சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

0 comments
சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது (தி இந்து 2019).

சபரிமலைக்கோவிலுக்கு அதிகளவு அடியவர்களை அனுப்பிக்கொண்டிருப்பது தமிழகம். இப்போது  இலங்கையும் அடியவர்களை பெரும் எண்ணிக்கையில் அனுப்பத் தொடங்கியிருக்கிறது (Nagahawatte 2019). எனவே, சபரிமலைப் பிரச்சினையில் கருத்துக் கூறுவதற்கும், அதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும், கேரளத்துக்கு சமனான அளவு தார்மீக உரிமை, தமிழகம் மற்றும் இலங்கைக்கும் கிட்டியிருக்கிறது.

ஆனால் நம்மில் பலரும் சபரிமலைக் கோவிலின் பின்னணி, ஐயப்ப வழிபாட்டின் வரலாற்றுத் தோற்றம் இது எதுவுமே தெரியாமல், இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை அறியாமல், அந்தப் பிரச்சினை தொடங்கிய மையப்புள்ளியை நாம் அறிந்துகொள்ள முடியாது. 

சபரிமலைக் கோவில் (படம் நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்)
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு நம் கைகளில் இரண்டு வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்து, தமிழ் -  வடமொழி - மலையாள மொழிகளில் எழுந்த சபரிமலைத் தொன்மங்கள். இரண்டாவது ஓரளவு வரலாற்று நம்பகத்தன்மை கூடிய ஆவணங்களும் குறிப்புகளும். இவை இரண்டையும் சற்று விரிவாக ஆராய்வோம்.

1. சபரிமலைத் தொன்மங்கள்
'ஐயப்பன்' என்பது ஒரு அழகான தமிழ்ப்பெயர். அது ஐயன் + அப்பன் என்ற இரு சொற்களின் இணைவால் வந்தது. அப்பெயருக்கு ஆயிரம் ஆண்டு காலப் பழைமை உள்ளது என்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.

குமரி மாவட்டத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டுகளில் ஐயப்பன் என்பது ஆட்பெயராகவும் தெய்வப்பெயராகவும் பதிவாகி இருக்கிறது. உதாரணமாக,  கன்னியாகுமரி குகநாதசுவாமி ஆலயத்திலுள்ள இராஜாதிராஜசோழனின் 31ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (பொ.பி 1043) இடம்பெற்றுள்ள "ஐயப்பன் வேதிய சாஸ்தா"வைக் குறிப்பிடலாம் (Poduval 1990:76). (நாம் 'வேதிய சாஸ்தா' ஐயப்பனுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.)

ஆனால்,  இங்கு தவிர 'ஐயப்பன்' என்ற தனித்துவமான தெய்வமொன்று தமிழிலோ வடமொழியிலோ எங்குமே பதிவாகவில்லை. ஐயப்பன் பற்றிய  முதலாவது வடமொழி நூலான, பூதநாதோபாக்யானமே பொ.பி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது தான் (Sekar 1992:16). அத்தகைய தெய்வமொன்று பற்றிய பழைய இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைப்பதாயில்லை. பின்னர் ஐயப்பன் எனும் சபரிமலைத் தெய்வம் எப்படி வரலாற்றில் தோன்றினான்?

மகிஷி சங்காரம்
ஐயப்பன் பற்றிய பழைய இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்காதபோதும்,  அவன் மீதான பல நாட்டுப்புறப்பாடல்கள் கேரளப்பகுதியில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்படும் ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான கதை, பலரும் அறிந்தது தான்.  பாற்கடல் கடையும் போது திருமால் மோகினி வடிவெடுத்து அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். அதன் போது, சிவன் மோகினியின் அழகில் மயங்குவதை அடுத்து இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

பூவுலகில் தொல்லை கொடுத்துவரும்  மகிடாசுரனின் தங்கை மகிஷியை, அரிகரபுத்திரனான அக்குழந்தை அழிக்கும் என்று தேவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இரண்டு ஆண்களுக்குப் பிறந்த குழந்தையொன்றாலே தான் இறக்க வேண்டும் என்ற விபரீதமான வரத்தைப் பெற்றவள் அவள். அரிகரபுத்திரன் பந்தள நாட்டுக்கு அருகில் குழந்தையாகத் தோன்றுகிறார். குழந்தையில்லாமல் வருந்தி சிவனை நோக்கி நோன்பிருக்கும் பந்தள மன்னன் இராஜசேகரன், அப்பகுதிக்கு வேட்டையாட வரும் போது அந்தக்குழந்தையைக் கண்டெடுப்பதுடன், அதன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் 'மணிகண்டன்' (கண்டம் = கழுத்து) என்று பெயர் சூட்டி வளர்க்கிறான்.  

மணிகண்டன் வளர்கையிலேயே அரசனுக்கு இன்னொரு மகன் பிறக்கிறான். வளர்ப்பு மகனான மணிகண்டன் தன் சொந்த மகனின் அரசாட்சியில் உரிமை கோரலாம் என்ற அச்சத்தில் அவனை அழித்தொழிக்க முயல்கிறாள் பந்தள அரசி. அந்தத் திட்டன்படி அவள் தீராத தலைவலி வந்தவள் போல நடிக்க, அவள் குணமாவதற்கு புலிப்பால் தேவை என்று அறிவிக்கப்படுகிறது. அதை எடுத்துவரச் செல்லும் மணிகண்டன் காட்டில் மகிஷியுடன் போர் புரிந்து அவளை அழிக்கிறார். அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது.
மகிஷி மடிந்தாள்; மஞ்சள்மாது ஆனாள்!
(படம் நன்றி: Wings & Chirps)
சாபம் விலகி 'மஞ்சள்மாதா'வாக வடிவெடுத்த மகிஷி, மணிகண்டனை மணம்புரிய விரும்புகிறாள். இப்பிறவியில் தான் மணவொறுப்பு (பிரமச்சரிய) நோன்பு கைக்கொள்வதாகச் சொல்லும் மணிகண்டன், அவளை தன்னருகே மாளிகைபுரத்தம்மை என்ற பெயரில்  தெய்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.

மகிஷியின் கொட்டம் அடங்கியது என்று மகிழும் தேவர்கள், மணிகண்டன் புலிப்பால் பெற ஏதுவாக, புலிகளாக மாறி பந்தளம் வருகிறார்கள். அரசியும் ஏனையோரும் அதன் மூலம் மணிகண்டனின் தெய்வீக இயல்பை உணர்ந்து வணங்க, தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததாகச் சொல்லி விடைபெறும் மணிகண்டன் சபரிமலையில் யோகநிலையில் தவம் புரிய விரும்புகிறார். அங்கு அவர் தந்தை இராஜசேகரனால் ஒரு கோவில் அமைக்கப்படுகிறது. அதுவே இன்றைய சபரிமலை தர்மசாஸ்தா கோவில் (Jones & Ryan 2006:58-9). 

ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான இந்தக்கதை, சில இடங்களில் சிற்சில மாறுதல்களுடன் சொல்லப்படுகிறது. உதாரணமாக, தெய்வீகப் பெண்ணான லீலை, அவள் கணவன் தத்தாத்திரேயரின் சாபத்தால் மகிஷியாகப் பிறந்தாள் என்று ஒரு கதை சொல்கிறது (Sikand 2003:23-24). மற்றொரு கதை, தான் எய்யும் அம்பு சென்று வீழும் இடத்தில் தனக்குக் கோவில் அமைக்குமாறு பந்தள மன்னனுக்கு ஆணையிட்டு மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் வீழ்ந்ததாகச் சொல்கிறது (Varma 2018). இன்னொரு கதையில் மஞ்சள்மாதாவின் வேண்டுகோளை ஐயப்பனால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, 'சபரிமலைக்கு புதிய யாத்திரிகர்கள் (கன்னிச்சாமிகள்) யாரும் வருகை தராத ஆண்டில், தான் மணவொறுப்பு நோன்பை முடித்து, உன்னை மணப்பேன்' என்று மணிகண்டன் வாக்களிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கன்னிச்சாமிகள் யாத்திரை செய்வதை அறிந்து ஏமாந்தபடி மாளிகைபுரத்தம்மை காத்திருப்பதாகச் செல்கிறது அந்தக் கதை  (Haindavam Web 2011). இப்படிப் பல மாறுதல்களை ஐயப்பன் தொன்மங்களில் அவதானிக்கலாம்.

இந்த மகிஷி கதையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்ற, அதேவேளை வரலாற்று ரீதியில் முக்கியமான ஐயப்பன் பற்றிய தொன்மங்கள் இன்னும் நான்கு இருக்கின்றன. அவற்றில் ஒரு கதை மகிஷிக்குப் பதிலாக, மணிகண்டன் அழித்த உதயணன் எனும் கொள்ளையன் பற்றிச் சொல்கிறது. ஏனைய மூன்றும் முறையே சபரிமலை ஆளுகைக்கு உட்பட்ட பந்தள அரசகுலம்,  கேரளத்து சமூகங்களான ஈழவர், மலையரையர் ஆகிய மூன்று பிரிவினரிடையேயும் பிரபலமானவை.

அ) உதயணன் கதை
உதயணன் எனும் கொள்ளையன் சபரிமலை சாஸ்தா கோவிலை இடித்துக் கொள்ளையடித்து அதன் தந்திரியையும் (பூசகர்) கொல்கிறான். தந்திரியின் மகன் ஜயந்தன், மனம் வருந்தியபடி சாஸ்தாவைத் துதிக்கிறான். உதயணன் அருகிலிருந்த பந்தள அரசையும் சூறையாடி, அதன் இளவரசியைக் கவர்ந்து வருகிறான். சாஸ்தாவின் அருளால், ஜயந்தன் பந்தள இளவரசியைக் காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது. இருவரும் மறைவாக பொன்னம்பலமேட்டிற்குச் சென்று அங்கு மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகனாக சாஸ்தாவே ஐயப்பனாக அவதரிக்கிறார்.

எருமேலிக்கு அருகே  கோட்டைப்பாடியில் குடியிருந்த பட்டாணியரான (இஸ்லாமியர்) பாத்தும்மா -  அலிக்குட்டி தம்பதிகளின் மகன் வாவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஐயப்பன், உதயணனைக் கொன்று, சாஸ்தா கோவிலையும் மீட்கிறார் (Sadasivan 2000:123).. அங்கு பிற்காலத்தில் ஐயப்பன் தெய்வமாக வழிபடப்படுகிறார்.  

ஆ) பந்தள அரச குலக்கதை.
பந்தள அரண்மனை - இன்றைய தோற்றம்

பந்தள அரசகுலத்தின் நம்பிக்கையின் படி, அவர்கள் பாண்டியரில் ஒரு பிரிவினர்.  சோழர் மற்றும் முகலாயப் படையெடுப்புகளை அடுத்து மேற்கே இடம்பெயரும் அவர்களது மூதாதையர், இறுதியில் இந்த பந்தளத்தில் குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வந்த பந்தளத்து மூதாதையான இராஜசேகரனுக்கு மகனாகக் கிடைத்தவரே மணிகண்டன். 

சபரிமலை சாஸ்தா கோவிலை பந்தள அரசர்களிடமிருந்து தமிழ் மறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களை வெல்வதற்காக 'மூப்பில்' எனும் களரி ஆசான் துணையுடன் போருக்கு எழுகிறான் பந்தள இளவரசன் ஐயப்பன். இஞ்சிப்பாறையில் மறவரை வெல்லும் அவன், அங்குள்ள சாஸ்தா கோவிலில் துறவு பூண்டு யோகநிலையில் அமர்கிறான்.

இ) ஈழோதிசேஷம்
ஈழவர்கள் கேரளத்தின் முக்கியமான சமூகங்களில் ஒருவர்.  ஐயப்பன் பற்றிய ஈழவரின் தொன்மம், "ஈழோதிசேஷம்" எனும் நாட்டார் பாடல் வடிவில் கிடைத்திருக்கிறது. அதன்படி தண்ணீர்முக்கம் சீரப்பஞ்சிராவைச் சேர்ந்த 'மூப்பில்' எனும் ஈழவர் குல களரி ஆசானின் தலைசிறந்த மாணவன் ஐயப்பன். ஈழப்பயிற்று எனும் தற்காப்புக்கலையை மூப்பிலிடம் கற்றுக்கொண்ட ஐயப்பனுக்கும் மூப்பில் மகள் பூங்கொடிக்கும் காதல் மலர்ந்திருந்தது (Sadasivan 2000:123). மூப்பில் துணையுடன் சபரிமலையை ஆக்கிரமித்திருந்த மறவரை வெல்கிறான் ஐயப்பன். பின் அங்கேயே தங்கிவிடுகிறான். அவனைத் தேடி அங்கு வரும் பூங்கொடி, அவன் ஆணைக்கேற்ப தானும் துறவு பூண்டு பொன்னம்பலமேட்டில் தங்கியிருக்கச் செல்கிறாள். அவர்கள் மறைந்த பின்னர் தெய்வங்களாகி, ஐயப்பன் - மாளிகைபுரத்தம்மையாக கோவில் கொள்கிறார்கள்.

ஈ) மலையரையரின் மணிகண்டன்
1800களில் மலையரையர் குடியிருப்பு

இந்திய அரசால் பட்டியல் பழங்குடியினராக பதிவு செய்யப்பட்டுள்ள   மலையரையர்கள், கேரளத்தின் சபரிமலையை அண்டிய காடுகளில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்கள். அவர்களது நம்பிக்கையின் படி, கண்டன் -  கருத்தம்மை என்ற மலையரையத் தம்பதிகளுக்கு 41 நாள் நோன்பின் பயனாகப் பிறந்தவன் மணிகண்டன். மணிகண்டன் என்ற பெயர் அவன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் வந்ததல்ல; கண்டனின் மகன் அல்லது இளைய கண்டன் என்பதே 'மணிகண்டன்' என்ற பெயரின் பொருள். அவனையே பந்தள அரசர் தத்தெடுத்து வளர்க்கிறார்.

சபரிமலையின் பதினெட்டுப் படிகளும் மலையரையர் வாழும் பதினெட்டு மலைகளைக் குறிப்பது தான். மகிஷியை அழிப்பதற்காகவன்றி, சோழரின் ஆக்கிரமிப்பிலிருந்து தம்மைக் காக்கவே மணிகண்டன் சாஸ்தா அம்சமாக அவதரித்தான் என்கின்றார்கள் மலையரையர்கள்.  (Ayyappan 2018). அவர்களின் கதையிலும் மணிகண்டனின் சீரப்பஞ்சிராக் காதலி பூங்கொடி வருகிறாள். 

ஐயப்பன் தொடர்பான இன்னும் பல நாட்டார் பாடல்கள் கேரளத்தில் வழக்கில் உள்ளன. அவற்றில் கவனத்தை ஈர்க்கும் சில பாடல்கள் ஐயப்பனுடன் இலங்கையை இணைக்கின்றன. அதில் ஒன்றின் படி, ஐயப்பன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு இளவரசியொருத்தியை மணந்துகொள்கிறான். இன்னொரு பாடலின் படி, பூங்கொடியை உதயணன் கொலை செய்த பின்னர் மனமுடைந்து போகும் ஐயப்பன், இலங்கைக்குச் சென்று புத்த பிக்குவாக மாறுகின்றான் (Sadasivan 2000:124). 

ஐயப்ப வணக்கம் ஒரு மாவீர வழிபாடு
ஐயப்பன் ஒரு அவதாரம், இரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் நடமாடியவன் என்பதை ஐயப்ப அடியவர்களும் மறுப்பதில்லை. ஐயப்ப வழிபாடு, மறைந்த ஒருவர் தெய்வமாக மாறிய கதையே தான். மகிஷியின் கதை தவிர்த்து, ஏனைய நான்கு கதைகளிலும் ஒரு இயல்பான வரலாற்று அம்சம் இருப்பதைக் காணமுடிகின்றது. அந்த எல்லாக் கதைகளையும் தொகுத்து நோக்கும் போது, நமக்கு 'ஐயப்பன்' எனும் வரலாற்று நாயகன் ஒருவனின் வாழ்க்கை துலங்கி வருகின்றது.

அவன் மணிகண்டன் என்ற பெயரில் வாழ்ந்த பந்தள இளவரசன். எனினும் அவன் முறையான பந்தள அரச குலத்தவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மேற்படி எல்லாத் தொன்மங்களுமே உறுதி கூறுவதைக் காணலாம். ஆனால் அவனது வீரம், சபரிமலையை ஆக்கிரமித்திருந்த உதயணன் அல்லது சோழர் அல்லது மறவர் என்று இனங்காணப்பட்ட யாரோ ஒரு எதிரிகள் படையை வீழ்த்துவதில் உதவி இருந்திருக்கிறது.

மகிஷியின் கதையை, ஐயப்பனை அரிகரபுத்திரன் சார்ந்த பௌராணிக மரபுக்குள் உள்ளீர்க்க முயன்ற முயற்சியாகவே கொள்ளமுடியும். அல்லது சங்க இலக்கியங்களில்  'எருமை நாடு' என்று போற்றப்பட்ட இன்றைய மகிஷ ஊர் (மைசூரு) அரசுக்கும் சேர நாட்டுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடொன்றையும் அது மறைமுகமாகக் கூறக்கூடும். எவ்வாறெனினும், ஐயப்பன் வாழ்வில் பெண்ணொருத்திக்கு இடமிருந்தது என்பதை பூங்கொடி பற்றிய கதைகளும், அவனுக்கருகே இன்றும் கோவில் கொண்டுள்ள மாளிகைபுரத்தம்மை அல்லது மஞ்சள்மாதா சன்னதியும் சான்று கூறுகின்றன.

எந்தவொரு கதையிலும் ஐயப்பனுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. அவன் சபரிமலையில் யோகத்தில் அமர்வதாகவோ, அல்லது இலங்கைக்குச் செல்வதாகவோ அவை முடிவடைகின்றன. பூங்கொடியின் மறைவாலோ, அல்லது போரில் வெறுப்புற்றோ, அவன் மிக இளம்வயதிலேயே துறவு பூண்டிருக்கக்கூடும்; பல வரலாற்றாசிரியர்கள் ஊகிப்பது போலவே அவன் (இலங்கையில்?) பௌத்தத்தைத் தழுவியிருக்கவும் கூடும்.

மேற்படி தொன்மங்களில் துலங்கும் இன்னொன்றும் உள்ளது. சபரிமலையில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தது. மணிகண்டன் ஒரு உண்மையான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அந்த சாஸ்தா கோவில், அவனுக்கும் முந்தியது.  அவன் மறைந்த பிற்காலத்தில்,  சாஸ்தாவின் அவதாரம் ஆகின்றான். பின் சபரிமலையின் முதன்மைத் தெய்வமும் அவனே ஆகின்றான். 

2) ஆவணங்களும் குறிப்புகளும் 
மேலே, தொன்மங்களைப் பகுப்பாய்ந்து ஐயப்பன் என்ற வரலாற்றுப் பாத்திரமொன்றை மீள்கட்டமைக்க முயன்றிருந்தோம். மேலதிக வரலாற்றுத் தகவல்களை நாம் சேகரித்துக் கொள்வதற்கு, இருவகையான ஆவணங்கள் கைகொடுக்கின்றன. ஒன்று, பிரித்தானிய ஆவணங்கள், இரண்டு கடந்த நூற்றாண்டின் நேரடிச் சான்றுகள்.

வார்டின் கணக்கெடுப்பு அறிக்கை
பிரித்தானிய ஆவணங்களில் முக்கியமானது, 1819 அளவில் கொச்சி -  திருவிதாங்கூர் பகுதிகளைப் பற்றி மெட்ராஸ் அதிகாரி பி.எஸ்.வார்டு (B.S.Ward) என்பவர் எழுதிய கணக்கெடுப்பு அறிக்கை. இதுவே சபரிமலை பற்றி தற்போது கிடைத்துள்ள ஆவணங்களில் மிகப்பழைமையானது. கடந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தின் போது, 'இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் சூல்தகவு கொண்ட பெண்கள் இங்கு நுழைய அனுமதி இருக்கவில்லை' என்ற வாதத்திற்கு சார்பாக இந்த ஆவணமே முன்வைக்கப்பட்டது.  சபரிமலைக்கோவில் செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருப்பது, யனவரி மாதம் ஐந்து நாட்கள் அங்கு (மகரவிளக்கு) விழா நிகழ்வது, 10 - 15 ஆயிரம் அடியவர்கள் வருகை தருவது,  அங்குள்ள பதினெட்டு படிகள், பந்தள இராசாவின் பழைய வசிப்பிடம் பற்றிய குறிப்புகள் இதில் வருகின்றன. (Ward 1898:70, 71)
வார்டின் நூலில் வருகின்ற 'சௌரிமல்லை' (Chourymallay) பற்றிய குறிப்பு பப.69-70

சாமுவேலின் 'வேட்டைத்தெய்வம் ஐயப்பன்' 
இதற்குப் பின், சாமுவேல் மாட்டிர் (Mateer Samuel) என்ற பாதிரியாரால் 1883இல் எழுதப்பட்ட "Native life in Travancore" என்ற நூலில் வரும் குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதில் மலையரையர்கள் பற்றி எழுதும் போது சபரிமலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சாமுவேல். (Samuel 1883:75-77)  

"மலையரையர்கள் தமக்கு அருகிலிருந்த சபரிமலையை வழிபட்டு வந்தார்கள். தாளஞானி அல்லது தாலனானி என்ற மலையரையர், வேட்டைத்தெய்வமான ஐயப்பனின் வெளிச்சப்பாடாக (சாமியாடி) இருந்தவர். அவருடன் குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில், அருகில் குடியிருந்த சோக்கர் (ஈழவர்) குலத்தார் யாருக்கும் தெரியாமல் அவரைக் கொன்று  புதைத்து விடுகிறார்கள். ஐயப்பனின் வாகனமான புலிகள், அவரது புதைகுழியைத் தோண்டி பிணத்தை வெளியே எடுக்க, காட்டு யானைகள் அப்பிணத்தை இழுத்து வந்து, ஏனைய மலையரையர்கள் காணும் படி போட்டுச் செல்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து தீவிரமாகப் பரவிய அம்மை நோய், பல சோக்கர் உயிரைப் பறிக்கிறது. சோக்கரின் வெளிச்சப்பாடு, அது அவர்கள் செய்த கொடூரத்துக்காக சாஸ்தாவு தெய்வம் சீற்றம் கொண்டு தரும் தண்டனை என்று அறிவிக்கிறார். சாஸ்தாவு அல்லது சாத்தன் என்பது திருவிதாங்கூர் மலைப்பகுதி எல்லைத் தெய்வம்)
மலையரையர்கள் வழிபட்ட சிலை,
 சாமுவேலின் நூலிலிருந்து.

சோக்கர்கள் தம் தவறுக்குக் கழுவாயாக, கொல்லப்பட்ட மலையரைய வெளிச்சப்பாட்டை தெய்வமாக்கி ஒரு சிலை செய்து, ஒரு சிறுகோவில் கட்டிக்கொடுக்கிறார்கள். தாலஞானியின் வாரிசு ஒருவர் அக்கோவிலுக்கு பூசகராக அமர்கிறார். எனினும், ஹென்ரி பேகர் என்ற போதகரின் முயற்சியில் தாலனானியின் எல்லா வாரிசுகளும்  கிறிஸ்தவர்களாக மதம்மாறி விட்டார்கள். இறுதியாக  வழிபட்ட வாரிசும் அந்தச் சிலை, வாள், சிலம்பு உள்ளிட்ட வழிபாட்டுப்பொருட்களை இன்னொரு பாதிரியாரான டபிள்யூ ஏ ரிச்சர்டிடம் 1881இல் கொடுத்துவிட்டார்." 

சாமுவேலின் நூலிலுள்ள செய்தி இத்தனையும் தான்.  இந்த நூல்,  ஐயப்பனின் வாகனமாக புலியையும், கூடவே யானையையும் சொல்லும் தகவல் சிறப்பிடம் பெறுகின்றது. ஐயப்ப வழிபாட்டில் மலையரையர் மற்றும் ஈழவர் குடிகள் கொண்டிருந்த தொடர்பும் இந்நூலில் உறுதிப்படுத்தப்படுகிறது. ஐயப்பன் வேட்டைத்தெய்வம் என்றும் சாஸ்தாவு எல்லைத்தெய்வம் என்றும் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளதையும் நாம் ஊன்றி நோக்கவேண்டும்.

திருவிதாங்கூரும் பந்தளமும்
பிரித்தானியக் குறிப்புகளைத் தவிர, பந்தள மன்னர்கள் பற்றிய இரு குறிப்புகளும் இக்காலவேளையில் முக்கியம் பெறுகின்றன. திப்பு சுல்தானுக்கு எதிராக திருவிதாங்கூர் அரசு மேற்கொண்ட படையெடுப்புக்கு உதவித்தொகையாக அல்லது கப்பமாக, பந்தள அரசு சுமார் 2 இலட்சம் பெறுமதியான பணத்தைக் கொடுக்கவேண்டி இருந்தது. எனினும் அதைக் கொடுக்கமுடியாமையால் 1820இல் திருவிதாங்கூர் அரசிடம் தமக்கு வருமானம் அளிக்கின்ற தலமான சபரிமலையை ஒப்படைக்க நேர்ந்ததாக பந்தள அரசின் இக்கால சந்ததிகள் கூறிக்கொள்கிறார்கள் (Ayyappan 2018). அதே காலப்பகுதியிலேயே சபரிமலைப் பகுதியை மதிப்பாய்வு செய்த வார்டு, அங்கிருந்த குடில் முன்பு பந்தள ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததையும் தன் காலத்தில் அங்கு (திருவிதாங்கூர்?) அரசின் பணியாளர்களே இருப்பதையும் பதிவு செய்துள்ளார் என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

சபரிமலையிலுள்ள வாவர் சுவாமி நடை. (நன்றி: 'East Coast Daily' web)

இவற்றையெல்லாம் தவிர, வாவரின் வழியில் வந்ததாக உரிமைகோரிய ஒரு குடும்பத்தினர், சபரிமலை மீதான தமது பூசையுரிமையை நிலைநாட்ட கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்று கொல்லம் ஆண்டு 884 (பொ.பி 1708) இல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது (Sadasivan 2000:129). இந்த ஆவணம் எத்தகையது; இதில் சொல்லப்பட்ட தகவல் என்ன என்பது பற்றிய யாதொரு விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

1902  தீவிபத்தும் சிலை பிரதிஷ்டையும்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, சபரிமலை தொடர்பான சமகாலச் சான்றுகள் ஓரளவு தொடர்ச்சியாகக் கிடைத்தபடி இருக்கின்றன. அவற்றில் 1902இல் இடம்பெற்ற தீவிபத்து முக்கியமானது. இவ்விபத்தில் கோவிலின் பெரும்பாகம் சிதைந்தழிந்து போனதாகத் தெரிகின்றது (Daushanti & Panchajanyaa 2018).

கருவறையில் இருந்த ஐயப்பனின் திருவுருவத்தில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் அடுத்து முக்கியம் பெறுகின்றது. கொல்லம் ஆண்டு 1085இல் (பொ.பி 1910) அந்தப் பிரதிஷ்டையானது, பிரபாகர ஆச்சாரியாரால் செய்யப்பட்டதாக அச்சாசனம் சொல்கின்றது (Rao 1988:210). இதுவே ஐயப்பனின் முதலாவது உலோக வார்ப்பாகலாம். மேற்படி 1902இல் கோவில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பின் அங்கு இடம்பெற்ற திருப்பணிகளில் ஒன்றாகவே இந்த சிலை வார்ப்பைக் கொள்ளமுடிகின்றது. எனினும் இச்சிலை மீண்டும் 1950இல் கோவில் எரிக்கப்பட்டபோது சேதமானது.

1950 கோவில் எரிப்பு
இதை அடுத்து, சபரிமலை வரலாற்றில் முக்கியம் பெறுவது,  1950இல் நிகழ்ந்த கோவில் எரிப்பு. திட்டமிட்ட சதியாக அமைந்த இவ்வெரிப்பில் கோவிலின் கதவுகள், ஐயப்பன் திருவுருவம் என்பன கடுமையாகச் சேதமடைந்தன (OnManorama Web 2018).  இச்செயலின் சூத்திரதாரிகள் யாரென்பது இன்று வரை மர்மமாகவே இருக்கும் போதும், அப்போது சபரிமலை அருகே நிலங்களை வாங்கியிருந்த கிறிஸ்தவர்கள் (Daushanti & Panchajanyaa 2018) அல்லது தமிழர்கள் (Kjærholm 1984:5) இந்தச் சதியைச் செய்திருப்பார்கள் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. முரண்நகையாக, சபரிமலை மேலும் புகழ்பெறவும், தமிழரின் விருப்பத்துக்குரிய முதன்மைத் தெய்வமாக மாறவும், இந்த 1950 கோவில் எரிப்பே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

1950  சிதைப்பில் பின்னப்படுத்தப்பட்ட ஐயப்பன் திருவுருவமும் கோவிலும்
(நன்றி: 'My India My Glory' Web)

டென்மார்க்கின் மானுடவியல் ஆய்வாளரான லார் கியேர்கொல்ம் (Lars Kjærholm), தமிழகத்தில், குறிப்பாக மதுரைப்பகுதியில் 1940களுக்கு முன்பு ஐயப்ப வழிபாடு அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் (Kjærholm 1984:2-4). 1950 சபரிமலை தீவைப்பில் தமிழருக்கும் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு கழுவாய் தேடவேண்டுமென்று சில மதுரைவாசிகள் சிந்தித்தமை பற்றி அவர் தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் விவரிக்கின்றார். அவர்களில் முதன்மையானவர் தீவிர இறையன்பரான பி.டி.ராஜன்  என்று சுட்டிக்காட்டும் கியேர்கொல்ம், அவர் பின்னப்பட்ட ஐயப்பன் சிலைக்குப் பதிலாக புதிய சிலை செய்துகொடுப்பதில் முன்னின்றதையும், மதுரைப்பகுதி முழுவதும் ஐயப்ப வழிபாட்டுச் சங்கங்கள் பரவலடைவதற்கு காரணமாக இருந்ததையும் மேலும் குறிப்பிட்டுள்ளார் (Kjærholm 1984:4-6). இவ்வாறு உருவாக்கப்பட்டு இன்று சபரிமலையில் நிறுவப்பட்டுள்ள புதிய மூலவர் சிலை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு, செங்கன்னூரில் வசிக்கும் தட்டாவிழா குடும்பத்தைச் சேர்ந்த இரு சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டதாகும் (Sabarimalai Melsanthi Web n.d)

1975இல் தமிழ் -  மலையாளம் இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 'சுவாமி ஐயப்பன்' எனும் திரைப்படம் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைக்கிறது. மேற்படி "சுவாமி ஐயப்பன்" திரைப்படத்தில் தான் புகழ்பெற்ற ஐயப்பன் தாலாட்டான 'ஹரிவராசனம்' ஜி.தேவராஜன் இசையில் ஜேசுதாசால்  பாடப்படுகிறது. கும்பக்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பாடல், அத்திரைப்படம் வெளியான 1975இற்குப் பின் சபரிமலையில் தினமும் நடை அடைக்கும் போது ஒலிபரப்பப்படுவது கோவிலின் வழமையாகின்றது (MyNation 2018). அண்மையில், இப்பாடலைப் பாடியவர் ஸ்ரீநிவாச ஐயர் அல்ல; தனது பாட்டனாரின் தமக்கை 'கொன்னக்காது ஜானகி அம்மா' தான் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் திரு.பத்மகுமார் உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது (Kuttoor 2018

தொடர்ந்து,  தமிழகத்தை ஐயப்ப பக்தி அலை மிக வேகமாகத் தாக்க ஆரம்பிக்கின்றது. திரையுலக நட்சத்திரங்களான நம்பியார், பாடகர் கே.ஜேசுதாஸ் போன்றவர்கள் முன்னணியில் நிற்க, ஐயப்ப வழிபாடு பொதுமக்களை தீவிரமாகச் சென்றடைகிறது. தமிழகமெங்கும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் கோஷம் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

மகரவிளக்கு
பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு

சபரிமலை தொடர்பான முக்கியமான இன்னொரு நிகழ்வு, 2000களின் பிற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மகரவிளக்கு சர்ச்சை.  அதுவரை மகரவிளக்கு அல்லது மகரஜோதி என்பது, மகர சங்கிராந்தி அன்று,  பொன்னம்பலமேட்டில் கணநேரம் தோன்றி மறைகின்ற நட்சத்திரம்  என்றே அடியவர்களால் நம்பப்பட்டு வந்தது. 1990 மற்றும் 2011 மகரவிளக்கு  தரிசனங்களின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, மகரவிளக்கு அற்புதமல்ல; மனிதச்செயலே என்பதை கேரள அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முற்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில், சபரிமலை மேல்சாந்தியான கண்டரரு மகேஸ்வரரும் அதை அடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் அது மனிதர்களால் உண்டாக்கப்படுவது தான், கேரள மின்வாரியப் பணியாளர்களே மகர விளக்கை பொன்னம்பலமேட்டில் ஏற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர் (Kuttoor 2011).

மலையரையரும் நம்பூதிரிகளும்
மகரவிளக்கு தொடர்பான உண்மை வெளியான பின்னணியில்,  சபரிமலையில் மறக்கப்பட்ட சில விடயங்கள் வெளிவர ஆரம்பித்தன. சபரிமலையில் இன்று மேல்சாந்திகளாக இருப்பவர்கள், செங்கன்னூர்  முந்தன்காவு பகுதியைச் சேர்ந்த 'தாழமோன் மடம்' எனும் குடும்பத்து நம்பூதிரிகள். சபரிமலை தமது வழிபாட்டுத்தலம் என்றும்,  1902்இல் பந்தள அரசு தம்மை சபரிமலையிலிருந்து வெளியேற்றி, தாழமோன் மடம் நம்பூதிரி குடும்பத்தை ஆந்திரத்திலிருந்து வரவழைத்து பூசைக்கு அமர்த்தியது என்றும் மலையரையர்கள் சொல்கிறார்கள் (Rakesh 2018;  Konikkara 2018). இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், மலையரையரின் இந்த வெளியேற்றத்துக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும்.

எனினும் மகர விளக்கை ஏற்றும் உரிமை மாத்திரம் அவர்களால் சபரிமலைக்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாக  தொடர்ந்து வந்திருக்கிறது.  மகரவிளக்கேற்றும் வழக்கம் 55 ஆண்டுகளாகவே கேரள அரசிடம் இருப்பதாகவும், அதற்கு முன் சபரிகிரி நீர்மின் திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மலையரையர்  பழங்குடியினரே மகரவிளக்கேற்றி வந்ததாகவும், கேரள அரசு நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. (The Hindu 2011)

சபரிமலை ஐயப்பனுக்கு தேனபிஷேகம் செய்யும் உரிமை தமக்கு இருந்தது என்றும் தற்போது அது நெய்யபிஷேகமாக மாற்றமுற்றிருக்கிறது என்றும் கூறுகின்ற மலையரையர்கள்,  தமக்கென்றிருந்த வெளிச்சப்பாடு கட்டுச்சொல்லும் வழக்கமும் 1950இற்குப் பின் ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் (Sudheesh 2018). மேலே பிரித்தானியக் குறிப்பில் 1800களை அண்டி வாழ்ந்த தாலனானி எனும் ஐயப்ப வெளிச்சப்பாட்டை இங்கு நாம் நினைவுகூரலாம். மகரவிளக்கு பற்றிய உண்மை வெளியான பின், மீண்டும் தமக்கு பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கேற்றும் உரிமை தரப்பட வேண்டும் என்று மலையரையர்கள் நீதிமன்றம் ஏறியிருந்தார்கள் (Varier 2016).

ஒட்டுமொத்த வரலாற்றுச்சுருக்கம்
இப்படி தொன்மங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து சபரிமலையின் ஒட்டுமொத்த வரலாற்றை நாம் இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

சபரிமலையில் இருந்த ஐயப்பன் கோவில், மிகப்பழைமை வாய்ந்தது.  சாதிபேதமின்றி நிறையக்குலங்கள் அங்கு சாஸ்தாவை வழிபட்டு வந்திருக்கிறார்கள். மலையரையர்கள், ஈழவர்கள் முதலிய குலங்கள் அதில் முதன்மை வகித்தாலும், பிற்காலத்தில் அப்பகுதியை ஆண்ட பந்தள மன்னர்கள் வசம் அக்கோவில் உரிமை சென்றிருக்கிறது. பாண்டியர் கோமரபில் வந்த பந்தள மன்னர்கள், இவ்வாறு இங்கு வந்தது சுமார் 12ஆம் நூற்றாண்டளவில் என்று சொல்லப்படுகிறது. எனினும், அவர்களிடம் நிலவும் பழங்கதையொன்றில் மதுரை திருமலை நாயக்கருடனும் பாண்டிநாட்டு மறவர்களுடனும் இவர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு நினைவுகூரப்படுவதால், இவர்கள் 17ஆம் நூற்றாண்டளவில் பந்தளத்தில் குடியேறியிருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும்.

பந்தள அரசின் ஆரம்பக் காலத்தில் அவ்வரசால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மணிகண்டன் எனும் மலையரையர் குல இளைஞன், கிழக்கே ஏற்பட்ட மறவர் அல்லது தமிழர் ஆக்கிரமிப்பொன்றிலிருந்து சபரிமலைப் பகுதியை காப்பாற்றியிருக்கிறான். அம்முயற்சியில் அவன் காதலியும் நண்பர்களும் மரித்ததால், அல்லது வேறு காரணங்களால், அவன் துறவு பூணுகிறான் அல்லது யாரும் அறியாமல் இலங்கை செல்கிறான். அவனது செயற்கருஞ்செயல்களால் அவனை சாஸ்தாவின் அவதாரம் என்று குடிகள் சபரிமலையில் வழிபட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் காதலி பூங்கொடி அவனருகிலேயே மாளிகைபுரத்தம்மையாகக் கோவில் கொள்கின்ற போதும், அவனை நெருங்கவும் வழிபடவும் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவனது களரி ஆசானும், இஸ்லாமிய நண்பனொருவனும் முறையே கடுத்தசுவாமி, வாவர் சுவாமி என்ற பெயர்களில் கோவில் கொள்கிறார்கள்.  இறுதியில் மணிகண்டனே ஐயப்பன் கோவிலின் மூலவரும் ஆகின்றான்.  


மலையரையர்களால் பொன்னம்பலமேட்டில் செய்யப்பட்ட விளக்கு வழிபாடு, மகரவிளக்கு எனும் சடங்காக வளர்ந்து சபரிமலையின் திருவிழாவாக மலர்கிறது. தொடர்ந்தும் சாதிபேதமின்றி பல குலங்கள் அவ்விழாவில் கலந்து கொள்கின்றன. தெற்கே திருவிதாங்கூர் அரசு பலம் வாய்ந்ததாக வளர்ச்சி கண்டபோது, பந்தள அரசு அதற்கு கீழ்ப்படிய நேரிட்டதுடன், ஒரு கட்டத்தில் சபரிமலையையும் அவ்வரசின் வசம் கையளிக்கவேண்டி ஏற்பட்டது.  


கேரளத்தின் எல்லா நாட்டார் தெய்வக் கோவில்களும் போலவே, சபரிமலையிலும் பிற்காலத்தில் நம்பூதிரிகளின் பூசனை ஏற்(கப்)பட்டிருக்கிறது. மலையரையர்கள் கோவிலிலிருந்து விலக்கப்பட்டு  தாழமோன் மடத்து நம்பூதிரிகள் பூசகர்களாக அமர்த்தப்படுகிறார்கள். இந்த முரண்பாட்டுக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும். கேரள மேல்சாந்திகளில் முதலாமவர் என்று கருதக்கூடிய கண்டரரு பிரபாகரரால் ஐயப்பனின்   திருவுருவம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவிதாங்கூரிலிருந்து கிழக்குப்புறமாக பாண்டிநாட்டிலும் ஐயப்ப வழிபாடு அறிமுகமாகின்றது. கோவில் தொடர்பில் முரண்பட்ட ஒரு குழுவினரால் 1950இல் கோவில் தீவைத்து சிதைக்கப்படுகிறது.  அது அக்கோவிலை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்தி, கோவிலின் பிரபலத்தை அதிகரிக்கிறது. திரைப்படங்கள், திரையுலக நட்சத்திரங்கள் என்போரால் சபரிமலை மேலும் புகழ் பெறுகிறது. ஐயப்பன் கலியுக வரதனாக தென்னகம் தாண்டி வளர்ந்தெழுகின்றான்.


சபரிமலை வரலாறு தொடர்பாக, நம் முன் இன்னும் சில கேள்விகள் பேருரு எடுத்து நிற்கின்றன.

1. ஐயப்பன் வரலாற்றில் சாஸ்தா தொடர்புறுவதைக் காணமுடிகின்றது. தமிழகத்தின் ஐயனாருடனும் அவரை அதிகம் தொடர்புபடுத்துகிறார்களே, இது சரியா?
2. வெறும், ஊடகப் பரப்புரை மாத்திரமே ஐயப்ப வழிபாட்டை ஊக்குவிக்கப் போதுமானதாக
இருந்திருக்குமா? ஐயப்பன் பிரபலமடைந்ததன் பின்னணியில் இருந்த வேறு வரலாற்றுக் காரணிகள் என்னென்ன?
3. இப்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூல்தகவு மகளிரின் கோவில் நுழைவு பற்றிய முடிவு எத்தகையதாக இருக்கவேண்டும்?

இவை இன்னும் முக்கியமான, சற்று ஆழமான கேள்விகள். இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் சற்று ஆறுதலாக விரிவாகப் பார்ப்போம்.



உசாவியவை:
மேலும் வாசிக்க »

ஆழ்ந்த இரங்கல்கள், RIP!

2 comments
பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன்.  அதற்குக் காரணம்  இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd"

பிறந்தநாள் ஒவ்வொன்றும் நாம் கடந்த பாதையையும் கடக்கப் போகும் பாதையையும் நினைவுறுத்தும் மைல்கற்கள் என்பதாலேயே முக்கியம் பெறுகின்றன. அதில் உண்மையான அன்புடனும், மனம் நிறைந்த கனிவுடனும் வாழ்த்தும் ஆசியும் தெரிவிப்போர் என்றென்றும் நம் நன்றிக்குரியவர்கள் தான். நான்கைந்து நாள் கடந்து சென்ற பின்னாலும், பேஸ்புக்கிலோ கைபேசியிலோ வாழ்த்துச் சொன்ன யாரையுமே தவறவிடாமல் நன்றி சொல்வதே என் வழக்கம். உண்மையைச் சொல்லப்போனால், பேஸ்புக்கில் பிறந்தநாள் தென்படுவதை முடக்கி வைத்திருப்பதே வாழ்த்துவோர் எண்ணிக்கை அதிகரித்து யாரும் தவறவிடப்படக் கூடாதே என்ற அச்சத்தால் தான். 

ஆக, இந்த 'HBD' பேர்வழிகளைப் பொறுத்தவரை, 'கடமைக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து விட வேண்டும்', அவ்வளவு தான். நம் பிறந்தநாளுக்காக தன் வாழ்க்கையின் ஒரு சில கணங்களைக் கூட, "பிறந்தநாள் வாழ்த்து" என்றோ "Happy Birthday" என்றோ தட்டச்சுவதில் செலவழிக்க விரும்பாத இவர்களின் வாழ்த்தால் நமக்கு அப்படி என்ன ஆசி கிடைத்துவிடப் போகிறது?  நெருங்கியவர்கள் என்றால் 'ஏண்டா இவனுக்கு விஷ் பண்ணம்?' என்று யோசிக்க வைக்குமளவுக்கு, நேரில் காணும் போது நன்றாகக் கிழிப்பேன்.  கொஞ்சம் மரியாதை கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் என்றால் வேறு வழியில்லை. எனவே அவர்களுக்கு மட்டும்  பதில் அளிப்பதுண்டு "T.u" 😊


பிறப்பு அளவுக்கு அதே முக்கியத்துவத்தைப் பெறுவது, மரணம். இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எங்கேனும் மரணச் செய்திகளைக் காணக்கிடைத்தால் கருத்துரைப் பெட்டிகள் முழுவதும் ஒரே வார்த்தையால் நிரம்பி இருக்கும். "RIP".


HBD அளவுக்கு எனக்கு அருவருப்பூட்டும் இன்னொரு சொல் இந்த RIP. ஆங்கிலத்தில் சொற்குறுக்கம் (Abbreviation) என்பது அனுமதிக்கப்பட்டது தான். அதற்காக எதற்கு எதற்கெல்லாம் சொற்குறுக்கம் செய்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா? மரணச்செய்தியில் துயர் பகிர்வதற்கு, ஆறுதல் சொல்வதற்குக் கூட சொற்குறுக்கமா? 😕

 RIP தட்டச்சும் பலருக்கும் அதன் முழு விரிவாக்கம் என்னவென்றே தெரியாது. அது Rest In Peace. இலத்தீன் "Requiescat in pace" என்ற கிறிஸ்தவ பிரார்த்தனையின் ஆங்கிலவாக்கம் அது. இரண்டுக்கும் பொருள்  "அமைதியில் ஓய்வு பெறுக". 

இறந்தவர்கள் மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதன் மூலம் நித்தியமான சொர்க்கத்தை அல்லது நரகத்தை அடைவர் என்பது கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான ஆபிரகாமிய நெறிகளின் நம்பிக்கை.  தீர்ப்புநாள் வரை அந்த ஆன்மா ஓய்வாக இருக்கட்டும் என்ற பிரார்த்தனையே "அமைதியில் ஓய்வு பெறுக." என்று கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிறது. 

எனினும் இவ்வழக்கம் கத்தோலிக்கர், ஆங்கிலிக்கர் மெதடிஸ்தர் முதலிய சில திருச்சபைகளில் மட்டுமே வழக்கமாக இருக்கின்றது. சில புரட்டஸ்தாந்து திருச்சபைகள், இது திருவிவிலியத்தில் குறிப்பிடப்படாத வழக்கம் என்பதால் தங்கள் பின்பற்றுநர்கள் "RIP" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ளன


'RIP'இன் பயன்பாடு நம் மரபுக்கும் பண்பாட்டுக்கும் அந்நியமானது.  அது  மேலைநாட்டு ஆதிக்கம் சார்ந்த ஓர் அடையாளம், இறந்தோரை ஓய்வெடுக்கக் கோருவது.  இதையெல்லாம் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் அடிக்கடி விவாதிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  அந்த விவாதங்களில் முக்கியமாக எழுந்த கேள்வி, இந்தியப் பண்பாட்டினர் அல்லது சைவர்கள், 'RIP'இற்குப் பதிலாக என்ன சொல்லலாம் என்பது.



இஸ்லாத்தில் ஒருவர் இறந்ததும், "இன்னாலில்லாஃகி வ இன்னா இலைஃகி ரச்சிவூன்"(ஆண்டவனிடமிருந்தே வந்தோம், ஆண்டவனிடமே செல்வோம்) என்பார்கள்.  யூதர்களிடம்  எல் மலே ரச்சமிம் (El Malei Rachamim) என்று அறியப்படும் இறந்தோர் பிரார்த்தனை ஒன்று உள்ளது. பௌத்தர்கள் இப்போது உலகளாவிய ரீதியில்  "May he attain supreme bliss of Nibbana" (பரிநிர்வாணப் பேரின்பத்தை அடைவாராக!) என்று சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் இந்து மதங்களையோ, சைவ - வைணவ நெறிகளையோ பார்த்தால், அவர்களுக்கென்று இத்தகைய இறந்தோர் பிரார்த்தனை எதையும் வளர்த்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

(Nibbana - நிப்பான என்பது நிர்வாண என்பதற்குச் சமனான பாலி மொழிச் சொல். சமஸ்கிருதம் சார்ந்தும் வளர்ந்திருந்தாலும், பௌத்தம் பாலிக்குக் கொடுத்து வந்த முன்னுரிமையை இன்றும் கைவிடவில்லை. எங்களுக்கு இஸ்கோன் இருக்கிறது என்று வைணவர்களும், எங்களுக்கு ஹவாய் சைவ ஆதீனம் இருக்கிறது என்று சைவர்களும் பெருமைபீற்றிக் கொண்டாலும், பௌத்தம் அளவுக்கு இந்துக்கிளைநெறிகள் அறிவியல் பூர்வமாக சர்வதேசத்தைச் சென்றடையவில்லை என்பதே உண்மை).

இத்தனைக்கும் இந்தியப் பண்பாடு இறந்தோர்க்கு மிகுந்த மரியாதையும் வழிபாடும் செலுத்தும் மரபைக் கொண்டது. பிராந்திய மொழி இலக்கியங்களிலிருந்து நமக்கேற்ற இத்தகைய பொதுப்பிரார்த்தனை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். கல்வெட்டியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள், இன்று பொதுவெளியில் பயன்படுத்தக்கூடியதாக,   இத்தகைய மரித்தோர் மரியாதை வாசகங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்வது?

இந்திய மரபில் பிறவிச்சுழல், நல்வினை -  தீவினை முதலிய கோட்பாடுகள் வேரூன்றி இருந்தாலும், ஒரு ஆன்மாவின்  இறுதி இலக்கு மோட்சம், முக்தி (வீடுபேறு, விடுதலை) என்று கொள்வதே வழக்கம். இந்த வீடுபேறு பழந்தமிழில் "துறக்கம்" (துறக்கப்பட்டது) என்று அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது.  மோட்சத்தை அல்லது துறக்கத்தை ஒரு விடுதலையுணர்வு என்றே நம் மெய்யியல்கள் குறிப்பிட்டாலும், அதை  ஒரு இன்ப நிலையாகவே அவை இனங்காண்கின்றன. விடுதலை என்பதே இன்ப உணர்வு தானே?

ஆக, இந்தியப்பண்பாட்டினர் நமக்கு நெருக்கமான பௌத்தர்கள் சொல்லிக்கொள்வது போல, "அன்னார் மோட்சப் பேரின்பத்தை அடைவாராக" - "May (s)he attain the supreme bliss of Moksha(m)" என்று பிரார்த்திக்கலாம்.

சைவர்களும் வைணவர்களும் முறையே தத்தம் இறைவர்களின் உறைவிடங்களான திருக்கயிலை, வைகுண்டம் ஆகியவற்றை உயிர்கள் அடைவதாக நம்புகின்றனர். எனவே விரும்பினால், முக்தி, மோட்சம் என்பவற்றை கைலாசம், வைகுண்டம் மூலம் அவர்கள் பிரதியிட்டுக்கொள்ளலாம்.
"May (s)he attain the supreme bliss of Kailāṣam"
"May (s)he attain the supreme bliss of Vaikuntham"

சைவம், வைணவம் என்று வரும் போது, சிக்கல் ஒன்று இருக்கிறது. முக்தி, மோட்சம், கைலாயப்பேறு, வைகுந்தப்பேறு என்றெல்லாம் பொதுவாக சொல்லிக்கொண்டாலும் அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரபார்ந்த பிரிவும் சொல்கின்ற வரைவிலக்கணங்கள் வேறுபடுகின்றன.

உதாரணமாக சைவ சித்தாந்தத்தில் முக்தி என்பது நான்கு வகை. தான் ஆள் உலகு இருத்தல் (சாலோகம்), தன்பாடு இருத்தல் (சாமீபம்), தான் ஆம் பதம் பெறல் (சாரூபம்), தான் ஆகுதல் (சாயுச்சியம்). சித்தாந்தம்,  சிவமாம் தன்மை (சிவனோடு இரண்டறக் கலத்தல்) என்று இன்னும் கூர்ந்து சொல்வதை, மேலைத்தேய ஆய்வாளர்கள், Śivahood அல்லது Śivaness என்று மொழியாக்குக்கிறார்கள்.  எனவே ஆழ்ந்த சைவமொழியில் "May (s)he attain the supreme bliss of Śivahood / Śivaness" என்றும் சொல்லமுடியும். இப்படியே வைணவத்தில் கைவல்யம் முதலிய வீடுபேறு சார் கலைச்சொற்கள் பயன்பட்டுள்ளன. இவற்றில் எவற்றை பொதுத்தளத்தில் எடுத்துச் செல்வது, எவ்வாறு ஆள்வது என்பதில் முரண்கள் ஏற்படக்கூடும்.

ஆக, ஒரு இந்துப் பண்பாட்டினனாக Moksham சார்ந்த முதல் பிரார்த்தனையையே பரிந்துரைப்பேன். சைவனாக  Kailasam, Sivahood சார்ந்த இரு பிரார்த்தனைகளுமே எனக்கு திருப்தியானதாக இருக்கிறது. இறந்தவர் சைவர் என்றால், இரண்டாம் மூன்றாம் பிரார்த்தனைகளையும், பொதுவாக என்றால் முதலாம் பிரார்த்தனையையும் பயன்படுத்துவேன்.

இந்தச் சமய வெங்காயங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை; மறுமை, மோட்சம், மறுபிறவி இந்த நம்பிக்கையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள், நான் இறைமறுப்பன் (Atheist), இறைநொதுமலன் (Agnostic) என்று கூறியபடி சண்டைக்கு வருவீர்களென்றால், இருக்கவே இருக்கிறது "ஆழ்ந்த இரங்கல்கள்". நீங்கள் "Deepest Condolences" அல்லது "Sincere Sympathies" ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:
இந்தப் பதிவு, இந்து சமயிகள் RIPஇற்கு மாற்றாக, உலகளாவிய ரீதியில் முன்வைக்கக் கூடிய பண்பாட்டு ரீதியான மாற்றுச் சொல்லாடல் தொடர்பானது. தமிழில் "அன்னார் இறைவன் திருவடிக்கீழ் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்" என்றே சாதாரணமாகச் சொல்லலாம். அதிலும் மதங்கடந்த பரந்த மனப்பான்மையே போதும் என்று விரும்பினீர்கள் என்றால் மேலே சொன்ன அதே "ஆழ்ந்த இரங்கல்கள்" போதும்.
மேலும் வாசிக்க »

குடைந்தாடாய் திருத்தும்பீ! திருவெம்பாவை இன்பம்

0 comments

கணினியிலோ கைபேசியிலோ, எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் என்று ஒரு பாடல்கள் பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். என் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு பாடல், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த றெக்க திரைப்படத்தின் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல். ஆனால், கேட்கும் போதெல்லாம், இமானின் இசையை விட, அதில் வருகின்ற பாரதியின் காதலி "கண்ணம்மா"வை விட, அந்தப் பெண் குரல் என்னவோ செய்யும். மிக நெருக்கமாகப் பழகி மறந்த யாரையோ நினைவுகூரச் சொல்கின்ற இனிய குரல். கூகிளில் தேடிய போது அது "நந்தினி ஸ்ரீகர்" என்று அறிந்தேன். 




முன்பெல்லாம் வானொலிகளில் பாடல் ஒலிபரப்பானால்,  அந்தப் பாடலை இசையமைத்தவர் யார், பாடியவர் யார், எழுதியவர் யார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி வானொலியில் பல தடவை சொல்லிச் சொல்லி மனப்பாடமான பெயர் அது. நந்தினி ஸ்ரீகர். பள்ளிப்பருவத்து மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றான "நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே" (திரைப்படம்: உற்சாகம்) பாடலைப் பாடியவர்.

அந்தப் பாடல், அந்தச் சிறுவயதிலேயே பிடித்துப்போனதற்கு காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, அதன் தூய தமிழ் வரிகள். இன்னொன்று அப்பாடலில் வரும் சொல்லொன்று என் பட்டப்பெயராக இருந்தது.   

சங்கத்தமிழின் சாயலில் எழுதப்பட்ட அந்த வைரமுத்துவின் வரிகளில்,  என்னை மிகவும் கவர்ந்த வரி "குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன் குடமா?" தன்னைப் பூவாகவும், நாயகனை தும்பியாகவும் உருவகிக்கும் நாயகி பொய்க்கோபத்துடன் இப்படிக் கேட்கிறாள். ஆனால் நீங்கள் விபரீதமாக நினைப்பது போல், அந்த வயதில் இப்படி அர்த்தம் புரிந்தெல்லாம் அந்த வரி பிடிக்கவில்லை! 😄 உண்மை என்னவென்றால், வரி பிடித்தற்கான காரணம், அந்தக் "குடைந்தாட" என்ற ஒரு சொல். ஒரேயொரு சொல்.

அந்தச் சொல், மெல்லிய மழை துமிக்கும் அதிகாலைப் பொழுதொன்றில் குடை பிடித்தபடி கடற்கரையோரம் நடக்கும் காட்சியை  என் மனத்திரையில் விரிக்கும். காரணம், திருவெம்பாவை.

இலங்கையின் எல்லா ஊர்க்கோவில்களும் போலவே, எங்கள் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலிலும் மார்கழி மாதம் திருவாதிரையை அண்டி, திருவெம்பாவை விழா பத்து நாட்கள் இடம்பெறும்.  கடற்கரையோரம் தாழம்புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகான சிறிய கோவில் அது. இன்று தாழம்புதரும் இல்லை, மண்ணரிப்பால் கடற்கரையும் இல்லை.  கோவிலும் 2004 ஆழிப்பேரலையால் சிதைந்து இன்று மீளக்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கும் மார்கழிக் குளிரில் நடுங்கியபடி, அந்தக் கோவிலின் வாசலில் நின்று,  அதிகாலையில் கடல் மீது கதிரவன் எழுவதைக் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.

எங்களூர்ச் சிவன் கோவில், 2015இல் (நன்றி: கூகிள் வரைபடம்)

அதெல்லாம் சரி, உன் ஊர்க்கோவிலுக்கும், "குடைந்தாட"வுக்கும் என்ன சம்பந்தம்?
 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள். 'மொய்யார் தடம் பொய்கை' என ஆரம்பிக்கும் பதினோராம் பாடலைப் பாடியதும், 'திருவெம்பாவை அரைவாசிப்பாட்டு முடிந்தது, விரைவில் பிரசாதம் கிடைத்துவிடும்' என்று ஒரு மெல்லிய பூரிப்பு ஏற்படும்  😁.  சில நேரங்களில் அதிகாலையில் தட்டுத்தடுமாறி எழுந்து குய்யோ முறையோ என்று கதறியபடி குளிர்நீரில் நீராடி, இந்தப்பாடல் பாடும் போது தான் கோவிலுக்குப் போய்ச் சேருவேன். ஆக, இருபது பாவைப்பாட்டுகளிலும் என்னால் அதிகம் கவனிக்க முடிந்த பாடல் இது.

அந்தப் பதினோராம் பாடலில் "கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி" என்றோர் வரி வரும். மார்கழி மாத அதிகாலை மென்பனி மழையில் குடை பிடித்தபடி விரைந்த எனக்கு, அந்தக் "குடைந்து குடைந்து" என்ற சொல் இப்படி நிலக்காட்சியாகப் பதிந்து போனதில் சந்தேகம் இல்லை தானே?😊

திருவெம்பாவை, அதிகாலைக் குளியல், சிவன் கோவில் போவது எல்லாம் பழங்கதைகள் ஆகி நெடுங்காலம். 😔 ஆனால் அதையெல்லாம் பெருமூச்சோடு எண்ணிப்பார்க்கும் சந்தர்ப்பம் சில நாட்களுக்கு முன் ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு செவிபன்னியில் கண்ணம்மா பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். மனம் நந்தினி ஸ்ரீகரிடம் போய், அங்கிருந்து "நறும்பூக்கள் தேடு"முக்கு நகர்ந்து, ஒருகணம் "குடைந்தாடவே"யில் மயங்கி, அப்படியே சிவன் கோவிலடியில் சென்று நின்று, அங்கிருந்து திடுக்கிட்டு திருவெம்பாவைக்கு வந்து சேர்ந்தது. அடடே மணிவாசகா, உன் தேன்தமிழை நெருங்கித் தான் எத்தனை காலம் ஆயிற்று?  

திருவெம்பாவையில் "குடைந்து" என்ற சொல்லை பதினோராம் பாட்டில் மட்டுமன்றி, அதற்கு மேலும் கீழும் வந்த ஓரிரு பாடல்களிலும் வாதவூராளித் தேவர் எடுத்தாண்டிருக்கிறார். அப்படி  "கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கும்" எனும் வரி வருகின்ற 13ஆம் பாடலுக்குக் கண்கள் நகர்ந்த போது விவரிக்கவியலாத வியப்பை அனுபவித்தேன். அந்த வரியிலுள்ள சொற்களைப் பார்த்து விட்டு எடக்கு மடக்காக யோசிக்காமல், முதலில் பாடலைப் பருகுங்கள்.  😁

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பெண்கள் நோற்ற நோன்பு என்பதையும், அந்நோன்பில்  பாவைப்பாடல்கள் பாடியபடி அதிகாலையில் நீர்நிலையொன்றில் நீராடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது என்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் திருவெம்பாவையில் இந்தப் பாடல் கவனத்தைப் பெறுவது இது ஒரு சிலேடைப் பாடல் என்பதால் தான். ஒரே நேரத்தில் தாங்கள் நீராடும் நீர்நிலையையும் சிவசக்தியையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு பாடும் இதன் கவித்துவ அழகு. 






நீர்நிலையை அதிகாலை அரையிருட்டில் பார்க்கிறார்கள் பெண்கள். "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"
அடர்ந்த நிறத்தில் குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர் மொட்டுக்களும் நிறைந்து காணப்படுகிறது நீர்த்தடாகம். அது கறுப்பு நிறத்து உமையையும், சிவந்த சிவத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. 


(இக்கால ஓவியர்கள் சிவனை நீலமாகவும், உமையை சிவப்பாகவும் வரைகிறார்கள். மரபு அதுவல்ல.  சிவந்தவன் என்பதால் தான் அவன், சிவன். தேவி கறுத்தவள். கறுப்பி என்பதால் காளி. உலகின் முதல் கறுப்பழகி.  திருமாலும் கறுத்தவனே. 'மால்', 'கண்ணன்' என்ற தமிழ்ப்பெயர்களுக்கும் 'க்ருஷ்ண' என்ற வடமொழிப்பெயருக்கும் நேரடிப்பொருளே கறுப்பன் என்பது தான். தெய்வங்களின் உடல் வண்ணத்தை கறுப்பு என்று சொல்லாமல், பச்சை அல்லது நீலம் என்று  சொல்லுவது இலக்கிய வழக்கு.)


அடுத்த வரிக்கு வருவோம்.
'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'
தடாகத்தின் கரைகளில் குருகுப் பறவைகளும், அங்கங்கே தண்ணீர்ப்பாம்புகளும் தென்படுகின்றன. குருகு என்பது ஆங்கிலத்தில் Cinnamon Bittern என்று அறியப்படும் பறவை. விலங்கியல் பெயர் Ixobrychus cinnamomeus. தெற்கு -  தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவை. சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும், அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குருகு -  Cinnamon Bittern
குருகு என்று சங்கையும் சொல்வதுண்டு. சங்கை அறுத்துச் செய்வதால் வளையலுக்கும் குருகு என்று பெயர். அல்லது ஒன்றோடொன்று உரசும் போது, குருகுப்பறவை போல் ஒலிப்பதாலும் வளையலுக்கு அப்பெயர் வந்திருக்கலாம். ஆக, குளத்தின் கரையிலுள்ள குருகுகள் உமையவளின் கைகளிலுள்ள வளையலையும், நீர்ப்பாம்புகள் சிவனுடலில் நெளிந்தாடும் பாம்புகளையும் பாவைப்பெண்களுக்கு நினைவூட்டுகின்றன. 

'தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்'
காலைக்கடன் முடிப்போர் 'கழுவ' வந்து சேரும் இடமும் அதே நீர்நிலை தான். உயிரின் அழுக்கையும் சைவம் 'மலம்' என்றே சொல்கிறது. மும்மலம். அதை நீங்கச்செய்வது சிவம். உடலழுக்கை நீக்கும் தடாகம், அவர்களுக்கு உயிரழுக்கை நீக்கும் சிவசக்தியாகத் தோன்றுகின்றது. சைவத்தின் சிறப்பே, அருவருப்பையும் அச்சத்தையும் ஊட்டும் அம்சங்களிலும் இறைவனைக் காணும் பார்வையை பின்பற்றுநனுக்கு வழங்குவது தான். நீர்நிலையில்  காலைக்கடன் முடித்தோர் கழுவுவதையும், இறைவன் உயிர்களின் மும்மலத்தை கழுவுவதையும் ஒப்பிடுவதிலுள்ள கவித்துவம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஆக, இப்படியெல்லாம் ஒப்பிட முடிவதால், இந்த நீர் பொங்கும் மடு, எங்கள் அரசனும் எங்கள் பிராட்டியுமான சிவனும் சக்தியும் போல் தோன்றுகிறது.
'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கு மடு'
சொல்லி வியக்கிறார்கள் பெண்கள். 

அதே வியப்போடு அவர்கள் நீரில் மூழ்கி பாய்ந்து நீராடி மகிழ்கிறார்கள். கைகளில் சங்குவளையல்கள் சத்தமிடுகின்றன, கால்களில் சிலம்புகள் சலசல ஒலியெழுப்புகின்றன.
'புகப் பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்ப, சிலம்பு கலந்து ஆர்ப்ப'

மார்கழிக் குளிரில், நீரின் குளிரில், மார்பகங்கள் மயிர்க்கூச்செறிந்து விம்முகின்றன. நீரில் குடைந்து குடைந்து ஆடுகையில், நீரும் பொங்கிக் குதூகலிக்கிறது. 
'கொங்கைகள் பொங்க குடையும் புனல்பொங்க'

தாமரை மலர்கள் செறிந்த இந்தப்பூம்புனல் நீர்த்தடாகத்தில் பாய்ந்தாடுக எம்பாவாய் 
'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்'
என்று முடிகிறது பாடல். 

பக்திச்சுவை சொட்டும் திருவாசக வரிகளைப் படித்து, பல தடவை மெய்மறந்து கண்ணீர் உகுத்திருக்கிறேன். ஆனால், அதன் குறியீட்டு அழகியலை உணர்ந்து மகிழச் செய்த அற்புதமான சந்தர்ப்பம், இப்பாடலை இரசித்த போது தான் கிடைத்தது. இயற்கையைப் போற்றும் மரபு, நமக்குத் தொன்றுதொட்டே உண்டு. ஒரு நீர்நிலையில் ஆண் பாதி, பெண் பாதியாக அமைந்த இறைவனைக் கண்டு மகிழ்வதும், அதிலே மகளிர் மகிழ்ந்தாடும் காட்சியை கண் முன்னே காட்டும்படி சொல்லோவியம் எழுதுவதும் தான் மணிவாசகத் தமிழின் அழகு. 

எங்கோ "கண்ணம்மா"வில் துவங்கிய என்னை, "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை" கண்ட மணிவாசகனிடம் இட்டு வந்த  கவிதையை, கடவுளை, கற்பனையை, வியப்போடு எண்ணிப் பார்த்தேன்.  மனம் ஒரு பெரும்போதை நாடும் தும்பி.  குடம் குடமாய் தேன் பருகினாலும், போதாதே அதற்கு!
குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன்குடமா?
இவ்வுலகே மலர்வனம்.
கவியின்பமே தேன்குடம்.
குதித்தாடாய் திருத்தும்பி!
குடைந்தாடாய் திருத்தும்பி!
ஆடேலோர் எம்பாவாய்! 💓


மேலும் வாசிக்க »

அறுகம்பைக் கடலோரம் - ஒரு இடப்பெயர் ஆய்வு

0 comments

கிழக்கிலங்கை என்றதும் இரு சுற்றுலாத்தலங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். ஒன்று, பாசிக்குடா இன்னொன்று அறுகம்பே.  நாம் இப்போது வந்திருப்பது அறுகம்பேக் கடலோரம்.  என்ன முழிக்கிறீர்கள்? சீசன் இல்லாத காலத்தில் ஏன் நாம் அறுகம்பைக்கு வரவேண்டும் என்றா? ஹலோ, நாம் இங்கு வந்திருப்பது, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை புதினம் பார்த்து வாய் பிளக்கவோ, கடலில் குதித்து குளித்து மகிழவோ இல்லை. இந்த இடத்தின் பெயரை ஆய்வு செய்ய. கவனம் அலைகளில் கால் படாமல் தள்ளி நின்றுகொண்டே சொல்வதைக் கேளுங்கள். 

“அறுகம் மட்டக்களப்புக்குக் கிழக்குப்புறம் 64 மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமம். அதேபெயரிலுள்ள ஒரு குடாவின் கரையில் அது அமைந்திருக்கிறது. அங்கு  களியாலான சிறுகோட்டையொன்று இடச்சுக்களால் ஒருமுறை இராணுவ முகாமாகப் பயன்பட்டது. தற்போது அங்கு நெல் சேமிக்கப்படும் ஒரு களஞ்சிய அறை உள்ளது" என்று 1834இல் எழுதுகிறார் சைமன் காசிச்செட்டி. 

யாரிந்த சைமன் காசிச்செட்டி? இலங்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் சைமன் காசிச் செட்டி. புத்தளம் கற்பிட்டியில் பிறந்த இவர், இலங்கையின் சட்டவாக்கக் கழகத்தில் தமிழ்ப்பிரதிநிதியாகப் பதவி வகித்தவர். இலங்கைத் தமிழர் மற்றும் தமிழ் மொழி பற்றி பிரித்தானியரின் கவனத்தை அதிகம் ஈர்த்தவை, இவரது ஆக்கங்களே என்றால் மிகையாகாது. உதயாதித்தன் என்ற தமிழ்ச்சஞ்சிகை, தமிழ்ப்புலவர் வரலாறு கூறும், "தமிழ் புளூடாக்", இலங்கை வரலாற்றைக் கூறும் சரித்திர சூதனம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. 
சைமன் காசிச்செட்டி

எனினும் இவை எல்லாவற்றையும் விட அதிகம் புகழ்பெற்றது, இலங்கையின் மாவட்டங்கள், கிராமங்கள், சாதிகள், சமயங்கள் பற்றிய சுருக்கமான சமகாலத் தொகுப்பான சிலோன் கசெற்றியர். கொட்டாவை தேவாலய திருச்சபையால் 1834இல் வெளியிடப்பட்ட இந்நூலில் உள்ள தகவல்கள், அவற்றின் சமகால இயல்பால் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. அந்நூலில் தான் அறுகம் பற்றிச் சொல்கிறார் காசிச்செட்டி.

அறுகம் என்று காசிச்செட்டி சொல்லும் இந்தக் கிராமம் வேறெதுவுமில்லை. இன்றைய புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான அறுகம்பை தான். அறுகாமம் என்பதே அதன் சரியான பெயர். பசறையில் தோன்றி கிழக்கே ஓடிவந்து அறுகாமத்துக்கு அருகில் கடலில் கலக்கும் ஆற்றுக்கும் அறுகாம ஆறு என்று தான் பெயர். இன்று அதை குருந்த ஓயா என்கிறார்கள். 

அறுகாம ஆற்றினால்  அறுக்கப்பட்டதால் தான் இவ்வூருக்கு அறுகாமம் என்று பெயர் வந்ததோ, தெரியவில்லை.  அல்லது அறுகம்புற்கள் செறிந்து வளர்ந்த பகுதியாகவும் இருந்திருக்கலாம்.  கிழக்கிலங்கைத் தொன்மங்களில் இது "அறுகமனப் பூமுனை" என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் இறைவனான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமியின் ஆளுகைக்குட்பட்ட வட எல்லையாக அம்பிளாந்துறையையும், தென்னெல்லையாக இந்த அறுகமப்பூமுனையையும் சொல்வது மரபு. 

அறுகம், அறுகாமம் என்பவற்றுக்கு சம்பந்தமின்றி, அறுகம்பையில் வரும் அந்த 'பை” ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? வேறொன்றுமில்லை. நம்மவர்கள் தான் அதீத அறிவாளிகள் ஆயிற்றே. அறுகம் குடா என்ற தமிழ்ச்சொல்லை வெள்ளையன் அறுகம்பே (Arugam Bay) என்று  மொழியாக்கினால், நாம் அதை மீண்டும் அறுகம்பை என்று தமிழ்ப்'படுத்தியிருக்கிறோம்'. 

பழைய பாணமைப்பற்றில் முக்கியமாக இருந்த இரு ஊர்களில் ஒன்று அறுகாமம். மற்றையது பெரிய பாணகை என்று அறியப்பட்ட இன்றைய பாணமை. பிற்காலத்தில், அறுகாமம் என்ற தனி ஊர்,  பொத்துவில், அறுகம் என்று இரு தனித்தனி ஊர்களாக இனங்காணப்படத் தொடங்கிவிட்டது என்பது வேறு ஐரோப்பியப்   பதிவுகளில் தெரியவருகிறது. 

பொத்துவில் இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரம். பொத்துவில் என்ற இடப்பெயரை ஆராய்ந்தால், அது பொதுவில் அல்லது புற்றுவில் அல்லது போதிவில் என்ற சொற்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடும். வில் என்றால் ஈழத்தமிழில் சிறுகுளத்தைக் குறிக்கும். வில் வடிவில் வளைந்திருக்கும் இந்தச் சிறுகுளங்களின் இன்னொரு குறிப்பிடத்தக்க இயல்பு, இவை கோடைகாலத்தில் வற்றி மேய்ச்சல் நிலமாக மாறிவிடும் என்பது. அப்படி பல சமூகத்தவருக்கும் பொதுவாக இருந்த, அல்லது புற்றுக்கு அண்மையில் இருந்த, அல்லது போதிமரத்துக்கு (அரசமரம்) அருகில் இருந்த வில்லொன்றின் காரணமாக பொத்துவில் என்ற பெயர் தோன்றியிருக்கலாம். ஒரு காலனித்துவ வரைபடத்தில் 'போதிவில தூபி' (Potevila Pagoda) என்று உச்சரிக்கக்கூடிய ஒரு இடமொன்று குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் உற்றுநோக்கவேண்டும்.

பொத்துவில் முகுது மகா விகாரையிலுள்ள தொல்லெச்சங்கள்

இது மகாயான பௌத்த மையமாக இருந்திருக்கக்கூடும் என்பது, பொத்துவில் கடற்கரையோரமாக அமைந்திருந்த பழைமை வாய்ந்த முகுது மகா விகாரையில் கிடைத்துள்ள போதிசத்துவர் சிலைகள் மூலம் தென்படுகிறது. எனினும், சமீப காலமாக,  துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கடலில் வந்து ஒதுங்கிய இடம் பொத்துவில் தான் என்றும், இங்கு தான் உரோகண மன்னன் காக்கைவண்ண தீசன் ஒரு விகாரம் எழுப்பினான் என்றும் ஐதிகங்கள் உருவாகிப் பரவுகின்றன. ஆரம்பத்தில்  இப்படி விகாரமாதேவி கடலில் அடைந்த இடம் என்று, அம்பாந்தோட்டையிலுள்ள கிரிந்த பகுதியைத் தான் சொல்லி வந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொத்துவில் இருக்கட்டும். உல்லைப் பக்கம் காலாற நடப்போம் வாருங்கள். அதென்ன உல்லை?  அறுகம்பையின் உள்ளுர்ப் பெயரான “உல்லை" என்பது எப்படி வந்ததென்று சரியாகத் தெரியவில்லை. அது 'நுல்லை” அல்லது 'நுள்ளை” என்ற மட்டக்களப்பு வட்டாரவழக்குச் சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம். நுல்லை என்ற சொல், இங்கு மாரி கால வெள்ளத்தால் கடக்கமுடியாதபடி பாதிக்கப்படும் சிறுவழிகளைக் குறிக்கும்.  அறுகங்களப்பின் இரு கரைகளையும் இணைத்த நுல்லை என்ற சிறுவழியின் பெயரே பின்பு உல்லை ஆகியிருக்கலாம். பேச்சுவழக்கு நுல்லை என்பது, பழந்தமிழில் 'நுழை' என்று எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அடடே! சைமன் காசிச்செட்டி சொன்ன ஒரு முக்கியமான குறிப்பை நான் தவற விட்டுவிட்டேன். என்னவென்று கண்டுபிடித்தீர்களா?. அதே தான். அறுகங்குடாவில் இருந்த களிமண்ணாலான ஒல்லாந்தரின் சிறுகோட்டை. 
1813 பிரித்தானிய வரைபடமொன்றில் அறுகம் குடா,  பொத்துவில், பொத்துவில் தூபி, அப்புறத்தோட்டக் குடா, நாவலாறு.

ஆம்,  காசிச்செட்டியார் சொல்வது உண்மை தான். பழைய ஒல்லாந்து இலங்கை வரைபடங்களைத் தட்டினால், பாணகைக்கு வடக்கே  "அப்புறத்தோட்டை" அல்லது "அப்பர்ர தோட்டம்" என்ற பெயரில் அமைந்திருந்த சிறு இடச்சுக்கோட்டை ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒல்லாந்து ஆளுநராக விளங்கிய வான்கூன்ஸ் என்பவர், தென்கிழக்கிலங்கையை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக வைத்திருக்க, இந்தக் கோட்டையைப் பெருப்பித்துக் கட்டும் திட்டம் கொண்டிருந்தாராம். இப்போது இந்தக் கோட்டையின் அடையாளம் எதுவும் இல்லை.  இது அறுகாமத்தின் அருகே இருக்கும் பசறிச்சேனை பகுதியில் அமைந்திருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.

இப்படி பல வரலாற்றுத்தகவல்கள் நமக்கு அறுகம்பை சார்ந்து கிடைக்கின்றன. அடுத்த தடவை அறுகம்பைப் பக்கம் போகக்கிடைத்தால், தொபுக்கடீர் என்று தண்ணீரில் பாய்ந்து குளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்தப் பெயர் விடயங்களையும் மறக்காமல் அசைபோடுங்கள். ஏனென்றால், வரலாறு முக்கியம் அமைச்சரே!


(அரங்கம் இதழின் 2018.12.14 இதழில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

அலகிலா ஆடல் நூல் விமர்சனம் | நடேசபிள்ளை சிவேந்திரன்

0 comments


அலகிலா ஆடல் வாங்க: 

எழுத்தாளர் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட “அலகிலா ஆடல்:சைவத்தின் கதை” என்ற நூல், இலங்கை சைவநெறிக்கழகத்தால் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சைவத்தின் கதை என்று உப தலைப்பு அளிக்கப்பட்டிருக்கும் இந்நூல் பழங்குடிகளின் தெய்வமாக இருந்து பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி தனி ஒரு பெருந்தெய்வமாகி சிவம் என்று தத்துவத்தளத்தில் விரியும் பரம்பொருளின் கதையைக் கூறுகிறது என்று சொன்னால் அது, மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கும்.

பெயரே சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த “அலகிலா ஆடல்” எவ்வகையான நூல்? சொல்லப்போனால் இது சைவ நம்பிக்கை சார்ந்த சமய நூல் அல்ல. சைவத்தை புறவயமாக வரலாற்றுப் போக்கில் அள்ள முனையும் நூல். மிகப்பெரும் காட்டினுள் அதனூடாக ஓடும் ஆறொன்றின் கரையோரமாக உள் நுழையும் அனுபவத்தையே இந்த நூல் தருகின்றது. பயணத்தில் ஒவ்வொரு மரமாக, செடி, கொடியாக, பறவைகள், விலங்குகளாக, ஒன்றையும் விட்டுவிடப் போவதில்லை என்று அறிமுகப்படுத்திச் செல்கிறார் நூலாசிரியர். சைவ வரலாற்றுக் கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அத்தனை தகவல்கள். அவர் குறிப்பிட்டுச் செல்லும் ஒவ்வொன்றையும் ஆர்வமுள்ளவர்கள் மேலும் மேலும் தேடியறிந்து சென்று கொண்டே இருக்கலாம். உண்மையிலேயே அலகிலா ஆடல்தான்.

இன்று சைவம், இந்து என்ற இரண்டு சொற்களையும் வைத்து விவாதங்கள் நடைபெறுவதை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகின்றது. இரண்டு சொற்களையும் சரியான விதத்தில் புரிந்துகொண்டால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற தவறான நோக்கில் எழும் வாதங்கள் தேவையற்றனவாகிவிடும்.

இந்து என்பது இந்தியாவில் உருவான ஊடும் பாவும் உடைய பல்வேறு மதங்களுக்கான பொதுப் பெயர். இந்து என்பதை இந்து மதம் என்று தனியொரு மதமாக கருதுவது தவறு/ இந்து என்றால் இந்துமதங்கள் என்று கொள்வதே சரி. சைவம் அதில் பழமையான முதன்மையான மதம். இதைத்  தெளிவுபடுத்தும் விதமாக ‘ஓங்காரம்’ என்னும் அறிமுக அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்திய தெய்வ வடிவங்கள் பொது ஆண்டுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் நடந்த அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப் பின்னரான கிரேக்க செல்வாக்கின் தாக்கத்தால் உருவானவை என்ற வாதம் வரலாற்றாய்வாளர்களிடம் உள்ளது.

சைவத்தின் ஆரம்பகாலச் சுவடுகளை விபரிக்கும் ‘படைத்தல்’ என்னும் முதல் அத்தியாயத்தில் பொது ஆண்டு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குஷாணர் இலச்சினையில் காணப்படும் மூன்று முக சிவ வடிவம்,  சிந்துவெளி நாகரிக மூன்று முக முந்து சிவ வடிவத்தின் நீட்சியாக இருக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டு எலிபண்டா குகை திரிமூர்த்தியும் இந்த மூன்று முக சிவ வடிவத்தின் வளர்ச்சியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தொடர்புடுத்தல் கிரேக்க செல்வாக்கால் இந்திய தெய்வ வடிவங்கள் உருவானவை என்ற கருத்துக்கு வலுவான எதிர்வாதமாக இருக்கின்றது. ‘காத்தல்’ என்னும் இரண்டாம் அத்தியாயம் பல்வேறுபட்ட சைவப்பிரிவுகளை ஆராய்கின்றது.

அண்மையில் கோசைநகரான் என்பவர் தமிழகத்தில் நடத்திவரும் திருமுறைத் தமிழ்வழித் திருமணமொன்றின் ஒளிப்பதிவைப் பார்த்தபோது ஒரு நிகழ்வு கவனத்தை ஈர்த்தது. சிவபூசை செய்த பின்னர் மணமகன் ஏனையோருடன் இணைந்து ஒரு மின்னல் வேக நடனமொன்றை ஆடி முடிக்கிறார். இன்று மேலைநாடுகளின் வீதிகளில் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் பாடலுடன் ஆடிச் செல்லும் முறையின் மூலம் சைவத்தில் இருந்து சென்றிருக்கவேண்டும் என்று தோன்றியது.

ஆதிசைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதம், சிவ வழிபாட்டில் சிரித்தல், ஆடுதல்,பாடுதல், வணங்குதல், செபித்தல், ஹூடுக் என்னும் மந்திரம் உச்சரித்தல் என்னும் ஆறு உபசாரங்கள் செய்யப்படவேண்டும் என்று கூறுகின்றது என்பதை வாசித்தபோது அது சரியாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகின்றது. பழங்குடிகள் நிகழ்த்திய வேலன் வெறியாட்டு போன்ற தெய்வம் இறங்கும் ஆடல்களின் செம்மையான மீள் நிகழ்த்துகையாக,  நடனத்தை சைவம் உள்வாங்கி வளர்த்திருக்கக்கூடும்.

‘அழித்தல்’ என்னும் மூன்றாம் அத்தியாயம் ஏனைய இந்திய மதங்களுடனும் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களுடனுமான சைவத்தின் ஊடாட்டங்களையும் முரண்பாடுகளையும் பேசுகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் காலத்தின் பின்னர் ஆண்ட இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் ஒரு வைணவனாவான். பல்லவ நாட்டை ஆண்ட சிம்மவிஷ்ணுவுடன் பல்லவ பரம்பரை முடிவுற்றதால் கம்புஜதேசத்தில் (இன்றைய கம்போடியா) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவ கிளை மரபினைச் சேர்ந்த இவனை, பல்லவ நாட்டிலிருந்து சென்ற குழு அழைத்து வந்து அரசுக்கட்டிலேற்றியது. இவனே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாள் சிலையை வைத்ததாகக் கூறப்படுகின்றது. ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அந்தச் சிலை அகற்றப்பட்டது. சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தவே கோவிந்தராஜர் சிலை அகற்றப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் குலோத்துங்க சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர்,
"தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து” என்று பாடுகிறார்.
கோவிந்தராஜனால் ஏற்பட்ட தொல்லைக் குறும்பு என்னவாக இருக்கக்கூடும் என்பதற்கு ‘அழித்தல்’ என்னும் இந்த அத்தியாயத்தில் வைணவம் குறித்து வரும் பகுதியில் ஒரு பிடி கிடைக்கிறது.
"விஷ்வக்சேன சம்ஹிதை எனும் வைணவ நூலும், 14 ஆம் நூற்றாண்டு வேதாந்த தேசிகரின் பாஞ்சாராத்திரரக்ஷா எனும் நூலும், கிரண, காமிக ஆகமங்களிலுள்ள விஷ்ணு ஸ்தாபன வரிகளைக் குறிப்பிட்டு, வேதத்தால் கண்டிக்கப்படும் சைவரின் இம்மரபை ஏற்கக்கூடாதென்றும் சைவ ஸ்தாபனம் செய்யப்பட்ட விஷ்ணு விக்கிரகங்களை பாஞ்சாராத்திர முறையில் மீண்டும் ஸ்தாபனம் செய்யவேண்டும் என்றும் ஆயிரம் குடங்களால் அபிஷேகம் செய்து கழுவாய் தேடவேண்டும் என்று சொல்கின்றன” என்ற வரிகள். 

சைவ ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த தில்லை கோவிந்தராஜர் விக்கிரகத்தை இராமானுஜர் காலத்தில் வைணவர் பாஞ்சாராத்திர முறைப்படி மீள் ஸ்தாபனம் செய்ய முனைந்திருக்கவேண்டும். இதுவே பூசலுக்கு வழிவகுத்த காரணமாக இருக்கலாம். இராமானுஜர் பாஞ்சாராத்திர முறைப்படி வைணவக் கோயில்களை மாற்றியமைத்த வரலாற்று நிகழ்வுகள் இந்தக் கோணத்தை வலுப்படுத்துகின்றன.

‘மறைத்தல்’ என்னும் நான்காம் அத்தியாயம் பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் தென்னக ஆசியாவில் (தெற்கு - தென்கிழக்கு ஆசியா) அரச மதமாக பல்வேறு நாடுகளில் கோலோச்சிய சைவத்தின் பெருமையையும் அதற்கு அடித்தளமாக அமைந்த, அனைவரையும் உள்வாங்கும் அதன் தன்மைகளையும் விபரிக்கின்றது.

சில சைவ நூல்களில் அரச பட்டாபிஷேகத்திற்கென இடம்பெற்றுள்ள விரிவான கிரியைகள் அளவுக்கு வேறெந்த பழைய வைணவ, பௌத்த, வைதீக நூல்களிலும் இடம்பெறவில்லை என்று குறிப்பு சைவம் இராஜாங்க சைவம் என்று பெயர்பெற்றது வெற்றுப் புகழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகின்றது.


வைதீகப் பிராமணர்கள் அரசனுக்கு புரோகிதர்களாகவே இருந்தார்கள், சைவ சித்தாந்த வழியிலான சிவப்பிராமணர்கள் மன்னனுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறும் இராஜகுரு என்னும் உயரிய பொறுப்பில் இருந்தார்கள் என்ற தகவலும் அதை உறுதி செய்கின்றது.

“மனிதர் என்ற ஒரேயொரு சாதியே உள்ளது. பிறப்பை வைத்தோ நிறத்தை வைத்தோ எவரையும் அளவிடக்கூடாது. எல்லோரும் சாதாரண கலவி மூலம் பிறந்த உயிர்களே. தவிர ஆன்மாக்களில் ஒன்று உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்று இல்லை” என்று சொல்கின்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் கூற்று, சைவத்தின் முடிசூடிய வெற்றியின் அடித்தளமாக இருந்தது மானிட சமத்துவமே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இதுவே சைவ அரசர்களின் காலத்தில் பல்வேறு குடிகளை உள்வாங்கி சிற்றரசுகள் பேரரசுகளாக உருவாக அடிப்படையாக அமைந்த உந்துவிசையாகும்.

மேலும் சாதாரண கலவியில்தான் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள் என்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் பிரகடனம் வைதீகம் தூக்கிப் பிடிக்கும் முகம், தோள், தொடை, கால் வர்ணத் தோற்றத்தை நேராகவே நிராகரிக்கும் தன்மையுடன் அமைந்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ஐந்தாவதும் இறுதியுமான ‘அருளல்’ என்னும் அத்தியாயம் சைவத்தின் எதிர்காலம் குறித்தும் இனி அதை எவ்வாறு காலத்துக்குத்தக நிலைநிறுத்துவது என்பது குறித்தும் பேசி நிறைகின்றது. அதேவேளை அது காலத்துக்கேற்ற மாற்றம் என்பது சைவத்தின் தனித்துவத்தை சிதைத்து ஆப்ரஹாமிய மதங்களைப் போன்று மாற்றுவதல்ல என்பதையும் வலியுறுத்துகின்றது.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், பௌத்தர்களுக்கு திரிபிடகம் போன்று சைவர்களுக்கு என்ன என்ற கேள்வி சாதாரணமாகவும், பொது அறிவுக் கேள்வியாகவும் எழுப்பப்படுவதும் அதற்கு அறியாமை காரணமாக எவரேனும் பகவத்கீதை என்று பதில் கூறுவதும் நாம் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுதான்.

சைவர்களுக்கு தனியொரு புனித நூல் கிடையாது. புனித நூல் தொகுதியே உள்ளது. வடமொழியில் உள்ள வேதங்கள், ஆகமங்கள்,  தென்மொழியாகிய தமிழில் உள்ள திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்னும் திருநெறிகள் ஆகிய நான்கும் புனித நூல் தொகுதியில் முக்கியமானவை. உங்கள் புனித நூல் எது என்ற கேள்விக்கு குறைந்தபட்சம் இந்த நான்கு நூல் தொகுதிகளையும் கூறக்கூடியவர்களாக சைவர்கள் இருக்கவேண்டும்.

சைவர்களைப் பொறுத்தவரை பகவத்கீதை ஒரு துணை நூல் மாத்திரமே என்பதை மறந்துவிடக்கூடாது. ‘அலகிலா ஆடல்’ நூல் தரும் தகவல்களை நான் என் சிந்தனையுடன் எவ்வாறு இணைத்துக்கொண்டேன் என்ற விளக்கவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓரிரு பொறிகளை எடுத்துக்காட்டினேன். இந்த நூல் முன்னரே குறிப்பிட்டது போன்று ஒரு கானகப் பயணம். இது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய திறப்புகளை அளித்துக்கொண்டே இருக்கும்.

இந்த நூலின் பின்னணியில் இருக்கும் உழைப்பு சாதாரணமானதல்ல என்பதை வாசிப்பவர் அனைவரும் உணர்வர். இந்த நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்த இலங்கை சைவநெறிக் கழகத்துக்கு பாராட்டுகள்.

(25 நவம்பர் 2018 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

சைவநெறிக் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா

0 comments

இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் வெளியீட்டு விழா, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2018 ஒக்டோபர் 20 (சனிக்கிழமை) கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சைவப்புலவர் திரு ந.சிவபாலகணேசன் எழுதிய "சிவப்பிரகாசக் கதவம்", கழகப் பொதுச் செயலாளர் திரு வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.  யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.



விழா அரங்கில் விருந்தினர்கள்
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி. திருமதி. சாந்தி கேசவன் "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு அறிமுகவுரை ஆற்றுகிறார்.





யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர், சைவப்புலவர் திரு.சி.ரமணராஜா "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு நயவுரை ஆற்றுகிறார்





சித்தாந்தரத்தினம் திரு.சிவபாலகணேசன் அவர்களின் "சிவப்பிரகாசக் கதவம்" நூல் வெளியிடப்படுகிறது.

"அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலை யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் வெளியிட, பெற்றுக்கொள்பவர் திருமதி.கைலாசபிள்ளை அம்மையார் அவர்கள். 



மேலும் வாசிக்க »

மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!

0 comments


கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன. தனித்துவம் என்னவென்றால், விளக்கீடு தமிழர் மத்தியில் மட்டுமே வழக்கில் இருக்கின்றது.

தீபாவளி, தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் (பொ.பி 17ஆம் நூற்றாண்டு) பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்கின்றது என்பது பொதுவான தகவல். ஆனால் தீபாவளி தொடர்பான மிகப்பழைய தமிழ்ச்சான்று எங்கு கிடைக்கின்றது தெரியுமா? இலங்கையில்.

தம்பைமாநகர் (குருணாகல் - தம்பதெனியா) அரசனான (3ஆம் அல்லது 4ஆம்) பராக்கிரமபாகு முன்னிலையில், போசராச பண்டிதரால் பொ.பி 1310இல் அரங்கேற்றப்பட்ட சோதிட நூல் சரசோதிமாலை. இதன் ஏழாவது தெய்வவிரதப் படலத்தில் தீபாவளி கடைப்பிடிப்பது எப்படி என்பது பற்றிய செய்யுளொன்று காணப்படுவதுடன், அதில் "பிதிர்கள் இன்பமுறு தீபாவலி" என்ற வரியைக் காணமுடிகின்றது. (அடுத்த செய்யுளில் 'ஆரல் நலமாமதி' என்று கார்த்திகை தீபம் சொல்லப்படுவதால், அதுவும் இதுவும் அப்போதே தனித்தனியாகவே வழக்கில் இருந்தமை தெரிகின்றது).

ஒரு சோதிட நூலாக இருந்த போதும், 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் நூல், சரசோதிமாலை. ஆர்வமுள்ளோர் இங்கு தரவிறக்கிப் படிக்கலாம்: 



சரி. அதை விட மேலதிகமாக, மூன்று குறிப்புகளை நாம் கவனிக்கவேண்டும். 

குறிப்பு 01:
தமிழில் "குன்றில் இட்ட தீபம் போல" என்றோர் உவமை இருக்கிறது. பலர் காண, அல்லது பலர் புகழ வாழும் ஒருவரைக் குறிப்பிட இந்த மரபுத் தொடர் பயன்படுவதுண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி "குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன" என்று இதே உவமையை எடுத்தாண்டிருக்கிறது. இன்றும் கார்த்திகைத் தீபமன்று, திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் விளக்கு புகழ்பெற்ற ஒன்று. திருப்பரங்குன்றம் போன்ற வேறு சில கோவில்களிலும், கார்த்திகை விளக்கீடன்று மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

குறிப்பு 02:
இலங்கையில், குறிப்பாக எங்கள் ஊர்ப்பக்கம் மூதாட்டிகள் வாழ்த்தும் போது, "கதிரமலைல வச்ச விளக்குப் போல வாழுங்கோ" என்று வாழ்த்துவார்கள். கதிரமலை, கதிர்காமத்திலுள்ள மலை. அங்கு இன்று விளக்கேதும் எரிவதாகத் தெரியவில்லை. ஆனால், கார்த்திகை விளக்கீட்டின் தொடர்ச்சியாக, இப்போதும் கதிர்காமத்தில் "இல் மஹ கச்சி பெரகரா" இடம்பெறுகிறது. பொதுவாக நவம்பரில் (தமிழ் கார்த்திகை) வருகின்ற முழுநிலவைத் தான் சிங்களப் பஞ்சாங்கம் 'இல்' என்று அழைக்கிறது. மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழா, வருடாந்த ஆடிவேல் விழாவுக்கு அடுத்தபடியாக கதிர்காமத்தில் புகழ்பெற்ற ஒன்று.

குறிப்பு 03:
கிழக்கிலங்கைத் தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் "ஆடகசௌந்தரியின் மகன் சிங்ககுமாரன் ஆடித்திங்கள், அமாவாசை இருநாளும் இராவணேஸ்வரன் பெயரில் உக்கந்தத்திருப்பணியில் பெரிய தீபம் ஏற்றும்படி திட்டம்செய்தான்" என்ற குறிப்பு உள்ளது. இங்கு சொல்லப்படுவது கீழைக்கரையின் தென்கோடியிலுள்ள உகந்தமலை.

இப்போது கேள்வி இது தான். மலையுச்சியில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம், குறிப்பாக முன்னோர் வழிபாடாக மலையுச்சியில் தீபமேற்றும் வழக்கம், பண்டு தொட்டே நம் மத்தியில் இருந்திருக்கிறதா? பலர் காண மலையுச்சியில் தீபம் ஏற்றுவதற்கு, ஏற்றியதற்கு, சடங்கு - மரபு தவிர்ந்த வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக்கூடுமா? பழந்தமிழ் இலக்கியங்களில் வேறு எங்கேனும் இத்தகைய தகவல்கள் பதிவாகி இருக்கின்றனவா? எல்லாவற்றுக்கும் மேல், என்றோ நம் தொல்மூதாதை ஒருவர் கண்ட எரிமலை வெடிப்பு, அல்லது மலைச்சரிவுக் காட்டுத்தீ தம் முன்னோரை அழித்ததை நினைவுகூரவே இது நோன்பாக மாறித் தொடர்ந்ததா? 

அறிந்தவர் விளக்கினால், விளக்கெனத் தொழுவேன்.
பிந்திய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 
மேலும் வாசிக்க »

திரையிசை இலக்கியம்

12 comments

நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும்.

சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.
                                             

அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தாதி ஆறாம் பாடல். இதையெப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம்? 

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

தேவியின் அடியவன் அவளது பாதங்களைத் தலையில் சூடியிருப்பான். சிந்தனை முழுக்க அவளது மந்திரமே ஓடும். ஏனைய அடியார்களுடன் சேரும் போதும், அவன் அவளது புகழ்மொழிகளையே கூறுவான்.

இந்த வரிகளை, நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடுகிறான் என்று கொண்டால், அவ்வரிகள், அக்காதலை வேறொரு தளத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, இல்லையா?

பக்தி மார்க்கத்து வரிகள், உலகியல் சார்ந்து நாயகனால் நாயகி மீது பாடப்படும் என்றால், உலகியல் சார்ந்து நாயகி மீது பாடப்பட்ட வரிகளை, பக்தி மார்க்கத்திலும் தெய்வம் மீது பயன்படுத்தலாம் தானே? வைஸ் வேர்சா.

திரையிசை அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.  தமிழகத் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பாடல் "சொல்லடி அபிராமி". 1971இல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அது. சாதாரணமாகக் கேட்பவர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அப்பாட்டில் வரும் இடம் ஒன்றுண்டு.
                                             

இந்த வரிகளும் தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமானவை தான். குற்றாலக் குறவஞ்சி. அதன் பாட்டுடைத் தலைவியான வசந்த சுந்தரி பந்து விளையாடுகிறாள். எப்படியென்றால்,


செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட, இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே! 

சிவந்த கையிலுள்ள வளையல்கள் கலிங் கலிங்கென்ற ஒலியுடன் "வெற்றி வெற்றி" என்று கோஷம் இடுகின்றன. செம்மையான இசை என்று சொல்லும் படி,  சிலம்பும் தண்டையும் கலந்து ஒலிக்க இடை அசைந்தாடுகின்றது. இரு தனங்களும் "கொடிய பகையை வென்றுவிட்டோம்" என்று குழைந்து ஆட, மலர்க்கொடி போன்ற பெண்ணான வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாளாம். 

இன்பச்சுவை சொட்டும் இந்த வரிகளை, பக்திச்சுவை எனும் தட்டில் கொட்டி, "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட" என்று உருகுகிறார் கண்ணதாசன். அங்கு அன்னை காதலி ஆகிறாள். இங்கு காதலி அன்னை ஆகிறாள்.  இலக்கியத்தின் அழகு!

யூரியூப்பில் தேடிய போது, இதைவிடப் பழைய இன்னொரு படமான "குறவஞ்சி"யில் இதே பாடல் வேறொரு விதமாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது.
                                             

என்ன கறுப்பு வெள்ளை சலிப்பூட்டுகிறதா? சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா? என்ன? இசைப்புயலா? குற்றாலக் குறவஞ்சிக்கு இசையமைத்திருக்கிறாரா? அதிர்ச்சி எல்லாம் அடையவேண்டாம். கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆறுதலாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.



இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம்
முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கு அணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொண்டாடினளே!

இவள் திருமகளோ, பேரழகியோ, ரம்பையோ, மோகினியோ என்றெல்லாம் பார்த்தவர் வியக்க, பந்தை அடிக்க மனம் விரைகிறதா, விழிகள் முந்துகின்றனவா, கை முந்துகின்றதா என்று சிந்திக்க வைக்க, சந்திரனைச் சூடிய குற்றாலநாதரின் வீதியிலே மணியாபரணம் அணிந்த வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாள் என்பது பாடல் வரிகள். இரட்சகன் திரைப்படத்தில் பிரிந்திருந்த காதலர் சேரும் காட்சியில் மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல்.உள்ளத்தால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உடலால் இருவரும் விலகி நிற்கும் அந்தக் காட்சியில் இந்தப் பாட்டு வரிகள் எப்படிப் பொருந்துகின்றன? யூரியூப்பில் "ரீப்ளே" கொடுத்தபடி யோசியுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற இந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பாக, கீழ்வரும் நான்கையும் சொல்லலாம். "கோச்சடையான்" திரைப்படத்தில் வரும் தாண்டவக் காட்சிக்கு முன் ஒலிக்கும் "மாசில் வீணையே" எனத் தொடங்கும் வரிகள். அப்பர் தேவாரத்திலிருந்து பெறப்பட்டது அது.
                                             

அதே போல், "காவியத் தலைவன்" திரைப்படத்தில் இடம்பெறும் "ஏவினை நேர்விழி" எனத் துவங்கும் திருப்புகழ். வாணி ஜெயராமின் குரல். வேதிகாவின் அற்புதமான அபிநயம். மயிற்பீலி போல வருடும் மெல்லிசை. அப்படியே உள்ளம் உருகச் செய்யும். பௌர்ணமி நள்ளிரவுகளுக்கான என் இசைத்தொகுதியில் இடம்பிடித்துள்ள முக்கியமான பாடல் இது.
                                             


இவற்றுக்கு கொஞ்சமும் குறையாமல், "மார்கழித் திங்களல்லவா"வுக்கு முன்பு வருகின்ற "மார்கழித் திங்கள்",  சிவாஜி திரைப்படத்தில் ஒலிக்கும் "மாலே மணிவண்ணா" ஆகிய இரு ஆண்டாள் பாசுரங்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மெய் சிலிர்க்க வைப்பவை.  (இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதில் வரும் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் தான் இந்தப் பாசுரத்தையே இனங்காட்டியது 😇).

சரி, சரி, இசைப்புயல் புகழ் போதும்.. எங்கள் இசைஞானி மட்டும் சளைத்தவரா என்று  எதிர்க்கோஷ்டியினர் கிளம்பி விடாதீர்கள். இசைப்புயலை விட, இசைஞானியின் பாடல்களில் தான் அதிகம் தமிழ் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது என்று பட்சி சொல்கிறது.  உடனடியாக நினைவுக்கு வரும் இளையராஜாவின் புதுப்பாடல், தாரை தப்பட்டை "பாருருவாய". முழுக்க முழுக்க திருவாசக வரிகள் அப்பாடல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் தடவை கேட்டபோதே ஏனென்று தெரியாமல் கண் கலங்கியிருக்கிறேன். காட்சியோடு பார்க்கும் போது மனதை அப்படியே பிழிந்து போடும். இந்தப்பாடலில் இரு வேறுமங்கள் (versions) இருக்கின்றன. ஒன்று கீழே. இன்னொன்று இங்கே.
                                             


திருப்புகழ், குறவஞ்சி என்று பிற்கால இலக்கியங்கள் தானா. வைரமுத்தரின் துண்டு துக்கடா வரிகள் போலன்றி, சங்க இலக்கியங்கள் ஒன்றும் முழுமையாக திரையிசையில் எடுத்தாளப்படவில்லையா என்று கேட்பீர்களென்றால்,  இருக்கிறது. மிக அண்மைக்காலத்தில் வெளியான ஒரு பாடல் இருக்கிறது. நம்மவர் சினமா "யாழ்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிவயநம' பாடல். அதில் பாடப்படுவது, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "பொருநராற்றுப்படை". பாடகர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பாடியிருந்தால், இப்பாடல்  அடைந்திருக்கக்கூடிய உயரமே வேறு.
                                              



அத்தனை பிரபலமாகாத இன்னொரு பாடல் இருக்கிறது. "திங்கள் மாலை வெண்குடையான்".   'கரும்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கானல் வரிகள். 70களில்  தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லையாம். புகழ்பெற்ற இந்திய இசைமேதை சலீல் சௌத்ரியால் இசையமைக்கப்பட்ட பாடல் இது. 
                                             

இப்படி, நேற்றைய கண்ணதாசனிலிருந்து, இன்றைய வைரமுத்து வரை,  நேற்றைய எம். எஸ்.வி, ராமமூர்த்தியிலிருந்து, இன்றைய இசைஞானி, இசைப்புயல் வரை எல்லோருமே மரபைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் தான். திரையிசையில் இன்னும் மூழ்கினால்  இந்தப்பட்டியலில் நிறையப்பாடல்கள் இருப்பதைக் காணலாம்.

நூறு நூறாண்டுகள் கடந்த வரிகளை வெறும் இசையாக, வெறும் சொல்லாக  இரசிப்பதற்கும், "ஓ! இது இந்த இலக்கியத்தில் வந்த வரிகள்" என்று உணர்ந்து மகிழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த சுகமே அலாதியானது. புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'மீம்'களைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு அந்த மீமில் இடம்பெறும் திரைப்படத் தருணமோ, அல்லது வசனங்களோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்களுக்கு அந்த மீமிலுள்ள நகைச்சுவை முழுதாகப் புரியாது. திரையிசையும் அப்படித்தான்.

இலக்கியத் தமிழை திரையிசையில் இரசிக்க வேண்டுமென்றால்,  அகநானூறு, புறநானூறெல்லாம் படித்திருக்கவேண்டும், பாடமாக்கி இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வெறும் பாரதியார் பாடல்கள், அன்றாடம் சொல்கின்ற தேவார, திருவாசக வரிகள் கூட  அப்படியே; அல்லது கொஞ்சம் மாற்றப்பட்டு திரையிசையில் ஒலிக்கலாம். அடுத்த தடவை ஏதேனும் பாடல்களைக் கேட்கும் போது, வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் ஒரேயொரு சொல்லில் கூட இலக்கியமொன்றை உங்களால் அடையாளம் காணமுடியும். அதைக் கண்டுகொள்ளும் போது நீங்கள் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தை இருக்காது. 
     

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner