யாழ் புத்தகத் திருவிழா : நாலு விடயம் சொல்வேன்

0 comments
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அனுசரணையில், இம்முறை யாழ் புத்தகத் திருவிழா ஓகஸ்ற் 27 முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.அதில் கடந்த ஓகஸ்ற் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சில மணித்துளிகளைக் கழிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது கண்ட அவதானிப்புகளிலிருந்து இந்தக் கருத்துக்கள்.

படம் மூலம்: tamil.news.lk


நான்கு குறைகள்:
- காட்சிப்படுத்தல் (பலர் பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமற்ற நூல்கள், ஒதுக்குப்புறமான இடங்களில் முக்கியமான நூல்கள்)
- ஒழுங்கான வகைப்படுத்தலின்மை, குழம்பிக் கிடந்த நூல்கள்.
- சிறுவர் நூல்கள், பாடநூல்களுக்கான முன்னுரிமை (அவை முக்கியம் தான்; அவை மட்டுமே முக்கியம் அல்ல)
- அவிழ்க்கப்படாத பொதிகளில் அகப்படாமல் போன அநாமதேய நூல்கள்.


நான்கு நிறைகள்:
- சகல வயதினரும் உள்ளடங்கலாக, மூச்சு விட முடியாமல் நிரம்பி வழிந்த கூட்டம். (நான் சென்றது வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில்) 
- அனைத்து விதமான முக்கியமான நூல்களும் நிறைந்திருந்த பல அரங்குகள்.
- இளைஞர்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி சர்வசாதாரணமாக காதில் விழுந்து கொண்டிருந்த டோல்ஸ்டோய், தஸ்தயவ்ஸ்கி, சாரு, ஜெமோ, எஸ்ரா, மனுஷ், தேவதச்சன் முதலிய சொற்கள். (நான் நின்றிருப்பது யாழ்ப்பாணத்தில் என்பதை, ஒரே நேரத்தில் அயலவனாகவும் பெருமிதத்துடனும் எண்ணிக்கொண்டேன்.) 
- ஊடே இடம்பெற்றுக்கொண்டிருந்த சிறகுகள் அமையத்தின் 'நூல் தானம் செய்யுங்கள்' முன்னெடுப்பு. 


நான்கு கருத்துக்கள்:
- குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடநூல்கள், பயிற்சிநூல்கள் என்பவற்றை மட்டும் காட்சிப்படுத்தும் அரங்குகளை தவிர்க்கத்தேவையில்லை; ஆனால் அடுத்த ஆண்டுகளில் குறைக்கலாம். வாசிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே புத்தகத்திருவிழாக்களின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.


- ஆற அமரக் கவனிக்க முடியவில்லை என்றாலும், பிரிட்டிஷ் கவுன்சிலின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு சிறப்பாக இருந்தது. பெரியவர்களுக்கு, கொழும்பு சர்வதேச புத்தகக்கண்காட்சியில் இடம்பெறும், இலக்கியவாதிகளின் சந்திப்புகள், உரையாடல்கள், கலைநிகழ்வுகள் என்பன, நல்ல இளைப்பாறலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்படி எதையும் இங்கு ஒழுங்கு செய்திருந்தார்களா தெரியவில்லை. அடுத்தடுத்த முறைகளில் முயலலாம். (ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் பற்றித் தெரிந்திருப்பதால் கொஞ்சம் பீதியோடு தான் இதைப் பரிந்துரைக்கிறேன். )


- புத்தகத்தின் உள்ளடக்கப் பெறுமதியை விட விலைப்பெறுமதியைப் பார்ப்பவர்கள் தமிழர்கள். நூல் விற்பனைத் துறை பொதுவாக இலாபகரமான துறை இல்லை தான் என்றாலும், இது போன்ற நிகழ்வுகளிலாவது வெளியீட்டகங்கள் கொஞ்சம் கூடிய விலைக்கழிவைக் கொடுக்கலாம். விலைக்கழிவுக்குப் பிறகும் பலர் முகம் வாடி நின்றதையும், ஆக்ரோசமாக பேரம் பேசிக்கொண்டிருந்ததையும் பொதுவாகக் கண்டேன். 


- இது எதுவுமில்லாவிட்டாலும், நூல்களை சரியான அறிவித்தல் சுட்டிகளோடு வகைப்பிரித்து ஒழுங்குபடுத்துவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம். குறுகிய நேரத்தில் குறித்த துறை நூல்களை அவசரமாகத் தேடிச் சென்ற என்னைப் போன்றவர்களின் பொறுமையை இது வெகுவாகச் சோதித்தது. வெண்பா அரங்கு மட்டுமே இதில் சிறப்பாக இருந்தது. இன்னொரு அரங்கில், நூலகத்துக்கு தொகையாக புத்தகம் பெற வருபவர்கள் எத்தனை அடுக்கினாலும் கலைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப்பட்டார்கள். அப்படி தொகையாகப் பெற வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களை அல்லது நேரத்தை ஒதுக்கலாம். புத்தகத்திருவிழா வாசகர்களுக்கானது. வ்ழக்கமாக பெருமளவு விற்பனையாகும் ஆன்மிக, ஜனரஞ்சக, சிறுவர் நூல்களைத் தவிர, ஏனைய நூல்களுக்கு வாசகர் மத்தியில் எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதை மதிப்பிட, வெளியீட்டகங்களுக்கும் இந்த வகைப்பிரித்தல் உதவும். 


இறுதியாக,
நான்கு வாழ்த்துக்கள்:
அதிக நல்ல புத்தகங்களைக் கொண்டிருந்த பூபாலசிங்கம்,புக்வின், வெண்பா, குமரன் பதிப்பகங்களுக்கு.
மேலும் வாசிக்க »

கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு

0 comments


ஒரு கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு.
எப்போது என் கையில் வந்தது
என்று தெரியவில்லை
கிழிந்திருக்கிறது என்று
கடைக்காரன் திருப்பித்தந்தான்.
அவனிடம் தான் இறுதியாக
பொருள் வாங்கியிருந்தேன்.
அவனே தான் அதை
எனக்கு தந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எப்படி
அத்தனை விரைவாக
அது கிழிந்திருப்பதை அறிந்தான்?

அதை நினைவு கூர்வதற்குள்
நெடுந்தொலைவு வந்திருந்தேன்.
இந்த ஐநூறு ரூபாய்
மிகவும் உறுத்துகிறது.
வீதியில் அழுதபடி தொடர்ந்து வந்து
பிச்சை கேட்கும் குழந்தை போல.
பேருந்தில் அருகே வந்து நின்று கொண்ட
அழுக்கான முதியவர் போல.
எத்தனை சீக்கிரம் விலகுகிறோமோ
அத்தனை சீக்கிரம் ஆறுதல்.

இரண்டு தடவை அதன் பிறகு
வேறு கடைகளுக்கு சென்றேன்
இரண்டு தடவையும்
அதை கொடுக்க முயன்று தயங்கி
மீண்டும் பையிலே வைத்துக் கொண்டேன்
கிழிந்த நோட்டை நீட்டுவது
அத்தனை பெரிய குற்றமா?
அல்ல;
அதை தெரிந்து கொண்டே கொடுப்பது கூசச் செய்கிறது

பணப்பையை தொடும் போதெல்லாம்
அதன் நினைவே வந்தது.
அதை மறக்க முயன்றேன்.
அப்படி ஒரு பணநோட்டு
என்னிடம் இல்லை என்று
என்னை நம்பவைக்க முயன்றேன்
என் பணப்பையில்
கை தொடாத பகுதியில்
அதை மறைத்துக் கொண்டேன்
ஆம். இப்போது கிழிந்த பணநோட்டு எதுவும் என்னிடம் இல்லை.

இன்று உணவகத்தில்
உணவுண்டு எழும்போது
பணப்பை தவறி வீழ்ந்து விட்டது
ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு நழுவிப் பறந்தது
கட்டணச்சீட்டுடன் வந்த பரிமாறுநர்
புன்னகைத்த படி அதை வாங்கிச் சென்று விட்டார்.

நினைவு வந்துவிட்டது.
அந்த நோட்டு தான்.
புத்தம்புதியது.
மூலையில் அதே சிறு கிழிசல்.
நன்று.
தானே நழுவி விலகிச் சென்று விட்டது.

ஏனோ நிம்மதிக்கு பதில்
சஞ்சலத்தை அடைந்தேன்.
அது என்னால் வெறுக்கப்பட்டது
ஐநூறு ரூபாய் என்பதால் தானே?
ஒரு கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுக்கும்
கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கும்
எத்தனை வித்தியாசம்?
கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டு
கையில் இப்படி பாரமாக இருப்பதில்லை.
இத்தனை அசௌகரியத்தை
யாருக்கும் கொடுப்பதும் இல்லை.

நம்மை சுற்றி நிறைய இருக்கின்றன
புதிதாய் இருந்தும்
பெறுமதியாய் பிறந்தும்
யாரோ ஒருவரின் கவனயீனத்தால்
மதிப்பிழந்த ஐநூறு ரூபாய் நோட்டுகள்
கற்றவர்களாய் இருந்தும்
நல்லவர்களாய் இருந்தும்
சந்தர்ப்பத்தின் சிறு தவறால்
மதிப்பிழந்த மனிதர்கள்.

நழுவிப் பறந்த நோட்டு போல
தன்னை வெறுக்கும் உலகிடமிருந்து
அவர்களாகவே விலகிக் கொள்கிறார்கள்
பெருந்தன்மையுடன்,
அல்லது
புறக்கணிப்பின் கண்ணீருடன்.
மேலும் வாசிக்க »

வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை

0 comments



தேவதைகளெல்லாம்
அமுதம் அருந்த வேண்டும்
என்ற வழமை இருந்தது.
வெண்தேவதை
அமுதம் அருந்த ஆசைப்பட்டது.
அது கருந்தேவதை ஒன்றை
கையில் அமுதத்துடன் கண்டது.
கருந்தேவதையும் வெண்தேவதையும்
அமுதத்தைப் பரிமாறும் வழக்கம்
முன்பு இருந்ததில்லை.


'நான் இதை
இன்னொரு கருந்தேவதைக்கென
வைத்திருக்கிறேன்'
என்றது கருந்தேவதை.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் கருந்தேவதை
தனக்கே அமுதம் தரும்
என்று நம்பியது.


கருந்தேவதையின்
அமுதக்கோப்பையை
வேறு கருந்தேவதைகள்
தட்டி விளையாடின.
கருந்தேவதையே சில துளிகளை
ஒன்றுக்கு ஊட்டியும் விட்டது.
அதை வெண்தேவதையிடம்
காட்டிச் சிரித்தது.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
கருந்தேவதை
தனக்கும் அமுதம் தரும்
என்று நம்பியது.


வேறு வெண்தேவதைகள்
அமுதக்கோப்பையுடன் வந்தன.
இந்த வெண்தேவதையை
ஏக்கத்துடன் கடந்து சென்றன.
"இதை உனக்கென வைத்திருப்பேன்"
என்று சொல்லி அழுது சென்றது
ஒரு தூய வெண்தேவதை.
'ஏன்? இது கருந்தேவதைகளிலேயே
மிக அசிங்கமானது'
என்று கூவிச்சென்றது
ஒரு பசந்த வெண்தேவதை.
'இது நிகழ்ந்தால்
எல்லா தேவதைகளுமே
உங்களை தண்டிப்போம்'
என்று சீறியது
ஒரு சிவந்த வெண்தேவதை.


கருந்தேவதைக்கு
இது எதுவும் தெரியாது.
அல்லது தெரிந்தும்
தெரியாதது போலிருந்தது.
அது தனக்கான கருந்தேவதையுடன்
இன்பமாக அமுதம் அருந்திக்கொண்டிருந்தது.


வெண்தேவதை
ஒன்றும் சொல்லவில்லை.
அது மௌனமாக
கண்ணீர் வடித்தது.
கண்ணீர்த்துளிகள்
இதழில் இனித்தன.
அது அமுதத்தை விட
சுவையாக இருந்தது.
அது மெல்லப் புன்னகைத்தது.
"ஆம். இதுவே" என்றது.


அதன் பிறகு என்றைக்குமே
வெண்தேவதை
கருந்தேவதையிடம்
அமுதத்தைக் கேட்கவில்லை.
வேறு வெண்தேவதைகளின்
அமுதத்தைப் பருகவும் இல்லை.
மேலும் வாசிக்க »

குரவை என்னும் ஆதியொலி

0 comments

குரவைச்சத்தம் கிழக்கிலங்கை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. திருமணமா, நல்ல காரியங்களா, கோவில் திருவிழாக்களா, எல்லாமே குரவையொலியோடு ஆரம்பமாவதே இங்கு வழக்கம். இப்போது பெருமளவு அருகி விட்டாலும், இன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குரவை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ்க் கிராமங்களில் மட்டுமன்றி முஸ்லிம் கிராமங்களிலிருந்து வீசும் காற்றும் அரிவையரின் குரவையொலியைத் தாங்கி வந்து வரவேற்றதை எண்ணி ஏக்கப்பெருமூச்சு  விடுவோர் இன்றும் இருக்கிறார்கள்.


குரவை அயரும் வங்கக் குமரியர் 


குரவை என்பது நாக்கையும் மேல் அண்ணத்தையும் மிக வேகமாக பயன்படுத்தி உயர்ந்த மீடிறனில் உருவாக்கப்படும் ஒரு மங்கல ஒலி.  பொதுவாக பெண்களே குரவையிடுவது வழக்கம். இதை பேச்சு வழக்கில் குலவை என்பார்கள். தமிழ்ப் பெண்கள் குரவையிடும் போது  வாயை வலக்கையால் மூடியபடி இடக்கையால் வலது முழங்கையைத் தாங்கியபடித் தான் குரவையிடுவது வழக்கம்.  அல்லது இடது கையை அருகிலுள்ள இன்னொரு பெண்ணின் தோளில் வைத்திருக்க வேண்டும். 

உலகெங்கும் பழங்குடிப் பண்பாடுகளில் குலவையிடுதல் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் குலவைக்கு  யுல்யுலேஷன் (Ululation) என்று பெயர். ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும்  தென்னிந்தியா, வங்கம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களிடம் தான் குலவை அவதானிக்கப்பட்டிருக்கிறது.  மிஸ்ராகி எனும் யூதப்பிரிவினர், எதியோப்பிய கிறிஸ்தவர்கள் போன்றோர் சமயச்சடங்குகள் செய்யும் போது  குலவையிடுவது வழமை. மத்திய கிழக்கு முஸ்லிம்கள், சமயச் சடங்குகளில் மாத்திரமன்றி, திருமணம், இறப்பு போன்ற  நிகழ்வுகளின் போதும் குலவையிடுகிறார்கள்.  ஆபிரிக்க சமூகங்களிடமும் குலவை அதிகளவு அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் வங்கமும் தென்னகமுமே இன்றும் குலவை நீடிக்கும் மையங்கள். வங்கத்திலும் ஒடிசாவிலும் குலவைக்கு உலுல்லத்வனிஎன்று பெயர். அவர்களும் சமயச் சடங்குகளுக்கும் திருமணம் முதலான மங்கல நிகழ்வுகளுக்குமே உலுல்லத்வனியை பயன்படுத்துகிறார்கள். தென்னகத்தில் தமிழில் குலவை என்றும்  மலையாளத்தில் குரவ என்றும் அழைக்கப்படும் இது, இன்றும் சமயச்சடங்குகளிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் ஒலிக்கப்படுகிறது.
    தேர்தலில் வாக்களித்த பின் குலவையிட்டு மகிழும் எகிப்திய மூதாட்டி, 2014

எகிப்தில் குலவையிடல் பற்றிய மிகப்பழைய எழுத்து பூர்வமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.  கிரேக்கப் பண்பாட்டிலும் முன்பு குலவையிடல் வழக்கில் இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குலவையிடல் கைக்கொள்ளப்படுகின்ற நாடுகளை ஒப்பிட்ட சில அறிஞர்கள், அவை பொதுவாக அரேபிய வணிகர்களின் வசிப்பிடம் அல்லது வருகை தரும் இடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டுமத்திய கிழக்கே குலவையின் தாயகம் என்கிறார்கள். 

ஆண்கள் அல்லாமல்பெண்களே குரவையிடுவதில் பெருமளவில் ஈடுபடுவதை சான்று காட்டி இதை மறுப்போர் உண்டுஆபிரிக்கா, இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதுமே குரவையொலி பழங்குடிகளில் அவதானிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு இடத்திலேயே தோன்றிப் பரவியது என்று கூறுவதற்கில்லை. கவனத்தைத் தூண்டும் எச்சரிக்கை, அபாயத்தை உணர்த்தும் பதகளிப்பு, மகிழ்ச்சியை சொல்லும் குதூகலிப்பு எல்லாமே குலவையொலியில் கலந்திருப்பதை நாம் காணலாம். காட்டுமிராண்டியாக மனிதன் உலவிய தொல்காலமொன்றில் தொடர்பாடலுக்கு உதவியிருக்கக்கூடிய ஒலி வடிவங்களில் ஒன்று அது. எனவே, பேச்சையும் எழுத்தையும் மனித இனம் அறியாத காலத்தில் பிறந்த ஆதியொலிகளில் ஒன்று அது என்பது சாதாரணமாகவே புரியும்.  ஆபிரிக்காவில் தோன்றிய மனுக்குலம் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பரவிய போது, இந்த ஒலி வடிவம் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்று கொள்வதே பொருத்தம் போலப் படுகிறது.

குலவையிடும் தமிழச்சி.

அதை ஆதியொலி என்பது சரி தானென்றால், இப்போது அதற்கு வயது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும். எத்தனை எத்தனை மூதாதையர் வாய்களில் ஒலித்திருக்கும் அந்த ஒலி? கொஞ்சமும் மாறாமல், குறைந்தது வழிபாட்டு நோக்கிலோ, அன்றாடப் பாவனையிலோ மட்டுமாவது, அந்த ஆதியொலியைப் பேணி வருகிறோம் என்பது மகிழ்ச்சியடைய வைப்பது தானே? அதுவும் தமிழ் மரபின் அம்சமாக குரவையொலிக்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது என்பதும், தமிழரில் மைய நீரோட்ட குடித்தொகையினரில் பெரும்பாலானோர் அதை இன்று மறந்துவிட்டனர் என்னும் போது, நம் சூழலில் மட்டுமாவது அது எஞ்சியிருக்கிறது என்பது எத்தனை நெகிழ்வை ஏற்படுத்தும் உணர்வு?


தமிழ்ப்பண்பாட்டில் குரவை பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியத்தில் தான் முதன்முதலாகக் கிடைக்கின்றன. குரவை அயர்தல் பற்றி பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பிட்டிருக்கின்றன. குரவையை தனியே ஒலிவடிவமாக ஒலிக்காமல் சேர்ந்து கூடவே நடனமாடும் குரவைக்கூத்தும் தமிழ்நிலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. தொல்காப்பியம் அரசனின் தேருக்கு முன்னும் பின்னும் குரவை ஆடிச்சென்றதை பதிவு செய்திருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு குரவையாடியதையும், காஞ்சி, வேங்கை முதலான மரங்களின் நிழல்களில் குரவை ஆடப்பட்டதையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

வழிபாட்டில் தமிழரால் குரவைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். முருகனை வணங்கி குறவர்கள் குன்றக்குரவையாடும் சித்திரமும், திருமாலைப் போற்றி ஆய்ச்சியர் குரவையாடும் காட்சியும் அந்நூலில் அழகுற வந்திருக்கிறது.


ஆரம்பத்தில் முருகனோடும்  திருமாலோடுமே குரவை இணைத்துப் பார்க்கப்பட்டது என்றாலும், குரவை அயர்வது போர்க்களத்திலும் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது என்ற குறிப்பை  திருமுருகாற்றுப்படையும் பதிற்றுப்பத்தும் தருவதால், போர்த்தெய்வமான கொற்றவை வழிபாட்டிலும் குரவை நீடித்தமை தெரிகிறது. இன்றும் தமிழக மாரியம்மன் வழிபாட்டில் குரவைக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. புரிகிற மாதிரிச் சொல்வதென்றால், பக்திப் படங்களின் இறுதிக்கட்டத்தில்  அம்மன்  ஆத்திரமுற்று தாண்டவமாடும் போது பின்னணியில் குலவை ஒலிக்குமே, அது அந்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கும் குரவைக்குமான உறவைச் சொல்வது தான்.


இன்று தாய்த்தெய்வ வழிபாட்டில் குலவையொலி கேட்க, குலவையை பதிவு செய்துள்ள இலக்கியங்களில் சிலம்பு குறிப்பிடத்தக்க இடம் வகிக்க, அந்த சிலம்பே புகழும் சிலப்பதிகார நாயகியின் கோவிலில் இன்றும் குலவையொலியைக் கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றவன் இக்கட்டுரையாளன். வைகாசி மாதத்தில் அவனது பிறந்தகம் தம்பிலுவில்லில் உள்ள கண்ணகி கோவில் குலவையொலியால் நிறைந்துவிடும்.

அவன் சிறுவயதில் குலவையொலி கேட்டு மகிழ்ந்த இன்னொரு கோவில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில். இப்போது அங்கு அரோகரா சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.  முருகன் திருவீதியுலாவுக்கு புறப்படும் போதும், பின் உலா முடிந்து வசந்த மண்டபம் திரும்பும் போதும், குரவையொலி விண்ணைப் பிளக்கும் பால்யகால நினைவுகள் எப்போதாவது இருந்துவிட்டு அவன் நினைவில் வருவதுண்டு.

இன்று வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆர்வம் ஏற்பட்டு விட்ட பிறகு, குரவையின் தொன்மையையும் அபூர்வத்தையும் அறிந்த பிறகு, அதைக் கேட்பது எப்போதுமே எனக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அதிலும் குரவை அயர்வது குறிப்பாக தமிழ் மரபில் முருகனுக்குரியது என்பதை திருமுருகாற்றுப்படையிலும் சிலம்பிலும் படித்து முடித்த பிறகு, எப்போதாவது முருகன் கோவிலொன்றில் குரவையொலியைக் கேட்டுவிடக்கூடாதா என்று கொஞ்ச நாட்களாகவே ஏக்கம்.  வேறு சில முருகன் கோவில்களில் இப்போதும் திருவிழாக் காலங்களில் குரவை ஒலிப்பதாகக் கேட்டு அதைக் கேட்கச் சென்று முடியாமல் ஏமாந்திருக்கிறேன்.

கடந்த வாரம் ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  இரவுத் திருவீதியுலா முடிந்து இறைவன் வசந்த மண்டபத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அருகிலேயே நாதஸ்வரத்துடன் இணைந்து மெல்லிய பறையொலியை அடக்கமுயன்றுஆணவத்துடன் முனகிக் கொண்டிருந்தது மிருதங்கம்சலவைத்தொழிலாளர் நிலப்பாவாடையை விரிக்க, தீவட்டியும் கொடி, குடை ஆலவட்டங்களும் மெல்லப் பின்னகர, முருகன் மண்டபத்துக்குள் புறம் காட்டி நுழைந்தான்.  நல்லா ஆட்டி ஆட்டிக் கொண்டு போங்கோ என்று ஒருவர் உரத்துச் சொல்ல வாய் கட்டி வாகனம் காவியிருந்த இளைஞர்கள் வலம் இடமாக ஏடகத்தை அசைக்கத் தொடங்கினர். மென்மையாக ஊஞ்சலில் அசைந்தாடுவது போல அலைந்த படி பின்னகர்ந்தான் அழகு வேலன்
                

சட்டென நாதஸ்வரத்தின் தொனியைக் கிழித்தபடி எங்கோ வீறிட்டெழுந்தது குரவையொலி.  மண்டபத்துக்குள்ளே  பின்னகர்ந்து கொண்டிருந்த முருகன் அலையும் வேகம் கூடத் தொடங்கியது போலிருந்தது. அவன் ஆனந்தமாகக் கூத்தாடிக்கொண்டிருந்தான். நான் காத்திருந்த அரிய கணம். குமரன் கோவிலில்  குரவையொலி. சங்க காலத்திலிருந்தே நீடிக்கும் குன்றக்குரவை ஒலி. ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டியும் தமிழ் நிலத்தில் ஒலிக்கும் மானுட இனத்தின் ஆதியொலி. 


நான் ஒருகணம் நடுங்கினேன். உடல் சில்லிட்டது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கண்ணீர் பெருகி வந்து பார்வையை மறைத்தது. சட்டென விழிகளைத் துடைத்தபோது, மாடத்தூண்களும் மண்டபமும் மறைந்து அடர்ந்த மரங்களும் கொடிகளும் மேலெழுந்து வந்து சூழ்ந்து கொண்டன. எங்கும் காரிருள் பரவியது. தொலைவில் இரு தீவட்டிகள் உயர்ந்தன. இலைதழைகள் தீயில் கருகி கற்பூர வாசனை எழுப்பி நிமிர்ந்தன. சிறுபறைகள் ஒலிக்க குறமகளிர் கும்மி கொட்டி கூத்தாடிக் கொண்டிருந்தனர். நடுவில் வேலன் வெறியாடியபடி நின்றிருந்தான். மிக அருகில் தீனமாக ஒரு குரல் எழுந்தது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே, அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேலன்றேஆயிரமாண்டுகள் அகவை முதிர்ந்த அதே மூதாட்டி அப்போதும் விடாமல் ஓங்கிய குரலில் குரவை அயர்ந்து கொண்டிருந்தாள். அந்த ஆதியொலி என்னவோ செய்தது. விம்மியபடி முகத்தை மூடிக் கீழே அமர்ந்து கொண்டேன். குரவையொலி நில்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.


(அரங்கம் பத்திரிகையின் 2019.08.02ஆம் திகதிய இதழில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »

வெல்கம் வேரத் தேவர்

0 comments
அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை.
வெல்கம் வேரத் தேவர்
 கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'.

அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சிறிய கருவறைகள் ஒன்றை ஒன்று நோக்கிய நிலையில் அமைந்திருக்கின்றன. இந்த இரு அறைகளிலும் கூட புத்தர் படிமங்கள் இருந்திருக்கக்கூடும். 'திரிகாயம்' எனும் மகாயானக் கோட்பாட்டுக்கேற்ப, இப்படி மூன்று புத்தர்களை வழிபடுவது வழக்கமாகும்.
(தமிழ் ஆதாரம் கிடைக்கின்ற வெல்கம் விகாரை, பொலனறுவை தலதாய்ப்பள்ளி உள்ளிட்டவை மகாயான பிரிவுக்கு உரியவை. இன்று சிங்களவரால் கடைப்பிடிக்கப்படுவது தேரவாதம் எனும் மற்றொரு பௌத்தப்பிரிவு.)
பள்ளியின் இடப்புறம் தாதுகோபம் ஒன்றும் வலப்புறம் பிரதிமாகாரம் (புத்த திருவுருவங்கள் வழிபடப்படும் அறை) ஒன்றும் இடிபாடுகளாகக் காணப்படுகின்றன. பள்ளியின் வாயிலில் தீர்த்தக்கேணி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் தள்ளி சிறிய குன்றொன்றில் இடிபாடாக இன்னொரு தாதுகோபம் அமைந்துள்ளது. அதனருகே நின்று பார்த்தால் நிலாவெளிக் கடற்கரையின் அழகான காட்சி தெரியும் என்றார்கள். வழிகாட்டிப்பலகை இல்லாமல் எங்களால் போக முடியவில்லை.
வெல்கம் வேரத் தமிழ்க் கல்வெட்டுக்கள்
அந்தப்பகுதியில் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்களென்றால், வாசலில் சார்த்தி வைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கல்வெட்டுகளை நீங்கள் காணலாம். ஓரளவேனும் வாசிக்கக்கூடியவை தான். "ராஜராஜப்பெரும்பள்ளி", "ராஜேந்த்ர சோழ தேவர்க்கு" என்ற சொற்களை அவற்றில் வாசிக்க முடிந்தபோது ஒருகணம் உடல் சிலிர்த்துத் தான் போனது.
அதில் ஒரு கல்வெட்டு, இராஜேந்திர சோழனின் 15ஆம் ஆட்சியாண்டில் (பொ.பி 1027) பொறிக்கப்பட்டது. "திருமன்னி வளர" என்று தொடங்கும் அவரது மெய்க்க்கீர்த்தியுடன் ஆரம்பமாகும் இக்கல்வெட்டின் முன்பாகம் முழுமையாக வாசிக்கப்பட்டுள்ள போதும், தற்போது அந்தப் பாகங்களைக் காணமுடியவில்லை. இந்த எஞ்சிய துண்டம், பானாவாசத்துளாகாமம் ஊரைச் சேர்ந்த பாத்தரவிதராமன் என்பவர், வெல்கம் வேரம் அல்லது ராஜராஜப்பெரும்பள்ளியின் புத்தர் புண்ணியத்துக்காக 35 பசுக்களும் 5 எருமைகளும் கொடுத்ததைச் சொல்கிறது.

1……….…
2. (ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தே
3. வற்கு யாண்டு க௰௫ சாவது)
4. மும்முடி சோழ மண்டல
5. த்து மேலாநங்ங னாட்டு
6. (வீ)ரபரகேசரி வளநாட்டு
7. பனாவாசத்துளாகாமத்து
8. பாத்தரவிதராமந் வெல்கம்
9. வேரமான ராஜராஜ பெரும்
10. பள்ளி புத்தர்க்குப் புண்ணி
11. யத்துக்கு வைத்த பசு
12. ௩௰௫ எருமை ௫.

கோடிடப்பட்டிருப்பது: வெல்கம்
வேரமான ராஜராஜ பெரும்பள்ளி.

க௰௫ = தமிழ் எண் 15
௩௰௫ = தமிழ் எண் 35
௫ = தமிழ் எண் 5


இந்தக் கல்வெட்டின் இன்றைய தமிழிலான வாசகம் வருமாறு: ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரின் 15ஆவது ஆட்சியாண்டில், மும்முடிச் சோழ மண்டலத்து மேலாநங்ங நாட்டு / வீரபரகேசரி வளநாட்டு பிரிவில் உள்ள 'பனாவாசத்துளாகாமம்' கிராமத்தின் 'பாத்தரவிதராமன்' என்பவர், வெல்கம் வேரமான ராஜராஜ பெரும்பள்ளியின் புத்தரின் புண்ணியசேவைக்காக பசு 35உம் எருமை 5உம் கொடுத்தார்.

தலைகீழாக நாட்டப்பட்டுள்ள அடுத்த கல்வெட்டு, ஸ்ரீ பலவன் புதுக்குடியான் ஆதித்தப்பேரரையன் என்பவரால் இராஜராஜப்பெரும்பள்ளிக்கு ஒரு நந்தாவிளக்கும், 84 பசுக்களும் வழங்கப்பட்டதைச் சொல்கிறது. தொடர்ந்து செல்லும் இன்னொரு கல்வெட்டின் படி, இராஜேந்திர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (பொ.பி 1024) கேரளத்து உதறிய (?!) நன்புவனதேவன் என்பவரால் வெல்கவேரத்து தேவருக்கு ஒரு நந்தாவிளக்கும் நான்கு காசும் காணிக்கை கொடுக்கப்பட்டது,

1. ஸ்ரீ பலவன் புதுக்கு
2. டியான் ஆதித்தப்
3. பேரரையன் ஸ்தவ்யா
4. றாமயனா மானாவதிளானா
5. ட்டு வெல்க வேரான இ
6. ராஜராஜ பெரும்பள்ளிக்கு
7. வைத்த னொந்தா வி
8. ளக்கு க பசு ௮௰
9. ௪. | கோப்பரகேசரி
10. பத்மராந ஸ்ரீ ராஜேந்த்ர
11. சோழ தேவர்க்கு யா
12. ண்டு க௰௨ டாவதில் கேர
13. லத்து தரிப நன் புவன
14. (தே)வன் வெல்கவேரத்
15. து தேவர்க்கு வை
16. ச்ச னந்தா விளக்கு
17. க காசு ௪ இப்பள்ளிச்
18. சங்கத்தார் விள
19. க்கெண்ணெயு(ம்)
20. (வை)ப்பதாகவு
21. ம்

பெட்டி: ராஜராஜப்பெரும்பள்ளி
கோடிடப்பட்டது: ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தேவர்க்கு




கல்வெட்டு 01:
புதுக்குடி ஊரைச் சேர்ந்த 'பலவன் ஆதித்தப் பேரரையன்' என்பவர் 'ஸ்தவ்யாராம மானாவதிளா' நாட்டில் வெல்கவேரம் என்று அழைக்கப்படும் இராஜராஜ பெரும்பள்ளிக்கு ஒரு நந்தா விளக்கும் 84 பசுக்களும் அளித்தார்.

கல்வெட்டு 02:
கோப்பரகேசரி வர்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரின் 12ஆவது ஆட்சியாண்டில் 'கேரலத்து தரிப நன் புவனதேவன்' என்பவர், வெல்கவேரத்திலுள்ள (புத்த) தேவருக்கென்று கொடுத்த நந்தா விளக்கு ஒன்றும் காசு நான்கும். இந்த விகாரையின் சங்கத்தார் (அந்தக்காசுக்கு) விளக்கெண்ணெய் வைக்கவும்.

இராஜராஜப்பெரும்பள்ளியில் இன்னும் மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறதாம். நாங்கள் பார்க்கவில்லை. அதில் ஒரு கல்வெட்டு, ராஜேந்திரனின் 25ஆம் ஆட்சியாண்டில் (பொ.பி 1037) ‘பணிமகன்’ என்ற பதவியிலிருந்த ‘காயாங்குடையான் அமுதன் சாத்தன்' நந்தாவிளக்கெரிக்கத் தேவையான மூன்று உழக்கு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக, பத்து எருமைகளை வெல்காமப்பள்ளிப் புத்தருக்கு காணிக்கை அளித்ததைச் சொல்கிறது. ஒரு உழக்கு என்பது இன்றைய அளவீட்டில் 336 மிலீ.

நன்கு சிதைந்த இன்னுமிரு கல்வெட்டுகளும் பெறப்பட்டுள்ளன. ஒன்றில் "ஏறாநாடன் கண்டன் யக்கன் இட்ட திருநுந்தாவிளக்கு" என்ற வசனமும், இன்னொன்றில் "அஞ்சாம் பக்கத்துப் பூசம் பெற்ற வியாழக்கிழமை நாளில் இட்ட இருபது சாண் நாலு விரல் நீளமான தாராநிலை விளக்கு" என்ற வசனமும் வாசிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழ். கிரந்தம் கலந்த தனித்தமிழ்!

சோழர்கள் தங்கள் ஆட்சியில் எல்லா இடங்களுக்கும் தங்கள் பெயரையே சூட்டியபோதும், பழைய பெயரையும் மாற்றாது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உதாரணமாக பொலனறுவை ஜனநாதபுரம் என்ற சோழப்பெயரை பெற்றபின்னர், அங்குள்ள தமிழ்க்கல்வெட்டுக்கள், அதை "புலநரியான ஜனநாதபுரம்" என்றே அழைக்கின்றன. புலநரி என்பது புலத்திநகரி என்பதன் தமிழ் வடிவம். அது சிங்கள 'பொலன்னரு'வுக்கு நெருக்கமானது. மாந்தை “மாதோட்டமான ராஜராஜபுரம்” என்றும், குருநாகல் நிக்கவரெட்டிக்கு அருகில் உள்ள மாகல “மாகலான விக்கிரமசலாமேகபுரம்” என்றும் தமிழ்க்கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவதை மேலும் நாம் ஒப்பிடலாம்.
தமிழில் விகாரம் என்பது வேரம் என்று மாறும். சிட்டிவேரம், வேரத்துப்பிட்டி போன்ற தமிழ் ஊர்கள் இன்றும் அமைந்துள்ளன. இன்றைய வெல்கம் விகாரை, சோழராட்சிக்கு முன்பும் தமிழில் வெல்கவேரம், வெல்கம் வேரம் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் சொல்கின்றன. கல்வெட்டுக்களில் வருகின்ற பானாவாசத்துளா காமம், மானாவதுளா நாடு என்பன ஒரே இடத்தைக் குறிப்பதாகலாம்.
இன்று இலங்கையின் ஆட்சி நிர்வாகப் பிரிவுகள், மாகாணம், மாவட்டம், பிரதேசம் என்று பிரிக்கப்பட்டுள்ளது போல சோழர் காலத்து ஆட்சி நிர்வாகப் பிரிவுகள், மண்டலம், வளநாடு, நாடு, கூற்றம் என்றவாறு பிரிக்கப்பட்டிருந்தன. இவை ஒரே காலத்தில் வசதிக்கேற்ப வெவ்வேறு பெயர்களை அல்லது வெவ்வேறு எல்லைகளைப் பெற்றுக்கொண்டமை கல்வெட்டுக்களிலிருந்து தெரிகின்றது. "மும்முடிச்சோழமண்டலம்" என்று தனி மண்டலமாக அழைக்கப்பட்ட இலங்கையிலும் பல வளநாடுகள் காணப்பட்டன. வெல்கம் விகாரை அமைந்திருந்த பகுதியானது, மேலாநங்க நாடு, வீரபரகேசரி வளநாடு, மானாவதுளா நாடு, இராஜேந்திரசிங்க வளநாடு, அபயாஸ்ரய வளநாடு போன்ற பல்வேறு நாடு/வளநாடுகளில் அடங்கியிருந்தமை இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவந்திருக்கிறது.

வாசிக்க முடியாதிருந்த கல்வெட்டு

வாசிக்க முடியாமல் அங்கு கிடந்த இன்னொரு கல்வெட்டின் தேய்ந்த எழுத்துக்கள் ஒரேநேரத்தில் சிங்கள எழுத்துக்கள் போலவும் தமிழ் எழுத்துக்கள் போலவும் மாயம் காட்டிக்கொண்டிருந்தன. அதைப் படமெடுத்துக்கொண்டிருந்த போது ஒரு இளைஞர் நெருங்கிவந்தார். நெற்றியிலிருந்த திருநீற்றைப் பார்த்துவிட்டு "தமிழா?" என்று கேட்டார். "படம் எடுக்கிறதெல்லாம் சரி. கவனம். தொல்பொருள் பிரதேசம். அங்க இங்க ஏறவோ நடந்து திரியவோ வேண்டாம். பிரச்சினை காலம் தெரியும் தானே" என்று சிங்களத்தில் சொல்லிய படியே நகர்ந்தார். அப்போது ஒப்பிடுவதற்காக நான் கைபேசியில் திறந்து வைத்து வாசித்துக்கொண்டிருந்த அமுதன் சாத்தன் கல்வெட்டின் "சந்திராதித்தவல் நின்றெரிய வைத்த திருநொந்தாவிளக்கு" என்ற வாசகத்தில் கண்கள் குத்திட்டு நின்றன. சூரியன் சந்திரன் உள்ள வரை இவை இங்கு நின்று எரியவேண்டும் என்ற நிபந்தனையுடன் நந்தாவிளக்குகளைத் தானம் செய்வது அன்றைய வழக்கு. இன்று நந்தாவிளக்கும் இல்லை. ராஜராஜப்பெரும்பள்ளியும் வழிபாட்டில் இல்லை. புறப்படுவோம் என்று நிமிர்ந்தபோது, ஏதோ சொல்ல முயன்று பின்வாங்கியவர் போன்ற முகபாவத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தார் வெல்கவேரத்துத் தேவர். ♥️
மேலும் வாசிக்க »

இணைய அடிமையாதல்

0 comments



இந்தக் கட்டுரையை வாசிக்க முன், இந்தக் கட்டுரையாளனாக ஒரு சுய விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். சைவ சமயம் மற்றும் அதன் வரலாறு பற்றிக் கூறுகின்ற கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான "அலகிலா ஆடல்" எனும் நூலின் ஆசிரியன் நான். "இருந்திற்றுப் போ, எங்களுக்கென்ன" என்று நீங்கள் கேட்கலாம். ஊகூம். அதில் தான் விடயமே இருக்கிறது.

பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்த ஐந்தாறு மாதங்களின் பின்னர், பகுதி நேர வேலையொன்றை வீட்டிலிருந்து செய்து கொண்டிருந்த காலத்தில் தான் அலகிலா ஆடலை எழுத ஆரம்பித்தேன்.நூற்றுக்கணக்கில் தரவிறக்கி வைத்திருந்த ஆங்கில ஆய்விதழ்களை வாசிப்பது, அவற்றை தமிழில் மொழியாக்குவது, பின்னர் தலைப்புக்கேற்ப வகைப்பிரிப்பது, இறுதியாக மொழியாக்கத்தை கொஞ்சம் மாற்றி, நூலின் ஒழுக்கு சிதையாத விதத்தில் திருத்தி எழுவது என்று அந்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.


ஒரு விடயத்தில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், அது நம்மை எப்படி முழுமையாக ஆட்கொண்டு விடும் என்பதை நான் உணர்ந்துகொண்ட நாட்கள் அவை. காலையில் ஏழரை, எட்டு மணியளவில் தான் எழுவேன். நான் செய்துகொண்டிருந்த பகுதிநேர வேலைக்கு ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் அல்லது குறைவான நேரமே எடுக்கும். எப்படியும் ஒன்று, ஒன்றரை மணிநேரத்தில் அதை செய்து முடித்து விட்டு மடிக்கணினியில் அமர்ந்தால், பெரும்பாலும் மாலை வரை அசைவதில்லை. 


இரண்டு வேளைச் சாப்பாடும் இடையிடையே தேநீரும் அம்மா தயவில் மேசைக்கே வரும். "ஒரே கொம்பியுட்டருக்கு முன்னுக்கு இரிக்காத தம்பி. கண் பழதாப்போயிரும்" என்ற பல்லவியோடே அவர் வந்து சாப்பாட்டை வைத்து விட்டுப் போவதும் நான் ஒற்றைக்கையால் தட்டச்சிக்கொண்டே சாப்பிடுவதும் இயல்பாக நடந்து முடிக்கும். ஒருநாள் மடிக்கணினியைத் திறந்தால் விசைப்பலகை முழுவதும் எறும்புகள். பூந்தி சாப்பிட்டுவிட்டு கை கழுவ மறந்துபோய் அப்படியே தட்டச்சிக்கொண்டு இருந்திருக்கிறேன். 


மாலையில் வழக்கமான நண்பர் கூட்டத்துடன் சிறு குலாவல். அல்லது கடற்கரையில் கொஞ்ச தூரம் நடை. இரண்டையும் அவசர அவசரமாக முடித்து விட்டு மீண்டும் ஓடி வந்து மடிக்கணினி முன் அமர்ந்து விடுவேன். "இருடா எங்க அவசரமா ஓடுறாய்" என்று கேட்பார்கள் நண்பர்கள். என் அவசரம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. புத்தகத்தை எழுதி முடிக்க வேண்டுமே!


மாலையில் அமர்ந்தால், இரவு ஒன்பது, பத்து மணி வரை மீண்டும் எழுத்துப்பணி. இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் மண்டபத்தில் குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பேன். அந்த இடைவேளையில் இரண்டு வயதாகும் மருமகளுடன் நேரத்தை அளந்து கொஞ்சம் விளையாட்டு. "வீட்ட சும்ம தானே இருக்காய் இவள்ற முகத்த பாத்துக்கொண்டு கொஞ்ச நேரம் கூட தூக்கி விளாடாமல் கொம்பியூட்டர்ட்ட ஓடுறியே" என்று திட்டுவாள் அக்கா. அதைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் மீண்டும் கணினி முன் அமர்ந்துவிடுவேன்.

இரவு இரண்டு மணி வரை கூட எழுத்து தொடரும். சில வேளை அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கு அப்பா அறைக்குள் நுழைந்து போய்த்தூங்கு என்று சொல்லித் திட்டி விட்டுப் போனதும் நடந்திருக்கிறது. அடுத்த வளவில் இருக்கும் அம்மம்மாவும் சித்தியும் "விடிய விடிய அறைக்குள லைற் பத்துது. இவன் படுக்கிறதே இல்ல" என்று வீட்டில் வந்து குற்றப்பத்திரிகை வாசித்து விட்டுச் சென்றதுண்டு. அப்போது அவர்கள் யாருக்குமே நான் ஏன் அப்படி கண் விழித்து கணினி முன் அமர்ந்திருந்தேன் என்பது தெரியாது. 

பல்கலைக்கழகம் போய் துரும்பாய் மெலிந்த உடலை, உட்கார்ந்தபடி பழையபடி மீட்டேன். கண்களின் கீழ் கருவளையம் வந்தது. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போலத்தான். இருபத்து நான்கு மணிநேரமும் "சைவம், வரலாறு, சைவம், வரலாறு" என்றே மூளை உச்சரித்துக் கொண்டிருந்தது.  

சுமார் மூன்று மாதங்களின் பின், சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டமொன்றில் முழுநேர வேலை கிடைத்தது. அப்போது நூல் வேலையும் பெருமளவு நிறைவுபெற்றிருந்தது. இனி மெய்ப்புப் பார்ப்பது, உசாத்துணைகளை படங்களைச் சேர்ப்பது என்பன மட்டுமே எஞ்சியிருந்த வேலை. எனவே பழையபடி மீள ஆரம்பித்திருந்தேன். 

அந்த நூல் பிறகு வெற்றிகரமாக வெளியான நாள், கொழும்பிலும் மட்டக்களப்பிலும் விமரிசையாக இடம்பெற்ற அந்த நூல் வெளியீடு, அதற்குத் தோள் கொடுத்த நண்பர்கள், உறவினர்கள், எல்லோரையும் எல்லாவற்றையும் இப்போதும் ஓய்வு நேரங்களில் எண்ணிப்பார்த்து இறும்பூது எய்துவதுண்டு. ஆனால், அதற்கெனச் செலவழித்த மேற்படி நாட்கள் இன்றும் எனக்கு அச்சமூட்டுகின்றன.

ஒன்றை நேசிப்பதற்கும் ஒன்றுக்கு அடிமையாவதற்கும் மிகச்சிறிய நூலிழை வேறுபாடு தான் இருக்கிறது. அந்த மூன்று மாதங்களும் நான் எழுத்துக்கு அடிமையாகி இருந்தேன். அது இன்பமூட்டுவதாக இருந்தது. மிகப்பெரிய போதையைத் தந்துகொண்டிருந்தது. புதிய புதிய விடயங்களை வாசித்து அறிந்துகொண்ட போது உடல் சிலிர்க்கும். "அப்படியா, இப்படியா" என்று மகிழ்ச்சி வெள்ளம் பெருகியோடும். வரலாற்று மர்மங்களை சிந்தித்த போது மூளையில் மின்னல் வெட்டும். வரலாற்றின் சிண்டு முடிச்சுகளை நானாகவே அவிழ்த்த போது, "ஆஹா, கண்டுபிடித்து விட்டேன்" என்று உள்ளம் குதூகலிக்கும். 

நாளெல்லாம் போதையில் திளைப்பவன் ஒருவனை அழைத்து நாலு சாத்து சாத்தி, "பைத்தியக்காரா, உன்னுடையது என்ன போதை, இதை வாசி, இதை விட இன்ப மயக்கம் தரும் வேறொன்று உள்ளதா இந்த உலகில்? இது தெரியுமா உனக்கு? இதை அறிந்திருக்கிறாயா? ஐயோ, முட்டாள், இந்த சொர்க்கத்தைத் தெரியாமல் இருக்கிறாய் தெரியுமா?" என்று கூவவேண்டும் போல் இருக்கும்.

இப்போதும் அந்த நாட்களை எண்ணும் போது, குலை நடுங்குகிறது. ஆம், அந்த மூன்று மாதங்களின் உழைப்பு வீண் போகவில்லை என்பது உண்மை தான். நூலை இயல்பான வாழ்க்கையில் சாதாரணமாக முடிக்க அதற்குப் பிறகு மேலதிகமாக ஏழெட்டு மாதங்களே எடுத்துக்கொண்டன. "எழுதி முடிக்க ஓராண்டு கூட எடுக்கவில்லையா?" என்று நூலை வாசித்த பலர் கேட்டு வியந்து கொண்டார்கள் தான். ஆனால், அதற்காக நான் கொடுத்த விலை? எத்தனை இரவு - பகல்கள்? எத்தனை முழுநிலவின் அழகுகள்? எத்தனை அதிகாலைகள்? எத்தனை நண்பர்கள்? எத்தனை பொழுதுபோக்குகள்? 

இன்று உளநலன், உளவியல் சுகாதாரம் பற்றிய விவாதங்களில் "அடிமையாதல்" ( ஆங்கிலத்தில் "Addiction") என்பது முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த உலகில் எந்தப் பழக்கத்துக்கும் மனிதன் இலகுவில் அடிமையாகலாம். ஆம், வாசிப்பவனை பூரணமாக்கும் வாசிப்பினால் கூட ஒரு மனிதனை அடிமையாக்க முடியும்!

மது, மாது, போதை, என்று பல விடயங்களுக்கு அடிமையானவர்கள் பற்றி பல இடங்களிலும் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இப்போது மிக மோசமாக இளைய தலைமுறையினரை மோசமாக்கும் அடிமையாக்கல் பற்றி நாம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அது இணையத்தின் அடிமையாக்கல். 

என் நண்பர்களில் கணினி விளையாட்டுக்கு அடிமையானவர்களை எனக்குத் தெரியும்.  கைபேசி, பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நம்மில் பலர், சொல்லப்போனால் ஒவ்வொருவருமே அடிமையாகி இருக்கிறோம். 

அதில் தவறேதும் இல்லை. கணினி, இணையம், காணொளி விளையாட்டுக்கள் உருவாக்குகின்ற மெய்நிகர் உலகமானது (Virtual World) நம்மால் கனவுகளில் மட்டுமே உலவ முடிந்த ஒன்று. இன்றைய தொழிநுட்பம், அந்தக் கனவுகளில் உண்மையாகவே உலவி வரும் வாய்ப்பை இலகுவாக்கி இருக்கிறது. நம் கனவு தருகின்ற சுவாரசியமும் மெய்யான உணர்வுகளும் அங்கும் உருவாகின்றன. எனவே அதில் திளைக்கிறோம், மகிழ்கிறோம், வெளியேறியதும் மீண்டும் அது வேண்டுமென்று ஏங்குகிறோம், கிடைத்ததும் குதூகலிக்கிறோம். அது மெல்ல நம்மை ஆட்கொள்கிறது. இறுதியில் அடிமையாக்குகிறது. 

ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிய என்ன வழி? அது நம் அன்றாட இயல்பான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும். அதன் காரணமாகவே நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலையை காலதாமதமாகச் செய்வீர்கள். பிறருடன் கலந்து மகிழ்வதில் இருந்து விலகி இருப்பீர்கள். அருகில் மனதுக்கு இனியவர்கள் அமர்ந்திருக்கும் போதும், உங்களை அடிமையாக்கிய பழக்கத்தைச் சுற்றியே மூளை சிந்தித்துக்கொண்டிருக்கும். களைப்பு, அலுப்பு, பொறுமையின்மை முதலிய உணர்வுகள் ஏற்படும் போது, உடனே அதைத் தேடி ஓடுவீர்கள், அல்லது அதை மீண்டும் அடைய ஏங்குவீர்கள். இவற்றில் ஏதாவதொன்று உங்களிடம் இருந்தால், உங்கள் கதை முடிந்தது. ஆம் நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு உளரீதியான மெய்நிகர் இணைய உலகமும் மிகப்பெரிய அடிமையாக்கல் மூலமாக மாறியிருக்கிறது. அதில் சோகம் என்னவென்றால், தாம் இலத்திரனியல் அடிமைகள் என்பது அவர்களில் யாருக்குமே தெரிவதில்லை. ஒரு ஐந்து நிமிடம் சும்மா இருந்தால், போனை எடுத்து நோண்டாதவர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? அவர்கள் எவருக்காவது தாங்கள் அதற்கு மெய்நிகர் அடிமைகள் என்பது தெரியும் என்றா நினைக்கிறீர்கள்?

சரி, இதிலிருந்து எப்படி மீள்வது? நீங்கள் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை விட, அதை ஒப்புக்கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. நான் ஒரு நோயாளி என்பதை ஏற்காத ஒருவன் எப்படி மருந்தெடுத்து குணமடைய முடியும்?

இப்போதெல்லாம் நான் ஒரு வழிமுறையைக் கையாள்வதுண்டு. முகநூலை பெருமளவு குறைத்து விட்டேன். வட்சப்பில் அரட்டைகளில் கொஞ்சம் நேரம் கழிப்பது, ஏதாவது மின்னூல்கள் கிடைத்தால் வாசிப்பது என்று மட்டும் இப்போது கைபேசிக்கான நேரத்தை மட்டுப்படுத்தியிருக்கிறேன். அதைத் தவிர, அருகில் நண்பர்கள் இருந்தால் தவிர, கைபேசியைத் தொடுவதை இயன்றளவு தவிர்ப்பேன். நண்பர்களின் அருகே கைபேசியுடன் இருக்கும் போது எப்படியும் அவர்கள் பொறுமையிழப்பார்கள். "போன வை" என்று அவர்கள் திட்டும் போது உணர்ந்து கொண்டு மீள்வேன். அது ஓரளவுக்கு மெய்நிகர் உலகிலிருந்து வெளியேறுவதற்கு எனக்குக் கைகொடுத்திருக்கிறது. உங்களுக்குரிய மீட்சியை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

ஆம். அது மிகக்கடினம் தான். நான் கைபேசியில் மூழ்கியிருந்த நாளில் "அடிக்ட் ஆகிற்றாய் அடிக்ட் ஆகிற்றாய்" என்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கும் நண்பனொருவன் புதிதாக தனக்கென்று திறன்பேசி ஒன்று வாங்கிய பின்னர், இப்போது என்னை வென்றுவிடும் அளவுக்கு மோசமாக கைபேசியில் மூழ்கி முத்தும் எடுத்து விட்டதை (க்கும்!) கண்டபோது தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியை எழுதினேன். 

ஆயிரம் தான் சொன்னாலும், தொழிநுட்பம், மெய்நிகர் உலகம், இந்த இணையம் இது எதுவும் இல்லாமல் இந்தக் கணினி யுகத்தில் எதுவும் சாத்தியம் இல்லை தான். தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால், அடிமையாகும் அளவுக்கு அதிலேயே ஊறித்திளைக்க வேண்டாமே? 

ஆங். முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்லவேண்டும். இந்தக் கட்டுரையில் வாசிப்புக்கு அடிமையான என் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, ஒரு பழக்கம் அதிலேயே திளைக்கும் போது எப்படி நம்மை முழுமையாகத் தன்மயப்படுத்தக்கூடியது என்பதை இங்கு சுட்டிக்காட்டத்தான். அதை அப்படியே தலைகீழாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வாசிப்புக்கு அடிமையாக இருந்தால், நிச்சயம் சொல்லிக்கொள்ளும் படி பலன் கிடைக்கும் - ஏதோ எனக்கு சிறிய அளவிலாவது கிடைத்த அங்கீகாரம் போல. ஆனால், இணைய அடிமையாதலோ, போதை அடிமையாதலோ நமக்கு எதுவுமே தரப்போவதில்லை. மெல்லக் கொல்லும் விஷம் அது. கெடுதி நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சூழ்ந்திருக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் தான். சும்மாவா சொன்னார்கள், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று?

(அரங்கம் பத்திரிகையின் 67ஆவது இதழில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »

“சேட்டைக் கழட்டுங்க முதல்!” அறியாமையின் ஆணவக்குரல்

0 comments
நன்றி: arayampathy.lk
தலைப்பின் முதல் வரியை வாசித்து விட்டு நீங்கள் ஏடாகூடமாக ஏதும் யோசிக்கக்கூடாது என்று தான் உபதலைப்பு. அறியாமையின் ஆணவக்குரல். என்ன அறியாமை? என்ன ஆணவம்? இதுக்கும் சேட்டக்கழட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?

ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் கிழக்கிலங்கையின் தனிச்சிறப்பான கண்ணகிச் சடங்கு பருவ காலம் இனிதே நிறைவுற்றிருந்தது. அதன் பின்னணியில் ஆரையம்பதி முதல் தம்பிலுவில் வரை 15 கண்ணகி அம்மன் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளனுக்குக் கிடைத்திருந்தது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைமை காரணமாக வழக்கமான கொண்டாட்ட மனநிலையை எந்த ஊரிலும் காண முடியவில்லை என்றாலும், அந்தப் பருவ காலத்துக்கே உரிய இயல்பான மலர்ச்சியை எங்குமே தவறவிட்டதாகத் தெரியவில்லை.

எனினும், இந்த ஆண்டு குறிப்பாகக் கண்ட ஒரு விடயம் அதிகமாக உறுத்தியது. சுமார் ஐந்திற்கு மேற்பட்ட கண்ணகி ஆலயங்களில் "ஆண்கள் மேலாடையின்றி உட்செல்லவும்" எனும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் எத்தனை ஆலயங்களில் இந்த வழக்கம் நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அந்த அறிவிப்புக்குப் பல இடங்களில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

"அமைச்சரே ஒரு புறாவுக்கு அக்கப்போரா? ஆம்பிளேல் தானே? சேட்டக் கழட்டுறதில என்ன பிரச்சினை வருது? அதுக்கு நீ மினக்கெட்டு குந்திரிந்து ஒரு கட்டுரையே எழுதுற அளவுக்கு நிலைமை என்ன மோசமா போய்ற்றுது?" என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. கொஞ்சம் பொறுமையாக வாசிச்சு முடிங்களன்!

இந்தியாவில், கோவில்களில் ஆண்கள் மேலாடையின்றி உட்செல்வது, கேரளத்துக்கு மட்டும் சிறப்பான ஒரு வழக்கம். (தமிழகத்திலேயே அந்தக் கட்டுப்பாடு பொதுவாக இல்லை!) எனினும் தென்னகத்தில் இந்த வழக்கம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படாத ஆலயங்களிலும் கூட, ஆலயத்தின் உள் மண்டபங்களுக்குள் நுழையும் போதும், வாகனம் காவுதல், தோத்திரம் பாடல் முதலான வழிபாட்டு முறைகளின் போதும் மட்டுமாவது, அதைச் செய்யும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக்கூடாது என்பது பொதுவான விதி.

ஈழத்தில், இந்த விதியை ஒழுங்காகவும் அழகாகவும் கடைப்பிடிக்கும் பண்பாட்டு நிலம், யாழ்ப்பாணம். கிழக்கிலோ வன்னி நிலப்பரப்பிலோ, இந்த விதியில் அத்தனை இறுக்கம் காட்டப்படுவதில்லை. அப்படி இறுக்கம் காட்டப்படும் ஆலயங்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை போல, கிழக்கின் பல ஆலயங்களில் இந்த வழக்கம் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக மாறி வருகிறது. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு குடமுழுக்கு இடம்பெற்ற போதும் இந்த வழக்கத்தைப் புதிதாகக் கொணர்ந்தார்கள். ஊர் மக்கள், இளைஞர்கள் பலரின் எதிர்ப்பின் மத்தியில் அது பிசுபிசுத்துப் போயிற்று. இப்போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு யாரும் மேலாடையைக் கழற்றுவதில்லை.

கிழக்கில் இந்த ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் ஏனைய ஆலயங்களின் திருவிழாக் காலத்தில் கோவில் சார்பான ஒருவர் வாசலில் நின்று "ஆம்பிளேல் சேட்டக் கழட்டுங்க" என்று உத்தரவிட்டுக் கொண்டிருப்பார். சில ஆண்கள் உள்மேலாடை - பெனியனுடன் நுழைய அவர் பார்த்தும் பாராமல் இருப்பார். ஆனால் அடுத்ததாக உள்மேலாடையுடன் நுழையும் ஒருவரை இவர் தடுத்து நிறுத்துவார். "அவன போக விட்டனீங்க தானே" என்று இவர் எகிறிப்பாய்வார். அவர் விடாப்பிடியாக ஆடையைக் கழற்றச் சொல்ல, இது பிறகு தன்மானப் பிரச்சினையாக மாறும். ஒன்று, அவர் பேசாமல் உள்மேலாடையையும் கழற்றி விட்டு இவரை முறைத்தபடி உள்ளே செல்வார். அல்லது, கூவி ஆர்ப்பாட்டம் பண்ணி, மீண்டும் மேலாடையை அணிந்து கொண்டு "உங்கட சாமிய நீங்களே வச்சிக்கொள்ளுங்க" என்றபடி வெளியேறிவிடுவார். இது இப்போதெல்லாம் நான் அடிக்கடி காண்கின்ற சம்பவங்களுள் ஒன்றாக மாறி இருக்கிறது.

திருவிழாக் காலம் என்று இல்லாமல், இதை இப்போது அன்றாட வழக்கமாக அமுல்படுத்தியுள்ள கீழைக்கரைக் கோவில்களில் வேறொரு சிக்கலைக் காண்கிறேன். அந்தக் கோவில்களில் திருமண வைபவம் நிகழும் போது, எல்லோரும் மேலாடையோடு அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது பொலீஸ், இராணுவம், மாணவர்கள் போன்றோர் நுழைய முற்படும் போது, சீருடையைக் காட்டி உள்நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். “விதி என்றால் எல்லாருக்கும் ஒன்றாகத் தானே இருக்கவேண்டும்?” என்று கோபத்தோடு கேட்கிறார்கள் அடியவர்கள். ஆக, இந்தக் கேள்விக்கான பதில் தான் என்ன? கோவிலுக்குள் நுழையும் போது ஆண்களின் மேலாடையைக் கழற்றச் சொல்வது சரியா? பிழையா? ஆண்கள் கோவிலுக்குள் மேலாடையைக் கழற்றுவது இந்தக் காலத்திலும் அவசியமான ஒன்றா? ஆம் என்று அடித்துக்கூறி சமூக வலைத்தளங்களில் சுவையான காரணம் ஒன்று பகிரப்படுகிறது. என்னவென்று தெரியுமா? கதிர்வீச்சு!

கதிர்வீச்சு என்றால், நீங்கள் எக்ஸ்றே, புற ஊதாக்கதிர்கள், ஐயோ! ஓசோன் படையில் ஓட்டை என்றெல்லாம் பெரிய அளவில் நினைத்துவிடக்கூடாது. நமது திரு.பேஸ்புக் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இங்கு சொல்லப்படும் கதிர்வீச்சு, நம் ஆலயங்களில் மட்டும் பூசை நேரத்தில் மந்திரங்கள் ஒலிக்கும் போது வெளியேறும் இறைசக்தி! இறைவனின் திருவருள் பூசை நேரத்தில் கருவறையிலிருந்து பரவுமாம். ஆண்கள் வெற்றுடலுடன் நிற்கும் போது அந்தக் கதிர்வீச்சு அவர்கள் மீது படிவதால், திருவருளை முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சட்டை போட்டால், அந்த கதிர் நம்மீது படாது!

சரி, ஆண்களென்றால் சட்டையைக் கழற்றி நிற்கலாம். ஐயோ, பெண்களுக்கு என்ன செய்வது? அப்படி வா வழிக்கு! நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை. அதற்குத் தான் அவர்கள் பெண்களை அதிகளவில் ஆபரணங்களை அணியச் சொன்னார்கள்.  பெண்கள் அணியும் பட்டாடைகளும் தங்க நகைகளும் இறைவன் திருவருளை ஈர்த்து, ஆண்கள் பெறும் அதே திருவருளை அவர்களுக்குப் பெற்றுத்தரும். எப்படி பேஸ்புக் சமத்துவம்? (இதெல்லாம் எந்த சமயப்புத்தகத்தில, எந்த ஆகமத்தில திருமுறைல சொன்னாங்கள் எண்டு நீங்க கேக்கக்கூடாது! அப்ப ஆம்பிளேல் நாங்க கோயிலுக்குள போட்டுக்கொண்டு போற மோதிரம், கைச்செயின், அரைக்கூடு தங்கமாலை இதெல்லாம் என்னத்துக்கு எண்டும் கேக்கக்கூடாது!)

விஞ்ஞானிகளுக்கும் ஒரு படி மேலே போய் இப்படியெல்லாம் இட்டுக்கட்டும் அதிமேதாவிகளை கண்டால் தூக்கிப்போட்டு நான்கு சாத்து சாத்தவேண்டும் போல் தோன்றும். சத்தியமாக நம் சமயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவியல் ஒளிந்திருக்கிறது தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அதற்காக சப்பைக்கட்டுச் சொல்லி, கண்ட மரபுகளையும், வழக்காறுகளையும் நியாயப்படுத்த முயலும் இந்த வதந்தி பரப்புநர்களை எந்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி தூக்கி உள்ளே போடலாம்?



சும்மாவே யோசியுங்கள். விஞ்ஞானத்தை மீறிப் பரவும் அந்தக் கதிர்வீச்சால் கேவலம், ஒரு சட்டைத்துணியை ஊடுருவ முடியாமல் இருக்கும் போது, எப்படி அதை தெய்வீக சக்தி என்பீர்கள்? சரி, முன்னோர் முன்னோர் என்கிறீர்களே, உங்கள் கண்டுபிடிப்பை - இறைவன் முன் வெற்றுடலுடன் நில், பெண்ணே நகை அணியாமல் கோவிலுக்குப் போகாதே என்பதை - பூடகமாகவேனும் ஏன் எந்த நாயன்மாரும் அருளாளரும் பாடவில்லை?

சரி, நீயே சொல், அந்தக் காரணம் பொய் என்றால், வேறு என்ன தான் சாத்தியம், அந்த வழக்கத்துக்கு? மிக எளிமையான காரியம் தான்.


தமிழ்த்திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நாட்டாமை வரும் போது, வேலைக்காரன் மடித்துக் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்து கீழிறக்கி விடுவதை, தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வதை. பொருளாதாரம், அந்தஸ்து என்பவற்றில் உயர்ந்த ஒருவரை காணும் போது, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமான சைகைகள் இவை. பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டபோது அங்கு நிறுத்தப்பட்ட இறைவர்கள்,  அரசனாலேயே போற்றப்பட்டனர். ஆகவே, அரசர்களுக்கே அரசனான இறைவன் முன் ஒரு சாதாரண குடிமகன் எப்படி நிற்கவேண்டும்? அரசன் முன் நிற்பது போலவே அவர்களில் தோளில் கிடக்கும் சால்வையை இடையில் கட்டிக்கொண்டார்கள்.

இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. நிலவுடைமைச் சமூகத்தில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மேல் துண்டு, பாதக்குறடு, குடை என்பன பொதுவாக சாதிய அடுக்கில் மேலே இருந்த சமூகங்களாலேயே கையாளப்பட்டன. கோவிலில் இறைவனே பெரியவன் என்பதால், இறைவன் முன் ஆதிக்க வர்க்கத்தினர் கூட அந்த அடையாளங்களைத் தவிர்த்தார்கள். குறித்த வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்திய அந்தப் பொருட்கள், காலனித்துவ ஆட்சியின் பின், எல்லா சமூகத்தினரும் பேதமின்றிப் பயன்படுத்துகின்ற - மேற்சட்டை, செருப்பு, தொப்பி என்று முறையே மாறிவிட்டன. ஆனால் அந்தஸ்தின் அடையாளமாக இல்லாமல் போன பின்பும், அவை ஆலயங்களில் அனுமதிக்கப்படவில்லை.

ஆக இது வெறும் சமூக மரபு தான். இதற்கு சமய ரீதியில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை. சைவ நூல்களான திருமுறைகள், வேதாகமங்கள், புராணாதிகாசங்கள் எதிலுமே இவற்றை அகற்றுவது கட்டாயம் என்ற ஆணைகள் எங்கும் வழங்கப்படாததன் பின்னணி இது தான். அவை அந்நியர் ஆட்சியின் பின்பேயே நம்மிடம் பரவலான வழக்கத்துக்கு வந்தவை.
உண்மையைச் சொன்னால், சமகாலத்தில் ஆண்கள் கோவிலுக்குள் சட்டையைக் கழற்றுவதில் எந்த வித பொருத்தப்பாடும் இல்லை. இன்று உடலை முழுவதும் மூடி இருப்பது தான் நாகரிகம், பண்பாடு. கிராமப்புறங்களில் கூடக் கண்டிருப்பீர்கள். நன்கு வியர்த்து வழியும் வேலை செய்யும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், விளையாட்டுவீரர்கள் கூட அங்கும் அரிதாகத் தான் மேலாடையைக் கழற்றுகிறார்கள்.

நகரங்களில், பூங்காக்களில் ஒருவன் அரைநிர்வாணமாக நின்றால் எப்படி முகம் சுழிப்பீர்களோ, அப்படித் தான் கோவிலில் ஆண்கள் வெற்றுடலுடன் நிற்பதையும் பார்க்கவேண்டும். அதற்கு மட்டும் புனிதப்பூச்சு பூச வேண்டிய தேவை எதற்கு?

கோவில்களில் ஆண்கள் மேலாடையைக் கழற்றுவதில் இன்னும் பல நடைமுறை விபரீதங்களும் இருக்கின்றன. இந்தக் காலத்தில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் வாளிப்பான உடல் கொண்டவர்கள் அல்ல. தின்றும் குடித்தும் வண்டியும் வயிறுமாக அலையும் ஆணழகர்கள் தான் அதிகம்.  கணினி யுகத்தின் லீலை! அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக கோவிலுக்குள் உலவமுடியும்? வாகனம் காவும் போது முன்னே தூக்குபவனின் முதுகில் வயிறு இடிக்கும். கோவிலை வளைக்கும் போது திரும்பினால் மண்டபத்தூணில் வயிறு முட்டிக்கொள்ளும். எம்பெருமானே என்றபடி தொபுக்கடீர் என அட்டாங்க நமஸ்காரம் செய்யக் கீழே விழுந்தால், வண்டியை புவியீர்ப்பு மையமாகக் கொண்டு உடல் அந்தரத்தில் தொங்கியபடி எளிமை ஊசல் இயக்கம் ஆற்றும். ஹூம். இருப்பவனுக்குத் தானே  வண்டி வைத்திருப்பதன் வேதனை தெரியும்.


அவர்களுக்கு இந்தப் பீதி என்றால், ஒட்டி உலர்ந்த எலும்புக்கூடாய் நடக்கும் ஒருவனுக்கு அருகில் குலுக்கித் தளுக்கி நடக்கும் தன் நண்பனைப் பார்த்து பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டிருக்கும். புனிதமான கோவிலுக்குள் பொறாமைப்படலாமா? அப்படி பொறாமைப்படும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தலாமா?

இந்தத் தொந்தியையும் ஓமக்குச்சிகளையுமாவது சகித்துக் கொள்ளலாம். கன்னங்கரிய மயிர் படர்ந்து கரடி போல எதிரே வரும் ஒருவர்,  பார்ப்பவரை முகஞ்சுழிக்க வைப்பார்.  தேமல், படர்தாமரை முதலான தோல் நோய்களுடன் கூனிக்குறுகி போகும் ஒருவரைப் பார்த்தபடி உங்களால் சந்தோசமாக சாமி கும்பிட முடியுமா?

இப்படி எல்லாம் இல்லை, நாங்கள் ஜிம்முக்குப் போகிறோம், நன்கு உடம்பைப் பேணுகிறோம் என்று சத்தம்  ஒருபுறம் கேட்கும்.  உள்ளூர் சூரியாக்கள். அவர்கள் இது தான் வாய்ப்பு என்று புஜத்தை மடக்கி தோளை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ஐந்தாறு தடவை இளம்பெண்களைச் சுற்றி வந்து,  பீதியைக் கிளப்புவார்கள். அவர்களைக் கண்டு நம்மூர் சமந்தாக்களும் ஜோதிகாக்களும் கவனம் சிதறினால் உங்களுக்குப் பரவாயில்லையா? ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடம் ஆயிற்றே?

எல்லாவற்றையும் விட தாங்கமுடியாதது இந்த வியர்வை நாற்றம். கூடி நிற்கும் மக்களின் உடலிலிருந்து வெளியேறும் வெம்மைக்கு நடுவே முன்னும் பின்னும் வியர்த்து வழிய சுவாமி திருவீதி உலா வரும் போது நெருக்குப்பட்டு நடந்தவர்களுக்கு தான் அது புரியும்.  அதற்குள் சில நவநாகரிக நங்கையர் பூசிவரும் நறுமணங்கள், அழகுசாதன கிரீம்கள் வியர்வையுடன் கலந்து பரவும் மணம் இருக்கிறதே! உவ்வே!

வியர்வை நாற்றத்தில் இன்னொரு வகையான கொடுமை இருக்கிறது.  கொலைகாரப்பாவி. சாதாரணமாக நம் மூக்குக்கு நேரே அக்குளைக் காட்டி கையைத் தூக்கி அரோகரா போட்டுவிட்டுப் போய்விடுவான். நாம் சுயநினைவுக்கு வருவதற்குள் கோவிலில் பூசை முடித்து திரையைப் போட்டிருப்பார்கள்.

மீண்டும் பிரச்சினைக்கு மிகத்தெளிவாக வருகிறேன். ஆலயங்களில் ஆண்களின் மேலாடையைக் கழற்றச் சொல்வது ஒரு தவறு என்றால், அதைக் கண்ணகியின் கோவிலில் செய்ய முனைவது இன்னொரு மாபெரும் தவறு.

சிவன், திருமால் முதலிய பெருந்தெய்வக்கோவில்களில், அவர்கள் தான் பேரரசர்கள், நாம் ஆளப்படும் அடியவர்கள். ஆனால், நாட்டார் மரபில் இருப்பது அந்த உறவல்ல. கண்ணகி கிராமிய மரபுக்குட்பட்ட தெய்வம்.  அவளுடன் அடியவர்களுக்கு இருப்பது மிக எளிமையான தாய் - பிள்ளை உறவு. வைகாசி மாதம் தோறும் தன் பூட்டப்பிள்ளைகளை - பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டுச் செல்ல வருகின்ற மூதன்னை அவள். அவள் முன் சாதாரண பிள்ளைகளாகத்தான் அடியவர்களும் நிற்கிறார்கள், “அம்மாளே” என்கிறார்கள். “தாயாரே” என்கிறார்கள்.  “அம்மம்மா கூ” என்கிறார்கள். அப்படித்தான் அந்த உறவும் நீடிக்க இயலும்.

பெருந்தெய்வக் கோவில்களில் மரபு, வழக்கத்தைக் காரணம் காட்டி, ஆடையைக் கழற்ற நிர்ப்பந்தித்தால், ஓரளவுக்கேனும் அதிலுள்ள நியாயத்தைக் கருதி ஏற்றுக்கொள்ள முடியும். அங்கு ஆண்டான் - அடிமை முறையைக் கைக்கொள்வதில் தவறில்லை. இதை  நாட்டார் மரபில் ஏன் இதைத் திணிக்க வேண்டும்? அங்கு அடியவர்களுக்கும் தெய்வத்துக்கும் உள்ள நேரடி உறவை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்?

(நான் அறிந்த ஒரு சைவ அறிஞர் பெருந்தெய்வக் கோவில்களிலும் ஆண்களுக்குள்ள ஆடைக்கட்டுப்பாட்டை எதிர்க்கிறார். சமய நூல்களிலேயே சொல்லப்பட்ட விடயங்களைக் கூட, காலத்தைக் கருதித் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் போது, வெறும் நிலவுடைமைச் சமுதாய அடையாளமான மேலாடைக் கட்டுப்பாட்டை, மரபு என்ற  ஒரே காரணத்துக்காக சைவக்கோவில்களில் தொடர்வது அனாவசியம் என்கிறார் அவர், உண்மை தானே?)  

“நல்லூரில  கழற்றுறாய் தானே? ஊர்க்கோவில் என்றால் இளக்காரமா?” என்று இன்னும் கொஞ்சப்பேர் வம்புக்கு வருகிறார்கள். அடப்பாவமே, நல்லூர்க்கோவிலும் நம்மூர்க்கோவிலும் ஒன்றா? இலங்கை ஜனாதிபதி கூட அங்கு போக வேண்டுமென்றால் சட்டையைக் கழற்ற வேண்டும். அவர்களது மரபுப்பற்றை அஞ்சி இந்தியப்பிரதமரே அங்கு செல்லாமல் தவிர்த்ததை ஊர் அறியும். அந்த மனோதிடமும் பிடிவாதமும் நம்மவர்களுக்கு இருக்கிறதா? திருமணத்துக்கு வருபவர்களையும் சீருடையோடு நுழைபவர்களையும் எப்படி வரவேற்று அனுமதிக்கிறார்கள் என்பதிலேயே நம்மவர் முகத்திரை கிழிந்து விடுகிறதே. முன்பே சொன்னது தான். புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட சூடு இது.

காலத்துக்கு ஒவ்வாத இத்தகைய அதிமேதாவித்தனங்களைப் புகுத்துபவர்கள் தான் பிரச்சினைக்குரியவர்கள். கண்ணகி கோவில்களின் அழகொழுகும் மடாலய அமைப்பை இடித்து ஆகம விதிப்படி மாற்றி கும்பாபிஷேகம் செய்பவர்களும் இந்தப் பேர்வழிகள் தான். தமிழ்க் காவியங்களையும் வழக்குரையையும் அகற்றி, அங்கெல்லாம் சமஸ்கிருத மந்திரங்களை ஓத அனுமதிப்பவர்களும் இவர்களே தான். 

கோவிலில் காணிக்கைகள் மிஞ்சினால், அந்தப் பணத்தில் ஏதாவது கோவில் மண்டபத்தை இடித்துத் திருத்தி வண்ணமடிப்பதற்கு செலவழிப்பதில் இவர்கள் தயங்குவதில்லை. ஆனால், கோவிலைச் சுற்றி வாழும் ஐந்தாறு ஏழைக்குடும்பங்களுக்கு அறக்கட்டளை ஒன்றை நடாத்துங்கள் என்றால் நம்மைப் பார்த்து முறைப்பார்கள்.

கோவிலுக்கு வெளியே வந்து "இளந்தலைமுறையினர் சமயத்தில் ஆர்வம் காட்டுகிறார்களில்லை, கோவிலுக்கு வருகிறார்களில்லை" என்று முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். ஆனால், காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளைத் தூக்கிப்பிடித்து இளைஞர்களை முகஞ்சுழிக்க வைப்பதில் இவர்களே முன்னிலையில் நிற்பார்கள். நம் இன்றைய இளஞ்சந்ததி பெற்று வந்த சாபம் அது. 

ஒரு மரபை, பண்பாட்டைத் தொடர முயலும் போது அதன் சமகாலப் பொருத்தப்பாட்டை சிந்திப்பது முக்கியம். அது காலத்துக்குப் பொருந்தாவிட்டால், எத்தனை மனதுக்குப் பிடித்ததென்றாலும் சரி, தூக்கி எறிந்துவிட்டுப் போகவேண்டியது தான். ஆடையால் உடலை மறைப்பது என்பது இன்றைய நாகரிகம், இன்றைய பண்பாடு. ஆடையின்றி அலைந்தது காட்டுமிராண்டிகள் காலம். காலத்தில் முன்னோக்கித் தான் போகமுடியும், போகவும் வேண்டும். மீண்டும் ஆடைக்குறைப்புச் செய்யச் சொல்வது பண்பாட்டில்  பின்னே செல்வது. அது இயற்கைக்கும் முரணானது கூட.

இந்த வழக்கத்தை அமுல் படுத்திய சிலர், அதற்கு பரவலாக கிளம்பிய எதிர்ப்பைக் கண்டபின், “இனி இது தான் எல்லாக் கோவிலிலும் நடைமுறை. உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.” என்று கறுவிக்கொண்டார்களாம். பொய்க்காரணங்களைக் கூறி ஒரு குறித்த சமயத்தவனை அவனது சொந்த வழிபாட்டுத்தலத்துக்குள் அனுமதிக்க மறுப்பது, அவனது அடிப்படை உரிமையை மீறும் தண்டனைக்குரிய குற்றம்.  அந்தக் குற்றத்துக்காக நீதிமன்றில் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரமுடியும் என்பதை அவர்கள் நினைவில் கொள்வது நலம். அச்சுறுத்தலா? அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன். 😊

(அரங்கம் பத்திரிகையின் 65ஆம் மற்றும் 66ஆம் இதழ்களில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »

கல்லால மரத்தடி

0 comments
இலங்கை மண்ணில் இன்று வதியும் தமிழ் ஆளுமைகளில் மகத்தானவர்களாக நான் மதிக்கும் மூவரில் ஒருவர் பேராசிரியர்.மௌனகுரு அவர்கள். (ஏனைய இருவரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி,பத்மநாதன் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர்). மட்டக்களப்பில் அலகிலா ஆடல் நூலறிமுகம் இடம்பெற்ற போது, தனக்கு பன்னிரு திருமுறைகளையும் பெற்றுத்தர முடியுமா என்று அவர் கேட்டிருந்தார். ஆறு மாதங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் பாரதப்பிரதமரின் உபயத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மௌனகுரு சேருக்காக நூல்களை வாங்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது. (பொன்னம்பலவாணேச்சரம் புறப்பட்ட எங்களுக்கு பிரதமர் வருகையால் பாதை மூடியிருந்தது. பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் திரும்பிவிட்டோம்)



பன்னிரு சைவத்திருமுறைகள். வைணவ நாலாயிரத் திவ்விய பிரபந்தங்கள். மொத்தம் இருபது புத்தகங்கள். இந்த நாளில் எனக்கு மட்டக்களப்புப் பக்கம் போகும் வாய்ப்பில்லை. அப்படியே போவதென்றாலும் இத்தனை சோதனைச்சாவடிகளைக் கடந்து இவ்வளவையும் காவிக்கொண்டு எப்படிச் செல்வது?

சேருக்கே அழைப்பெடுத்து விவரத்தைச் சொன்னோம். அவர் திங்கள் கொழும்பு வருவதாகச் சொன்னார். கூடவே மகிழ்ச்சியாகச் சொன்னார் "எனக்கு பிறந்தநாள் பரிசு அது". அன்று (யூன் 09) அவரது பிறந்தநாள் என்று பிறகு தான் தெரியவந்தது.

பிரதாபன் அண்ணா, நான், எமது இலங்கை சைவநெறிக் கழகத்தின் உபதலைவர் வினோ அண்ணா, பொருளாளர் ராஜ் அண்ணா, அவர் மனைவி சஹானா அண்ணி, சேருடன் நேற்று மாலை சந்திப்பு. சேரின் துணைவி பேராசிரியர் சித்ரலேகா அம்மாவும் இருந்தார். உண்மையிலேயே இரு துருவங்களின் சந்திப்பு அது. இந்தப்பக்கம் இளமை, துடிப்பு, சைவம், கடவுள். அந்தப்பக்கம் அனுபவம், நிதானம், மதமின்மை, கடவுள் மறுப்பு.

"இலங்கை - தமிழர் - சைவம் - சாதியம் - நாட்டாரியல்", 
"நாவலரைக் கொண்டாடிக்கொண்டே அவர் மறுத்த கண்ணகியையும் நாட்டாரியலையும் போற்றுதல்",
"நாட்டுக்கூத்தும் பண்பாட்டு மீட்டுருவாக்கமும்", 
"ஐயன் சூரனின் சைவப்புரட்சியும் சாதியமும்", 
"மரபார்ந்த சைவத்தை இற்றைப்படுத்த முயலும் போது எதிர்கொள்ளும் சவால்கள்" 
இப்படிப் பல தலைப்புகள், பல கோணங்கள், பல விவாதங்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. அண்ணாந்து கடிகாரத்தைப் பார்த்த போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. வேறு வழியின்றி தான் விடைபெற்றோம். இறுதியாக மௌனகுரு சேரும் சித்திரா அம்மாவும் சொன்ன கருத்து ஒன்று தான்.

பின்புறம் இடமிருந்து வலமாக, வினோ அண்ணா, பிரதாபன் அண்ணா, சித்ரா அம்மா, மௌனகுரு சேர், சஹானா அண்ணி, ராஜ் அண்ணா.

"சிந்தனையாளர்களாக நம்மால் செய்யக்கூடியது, தன் திசையில் நகரும் 'வரலாறு' எனும் ஆற்றைக் குச்சியால் கோடிழுத்து, திசைமாற்ற முடிந்ததாக திருப்திப்பட்டுக்கொள்வது தான். அந்த ஆறு நாம் கோடிழுத்த திசையில் நகர்வதும் நகராததும் காலத்தின் கையில் இருக்கிறது. கொள்கை அளவில் எந்த சித்தாந்தமுமே பயன் தராது. அது நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கு அறிவுபூர்வமான உரையாடல்கள் அவசியம். இணையம் என்னும் பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு வீணாக காலம் கழிப்பானேன்? விமர்சனங்களை தனிப்பட்ட தாக்குதலாகக் கருதாத, கருத முடியாத இளைஞர்களை ஒன்றிணைத்து இணையத்தில் ஈழத்தமிழ்ச்சைவம் சார் உரையாடல்களைத் தொடங்குங்கள். நாங்களும் இணைவோம்."

அவற்றை தென் திசை நோக்கி அமர்ந்த அந்த மௌனகுருவின் வார்த்தைகளாக உணர்ந்தேன். தேடுதலுள்ளோர் கூடுக. கல்லால மரம் தூரமில்லை.

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேர்! 



மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner