நித்திய கன்னியர்

0 comments

சிறுவயதில் அம்மா எனக்குத் தலையில் எண்ணெய் வைக்கும் போது ஒரு மந்திரம் சொல்வார் "மாவலி பரசுராமன் வாயுமைந்தன் வாசுதேவன் மேவிய சுக்கிரீவன் விளங்குகின்ற விபூசணன் என்றென்றும் பதினாறு வயது மார்க்கண்டனாக இருக்கக்கடவாய்."

இதில் சொல்லப்படும் ஏழு பேரும் வைதிக மரபில் ஏழு சிரஞ்சீவிகளாக, சாகாவரம் பெற்று வாழ்பவர்களாக சொல்லப்படுபவர்கள் (இந்தப் பட்டியலில் வேறு பெயர்களும் இடம் பெறுவதுண்டு).

இப்படி ஆண்கள் நினைத்துப் பார்க்கவேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஏழு சிரஞ்சீவிகள் போலவே, பெண்கள் தினமும் காலையில் நினைத்துப் பார்க்கவேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் நம் மரபில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பஞ்சகன்னியர். அந்த ஐந்து கன்னியரும் திரௌபதி, குந்தி, தாரை, மண்டோதரி, அகலிகை. (குந்திக்குப் பதில் சீதை சொல்லப்படும் பட்டியலும் உண்டு.)


இந்தப்
பட்டியலில் உள்ள முரண்நகை என்னவென்றால் இந்த ஐவரும் வழக்கமான அர்த்தத்தில் கன்னியரே இல்லை. திரௌபதிக்கு ஐந்து கணவர்கள். குந்திக்கும் கணவர் ஐந்து பேர். அகலிகை, கணவன் இருக்க இந்திரனோடு குலாவியவள்.
வான்மீகி இராமாயணத்தின் படி மண்டோதரி, இராவணன் கொல்லப்பட்ட பிறகு விபீஷணனை திருமணம் செய்து கொள்கிறாள். வாலியின் மனைவி தாரை, வாலி கொல்லப்பட்ட பிறகு சுக்கிரீவனை மணக்கிறாள்.

பெண்களுக்கு இன்றைய சமூகம் வகுத்திருக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான வாழ்க்கை வாழ்ந்த இந்த ஐவரையும் ஒவ்வொரு பெண்ணும் அதிகாலையில் எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் தான் என்ன?

இப்போதே இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கையில், பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்குரிய சுதந்திரம் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. அதிலும் பெண் முதன்மையாக ஒடுக்கப்படுவது அவளது பெண்மையாலேயே. இன்றைக்கெல்லாம் ஒரு ஆணை இழிவுபடுத்த வேண்டுமென்றால், அவனது தாயின், மனைவியின், தமக்கையின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினாலே போதும்.

அந்தப் பெண்மை என்ற வரம்பைத் தான் இந்த ஐவரும் மீறினார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இவர்கள் செய்த சாதனை ஒன்றே ஒன்று தான். தனக்குரிய பாலியல் சுதந்திரத்தை தைரியமாகப் பெற்றுக்கொண்டது. அதேவேளை தங்கள் கன்னிமையைக் காத்துக் கொண்டது. இந்த உலகம் தன்னைத் திருப்திப்படுத்த, பெண்கள் மீது மட்டும் போட்டிருக்கும் கற்பு என்ற கவசம் மீதான காறி உமிழல் அது. திரௌபதி வழிபாட்டில் அடிக்கடி சொல்லப்படும் "ஐவருக்கும் பத்தினி, அழியாத கன்னி" என்ற கூற்றிலுள்ள முரணை இதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், பாலியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதற்காகத் தான் இந்த ஐவரை பெண்கள் தினமும் காலையில் நினைவு கூர வேண்டுமா?

இல்லை. அப்படிச் சுருக்குவது அபத்தம். ஐந்து பாத்திரங்களும் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் எப்படி எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தால் தான் முழுமையான சித்திரம் துலங்கி வரும்.

இராமாயணத்தில் மண்டோதரி மற்றும் தாரையின் நுண்ணறிவும் இராஜதந்திரமும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டு முறையே இராவணனும், வாலியும் சுக்கிரீவனும் வியக்கும் இடங்களும் அங்கு வருகின்றன. மகாபாரதத்தில் திரௌபதியும் குந்தியும் கூட அவ்வாறே. பெண்கள் தரப்பில் பாரதப்போரின் சூத்திரதாரிகள். எஞ்சியுள்ள அகலிகை வேறொரு விதத்தில் அணுகப்பட வேண்டியவள்.

உண்மையிலேயே இந்தப் பெண்கள் இரத்தமும் சதையுமாக இந்த உலகில் நடமாடியவர்கள் என்றால், அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய வசைகள், வலிகள் தான் எத்தனை எத்தனை? அவர்களின் நிமிர்வும் ஆளுமையும் ஆணுலகைச் சீண்டியிருக்கும். அதை அடக்கத் தூண்டியிருக்கும். இதிகாசங்களில் கூட அவர்கள் ஐவருமே தோற்றவர்கள் தான். ஆனால் பெண்ணாக வென்றவர்கள். காலமுள்ள வரை நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அதனால் நித்திய கன்னியர்.

நிஜ வாழ்க்கையில் எத்தனையோ இடத்தில் நாம் குந்திகளை, மண்டோதரிகளை, தாரைகளை, திரௌபதிகளை, அகலிகைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறோம். நம் பக்கத்து வீட்டில், நம் தொழிலகத்தில், நம் நட்பு வட்டத்தில், நம் சொந்தத்தில், யாரோ ஒருத்தி பஞ்ச கன்னியரில் ஒருத்தி பட்ட வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டு புன்னகையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

நான் கண்ணகியை போற்றுபவன். ஆனால் பஞ்ச கன்னியரை அவளுக்கும் மேலானவர்களாக ஆராதிக்கிறேன். கண்ணீரை மறைத்துக்கொண்டு என் உலகில், என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ கன்னியரில் அவர்களைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் என் வணக்கம். மகளிர் தின வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க »

மலாய்த? மலேத? : அவரே கன்பீஸ் ஆகிட்டாரு!

0 comments

இது நடந்தது போன வருடம். வியர்த்துக் கொட்டும் ஏப்ரல் மாதம். பணி நிமித்தம் கந்தளாய்க்குப் போயிருந்தேன். அங்கிருந்து திருக்கோணமலைக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் ஒருவன் இருக்கைக்கு அருகே வந்து “மலேத?" என்று கேட்டான். அப்போதும் இப்போது போலவே சிங்களத்தில் கத்துக்குட்டி நான். ‘மலேத’ என்றால் என்ன? அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் பயணச்சீட்டுக் கொப்பியை விரித்தான். ஓ! நடத்துனர்! ஒருகணம் தடுமாறி விட்டு, போகும் இடத்தை சிங்களத்தில் சொல்லி பணத்தை நீட்டினேன் “த்ரிகுணாமல எக்காய்". அவன் மேலும் கீழும் பார்த்துவிட்டு என்னிடம் நூறு ரூபாய் வசூலித்தான்.


கந்தளாயிலிருந்து திருக்கோணமலை சுமார் 40 கி.மீ. தூரம். அந்தத் தூரத்துக்கு நூறு ரூபாயா? அது தனியார் பேருந்து, முதல் பயணம் வேறு. எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விட்டேன். அடுத்த தடவை திருக்கோணமலையிலிருந்து கந்தளாய்க்கு பயணச்சீட்டு எடுத்த போது தான் பயணச்சீட்டு வெறும் 50 ரூபாய்தான் என்று தெரிந்தது.
பிறகு திருக்கோணமலையில் சிங்கள அதிகாரி ஒருவரை அலுவல் நிமித்தம் சந்திக்கவேண்டி இருந்தது. கொஞ்சம் மூத்தவர். குறிப்பிட்ட பணிக்காக நான் வெகுதொலைவு வந்திருந்ததால் என் மீது அதிகமாகவே இரக்கம் காட்டினார். உத்தியோகபூர்வமான உரையாடல் முடிந்ததும், சாதாரணமான சுக விசாரிப்புக்கு பேச்சு மாறியது. அவர் அன்போடு, "புத்தே மலாய்த?" என்று கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதே கேள்வி. அங்கே மலேத. இங்கே மலாய்த. “காவலன்” திரைப்பட வடிவேலு போல அவரே கன்பீஸ் ஆகிட்டாரோ? இல்ல ரெண்டும் ஒண்டு தானா? மண்ணாங்கட்டி, சிங்களத்தில அப்பிடி எண்டா என்னவா இருக்கும்?

சீச்சீ இரண்டும் ஒன்றாக இருக்காது. மலாய்? இவர் என்னைப் பார்த்து மலாய் இனத்தவனா என்று கேட்கிறார்! இந்த ஆளுக்குக் கண் என்ன குருடா, இந்த அட்டக்கரி நிறத்தைப் பார்த்த பிறகும் இப்படிக் கேட்பதற்கு? ஒருவேளை என் கண்களைப் பார்த்து அவர் மலாய் இனத்தவன் என்று நினைத்தாரோ! இருக்கலாம். கபில நிறக் கண்மணிகள். அந்தக் கண்களைப் பார்த்து என் சிங்கள நண்பிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்…… சரி சரி, அதெல்லாம் இப்போது இந்தக் கட்டுரைக்குத் தேவையா, என்ன?

“நான் மலாய் இல்லை, தமிழ், இலங்கைத் தமிழ்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அவர் சிரித்தபடி தமிழில் சொன்னார் “நான் சொந்த ஊர் கேட்டன் மகன். திருகோணமலையா எண்டு, மலையா?” இதைத் தான் அந்த நடத்துனனும் போகும் இடத்தை ‘மலேத? மலேத?” என்று கேட்டு தலையில் அடித்துக்கொண்டானா? என் முகத்தில் லீற்றர் கணக்கில் அசடு வழியத்தொடங்கியது.

திருக்கோணமலை அல்லது த்ரிகுணாமலே என்பதை சிங்களவர்கள் மலே என்றே சுருக்கமாக அழைக்கிறார்கள் என்று அன்று தான் தெரிந்துகொண்டேன். இது யாரோ புதுசா வந்திருக்கிற இளிச்சவாய் என்று நினைத்து, அந்த நடத்துனன் என்னிடம் ஐம்பது ரூபாய் கொள்ளையடித்ததில் தப்பே இல்லை.
வேலை முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்தேன். தூரத்தே கோணமாமலை கடந்து சென்றது. உண்மையில் சிங்களவர் நீட்டி முழக்க அலுப்பில் தான் திருக்கோணமலையை ‘மலை’ என்று சுருக்கி
அழைக்கிறார்களா? பத்து மாதங்கள் கடந்த பின்னர் அறிந்து கொண்டேன். இல்லை, அப்படி அழைப்பது மரபு, பாரம்பரியம், அதற்கென்றும் நீண்ட வரலாறு இருக்கிறது!

பொலனறுவையில் கிடைத்த கல்வெட்டொன்று பற்றி அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. அது இப்போது எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை. அதைத் தேடியும் தன்னால் கண்டறிய முடியவில்லை என்று பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர்.சி.பத்மநாதன். சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் அந்தக் கல்வெட்டை வாசித்த தொல்பொருள் அறிஞர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களால் எடுக்கப்பட்ட மைப்படி மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறது.

“ஈழம் எழுநூற்றுக்காதமும் யெறிஞ்சு கொண்டருளிய செயபாகு தேவர் நிழல் வேளைக்காறன் மலைமண்டல நாயக்கனான சேதராயன்” என்பது அந்தக் கல்வெட்டிலுள்ள வரிகள். இந்த எழுத்து பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு உரியது. இலங்கை வரலாற்றில் வருகின்ற ஜயபாகு எனும் பெயர் படைத்த மன்னர்கள் இருவர். இருவரும் முறையே பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் ஆண்டவர்கள்.

முதலாம் ஜயபாகு மன்னன் ஓராண்டே ஆட்சிபுரிந்தவன். ஆனால் அவனது ஆட்சியாண்டுகளைச் சொல்லி தமிழ்மொழியில் கூட ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மகாவம்சத்திலோ, ஜயபாகு பற்றிய ஏனைய சான்றுகளிலோ கிடைக்காத “எழுநூற்றுக்காதமும் எறிந்த” என்ற பட்டம் வருவதால், இவன் வேறொரு ஜயபாகு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பேராசிரியர்.

என்றால், இந்தக் கல்வெட்டு சொல்கின்ற செயபாகு தேவர் யார்? சிங்கள வரலாற்று நூல்களில் கலிங்க மாகோன் குறிப்பிடப்படும் சில இடங்களில், ஜயபாகு எனும் துணையரசன் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறான். எனவே இவனே அவன் ஆகவேண்டும். இங்கு வரும் மலைமண்டலம் என்பதற்கு மூன்றுவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று மலையரட்டை என்று மகாவம்சத்தில் சொல்லப்படும் இலங்கையின் இன்றைய மலையகப் பகுதி. இரண்டு, தமிழ் இலக்கியங்களில் மலைநாடாகப் போற்றப்படும் சேரநாட்டு மலையாளக்கரை. மூன்றாவது திருக்கோணமலை.

மலைமண்டல நாயக்கன் பற்றிய குறிப்பு கிடைத்த பொலனறுவையின் புவியியல் அமைவிடத்தைச் சிந்திக்கும் போது, கேரளம், மலையகம், திருக்கோணமலை ஆகிய மூன்றில் திருக்கோணமலையே மிக நெருக்கமானதாக இருக்கின்றது. எனவே சேதராயன் என்பவன் திருக்கோணமலைப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகித்த ஒருவன் என்பதும், அவன் ஜயபாகு தேவரின் பிரதிநிதியாக (நிழல்?) அங்கு ஆண்டிருக்கின்றான் என்றும் இதை விரித்துப் பொருள்கொள்ளமுடியும்.

திருக்கோணமலை, வெறுமனே ‘மலை’ என்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு கங்குவேலியில் கிடைத்த இன்னொரு கல்வெட்டும் சான்றாகின்றது. “மலையில் வன்னியனார்” என்பவரும் ஏழு ஊர்களின் அடப்பரும் கூடி, கங்குவேலியில் கோணைநாதருக்கு வயல்களைக் காணிக்கை செய்ததை அக்கல்வெட்டு கூறுகின்றது. திருக்கோணமலை முன்பு திருக்கோணமலைப்பற்று, தம்பலகாமம்பற்று, கொட்டியாரம்பற்று, கட்டுக்குளம்பற்று என்று நான்கு பற்றுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த ஒவ்வொரு பற்றையும் ஒவ்வொரு வன்னியர்கள் பரிபாலித்து வந்தனர். எனவே மலையில் வன்னியனார் என்பது திருக்கோணமலைப்பற்று வன்னியனாரைக் குறிக்கும்.

திருக்கோணமலையை “மலை” என்று சுருக்கமாக அழைப்பது இன்று வெறும் மக்கள் வழக்கு. ஆனால் அந்தச் சுருக்கப் பெயருக்குப் பின்னேயும் ஒரு கதை இருக்கிறது என்பதை அறிந்துகொண்ட போது நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ சரடுகளால் இழைக்கப்பட்ட வரலாற்றின் மீது தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் எத்தனை திகைப்பை ஊட்டுகின்றது?

(ஆர்வமுள்ளவர்கள் பேராசிரியர் சி.பத்மநாதனின் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் நூலின் முதலாம் இரண்டாம் பாகங்களை வாசிக்கலாம், இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடு)
மேலும் வாசிக்க »

பேராசிரியர் மௌனகுரு நயவுரை | அலகிலா ஆடல்

2 comments
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 2018 டிசம்பர் 29 (சனிக்கிழமை) அன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் இரு நூல் அறிமுக விழா இடம்பெற்றது. அவ்விழாவில் வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலைப்பற்றி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய நயவுரை.

மேலும் வாசிக்க »

எம்.ஐ.எம்.சாக்கீரின் "சம்மாந்துறை - பெயர் வரலாறு"

0 comments
பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்துகளில் மூன்று விதமான குறைபாடுகள் இருப்பதுண்டு. ஒன்று, அது கருத்துவாதி ஒருவரால் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுவது. வரலாற்றாளர் தனது இனம் சார்ந்ததாக, அல்லது மொழி சார்ந்ததாக, அல்லது மதம் சார்ந்ததாக, சில முன்முடிவுகளை எடுத்துக்கொண்டு,அதை நிரூபிப்பதற்காக வரலாற்றைக் குறுக்குவது, திரிப்பது முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த வகை. இப்படிச் சொல்வதை, மதம், இனம், மொழி சார்ந்த எல்லா வரலாறுகளுமே குறைபாடானவை என்று சொல்வதாகக் கொள்ளக்கூடாது. அத்தகைய வரலாறுகளை எழுதும் ஆசிரியர்கள், சில இடங்களில் என்றாலும், நடுநிலைப் பார்வையைக் கொண்டிருக்க முயல்வதில்லை என்பது தான் இப்படிச் சொல்வதன் சரியான பொருள். 

இரண்டாவது குறைபாடு தொன்மங்களை வரலாறு ஆக்குவது. தொன்மங்கள் (அதாவது ஐதீகங்கள், நம்பிக்கைகள், செவிவழிக் கதைகள்) எல்லாப் பண்பாடுகளிலுமே தவிர்க்க முடியாத இடம் வகிப்பவை. ஆனால், தொன்மங்களை அப்படியே நடந்தவை என்று நம்புவதும், அவை மறுக்கமுடியாத வரலாற்றுச் சம்பவங்கள் என்று கொள்வதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதி. தொன்மத்தில் கூறப்படும் வரலாறு என்ன என்பது நன்கு பகுப்பாயப்பட்ட பின்னரே, அதை வரலாறாக ஏற்கவேண்டும். ஆனால், யாதொரு சரித்திர முக்கியத்துவமும் இல்லாத தொன்மங்களை வரலாறு என்று நிரூபிக்க முனைவதிலேயே நம்மில் பலர் பெருமளவு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

உதாரணமாக, சீதையை இழந்து விட்டதால் வெகுண்ட இராமர் கடலைச் சுட்டிக்காட்டி “அந்த மான் நிக்கோ பார்” என்று கேட்டாராம், அதனால் தான் அந்தத் தீவுகளுக்கு அந்தப்பெயர் வந்ததாம் என்பது சுவையான ஒரு தொன்மம். இந்தக் கட்டுரையாளனின் பிறந்தகமான அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்துக்கும் இப்படி ஒரு தொன்மம் கூறப்படுவதுண்டு. அதாவது இராம இலட்சுமணர்களை வெல்வதற்காக நிகும்பலை யாகம் செய்ய முயன்ற இராவணன் மகன் இந்திரசித்து, இங்கிருந்த சிவன் கோவிலில் அடைக்கலம் புகுந்ததாகவும், இராமர் இலட்சுமணரைப் பார்த்து “தம்பி, இழு வில்லை” என்று சொல்லியதை அடுத்து இலட்சுமணன் அம்பால் இந்திரசித்து கொல்லப்பட்டதாகவும், எனவே தான் இந்த ஊர் “தம்பிஇழுவில்” என்றானது என்றும் ஒரு கதையை சொல்லுவார்கள். 

இந்த இரு தொன்மங்களுமே வேடிக்கைத் தன்மை வாய்ந்தவை, கேட்கவும் இரசிக்கவும் அருமையானவை. ஆனால், இந்த இரு கதைகளையும் வரலாற்று ஆதாரமாகக் கொள்ளமுடியுமா? வெறும் தொன்மங்களை ஆதாரமாக வைத்து மேற்குறிப்பிட்டு தீவுகளும், ஊரும் இராமாயணத்தோடு தொடர்புடையவை என்று சொல்லமுடியுமா? எத்தனை பெரிய அபத்தம் அது? 

மூன்றாவது குறைபாடு, காலவரிசை தொடர்பானது. நடந்து முடிந்த விடயமொன்று, இரு வேறு மூலங்களில் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டால் அதில் காலத்தால் முந்தையதையே வலுவான ஆதாரமாகக் கொள்ள வேண்டும். காலத்தால் பிற்பட்ட விடயத்தில் பல இடைச்செருகல்களும் பின்னிணைப்புகளும் இருக்கலாம். உதாரணமாக மீண்டும் இராமாயணத்துக்கே போவோம். வரலாற்று ரீதியாக இராமன் என்ற அரசனின் வாழ்வை அறிய சரியான மூலம் வடமொழி வான்மீகி இராமாயணமா, அதற்கு பல நூற்றாண்டுகள் பிந்தைய தமிழ் கம்ப இராமாயணமா என்று கேட்டால், அக்கேள்விக்குப் பதில், வடமொழி வான்மீகி இராமாயணம் என்பதே. ஆனால், நம்மவர்கள், அவை இரண்டுக்கும் இடையேயுள்ள காலவேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாமல், இரண்டிலுள்ள விடயங்களையும் ஒன்றாகக் கூறி குழப்பி அடித்துக் கொள்வார்கள். 

ஆக, இந்த மூன்று குறைபாடுகளும் இல்லாத, அல்லது இந்த மூன்று குறைபாடுகளைத் தவிர்க்க முயன்ற ஒரு ஆய்வையே திருத்தமான வரலாற்று ஆய்வு என்று சொல்லவேண்டும். இது மூன்றையும் கருத்தில் எடுக்காத எந்தவொரு ஆய்வும் மீள்பரிசீலனைக்குரியதே. 

இத்தகைய ஒரு தெளிவை இந்தக் கட்டுரையாளன் பெற்றுக்கொள்வதற்கு நிறைய வாசிக்க வேண்டி இருந்தது, நிறைய பக்குவப்பட வேண்டியிருந்தது. ஆனால், இத்தகைய தெளிவை வெறும் இருபத்தொரு வயதிலேயே பெற்றுக்கொள்வதும், ஒரு நூலொன்றை எழுதி வெளியிடுவதும், எத்தகைய ஒரு சாதனை? அதுவும், கிழக்கிலங்கையில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் இத்தகைய பரந்த அறிவைப் பெற்றுக்கொள்வதென்பது எத்தகைய மகத்தான தேர்ச்சி? 

அந்த இளம் ஆய்வாளர், சம்மாந்துறையைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் மொஹமட் சாக்கீர். இருபத்தொரு வயதில் அவரால் எழுதப்பட்டு சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்ட நூல் “சம்மாந்துறை - பெயர் வரலாறு”. 


சம்மாந்துறை கிழக்கிலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நகரம். ஐரோப்பியர் ஆவணங்களில் “மட்டக்களப்பு” என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்ட பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகர், சம்மாந்துறையை அண்டித்தான் அமைந்திருந்தது. சம்மாந்துறை, அந்தத் தலைநகரின் நீர்ப்போக்குவரத்துக்கான துறையாகவும், வர்த்தகக் குடியிருப்பாகவும் அமைந்திருந்தது. அத்தகைய பழம்பெரும் நகரின் இடப்பெயராய்வே இந்நூலின் பிரதான பேசுபொருள். 

நூலின் ஆரம்பத்தில் அமைந்த முக்கியமான சம்மாந்துறை ஆளுமைகளின் விதப்புரைகள், க.பொ.த உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு சாக்கீர் செய்த ஆய்வுகளையும், அந்த ஆய்வுகளை கண்டு அவர்கள் கொண்ட வியப்பையும், அந்த ஆய்வுகளிலுள்ள பக்கச்சார்பின்மையையும் புகழ்வனவாக அமைந்துள்ளன. 

உள்ளே நூலானது, இடப்பெயர் ஆய்வு, சம்மாந்துறை, பின்னிணைப்புகள் ஆகிய முப்பெரும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அத்தியாயங்களும் தோண்டத் தோண்டத் தெவிட்டாத தகவல் சுரங்கங்கள் என்பதே அவற்றின் அழகு. 

இடப்பெயர் ஆய்வு எனும் முதல் அத்தியாயத்தில், இடப்பெயர்கள் இயற்கையையும் ஆட்பெயரையும் அடிப்படையாக வைத்து எப்படித் தோன்றுகின்றன என்பது விரிவாக ஆராயப்படுகின்றது. “தொல்பொருளாய்வில் காணப்படாததும் வரலாற்றுச் சான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியற் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன”, “வரலாறு மௌனமாகும் போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்” முதலான சிறப்பான மேற்கோள்களுடன் இவ்வத்தியாயம் விறுவிறுப்பாக நகர்கிறது. 

இரண்டாவது அத்தியாயமான “சம்மாந்துறை”, பண்டைய கிழக்கிலங்கை வரலாற்றிலும், வாணிப உலகிலும் அது பெற்றிருந்த முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியபடி ஆரம்பமாகிறது. சன்னாதிபுர ராசன் (ஜனநாதபுரம் – இன்றைய பொலனறுவை) காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் “கலியாணச்செப்பு” எனும் கவிப்பாடல், அதன் ஆரம்பத்தில் அமர்ந்து ஆர்வத்தைக் கூட்டுகிறது. 

சம்மாந்துறை நாமவியல் எனும் அடுத்த பகுதி, சம்மாந்துறையின் சொற்பிறப்போடு இணைக்கப்படும், சம்பா, செம்மண், சாமான், சம்மான்காரர், சம்பான் ஆகிய சொற்களை விரிவாக ஆராய்கின்றது. மட்டக்களப்பு மான்மியத்தின் படி, பழைய மட்டக்களப்பு நகர், வாவியின் தென் அந்தத்திலிருந்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டு, இன்றும் சம்மாந்துறையிலுள்ள “மட்டக்களப்புத்தரவை” எனும் கிராம சேவகர் பிரிவும் வேறு பல வரலாற்றாவணங்களும் சான்று காட்டப்படுகின்றன. 

அடுத்து, சம்மாந்துறையிலுள்ள “துறை” என்பது, இன்று சம்மாந்துறையின் வடக்கே உள்ள “அல்லை” எனும் களப்புப் பகுதி தான் என்பது, புவியியல் சான்றுகளின் மூலம் இனங்காட்டப்படுகின்றது. சம்மாந்துறையின் போக்குவரத்து மற்றும் வணிக முக்கியத்துவத்தை நிரூபிக்க வீரமுனை சிந்தாத்திரைப் பிள்ளையார் ஆலயம், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் என்பன சார்ந்த தொன்மங்கள் வரலாற்றுப் பார்வையில் எடுத்தாளப்படுகின்றன. கூடவே, இலங்கை வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடம்பெற்ற பிலிப்பஸ் பால்டியஸ், டி ஒய்லி, ஸ்பில்பேர்கன், ஆர்.எல்.புரோகியர், தொலமி உள்ளிட்ட ஐரோப்பியப் பயணிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் சம்மாந்துறை இடம்பெற்றுள்ளமை சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. 
நூலாசிரியர் எம்.ஐ.எம்.சாக்கீர்

இனி, சம்பா, செம்மண், சாமான், சம்மான் முதலிய பெயர்கள் எவ்வாறு சம்மாந்துறை என்ற பெயரோடு பொருந்திப்போகின்றன என்பது தர்க்கபூர்வமாக ஆராயப்பட்டு, 'சம்மான் என்ற கந்தோனிய மொழிப் பெயரே சம்மாந்துறைக்குப் பெயர் தந்திருக்கவேண்டும்' என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகின்றது. இந்த நிரூபணத்துக்காக பயன்பட்டுள்ள பிறமொழி ஆவணங்கள், இணைக்கப்பட்டுள்ள படங்கள், தரப்பட்டுள்ள சான்றுகளைக் காணக் காண நமக்கும் வியப்பில் விழிகள் விரிகின்றன. 

அதில் குறிப்பிடத்தக்க ஒன்றை சுட்டிக்காட்டலாம். கிழக்கிலங்கைக்கே சிறப்பான குடிவழிப் பாரம்பரியத்தை இன்றும் கட்டிக்காக்கும் மண் சம்மாந்துறை. இஸ்லாமியக் கிராமங்களிலே அதிகளவு குடிகளைக் கொண்ட ஊரான சம்மாந்துறையில், “சம்மானோட்டிகுடி” என்ற குடியை இன்று அவதானிக்கமுடியவில்லை. “ஆனால் இன்றைய 'சேர் முஹம்மது குடி'யின் பழைய பெயர் சம்மானோட்டிகுடி” என்பதை நூலாசிரியர் விவரிக்கும் பாங்கும், அவரது ஆய்வுத்திறனுக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப் போதுமான ஒரு சான்று. 

பின்னிணைப்புகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கிழக்கிலங்கைப் பண்பாட்டு விரும்பிகளுக்கும் அற்புதமான விருந்தாக அமையக்கூடியவை. ஓவ் கெட்டே எனும் டானிஷ் பயணியின் சம்மாந்துறையூடான கண்டிப் பயண வரைபடம், சம்மாந்துறை முஸ்லிம்கள் மத்தியில் இன்றுள்ள குடிகள், சம்மாந்துறையின் காலவரிசைப்படுத்திய பெயர் அட்டவணை, கவி முதலிய கிராமிய இலக்கியங்களில் சம்மாந்துறையின் பெயர், அங்குள்ள ஏனைய இடப்பெயர்கள் என்பன மானுடவியலாளரும் சமூகவியலாளரும் மேலும் மேலும் மூழ்கி முத்தெடுக்கக்கூடிய அற்புதமான ஆய்வுக் கடல். 

தொடக்கத்திலேயே கூறியது போல, ஒரு ஆய்வு, பக்கச்சார்பின்மை - தொன்மங்களை பகுப்பாய்வுக்குட்படுத்தல் - காலவரிசைப்படுத்தல் என்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் போது, அது கூறும் வரலாறு முழுமையானது, குறைகளேதும் அற்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த விதத்தில் சம்மாந்துறையின் இடப்பெயரை பல்வேறு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தும் இச்சிறுநூல் ஆய்வுலகில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொள்கிறது. அதை மிக இளம்வயதிலேயே எழுதிச் சாதித்ததன் மூலம் நண்பர் சாக்கீர் எதிர்கால வரலாற்றுலகில் தனக்கெனக் காத்திருக்கும் இன்றியமையா இடத்தையும் சுட்டிக்காட்டுகிறார். இதைப் பின்பற்றி, சம்மாந்துறை மாத்திரமன்றி இலங்கை தொடர்பான, இலங்கை முஸ்லீம்கள் தொடர்பான, விரிவான வரலாற்று நூல்கள் எழ வேண்டும். ஆசிரியரும் அதில் தன் பங்களிப்பைத் தொடரவேண்டும். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அப்பெருஞ்செயலை இயற்றுவதில் அவருக்குத் துணையிருக்கட்டும். 

நூல்: சம்மாந்துறை - பெயர் வரலாறு 
ஆசிரியர்: எம்.ஐ.எம்.சாக்கீர் 
வெளியீடு: சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டம் 

[அரங்கம் பத்திரிகையின் 48ஆம் இதழில் (24.01.2019) வெளியான கட்டுரை. ]
மேலும் வாசிக்க »

தைத்திருநாளும் தமிழுலகும்

0 comments
வழக்கமாக தைப்பொங்கலன்று பேஸ்புக் வந்தாலே "சித்திரையா, தையா, எது தமிழர் புத்தாண்டு?" என்று, 'உலக தமிழ்ப்புத்தாண்டு பாதுகாவலர் சங்கம்' சார்பாக பொங்குவது தான் என் வழக்கம். இம்முறை அந்தச் 'சங்கம் முக்கியமில்லை; சாப்பாடு தான் முக்கியம்' என்ற சரித்திர முக்கியத்துவம் மிக்க முடிவை எடுத்திருப்பதால் ஒரு 'பொங்கல்' சாப்பாட்டுப் பதிவு. 😊

'பொங்கல்' என்ற சொல்லுக்கு சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை "கொதித்து மேலெழல்" அல்லது "செழித்தல்" என்ற பொருள் மட்டும் தான் உண்டு. அது ஒரு உணவுப்பொருளின்பெயராக முதன்முதலாக சீவக சிந்தாமணியில் தான் வருகிறது. "மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" என்கிறார் திருத்தக்கதேவர். சிந்தாமணியின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுகிறது.


அதற்கு முன் பொங்கல் என்று ஒரு சாப்பாடு இருக்கவில்லையா? என்று கேட்டால், சரியாகச் சொல்லமுடியாது. சம்பந்தர் தன் மயிலைப் பதிகத்தில் தைப்பூசத்தில் பெண்கள் தயாரிக்கும் "நெய்ப்பூசு ஒண்புழுக்கல்" எனும் உணவு பற்றிப் பாடுகிறார். ஆண்டாள், மார்கழி மாதப் பாவை நோன்பின் இறுதியில் "பாற்சோறு மூட நெய் பெய்து" அது முழங்கையில் வழிய இன்பமாக உண்பதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் இங்கு பாடிய உணவு, வைணவக்கோவில்களில் இன்றும் படையலிடப்படும் "அக்கார அடிசில்" என்று சொல்கிறார்கள். இதெல்லாம் பொங்கலுக்கு முந்திய, அல்லது பொங்கலை ஒத்த தமிழர் உணவுகள் ஆகக்கூடும். (சம்பந்தரின் "தை"ப்பூசம், ஆண்டாளின் "மார்கழித்" திங்கள், இரண்டையும் கவனியுங்கள்!)

சிங்களவரிடம் தேங்காய்ப்பாலில் சோற்றை புழுங்கச் செய்யும் 'கிரிபத்' முக்கியமான பண்பாட்டு உணவாக இருக்கிறது. கேரளாவில் அறுவடைக்குப் பின் புதிரை கோவிலுக்குக் கொடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வை 'பொங்காலா' என்கிறார்கள். கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் கண்ணகி கோவிலில் மாசி மாதம் நிகழும் 'ஆற்றுக்கால் பொங்காலா' மிக விசேடம். அங்கும் பெண்களுக்கே முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இலங்கையில், எங்களூர்ப் பக்கம், அறுவடை முடிந்த பின் 'களவட்டிப்பொங்கல்' (களம் வெட்டிப் பொங்கல்) வைத்து சூரியனுக்கும் பூமிதேவிக்கும் நன்றி சொல்லும் மரபு உண்டு. சோழர் கல்வெட்டுக்களில் சொல்லப்படும், அறுவடைத் திருநாளான 'புதுயீடு' என்பதே பின் தைப்பொங்கலாக வளர்ந்தது என்கிறார்கள்.

ஆக, தென்னகச்சமூகத்தின் முக்கியமான திரவ உணவான பால், திண்ம உணவான நெல்லரிசிச்சோறு, அந்த உணவைத் தந்த கதிரவன், அந்த உணவு கிடைக்கும் பிரதான வழிவகையான அறுவடை, இவையெல்லாமே இணையும் மையப்புள்ளி தான் தைப்பொங்கல். பொங்கல் நம் மத்தியில் விசேடமான உணவாக மாறியதிலும், இயல்பாகவே ஒரு கொண்டாட்ட நாளாக வளர்ச்சி கண்டதிலும் வியப்பேதும் இல்லை தானே?

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 😇🌾🌞🙏

(இந்தப் பதிவை நான் முகநூலில் பதிந்த பின்னர் சுவையான இரு கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தப் பின்னூட்டங்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே:



சங்க இலக்கியங்களில் தை நீராடல் மட்டும் தானே சுட்டப்படுகிறது? பிற்காலத்தைய ஆண்டாளும் நோன்பு, நீராடல் என்று தானே பாடுகிறார்!!

உழவர் திருநாள், பொங்கல், சூரிய வணக்கம் இவ்வாறு எப்படி மாற்றம் கண்டது? ஏதேனும் தரவுகள் உண்டா?





இது சற்று ஆர்வமூட்டும் கேள்வி தான். இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
1. இன்றைய தை மாதமும், தமிழ் இலக்கியங்கள் சொல்லும் தை மாதமும் ஒன்றல்ல.
2. அறுவடைத்திருநாளும் சூரியவணக்கமும் இணைந்தே தைப்பொங்கல்.
எப்படியென்றால்,

தமிழ் காலக்கணிப்பு சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. (பிறந்த நட்சத்திரம், இறந்த திதி, விரதங்கள்...). எனினும் நாம் இன்று பயன்படுத்தும் காலக்கணிப்பில் சூரியனின் இயக்கத்தையும் கருத்தில் கொள்கிறோம். தமிழ் நாட்காட்டி சூரிய - சந்திர கலப்பு நாட்காட்டியாக மாறியது எப்போது என்று சரியாகத் தெரியவில்லை. அதுவே குழப்பத்தின் ஆரம்பம்.

இராசிகளில் சூரியனின் நிலையை வைத்துக் கணிக்கும் மாதங்களை இராசிகளின் பெயரிலேயே அழைத்தார்கள். உதாரணமாக, சூரியன் மேட இராசியில் நிற்கும் முப்பது நாட்களும் 'மேட ஞாயிறு' என்று அழைக்கப்பட்டது. இப்படி, பன்னிரண்டு இராசிக்கும் பன்னிரண்டு ஞாயிறுகள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

ஆனால், சந்திர வழியில் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை, ஒரு திங்கள். பன்னிரண்டு திங்கள்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

சோழர் காலத்தில் தான் சூரியவழிக் கணிப்பு தமிழரிடம் புகழ்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கல்வெட்டுகளில் தான் சூரியவழி மாதப்பெயர்கள் (விருச்சிக ஞாயறு, மகர நாயிறு) காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த மாதப்பெயர்கள் கல்வெட்டுகளோடு நின்றுவிட்டன.அன்றாட வழக்கில் சூரியவழி மாதங்களுக்கும் சந்திரவழி மாதப்பெயர்களான சித்திரை, வைகாசி என்பனவற்றையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் விட்ட தவறு இதுவே. மாதக்கணிப்பில் மட்டும் சூரியவழிக்கு மாறிவிட்டு, சந்திரவழிப் பெயர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தி வந்தது. 

பழைய சந்திர வழியில் பார்த்தால்,தை மாதம் பிறப்பது, தைப்பௌர்ணமியில் - தைப்பூசத்தில்! அன்று தான் பெண்கள் தைந்நீராடல் செய்து, தமது மார்கழித்திங்கள் பாவை நோன்பை நிறைவு செய்கிறார்கள். ஆண்டாள் மார்கழி இறுதியில் பெண்கள் உண்பதாகச் சொல்லும் அதே நெய்ப்பாற்சோற்றையே, தைப்பூசமன்று பெண்கள் 'நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்' கொண்டாடுவதாக சம்பந்தர் பாடியிருக்கிறார். இப்படிப் போகும் போது தான், சங்க இலக்கியங்கள் புகழும் தைமாதமும், நமது இன்றைய தைமாதமும் வேறுவேறு என்பது தெரியவருகிறது. 

இனி சூரியவழி நாட்காட்டியில், சூரியனின் வடக்கு - தெற்கு நகர்வுகள் முதன்மையானவை. எனவே சூரியனின் வடக்குச் செல்கையான உத்தராயணம் துவங்கும் மகர சங்கிராந்தி குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது. 

அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத்திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில் எங்கள் பக்கம், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வது தான். காலக்கணிப்புக் குழப்பத்தோடு தை மாதம் சந்திரவழியிலிருந்து சூரியவழிக்கு மாற்றமுற்றதையும் சிந்திக்கவேண்டும்.) 

ஆக, , காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக, 
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு), 
2. பழைமையான அறுவடைத்திருநாள் 
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம். :)

ஆனால் "திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்ற நெடுநல்வாடை வரிகள்(வரிகள் 160 முதல்..) மூலம் சூரிய நாட்காட்டி முறையின் வழக்கம் சங்க காலத்திலேயே பழக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறதே?


ஆம். தமிழர் மத்தியில் மிகப்பழங்காலந்தொட்டே சூரிய நாட்காட்டியும் வழக்கில் இருந்திருக்கிறது எனலாம். ஆனால் சூரியவழி மாதங்களை தவறாக சந்திரவழி மாதங்களின் பெயர் கொண்டு அழைத்ததால் ஏற்பட்ட விபரீதத்தையே இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சந்திரவழியை நாட்காட்டியாக கைக்கொள்ளும் மரபு இன்றும் ஆந்திரா முதல் பல இடங்களில் உள. ஆனால் அது இன்று ஒரு வளர்பிறை பிரதமை தொட்டு அமாவாசை வரையான காலமாகவே கணிக்கப்படுகிறது. இதை சாந்த்ரமானம் என்கின்றனர். நமது நவராத்திரி, விநாயகசதுர்த்தி இவையெல்லாம் சாந்த்ரமானப்படியே அனுசரிக்கப்படுகின்றன.


ஆம். சந்திரவழிக் காலக்கணிப்பில் அமாந்தம், பூர்ணிமாந்தம் என்று இரு வகை உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு மாதமாகக் கணிப்பது அமாந்தம். அதையே இரு பௌர்ணமிகளுக்கு இடையே கணிப்பது பூர்ணிமாந்தம். நீங்கள் சொல்வது போல் இன்று பல இடங்களில் அமாந்த முறை நாட்காட்டியே பயன்படுகிறது.

ஆனால் மார்கழித்திருவெம்பாவை மார்கழிப்பௌர்ணமிக்கு முன் பத்து நாட்கள் அனுசரிக்கப்படுகிறதே?

ஆம். மார்கழித் திருவாதிரையில் கன்னியர் அம்பா ஆடுவதை "தைந்நீர் ஆடுதல்" என்று பரிபாடலும் குறிப்பிட்டிருக்கிறது. தை மாதம் தைப்பூசத்தில் (தைப்பௌர்ணமி) பிறந்தால், மார்கழிமாதம் பிறக்கும் மார்கழித் திருவாதிரையில் (மார்கழிப் பௌர்ணமி) எப்படி தைந்நீராட முடியும்?

உண்மையில், பூர்ணிமாந்த மாதம் துவங்கும், முடியும் இரு பௌர்ணமிகளில் எந்தப் பௌர்ணமியின் பெயரை அந்த மாதத்தின் பெயராகக் கொண்டார்கள் என்பது பற்றிய தெளிவான குறிப்பெதுவும் நம்மிடம் இல்லை. உதாரணமாக, தை மாதம் தைப்பௌர்ணமியில் முடிந்ததா அல்லது ஆரம்பித்ததா என்பது நமக்கு சரியாகத் தெரியாது. 

அப்படி ஒரேநேரத்தில் வெவ்வேறு கூட்டத்தினரால் இருவிதமாகவும் மாதம் கணிக்கப்பட்டிருக்கலாம் என்பதே நாம் ஊகிக்கக்கூடியது. அதனால் பரிபாடல் பாடும் இந்த ஒரு நோன்பு, ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாகவும் தை நீராடலாகவும் இருவேறு விழாக்களாக வளர்ந்திருக்கிறது. திருப்பாவையில் மார்கழித்திங்களைப் பாடும் ஆண்டாள், தன் நாச்சியார் திருமொழியில் "தையொரு திங்களை" பாடுவதால், இந்த வளர்ச்சி ஆண்டாள் காலத்தில் முற்றுப்பெற்றிருக்கக் கூடும். இந்த வேற்றுமை இன்னும் தெளிவடைந்து, இவை இரண்டும் இன்றுள்ளது போல், முறையே மார்கழிப் பாவை நோன்பாகவும், தைப்பூசமாகவும் மாறியிருக்கலாம் என்பது அடுத்த ஊகம். (ஊகம் மட்டுமே. இதில் முடிவெடுக்க இன்னும் ஆராய வேண்டும்.)

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்

சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
மேலும் வாசிக்க »

தினக்குரல் செவ்வி

0 comments
"அலகிலா ஆடல் : சைவத்தின் கதை" என்ற உங்கள் நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் பெயர் பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் கூற முடியுமா?

தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், சைவ சித்தாந்த முன்னோடியான ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை பற்றிய கட்டுரையொன்றில், சிவசக்தியின் முடிவிலா நடனம் எனும் சைவக் கோட்பாட்டை விவரிக்க இந்த “அலகிலா ஆடல்” என்ற சொல்லாடலை எடுத்தாள்கிறார். சிறு வயதிலிருந்தே "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்ற பெரியபுராண வரிகள் ஏற்படுத்திய ஆர்வ உந்துதலே இப்பெயரைச் சூட்டவேண்டி நேர்ந்தது. நூலின் ஐந்து அத்தியாயங்களையும் ஐந்தொழில்களாலேயே அழைக்கலாம் என்ற சிந்தனை ஏற்பட்டதும் இந்நூல் இயல்பாக சிவநடனத்தை நோக்கியே செல்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் இருந்தது.  சிவனின் எல்லையற்ற திருவிளையாடல், முடிவற்ற நடனம் என்ற கோணத்தைக் காணும் எவருக்கும், அந்நடனம், அந்த ஆடல், இந்நூல் விவரிக்கும் சைவத்தின் வரலாற்றோடு எப்படிப் பொருந்துகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

“அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூலில் எத்தகைய விடயங்களை முக்கியமாகக் கூறியிருக்கிறீர்கள்?

நம்மைப் பொறுத்தவரை தொன்மங்களின் தொகுப்பைத் தான் வரலாறு என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் உலகம் கறாராக முன்வைக்கும் வரலாற்றை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்தை நாம் இன்னும் வந்தடையவில்லை. "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" அத்தகைய ஒரு முயற்சியே. முற்றுமுழுதாக சைவத்துக்கு வெளியே நின்று, சைவத்தின் வரலாற்றை ஆதாரபூர்வமாக - புறவயமாக கூற முற்படுகிறது. சைவத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, அது ஆசிய உலகில் பெற்ற வெற்றி, ஏனைய சமயங்களுடன் அதன் முரண், மற்றும் அதன் சமகால - எதிர்காலப் போக்கு என்பவற்றை விவரிக்க முயன்றிருக்கிறது.

தொன்மங்கள் என்று நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

தொன்மங்கள் என்பவை ஒரு சமூகத்தில் பண்டுதொட்டே நிலவிவரும் புராணங்கள், இதிகாசங்கள், கர்ணபரம்பரைக் கதைகள் ஆகியவையே.

உதாரணமாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாசமாலை, வையாபாடல் என்பன வட இலங்கை சார்ந்த தொன்ம இலக்கியங்கள். கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்பன கிழக்கிலங்கை சார்ந்த தொன்ம இலக்கியங்கள். தொன்மங்களில் இடைச்செருகல்களும் பிற்சேர்க்கைகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே எந்த வரலாறும் தொன்மமாக மாறலாம். ஆனால் எல்லாத் தொன்மமும் வரலாறு ஆக முடியாது. 

சூழலில் ஏற்படும் ஏதோ ஒரு தூண்டலால் தான் தொன்மங்கள் உருவாகின்றன என்பதால் அவை முழுக்கப் பொய்யானவை என்றோ வரலாற்றில் ஒதுக்கவேண்டியவை என்றோ முடிவெடுக்கவேண்டியதில்லை. ஆனால் அவற்றிலுள்ள அமானுஷ்ய நிகழ்வுகளையும் காலப்பிழை கொண்ட சம்பவங்களையும் அறிவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்த பின்னரே வரலாறாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நூல் சைவம் சார்ந்த தொன்மங்களை அப்படித் தான் அணுக முயன்றிருக்கிறது.

உங்கள் ஆய்வினூடாக, சைவம் மிகப்பழைய சமயம் என்பதைக் கூறியிருக்கிறீர்கள். மனிதனின் தொல்வரலாற்றிலே சைவத்தின் தோற்றம் எத்தகையதாக இருந்திருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

மனிதனின் தொல்வரலாற்றை கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் என்று மூன்று காலங்களின் தொகுப்பாகக் காண்பது மானுடவியலின் ஒரு தொகுப்புமுறை. கற்காலம் என்பது அண்ணளவாக பொ.மு 2000 ஆண்டில் முடிவடைகிறது. அதில் துவங்கும் வெண்கலக்காலம், பொ.மு 1200 அளவில் முடிவடைகிறது. பொ.மு 1200 அளவில் இரும்பு கண்டுபிடிக்கப்படுகிறது. 

சைவத்தின் மிகப்பழைய சான்றான ‘முந்துசிவன் முத்திரை’ கிடைக்கும் ஹரப்பா நாகரிகக் காலம், வெண்கலக்காலத்தில் அடங்குகின்றது, கற்காலச் சான்றுகளில் சிவலிங்கத்தின் மூலங்களில் ஒன்றாக ஆய்வாளர்கள் ஊகிக்கும் நடுகற்கள், கற்படுக்கைகள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்னாசியாவில் 8000 முதல் 5000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலவீச்சில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. மரபார்ந்த சைவத்தில் சிவனை அடிமுடி காண முடியாதோன் என்றே சொல்லுவார்கள். வரலாற்று ரீதியிலும் சிவன் எனும் கடவுள் இந்த ஆண்டு இந்தக் காலத்தில் தோன்றினான் என்று உறுதியாகக் கூறமுடியாது. மானுட வரலாற்றில் அவனுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உள்ளது என்பதொன்றே நாம் கூறக்கூடியது. 

சைவத்தின் திருத்தமான தோற்றம், எங்கே எவ்வாறு ஆரம்பமாயிருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவா?

சைவம் பற்றிய மிகப்பழைய தொல்பொருள் சான்றுகள் நான்கு புவியியல் பிராந்தியங்களில் சிற்சில வேறுபாடுகளுடன் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிடைத்த "யோகி" அல்லது ‘முந்துசிவன் முத்திரை’ அவற்றில் முதன்மையானது. சிந்துவெளிக்கு அருகே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் கிடைத்த மூன்று தலைகளைக் கொண்ட மிகப்பழைய சிவன் உருவங்கள் இரண்டாவது தொகுதி. இந்த முத்தலைச் சிவன் "ஒய்ஷோ" அல்லது ஈசன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். 

வேதங்களில் காணக்கிடைக்கும் உருத்திரன் எனும் தெய்வமும் வட இந்தியாவில் கிடைக்கும் பழைமை வாய்ந்த சிவ வழிபாட்டுச் சான்றுகளும் சமஸ்கிருத இலக்கியக் குறிப்புகளும் மூன்றாவது தொகுதி. தமிழ்நிலத்திலும் தெற்கே இலங்கையிலும் கிடைக்கும் சங்க இலக்கியச் சான்றுகள், பிராமிக்கல்வெட்டுகள், பழைய நாணயங்கள், என்பன நான்காவது தொகுதி. இவை நான்கும் சமகாலத்தில் தோன்றியவையா அல்லது சைவம் ஏதேனும் ஓரிடத்தில் தோன்றி ஏனைய இடங்களுக்குப் பரவியதா என்பது மேலதிக ஆய்வுக்குரியது. எல்லா சைவ மரபுகளும் சிவனை கயிலை சார்ந்தே அடையாளம் காண்பதால் இமயமலைச் சாரலிலே ஒரு பழங்குடிச் சமயமாக சைவம் தோன்றி, ஏனைய இடங்களுக்குப் பரவியிருக்கலாம் என்பது என் ஊகம்.

ஆரியர், திராவிடர் வருகைக்கும் சைவத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்க முடியுமா ?

ஒரு பண்பாட்டு - மொழியியல் அடையாளப்படுத்தலுக்கு வெளியே ஆக்கிரமிப்பு, அடிமைப்படுத்தல் சார்ந்ததாக முன்வைக்கப்படும் ஆரிய - திராவிட கருத்துருவாக்கத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆபிரிக்காவே மனிதகுலம் தோன்றிய கண்டம் என்ற கருதுகோள் உண்மையெனில் ஆரியர், திராவிடர் என்று இன்று இனங்காணப்படும் யாவருமே அங்கிருந்து வந்து தான் இங்கு குடியேறி இருக்க முடியும். வேண்டுமென்றால் ஆபிரிக்காவிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்கு இடம்பெயர்ந்த முதல் புலம்பெயர் குழுக்களை திராவிடர் என்றும் அவர்களுக்கு சிறிது காலம் பின்பு இடம்பெயர்ந்த குழுக்களை ஆரியர் என்றும் இனங்காணலாம். அதைத்தவிர்த்து இன்றுள்ள நிறவாதம், இன மேலாதிக்கவாதம் என்பவற்றோடு இணைத்து ஆரிய - திராவிட வாதம் பேசுவது அறியாமை. ஹரப்பா நாகரிகம், வேதகாலம் என்பன ஒன்றோடொன்று மேற்பொருந்தியவை என்பதால் ஆரியர் - திராவிடர் யாவரினதும் கடவுளாகவும் சிவன் விளங்கியிருந்திருக்கிறான் என்பதே நாம் எடுக்கக்கூடிய முடிவு. எனினும் வேதகாலத்து ஆரியருக்கு அப்போதிருந்த சிவனான "உருத்திரன்" மீது ஒவ்வாமை இருந்ததும் அது இன்று வரை சைவம் மீதான வைதிகத்தின் கசப்பாக வெளிக்காட்டப்படுவதும் மறுக்கமுடியாத உண்மைகள் தான்.

சைவம் பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் சுவாரசியமாகவும் புதுமையானவையாகவும் உள்ளன. இந்தத் தகவல்களை எந்தெந்த நூல்களிலிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?

உண்மையில் அறிவியல் கோணத்தில் சைவம் மீது செய்யப்படும் ஆய்வுகள் தற்போதும் தொடர்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. சமகால மேலைத்தேய ஆய்வாளர்களின் ஆய்வுநூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் சைவத்தின் வரலாறு, வளர்ச்சி பற்றி பல புத்தம்புதுத் தகவல்களுடன் தொடர்ந்தும் வெளிவந்தபடியே இருக்கின்றன. இவர்களில் சைவம் சார்ந்த சில மேலைத்தேய அறிஞர்களைக் குறிப்பாகச் சொல்வதென்றால், பேராசிரியர் அலெக்சிஸ் சாண்டர்சன், பேராசிரியர் மார்க் டிக்ஸ்கவுஸ்கி, பேராசிரியர் டொமினிக் குட்டோல், பேராசிரியர் டேவிட் என்.லொரன்சன் முதலியோரை முக்கியமாகப் பட்டியலிடலாம். இந்த ஆய்வாளர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலின் ஆக்கத்தில் உதவியிருக்கின்றன. இந்த ஆசிரியர்களின் நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இணையத்திலே கூட இலவசமாகக் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடிப்படிக்கலாம்.

சைவ சமயம் வேறு, இந்து சமயம் வேறு என்று முரண்பாடான கருத்துகள் இலங்கையில் அடிக்கடி எழுவதுண்டு. இதை எந்தக்கோணத்தில் பார்க்கிறீர்கள்?

முதலில் இந்து சமயம் என்பது ஒரு தனிச்சமயம் அல்ல; இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய பல சமயங்களின் தொகுப்பு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். "சமயம்" என்ற இன்றைய வரையறையை நோக்கும் போது சைவம், வைணவம் முதலிய பிரிவுகளை சமயம் என்று சொல்ல முடியுமே தவிர இந்து என்ற பொது அடையாளத்தை ஒரு "சமயம்" என்று கூறமுடியாது.

அந்த விதத்தில் இந்து சமயம் என்பதை சைவம், வைணவம், சாக்தம், சுமார்த்தம், புத்திந்துக் குழுக்கள், பிற மரபான இந்துக்கள் எனும் ஆறு பிரிவுகளின் தொகுப்பாகக் காண்பதும் நம் பொது அடையாளத்தை "இந்து சமயங்கள்" என்றும் கொள்வதே பொருத்தமானது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்றும் மரபான சைவப்பிரிவுகள். சுமார்த்தம் என்பது சங்கர மடத்தைப் பின்பற்றும் அத்துவைதப் பிராமணர்களை உள்ளடக்கும். புத்திந்துக்குழுக்கள் என்பது சமகால இந்து மறுமலர்ச்சி அமைப்புகளையும் பிற மரபிந்துக்கள் என்பது இந்துவாக தம்மை அடையாளப்படுத்தும் ஏனைய இந்துக்களையும் குறிக்கும். பிற மரபிந்துக்களில் இந்தோனேசிய – வியட்நாமிய - ஆபிரிக்க இந்துக்களையும் இந்தியப் பழங்குடிகளையும் ஏனைய ஐந்து பிரிவுகளிலும் அடங்காத எஞ்சியுள்ள இந்துக்களையும் அடக்கலாம். 

புத்திந்துக் குழுக்கள் என்று நீங்கள் வரையறுப்போரைப் பற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா, அவர்களின் இன்றைய தேவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட குருதேவரை ஆசாரியராக வரிந்துகொண்டு அவரை இறைவனின் அவதாரமாக வழிபடுகின்ற இந்து மறுமலர்ச்சி அமைப்புகளே புத்திந்துக் குழுக்கள் (Neo – Hindu Groups). உதாரணமாக சாயிபாபா, அம்மா பகவான், மேல்மருவத்தூர் அம்மா, ஈஷா, ஹரே கிருஷ்ணா, நித்தியானந்தா, இராமகிருஷ்ண மிஷன், சின்மயா மிஷன் போன்றோரின் அமைப்புக்களைக் கூறலாம். சில புத்திந்துக் குழுக்கள் மீது எனக்குத் தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவர்கள் காலத்தின் தேவை கருதியே உருவாகியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். 

இன்றைய இந்துக்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்டல் வழங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அதைச் செய்வதும் இல்லை. அதன் விளைவே புத்திந்துக்குழுக்களின் பெருக்கம். மரபான நெறிகளான சைவமோ வைணவமோ சமகாலத்துக்கு ஏற்ற விதத்தில் தங்களை இற்றைப்படுத்திக் கொண்டு (update) தங்கள் பின்பற்றுநர்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவு வளர்ந்திருந்தால் புத்திந்துக் குழுக்கள் தோன்றியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது என் புரிதல். 

சமகாலத்தில் சைவத்தின் தேவை அல்லது முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துன்பத்தில் திட்டுவதற்கும், இன்பத்தில் போற்றுவதற்கும் இறைவன் என்ற ஒருவன் இல்லாவிட்டால், விரக்தியிலும் வேதனையிலும் நாம் எல்லோரும் எப்போதோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகி இருப்போம். இன்று நம் சமூகத்தில் தற்கொலைகளும் மனநலப் பாதிப்பும் அதிகரித்திருப்பதற்கு முக்கியமான காரணம், சமயம் சார்ந்த உளவியல் ஆற்றுப்படுத்தல்களோ, ஆன்மிக வழிகாட்டல்களோ எங்குமே நிகழ்த்தப்படுவதில்லை என்பது தான். இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களால் உறவுகளை இழந்தோரும் தனிமையில் வாழ்வோரும் அந்தத் துயரிலிருந்து மீண்டு வருவதற்கு இன்று சமயமே கைகொடுப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

திருவிழாக்கள், பண்டிகைகள், நோன்புகள் சமூக உறவாடலை வலுப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. எல்லா மிருகங்களுமே கடவுளரின் வாகனங்கள், எல்லா மரங்களுமே தெய்வங்களின் உறைவிடங்கள், எல்லா நீர்நிலைகளுமே தீர்த்தங்கள் என்றெல்லாம் உருவகித்திருக்கும் நம் சமயம் போல, உயிர்ப்பல்வகைமைக்கும் வளங்களின் நீடித்து நிலைத்திருக்கைக்கும் கைகொடுக்கும் சமயம் வேறு எது? இப்படி சைவத்தின் முக்கியத்துவம் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது.

(யனவரி 20, 2018 ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திரு.பாக்கியராஜா மோகனதாஸ் கண்ட செவ்வி)


மேலும் வாசிக்க »

சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

0 comments
சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது (தி இந்து 2019).

சபரிமலைக்கோவிலுக்கு அதிகளவு அடியவர்களை அனுப்பிக்கொண்டிருப்பது தமிழகம். இப்போது  இலங்கையும் அடியவர்களை பெரும் எண்ணிக்கையில் அனுப்பத் தொடங்கியிருக்கிறது (Nagahawatte 2019). எனவே, சபரிமலைப் பிரச்சினையில் கருத்துக் கூறுவதற்கும், அதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும், கேரளத்துக்கு சமனான அளவு தார்மீக உரிமை, தமிழகம் மற்றும் இலங்கைக்கும் கிட்டியிருக்கிறது.

ஆனால் நம்மில் பலரும் சபரிமலைக் கோவிலின் பின்னணி, ஐயப்ப வழிபாட்டின் வரலாற்றுத் தோற்றம் இது எதுவுமே தெரியாமல், இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை அறியாமல், அந்தப் பிரச்சினை தொடங்கிய மையப்புள்ளியை நாம் அறிந்துகொள்ள முடியாது. 

சபரிமலைக் கோவில் (படம் நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்)
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு நம் கைகளில் இரண்டு வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்து, தமிழ் -  வடமொழி - மலையாள மொழிகளில் எழுந்த சபரிமலைத் தொன்மங்கள். இரண்டாவது ஓரளவு வரலாற்று நம்பகத்தன்மை கூடிய ஆவணங்களும் குறிப்புகளும். இவை இரண்டையும் சற்று விரிவாக ஆராய்வோம்.

1. சபரிமலைத் தொன்மங்கள்
'ஐயப்பன்' என்பது ஒரு அழகான தமிழ்ப்பெயர். அது ஐயன் + அப்பன் என்ற இரு சொற்களின் இணைவால் வந்தது. அப்பெயருக்கு ஆயிரம் ஆண்டு காலப் பழைமை உள்ளது என்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.

குமரி மாவட்டத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டுகளில் ஐயப்பன் என்பது ஆட்பெயராகவும் தெய்வப்பெயராகவும் பதிவாகி இருக்கிறது. உதாரணமாக,  கன்னியாகுமரி குகநாதசுவாமி ஆலயத்திலுள்ள இராஜாதிராஜசோழனின் 31ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (பொ.பி 1043) இடம்பெற்றுள்ள "ஐயப்பன் வேதிய சாஸ்தா"வைக் குறிப்பிடலாம் (Poduval 1990:76). (நாம் 'வேதிய சாஸ்தா' ஐயப்பனுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.)

ஆனால்,  இங்கு தவிர 'ஐயப்பன்' என்ற தனித்துவமான தெய்வமொன்று தமிழிலோ வடமொழியிலோ எங்குமே பதிவாகவில்லை. ஐயப்பன் பற்றிய  முதலாவது வடமொழி நூலான, பூதநாதோபாக்யானமே பொ.பி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது தான் (Sekar 1992:16). அத்தகைய தெய்வமொன்று பற்றிய பழைய இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைப்பதாயில்லை. பின்னர் ஐயப்பன் எனும் சபரிமலைத் தெய்வம் எப்படி வரலாற்றில் தோன்றினான்?

மகிஷி சங்காரம்
ஐயப்பன் பற்றிய பழைய இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்காதபோதும்,  அவன் மீதான பல நாட்டுப்புறப்பாடல்கள் கேரளப்பகுதியில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்படும் ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான கதை, பலரும் அறிந்தது தான்.  பாற்கடல் கடையும் போது திருமால் மோகினி வடிவெடுத்து அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். அதன் போது, சிவன் மோகினியின் அழகில் மயங்குவதை அடுத்து இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

பூவுலகில் தொல்லை கொடுத்துவரும்  மகிடாசுரனின் தங்கை மகிஷியை, அரிகரபுத்திரனான அக்குழந்தை அழிக்கும் என்று தேவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இரண்டு ஆண்களுக்குப் பிறந்த குழந்தையொன்றாலே தான் இறக்க வேண்டும் என்ற விபரீதமான வரத்தைப் பெற்றவள் அவள். அரிகரபுத்திரன் பந்தள நாட்டுக்கு அருகில் குழந்தையாகத் தோன்றுகிறார். குழந்தையில்லாமல் வருந்தி சிவனை நோக்கி நோன்பிருக்கும் பந்தள மன்னன் இராஜசேகரன், அப்பகுதிக்கு வேட்டையாட வரும் போது அந்தக்குழந்தையைக் கண்டெடுப்பதுடன், அதன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் 'மணிகண்டன்' (கண்டம் = கழுத்து) என்று பெயர் சூட்டி வளர்க்கிறான்.  

மணிகண்டன் வளர்கையிலேயே அரசனுக்கு இன்னொரு மகன் பிறக்கிறான். வளர்ப்பு மகனான மணிகண்டன் தன் சொந்த மகனின் அரசாட்சியில் உரிமை கோரலாம் என்ற அச்சத்தில் அவனை அழித்தொழிக்க முயல்கிறாள் பந்தள அரசி. அந்தத் திட்டன்படி அவள் தீராத தலைவலி வந்தவள் போல நடிக்க, அவள் குணமாவதற்கு புலிப்பால் தேவை என்று அறிவிக்கப்படுகிறது. அதை எடுத்துவரச் செல்லும் மணிகண்டன் காட்டில் மகிஷியுடன் போர் புரிந்து அவளை அழிக்கிறார். அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது.
மகிஷி மடிந்தாள்; மஞ்சள்மாது ஆனாள்!
(படம் நன்றி: Wings & Chirps)
சாபம் விலகி 'மஞ்சள்மாதா'வாக வடிவெடுத்த மகிஷி, மணிகண்டனை மணம்புரிய விரும்புகிறாள். இப்பிறவியில் தான் மணவொறுப்பு (பிரமச்சரிய) நோன்பு கைக்கொள்வதாகச் சொல்லும் மணிகண்டன், அவளை தன்னருகே மாளிகைபுரத்தம்மை என்ற பெயரில்  தெய்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.

மகிஷியின் கொட்டம் அடங்கியது என்று மகிழும் தேவர்கள், மணிகண்டன் புலிப்பால் பெற ஏதுவாக, புலிகளாக மாறி பந்தளம் வருகிறார்கள். அரசியும் ஏனையோரும் அதன் மூலம் மணிகண்டனின் தெய்வீக இயல்பை உணர்ந்து வணங்க, தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததாகச் சொல்லி விடைபெறும் மணிகண்டன் சபரிமலையில் யோகநிலையில் தவம் புரிய விரும்புகிறார். அங்கு அவர் தந்தை இராஜசேகரனால் ஒரு கோவில் அமைக்கப்படுகிறது. அதுவே இன்றைய சபரிமலை தர்மசாஸ்தா கோவில் (Jones & Ryan 2006:58-9). 

ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான இந்தக்கதை, சில இடங்களில் சிற்சில மாறுதல்களுடன் சொல்லப்படுகிறது. உதாரணமாக, தெய்வீகப் பெண்ணான லீலை, அவள் கணவன் தத்தாத்திரேயரின் சாபத்தால் மகிஷியாகப் பிறந்தாள் என்று ஒரு கதை சொல்கிறது (Sikand 2003:23-24). மற்றொரு கதை, தான் எய்யும் அம்பு சென்று வீழும் இடத்தில் தனக்குக் கோவில் அமைக்குமாறு பந்தள மன்னனுக்கு ஆணையிட்டு மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் வீழ்ந்ததாகச் சொல்கிறது (Varma 2018). இன்னொரு கதையில் மஞ்சள்மாதாவின் வேண்டுகோளை ஐயப்பனால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, 'சபரிமலைக்கு புதிய யாத்திரிகர்கள் (கன்னிச்சாமிகள்) யாரும் வருகை தராத ஆண்டில், தான் மணவொறுப்பு நோன்பை முடித்து, உன்னை மணப்பேன்' என்று மணிகண்டன் வாக்களிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கன்னிச்சாமிகள் யாத்திரை செய்வதை அறிந்து ஏமாந்தபடி மாளிகைபுரத்தம்மை காத்திருப்பதாகச் செல்கிறது அந்தக் கதை  (Haindavam Web 2011). இப்படிப் பல மாறுதல்களை ஐயப்பன் தொன்மங்களில் அவதானிக்கலாம்.

இந்த மகிஷி கதையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்ற, அதேவேளை வரலாற்று ரீதியில் முக்கியமான ஐயப்பன் பற்றிய தொன்மங்கள் இன்னும் நான்கு இருக்கின்றன. அவற்றில் ஒரு கதை மகிஷிக்குப் பதிலாக, மணிகண்டன் அழித்த உதயணன் எனும் கொள்ளையன் பற்றிச் சொல்கிறது. ஏனைய மூன்றும் முறையே சபரிமலை ஆளுகைக்கு உட்பட்ட பந்தள அரசகுலம்,  கேரளத்து சமூகங்களான ஈழவர், மலையரையர் ஆகிய மூன்று பிரிவினரிடையேயும் பிரபலமானவை.

அ) உதயணன் கதை
உதயணன் எனும் கொள்ளையன் சபரிமலை சாஸ்தா கோவிலை இடித்துக் கொள்ளையடித்து அதன் தந்திரியையும் (பூசகர்) கொல்கிறான். தந்திரியின் மகன் ஜயந்தன், மனம் வருந்தியபடி சாஸ்தாவைத் துதிக்கிறான். உதயணன் அருகிலிருந்த பந்தள அரசையும் சூறையாடி, அதன் இளவரசியைக் கவர்ந்து வருகிறான். சாஸ்தாவின் அருளால், ஜயந்தன் பந்தள இளவரசியைக் காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது. இருவரும் மறைவாக பொன்னம்பலமேட்டிற்குச் சென்று அங்கு மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகனாக சாஸ்தாவே ஐயப்பனாக அவதரிக்கிறார்.

எருமேலிக்கு அருகே  கோட்டைப்பாடியில் குடியிருந்த பட்டாணியரான (இஸ்லாமியர்) பாத்தும்மா -  அலிக்குட்டி தம்பதிகளின் மகன் வாவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஐயப்பன், உதயணனைக் கொன்று, சாஸ்தா கோவிலையும் மீட்கிறார் (Sadasivan 2000:123).. அங்கு பிற்காலத்தில் ஐயப்பன் தெய்வமாக வழிபடப்படுகிறார்.  

ஆ) பந்தள அரச குலக்கதை.
பந்தள அரண்மனை - இன்றைய தோற்றம்

பந்தள அரசகுலத்தின் நம்பிக்கையின் படி, அவர்கள் பாண்டியரில் ஒரு பிரிவினர்.  சோழர் மற்றும் முகலாயப் படையெடுப்புகளை அடுத்து மேற்கே இடம்பெயரும் அவர்களது மூதாதையர், இறுதியில் இந்த பந்தளத்தில் குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வந்த பந்தளத்து மூதாதையான இராஜசேகரனுக்கு மகனாகக் கிடைத்தவரே மணிகண்டன். 

சபரிமலை சாஸ்தா கோவிலை பந்தள அரசர்களிடமிருந்து தமிழ் மறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களை வெல்வதற்காக 'மூப்பில்' எனும் களரி ஆசான் துணையுடன் போருக்கு எழுகிறான் பந்தள இளவரசன் ஐயப்பன். இஞ்சிப்பாறையில் மறவரை வெல்லும் அவன், அங்குள்ள சாஸ்தா கோவிலில் துறவு பூண்டு யோகநிலையில் அமர்கிறான்.

இ) ஈழோதிசேஷம்
ஈழவர்கள் கேரளத்தின் முக்கியமான சமூகங்களில் ஒருவர்.  ஐயப்பன் பற்றிய ஈழவரின் தொன்மம், "ஈழோதிசேஷம்" எனும் நாட்டார் பாடல் வடிவில் கிடைத்திருக்கிறது. அதன்படி தண்ணீர்முக்கம் சீரப்பஞ்சிராவைச் சேர்ந்த 'மூப்பில்' எனும் ஈழவர் குல களரி ஆசானின் தலைசிறந்த மாணவன் ஐயப்பன். ஈழப்பயிற்று எனும் தற்காப்புக்கலையை மூப்பிலிடம் கற்றுக்கொண்ட ஐயப்பனுக்கும் மூப்பில் மகள் பூங்கொடிக்கும் காதல் மலர்ந்திருந்தது (Sadasivan 2000:123). மூப்பில் துணையுடன் சபரிமலையை ஆக்கிரமித்திருந்த மறவரை வெல்கிறான் ஐயப்பன். பின் அங்கேயே தங்கிவிடுகிறான். அவனைத் தேடி அங்கு வரும் பூங்கொடி, அவன் ஆணைக்கேற்ப தானும் துறவு பூண்டு பொன்னம்பலமேட்டில் தங்கியிருக்கச் செல்கிறாள். அவர்கள் மறைந்த பின்னர் தெய்வங்களாகி, ஐயப்பன் - மாளிகைபுரத்தம்மையாக கோவில் கொள்கிறார்கள்.

ஈ) மலையரையரின் மணிகண்டன்
1800களில் மலையரையர் குடியிருப்பு

இந்திய அரசால் பட்டியல் பழங்குடியினராக பதிவு செய்யப்பட்டுள்ள   மலையரையர்கள், கேரளத்தின் சபரிமலையை அண்டிய காடுகளில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்கள். அவர்களது நம்பிக்கையின் படி, கண்டன் -  கருத்தம்மை என்ற மலையரையத் தம்பதிகளுக்கு 41 நாள் நோன்பின் பயனாகப் பிறந்தவன் மணிகண்டன். மணிகண்டன் என்ற பெயர் அவன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் வந்ததல்ல; கண்டனின் மகன் அல்லது இளைய கண்டன் என்பதே 'மணிகண்டன்' என்ற பெயரின் பொருள். அவனையே பந்தள அரசர் தத்தெடுத்து வளர்க்கிறார்.

சபரிமலையின் பதினெட்டுப் படிகளும் மலையரையர் வாழும் பதினெட்டு மலைகளைக் குறிப்பது தான். மகிஷியை அழிப்பதற்காகவன்றி, சோழரின் ஆக்கிரமிப்பிலிருந்து தம்மைக் காக்கவே மணிகண்டன் சாஸ்தா அம்சமாக அவதரித்தான் என்கின்றார்கள் மலையரையர்கள்.  (Ayyappan 2018). அவர்களின் கதையிலும் மணிகண்டனின் சீரப்பஞ்சிராக் காதலி பூங்கொடி வருகிறாள். 

ஐயப்பன் தொடர்பான இன்னும் பல நாட்டார் பாடல்கள் கேரளத்தில் வழக்கில் உள்ளன. அவற்றில் கவனத்தை ஈர்க்கும் சில பாடல்கள் ஐயப்பனுடன் இலங்கையை இணைக்கின்றன. அதில் ஒன்றின் படி, ஐயப்பன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு இளவரசியொருத்தியை மணந்துகொள்கிறான். இன்னொரு பாடலின் படி, பூங்கொடியை உதயணன் கொலை செய்த பின்னர் மனமுடைந்து போகும் ஐயப்பன், இலங்கைக்குச் சென்று புத்த பிக்குவாக மாறுகின்றான் (Sadasivan 2000:124). 

ஐயப்ப வணக்கம் ஒரு மாவீர வழிபாடு
ஐயப்பன் ஒரு அவதாரம், இரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் நடமாடியவன் என்பதை ஐயப்ப அடியவர்களும் மறுப்பதில்லை. ஐயப்ப வழிபாடு, மறைந்த ஒருவர் தெய்வமாக மாறிய கதையே தான். மகிஷியின் கதை தவிர்த்து, ஏனைய நான்கு கதைகளிலும் ஒரு இயல்பான வரலாற்று அம்சம் இருப்பதைக் காணமுடிகின்றது. அந்த எல்லாக் கதைகளையும் தொகுத்து நோக்கும் போது, நமக்கு 'ஐயப்பன்' எனும் வரலாற்று நாயகன் ஒருவனின் வாழ்க்கை துலங்கி வருகின்றது.

அவன் மணிகண்டன் என்ற பெயரில் வாழ்ந்த பந்தள இளவரசன். எனினும் அவன் முறையான பந்தள அரச குலத்தவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மேற்படி எல்லாத் தொன்மங்களுமே உறுதி கூறுவதைக் காணலாம். ஆனால் அவனது வீரம், சபரிமலையை ஆக்கிரமித்திருந்த உதயணன் அல்லது சோழர் அல்லது மறவர் என்று இனங்காணப்பட்ட யாரோ ஒரு எதிரிகள் படையை வீழ்த்துவதில் உதவி இருந்திருக்கிறது.

மகிஷியின் கதையை, ஐயப்பனை அரிகரபுத்திரன் சார்ந்த பௌராணிக மரபுக்குள் உள்ளீர்க்க முயன்ற முயற்சியாகவே கொள்ளமுடியும். அல்லது சங்க இலக்கியங்களில்  'எருமை நாடு' என்று போற்றப்பட்ட இன்றைய மகிஷ ஊர் (மைசூரு) அரசுக்கும் சேர நாட்டுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடொன்றையும் அது மறைமுகமாகக் கூறக்கூடும். எவ்வாறெனினும், ஐயப்பன் வாழ்வில் பெண்ணொருத்திக்கு இடமிருந்தது என்பதை பூங்கொடி பற்றிய கதைகளும், அவனுக்கருகே இன்றும் கோவில் கொண்டுள்ள மாளிகைபுரத்தம்மை அல்லது மஞ்சள்மாதா சன்னதியும் சான்று கூறுகின்றன.

எந்தவொரு கதையிலும் ஐயப்பனுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. அவன் சபரிமலையில் யோகத்தில் அமர்வதாகவோ, அல்லது இலங்கைக்குச் செல்வதாகவோ அவை முடிவடைகின்றன. பூங்கொடியின் மறைவாலோ, அல்லது போரில் வெறுப்புற்றோ, அவன் மிக இளம்வயதிலேயே துறவு பூண்டிருக்கக்கூடும்; பல வரலாற்றாசிரியர்கள் ஊகிப்பது போலவே அவன் (இலங்கையில்?) பௌத்தத்தைத் தழுவியிருக்கவும் கூடும்.

மேற்படி தொன்மங்களில் துலங்கும் இன்னொன்றும் உள்ளது. சபரிமலையில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தது. மணிகண்டன் ஒரு உண்மையான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அந்த சாஸ்தா கோவில், அவனுக்கும் முந்தியது.  அவன் மறைந்த பிற்காலத்தில்,  சாஸ்தாவின் அவதாரம் ஆகின்றான். பின் சபரிமலையின் முதன்மைத் தெய்வமும் அவனே ஆகின்றான். 

2) ஆவணங்களும் குறிப்புகளும் 
மேலே, தொன்மங்களைப் பகுப்பாய்ந்து ஐயப்பன் என்ற வரலாற்றுப் பாத்திரமொன்றை மீள்கட்டமைக்க முயன்றிருந்தோம். மேலதிக வரலாற்றுத் தகவல்களை நாம் சேகரித்துக் கொள்வதற்கு, இருவகையான ஆவணங்கள் கைகொடுக்கின்றன. ஒன்று, பிரித்தானிய ஆவணங்கள், இரண்டு கடந்த நூற்றாண்டின் நேரடிச் சான்றுகள்.

வார்டின் கணக்கெடுப்பு அறிக்கை
பிரித்தானிய ஆவணங்களில் முக்கியமானது, 1819 அளவில் கொச்சி -  திருவிதாங்கூர் பகுதிகளைப் பற்றி மெட்ராஸ் அதிகாரி பி.எஸ்.வார்டு (B.S.Ward) என்பவர் எழுதிய கணக்கெடுப்பு அறிக்கை. இதுவே சபரிமலை பற்றி தற்போது கிடைத்துள்ள ஆவணங்களில் மிகப்பழைமையானது. கடந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தின் போது, 'இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் சூல்தகவு கொண்ட பெண்கள் இங்கு நுழைய அனுமதி இருக்கவில்லை' என்ற வாதத்திற்கு சார்பாக இந்த ஆவணமே முன்வைக்கப்பட்டது.  சபரிமலைக்கோவில் செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருப்பது, யனவரி மாதம் ஐந்து நாட்கள் அங்கு (மகரவிளக்கு) விழா நிகழ்வது, 10 - 15 ஆயிரம் அடியவர்கள் வருகை தருவது,  அங்குள்ள பதினெட்டு படிகள், பந்தள இராசாவின் பழைய வசிப்பிடம் பற்றிய குறிப்புகள் இதில் வருகின்றன. (Ward 1898:70, 71)
வார்டின் நூலில் வருகின்ற 'சௌரிமல்லை' (Chourymallay) பற்றிய குறிப்பு பப.69-70

சாமுவேலின் 'வேட்டைத்தெய்வம் ஐயப்பன்' 
இதற்குப் பின், சாமுவேல் மாட்டிர் (Mateer Samuel) என்ற பாதிரியாரால் 1883இல் எழுதப்பட்ட "Native life in Travancore" என்ற நூலில் வரும் குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதில் மலையரையர்கள் பற்றி எழுதும் போது சபரிமலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சாமுவேல். (Samuel 1883:75-77)  

"மலையரையர்கள் தமக்கு அருகிலிருந்த சபரிமலையை வழிபட்டு வந்தார்கள். தாளஞானி அல்லது தாலனானி என்ற மலையரையர், வேட்டைத்தெய்வமான ஐயப்பனின் வெளிச்சப்பாடாக (சாமியாடி) இருந்தவர். அவருடன் குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில், அருகில் குடியிருந்த சோக்கர் (ஈழவர்) குலத்தார் யாருக்கும் தெரியாமல் அவரைக் கொன்று  புதைத்து விடுகிறார்கள். ஐயப்பனின் வாகனமான புலிகள், அவரது புதைகுழியைத் தோண்டி பிணத்தை வெளியே எடுக்க, காட்டு யானைகள் அப்பிணத்தை இழுத்து வந்து, ஏனைய மலையரையர்கள் காணும் படி போட்டுச் செல்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து தீவிரமாகப் பரவிய அம்மை நோய், பல சோக்கர் உயிரைப் பறிக்கிறது. சோக்கரின் வெளிச்சப்பாடு, அது அவர்கள் செய்த கொடூரத்துக்காக சாஸ்தாவு தெய்வம் சீற்றம் கொண்டு தரும் தண்டனை என்று அறிவிக்கிறார். சாஸ்தாவு அல்லது சாத்தன் என்பது திருவிதாங்கூர் மலைப்பகுதி எல்லைத் தெய்வம்)
மலையரையர்கள் வழிபட்ட சிலை,
 சாமுவேலின் நூலிலிருந்து.

சோக்கர்கள் தம் தவறுக்குக் கழுவாயாக, கொல்லப்பட்ட மலையரைய வெளிச்சப்பாட்டை தெய்வமாக்கி ஒரு சிலை செய்து, ஒரு சிறுகோவில் கட்டிக்கொடுக்கிறார்கள். தாலஞானியின் வாரிசு ஒருவர் அக்கோவிலுக்கு பூசகராக அமர்கிறார். எனினும், ஹென்ரி பேகர் என்ற போதகரின் முயற்சியில் தாலனானியின் எல்லா வாரிசுகளும்  கிறிஸ்தவர்களாக மதம்மாறி விட்டார்கள். இறுதியாக  வழிபட்ட வாரிசும் அந்தச் சிலை, வாள், சிலம்பு உள்ளிட்ட வழிபாட்டுப்பொருட்களை இன்னொரு பாதிரியாரான டபிள்யூ ஏ ரிச்சர்டிடம் 1881இல் கொடுத்துவிட்டார்." 

சாமுவேலின் நூலிலுள்ள செய்தி இத்தனையும் தான்.  இந்த நூல்,  ஐயப்பனின் வாகனமாக புலியையும், கூடவே யானையையும் சொல்லும் தகவல் சிறப்பிடம் பெறுகின்றது. ஐயப்ப வழிபாட்டில் மலையரையர் மற்றும் ஈழவர் குடிகள் கொண்டிருந்த தொடர்பும் இந்நூலில் உறுதிப்படுத்தப்படுகிறது. ஐயப்பன் வேட்டைத்தெய்வம் என்றும் சாஸ்தாவு எல்லைத்தெய்வம் என்றும் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளதையும் நாம் ஊன்றி நோக்கவேண்டும்.

திருவிதாங்கூரும் பந்தளமும்
பிரித்தானியக் குறிப்புகளைத் தவிர, பந்தள மன்னர்கள் பற்றிய இரு குறிப்புகளும் இக்காலவேளையில் முக்கியம் பெறுகின்றன. திப்பு சுல்தானுக்கு எதிராக திருவிதாங்கூர் அரசு மேற்கொண்ட படையெடுப்புக்கு உதவித்தொகையாக அல்லது கப்பமாக, பந்தள அரசு சுமார் 2 இலட்சம் பெறுமதியான பணத்தைக் கொடுக்கவேண்டி இருந்தது. எனினும் அதைக் கொடுக்கமுடியாமையால் 1820இல் திருவிதாங்கூர் அரசிடம் தமக்கு வருமானம் அளிக்கின்ற தலமான சபரிமலையை ஒப்படைக்க நேர்ந்ததாக பந்தள அரசின் இக்கால சந்ததிகள் கூறிக்கொள்கிறார்கள் (Ayyappan 2018). அதே காலப்பகுதியிலேயே சபரிமலைப் பகுதியை மதிப்பாய்வு செய்த வார்டு, அங்கிருந்த குடில் முன்பு பந்தள ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததையும் தன் காலத்தில் அங்கு (திருவிதாங்கூர்?) அரசின் பணியாளர்களே இருப்பதையும் பதிவு செய்துள்ளார் என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

சபரிமலையிலுள்ள வாவர் சுவாமி நடை. (நன்றி: 'East Coast Daily' web)

இவற்றையெல்லாம் தவிர, வாவரின் வழியில் வந்ததாக உரிமைகோரிய ஒரு குடும்பத்தினர், சபரிமலை மீதான தமது பூசையுரிமையை நிலைநாட்ட கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்று கொல்லம் ஆண்டு 884 (பொ.பி 1708) இல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது (Sadasivan 2000:129). இந்த ஆவணம் எத்தகையது; இதில் சொல்லப்பட்ட தகவல் என்ன என்பது பற்றிய யாதொரு விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

1902  தீவிபத்தும் சிலை பிரதிஷ்டையும்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, சபரிமலை தொடர்பான சமகாலச் சான்றுகள் ஓரளவு தொடர்ச்சியாகக் கிடைத்தபடி இருக்கின்றன. அவற்றில் 1902இல் இடம்பெற்ற தீவிபத்து முக்கியமானது. இவ்விபத்தில் கோவிலின் பெரும்பாகம் சிதைந்தழிந்து போனதாகத் தெரிகின்றது (Daushanti & Panchajanyaa 2018).

கருவறையில் இருந்த ஐயப்பனின் திருவுருவத்தில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் அடுத்து முக்கியம் பெறுகின்றது. கொல்லம் ஆண்டு 1085இல் (பொ.பி 1910) அந்தப் பிரதிஷ்டையானது, பிரபாகர ஆச்சாரியாரால் செய்யப்பட்டதாக அச்சாசனம் சொல்கின்றது (Rao 1988:210). இதுவே ஐயப்பனின் முதலாவது உலோக வார்ப்பாகலாம். மேற்படி 1902இல் கோவில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பின் அங்கு இடம்பெற்ற திருப்பணிகளில் ஒன்றாகவே இந்த சிலை வார்ப்பைக் கொள்ளமுடிகின்றது. எனினும் இச்சிலை மீண்டும் 1950இல் கோவில் எரிக்கப்பட்டபோது சேதமானது.

1950 கோவில் எரிப்பு
இதை அடுத்து, சபரிமலை வரலாற்றில் முக்கியம் பெறுவது,  1950இல் நிகழ்ந்த கோவில் எரிப்பு. திட்டமிட்ட சதியாக அமைந்த இவ்வெரிப்பில் கோவிலின் கதவுகள், ஐயப்பன் திருவுருவம் என்பன கடுமையாகச் சேதமடைந்தன (OnManorama Web 2018).  இச்செயலின் சூத்திரதாரிகள் யாரென்பது இன்று வரை மர்மமாகவே இருக்கும் போதும், அப்போது சபரிமலை அருகே நிலங்களை வாங்கியிருந்த கிறிஸ்தவர்கள் (Daushanti & Panchajanyaa 2018) அல்லது தமிழர்கள் (Kjærholm 1984:5) இந்தச் சதியைச் செய்திருப்பார்கள் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. முரண்நகையாக, சபரிமலை மேலும் புகழ்பெறவும், தமிழரின் விருப்பத்துக்குரிய முதன்மைத் தெய்வமாக மாறவும், இந்த 1950 கோவில் எரிப்பே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

1950  சிதைப்பில் பின்னப்படுத்தப்பட்ட ஐயப்பன் திருவுருவமும் கோவிலும்
(நன்றி: 'My India My Glory' Web)

டென்மார்க்கின் மானுடவியல் ஆய்வாளரான லார் கியேர்கொல்ம் (Lars Kjærholm), தமிழகத்தில், குறிப்பாக மதுரைப்பகுதியில் 1940களுக்கு முன்பு ஐயப்ப வழிபாடு அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் (Kjærholm 1984:2-4). 1950 சபரிமலை தீவைப்பில் தமிழருக்கும் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு கழுவாய் தேடவேண்டுமென்று சில மதுரைவாசிகள் சிந்தித்தமை பற்றி அவர் தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் விவரிக்கின்றார். அவர்களில் முதன்மையானவர் தீவிர இறையன்பரான பி.டி.ராஜன்  என்று சுட்டிக்காட்டும் கியேர்கொல்ம், அவர் பின்னப்பட்ட ஐயப்பன் சிலைக்குப் பதிலாக புதிய சிலை செய்துகொடுப்பதில் முன்னின்றதையும், மதுரைப்பகுதி முழுவதும் ஐயப்ப வழிபாட்டுச் சங்கங்கள் பரவலடைவதற்கு காரணமாக இருந்ததையும் மேலும் குறிப்பிட்டுள்ளார் (Kjærholm 1984:4-6). இவ்வாறு உருவாக்கப்பட்டு இன்று சபரிமலையில் நிறுவப்பட்டுள்ள புதிய மூலவர் சிலை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு, செங்கன்னூரில் வசிக்கும் தட்டாவிழா குடும்பத்தைச் சேர்ந்த இரு சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டதாகும் (Sabarimalai Melsanthi Web n.d)

1975இல் தமிழ் -  மலையாளம் இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 'சுவாமி ஐயப்பன்' எனும் திரைப்படம் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைக்கிறது. மேற்படி "சுவாமி ஐயப்பன்" திரைப்படத்தில் தான் புகழ்பெற்ற ஐயப்பன் தாலாட்டான 'ஹரிவராசனம்' ஜி.தேவராஜன் இசையில் ஜேசுதாசால்  பாடப்படுகிறது. கும்பக்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பாடல், அத்திரைப்படம் வெளியான 1975இற்குப் பின் சபரிமலையில் தினமும் நடை அடைக்கும் போது ஒலிபரப்பப்படுவது கோவிலின் வழமையாகின்றது (MyNation 2018). அண்மையில், இப்பாடலைப் பாடியவர் ஸ்ரீநிவாச ஐயர் அல்ல; தனது பாட்டனாரின் தமக்கை 'கொன்னக்காது ஜானகி அம்மா' தான் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் திரு.பத்மகுமார் உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது (Kuttoor 2018

தொடர்ந்து,  தமிழகத்தை ஐயப்ப பக்தி அலை மிக வேகமாகத் தாக்க ஆரம்பிக்கின்றது. திரையுலக நட்சத்திரங்களான நம்பியார், பாடகர் கே.ஜேசுதாஸ் போன்றவர்கள் முன்னணியில் நிற்க, ஐயப்ப வழிபாடு பொதுமக்களை தீவிரமாகச் சென்றடைகிறது. தமிழகமெங்கும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் கோஷம் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

மகரவிளக்கு
பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு

சபரிமலை தொடர்பான முக்கியமான இன்னொரு நிகழ்வு, 2000களின் பிற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மகரவிளக்கு சர்ச்சை.  அதுவரை மகரவிளக்கு அல்லது மகரஜோதி என்பது, மகர சங்கிராந்தி அன்று,  பொன்னம்பலமேட்டில் கணநேரம் தோன்றி மறைகின்ற நட்சத்திரம்  என்றே அடியவர்களால் நம்பப்பட்டு வந்தது. 1990 மற்றும் 2011 மகரவிளக்கு  தரிசனங்களின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, மகரவிளக்கு அற்புதமல்ல; மனிதச்செயலே என்பதை கேரள அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முற்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில், சபரிமலை மேல்சாந்தியான கண்டரரு மகேஸ்வரரும் அதை அடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் அது மனிதர்களால் உண்டாக்கப்படுவது தான், கேரள மின்வாரியப் பணியாளர்களே மகர விளக்கை பொன்னம்பலமேட்டில் ஏற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர் (Kuttoor 2011).

மலையரையரும் நம்பூதிரிகளும்
மகரவிளக்கு தொடர்பான உண்மை வெளியான பின்னணியில்,  சபரிமலையில் மறக்கப்பட்ட சில விடயங்கள் வெளிவர ஆரம்பித்தன. சபரிமலையில் இன்று மேல்சாந்திகளாக இருப்பவர்கள், செங்கன்னூர்  முந்தன்காவு பகுதியைச் சேர்ந்த 'தாழமோன் மடம்' எனும் குடும்பத்து நம்பூதிரிகள். சபரிமலை தமது வழிபாட்டுத்தலம் என்றும்,  1902்இல் பந்தள அரசு தம்மை சபரிமலையிலிருந்து வெளியேற்றி, தாழமோன் மடம் நம்பூதிரி குடும்பத்தை ஆந்திரத்திலிருந்து வரவழைத்து பூசைக்கு அமர்த்தியது என்றும் மலையரையர்கள் சொல்கிறார்கள் (Rakesh 2018;  Konikkara 2018). இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், மலையரையரின் இந்த வெளியேற்றத்துக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும்.

எனினும் மகர விளக்கை ஏற்றும் உரிமை மாத்திரம் அவர்களால் சபரிமலைக்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாக  தொடர்ந்து வந்திருக்கிறது.  மகரவிளக்கேற்றும் வழக்கம் 55 ஆண்டுகளாகவே கேரள அரசிடம் இருப்பதாகவும், அதற்கு முன் சபரிகிரி நீர்மின் திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மலையரையர்  பழங்குடியினரே மகரவிளக்கேற்றி வந்ததாகவும், கேரள அரசு நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. (The Hindu 2011)

சபரிமலை ஐயப்பனுக்கு தேனபிஷேகம் செய்யும் உரிமை தமக்கு இருந்தது என்றும் தற்போது அது நெய்யபிஷேகமாக மாற்றமுற்றிருக்கிறது என்றும் கூறுகின்ற மலையரையர்கள்,  தமக்கென்றிருந்த வெளிச்சப்பாடு கட்டுச்சொல்லும் வழக்கமும் 1950இற்குப் பின் ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் (Sudheesh 2018). மேலே பிரித்தானியக் குறிப்பில் 1800களை அண்டி வாழ்ந்த தாலனானி எனும் ஐயப்ப வெளிச்சப்பாட்டை இங்கு நாம் நினைவுகூரலாம். மகரவிளக்கு பற்றிய உண்மை வெளியான பின், மீண்டும் தமக்கு பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கேற்றும் உரிமை தரப்பட வேண்டும் என்று மலையரையர்கள் நீதிமன்றம் ஏறியிருந்தார்கள் (Varier 2016).

ஒட்டுமொத்த வரலாற்றுச்சுருக்கம்
இப்படி தொன்மங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து சபரிமலையின் ஒட்டுமொத்த வரலாற்றை நாம் இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

சபரிமலையில் இருந்த ஐயப்பன் கோவில், மிகப்பழைமை வாய்ந்தது.  சாதிபேதமின்றி நிறையக்குலங்கள் அங்கு சாஸ்தாவை வழிபட்டு வந்திருக்கிறார்கள். மலையரையர்கள், ஈழவர்கள் முதலிய குலங்கள் அதில் முதன்மை வகித்தாலும், பிற்காலத்தில் அப்பகுதியை ஆண்ட பந்தள மன்னர்கள் வசம் அக்கோவில் உரிமை சென்றிருக்கிறது. பாண்டியர் கோமரபில் வந்த பந்தள மன்னர்கள், இவ்வாறு இங்கு வந்தது சுமார் 12ஆம் நூற்றாண்டளவில் என்று சொல்லப்படுகிறது. எனினும், அவர்களிடம் நிலவும் பழங்கதையொன்றில் மதுரை திருமலை நாயக்கருடனும் பாண்டிநாட்டு மறவர்களுடனும் இவர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு நினைவுகூரப்படுவதால், இவர்கள் 17ஆம் நூற்றாண்டளவில் பந்தளத்தில் குடியேறியிருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும்.

பந்தள அரசின் ஆரம்பக் காலத்தில் அவ்வரசால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மணிகண்டன் எனும் மலையரையர் குல இளைஞன், கிழக்கே ஏற்பட்ட மறவர் அல்லது தமிழர் ஆக்கிரமிப்பொன்றிலிருந்து சபரிமலைப் பகுதியை காப்பாற்றியிருக்கிறான். அம்முயற்சியில் அவன் காதலியும் நண்பர்களும் மரித்ததால், அல்லது வேறு காரணங்களால், அவன் துறவு பூணுகிறான் அல்லது யாரும் அறியாமல் இலங்கை செல்கிறான். அவனது செயற்கருஞ்செயல்களால் அவனை சாஸ்தாவின் அவதாரம் என்று குடிகள் சபரிமலையில் வழிபட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் காதலி பூங்கொடி அவனருகிலேயே மாளிகைபுரத்தம்மையாகக் கோவில் கொள்கின்ற போதும், அவனை நெருங்கவும் வழிபடவும் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவனது களரி ஆசானும், இஸ்லாமிய நண்பனொருவனும் முறையே கடுத்தசுவாமி, வாவர் சுவாமி என்ற பெயர்களில் கோவில் கொள்கிறார்கள்.  இறுதியில் மணிகண்டனே ஐயப்பன் கோவிலின் மூலவரும் ஆகின்றான்.  


மலையரையர்களால் பொன்னம்பலமேட்டில் செய்யப்பட்ட விளக்கு வழிபாடு, மகரவிளக்கு எனும் சடங்காக வளர்ந்து சபரிமலையின் திருவிழாவாக மலர்கிறது. தொடர்ந்தும் சாதிபேதமின்றி பல குலங்கள் அவ்விழாவில் கலந்து கொள்கின்றன. தெற்கே திருவிதாங்கூர் அரசு பலம் வாய்ந்ததாக வளர்ச்சி கண்டபோது, பந்தள அரசு அதற்கு கீழ்ப்படிய நேரிட்டதுடன், ஒரு கட்டத்தில் சபரிமலையையும் அவ்வரசின் வசம் கையளிக்கவேண்டி ஏற்பட்டது.  


கேரளத்தின் எல்லா நாட்டார் தெய்வக் கோவில்களும் போலவே, சபரிமலையிலும் பிற்காலத்தில் நம்பூதிரிகளின் பூசனை ஏற்(கப்)பட்டிருக்கிறது. மலையரையர்கள் கோவிலிலிருந்து விலக்கப்பட்டு  தாழமோன் மடத்து நம்பூதிரிகள் பூசகர்களாக அமர்த்தப்படுகிறார்கள். இந்த முரண்பாட்டுக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும். கேரள மேல்சாந்திகளில் முதலாமவர் என்று கருதக்கூடிய கண்டரரு பிரபாகரரால் ஐயப்பனின்   திருவுருவம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவிதாங்கூரிலிருந்து கிழக்குப்புறமாக பாண்டிநாட்டிலும் ஐயப்ப வழிபாடு அறிமுகமாகின்றது. கோவில் தொடர்பில் முரண்பட்ட ஒரு குழுவினரால் 1950இல் கோவில் தீவைத்து சிதைக்கப்படுகிறது.  அது அக்கோவிலை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்தி, கோவிலின் பிரபலத்தை அதிகரிக்கிறது. திரைப்படங்கள், திரையுலக நட்சத்திரங்கள் என்போரால் சபரிமலை மேலும் புகழ் பெறுகிறது. ஐயப்பன் கலியுக வரதனாக தென்னகம் தாண்டி வளர்ந்தெழுகின்றான்.


சபரிமலை வரலாறு தொடர்பாக, நம் முன் இன்னும் சில கேள்விகள் பேருரு எடுத்து நிற்கின்றன.

1. ஐயப்பன் வரலாற்றில் சாஸ்தா தொடர்புறுவதைக் காணமுடிகின்றது. தமிழகத்தின் ஐயனாருடனும் அவரை அதிகம் தொடர்புபடுத்துகிறார்களே, இது சரியா?
2. வெறும், ஊடகப் பரப்புரை மாத்திரமே ஐயப்ப வழிபாட்டை ஊக்குவிக்கப் போதுமானதாக
இருந்திருக்குமா? ஐயப்பன் பிரபலமடைந்ததன் பின்னணியில் இருந்த வேறு வரலாற்றுக் காரணிகள் என்னென்ன?
3. இப்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூல்தகவு மகளிரின் கோவில் நுழைவு பற்றிய முடிவு எத்தகையதாக இருக்கவேண்டும்?

இவை இன்னும் முக்கியமான, சற்று ஆழமான கேள்விகள். இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் சற்று ஆறுதலாக விரிவாகப் பார்ப்போம்.



உசாவியவை:
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner