஆற்றுக்கால் பொங்காலா -  பெண்களாலான உலகு.

இன்றும் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் கண்ணகிக்குக் கொம்புமுறிக்கும் போது அப்பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொம்புமுறி மழை வேண்டி நிகழும் ஒரு வளச்சடங்கு. ஆணும் பெண்ணும் பத்தியம் காத்து பிள்ளை பெறுவது போல் வானாகிய தந்தைத் தெய்வமும் மண்ணாகிய அன்னைத் தெய்வமும்  ஊடல் முறிந்து கலவி கொள்ளவேண்டும்; மழை எனும் உயிர்த்துளிகளை மண் அன்னை மீது வான் தந்தை பொழியவேண்டும் என்பதே கொம்புமுறியின் மானுடவியல் நோக்கு. கொம்புச்சந்தி ஆண்களால் மட்டுமே ஆனது. பாலியல் கிளர்ச்சியூட்டும் பாடல்களும், ஆபாச வார்த்தைகளும் அங்கு சர்வசாதாரணம். ஆனால், கொம்புமுறி என்பது மழைவேண்டி பத்தியம் காக்கும் ஒரு விரதம். எனவே பெண்கள் விலக்கப்படுகிறார்கள். கொம்புமுறியின் இறுதி நாட்களில் அவர்கள் அங்கு வரலாம். ஊடல் தவிர்ந்து தத்தம் ஆடவருடன் கூடல் கொள்ளலாம். வெளியே மழைத்துளிகள் பெருகும்; வீடுகளில் உயிர்த்துளிகள் பெருகும். 

தமிழகத்தின் சில ஔவையாரம்மன் கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குமரிப் பகுதியில் பெண்கள் ஆடி மாதம் கடைப்பிடிக்கும் அவ்வை நோன்பைப் பார்க்கவோ கலந்துகொள்ளவோ ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வடநாட்டின் கார்த்திகேய மந்திர்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. "ஆண்வாடை" பிடிக்காமல் காட்டிலும் ஊர் ஒதுக்குப்புறத்திலும் போய் அமர்ந்துகொண்ட காளிகள், பேச்சிகள் பற்றிய கதைகளை இன்றும் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதெல்லாம் அந்தந்தத் தெய்வங்கள், அவை சார்ந்த தொன்மங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள், படிமங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது அந்தத் தெய்வத்தின் தனித்துவத்தை இல்லாமல் செய்கின்ற காரியங்கள். தெய்வத்துக்கு அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்னவோ அவற்றை வழிபடுகின்ற பாமர மக்களுக்குத் தான்.  

சபரிமலை ஐயப்பன் கோவில், உண்மையில் ஒரு ஐயனார் கோவிலே. கேரளத்து தாந்திரீக வழிபாட்டு நடைமுறை மாற்றங்களால் அது ஐயப்பனை தனித்துவமான தெய்வமாக மாற்றிக்கொண்டது.  1940களுக்குப் பின்பு திரைப்படங்கள், வெகுசன ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்கள் என்பன காரணமாக யாத்திரைத் தலமாகப் புகழ்பெறத் தொடங்கியது. ஆயினும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபின் படி, அந்த இறைவன் மணவொறுப்பு நோன்பு கொண்டவன். எனவே அவனைப் பெண்கள் நெருங்கக்கூடாது. அவனை வழிபடும் அடியவர்களும் மணவொறுப்பும் கடுமையான விரதங்களும் மேற்கொண்டே அவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.  

கேரளத்தின் பழைய ஐயன் கோவில்கள் பல இன்று ஐயப்பன் கோவில்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. எனினும் அங்குள்ள மூலவர்கள் "தர்மசாஸ்தா" என்ற பெயரில் தம் பழைய ஐயன் அடையாளத்தை எஞ்சவைத்திருக்கிறார்கள். (சாஸ்தா என்பது ஐயனின் "சாத்தன்" எனும் பெயரின் வடமொழி மரூஉ.) குளத்துப்புழாவில் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா பாலகன். அதே போல், அச்சன்கோவில் எனும் தலத்தில், பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா  மணக்கோலநாதன். அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபடத் தடையில்லை. ஆனால், சபரிமலை போல்  தர்மசாஸ்தா மணவொறுப்பு நோன்பு மேற்கொண்டுள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலிலும் பத்து முதல் ஐம்பது வரையான வயதுள்ள பெண்கள் உள்நுழைய முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருவர் இன்னொருவருக்கு கீழடங்குபவர் அல்லர். ஒருவரை ஒருவர் நிரப்புவதாலேயே ஒருவருக்கொருவர் சமனானவர், ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாதவர்.  மற்றும்படி, ஆண் ஆண் தான்; பெண் பெண் தான்.  அதற்கு மேல் இயற்கையாலோ அறிவியலாலோ வேறெந்த விதத்திலும் அந்தச் சமத்துவத்தை நிரூபிக்கமுடியாது என்பதே உண்மை.   இந்த விடயத்தில் பெண்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்படவும் இல்லை. இன்றும் பெண்கள் உலாவும் ஐயப்ப அடியவர்கள் பலரது வீடுகளில் ஐயப்பனின் உருவப்படம் வைத்து வழிபடப்படுகிறது. ஐயப்பன் பெயரில் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியுள்ள ஓரிரு ஆலயங்களிலும் பெண்கள் சாதாரணமாகத் தான் சென்று வருகிறார்கள். 

குறிப்பிட்ட பாலினத்தவர் குறித்த தெய்வத்தின் கோவிலுக்குள் நுழையமுடியாது, நுழையக்கூடாது என்பது மிகத்தொன்மையான நாட்டார் நம்பிக்கை. ஆண்மை, பெண்மை சார்ந்த சிக்கலான மானுட உறவுகள் மோதும் சமர்க்களங்கள் அவை. அவற்றின் குறியீட்டு அழகியலை இரசிக்கலாமே தவிர,  பாலினச்சமத்துவம் முதலான நவீனக்கொள்கைகளை அங்கு திணிப்பது அர்த்தமற்றது. அப்படி, பாலினச்சமத்துவம் தான் நோக்கம் என்றால் அதேபோல் பெண்கள் 'ஒடுக்கப்படும்'  ஆரியங்காவு மீதோ, ஆண்கள் 'ஒடுக்கப்படும்' ஆற்றுக்கால் மீதோ ஏன் இத்தகைய நீதிமன்ற வழக்குத்தாக்கல்கள் செய்யப்படவில்லை? சிக்கல், சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது என்பது தான். அந்தக் கொண்டாட்ட மனநிலையை, சிலர் பெண் என்ற ஒரே காரணத்தால் ஏன் அனுபவிக்கக்கூடாது என்று கேட்கும் அறியாமை.

காலவோட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இயல்பாக மாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ஐயப்பனை மணமுடிக்கக் காத்திருக்கும் மஞ்சள்மாதாவின் வேண்டுகோள் ஐயனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தொன்மத்தை ஏற்றி அதை நிகழ்த்திக்காட்டவும் முடியும். அப்படி இயல்பாக நிகழும் போதே அதை சமூகக்கூட்டுமனம் ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இப்படி சட்டம் போட்டு  நம்பிக்கையைச் சீண்டுவதை, தன் அடிவயிற்றில் கைவைப்பதாகவே அடியவன் ஒருவன் உணர்வான். அதன் விளைவுகள் விரும்பக்கூடியவை அல்ல. ஐயனுக்கு நீதிமன்று தீர்ப்பளித்து விட்டது. மாளிகைபுரத்தம்மைக்கு அவன் தீர்ப்பு என்ன?

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மை 



மேலும் வாசிக்க »

இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

0 comments
இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன? இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப் பதிவுசெய்ய விழைகிறேன்.

திருக்கோணமலைக் கடலில் பழைய கோணேச்சரத்தின்  எச்சங்கள் 





1. உலகின் 90 வீதமான இனங்கள், மொழி சார்ந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தேசியம், இனத்துவ அடையாளம் என்பன பொதுவாக மொழி சார்ந்தவையே.

2. இன அடையாளம் பேசும் மொழி சார்ந்தது என்பதால், மதம், சாதி, பிரதேசம் சார்ந்த ஏனைய அடையாளங்களை நிராகரிக்கும் முற்போக்குவாதிகள் கூட, மொழிசார்ந்த இனத்துவ அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும் போது, அதுவும் அழிந்து போகும், அதுவரை வேறு வழியில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

3. ஆனால் இன அடையாளம் எப்போதும் மொழி சார்ந்து இருப்பதில்லை. முன்பும் சுட்டிக்காட்டிய பல உதாரணங்கள் இருக்கின்றன. மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.
அ) ஒரேமொழியைப் பேசியபடி ருவாண்டாப் படுகொலையை மாறிமாறி நிகழ்த்திய டுட்சி, ஹூடு இனங்கள், 
ஆ) ஒரேமொழியின் வட்டார வழக்குகளைப் பேசியபடி யூகோஸ்லாவியாவின் உடைவுக்கு வழிவகுத்த சேர்பிய, பொஸ்னிய, குரோசிய இனங்கள்.
இ) பேஜா, அரபு, திக்கரே எனும் 3 மொழிகளைப் பேசினாலும் தம்மை ஒரே இனமாகக் காட்டிக்கொண்ட சூடானின் பேஜா இனம்.

4. இந்த இடங்களில், மொழி, இன அடையாளத்தைக் கட்டமைக்கவில்லை என்றால், அந்த அடையாளத்தைக் கட்டமைத்தது எது?
அ) ஹூடுக்கள் கிறிஸ்தவ மதமாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பெரும்பான்மை உழைப்பாளர் சமூகம். டுட்சிகள், மதமாற்றத்தை எதிர்த்த சிறுபான்மை அரச குடும்பங்கள். (இன்று எல்லோருமே கிறிஸ்தவர்கள் தான்) .
ஆ) சேர்பியர்கள் பழைமைவாதக் கிறிஸ்தவர்களாகவும், குரோசியர்கள் கத்தோலிக்கர்களாகவும், பொஸ்னிக்குகள் இஸ்லாமியராகவும் இருந்தனர். 
இ) வெவ்வேறு மொழி பேசும், பேஜாக்கள் தம்மை ஒன்றிணைக்கும் பாலமாகக் கண்டுகொள்வது, தாம் அனைவரும் பின்பற்றும் இஸ்லாத்தை.

5. ஆக, சில இடங்களில் மொழியை விட வலுவான இனக்கட்டமைப்பு அலகாக மதம் இருந்திருக்கிறது, இருக்கவும் முடியும்.

6. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பான்மை இனமான சிங்களவர், பௌத்தம் சார்ந்தே தம்மை முன்னிறுத்துகின்றனர். இன்னொரு சிறுபான்மை இனமான சோனகரும் இஸ்லாம் சார்ந்தே தம்மை தனி இனமாகக் காட்டிக்கொள்கின்றனர்.

7. பௌத்த, இஸ்லாமிய முனைவாக்கங்கள் தமிழர் நிலங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விளக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இலங்கைத்தமிழர் மொழி சார்ந்தே தம்மைத் தனி இனமாகக் கட்டமைத்தவர்கள்.

8. தமிழரின் பெரும்பான்மைச் சமயம் என்ற இடம் சைவத்துக்கு உண்டெனினும், அதை தமிழ் அடையாளத்தோடு முன்வைப்பதில் எவரும் அத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்றும் தமிழ் முற்போக்குவாதிகளும், இடதுசாரிகளும் அந்தத் தரப்பை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

9. ஆனால், மும்முனைச் சமர்க்களத்தில் இரு சமூகங்கள் இனம், மதம் எனும் இரு ஆயுதங்களுடன் நிற்கும் போது, தமிழர் மட்டும் மதம் என்ற ஆயுதமின்றி எதிர்ப்பதன் வெற்றிடம் பலருக்கும் புரிவதில்லை. அதன் விளைவு இப்போது புரியப்போவதும் இல்லை.

10. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது சைவப்பண்பாடே. விளக்கேற்றுவது, பன்னீர், சந்தனம், குங்குமம் கொடுப்பது, நிறைகுடம் வைப்பதிலிருந்து தாம்பூலம் தரிப்பது வரை, சைவத்தில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளே.

11. இலங்கை இனப்போராட்டத்தில், தமிழர் சார்பில் முன்னின்றவர்களில், தமிழ் பேசும் கிறிஸ்தவருக்குள்ள வகிபாகத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் சிங்களபௌத்தம், சோனக இஸ்லாம், என்பன போல, மூன்றாம் இனத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டியது, தமிழ்ச்சைவம்.

12. இங்கு கிறிஸ்தவத்தை பின்னுக்குத் தள்ளுவதில் இன்னொரு காரணமும் இருக்கின்றது. இலங்கையில் கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பாழடைந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறீர்கள். ஒரேயொரு வழிபாட்டிடத்தின் இடிபாடுகள் எஞ்சியிருக்கிறது. அது ஒரு விகாரை என்றால் அது சிங்களக்கிராமம். ஒரு மசூதியின் சிதைவுகள் தென்பட்டால், அது இஸ்லாமியக்கிராமம். ஒரு கோவிலின் எச்சங்கள் காணப்பட்டால் அது தமிழ்க்கிராமம். அதுவே ஒரு தேவாலயத்தின் இடிபாடுகள் என்றால்? தமிழ்க்கிராமம் என்பதா? சிங்களக்கிராமம் என்பதா?

13. சில சிங்கள கத்தோலிக்கர்களைச் சந்தித்திருக்கிறேன். "ஆனால் நாங்கள் புத்தரை நேசிக்கும் குடும்பம். நண்பர்களோடு சிலவேளைகளில் விகாரைக்கும் போவதுண்டு" என்பார்கள். தமிழ்க்கத்தோலிக்கரது பொதுவான நிலைப்பாடும் அதுவே.

14. இலங்கையின் சைவக் கோவில் திருவிழாக்களில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்வதுண்டு. அங்கு திருநீறு தரிப்பதில்லை. தெய்வங்களை வணங்குவதில்லை. ஆனால் பொட்டுவைத்து பூச்சூடி, வேட்டி கட்டி, மாமிசம் விலக்கி சைவரோடு கைகோர்த்து நிற்பார்கள். சிங்களக் கத்தோலிக்கன் எந்தளவு பௌத்தப் பண்பாட்டை நேசிக்கிறானோ, ஒரு தமிழ்க்கத்தோலிக்கனும் அந்தளவு சைவப்பண்பாட்டை நேசிக்கிறான். (நான் பார்த்தவரை! ஏனைய கிறிஸ்தவர்களுக்கோ வேறு கத்தோலிக்கருக்கோ அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்.)

15. தனிப்பட்ட ரீதியில், அரசியல் என்பது மதச்சார்பின்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம், அது சைவமாகவே இருந்தாலும் கூட. இந்த "மதச்சார்பின்மை" என்பது தமிழக திராவிடக் கட்சிகள் நடத்திக்காட்டிய "மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்" கணக்கான மதச்சார்பின்மை அல்ல. அரசு இயந்திரம் ஒரு மதத்தைச் சார்ந்து இயங்கியபடியே, ஏனைய எல்லாச் சமயங்களுக்கும் சம முன்னுரிமை கொடுக்கும் மத(ப்பக்க)ச்சார்பின்மை.

16. சைவம் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கிருமிகண்ட சோழன், கலிங்க மாகோன் ஆகிய இருவர் தவிர, சைவத்தின் வரலாற்றில் எதிர்மறையாகப் பதிவு செய்யப்பட்ட மன்னர்கள் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் சோழர், பாண்டியரிலிருந்து, இந்தோனேசியாவின் மஜாபாகித் பேரரசு, கம்போடியாவின் கெமர் பேரரசு வரை, சைவம் ஒப்பீட்டளவில் சமத்துவமான அரசாட்சியையே எல்லாச் சமய மக்களுக்கும் கொடுத்திருக்கிறது.

17. ஆக, தமிழரின் இனத்துவ அடையாளத்தில் எவ்வித தயக்கமுமின்றி சைவத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த சைவம் ஒரு மறுபரிசீலனைக்குள்ளான, தனது பிற்போக்கான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்காத, அதிகாரத்தில் இருப்பவர்களின் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கும் திணிக்காத, இலட்சிய சைவமாக இருக்கவேண்டியது அவசியம்.

18. "சைவத்தை வளர்த்தல்" என்றாலே நம்மவர்கள் "மதமாற்றத்தை ஒழித்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்க்கும் பலர் "பிராமண ஆதிக்கத்தை அதிகரித்தல், இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். சைவத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இங்கு கூக்குரலிடும் பலருக்கு சமயமே தெரியாது. அவ்வளவு ஏன், அடிப்படை "பஞ்சபுராணமே" கூடப் பாடத் தெரியாது.

எதிர்ப்பவர்களுக்கோ ஆதரிப்பவர்களுக்கோ சமயம் ஒழுங்காகத் தெரியாது என்பது முதலாவது பிரச்சினை. இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தமிழ்ச்சைவ அடையாளத்தை சகல சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும் முன்னிறுத்துவது எப்படி என்பது இரண்டாவது பிரச்சினை. சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் சிங்கள கிறிஸ்தவர்கள் எத்தகைய பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் உணர்கிறார்களோ, அதே பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் உணர்வதற்கான சுதந்திர வெளியையும் உத்தரவாதத்தையும் தமிழ்ச்சைவர்கள் ஏற்படுத்திக்கொடுப்பது எப்படி என்பது மூன்றாவது பிரச்சினை.

கல்லில் நார் உரிக்கும் வேலை தான். ஆனால், வாழை, கல் போல் தோற்றமயக்கம் காட்டும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.
மேலும் வாசிக்க »

சின்னக்கலட்டி டெலே - ஓர் ஆணவம் அழிந்த கதை!

2 comments
பழைய இடச்சு இலங்கை வரைபடமொன்றில் கிழக்குக் கரையில் முனைப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்று, Chinnacalatte delle. சொல்லிப்பார்த்தால் சின்னாகலட்டே டெல்லே என்றோ சின்னச்சலட்டே டெல்லே என்றோ ஒலித்தது. இன்னொரு இடச்சு வரைபடத்தில் அதே பெயரில் அமைந்திருந்த இடச்சுக் கோட்டை ஒன்றின் படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

17ஆம் நூற்றாண்டு இடச்சு வரைபடமொன்றில், Chinnecalette delle

Chinnecalette Delle கோட்டை வரைபடம், 1695ஆம் ஆண்டு.

கண்டி அரசு, 1672இல் இக்கோட்டை மீது படையெடுத்திருக்கிறது என்ற செய்தியை இன்னொரு குறிப்பு சொல்லியது. ஆக,  அந்த இடம், ஏதோ ஒருவிதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்தது.  ஆனால் நிச்சயமாக அந்த ஊரின் இன்றைய பெயர் அது இல்லை. அந்தப் பெயரில் எந்தவொரு ஊரும் கிழக்கில் இன்று அழைக்கப்படவில்லை. அந்த இடம் எது?  தேடுதல் வேட்டை தொடங்கியது.


மேலே நாம் பார்க்கும் 17ஆம் நூற்றாண்டு வரைபடத்தில், அந்த இடத்துக்கு அருகே கல்முனை, பாண்டிருப்பு ஆகிய  ஊர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே அந்த ஊர் இன்றைய கல்முனைக்கு அத்தனை தூரத்தில் இருந்திருக்கமுடியாது. கிழக்கிலங்கை என்பதால் நிச்சயமாக அது தமிழ்க்கிராமம் தான்.  “கின்னா”, “கலட்டி”, “டெல்லே”, “சின்னா”, “சலட்டே”, “டெல்” இந்தச் சொற்கள், அல்லது இவற்றை ஒத்த தமிழ்ச்சொற்கள் ஏதாவது ஒலிக்கும் ஊர்கள் கல்முனைக்கு அருகில் இருக்கின்றனவா?

கீழைக்கரையிலுள்ள கல்முனை நகரமும் அதன் அயல் ஊர்களும்
(கூகிள் வரைபடம்)

Chinnacalatte delle...... “சின்ன” என்ற சொல் கவனத்தை ஈர்க்கிறதே? “சின்ன” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? ஊகூம். அப்படி ஒன்றும் அந்தப்பக்கம் இல்லை.  சரி. மாறி யோசித்துப் பார்ப்போம் ‘சின்ன’ இருந்தால் பக்கத்தில் ‘பெரிசு’ ஏதாவது இருக்கவேண்டும். “பெரிய” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? "பெரிய நீலாவணை" இருக்கிறது. பக்கத்தில் "துறைநீலாவணை"யும் இருக்கிறது. ஒருவேளை துறைநீலாவணையாக இருக்குமோ? 

சின்னநீலாவணை.... Chinnacalatte.... ம்ம்… ஒலிப்பு ஒத்துவரவில்லையே. அது ஒருபக்கம் இருக்கட்டும், வேறேதாவது பெரிசு...?  ஓ! “பெரிய கல்லாறு” இருக்கிறது. பக்கத்தில் “கோட்டைக்கல்லாறு”! சொல்லிப்பார்ப்போம் Cinnacalatte.. சின்னக்கல்லாற்று….! அட, அதேதான்! “delle” என்ற சொல் புரியவில்லை. “தலை” என்றோ “தாழை” என்றோ சொல்லிப்பார்த்தால் ஒலிப்பு சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துப்போகிறது.  Cinnacalatte delle… சின்னக்கல்லாற்று தலை/தாழை.

கோட்டைக்கல்லாறு, கூகிள் வரைபடம்.

கண்டி அரசிடமிருந்து கீழைக்கரையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் புலியன்தீவிலிருந்து (இன்றைய மட்டுநகர்) காத்தான்குடி வரையான சிறு நிலப்பரப்பை மாத்திரமே தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களின் கோட்டையை 1638இல் கைப்பற்றிய ஒல்லாந்தர் ஏனைய மட்டக்களப்பின் பகுதிகளுக்கும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். மட்டக்களப்புத் தேசத்தின் மத்தியில்  போரைதீவுப்பற்று, எருவிற்பற்று, கரைவாகுப்பற்று ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் மத்தியில், மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரங்களை ஒட்டி இருந்த சிறுதீவான  சின்னக்கல்லாறு முக்கியமான புவியியல் அமைவைப் பெற்றிருந்தது. அங்கு ஒல்லாந்தர்கள் கோட்டை ஒன்று கட்டிக்கொண்டார்கள். வேறு காரணங்களால் 1680களில் மட்டக்களப்பின் தலைநகரை புளியந்தீவிலிருந்து காரைதீவுக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, சின்னக்கல்லாற்றுத் தலையிலிருந்த ஒல்லாந்து வீரர்களை காரைதீவுக்கு வரவழைப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. (அது செயலாக்கம் பெறவில்லை) 

ஒல்லாந்தரின் கோட்டை அமைந்திருந்த இந்த சின்னக்கல்லாறு பின்னாளில் கோட்டைக்கல்லாறு ஆனது. இன்று அங்கு கோட்டை எதுவும் இல்லை. எனினும் கோட்டையொன்று இருந்ததன் அடையாளமாக "கோட்டைவாசல் வீதி" என்ற பெயர் இன்றும் அங்கு வழக்கத்தில் உள்ளது.
கோட்டைக்கல்லாற்றில் இன்றும் உள்ள கோட்டைவாசல் வீதி.

இதையெல்லாம் நுணுகி ஆராய்ந்தபின், எனக்கோ பெருமை பிடிபடவில்லை. முக்கியமான வரலாற்றுத் துருப்பைக் கண்டுபிடித்த பெருமிதம். வரலாற்றில் மறைந்த ஒரு ஊரைத் தோண்டிக் கண்டறிந்த பேரானந்தம். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு ஓடவேண்டும் போல் இருந்தது. எல்லாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும் வரையில் தான்.


பேர்குசனின் நூலின் 1998 இரண்டாம் பதிப்பின் அட்டைப்படம். 

The Earliest Dutch Visits to Ceylon” என்பது, 1927-1930 காலப்பகுதியில் பிரசுரமான நூல். எழுதியவர்  டொனால்ட் வில்லியம் பேர்குசன்.  ஸ்கொட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ‘பேர்குசன்’ வம்சாவளியில் 1853இல் பிறந்த ஆய்வாளர். தமிழ், சிங்களம் உட்பட பத்து மொழிகளில் வல்லுநராக இருந்த அவர் இலங்கை வரலாற்றில் பல ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டார். 1910இல் அவர் இறந்தபின்னரும் அவரது சேகரங்கள் தனி நூல்களாக வெளியாகின. அப்படி அவர் மறைந்தபின்னர், அவரால் மொழிபெயர்க்கப்பட்ட இடச்சு ஆவணங்களின் தொகுப்பாக வெளியான நூல் தான் இந்த "The Earliest Dutch Visits to Ceylon." அந்த நூலில் "Chinnacalatte" என்ற சொல் இடம்பெறும் ஓரிடத்தில் அடிக்குறிப்பாக இப்படிச் சொல்கிறார் பேர்குசன்.

“வான்கூலன் என்பவரது வரைபடத்தில் Chinnacalatte எனும் சிறுதீவும் அதன் அருகே Periacalette எனும் இடமும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே இவை இரண்டும் சந்தேகமின்றி இன்றைய கோட்டைக்கல்லாறும் பெரியகல்லாறும் தான்.”

இன்று ஹாயாக கணினி முன் அமர்ந்துகொண்டு இலவச மின்னூல்களை, இலவச வரைபடங்களைச் சாதாரணமாகத் துருவிக்கொண்டு நான் கண்டறிந்த “Chinnacalatte =  கோட்டைக்கல்லாறு” என்ற வரலாற்றுச் செய்தியை, குறைந்தது நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் கப்பலில் நாயாய் பேயாய் அலைந்தபடி, வேற்றுமொழி ஆவணங்களை மொழிபெயர்த்து, வரைபடங்களை ஒப்பிட்டுக் கண்டுபிடித்து, எவ்வித அலட்டலும் இல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் ஒரு மனிதர்.
டொனால்ட் வில்லியம் பேர்குசன்
(நன்றி: archeology.lk)

இந்தத் தலைக்கனம் தான் எத்தனை பெரியது! நூறுநூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரின் உழைப்பை உணராமல், அவர்கள் சிந்திய வியர்வையை அறியாமல், எத்தனை இலகுவாக, நான் செய்தேன் நான் செய்தேன் என்று கூவியபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர முடிகின்றது! காலமெனும் முடிவிலிக்கு முன், கண்முன்னே பிறந்திறந்து மடியும் எறும்பு போலத்தானே நாம் என்பதை  எத்தனை எளிதாக மறந்துவிடுகிறோம்? 

டொனால்ட் வில்லியம் பேர்குசன்…..
வெட்கித் தலைகுனிகிறேன் ஐயா.
நூறாண்டுகள் பிந்தி வந்தவன்,
அந்த நூறாண்டுகள் பிந்திய என் சிற்றறிவை மன்னிக்குக. 
எங்கிருந்தோ வந்து, எவன் நாட்டுக்காகவோ உதிரத்தை அர்ப்பணித்த
உம் உழைப்பை, உயர்வை, உன்னதத்தைப் பணிகிறேன். 
“இத்தர்மம் இரட்சித்தான் அடி என் முடி மேலினே.”
மேலும் வாசிக்க »

சிவனொளிபாதப் புகழ் அறிவீரே!

0 comments

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான சிவனொளிபாதத்தில் இதுநாள் வரை இருந்த “சிவனொளிபாதம்” என்ற பெயரை நீக்கி, தமிழிலும் “புத்த ஸ்ரீபாதஸ்தானம்” என்று மாற்றப்பட்டுள்ள ஒரு பெயர்ப்பலகை தற்போது பரவலாகப் பகிரப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது.

சிவனொளிபாத மலை (படம்: http://refreshingsrilanka.blogspot.com)


உண்மையில், இந்தப்பெயர்ப்பலகை கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளைச் சந்தித்து வரும் ஒன்று. இப்பலகையில் முன்பு , சிங்களத்தில் “ஸ்ரீபாதய” என்றும், தமிழில் “சிவனொளிபாதமலை” என்றும், ஆங்கிலத்தில் “அடம்ஸ்பீக்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
2012இல் எடுக்கப்பட்ட  புகைப்படம். (நன்றி: https://gate20.com)

ஆனால், 2016ஆமாண்டு, இதில் இருந்த “அடம்ஸ்பீக்” எனும் ஆங்கிலவரிகள் விஷமிகளால் அழிக்கப்பட்டிருந்தன.  சிவனொளிபாதச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் சுற்றுலாவிடுதிகள் அமைக்கப்பட இருப்பதாக பரவிய செய்தியையும், அதை மறுத்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையையும் அடுத்தே இந்த விஷமச்செயல் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.  
2016 உருச்சிதைக்கப்பட்ட பெயர்ப்பலகை
நன்றி:dailynews.lk

அடுத்த ஆண்டே மீண்டும் இப்பலகை சரிசெய்யப்பட்டுவிட்டது. எனினும் இப்போது “அடம்ஸ்பீக்” இல்லாமல், “ஸ்ரீபாத” எனும் சொல்லே  ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.
2017 புகைப்படம். நன்றி: https://notesofanortherner.com

தற்போது, தமிழ் வரிகளும் மாற்றப்பட்டு “கௌதம புத்தபகவானின் ஸ்ரீபாதஸ்தானம்” எனும் வரிகள் இடம்பெற்றுள்ள பெயர்ப்பலகையொன்றின் படம் சமூகவலைத்தளங்களில் உலவுகின்றது.  இதன் உண்மைத்தன்மை என்ன என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.  இந்தப்பலகை கருநிறமாக இருக்கின்றது. உபயம் எழுதப்பட்டுள்ள சிங்களப்பெயர்களோ படத்தின் பின்னணியோ, பழைய மஞ்சள் பலகை அமைந்திருந்த அதே இடம் தானா என்று உறுதியாகச் சொல்வதில் தயக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், புகைப்படத்தை பகிர்ந்தவர்களுக்கு பொய்யான தகவலைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெயர் மாற்றம் உண்மை என்றே கொள்ளவேண்டி இருக்கிறது.  அப்படியே, சர்ச்சைக்குரிய குறித்த மஞ்சள் பலகையின் இடத்தில் இல்லை என்றாலும், எங்கோ ஓரிடத்தில் சிவனொளிபாதத்தின் பெயர் மாற்றப்பட்ட பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் உண்மை.

 

உலகில் அதிக மொழிகளால் அதிக சமயங்களால் போற்றப்பட்ட ஒரே தலம், சிவனொளிபாதம்.  இங்கு தமிழரின் – தமிழ்ச்சைவரின் வகிபாகம் என்ன? அதைப் பார்ப்பதற்கு முன், சிவனொளிபாதம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை காலவரிசைப்படி பார்ப்பது நலம் தரக்கூடும்.

இலங்கைச் சிங்கள வரலாற்று நூல்களான தீபவம்சத்திலும் (பொ.பி 4ஆம் நூற்.)  மகாவம்சத்திலும்  (பொ.பி  6ஆம் நூற்.)  புத்தபிரான் தன் திருவடிகளை  பதித்த இடமாக “சுமணகூட பர்வதம்” சொல்லப்படுகின்றது. சீனப்பயணியான பாகியன் 411-12ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருக்கும் புத்தரின் பாதச்சுவடு உள்ள இரண்டு மலைகளைப் பற்றி விவரிக்கிறார். ஆனால், சிவனொளிபாதம் தொடர்பான விரிவான செய்திகள் யாவும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவை.  11ஆம் நூற்றாண்டிலே முதலாம் விஜயபாகு மன்னன் (1065-1119), சமந்தகூட மலையின் ஊழியத்துக்காக கிளிமலை எனும் கிராமத்தை ஒதுக்கியது தொடர்பான கல்வெட்டுச் சான்று அவற்றில் முதன்மையானது. 
சிவனொளிபாதம், மார்க்கோ போலோவின் நூலிலிருந்து
இலங்கைக்கு 1298இல் வந்த இத்தாலிய வணிகரான மார்க்கோபோலோ, அம்மலைக்குத் தான் சென்றதை பதிவு செய்திருக்கிறார். அது ஆதமின் கல்லறை என்றும் சாக்கியமுனியின் கல்லறை என்றும் ஒரேநேரத்தில் நம்பப்பட்டதை அவர் குறிப்பிடுகிறார்.  1344இல் இலங்கைக்கு வந்த அரேபியப் பயணி இபின் பதூதா இம்மலைக்குத் தான் சென்றதையும் ஏறுவதற்குக் கடினமான இடங்களில் இரும்புச்சங்கிலிகள் அமைக்கப்பட்டுள்ளதையும்  விவரிக்கிறார். அவருக்கு ஐந்தாண்டுகள் கழித்து 1349இல் இத்தாலியப் பயணியான ஜோன் மெரிக்னோலி இலங்கைத்தீவில் இருந்த பெரியதோர் மலையைக் குறிப்பிடுகிறார். அம்மலைக்குத் தன்னுடன்  ஸ்பெயினிலிருந்து வந்த இன்னொரு யாத்திரிகரைப் பற்றி மெரிக்னோலி விவரிப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.

1411இல் காலியில் தமிழ், பாரசீகம், சீனம் ஆகிய மும்மொழிகளில் கல்வெட்டொன்றைப் பதித்த சீனப்பெருவீரன் செங்ஹே, தமிழில் தேனவரை நாயனாரையும், சீனத்தில் இந்த சீலன் மலையின் புத்தரையும் புகழ்ந்து காணிக்கைகள் அளித்திருக்கிறார்.  1421இல் இலங்கைக்கு வந்த மா குவான் என்னும் இன்னொரு சீனப்பயணி  உயர்ந்த மலையுச்சியில் அமைந்திருந்த பாரிய பாதத்தடக்குழியில் நீர் தேங்கி நின்றதையும் அதை யாத்திரிகர்கள் பக்தியுடன் தலைமீது தெளித்துக் கொண்டதையும் அவதானித்திருக்கிறார்.   

1571இல் ஜெரோனிமோ ஒசோரியோ எனும் போர்த்துக்கேயர் தானெழுதிய நூலொன்றில், இந்த “மலைக்கருகே உள்ள சிறுகோவிலுக்கு மக்கள் செல்கின்றனர். அங்கு உலகின் முதல் தந்தையும் தாயும் (ஆதமும் ஏவாளும்) அடக்கம் செய்யப்பட்டுள்ளனராம்” என்ற செய்தியை கூறுகிறார். அஷ்ரப் எனும் 15ஆம் நூற்றாண்டு பாரசீகக் கவிஞரின் குறிப்புகளிலும் மலையுச்சியில் உள்ள ஆதமின் கல்லறை பற்றிய வரிகள்  வருகின்றது.  1600களின் இறுதியில் இங்கு வந்த ஜேர்மானியப் பயணி ஒருவர், ஆதம் மற்றும் அவரின் மைந்தரின் கல்லறைகள் வழிபாட்டில் இருப்பதைக் கூறுகிறார்.  1681இல் எழுதப்பட்ட ரொபர்ட் நொக்சின் புகழ்பெற்ற நூலில், புத்தாண்டு காலத்தில் இலங்கையர் அம்மலைக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்ற குறிப்புக் காணப்படுகிறது.  

சிவனொளிபாத மலையுச்சி, 1888 ஆமாண்டு ஓவியம்.

இப்படி சிவனொளிபாதமலையைப் பற்றிய வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் நமக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்தவாறே இருக்கின்றன. இவை இலங்கைத்தீவின் மத்தியிலிருந்த சிவனொளிபாதமலை, எல்லா உலக மதங்களிலும் பெற்றிருந்த மதிப்பையும் மரியாதையையும் எடுத்துக் காட்டுவனவாகவே உள்ளன. சில இடங்களில் இம்மலையின் “சமனல”, “சமந்தகூட” முதலான பெயர்களைக் காணமுடிகின்றது.  எனினும், பெரும்பாலான குறிப்புகளில் அம்மலையின் பெயர் என்ன என்ற தெளிவான விவரங்கள் எதுவும் இல்லை. சில இடங்களில் “ஆதாமின் கல்லறை உள்ள மலை” என்ற அடையாளப்படுத்தலையும் காணமுடிகின்றது.  வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஆதாமின் கல்லறை என்று சொல்லத்தக்க எதுவும் இன்று சிவனொளிபாதமலையில் இல்லை.   

இத்தனையும் சரி. ஆதம் தொடர்பாகவும் புத்தர் தொடர்பாகவும் இத்தனை குறிப்புகள் இருக்கும் போது,  சிவனொளிபாதத்தின் மீது சைவத்தின் உரிமைகோரல் சரியா? சைவம் தொடர்பாக சிவனொளிபாதத்துக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை பற்றி எங்கேனும் குறிப்புகள் கிடைத்திருக்கின்றனவா?

நாம் சைவம் என்று மாத்திரமன்றி,  சிவனொளிபாதம் தொடர்பாகக் கிடைக்கும் எல்லாத் தமிழ்ச்சான்றுகளையும் தொகுத்துப் பார்ப்போம். தமிழின் மிக முக்கியமான ஒரு சான்று, சிங்கள வரலாற்று நூல்களுக்கும், பாகியனின் குறிப்புகளுக்கும் சமகாலத்தையது. அது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை! தமிழ்கூறு நல்லுலகில்  சிவனொளிபாதம் புகழ்பெற்றிருந்ததற்கும், அது பௌத்தம் சார்ந்து சமந்தம், சமனொளிமலை ஆகிய பெயர்களில் போற்றப்பட்டது என்பதற்கும்  பொ.பி 3 – 5 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட நூலான மணிமேகலை சான்று கூறுகின்றது.

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து. 
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய 
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் 
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் 
தொழுது வலம்கொண்டு வந்தேன் 
- பாத்திரம் பெற்ற காதை  (மணி. 11:30) 
இதனருகே  இரத்தினத்தீவில் ஓங்கி உயர்ந்த சமந்த மலையின் உச்சியில் உள்ள, பிறவிக்கடலைக் கடக்க உதவும் படகுகளான அறத்தேவனின் திருவடிகளை தொழுது வலம் வந்தேன். 

…………. ஆங்கு இருந்த எல்லையுள் 
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் 
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் 
தரும சாரணர் தங்கிய குணத்தோர் 
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 
-கச்சிமாநகர் புக்க காதை (மணி.28:110)

“இலங்கைத்தீவில் சமனொளி எனும் மலையை வலம் வந்து மீள்கின்ற தரும சாரணர்கள், முகில்கள் மீது இயங்கி வான்வழி வந்து இறங்குவர்” 

தமிழ்ச்சான்றுகள் மணிமேகலையோடு முடியவில்லை.

கருதிடின் வலவை மாவலிகங்கை கம்பளை கல்லணை யென்னும்
தருசமனொளி சூழ் நதிகணான்கிடமாஞ் சாதி நான் கந்தணன் வெள்ளை
பரிவுறு  மரசன் சிவப்புவாழ் வணிகன் பச்சைசூத் திரன்கறுப் பவைதா
மருவிய பெயர்கோ மளங்குரு விந்தம் பதுமரா கம்பணா மணியே  

இரத்தினங்களில் அந்தணன் வெண்ணிற வைடூரியம், அரசன் செந்நிற மாணிக்கம், வணிகன் பச்சைநிற புஷ்பராகம்,  சூத்திரன் கருநிற நாகமணி. இவை நான்கும் சமனொளிமலையின் நாற்புறமும் பாய்கின்ற வலவை (வளவை கங்கை), (மகாவலி) கங்கை,  கல்லணை (களனி கங்கை), கம்பளை  (களு கங்கை)  ஆகிய நான்கு நதிகளிலும் விளைகின்றன.   
- நம்பி திருவிளையாடல் புராணம் (25:12) 


நாள மைந்தபூங் கருங்குழற் பாகர்தா ணண்ணி
மீள வந்துயர் சமனையை வலங்கொண்டு மேவி
வாளை சென்றுகண் மாவலி கங்கைநீர் வந்து
காள கண்டர்தங் கிரியடி விளக்குதல் கண்டு

கூந்தலில் பூச்சூடிய உமையைப் பாகம் கொண்டவரின் பாதங்களிலிருந்து தோன்றி, சமனை மலையை வலம் வந்தபடி, வாளை மீன்கள் விளையாடப் பாயும் மாவலி கங்கையானது, கோணேசருடைய மலையின் அடிவாரத்தைப் பணிகிறது.
- திருக்கரைசைப் புராணம் (2:31)

தென்கயிலைக்கு அணித்தாக  மச்சேந்தியமலை, கந்தமலை, சிவனொளிபாதம் சமனாசலம்,….. முதலான சகல மலைகளும் …….இருக்கின்றன. சிங்களதேசத்துக்கொப்பான தேசம் வேறெங்கும் இல்லை. 
- தட்சிணகைலாச மான்மியம்.

சங்கரன் “எமக்குப் பிரியமான கங்கைகாள்! உங்களுக்கு நல்லஸ்தலம் சொல்கின்றோம். நமது சிவனொளிபாதமலை நமது வடிவமானது. நமக்குப் பிரியமானது. அந்த இடத்தில் நமது பாதநடுவிலும்… நீங்கள் மகிழ்வோடிருங்கள்” என்றருளிச்செய்தார்…. மகாபலிகங்கை, மாணிக்ககங்கை, காவேரிகங்கை ஆகிய நதிகள் மூன்றும் சிவனொளிபாதமலையில் சிவபாதமத்தியில் சுபநாளில், சுபலக்கினத்தில் சதாகாலமும் பெருகிக்கொண்டிருக்கும்.”
- தட்சிணகைலாச மான்மியம் 

இந்தச் சான்றுகளில் நம்பி திருவிளையாடல் புராணம் பொ.பி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருக்கரைசைப்புராணமும் தட்சிண கைலாச மான்மியமும் இலங்கையில் தோன்றிய நூல்கள். அவற்றின் திருத்தமான காலங்கள் இதுவரை அறியக்கூடவில்லை. அவை திருக்கோணமலையை மிகைபடப் புகழ்வதால், அவை கோணேச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட காலத்துக்கு (பொ.பி 1622) முன்பின்னாகவே இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே அவை இரண்டும் குறைந்தது 17ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை என்று தீர்மானிப்பது பொருத்தமானது. 

மணிமேகலையின் குறிப்பிலிருந்து இலங்கையிலிருந்த சமந்தகூடம் தமிழகத்தார் மத்தியில் பெற்றிருந்த சிறப்பை அறியமுடியும்.   ஈழத்தமிழ் இலக்கியங்கL தரும் தகவல்களிலிருந்து அது சைவம் சார்ந்தும் புகழ் பெற்றதையும், சிவனொளிபாத மலையில் இருப்பது சிவனது திருவடிகள் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்தமையையும் காணக்கூடியதாக இருக்கிறது. மணிமேகலை, நம்பி திருவிளையாடல் புராணம் என்பவற்றில் சமந்தகூடம், சமனையங்கிரி என்ற பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளதால், அதுவே இம்மலையின் பழைய உள்ளூர்ப் பெயர் என்பதும் தெளிவாகின்றது. சிவனொளிபாதம் என்ற பெயரை, தட்சிணகைலாச மான்மியத்திலேயே முதன்முதலாகக் காணமுடிகின்றது.  அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. அப்பெயர் குறைந்தது முந்நூறாண்டுகள் பழைமையானதே என்பது அதிலிருந்து நாம் எடுக்கும் முடிவு.

பெயர்ச்சான்று, இலக்கியச்சான்று என்பவற்றுக்கு மேலதிகமாக, சைவம் சார்ந்த நேரடி வரலாற்றுச் சான்றுகளும் சிவனொளிபாதமலையில் கிடைத்துள்ளன. அவற்றில் தீர்க்கமான சான்று, 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை, சிவனொளிபாதமலையின் உச்சியில் வழிபாடுகளை மேற்கொள்ளும் அதிகாரம், சிங்களத்தில் “ஆண்டியா” (ஆண்டி?) என்று அறியப்பட்ட சைவ சன்னியாசிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது என்பதே. சைவ சமயத்தவனான முதலாம் இராஜசிங்கன் (1581 - 1593) காலத்துக்குப் பிறகு, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1734 - 1782) காலத்திலேயே பௌத்த பிக்குகள் சிவனொளிபாதமலைக்கு மீண்டும் வந்தார்கள் என்ற வரலாற்றுக்குறிப்பும் இங்கு முக்கியமானது.  

சிவனொளிபாதம் தொடர்பான ஐரோப்பியக் குறிப்புகளில் மிக இளையது, 1860இல் சேர். ஜேம்ஸ் எமர்சன் டெனண்ட் எனும் ஆங்கில அதிகாரியின் குறிப்பு. அதன்படி “தொன்றுதொட்டே பழங்குடிகளால் இப்பாதம் வழிபடப்பட்டுள்ளது. இன்று பிராமணர்கள் இது சிவனுடையது என்றும், பௌத்தர்கள் புத்தருடையது என்றும், முகமதியர்கள் ஆதமுடையது என்றும், யூத – கிறிஸ்தவ ஞானக்கொள்கையர் ‘லியூ’ உடையது என்றும் நம்புகிறார்கள். அது புனித தோமா உடையதா அல்லது எதியோப்பிய கிறிஸ்தவ திருநங்கையுடையதா என்பதில் போர்த்துக்கேயரிடையே சர்ச்சை நீடிக்கிறது”  

ஆக,  சிவனொளிபாதம்,  பௌத்தர், இஸ்லாமியர், சைவர், கிறிஸ்தவர், ஆகிய நான்கு மதத்தினர்க்கும் வெவ்வேறு காரணங்களால் வழிபாட்டுக்குரியதாக விளங்கியிருந்திருக்கிறது.  பழைய சான்றுகளான பாகியனின் குறிப்புகள், சிங்கள வரலாற்று நூல்கள், மணிமேகலை மூன்றும் பௌத்தச் சார்புடையவை. அவற்றில் எங்கும் சைவ அல்லது கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகள் சொல்லப்படவில்லை -  சொல்லப்படவேண்டிய அவசியமும் இல்லை. மார்க்கோ போலோவுக்கு முந்திய வேறு மேற்குலகக் குறிப்புகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதால், ஆதம் தொடர்பான நம்பிக்கை எப்போது தோன்றியது என்றும் உறுதிபடக் கூறமுடியவில்லை. 

திருவிளையாடல் புராணத்தில் வரும் குறிப்பு, சிவனொளிபாதம் சைவருக்கு -  சைவத்தமிழருக்கு நன்கு அறியப்பட்ட இடம் என்பதைச் சொல்கின்றது. சிவனது அடியும் முடியும் எவர் கண்ணுக்கும் புலப்படாதவை என்பது மரபார்ந்த சைவத்தின் நம்பிக்கை. எனவே,  சிவனது திருவடிகள் இம்மலையில் உள்ளன என்ற சைவ பாமர மக்களின் நம்பிக்கை விடயத்தில், சைவ இலக்கியங்கள் மௌனம் சாதித்திருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.  

வட இந்தியாவின் மகாதேவர் (சிவன்) ஆலயங்கள் பல, முகலாயருக்கும் பிரித்தானியருக்கும் ஆதாமின் வழிபாட்டிடம் என்று அறிமுகப்படுத்தப்பட்டமையையும் மலாய மரபுரைகள் சிவனை ஆதமின் மகனாகச் சொல்வதையும், ஆதமின் மகன்களது 'கல்லறைகள்' பற்றி  ஜேர்மானியப் பயணி ஒருவர் சொல்வதையும் இந்த இடத்தில் நாம் ஒப்பிடலாம்.  ஒருவேளை பழைமையான சான்றுகளைக் காட்டி மதவழியில் பௌத்தம் சைவத்தின் உரிமைகோரலை நிராகரித்தாலும், இனவழியில் தமிழர் சமனையங்கிரிக்கு என்றும் உரிமையானவர்களே. அதற்கான தார்மீகப் பாரம்பரியத்தை, தமிழருக்கு  மணிமேகலையே தன் காலத்திலிருந்து கொடுக்கின்றது.

எது எப்படியோ, மொழிசார்ந்தும், இனம் சார்ந்தும், மத வழிபாட்டுத்தலங்கள் மீதான உரிமைகோரல்கள் விவாதிக்கப்படும்  போதெல்லாம் மிகப்பெரும் சோர்வு வந்து அப்பிக்கொள்கின்றது. ஏனென்றால், இலங்கையைப் பொறுத்தவரை கைநழுவிச் சென்ற எந்தவொரு மதவழிபாட்டுத் தலங்களையும் மீள உரிமைகோருவதால் அவை மீண்டும் உரியவர் வசம் வந்து சேரப்போவதில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பும் இனிக் கிடைக்கப்போவதும் இல்லை. எனவே இழந்தவற்றில் ஆற்றலைச் செலவழிப்பதை விட்டுவிட்டு, இருப்பதையேனும் முடிந்தவரை காப்பாற்ற முயலலாம்.  சமந்தகூடம், கதிர்காமம் என்பவற்றில் கலந்திருக்கும் நம் முன்னோரின் பாதத்தூளிகளை காலமெல்லாம் நினைவுகூர்வோம். கூடவே,  கோணேச்சரத்தையும் முன்னேச்சரத்தையும் மட்டுமாவது இன்றுள்ளவாறே  வருங்காலச் சந்ததியினர்  வசம் ஒப்படைக்க முயல்வோம்.

குறிப்பு:
இக்கட்டுரையில் தட்சிணகைலாச மான்மியம் என்று குறிப்பிடப்படும் நூல் அதேபெயரில் கிடைத்த வடமொழி நூலொன்றை மொழிபெயர்த்து 1928இல் யாழ்ப்பாணம்  வதிரி நாகலிங்கப்பிள்ளையால் “தட்சிணகைலாச புராணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. தட்சிணகைலாய புராணம் என்று ஆய்வுலகில் அறியப்படும் தமிழ்ப்புராணம் வடமொழி மச்சேந்திய புராணத்தின் மொழிபெயர்ப்பாகக்  கொள்ளப்படுவது. காலத்தால் முற்பட்டது.  நாகலிங்கப்பிள்ளையவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட தட்சிணகைலாச புராணமும், தமிழ் தட்சிண கைலாய புராணமும் வேறுவேறு. 
மேலும் வாசிக்க »

வெள்ளாவி - தூமையாடைகளின் துயரம்

3 comments
பரஞ்சோதி, தன் தாய் மாதவியுடன் வசிக்கிறாள். குடும்பச்சூழ்நிலை காரணமாக மாதவி பெரிய இடங்களை கொஞ்சம் ‘அனுசரித்து’ போகவேண்டி நேரிடுகிறது. தாயின் நடத்தை பற்றி  தெரிந்துகொள்ளும் மகள் அடிக்கடி தாயோடு சண்டை பிடிக்கிறாள். பருவ வயதில் மகளை வைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றும் கண்களிடமிருந்தும் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று, தாய்மனம் தவிக்கிறது.  மருமகனான  நாகமணிக்கு  மகளைக் கட்டிவைக்க மாதவி முயல்கிறாள். வயது வித்தியாசத்தால் தயங்குகிறான் நாகமணி. 

திடீரென்று ஏற்படும் மாதவியின் நோய் காரணமாக தாயும் மகளும் சமாதானமாகும் சந்தர்ப்பத்தை காலம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆனால் சில நாட்களிலேயே மாதவி அஞ்சியது நடந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் கர்ப்பமடையும் பரஞ்சோதி, “யாரால் என்று தெரியாது” என்று சொல்லிவிடுகிறாள். அது யாரென்று ஊகித்து அவனை நான்கு கேள்வி கேட்கச் செல்லும் மாதவி, அவளே எதிர்பாராத கேள்விகளால் திக்குமுக்காடுகிறாள். அன்றிரவே துக்கம் தாளாமல் இறந்தும் விடுகிறாள்.  

அதன் பின் நாகமணி என்ன செய்தான், பரஞ்சோதியின் நிலைமை என்ன ஆனது, தன் குழந்தையின் தகப்பன் யாரென்று  பரஞ்சோதிக்குத் தெரிந்ததா, என்ற கேள்விகளுடன் சுவாரசியமாக நகரும் கதை, எதிர்பாராத திருப்பத்துடன் முடிந்து விடுகிறது.


விமல் குழந்தைவேலின் “வெள்ளாவி” நாவலின் சுருக்கம் இது. எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற உண்மைச்சம்பவத்தின் தழுவலாக எழுதப்பட்ட இக்கதை, எழுதப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்திருக்கிறது. 


“வெள்ளாவி”யின் கதைக்களமான அக்கரைப்பற்று கோளாவில் கிராமம், இக்கட்டுரையாளனின் பிறந்தகம் தம்பிலுவில்லிலிருந்து வடக்கே பத்து கி.மீ தொலைவில் அமைந்தது. பேச்சுவழக்கிலோ நடைமுறைகளிலோ இரு ஊர்களுக்கும் அத்தனை பெரிய வித்தியாசமும் இல்லை. பாத்திரங்களை மிக நெருங்கி உணர்ந்துகொள்ள வேறென்ன வேண்டும்? 

பெயர் சொல்வது போலவே, நாவல் சலவைத்தொழிலாளர் சமூகத்தையே பின்னணியாகக் கொண்டிருக்கிறது. அந்த சமூகம் சந்திக்கின்ற சவால்கள், அயலில் வாழும் உயர் சாதிகளின் மேலாதிக்கம். அந்தப் போராட்டத்தின் ஊடே கசியும் ஈரம். பிரதிபலன் எதிர்பாராத அன்பு, உள்நாட்டு யுத்தம் என்று பல களங்களைத் தொட்டு நகர்கிறது வெள்ளாவி. 

முதன்மைப் பாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால், பல இடங்களில் ஆதிக்க சாதியினரின் மேட்டிமைத்தனம் கதைப்போக்கிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வெள்ள நிவாரணத்தால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட ‘வண்ணார ஆக்களை’ விடுத்து, ஆதிக்க சாதியினர் நிவாரணங்களை பெற்றுக்கொள்வது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, திருவெம்பாவைக் காலத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடும் கோஷ்டி எங்கள் ஊருக்குள் வரவேண்டும் என்று சதாசிவம் கடிதம் எழுதுவது, அதை ஆதிக்க சாதியினர் அவமானமாக எடுத்துக்கொள்வது, குடிவண்ணானுக்கு மரியாதை செலுத்தும் சடங்கைக் கண்டு, தம்பி மனைவி கோபித்துக்கொண்டு வெளியேற முயல்வது என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. 

ஆனால் சாதியம் சார்ந்த சமூக முரணியக்கமும் அதே போக்கிலேயே பதிவாகி இருக்கிறது. ஆதிக்க சாதியின் ஒட்டுமொத்த உருவகமாக வருகின்ற போடியார் பொஞ்சாதி, சாதித்திமிரைக் காட்டும் அதே வேகத்திலேயே மாதவி மீது காட்டும் பரிவு, வரட்சியால் தங்கள் வயல் பாதிக்கப்பட்டபோதும், அவள் மாதவிக்கு  நெல் கொடுத்து உதவும் பாங்கு, வண்ணார் சமூகத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் கண்டு தம்பி மனைவி கோபித்துக்கொண்டு சென்றபோது, அதற்கு ஒரு முதியவர் கொடுக்கும் விளக்கம் என்பனவெல்லாம் உறுத்தாத விதத்தில், அதேவேளை  நெஞ்சைத் தொடும்படி வெகு இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. 

முதல்பாதியில் இருந்த வேகம் மாதவி இறந்தபின் வருகின்ற இரண்டாம் பாதியில் இல்லை. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலத்தை இரண்டாம் பாதி விவரிக்கும் இடங்கள் சில குறிப்பிடத்தக்கவை. 

பரஞ்சோதியின் அருகிலேயே வாழ்ந்த முதிய கதைசொல்லியொன்று சொல்வது போன்ற நடையிலேயே இந்நாவல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் எழுத்து வழக்கும் வருகின்றது. ஊரைவிட்டுப் பிரிந்து வெகுகாலமாகி விட்டது என்பதால், இக்கதையை முழுக்க முழுக்க பேச்சுவழக்கில் எழுதுவதில் தான் எதிர்கொண்ட சவாலை ஆசிரியர் முன்னுரையில் விவரித்திருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. ஆனால், இடையிடையே “எடியேய், கதைச்சிப்போட்டினம், வருவினம்” என்றெல்லாம் வடபகுதிப் பேச்சுவழக்கு வருவது? அல்லது உண்மையிலேயே சில ஆண்டுகளுக்கு முன் கிழக்கிலும் அந்தப் பேச்சுவழக்கு நிலவியதா? எனக்குத் தெரியவில்லை.


நாவல் வாசித்து முடிந்ததும் கண்ணை மூடினால் நாயகியான பரஞ்சோதியை உச்சி முதல் பாதம் வரை அப்படியே காணலாம். அத்தனை யதார்த்தமான விவரிப்புகளோடு வலம் வருகிறாள் அவள். தன் மகன் வீட்டை விட்டு ஓடுவதை ஏன் அவள் அத்தனை எளிதாக எடுக்கிறாள் என்பதை ஆராய்ந்தால் அவளது பாத்திர வார்ப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எல்லோரிடமும் ”தெரியாது”, “தெரியாது” என்றே சொன்னாலும், நாவலின் உச்சக்கட்டத்துக்கு வரும் வரை, தன் குழந்தைக்கு அப்பன் யார் என்பதில் பரஞ்சோதி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், தன்னோடு அந்த இரவில் இருந்தவன் வரதன் தான் என்று அவள் நம்பினாள்.  ஆனால், வரதன் மீது தான் மறைத்து வைத்துள்ள காதல், தன் மீது பரிதாபப்பட்டு தனக்குக் கணவனாக வாழும் நாகமணிக்கெதிரான துரோகம் என்பதை அறிந்திருப்பதால் தான், அந்த உறவின் எச்சமாக அவள் கருதும் மகன் மீது அவளுக்கு அவ்வப்போது ஒவ்வாமை வருகிறது. 

தன் மகன் வரதனுக்குப் பிறக்கவில்லை என்பதை அறிந்த அடுத்தகணமே அவள் தத்தளித்துப்போகிறாள். நாகமணிக்குத் தான் துரோகமிழைக்கவில்லை என்ற மிகப்பெரிய நிம்மதியும் கூடவே, இவனோடா ஓரிரவு இருந்தோம் என்ற அருவருப்பும் அந்தக்கணத்தில் சேர்ந்தே வந்துவிடுகிறது. தனக்கு இனி மகன் இல்லை என்பதை அத்தனை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு அசாதாரண மனநிலையாக அவளில் வெளிப்படுவது அந்த உணர்வு தான்.

நாவலின் இறுதியில், நாகமணியின் சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச்  செல்லும் பரஞ்சோதி, “வாட்டுல நிப்பாட்டினாலும்”  என்று தனக்குள் சொல்லியபடி, முகப்பகுடரையும் கண்ணாடித்துண்டையும் பன்வேக்கில் செருகிக் கொள்வாள். அதுவரை காதில் தோடு கூடப்போடாமல், தோடை முள் சொருகியபடி திரிந்தவள் அவள். தன் மகனுக்கு யார் அப்பன் என்று தெரிந்தபின்னர், தன் மகன் பற்றி இனிக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தபின்னர் அவளில் ஏற்படும் இந்த மாற்றம் தான் “வெள்ளாவி”. வெள்ளாவி போட்டபின்னர் அழுக்குத் துணிகள் புத்தம் புதிதாய் மாறிவிடுகின்றன. பரஞ்சோதியும் மாறிவிட்டாள்.     

துன்பியல் பாத்திரமாக வலம் வரும் பரஞ்சோதியின் தாய் மீது கதைப்போக்கிலேயே வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. அவள் இறக்கும் போது ஏனோ இதயம் கனக்கிறது. ஓரிடத்தில் அவளது வாழ்வை இரண்டே வரிகளில் படம் பிடித்துக் காட்டிவிடுகிறார் ஆசிரியர். “இப்பயாகுதல் தாயாரப் பாப்பமெண்டு நினைச்சி மாதவி எட்டிப்பார்த்தாள். மூலஸ்தானத்துல இருந்த அம்மாள பார்க்கேலாதளவுக்கு  பந்தலுக்குள பொங்கல் மலையாக மறைச்சிருந்திச்சி. மாதவி கடைசி வரைக்கும் கண்ணகியப் பார்க்கயில்லத்தான்.”


வெள்ளாவி போன்ற பிராந்திய நாவல்களின் முக்கியத்துவம் தான் என்ன? கற்பனையோ, உண்மையோ, அவை மண்ணின் மணத்தை ஆவணப்படுத்துகின்றன. ஒரு வாசகனாக, இந்த நாவலின் கதைக்களம், எனக்கு இரண்டு தலைமுறைக்காலம் முந்தியது. எனவே இன்று அடியோடு மறைந்துவிட்ட எத்தனையோ வழக்கங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை பால்யவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்டிருந்த எனக்கு அவற்றை நினைவுகூர்ந்து புன்னகைக்க முடிகின்றது. “இந்தப் புத்தகத்திலிருந்த சில மரபுகள் நம் மண்ணில் இருந்தன” என்று சொல்லி என் அடுத்த சந்ததிக்கு இந்த நாவலைத் தூக்கிக் கொடுக்கமுடியும். உதாரணத்துக்கு ஒருசில:

- பூப்பெய்திய பெண் வீட்டுக்கு முறைமாமன் வீடுகளிலிருந்து சீர்வரிசைகள் செல்லும் “கலியாணம் செஞ்சி போற சடங்கு”.  

- பெண்பிள்ளை பெரியாளாகி ‘இரண்டாம் தண்ணி’ வார்க்கும் போது, குடிவீட்டு வண்ணாருக்குக் கடமை செய்வது.

- குத்திய காது ஒட்டிவிடக்கூடாது என்பதற்காக தோடு இல்லாத ஏழைப்பெண் தோடைமரமுள் பொருத்திக்கொள்வது.

- குடிவண்ணார் தத்தம் வீடுகளுக்கான ஆடைகள் மாறிவிடாதிருப்பதற்காக அடையாளம் வைப்பது,   

- "முதல் கண்டீண்ட மாட்டுல இருந்து கிடைச்ச பாலையும் அதுல இருந்து வாற தயிர் நெய்யையும் குடும்பத்துல உள்ளாக்களத் தவிர வேறாக்களுக்கு குடுத்தா கண்டீண்ட மாட்டுக்கு ஆகாது" என்ற நம்பிக்கை.

இது தவிர, கிளவளங்கட்டிக் கல்லுடன் ஒத்தி விளையாடுவது. அதில் வரும் “றைற்ரோ” . கால் கோட்டில் பட்டு “முள்ளி” ஆவது.  வெள்ளம் வந்தால் ஒரு ஏனத்தால குனிஞ்சி எட்டி அள்ளுமாப் போல கைவிட்டு நீரை அள்ளக்கூடிய கிணறுகள், அன்னாசிப் பிஞ்சி. பப்பாசிப் பிஞ்சி. சூரமீன் பயன்படுத்தி கருக்கலைப்பது, என்று  வேறு சிலவற்றையும் சொல்லலாம்.  

தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை, வரம் வாங்கி வந்தவர்களாக நான் நினைப்பது குமரி மாவட்டத் தமிழர்களை. தினுசு தினுசாகத் தங்கள் வட்டார வழக்கில் எழுதுவோரைப் பெற்ற பாக்கியவான்கள் அவர்கள். அந்த மொழிவழக்கை கஷ்டப்பட்டு உள்வாங்கி நாம் படிப்பதற்கும், ஒரு குமரித்தமிழன் இயல்பாகப் படிப்பதற்கும் எத்தனை வித்தியாசம் இருக்கும் என்று சிந்தித்திருக்கிறேன். சொந்த வட்டார வழக்கிலே ஒரு புதினத்தையாவது வாசிக்கும் ஒரே ஒரு வாய்ப்புக் கூட, கிடைக்காமல் போய்விட்டதே என்று பெருமூச்சு விட்டிருக்கிறேன். வரம் வாங்காவிட்டாலும், தெய்வத்தின் கடைக்கண் பார்வையாவது உனக்கு இருக்கிறது என்பதைச் சொல்லிப் புன்னகைத்தது வெள்ளாவி. இனி கசகறணம் படித்து இறும்பூது எய்தவேண்டும். விமல் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


விமல் குழந்தைவேல், 2004, வெள்ளாவி, உயிர்மை பதிப்பகம்.

மேலும் வாசிக்க »

மரபில் அறிமுகம் வேண்டும் (02)

0 comments
படம்: slguardian.org


இந்தப்படம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அழகான மகரதோரணம்? ஏதாவது சிற்பத்தின் எஞ்சிய பகுதி? அல்லது ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் பகுதி? சரி. இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்போம்.

படம்: freewalker.info



படம்: dhammika.blogpost.com
 இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? நம்பாவிட்டால் போங்கள். இது இலங்கையின் ஒரு பழங்காலக் கழிப்பகம்!


இலங்கையின் அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, முதலான எல்லாப் பண்டைய அரசிருக்கைகளிலுமே கழிவறைத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சில புத்த துறவிகளின் மடங்களுக்கருகிலும் அரண்மனை இடிபாடுகள் அருகிலும் அமைந்திருக்கின்றன. சில இடங்களில் இந்தக் கற்கழிப்பகங்களின் அடியில் கழிவுநீர்க் குழிகளும், அவற்றில் வடிநீரை சுத்திகரித்து நிலத்திற்கு விடும் மண்பானைகளும் கூட கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 
மிகப்பழைய கழிவறைக் கட்டமைப்பு. கீழே கழிவுப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன.
படம்:flickr.com
படம்:lakdasun.com


கால்களை ஊன்றும் தளப்பகுதி, சிறுநீர் - மலம் கழிக்கும் இரு குழிகள் என்பன தவிர, இந்தக் கற்கழிப்பகங்களிலுள்ள அலங்கார வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியவை. (அதுகள ரசிச்சுக்கொண்டே "போயிருக்கக்கூடிய" விஜயபாகுக்களையும் பராக்கிரமபாகுக்களையும் அவர்களது அரசியரையும் கற்பனை பண்ணிப்பார்த்தேன் )

சரி, ஏன் திடீரென்று இந்தக் "கக்கா" ஆராய்ச்சி? ;)

இந்தியர்கள் போல் குந்திக் "கழிக்கும்" கழிவறைகளே நல்லவை; மேலை நாட்டவர் போல் அமர்ந்து கழிக்கும் கழிவறைகள் உடல்நலத்துக்குக் கேடானவை என்று செல்லும் பதிவொன்றை அண்மையில் படிக்க நேர்ந்தது. ஆயிரமாண்டுகளுக்கு முன், மேலைநாட்டவன் - கீழைநாட்டவன் என்ற வேறுபாடின்றி எல்லோருமே "குந்தித்" தானே கழித்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பதிகின்றார்களே என்பதை எண்ணியபோது தான் முன்பு சுற்றுலாவொன்றில் கண்ட இந்த அரச கழிப்பகங்கள் நினைவுக்கு வந்தன.

வெள்ளையர் ஆட்சி நமக்கு நிறையவே தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மிகச்சிறந்தவை அனைத்துமே மேலைநாட்டிலிருந்தே வந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வரவேண்டுமென்றால், நாம் கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்திருக்கவேண்டும் - கழிவறை உட்பட!
மேலும் வாசிக்க »

ஆர்கலியில் ஓர் துளி!

0 comments
பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.”

இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” என்ற பொதுமைப்படுத்தல் சிந்தனை தவறென்பதை உணரும் கணத்தில், பொறுக்கமுடியாமல் அவர்களிடம் நாமோ, நம்மிடம் அவர்களோ இவ்வசனத்தைச் சொல்வதுண்டு.

முகநூல் பதிவுகளிலும், நட்பார்ந்த அரட்டைகளிலும், தனிநபர் நடத்தையிலும் மேற்சொன்ன ஒவ்வொரு நண்பர்களும், இனப்பிரச்சினை சார்பான தம் நிலைப்பாட்டை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தனி ஒருவனின் பழக்கம், ஒரு இனக்குழுமம் சார்ந்த அவர்களது பொதுக்கருத்தை மாற்றியதை (குறைந்தபட்சம் மாற்ற முயன்றதை) தம் வாயாலேயே அவர்கள் ஒப்புக்கொண்டபோது ஒன்றை உணர்ந்தேன். என்னையறியாமலேயே அவர்களுடன் - புன்னகைத்த - பேசிய – உணவு உண்ட - ஒவ்வொரு கணத்திலும், இந்தச் சிறுதீவுக்குள் சுமார் நான்கு மில்லியன் குடித்தொகை கொண்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக நின்றிருக்கிறேன். நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருந்தது.

அடையாளங்களும், அடையாளப்படுத்தல்களும் நம்மை பல்லாயிரம் பேரோடு இணைத்து நமக்குப் பேருருவத்தை அளிக்கின்றன. இதையே நாம் ஒரு வேற்றுலகவாசியை சந்திப்பதாக சிந்தித்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர் என்பதை உலகத்தமிழர் என்று விரித்தால், எண்பது மில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். உலகம் என்று பார்த்தால், ஏழரை பில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். கற்பனை பண்ணவே மூச்சுமுட்டுகிறது!

தனி ஒருவன் என்று பார்த்தால், நாம் இயற்கையில் எந்தளவு பொருளற்றவர்கள்? நம்மை ஒரு பொருட்டாக கருதாமலேயே இயற்கை தொடர்ந்து இயங்கிக்கொண்டு தானே இருக்கிறது! இடையில் நாம் வந்து போகும் இந்த அறுபது எழுபது ஆண்டுகளில் தான் எத்தனை ஆட்டம் போடுகிறோம்!

பிரபஞ்சப் பெருங்கடலில் நான் வெறுமனே ஒரு சிறுதுளி என்பதை எப்போதும் மறவாதிருப்பேனாகட்டும்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner