ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்

0 comments

அம்மம்மா வீட்டில் நடுவறையிலிருந்த புழுதி பிடித்த புத்தக அலுமாரியில் மூன்று ஏட்டுச்சுவடிகளைக் கண்டபோது எனக்கு வயது பதினொன்று. அவை அலுமாரியின் அடித்தட்டில், செல்லரித்து பக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த "மகாமாரித்தேவி திவ்வியகரணி"க்கும் "மூவருலா"வுக்கும் நடுவே,  சற்று நைந்துபோன "டொப்டெக்ஸ்" வேக்கில்  சுற்றிக் கட்டி சொருகப்பட்டிருந்தது. டொப்டெக்ஸ் அப்போது கல்முனையில் பிரபலமாக இருந்த துணிக்கடை. உடுப்பு வாங்கும் கடையின் பெயர், பெஸ்ட்பொயிண்டா, றஸ்பாஸா, முபாரக்கா பெயர் பற்றியெல்லாம் கவலை இல்லை.  உடுதுணி வாங்கும் எல்லா பொலித்தீன் பைகளுமே எங்கள் வீட்டில் "டொப்டெக்ஸ் வேக்கு" தான்.

வேக்கில் இரண்டு பழுப்புநிற சிறு ஏட்டுச்சுவடிகள். சணற்கயிறால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தன. மூன்றாவது மிகப்பெரியது. கறுப்பு நிறம். கையில் தூக்கி வைத்தால்  நீளமான கருங்காலிப்பலகை போல பாரித்தது. 

நான் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தபோது அம்மப்பா வீட்டில் இல்லை. காளையடிக்கு சென்றிருந்தார். இது மாந்திரீகம் செழித்த பூமி. மந்திரம் எழுதிய வாகடங்கள் பற்றி அவர் கதை கதையாகச் சொல்லியிருந்தார். சில ஏடுகளைத் திறப்பதற்கு முதல் சொல்வதற்கென்றே மந்திரங்கள் உண்டு.  வசியம், ஏவல் போன்றவற்றுக்கான மந்திரங்களை எளியவர்கள் பார்க்கக்கூடாது என்றே அந்த ஏற்பாடு. குறித்த மந்திரம் சொல்லாமல் திறந்தால் கதை முடிந்தது. மந்திரம் படிக்கும் ஆவலில் பரிசாரியார் ஒருவரின் மந்திர ஏடுகளை இரகசியமாகப் இரவில் திருடி வந்து வாசித்த ஒருவர் மறுநாள் கையில் ஏட்டுடன் இரத்தம் கக்கி செத்துக்கிடந்த கதையை அவர் சிலநாட்களுக்கு முன் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த  ஏட்டை விரித்துப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. வீட்டில் அம்மம்மாவிடமோ ஏனையவர்களிடமோ சொன்னால் பூசை கிடைப்பது உறுதி. பேசாமல் மூன்றையும் சுற்றிக்கட்டி வைத்துவிட்டேன்.

மாலை அம்மப்பா திரும்பியதும் தயங்கித் தயங்கி ஏடுகள் பற்றிக் கேட்டேன்.  "பயந்திற்றாயெல்லோ?" சத்தமாகச் சிரித்தபடி அலுமாரிக்கு அழைத்துச் சென்று டொப்டெக்ஸ் வேக்கை திறந்தார். பேக்கைத்திறக்கும் சரசரப்பே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. இரண்டு சிறிய ஏடுகளும் ஏதோ புதையல் இரகசியம் எழுதிய புத்தகங்கள் போல் விதிர்விதிர்க்கச் செய்தன. 

"இது குளுத்தில் காவியம். அம்மங்கோயில்ல குளுத்திலண்டக்கி ராவுல படிக்கிர. மத்தது பெருங்கதை. புள்ளையார் நோம்புல படிக்கிர." 

"அப்ப அது?" பெரிய ஏட்டைச் சுட்டிக்காட்டினேன்.

"அது அம்மன்  வளக்குரை. உப்ப விரிக்கப்பொடா. சடங்கு நேரத்தில மட்டும் தான் துறக்கலாம்"

"அதெப்பிடி? குளுத்தில் காவியத்த துறந்தேலே?"

"அத என்னேரமும் விரிக்கலாம். குளுத்தில் காவியத்தில குளுத்திப்பாட்டு மட்டுமில்ல. கனமா இரிக்கி. உனக்குப்ப அதெல்லாம் தேவல்ல. "

எனக்கு ஓரளவு புரிந்தது. பெரிய ஏட்டில் கண்ணகி வழக்குரை மட்டும் இருக்கிறது. வைகாசிச் சடங்கில் ஏழு நாளும் கோவிலில் பாடப்படுவது. அதை மற்ற நேரங்களில் அவிழ்த்துப் படிக்கக்கூடாது. சடங்கின் ஏழாம் நாள் இரவில் பாடப்படும் குளிர்த்திக்காவியம் இப்போது என் கையில் இருக்கிறது. அதில் வேறு சில பாட்டுகளும் இருப்பதால் படிப்பதில் தவறேதுமில்லை. அதை விரித்துப் பார்த்தேன்.

"சிரபொருநதுமைஙகரனே. இதென்னாதி இது? ஒண்டும் விளங்கல்ல"

"அதப்பிடி இல்ல. எழுத்தில குத்து இருக்காது. இடைவெளி இருக்காது. நம்ம தான் விளங்கி வாசிக்கோணும். நீ சொன்னது சீர் பொருந்தும் ஐங்கரனே" 

எனக்கு வியப்பாக இருந்தது. குற்று இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாக்கியங்களா, அவற்றை படித்து புரிந்துகொள்ளவும் முடியுமா?

"சரி இஞ்ச கொண்டா. இதெல்லாம் தமிள் எளுத்தெண்டு உனக்கு விளங்கினதே பெரிய விசயம்." 

அம்மப்பா அப்படிச் சொன்னது என் தன்மானத்தை  சீண்டியது. ஏன், இது அத்தனை கடினமா? என்னால் வாசிக்க முடியாதா?

"அம்மப்பா இது மூண்டையும் தாங்கோ, வாசிச்சிப்போட்டு தாறன்"
"உனக்கென்னத்துக்குறா மனே?"
"தாங்கோவன். நான் எல்லாம் படிக்கப்போறன். குளுத்தில்  பாடமாக்கோணும்."

அவர் சிரித்தார்  "நீ பாடமாக்கி என்னெய்யப்போறாய், வடுவா, இது செஞ்சேரியான் படிக்கிரது."

அவர் தென்சேரி. அவர்கள் தான் குளிர்த்தி பாடமுடியும். அம்மன் கோவிலில் எனக்கு உரிமை இல்லை. நான் வடசேரி.  அம்மம்மாவின் குடி. 

"அதெல்லாம் தெரியா. உப்ப தரப்போறேலோ இல்லயோ"
"செரி. அப்ப மத்த ரெண்டயும் கொண்டோ. வளக்குரை இஞ்சே கிடக்கட்டும். கவனமா வெச்சிக்கொள்ளு"

எனக்கும் சரி போலத் தான் தோன்றியது. சும்மா பார்க்கும் போதே அச்சமூட்டிய அந்தக் கருங்காலிப் பலகை அங்கேயே இருக்கட்டும். 

நான் இரண்டு ஏட்டையும் எங்கள் வீட்டுக்குக் கொணர்ந்து சாமியறையில் வைத்தேன்.  குளிர்த்திக் காவியம்  ஏட்டைத் தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். இரண்டு நாட்கள் கஷ்டமாகத் தான் இருந்தது. மெல்ல மெல்லப் பழகி விட்டேன். 

வாழ்க்கையின் வியப்புக்குரிய விடயங்களில் ஒன்று இருக்கிறது.  இலகுவில் கிட்டாத பொருளொன்றில் ஏற்படுகின்ற ஆர்வம், அது கிடைத்த பின்னர், ஏற்பட்ட வேகத்திலேயே வடிந்து விடும்.   ஏடுகள் பல மாதங்கள் அதற்குப் பிறகு விரிக்கப்படவே இல்லை. சாமியறையில் தினமும் அம்மாவின் ஒற்றைச் செவ்வரத்தம் பூக்களைச் சூடும் புனிதப்பொருட்களாக அவை மாறி மாதங்கள் கடந்திருந்தன. அம்மப்பா இறந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் அவற்றை எடுத்துப்பார்த்தேன். 

அப்போது 2004 டிசம்பர் பாடசாலை விடுமுறை. அம்மப்பா இறந்தபின், அவரது புத்தக அலுமாரி எனது கைகளுக்கு வந்திருந்தது. ஏதோ எண்ணம் தோன்றி தேடிப்பார்த்தபோது வழக்குரை ஏடு இருந்த டொப்டெக்ஸ் வேக்கைக் காணவில்லை. அல்லது அவர் யாருக்கும் கொடுத்திருந்தாரோ! அது இல்லாமல் போய்விட்டது. அந்தக் கருங்காலிப் பலகையை அஞ்சினேன் என்பதால் அதன் இழப்பு அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. (இப்போது வேதனையாக இருக்கிறது 😔)   

பிறகு தான் நினைவு வந்து சாமியறையில் பட்டுச் சுற்றப்பட்டு இன்னுமொரு சாமியாக மாறியிருந்த ஏடுகளை அவிழ்த்து மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.  அத்தனை கடினமாக இருந்தது. பிள்ளையார் பெருங்கதை ஏற்கனவே வீட்டில் புத்தகமாக இருந்தது. ஆனால் குளிர்த்திக் காவியம்? சில சொற்களை இன்னதென இனங்காணவே முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை சர்வசாதாரணமாக வாசித்தவன் நான் எனும் எண்ணமே வெட்கத்தைத் தந்தது. மற்றவர்கள் முன் அல்ல, தனக்கு முன் தானே அவமானப்படுவது தான் உலகின் மிகப்பெரிய அவமானம். 

எனக்குள் இருந்த இன்னொருவன் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். இவன் வாயை அடைக்கவேண்டும். அடுத்த தடவை இதை விரித்து இவனிடம் சர்வசாதாரணமாக வாசித்துக் காட்டவேண்டும். கடைசியில்  அவனே ஐடியா தந்தான்.  "ஏட்டில வாசிக்கிர தானே கஸ்ரம்? இடைவெளி வுட்டு குத்து வெச்சி ஒரு  கொப்பில எழுதிவையன்?" 

2004 டிசம்பர் 21 அந்தக் காரியத்தைத் தொடங்கினேன்.  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பாட்டு என்று கண்ணகை அம்மன் காவியத்தை கைப்பிரதியாக எழுதிக்கொண்டிருக்கும் போது சுனாமி அனர்த்தம். இடம்பெயர்ந்து சின்ன மாமாவின் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களிலும் கொப்பியை எடுத்து வந்து எழுதிக்கொண்டிருந்தேன். அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் 2005 ஜனவரி நான்காம் திகதி  அதை வெற்றிகரமாக எழுதிமுடித்தேன்.  


15 வருடங்கள் தாண்டிய பொக்கிஷம்.
அம்மன் காவியம் கையெழுத்துப் பிரதி

வழக்குரை போல் இல்லாமல், இந்த ஏட்டை எந்த நேரமும் எடுத்துப் படிக்கலாம் என்று ஏன் அம்மப்பா சொன்னார் என்று அப்போது புரிந்தது. அதில் உண்மையில் ஆறு காவியங்கள் இருந்தன.  எழுதி முடித்த காவியம் தவிர, குளிர்த்திக் காவியம், கண்ணகி அம்மன் வயந்தன் பள்ளு, கண்ணகி அம்மன் கும்மி, செவ்வாட்டு வயந்தன், ஐவர் காவியம் என்று ஐந்து.   ஐவர் காவியம், மகாபாரதத்தின் சுருக்கம்.  திரௌபதி வழிபாட்டோடு தொடர்புடையது. செவ்வாட்டு வயந்தனில் கொம்புமுறி வசைப் பாடல்கள் இருந்தன. ஏனைய நான்கும் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்குரியவை.  

குளிர்த்திக் காவியம் தான் என் பிரதான இலக்கு என்பதால், அடுத்து அதை எழுதினேன். பின்பு பள்ளும் கும்மியும். அவை முடிந்ததும் மீண்டும் ஆர்வம் வடிந்துவிட, ஏடு மீண்டும் சாமியறையை தஞ்சமடைந்தது. இடையில் சம்மாந்துறையில் ஒரு கண்காட்சிக்காக ஒரு ஆசிரியர் வந்து கேட்டபோதும், என்  பாடசாலையில் கலைநிகழ்ச்சிகளுக்காக தேவைப்பட்டபோதும் அது அங்கிருந்து எழுந்தருளி ஊர்வலம் சென்று திரும்பியது. 

அதன் பின் பழைய ஆர்வம் தூண்டப்படுவதற்கு ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டன.   உயர்தரப்பரீட்சையின் பின் கிடைத்த விடுமுறையில் 2011இல் ஏட்டிலிருந்த செவ்வாட்டு வயந்தனை கைப்பிரதியாக எழுதினேன்.  எஞ்சியிருந்தது ஐவர் காவியம் மட்டும் தான். 21 ஓலைகள் கொண்ட அந்தச் சுவடியில் அது தான் நீளமானது.  ஐந்து ஓலைகளில் 26 பாடல்கள்.  ஏனோ அதை எழுத பொழுதும் கூடவில்லை.  எனக்கு கண்ணகி அளவு திரௌபதி மனதைக் கவர்ந்தவள் அல்ல என்பதும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். 

செவ்வாட்டு வயந்தன் கையெழுத்துப் பிரதி

கடைசியாக 2014இல்  கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அந்த குளித்தில் ஏட்டை எடுத்துச் சென்றேன். ஒரு குறும்படத்துக்காக.  அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். ஆனால் அது மட்டக்களப்பு மாந்திரீக ஏடு என்று பொய் சொல்லி  இளமுறை நண்பர்களை சந்தோசமாக 'பேய்க்'காட்ட முடிந்ததில் எனக்கு குதூகலமாகப் போய்விட்டது. கூட இருந்த ஒன்று இரண்டு கிழக்கிலங்கை நண்பர்கள் ஆமாம் சாமி போட, "அப்ப இதெல்லாம் உண்மைதானாடா" என்று அவர்கள் முகம் வெளிறி அமர்ந்திருக்க, சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமென்று தலையாட்டினேன்

அதற்குப் பிறகு அந்த இரண்டு ஏட்டையுமே மறந்துவிட்டேன். இரண்டாண்டுகளுக்கு முன் நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்துக்காக ஊர் முழுக்க அலைந்தபோது, அம்மப்பாவின் சொந்த வீட்டிலிருந்து உதிரி ஓலைகளாக அவரது தாய்வழி முதுசமான  "வள்ளி அம்மானை" எனும் ஏடு கிடைத்தது. அதை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்கிறேன்.   அது சிதைந்த உதிரி ஓலைகளாகக்  கிடைத்ததில் எனக்கு அத்தனை கவலை இருக்கவில்லை. ஏனென்றால், சித்தாண்டி முருகன் கோவிலில் அது பாடப்படும் தகவல் கிடைத்திருந்தது. அவசரமென்றால் எப்படியும் அங்கு தேடி எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை தான். (அந்த அம்மானை போன ஆண்டு டிசம்பரில் அச்சில் வெளிவந்து விட்டது என்பது நிறைவாக இருக்கிறது. கலாநிதி.முருகு தயாநிதி அவர்களின் பதிப்பு. 2019, வள்ளியம்மன் அம்மானை, புதுச்சேரி தமிழ்ப்புதுவை வெளியீடு.)

வள்ளி அம்மானையை கண்டெடுத்தபோது  வீட்டு ஏடுகளின் நினைவு ஏற்பட்டது உண்மை. ஆனால் தேடவில்லை. எங்கே போகப்போகிறது. இங்கு தான் எங்கோ பாதுகாப்பாக  இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எல்லாம் நேற்று மாலை வரை தான்.

அக்காவும் அத்தானும் புத்தாண்டுக்காக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். எங்காவது ஏடு கிடைத்தால் எடுத்து வை என்று அக்காவிடம் சொல்லியிருந்தேன். மாலை தான் அக்கா சொன்னாள் "உண்ட ஏடு கிடைச்சிது பாத்தயோ? அந்தப் பெட்டிக்குள்ள இரிக்கி" அவள் சொன்னதில் இருந்த இகழ்ச்சிக் குறிப்பை நான் கவனிக்கவில்லை. ஆர்வத்தோடு போய் பெட்டியைத் தூக்கினேன்.  உள்ளே செல்லரித்த புத்தகங்களும் துண்டு துணிகளும் கையோடு வந்தன. அதிர்ந்தபடி பெட்டியைக் கவிழ்த்தால், அரிக்கப்பட்டு உதிர்ந்த ஓலைத்துண்டங்கள் சிதறி விழுந்தன. எலியின் வேலை. ஒரு ஓலை கூட முழுமையாக எஞ்சவில்லை.  எல்லாம் போய்விட்டது. இனி அவை இல்லை. ஒன்று கூட இல்லை. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது.



நல்ல காலமாக அவற்றில் பிள்ளையார் பெருங்கதை ஓலைகளைக் காணமுடியவில்லை. எனவே கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது. அது மட்டுமாவது எங்கோ தப்பியிருக்கிறதென்று. இந்த விடுமுறைக் காலத்துக்குள் எப்படியாவது தேடி எடுத்துவிடவேண்டும்.  "செரி. அப்ப மத்த ரெண்டையும் கொண்டோ. கவனமா வெச்சிக்கொள்ளு" என்று அம்மப்பா ஆதூரமாகத் தந்த இரண்டில் ஒன்று. அது அம்மப்பாவின் எனக்கான பரிசு. விலைமதிப்பற்ற பரிசு. அதில் ஒன்றை என்றைக்குமாக இழந்துவிட்டேன்.

ஓரளவு மனநிறைவைத் தருவது என்னவென்றால், அதன் கையெழுத்துப் பிரதி என்னிடம் இருக்கிறதென்பது தான். ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரு நினைவுமலரில்  பிரசுரிப்பதற்காக அதிலிருந்த பாடல்களை அண்ணா ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். செவ்வாட்டு வயந்தன் தவிர ஐந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நூல்களில் முழுமையாக அச்சில் வெளிவந்திருக்கின்றன. வீ சீ கந்தையா பதிப்பித்த கண்ணகி வழக்குரையில் (1968) அம்மன் காவியமும் குளிர்த்தியும் பின்னிணைப்பாக வெளிவந்திருக்கிறது. 

ஐவர் காவியம், கிழக்கிலங்கை கிராமிய இலக்கியங்களின் தொகுப்பான "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் (1971) திரௌபதையம்மன் காவியம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அம்மன் கும்மியும் அம்மன் பள்ளும் நா.நவநாயகமூர்த்தி அவர்களின் "தம்பிலுவில் கண்ணகி வழிபாடு" (1999) நூலில் வெளியாகி இருக்கிறது. அதிசயம் என்னவென்றால் அவருக்கு ஏட்டிலிருந்த இந்த கும்மியையும் பள்ளையும் கையெழுத்துப்பிரதியாக  எழுதிக்கொடுத்தது அம்மப்பா தான். அதை அவர் அங்கு அடிக்குறிப்பாக எழுதியிருக்கிறார். செவ்வாட்டு வயந்தனின் சில பாடல்கள் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அச்சில் வராத பாட்டுக்கள் அதிகம். அவற்றை எப்படியோ கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றிவிட்டேன். அதுவரைக்கும் எனக்கு திருப்தி தான். 

இந்தப் பாடல்களில் எதுவுமே அச்சில் வராமல் ஒருவேளை இழக்கப்பட்டிருந்தால் அப்படி என்ன அரிய செய்தி இல்லாமல் போயிருக்கும்? இரண்டு சிறிய உதாரணங்களைச் சொல்கிறேன். அம்மன் வயந்தன் பள்ளு இறுதியாக இப்படி முடிகிறது.

"பார்வாழி தென்திருக்கோயில் குமரன் வாழி
பார்த்திப நரேந்த்ரசிங்க மூர்த்தியும் வாழி
கார்வாழி தம்பிலுவில் ஊர்வாழி - வந்தருள்செய்
கண்ணகைத் தாய் நீடூழி காலம் வாழியே"

பார்த்திப நரேந்திரசிங்க மூர்த்தி யாரென்று தெரியுமா? 1707 - 1739 இடையே கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் வீர நரேந்திரசிங்கன். அடுத்தது அம்மன் கும்மியில் வரும் இறுதிப் பாட்டு.

"வாழி பூவாழி மறைவாழி - மன்னன்
வர ராசசிங்கன் வாழி
ஊழிகாலம்  வரை பட்டின் கண்ணுறை
கண்ணகைத் தாயாரும்  வாழியதே"

இவன் எந்த ராஜசிங்கன் என்று தெரியாது. கிழக்கிலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கண்டி மன்னர்களாக வாய்மொழியில் நினைவுகூரப்படுபவர்கள் பலர். இரண்டாம் இராஜசிங்கன் (1635–1687), விஜய ராஜசிங்கன் (1739 - 1747) மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747–1782). ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் எவரும் ஆகலாம். 

தம்பிலுவில் கண்ணகியைப் புகழும் இவை இரண்டும் என் ஊரில், ஒருவேளை என் கொள்ளுப்பாட்டனோ அவரது எள்ளுப்பாட்டனோ பாடியிருக்கக்கூடிய பாடல்கள். அவர்கள் பாடியது என்பதற்கு மேல்,  இன்றியமையாத முக்கியத்துவம் இவற்றுக்கு உண்டு. கீழைக்கரையோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த நெருக்கமான பந்தத்துக்கு சான்று இந்த இலக்கியங்கள். கண்டியின் சிங்கள மற்றும் நாயக்க மன்னருக்கும் கிழக்கிலங்கைக்குமான அரசியல் - சமய - சமூக உறவு இதுவரை ஆராயப்படாத சுவையான புலங்களில் ஒன்று. அதற்கு உதவக்கூடிய முதன்மையான சில சான்றுகளை மயிரிழையில் இழக்க இருந்தோம்.  

ஐவர் காவியத்தை கடைசிவரை படியெடுக்கவே இல்லை என்பதால், அது என்றைக்குமாக இல்லாமல் போய்விட்டது என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். சிதைந்தொழிந்து விட்ட ஏட்டில் எஞ்சிய ஓலையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் பரிசோதித்துப் பார்த்து, அங்கு அது  துரோபதையம்மன் காவியமாக அச்சில் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் நெஞ்சில் தண்ணீர் வந்தது. இப்போதும் மீளாமல், பித்துப்பிடித்தவன் போல் கையெழுத்தாக எஞ்சியிருக்கும் செவ்வாட்டு வயந்தனை தடவி மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.


ஒருவேளை என் ஏட்டை, குறிப்பாக செவ்வாட்டு வயந்தனை  கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றாமல் விட்டிருந்தாலோ, அல்லது ஐவர் காவியம் என்பது அச்சில் வராத வேறொரு நூலாக இருந்திருந்தாலோ, இந்தக் குற்றவுணர்விலிருந்து அத்தனை சீக்கிரம் வெளிவந்திருக்கமாட்டேன். இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் உங்கள் யாரோ ஒருவர் வீட்டில், சின்னச் சின்னக் கவனயீனத்தால் எத்தனை ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை இழந்துகொண்டிருக்கிறீர்கள்?

அதனால் தான் சொல்கிறேன். ஏட்டில் இருந்ததை கையெழுத்தாக எழுதி வைத்த கதையைச் சொல்லி முடித்துவிட்டேன்.   நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான். பிரமாதமாக ஒன்றுமில்லை.

ஆவணப்படுத்துங்கள், இன்றே இப்போதே.


பிகு: யாழ்ப்பாணத்தில் நூலகம் நிறுவனத்தையும், மட்டக்களப்பில் அதன் கிழக்குக் கிளையையும் ஆவணப்படுத்தலுக்கென தொடர்பு கொள்ள முடியும்.  தொட்டால் உதிரும், செல்லரித்த ஏடுகளை, அரிய ஆவணங்களைக்கூட எண்ணிமப்படுத்தி மூல ஆவணத்தை உங்களிடமே திருப்பித் தருவார்கள். அதன் மின்வடிவத்தை, எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க  ஆவணகம் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது.  
மேலும் வாசிக்க »

இரு இசைத்தொகுதிகள்

0 comments
இந்த நாட்களை இனிதாக்கிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான இசைத்தொகுதிகளைச் சொல்லவேண்டும்.


முதலாவது திரு ராஜன் சோமசுந்தரம் அவர்களின் "சந்தம்: செந்தமிழைச் சந்திக்கும் சிம்பொனி" இசைத்தொகுதி (Sandham: Symphony Meets Classical Tamil). சங்க இலக்கியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடல்கள் சிம்பொனி இசையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "வேரல் வேலி" (குறுந்தொகை 18), பிரியங்கா பாடிய "முல்லை ஊர்ந்த" (குறுந்தொகை 275), ராஜலட்சுமி பாடிய "ஞாயிறு காயாது" (குறுந்தொகை 378), சைந்தவி பாடிய "கலம்செய் கோவே" (புறம் 256), கார்த்திக் - பிரகதி பாடிய யாயும் ஞாயும் (குறுந்தொகை 40), கார்த்திக் பாடிய "யாதும் ஊரே" (புறம் 192) என்று ஆறு பாடல்கள். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும் அ.முத்துலிங்கமும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரிகள், இன்றும் இயல்பான மானுட உணர்வுகளை நமக்குக் கடத்தும் போது ஏற்படும் சிலிர்ப்பு ஒருபக்கம். உலகின் வேறு எத்தனை இனத்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும் என்ற பெருமிதம் இன்னொரு பக்கம்.
இதில் யாயும் ஞாயும் (இருவர் - நறுமுகையே), வேரல் வேலி (இதயம் - கோச்சடையான்), ஆகிய இரண்டும் கவிப்பேரரசு உபயத்தில் சாதாரண திரையிசை ரசிகர்களும் அறிந்த வரிகளைக் கொண்டவை.
சில பாடல்களுக்கு வரிகளும் அர்த்தமும் இணைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் பாடல்களைக் கேட்கமுன்பு மேற்படி ஆறு சங்கப் பாடல்களின் பொருளையும் இணையத்தில் தேடிப் படித்துவிட்டுக் கேளுங்கள். இல்லாவிட்டால், "முல்லை ஊர்ந்த" பாட்டில் "ஈர் மணற் காட்டாறு வரூஉம் தேர் மணிகொல்?" என்ற வரிகளை அடுத்து சட்டென மேல்ஸ்தாயியில் எழும் ஆண் குரல் சொல்லவருவது என்ன; "கலம்செய் கோவே" பாடல் முடியும் போது ஏன் வீணை நரம்பு அறுந்துவிடுகிறது; இப்படி ஒவ்வொரு பாட்டிலும் உள்ள சிறுசிறு குறியீடுகள் புரியாமல் போய்விடும். (வீணை அல்ல; உண்மையில் சாரங்கி எனும் இசைக்கருவி அது)
ஏன் சொல்கிறேனென்றால், சில மீம்கள் புரிவதற்கு, குறிப்பிட்ட படத்தை நாம் பார்த்திருக்கவேண்டும், இல்லையா? 
சந்தம் கேட்க: https://tinyurl.com/rmaqqgv
இரண்டாவது இசைத்தொகுதி, ஈஷா அமைப்பின் "தேவாரம்: தமிழ்ப்பக்தியின் பெருக்கெடுப்பு " (Thevaram: The Outpourings of Tamil Devotion). பெருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும் ஈஷாவின் சிவராத்திரி விழாவில் அது வெளியிடப்பட்டது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பே யூடியூப்பில் வெளியாகிவிட்டது. தில்லைவாழந்தணர், மந்திரமாவது நீறு, பித்தா பிறை சூடி, தோடுடைய செவியன், வானனை, மாதர்ப்பிறைக்கண்ணி ஆகிய ஆறு தேவாரங்களும் நவீன இசைக்கலப்பில் இனிமையாக வெளிவந்திருக்கின்றன. பித்தா பிறைசூடி இதில் என் முதல் தெரிவு.
ஒரு புத்திந்து (Neo Hindu) அமைப்பாக, ஈஷா மீது தனிப்பட்ட ரீதியில் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், அங்கு எனக்கு மிகப்பிடித்த விடயம் இது. இசை, நடனம், நாடகம் இவை மூன்றும் தமிழ் மரபில் கோவில் சார்ந்து வளர்ச்சி கண்டவை. ஆனால் மரபார்ந்த சைவத்தில் அவை எப்போதோ மறக்கப்பட்டு விட்டன. அதிலும் திருமுறை ஓதும் போது (ஓதுதல் என்பதற்கு தமிழில் முதன்மையான அர்த்தமே பாடுதல் என்பது தான்) வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. பழங்காலக் கல்வெட்டுக்களைத் தட்டினால், திருப்பதியம் விண்ணப்பிப்பதும், விதவிதமான இசைக்கருவிகள் மீட்டப்படுவதும் கோவில்களில் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பது தெரிகின்றது.
திருமுறைகளை நவீன இசைக்கலப்பில் கேட்கும் போது ஏற்படும் உணர்வு வார்த்தைகளில் விபரிக்கமுடியாதது. இசைஞானியின் சிம்பொனி திருவாசகம், திரைப்படங்களில் வந்த பாருருவாய (தாரை தப்பட்டை), மாசில் வீணையே (கோச்சடையான்), தாயிற்சிறந்த (அழகுக்குட்டிச்செல்லம்) முதலியன இந்தப்பட்டியலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
மேற்படி பாடல்களில் தொனிக்கும் மிகையான நவீன நெடி மரபார்ந்தவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் ஈஷாவின் இந்த இசைத்தொகுதியில் அந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்பேன்.
"தமிழோடிசை பாடுவது' என்ற பாரம்பரியத்தையே மறந்துவிட்டோம். ஈஷாவின் இசைத்தொகுதி அதைச் செய்துகாட்டியிருக்கிறது. புத்திந்து அமைப்புக்களை குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில் இது போன்ற நல்ல முன்மாதிரிகளை மரபுச்சைவத்தில் நடைமுறைப்படுத்த நாம் முயலலாம்.
தேவாரம் இசைத்தொகுதி யூடியூப்: https://tinyurl.com/thevaram
(பிகு: ஈஷா சிவராத்திரியில் புகழ்பெற்ற "சோஜுகாதா" கன்னட நாட்டார் பாடலின் தமிழ் வடிவமும் நன்றாக இருக்கிறது. இங்கே: https://tinyurl.com/tjdaaol )
மேலும் வாசிக்க »

எவனோ ஒருவன் கை அம்பு

0 comments


நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான்.

'தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன்

ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி எங்கேயோ வாசித்தோமே? அதுவும் நினைவில்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது. மறதி சாத்தியம் தான். கவையில்லை, அது 1509ஓ 1507ஓ, ஐநூறாண்டுகள் கடந்துவிட்டதே எழுத வேண்டிய விடயம் தான் என்று எழுதி வலைப்பதிவிலும் போட்டதைத் தான் நீங்கள் படித்தீர்கள்.

இன்று காலை வழக்கம் போல 5.55, 6.00, 6.05 என்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால், அதை ஒலி அணைத்தபடி தொடர்ந்தும் தூங்கி வழிந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு கனவு. கனவென்றும் சொல்லமுடியாது. ஒரு நினைவு. கொழும்பு அருங்காட்சியக நூலகத்தில் அமர்ந்து சி.பத்மநாதனின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற ஆங்கில நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பழுப்பு நிறப் பக்கங்களில் தைப்பூசம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை நுணுக்கமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று தைப்பூசம் என்பது நினைவில் இருந்தது உண்மை. பேராசிரியர் பத்மநாதனின் அந்தப் பெயருடைய ஒரு ஆங்கில நூல் இருப்பதும் உண்மை. ஆனால் அதில் தைப்பூசம் பற்றிய எந்த விபரமும் இல்லை. நான் கொழும்பு அருங்காட்சியகத்துக்கு பலமுறை சென்றிருந்தாலும், அங்கிருந்த நூலகத்துக்குச் சென்றது ஒரே ஒரு தடவை தான். அதுவும் போன டிசம்பர் மாதம், இதற்குப் பின் எப்போது சாத்தியமாகிறதோ தெரியாது என்ற அச்சத்தில் போய் வந்தேன். வருகிற போது அருகே இருந்த விற்பனைச் சாலையில் மேற்படி ஆங்கிலப் புத்தகத்தைக் கண்டேன். அதில் பிரசுரமானவை தமிழிலும் பிரசுரமாகி நான் ஏற்கனவே வாசித்து விட்ட கட்டுரைகள். எனவே வாங்கவில்லை. ஆனால் இன்னொரு ஆங்கிலப் புத்தகம் வாங்கினேன்.சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் சிறிமல் ரனவல்லவின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள சிங்களக் கல்வெட்டுக்கள்".


இப்படி ஒரு கனவு அல்லது நினைவு வந்ததும் தான் அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. நான் கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பி இரண்டு மாதங்களாகி விட்டது. ரனவல்லவின் புத்தகம் உட்பட கொழும்பில் பயன்படுத்திய புத்தகங்களெதுவும் பொதி அவிழ்க்கப்படாமல் அப்படியே பழைய அலுமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அட! இந்தப் புத்தகம் வாங்கியதை மறந்தே விட்டோமே, வாசிக்கவேண்டும் என்று எடுத்து வந்து தட்டிக்கொண்டிருந்தபோது தான் ஆறாம் விஜயபாகுவின் தெவிநுவரப் பலகைக் கல்வெட்டைக் கண்டேன். ஆறாம் விஜயபாகு பற்றிய அந்த சிங்களக் கல்வெட்டு அவனை இப்படி அறிமுகப்படுத்துகிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ சுத்த சக வருஷ எக் தஹஸ் சாரசிய தெனிஸ்வன்னெஹி ரஜ பெமிணி ஸ்வஸ்தி ஸ்ரீ மகாசம்மத பரம்பரானுயாத சூரிய வங்ஷாபிஜாத ஸ்ரீலங்காதிபதி ஸ்ரீமத் சிறிசங்கபோ ஸ்ரீ விஜயபாகு சக்ரவத்தி ஸ்வாமின் வஹன்செட்ட சதர வன்னென் மது அவுறுது பொசொன"

இதன் பொருள் இது தான். "மங்கலம் பொலிக. சுத்தமான சகவருடம் 1432இல் முடிசூடியவரும், மகாசம்மதரின் பரம்பரையில் சூரிய வம்சத்தில் உதித்தவருமான இலங்கைக்கதிபதி சிறிசங்கபோதி விஜயபாகு சக்கரவர்த்தி அவர்களின் நான்காம் (ஆட்சி) ஆண்டில் பொசன் மாதத்தில்"

இங்கு வரும் மகாசம்மதன் என்பவன் பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் க்ஷத்திரிய குலத்து முதல் மன்னன். பெரும்பாலான சிங்கள மன்னர்கள் தாங்கள் அவன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்தியக் கல்வெட்டுக்கள் போல சில இடங்களில் சக ஆண்டுக்கணக்கையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொசன் எனும் சிங்கள சந்திரவழி மாதம், தமிழ் ஆனி மாதத்துக்குச் சமனானது.

இலக்கியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தக்கூடிய ஆண்டுகளை விட, கல்வெட்டு ஆண்டுகள் ஒப்பீட்டளவில் திருத்தமானவை. சக ஆண்டு, கிரகோரியன் ஆண்டுக்கு 78 ஆண்டுகள் பிந்தியது. விஜயபாகு மன்னன் முடிசூடிய ஆண்டு சக ஆண்டு 1432 என்கிறது தெவிநுவரைக் கல்வெட்டு. ஆக கணக்கிட்டால், கிரகோரியன் படி அவன் ஆட்சிக்கு வந்தது, 1432 + 78 = 1510!

எனவே இனி ஐயத்துக்கிடமில்லை. 1507ஓ, 1509ஓ, 1513ஓ அல்ல; ஆறாம் விஜயபாகு ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஆண்டு 1510. ஆக, அவன் பத்தாம் ஆட்சியாண்டில் தம்பிலுவில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது, 1520இல். சரி தான். இந்த 2020ஆம் ஆண்டுடன் மிகச்சரியாக 500 ஆண்டுகள் ஆகிவிட்டது!

தெவிநுவர பலகைக் கல்வெட்டை, இந்து பண்பாட்டுத் திணைக்களத்தின் மாநாட்டில் கடந்த ஒக்டோபரில் வாசித்த "தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்" கட்டுரைக்காக படித்திருக்கிறேன். "தம்பிலுவில் கல்வெட்டு" கட்டுரை எழுதிக்கொண்டிருந்த போது, அதை எடுத்து தகவலை சரி பார்க்க ஏன் எனக்குத் தோன்றவில்லை?

இன்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் தைப்பூசத்தையும் கொழும்பு அருங்காட்சியகத்தையும் முடிச்சுப் போட்டு ஏன் அந்தக் கனவை நான் காணவேண்டும்? அந்தக் கனவு ஏன் ரனவல்லவின் நூலை நினைவூட்டவேண்டும்? அந்த நூலை தேடி எடுத்துப்பார்க்கும் எனக்கு, தெவிநுவரக் கல்வெட்டில் விஜயபாகுவின் சரியான ஆட்சியாண்டு ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? ஐந்து நாட்களின் பின்பு நான் எழுதிய கட்டுரை சரி தான் என்று ஏன் உணரவேண்டும்?

வரலாறு, ஆய்வு என்றெல்லாம் எழுதும் போது, "உன் எழுத்துநடை நன்றாக இருக்கிறது", "உன் வயதில் இந்த ஆய்வைச் செய்வதெல்லாம் பெரிய விடயங்கள்", என்று நிறையப்பேர் பாராட்டியிருக்கிறார்கள். அதை எண்ணி சந்தர்ப்பங்களில் இலேசாக தலைக்கனம் ஏறுவதும் உண்டு. அப்போதெல்லாம் ஓங்கி சம்மட்டியால் அடிப்பது போல் இப்படி ஏதாவது நிகழும்.

"இது எதையுமே நீ செய்யவில்லை. நீ செய்விக்கப்படுகிறாய். நீ வெறும் கருவி. உனக்கு இந்த இந்தத் துறையில் ஆர்வமேற்படவேண்டும் என்று நீயா விரும்பினாய்? உன் இலட்சியங்கள் என்ன? இப்போது நீ இருக்கும் இடம் என்ன? கர்வப்படாதே, நீ அம்பு மட்டும் தான். எய்பவன் வேறொருவன். இந்த இந்த விடயங்கள் உன் மூலம் நிகழவேண்டும் என்று மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்த்திவிட்டு ஓரமாக ஒதுங்கிக்கொள். அதற்கு மேல் உனக்கொரு இடம் இல்லை."

வேறெங்கோ, வெகு தூரத்தில் நின்று இப்படி யாரோ சொல்லுவதைப் போல அடிக்கடி உணர்கிறேன். உண்மையில் எல்லா சாதாரண மனிதருக்கும் உரிய சாதாரண கோபதாபங்கள் எனக்கும் உண்டு. அர்த்தமற்ற எண்ணங்கள், பொருந்தாத் துயர்கள், குழப்பங்கள், தயக்கங்கள். இப்போது அவையெல்லாம் பெருமளவுக்கு இல்லை. அவை வருவது ஏதோ ஒரு காரணமாகத் தான். என்னைச் செலுத்தும் பெருவிசைக்குத் தெரியாதா அதெல்லாம்? அதைத் தீர்க்கும் வழியையும் அந்தப் பெருவிசை அறியும். என்னைக் காக்கும். பிரபஞ்சப்பெருவிசை!

ஏன் கடவுள் நம்பிக்கை தேவை என்று கேட்டால் என் முதன்மையான பதில் இது தான். வாழ்வு பொல்லாதது. அது உங்களை சுக்கு நூறாக உடைத்தெறியும் தருணங்கள் பல வாழ்க்கையில் வரும். மனதளவில் நீங்கள் எத்தனை வலியவர் என்றாலும் அதற்கு முகங்கொடுக்க முடியாத நிலை உங்களுக்கு ஏற்படலாம். திட்டியோ தழுவியோ அழுதோ அப்போதைக்கு தள்ளாடாமல் பிடித்துக்கொள்ள ஒரு தூண் தேவை. பெரும்பாலும் அந்தத் தூண் இறைநம்பிக்கை தான்.

அப்படி, யாரோ ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கின்ற முடிவுறாத திரைக்கதையொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதே எத்தனை இனியது. இயக்குநரைத் தெரியாது. அடுத்த காட்சி யார், என்ன நடக்கும் என்றும் தெரியாது. இதில் நடிப்பதே அருமையான விளையாட்டு. நடிகன் ஒருபோதும் தலைக்கனம் கொள்ளக்கூடாது. அவன் நடிப்பு மொத்தமாக சீர்கெட்டுவிடும். அல்லது இயக்குநன் அவனைக் கடாசி விட்டு வேறொரு நடிகனைத் தேர்ந்தெடுக்கக் கூடும்.


நான் எவனோ ஒருவன் கையில் அம்பு என்பதை மட்டுமே பெருமையாக எண்ணிக் கொள்ள விரும்புகிறேன். கையில் அம்பை ஏந்தி, அந்த அம்பு ஆணவம் கொண்டதால், அதை நினைத்துப் புன்னகைத்து, அந்தப் புன்னகையாலேயே முப்புரங்களை எரித்தவனின் கதை புராணங்களில் உண்டு. எப்போதாவது இந்த எளிய அம்பு அப்படி கர்வத்தோடு எண்ணிக் கொள்வதைக் கண்டீர்களென்றால் சுட்டிக்காட்டிவிடுங்கள். "ஆடாதே, நீ வெறும் அம்பு தான்" என்று

மேலும் வாசிக்க »

பாயும் ஒளி நீ எனக்கு!

0 comments

ரட்சகன் ஸ்ரீதரின் 'பாயும் ஒளி'

ரட்சகன் ஸ்ரீதர் என்பவர் பாடிய பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" பாடலை அண்மையில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பாடல் அருமையாகத் தான் இருக்கிறது. ஆனால் முன்பும் இந்தப்  பாடல் நிறைய வடிவங்களில் வந்திருக்கின்றது. அவற்றில் சிறந்ததாக நான் கருதுவது சைந்தவியின் "பாயும் ஒளி". அது 2013இல்  நிவாஸ் கே பிரசன்னாவின்  "Kannamma - Eternal Love" எனும் இசைத்தொகுதியில் வெளியானது. அதன் பெரும்பாலான பாடல்கள் இப்போதும் என் கைபேசியை ஆக்கிரமித்திருப்பவை. குறிப்பாக இந்த "பாயுமொளி", "நின்னையே இரதி என்று", "தூண்டில் புழுவினைப் போல்" மூன்றும்.


சைந்தவியின் பாயும் ஒளி.

பாரதியின் பாடல்களில்,  அருமையான ஒன்று இந்தப்"பாயுமொளி நீ எனக்கு". அதில் தொனிப்பது, நாயகியை நினைத்து நாயகன் கொள்ளும் அளவற்ற பெருமிதம். உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அத்தனை அன்பு இருக்கிறதோ - இல்லையோ, அந்த அன்பும் உண்மையோ - பொய்யோ, "நீ இல்லாமல் நான் இல்லை" என்பதை  உவமைகளால் நிரப்பி கொஞ்சம் ஓவராகவே செல்லும் அழகான பாடல் அது.  பாரதியிலும் தவறு சொல்ல முடியாது தான். வள்ளுவனின் குறளில் "நலம் புனைந்துரைத்தலாக", இறையனாரின் குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கையாக" வெளிப்படும் தமிழ் அகத்துறை மரபின் தொடர்ச்சி அது. அதை விடுங்கள், இன்று வரை  உங்களில் எத்தனையோ பேர்  கூட இப்படி (பயத்திலாவது) "மானே தேனே" போட்டுக்கொண்டு தானே இருக்கிறீர்கள்? 🤣


பாடல் முழுக்க பாரதி தனக்கும் கண்ணம்மாவுக்கும் பயன்படுத்தும் உருவகங்கள் வழக்கமானவை தான். தேன் -  அதைக்குடிக்கும் தும்பி. வீணை - அதை மீட்டும் விரல், ஆபரணம் - அதில் கோர்க்கும் வைரம், மழை - மழையைக் கண்டாடும் மயில், பானம் அது ஊற்றப்படும் பாண்டம். இப்படிப் பல. ஒன்றை ஒன்று விட்டுப் பிரியாத, ஒன்றை ஒன்று நிரப்புகின்ற இருமைகள். பாரதியை  பின்பற்றித் தான்  பாரதிதாசனும் பின்பொருமுறை "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று மகிழ்ந்திருக்கிறார்.

ஆனால் பாரதியின் உவமைகளில் திடுக்கிடச் செய்யும் ஒன்று, நான்காவது சரணத்தில் வருகின்றது. "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்று தொடங்குகிறது அது.  வெண்ணிலவும்  கடலும்? நிலவு வானுக்குரியது. கடல் கரையோடு விளையாடுவது. ஆனால் இயற்கையின் நியதியில் நிலவும் கடலும் கூடிக்களிக்கும் தருணமொன்று வாய்த்துவிடுகிறது. 






நிலவொளி பிரதிபலிக்கும் கடலைப் பார்த்திருக்கிறீர்களா? சந்திரன் தன் மீது திகழும் அந்தக் கொஞ்சநேரம்  கடல் வெள்ளிநிறத்தில் பளபளக்கும். உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் இயற்கையின் அருமையான  காட்சிகளில் ஒன்று அது. அது நிகழ்ந்த பின்னர் நிலவு தன் பயணத்தை இயல்பாகத் தொடர்கின்றது. கடல் அலைக்கரங்கள் வீசி சாதாரணமாக கரையைத் தழுவிக்கொண்டிருக்கிறது. என்ன சொல்ல வருகிறான் பாரதி?


பாரதி உருகி உருகிப் பாடிய பல கவிதைகள் கண்ணம்மாவை நோக்கிப் பாடப்பட்டவை. மகாகவி ஒருவனின் உள்ளத்தை  இத்தனை ஆட்கொண்ட இந்தக் கண்ணம்மா யார் என்று நிறையப்பேர் ஆராய்ந்திருக்கிறார்கள். தன் மனைவி செல்லம்மாவைத் தான் அவர் கண்ணம்மா என்று  பாடுகிறார் என்று சொல்வார்கள் சிலர். பாரதி இறையேற்பர் - ஆத்திகன் என்பதால் தன் குலதெய்வமான கண்ணனைத் தான் அப்படி பெண் வடிவில் துதித்திருக்கிறார் என்றும், இல்லை இல்லை, சிவசக்தியையே நேரடியாகப் பாடுகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.


ஆனால், ஒருவேளை, பாரதியின் கற்பனையை நிறைத்திருந்த கண்ணம்மா அவர் மனைவி செல்லம்மா இல்லை என்று ஆகும் போது நமக்கு ஏற்படும் துணுக்குறல் கொஞ்சநஞ்சம் அல்ல.  செல்லம்மாவின் வாக்குமூலத்தின் படி, அவர்களது உறவு, ஊடலும் கூடலும் நிறைந்த ஒரு சாமானியத் தம்பதியின் போராட்டம் மிகுந்த உறவாகவே இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. கண்ணம்மா ஏன் வேறொருத்தியாக இருக்கக்கூடாது? 


வாசகனாக பாரதியிடம் நான் அத்துமீறுவதாக நீங்கள் கருதலாம். இல்லை. அவனை ஆராதிக்கிறேன். ஆனால் கலைஞனின் மனதை சாமானியர்களோடு ஒப்பிடமுடியாது.


ஒரு உதாரணம் சொல்கிறேனே. கிசுகிசுக்களில் இத்தனை ஆர்வம் காட்டுகிறோமே, ஏன் சினிமாத்துறையினர் , அரசியல்வாதிகள் மட்டுமே இத்தனை கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பிரபலம் என்பதால் என்று சிலர் சொல்லலாம். இல்லை அவர்கள் இப்படி உணர்ச்சிகரமானவர்களாக  இருப்பதற்குக் காரணம், மீறல். இத்தகையவர்களுக்கு மட்டுமே வாய்த்த மீறல்.

அந்த மீறல் இருப்பதால் தான் அவர்கள் சாதாரண மக்களிலிருந்து ஒருபடி மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அழகு, திறமை,  அறிவு, பலரை ஈர்க்கும் வல்லமை இவை எந்தவித முயற்சியுமின்றி இயல்பாகவே கிடைப்பது சிலருக்குத் தான். அப்படி அள்ளிக் கொடுத்த ஒருவரிடம், இயற்கை, நிகராக இன்னொன்றைப் பறித்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தராசை சமப்படுத்துவது ஒழுக்கமோ, மகிழ்வான மணவாழ்க்கையோ, புகழோ, உடல்நலமோ, பிள்ளைகளோ, நிம்மதியோ ஏதோ பெறுமதியான ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒரு  உதாரணத்துக்கு அரசியல் - திரைத்துறைக்குச் சொன்னாலும், இதை சமூகத்தால் கொண்டாடப்படும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாரிடமும் நீங்கள் காணலாம் - எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  விஞ்ஞானிகள், புத்திஜீவிகள் உட்பட. சில விதிவிலக்குகள் உண்டு தான். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


நான் பாரதியை வாசிப்பது இந்தக் கோணத்திலேயே. பாயுமொளி நீ எனக்கு என்று ஒரு பெண்ணை - பெரும்பாலும் செல்லம்மாவை, அல்லது மகள்  தங்கம்மாவை பாரதி போற்றுகிறான் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், மகளுக்கு இந்தப் பாடலை பாட வாய்ப்புக் குறைவு.


இன்னொரு துப்புக் கிடைக்கிறது. பாரதியாரின் இரண்டாவது மகள் பெயர் சகுந்தலா. துஷ்யந்தனுக்காகக் காத்திருந்தவள். எத்தனையோ புராணப் பாத்திரங்கள் இருக்க மகாகவி ஒருவன் தன் மகளுக்கு அந்தப் பெயரை வைக்கக் காரணம் என்னவாக இருக்கும்?

தனது வாழ்க்கை வரலாற்றில் தன் பள்ளிப் பருவக்  காதலி பற்றி சொல்லியிருக்கிறார் பாரதி. அவரது மணமே 12 வயதில் இடம்பெற்ற குழந்தைத் திருமணம் தான். அதில் காதலியா? ஆம். அவளை அவர் அறிமுகப்படுத்துவது..

'ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்'

இந்த சகுந்தலை  தான் பாரதியின் கண்ணம்மாவா? எது எப்படியோ சரஸ்வதி, திருமகள், காளி என்று மூன்று காதலாக, அவன் கனவுகளில் வெளிப்பட்ட பெண் செல்லம்மா அல்லாத வேறொருத்தி என்றே தெரிகிறது.


 பாரதியின் நிலை இப்படி இருக்க, பாயும் ஒளி கவிதை எழுந்த நனவிலிப் பெருவெளியில் அவனையும் மீறி வெளிப்பட்டவள் கண்ணம்மை. வெண்ணிலவு அவள், மேவும் கடல் அவன்.  அந்த இணை நீடிக்கப் போவதில்லை; ஆனால் இயற்கையின் இணைகளிலேயே அதியற்புதமானது. வெவ்வேறு இலக்குகளுடன் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட  இருவர்  ஒருவரையொருவர் கடந்து சென்ற போது,  மற்றவருக்கு நிகர்த்துணையாக நிற்க முடிந்த தருணமொன்று எனலாமா?


இந்தத் துணுக்குறலோடு வாசிக்கும் போது பாயுமொளி நீ எனக்கு பாடலில் தொனிப்பது பெருமிதம் தான் அல்லது, குதூகலம் தான் என்று சொல்லத் தோன்றாது; அது முழுத்த துயர். அல்லது நிர்மலமான விரக்தி. என்னைப் பொறுத்தவரை அந்தத் துயர்  முற்றாக வெளிப்படுவது சைந்தவியின் பாடலில் தான் என்பேன்.


"வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நான் உனக்கு"
இந்த வரிகள் வரும் போது, மேல்ஸ்தாயிக்கு நகர்கிறது  பாடல். உள்ளே என்னவோ செய்கிறது. துயரம் வழியும் வயலின் இசை உடன் தொடர்கிறது.

"எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இல்லை நின் சுவைக்கு" என்று நெகிழும்  வரிகள் புகழ்வது கண்ணெதிரே நாயகன் பாடிக் கொண்டிருக்கும் நாயகியை அல்ல; எண்ணத்தை முழுவதுமாக நிறைத்த, நினைத்தால் மட்டுமே இனிக்கிற ஒருத்தியை.  அவள் இப்போது இல்லாதவள்; ஆனால் இப்போது இருப்பவளில் எழுந்தவள். அவளைக் கவிஞன் கண்டுகொண்ட கணம் பூரித்துப்போகிறான்.

"கண்ணின் மணி போன்றவளே, கட்டியமுதே, கண்ணம்மா" 
என்று ஆராதிக்கிறான்.

பாடல் தொடர்கின்ற போதும் இந்த சரணத்தோடு நிறுத்திவிட்டார் இசையமைப்பாளர். அவர் அனுபவித்துக் தான் இசையமைத்திருக்க வேண்டும்.  சைந்தவியின் குரலை இரசிக்கும் போது தான், துயர் தோய்ந்த இந்த வரிகளைப் பாட பெண் குரல் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறது.


கண்ணம்மா உண்மையில் யாராகவும் இருக்கட்டும். அவள் மகத்தான கவிஞன் ஒருவனை முழுவதுமாக நிறைத்து நின்ற காதலி.  உண்மையில்  பாரதியின் வாழ்வில் அவ்வாறு இருந்தவள்  எச்சமின்றி மறைந்து விட்டாள்.  ஆனால் என் கண் முன்னே, பல நண்பர்களின் வாழ்வில் கண்ணம்மாக்கள் இருந்திருக்கிறார்கள். என்ன, என் நண்பர்கள் எல்லாம் பாரதிகள் இல்லை. அதனால் அவர்களது கண்ணம்மாக்கள் முண்டாசுக் கவிஞனின் கண்ணம்மா போல அமரத்துவம் அடையவில்லை.
மேலும் வாசிக்க »

தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

1 comments
தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள
கல்வெட்டுக்களும் கற்றூண்களும்


காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன முறையிலான கற்கைகள், 1850களுக்கு பின்பே ஆரம்பமாகின. இந்தப் பின்னணியில், பிரித்தானியக் குறிப்புக்களில் திருக்கோணமலை மாவட்டத்திலும் பொலனறுவை மாவட்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப்படும் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தவிர்த்தால், இலங்கைக் கல்வெட்டியலில்  முதன்முதலாக விரிவாக ஆராயப்பட்ட தமிழ்க் கல்வெட்டு என்று தம்பிலுவில் கல்வெட்டைச் சொல்லலாம். இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் பிரித்தானிய அலுவலர் ஹியூஜ் நெவில். கண்டறியப்பட்ட ஆண்டு 1885.


1847இல் பிறந்த ஹியூஜ் நெவில், தன் 17ஆவது வயதில் பிரித்தானிய நீதியரசரின் தனிப்பட்ட செயலாளராக இலங்கை வந்தவர். இலங்கையின் பல பாகங்களிலும் சிலோன் நிர்வாக சேவை எழுதுநர், மாவட்ட நீதிபதி, உதவி அரசாங்க அதிபர் போன்ற பதவிகளை வகித்த நெவில், மிகச்சிறந்த புலமையாளர். தொல்பொருளியல், கல்வெட்டியல், வரலாறு, இனவரைவியல், சமூகவியல், மானுடவியல், விலங்கியல், தொன்மவியல், புவியியல் என்று அவரது புலமைசார் பங்களிப்பின் பட்டியல் நீண்டது. சிங்களம், தமிழ், வேடர் மொழி என்பவற்றில் நல்ல சரளம் பெற்றிருந்த நெவில், தன் அறிவுசார் கண்டறிதல்களை, "தப்ரபேனியன்" எனும் ஆய்வேடொன்றில் பிரசுரித்து வந்தார். அதில் தான் "சிலோனில் தமிழ்க் கல்வெட்டு" என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது தம்பிலுவில் கல்வெட்டு.
நெவிலின் "தப்ரபேனியன்" ஆய்வேட்டில் வெளியான கட்டுரை, 1885 ஒக்டோபர் இதழ்


அப்போது மண்ணாலான ஓலைக்குடிசையாக இருந்த தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின், ஒரு சுவரோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது இக்கல்வெட்டு. அதைப் பிரித்தெடுத்து சுத்தம் பண்ணிய நெவில், அதில் மயில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, இது ஒரு முருகன் கோவிலுக்குரியது என்ற முடிவுக்கு வந்திருந்தார். எனவே அருகில் இருந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு இக்கல்வெட்டு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.  தற்போதும், இக்கல்வெட்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலேயே வைத்துப் பேணப்படுகின்றது. 


தம்பிலுவில் கல்வெட்டு சுமார் ஐந்தடி உயரமான கற்றூண் ஒன்றாகும். அதன் ஒருபுறம் திரிசூலமும் மறுபுறம் மயிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய இருபக்கங்களிலும் முப்பத்தெட்டு வரிகளில் கல்வெட்டு பொளியப்பட்டிருக்கிறது. கல்வெட்டு வாசகத்தின் ஆரம்பத்தில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சூரியன் சந்திரன் உள்ளவரை, கல்வெட்டு சொல்லும் செய்தி நின்று நிலவவேண்டும் என்பது இதன் பொருள்.

தம்பிலுவில் கல்வெட்டின் மைப்படி,
பத்மநாதன்.சி, 2013, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, நூலிலிருந்து

கல்வெட்டு வாசகம் இது தான்:
"ஸ்ரீ சங்கபோதி பற்மரான திறிபுவனச் சக்கிறவத்திகள் ஸ்ரீ விசயவாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் ௨௰ தியதி,சிவனான சங்கரர்க் கோவிலுக்குக் கொடுத்த வோவில். இன்த தன்மத்துக்கு அகித்தம் சேதானாகில் கெங்கைக் கரையில் காரம்பசுவைக் கொந்ற பாவத்தை கொள்ளக் கடவராகவும்"

"ஸ்ரீசங்கபோதி வர்மரும் திரிபுவனச் சக்கரவர்த்தியுமான ஸ்ரீ விஜயபாகு தேவரின் பத்தாவது ஆட்சியாண்டில் வருகின்ற தை மாதம் இருபதாம் திகதி, சிவனான சங்கரர் கோவிலுக்கு வோவில் கொடுக்கப்பட்டது. இந்த அறச்செயலுக்கு யாரும் தீங்கு செய்தால் அவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவாராக" என்பது இக்கல்வெட்டின் பொருள்.

இக்கல்வெட்டு கூறுகின்ற விசயவாகு தேவர் யார் என்பதில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆய்வாளர் அமரர்.க.தங்கேஸ்வரி அவர்கள் இக்கல்வெட்டு சொல்லும் விசயவாகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த கலிங்க மாகோன் என்கின்றார். பல்கலைக்கழக வரலாற்றறிஞர்களான சி.பத்மநாதன், கா.இந்திரபாலா, ஏ.வேலுப்பிள்ளை, செனரத் பரணவிதான உள்ளிட்டோர் இவனைக் கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1510 -  1521) என்கின்றனர். பெற்ற தந்தையை மூன்று மகன்மார் மண்ணாசைக்காகக் கொலை செய்த "விஜயபாகு கொள்ளை" என்ற துயர் மிகுந்த வரலாற்றுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவன்  இவனே. 

கல்வெட்டைப் பொறித்தது ஆறாம் விஜயபாகு தான் என்பதற்கு பேராசிரியர் பத்மநாதன் கொடுக்கும் வலுவான ஆதாரங்கள் இரண்டு. ஒன்று, இக்கல்வெட்டு பொலனறுவைக் காலக் கல்வெட்டுக்கள் போல் மன்னனை கிரந்தம் கலந்து 'விஜயBபாஹூ' என்று குறிப்பிடாமல், அவன் பெயரைத் தமிழ்ப்படுத்தி 'விசயவாகு' என்று குறிப்பிடுகின்றமை. இதே மன்னனின் கொழும்பு அருங்காட்சியகத் தமிழ்க் கல்வெட்டு, இதே போல இவனை "விசயவாகு தேவர்" என்றே அழைக்கிறது.

இரண்டாவது ஆதாரம் இக்கல்வெட்டின் வரிவடிவம். இன்றைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ வளர்ச்சி பெரும்பாலும் 16ஆம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்று விட்டது. இன்றும் ஓரளவு எளிதாக வாசிக்கும் நிலையிலுள்ள இக்கல்வெட்டு 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்கிறார் அவர். அந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

இங்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் என்றால் என்ன என்று இன்று யாருக்கும் தெரியாது. நூறாண்டுகளுக்கு முன் "Monograph of Batticaloa" எனும் நூலை (1921) எழுதிய கனகரெட்ணம் முதலியார்,  வோவில் அப்போது வேவில் என்று அழைக்கப்படுவதாகவும், திருக்கோவிலுக்குத் தெற்கே சுமார் நான்கு மைல் தூரத்தில்  அது இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெவிலும் இதையே சொல்வதை மேலே காணலாம்.

ஆனால் இன்று வோவில் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாத நிலையில், அதை  இனங்காணக் கைகொடுத்தது 1695இல் வரையப்பட்ட ஒரு இடச்சு வரைபடம். அதில், திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு நீர்நிலை வரையப்பட்டு, அது "Gravet van Bouwille" - போவில் மடு என்றும், அதற்கும் தெற்கே "Bouwilipattu" - போவில்பற்று என்ற இடமொன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகே இடச்சு மொழியில் "Tamblewielle: een groot vondel met v: water"  என்று எழுதப்பட்ட வரிகள் காணப்படுகின்றன.  "தம்பிலுவில்: இங்குள்ள ஒரு பெரிய நீர்நிலை" என்பது இதன் பொருள். எனவே தம்பிலுவில் கல்வெட்டில் சிவனான சங்கரர்க் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் ஒரு நீர்நிலை என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு அல்லது கோவில் சார்ந்தோருக்கு, நீர்நிலைகளை, அல்லது அவற்றால் பாசனம் செய்யப்படும் வயல் வெளிகளைக் கல்வெட்டு பொறித்து தானம் கொடுப்பது, அந்தக்கால வழக்கம். 



Gravet van Bouwille, Dutch Map of Ceylon (1685 CE)

சங்கமன்கண்டி அருகே மனுநேய கயவாகு மன்னனால், முப்பத்திரண்டு மதகுகளுடன் இருபத்தாறு ஏரிகளை இணைத்து பெரும் ஏரி அமைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பொன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலிலும் காணப்படுகின்றது. இன்று குறித்த பகுதியில் உவர்நீரேரியாகக் காணப்படும் "தாண்டியடிக் களப்பே" இந்த "வோவில்" ஏரி ஆகலாம்.

கல்வெட்டில் மயில் பொறித்திருப்பதால், அதை முருகன் கோவிலுக்குரியதெனச் சொல்வது எத்தனை உசிதமானது என்பதை ஆராயவேண்டும். திருக்கோவில் முருகன் அப்போது மட்டக்களப்புத் தேசத்தின் பெருந்தெய்வம் என்பதால், அவனால் காக்கப்படுவதைக் குறிக்கவும் மயில் பொறிக்கப்பட்டிருக்கலாம். மயிலை கோட்டை அரசின் அல்லது அப்போதைய மட்டக்களப்புச் சிற்றரசின் குலச்சின்னம் என்று கருதவும் இடமுண்டு.

ஒருவேளை கல்வெட்டுச் சொல்லும் "சிவனான சங்கரர் கோவில்" என்பது இன்றைய தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் அமைவிடத்தில் இருந்து பின் அழிந்தும் போயிருக்கலாம். பேராசிரியர்கள். கா.இந்திரபாலாவும் சி.பத்மநாதனும் இந்தச் சந்தேகத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊகத்துக்கு எதிரான இன்னொரு சான்றும் கிடைக்கிறது. திருக்கோவில் ஆலயத்தில் இன்று பேணப்படும் நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று சதுரப்பலகை வடிவில் கிடைக்கும் திருக்கோவில் கல்வெட்டு. "திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில்" என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடுகின்ற மிகப்பழைய ஆவணம் அது தான். 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞான சங்கரிகள் ஸ்ரீ விசயவாகு தேவர்க்கு யாண்டு ௰வதில் தை மாசத்தில் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் குணர் மேற்கு..." என்ற வரிகளின் பின் அது சிதைந்திருக்கிறது. வரிவடிவம், கல்வெட்டு வாசகம், பொறித்த மன்னன் முதலிய பல விடயங்களிலும் தம்பிலுவில் கல்வெட்டை ஒத்த  இக்கல்வெட்டில் வருகின்ற "சிவஞான சங்கரிகள்" என்பதை தம்பிலுவில் கல்வெட்டில் வரும் "சிவனான சங்கரரோடு" ஒப்பிடலாம்.

பேராசிரியர் பத்மநாதன் இதற்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்கிறார். சிவஞான சாகரி என்பது விஜயபாகு தேவரின் பட்டம் என்றும் கல்வெட்டைப் பொறித்தவர் சிவஞானசாகரி என்பதை, சிவஞான சங்கரி என்று தவறாகப் பொறித்துவிட்டார் என்றும் அவர் சொல்கிறார். தன் வாதத்துக்குத் துணையாக அவர் சொல்வது, ஆறாம் பராக்கிரமபாகுவின் முன்னேஸ்வரச் சாசனமொன்று அம்மன்னனை "சைவஞான மகோததி" என்று அழைப்பதாகும். மகோததி, சாகரம் இரண்டுமே பெருங்கடலைக் குறிக்கும். சிங்கள மன்னர்கள் பௌத்தம் சார்ந்த தானங்களில் "சங்கபோதி" என்றும், சைவம் சார்ந்த கொடைகளில் இப்படி "சிவஞானப்பெருங்கடல்" என்றும் தம்மைக் குறிப்பிட்டிருந்தால், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்கிறார் அவர்.

ஆனால் தம்பிலுவில் கல்வெட்டை வாசித்த யாருமே இரு கல்வெட்டுக்களிலுமுள்ள இந்த இரு ஒத்த சொற்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. 'சங்கரி' என்று முடிகின்ற ஆண்பால் பெயர்களைக் கொண்டிருந்த மட்டக்களப்பு வன்னியச் சிற்றரசர்கள் பற்றி ஐரோப்பியர் குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இக்கல்வெட்டு, அது பொறிக்கப்பட்ட காலத்தில் ஆண்ட கோட்டைப் பேரரசன் விஜயபாகுவையும், அவனுக்குக் கீழ் இருந்த உள்ளூர்ச் சிற்றரசன் சிவஞான சங்கரியையும் குறிப்பிடலாம் என்பது ஒரு ஊகம்.

அல்லது தம்பிலுவில் கல்வெட்டிலுள்ள சிவனான சங்கரர் என்பதையும் சிவஞான சங்கரி என்றே வாசித்து, அது ஒரே மன்னனின் பட்டமே என்று அமைதி காணலாம். இவ்வாறு வாசிப்பதே சரி என்றால், இக்கல்வெட்டும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரியது தான் என்று உறுதிப்படுத்த முடியும்.


சரி, இந்தக் கல்வெட்டில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? வெறுமனே ஒரு நீர்நிலையை தானம் செய்வதைச் சொல்லும் ஒரு கல்வெட்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் தான் என்ன?

அவசியம் இருக்கிறது. இந்தக் கல்வெட்டின் முதலாவது முக்கியத்துவம் ஒரு சைவக்கோவிலுக்கு இந்தக் கொடையைத் தமிழில் பொறித்த மன்னன்  விஜயபாகு எனும் சிங்கள அரசன் என்பது. இரண்டாவது முக்கியத்துவம், கோட்டை அரசனின் கை, கிழக்குக்கரையின் எல்லை வரை ஓங்கியிருந்தது என்பது. 

போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிந்தைய ஆவணங்களின் படி, கீழைக்கரையின் மட்டக்களப்பு வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் கீழ் திறைசெலுத்தி வரும் சிற்றரசுகளாகவே இருந்து வந்தன. அதற்கு முன் அவை என்னவாக இருந்தன என்ற விபரம் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த வரலாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மட்டும் நம்புவது நம்மைத் தவறாக வழிநடத்திவிடும்.

பொலனறுவை அரசு காலத்தில் கிழக்கு உரோகணமாக இருந்த மட்டக்களப்பு நாடு, முதலாம் விஜயபாகுவிலிருந்து  ( 1072 –1110)  மகா பராக்கிரமபாகு  (1123–1186) வரையான மன்னர்களின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தது என்பது, மகாவம்சத்திலிருந்து தெரிகிறது. பின்பு தெற்கே நகர்ந்த தம்பதெனியா, கம்பளை சிங்கள அரசுகளின் காலங்களில்  இங்கு யார் ஆண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. நம் ஊகம் சரி என்றால், சோழராட்சியின் எச்சங்களான வன்னியர்கள் அப்போது சுதந்திரச் சிற்றரசர்களாக இங்கு இருந்து வந்தார்கள் என்று கொள்ளலாம்.

ஆனால் 1546இல் "மட்டக்களப்பு" என்ற தனி அரசை வரலாற்றுலகுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்யும் போர்த்துக்கேயப் பாதிரியார் சைமாவோ கோயம்பரா, கோட்டை அரசனிடமிருந்து தமது அரசை விடுவிக்கும் படி மட்டக்களப்பு மன்னன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததை எழுதியிருக்கிறார். அப்போது கண்டி அரசு முற்றாக வலுப்பெற்று எழவில்லை என்பதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கவேண்டும். கோயம்பரா சொல்வதை உறுதிப்படுத்த நமக்குக் கிடைக்கும் இன்னொரு சான்று தான் தம்பிலுவில் கல்வெட்டு.

கோட்டை அரசானது, விஜயபாகுவின் மாயாதனு (சிங்களத்தில் மாயாதுன்னை) முதலிய மூன்று மைந்தர்களால், சீதாவாக்கை, இறைகமம், கோட்டை என்று மூன்றாகத் துண்டாடப்படுவதற்கு முன்பு, அதன் கிழக்கு எல்லை, வங்காள விரிகுடா வரை நீண்டிருந்ததையே தம்பிலுவில் கல்வெட்டுச் சொல்கின்றது. இக்கல்வெட்டைப் பொறித்து குறைந்தது ஐந்தாண்டுகளுக்குள் விஜயபாகு மன்னன் கொலை செய்யப்படுகிறான். அப்போதைய கோட்டை அரசின் கிழக்கு அந்தத்தில் அவன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது, அரசியல் குழப்பங்கள் நிறைந்த அந்தக் காலத்தில், போர்த்துக்கேயருக்கோ தன் மக்களுக்கோ ஏதோ செய்தியைச் சொல்லத் தான் என்று தோன்றுகிறது. அதை இன்றுள்ள தலைமுறையினருக்கும் சொல்ல முயன்றுகொண்டிருக்கும் இந்த முப்பத்தெட்டு வரிகளைக் கொண்டாடுவதில் என்ன பிழை?


ஆறாம் விஜயபாகு எப்போது சரியாக ஆட்சிபீடமேறினான் என்பது தெரியவில்லை. குறிப்புக்கள் 1507, 1509, 1513 ஆகிய மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. அவன் குறைந்தது 10 ஆண்டுகள் அரசு புரிந்திருக்கின்றான் என்பதாலும், 1521இல் தன் சொந்த மக்களால் கொலையுறுகிறான் என்பதாலும், 1513ஆமாண்டு பொருத்தமாக வரமுடியாது. ஏனைய இரண்டில் எது சரியாயினும் தம்பிலுவில் கல்வெட்டுக்கு இன்று வயது 500 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது. அதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் 1509 தான் ஆறாம் விஜயபாகுவின் சரியான பட்டாபிஷேக ஆண்டு என்றால், இன்று தான் அந்த நாள்.  அப்படியே ஓடிப்போய் 2020 பெப்ரவரி மூன்றாம் திகதி பஞ்சாங்க நாட்காட்டியின் தமிழ்த் தேதியைப் பாருங்கள். தை மாதம் 20ஆம் திகதி! விசயவாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20ஆம் திகதி. சரியாக 501 ஆண்டுகள்! ♥ 


காற்றுப் புகாத ஒரு அறையில், கொங்கிரீட்டைக் கொட்டி அதில் இனிமேல் என்றுமே வாசிக்கமுடியாதபடி நட்டு வைத்துப் பாதுகாக்கிறோம் ஒரு பெருஞ்சொத்தை! அறம் மட்டுமல்ல, அறச்செயலைப் பொறித்த சாசனமும் புனிதமானதே. "இந்த தர்மத்துக்கு அஹிதம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையக் கடவராகவும்" என்று இந்தக் கல்வெட்டு சபிப்பது யாரை? வீண்பெருமை மாத்திரமே பேசிக்கொண்டு, ஆனால் பெருமைக்குக் காரணமான பொக்கிஷங்களைக் கேட்பாரற்று  குப்பையாகப் போட்டு வைக்கும் நம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே அல்லவா?
மேலும் வாசிக்க »

ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

0 comments

மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.
 வெலிம்பே ஹெல


வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள். 

பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம்
(Credits: lakdasun.lk)

இந்தத் தலையணியே சில கிறிஸ்தவப் பிரிவுகளில் மதகுருவின் முக்காடு

இப்போது அதற்கென்ன என்று கேட்கிறீர்கள் இல்லையா? சொல்கிறேன் பொறுங்கள். இலங்கையின் பெரும்பாலான மலைமுகடுகளுக்கு ஐரோப்பியப் பெயர் ஒன்று இருக்கிறது. மொனராகல்லுக்கு வடகிழக்கே அமைந்திருப்பது 570 மீ உயரமான கோவிந்த ஹெல எனும் மலை. மகாவம்சத்தில் கோவிந்தஷிலா என்று குறிப்பிடப்பட்ட இம்மலையை கீழைக்கரைத் தமிழர்கள் கழிகாம மலை என்று அழைத்தார்கள். அதன் ஆங்கிலப்பெயர் வெஸ்ட்மினிஸ்டர் அபே (Westminister Abbey). இலண்டன் மாநகரிலுள்ள பெருந்தேவாலயம் ஒன்றின் பெயர் அது.

கழிகாமமலை -  Westminister Abbey

கழிகாம மலைக்கு கிழக்கே அமைந்திருப்பது கொந்துருஹெல என்கின்ற 348 மீ உயரமான மலை. அதற்கு ஆங்கிலத்தில் அகனிஸ் பீக் (Aganis Peak) என்று பெயர். பொத்துவில்லுக்கு மேற்கே உள்ள நிலக்கல் ஹெலவின் (194 மீ) ஆங்கிலப்பெயர் சேடல் பீக் (Saddle Peak). குதிரைச் சேண வடிவ மலை. இதே பெயரில் ஒன்று அந்தமான் தீவுகளிலும் இருக்கிறது. இலங்கையின் உயரமான மலைகளில் ஒன்றான நமுனுகுலத்தின் ஆங்கிலப்பெயர் ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills). ஜூபிலி ஹில்ஸ் இங்கிலாந்திலும் உள்ள மலை. அவ்வளவு ஏன், இலங்கையில் யாழ் குடாநாடு தவிர்த்து, தெற்கே பெரும்பாலான பாகங்களில், மேகமூட்டமில்லாத நாளில், இலகுவாகக் காணக்கூடிய சிவனொளிபாதமலையை சீனிக்குவியல் - Sugarloaf என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே பெயரில் ஒரு மலை பிரேசிலில் இருக்கிறது.



ஏன் வெள்ளையர்கள் இப்படி மலைகளுக்கெல்லாம் பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்கள்? அவற்றில் பெரும்பாலான பெயர்கள் ஏன் தங்கள் சொந்த அல்லது தாங்கள் குடியேறிய இன்னொரு நாட்டின் மலைகளின் பெயராக இருந்தது?

அதற்கு முன் இன்னொரு கேள்வி. வானூர்தி இல்லாத 1500களில் ஐரோப்பியர் எப்படி இலங்கைக்குள் நுழைந்தார்கள்?  திசைகாட்டிகள், வரைபடங்கள், துறைமுக கலங்கரை விளக்கங்கள் மூலம். சரி. மூன்றும் இல்லாத - கிடைக்காத இன்னும் பழைய காலத்தில்? அதிலும் சுற்றிவர வெறும் தண்ணீரே இருக்கும் நடுக்கடலில்?


தரைத்தோற்றங்கள்! மலைகள், சமநிலங்கள், கழிமுகங்கள், முனைகள், குடாக்கள். கரையோரத்தில் இவற்றைப் பார்த்துத் தான் கடற்பயணிகள் கடலில் தங்கள் அமைவிடம் சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். உலகின் மிகப்பழைய துறைமுகங்கள், நதிகளின் கழிமுகங்களிலேயே அமைந்திருந்தது ஆழம் முதலிய அனுகூலங்களைக் கண்டுகொண்டதால் மட்டுமல்ல; ஆற்றின் கழிமுகங்களை கடலிலிருந்தே இலகுவாக இனங்காணலாம் என்பதாலும் தான். நம் நாட்டின் இயற்கைத் துறைமுகம் திருக்கோணமலை வளர்ச்சி கண்டதும் அதன் அருகில் ஓங்கி நின்ற கோணமாமலை எனும் இடக்குறியால் (Landmark) தான்.

பழைய கடலோடிக் குறிப்புகளில் இப்படி மலைகளை அடையாளமாக வைத்து அவர்களது சேருமிடங்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பாலான பிரித்தானியக் குறிப்புகளில் வரைபடங்களின் துணையுடன் இந்த மலைகளையும் தாங்கள் சென்று சேரும் இடங்களையும் கண்டறிவது எப்படி என்பதை அகலாங்கு நெட்டாங்கு குறிப்புகளுடன் பதிவு செய்திருக்கிறார்கள். 


இந்த மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வரலாற்றுச் செய்தி இடச்சுக் குறிப்புகளில் கிடைக்கிறது. ஒல்லாந்தர்கள் முதலில் இலங்கைக்கு வந்தது மட்டக்களப்புக்கு என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி வந்த ஒல்லாந்தர்கள் முதலில் மட்டக்களப்பென்று நினைத்து தவறாக வேறொரு இடத்துக்குத்தான் சென்றார்கள். திருக்கோவில் முருகன் ஆலயம்! அதற்குக் காரணம் இந்த மலைகள் ஆடிய ஆள்மாறாட்டம் தான்.


பட்டேவியாவில் (இந்தோனேசிய நகரொன்று) சோழமண்டல மற்றும் விஜயநகர வணிகர்களை 1600ஆமாண்டு சந்திக்கிறார்கள் ஒல்லாந்து அதிகாரிகள் சிலர். இலங்கைத்தீவில் கறுவா கிடைக்கிறது, ஆனால் அத்தீவைச் சுற்றிவர போர்த்துக்கல் பிடித்துவிட்டது. கிழக்குக்கரையில் மட்டக்களப்பு ஊடாக மட்டுமே இலங்கை மன்னனைத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அறிந்து கொள்கிறார்கள் அவர்கள்.

1602ஆமாண்டு கீழைக்கரைக்கு வரும் ஒல்லாந்தர்கள் மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து தென்னந்தோப்புக்கு மத்தியில் நின்ற திருக்கோவில் முருகன் ஆலயம் அருகே கப்பலை விடுகிறார்கள். அங்கிருந்த மக்கள் மட்டக்களப்பு இன்னும் வடக்கே இருப்பதைச் சொல்லி ஒரு ஆளையும் துணையாக அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக சில கத்திகளை வழங்கிவிட்டு தாங்கள் மட்டக்களப்பு வந்து சேர்ந்ததை ஒல்லாந்தர்கள் எழுதியிருக்கிறார்கள். 


அவர்கள் மட்டக்களப்பு என்று சொல்வது இன்றைய சம்மாந்துறை நகர் என்பதும், அவர்கள் எதிர்பார்த்து வந்த கழிமுக முகத்துவாரம் காரைதீவின் கரைச்சைக் களப்பு என்பதும் இங்கு மேலதிகமாக உங்களுக்கு நினைவூட்டவேண்டிய விடயங்கள். ஆனால் முக்கியமாகச் சொல்லவேண்டியது என்ன தெரியுமா? திருக்கோவிலில் உள்ளூர் மக்களைச் சந்தித்த ஒல்லாந்தர்கள் முதலில்  கேட்கும் கேள்வி "கெபல்லோ டி ப்ரேட் (Capello De Frade) மலையைக் காட்டுங்கள்" என்பது தான். அவர்களும் அப்படி ஒரு மலையைக் காட்டுகிறார்கள். அது ப்ரையர்ஸ் ஹூட் என்பதன் போர்த்துக்கேய  வடிவம். ஆம் வெலிம்பே ஹெல மலையைத் தான் காட்டும் படி கேட்கிறார்கள். அது ஏன்?


கடலோடிகளுக்கு நிலக்குறிகளைக் காட்டும் அதே தரைத்தோற்ற அம்சங்கள் தான். மட்டக்களப்புக்கு முதன்முறையாக வந்த ஒல்லாந்தருக்கு அறிந்திருந்தது இரண்டே இரண்டு விடயங்கள். அங்கு ஒரு கழிமுகம் ஒன்று இருக்கிறது என்பதும், பாதிரியாரின் முக்காடு போன்ற மலை ஒன்று மட்டக்களப்புக்கு மேற்கே தென்படும் என்பதும் தான். அந்த இரண்டையும் அடையாளம் வைத்துத் தான் இங்கு வந்திருக்கிறார்கள் ஒல்லாந்தர்கள் என்பது அவர்களது விவரணையிலிருந்து தெரிகிறது. (சம்மாந்துறைக்கு அருகே கடலில் இருந்த கழிமுகம், காரைதீவின் கரைச்சைக் களப்பு முகத்துவாரம். அது சொரட்ஜன் கொண்டாவே என்ற பெயரில் பின்பு ஒல்லாந்தரின் கிழக்குக்கோட்டையாக இருந்தது. திருக்கோவிலுக்கு அவர்கள் தவறாக கப்பலை விடுவதற்கு, அதன் வடக்கே இருக்கும் பெரியகளப்பு முகத்துவாரமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.)


பனிமூட்டமில்லாத நாளில் திருக்கோவிலில் வெலிம்பே ஹெல தென்படும். என்றாலும் கடலில் நின்று பார்த்த போது, ஒல்லாந்தர்களை ஏமாற்றிய சூத்திரதாரி இன்னொருவர். திருக்கோவிலுக்கு மேற்கே தெரிவது வடினாகல் மலை. கிட்டத்தட்ட வெலிம்பே எல்லையின் உயரமும் வடிவமும் கொண்ட இதன் ஆங்கிலப்பெயர் ஃபோல்ஸ்ஹூட் (False Hood). ஒல்லாந்தருக்குப் பிறகு வந்த பிரித்தானியர்கள் வடினாகல்லைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் தெரியுமா?

"பிரையர்ஸ் ஹூட்டுக்குத் தெற்கே, ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்கு வடக்கே ஒரு மலை இருக்கிறது. அதற்குப் பெயர் ஃபோல்ஸ் ஹூட். தூரத்தில் நின்று பார்க்கும் போது பொய்யாக பிரையர்ஸ் ஹூட் போல தோற்றமளிப்பதால் அதற்கு ஃபோல்ஸ் ஹூட் என்று பெயர். இதைப் பார்த்து தவறாக பிரையர்ஸ் ஹூட் என்று எண்ணி விடக்கூடாது."

False Hood - வடினாகலை, மேற்குப்புறமிருந்து பார்க்கும் போது போலி முக்காடு.

ஆம். இவர் தான் ஒல்லாந்தரை தடுமாறச் செய்த சூத்திரதாரிகளில் முதன்மையானவர். போலி பாதிரியாரின் முக்காடு - வடினாகலை.  ஃபோல்ஸ் ஹூட்டால் முதலாவதாக ஏமாற்றப்பட்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். போலி பாதிரியாரின் முக்காடான ஃபோல்ஸ் ஹூட் அமைந்திருப்பது திருக்கோவிலுக்கு மேற்கில். உண்மையான பாதிரியாரின் முக்காடு பிரையர்ஸ் ஹூட் அமைந்திருப்பது சம்மாந்துறைக்கு மேற்கில். ஃபோல்ஸ் ஹூட்டையும் பெரிய களப்பு முகத்துவாரத்தையும் பார்த்து ஏமாந்து தான் அன்றைய மட்டக்களப்பு என்று நினைத்து திருக்கோவில் வந்து சேர்ந்தார்கள் ஒல்லாந்தர்கள்.


மலைகள், ஆறுகள், இயற்கையின் ஒவ்வொரு கோட்டோவியங்களும் எத்தனை முக்கியமானவை? இன்று நாம் மலைகளைப் பார்ப்பதில்லை.  விண்மீன்களை இரசிப்பதில்லை. சூழல் மீது அக்கறை என்பதே இல்லை. இந்த சுற்றாடல் அறிவு கிஞ்சித்தும் இல்லாமல்,  வேலை, படிப்பு, உறக்கம் என்று இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம் முன்னோர் அனுபவித்த  எத்தனையைத் தான் உண்மையில் இழந்து கொண்டிருக்கிறோம்?

மேலும் வாசிக்க »

தந்தனத்தோம்

1 comments



தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால் உங்கள் ஏழு பிறவியும் நலன் பெறும்.

அன்னையரால் உலகம் ஆளப்பட்ட பழங்காலத்தில் இது  நடந்தது. பஃறுளி ஆறு பாயும் பன்மலை அடுக்கத்து உச்சியில் பேரன்னை ஒருத்தியால் ஆளப்பட்ட குமரி நாடு இருந்தது. அவள் ஆட்சியில் மண் செழித்தது. மாதர் சிறந்தனர். மழலைகள் திகழ்ந்தன. ஆனால் பகலவனையும் பால்நிலவையும் கொண்டு அவர்கள் அளந்த காலத்தில் அணுவளவு தவறு இருந்தது. 

பேரன்னை மேற்குக் கடல் தாண்டி வந்த வணிகர்களிடமிருந்து திருத்திய வான் கணிப்பை தெரிந்து கொண்டாள்.  அவர்கள் விண்மீன்களைக் கொண்டு காலம் கணித்தனர். அவள் உருட்டிய சோழிகளில் எழுந்து எதிர்காலத்தை சொல்லி அச்சமூட்டின கோள்கள். கிழக்கே நாகர்கள் வாழும் பெரும் தீவில் அவளது சந்ததியர் எஞ்சவேண்டும் என்று கூறின நாள்கள்.  

பேரன்னை தன் நாட்டின் ஆறு குலங்களை ஆளும் ஆறு அன்னையருக்கு செய்தியைச் சொன்னாள். பேரன்னையின் ஆணையின் படி, ஆறு வள்ளங்களில்  ஆறு குடியினர்  கிழக்கே புறப்பட்டனர். பேரன்னை கணித்தபடி, ஆறு வான் நட்சத்திரங்களில் பிறந்த இளங்கன்னியரே அந்த ஆறு வள்ளங்களைத் தலைமை தாங்கிச் சென்றனர். அனுராதை, உரோகிணி, அசுவினி, உத்தரை, மிருகசீரிடை, சுவாதி என்பது அவர்கள் பெயர். ஏழாவது ஒருத்தி வானிலிருந்து இறங்கி வருவாள் என்றும் அவள்  அரசமரத்தை குலச் சின்னமாகவும் சுளகைக் கொடியாகவும் கொண்டிருப்பாள் என்றும், அவளே பின்னாளில் நாகநாட்டின் முதல்வி ஆவாள் என்றும் பேரன்னை கணித்திருந்தாள். 


பஃறுளி ஆற்றங்கரையில் வாழ்ந்த குமரி நாகர் குலத்தில் உதித்த இருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்தனர். ஆறு வள்ளங்களுக்கு முன்னே சென்ற குமரிநாகன் கேதன், தம் மூத்தோர் சொன்ன கடல் வழியை விண்மீன்களைக் கொண்டு உறுதி செய்து, நாகநாட்டின் மேற்குக் கரையை அடையாளம் காட்டினான். அங்கு  மூன்று குடியினர் இறங்கிக் கொண்டனர். செம்பு நிறத்தில் அங்கு மண் இருப்பதைக் கண்டு வியந்து அந்த இடத்தை "தாமிரவண்ணம்" என்று அழைத்தார்கள். அங்கிருந்து தள்ளி பால் நிறத்தில் ஓடிய நதியை "பாலாவி" என்றனர்.

ஆறு வள்ளங்களுக்குப் பின்னே சென்ற குமரி நாகனான கோணன், நாகர்களின் மூத்தோரான அசுரர்கள் வாழும், நாகத்தீவின்  கிழக்குக் கரைக்கு, ஏனைய மூன்று குடியினரை அழைத்துச் சென்றான். அந்த இடம் மாட்டின் காது போன்று வளைவாக இருந்ததால் அது கோகர்ணம் எனப்பட்டது. அங்கு கடலில் கலந்த நதி அசுரரின் மூதாதை மாவலியின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது. 

குமரியின் குடிகள் கோகர்ணத்தில்   இறங்கிய போது,  பத்து சகோதரர்களுக்குப் பிறந்த "இராவண்ணர்" எனும் அசுரக்குடியினர் அங்கிருந்த மலைச்சாரலில் வாழ்ந்து வந்தனர்.  பத்து சகோதரர்களுக்கு பிறந்ததால், அவர்களுக்கு பத்தர்கள் என்றும் பதர்கள் என்றும் பெயர் இருந்தது.

பத்தர்களில் மூத்த சகோதரனுக்குப் பிறந்த குலத்தின்  தலைவன் தசைமுகன் குமரியின் மக்களை தன் நாட்டில் குடியமர அனுமதிக்கவில்லை. ஆனால் மாயங்கள் அறிந்த குமரிநாகன் கோணன்  கால் பெருவிரலால் எற்றி தசைமுகனைக் கொன்றான்.  தசைமுகனின் பேருடல்  அங்கிருந்த மலையொன்றின் அடிவாரத்தில் தாழியில் புதைக்கப்பட்டது. அங்கு  ஏனைய ஒன்பது சகோதரர்களின் வழிவந்த குலத்தாரின் ஒன்பது தலைவர்களும் அமர்ந்து மூன்று நாள் யாழ் இசைத்து துக்கம் கொண்டாடினார்கள்.  அவர்களது குலவழக்கப்படி இராவண்ணர் தங்கள் மூத்த தலைவனாக தசைமுகனை  வென்ற கோணனையே ஏற்றுக்கொண்டனர். குமரிக்குடிகளால் அம்மலை அன்றிலிருந்து கோணமலை என்று அறியப்பட்டது.


நட்சத்திரங்கள் சொல்வதன் படி நடக்கவேண்டும். இறங்கிய ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு குலத்தினரை  குடிபதிய விடுத்து ஏனைய குடிகள் நாகத்தீவின் உள்ளே நுழைய வேண்டும் என்பது பேரன்னையின் ஆணையாக இருந்தது. முடப்பனைக் குலத்தில் பிறந்த தேள் கொடியைக் கொண்ட மூத்தவள் அனுராதையும், குதிரைக் குலத்தில் பிறந்த யாழ் கொடியைக் கொண்ட மூன்றாமவள் அசுவினியும் பாலாவியின் கரை வழியே உள்ளே நுழைந்தனர்.

பாம்பைக் கொடியாகக் கொண்ட சூரியக் குலத்து  உத்தரை தன் குடியினரை தாமிரவண்ணத்திலேயே நிறுத்திக் கொண்டாள். அவர்களை அங்கிருந்த நாகர் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பதினோராம் மாதத்தின் அமாவாசை நாளில் நாகத்தீவு நாகர்கள் பாலாவியில் நீராடி தங்கள் இறைவன் மணிநாகனுக்கு நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. அதைத் தூய இருளில் நட்சத்திரங்களை வணங்கும் மகாதீர்த்த விழாவாக உத்தரை மாற்றியமைத்தாள்.   அதனால் அவ்விடம் மகாதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. 

கீழைக் கரையின் கோகர்ணத்தில், இராவண்ணர்கள் கண்டடைந்த வெந்நீரூற்றுக்களின் அருகே சந்திரக் குலத்தில் பிறந்த கன்னி மிருகசீரிடை குடிபதிந்தாள். இராவண்ணரை வென்ற அடையாளமாக அவளது மூன்று மீன் கொடி கோண மலையில் ஏற்றப்பட்டது. எனவே அதற்குத் திரிகோணம் என்றும் மச்சமலை என்றும் பெயர் உண்டானது. அவளிடம் விடைபெற்று, சக்கரத்தைக் குலச்சின்னமாகவும், உருளையைக் கொடியாகவும் கொண்ட உரோகிணியும், விளக்குக் குலத்தில் நுகத்தடிக் கொடியைக் கொண்ட சுவாதியும் மாவலிக் கரை வழியே உள்ளே நுழைந்தனர். 

நான்கு மாதங்களின் பின், உள்நுழைந்த நான்கு குலத்தினரும், பாலாவியாற்றின் கரையின் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். விண்மீன்களைக் கண்டு பேரன்னை விடுத்த ஆணைப்படி மூத்தவள் அனுராதை அங்கேயே குடிபதிந்தாள். தொடர்ந்து விண்மீன்கள் சொன்னபடி, மூன்றாமவள் அச்சுவினி வடக்கேயும் உரோகிணியும் சுவாதியும் தெற்கேயும் சென்றனர். அவர்களெல்லோரும் உள்ளூர் நாகர்களுடன் கலந்து குமரிநாட்டுக் குருதியை மண்ணில் நீடிக்கச் செய்து விட்டிருந்தனர்.


தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, கேளுங்கள். அனுராதையின் பரம்பரையில் பின்பு அங்கு அனுராதைபுரம் என்றோர் பெருநகரம் உண்டானது. ஒரு கடற்கோளில் குமரி நாடு அழிந்தபிறகும் இரண்டாயிரம் ஆண்டுகள் அவள் நகரம் பலரும் புகழ செழிப்போடு மிளிர்ந்தது.

வடக்கே மணிபல்லவம் எனும் தீவில் குடியேறி வாழ்ந்த குதிரைக் குலத்து அச்சுவினி, தன் இறுதிக்காலத்தில் "இவை அனைத்தும் மாறும். மாறியதை மாற்ற மீண்டும் பிறப்பேன்" என்று வஞ்சினமுரைத்து இறந்தாள். அவளுக்கு, குதிரை முகத்துடனான தோற்றத்தில் சிலை வடித்து, தம்பலை என்ற இடத்தில் பள்ளிப்படை அமைத்தனர். அச்சுவினியின் சந்ததியில் தோன்றிய யாழ்க்கொடியினர் வாழ்ந்த இடம் பின்பு சிங்கை என்று அறியப்பட்டது.  

தெற்கே நாகத்தீவின் தென்முனையில் உரோகிணியின் வம்சத்தார் அமைத்த தேசம் உரோகண நாடு என்றானது. உரோகிணி வயிற்றில் பிறந்த கந்தன், குமரி நாட்டு வழக்கப்படி அவள் தமையன் நீலத்தேவனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தான். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற போது, பத்தர்களில் கடைசிச் சகோதரன் வம்சத்தில் வந்த கதிரர் எனும் குலத்தாரின் நாட்டு எல்லையைக் கடந்த கந்தன் பின்பு திரும்பி வரவில்லை. கதிரர் குலப் பெண்ணொருத்தியிடம் மயங்கி கந்தன் கதிரை நாட்டில் வாழ்ந்து வருவதாக நீலத்தேவனுக்குச் செய்தி வந்தது. தான் வளர்த்த மருகன், குலமரபைக் காக்காத பழி தீர்க்க, நீலத்தேவன், உரோகிணியின் நாட்டுக்குள் நுழையாமல் கடலோரத்திலேயே நோன்பிருந்து மறைந்தான். அங்கு  குலச்சின்னமான சக்கரத்தை நிறுவி அவனைத் தம் தெய்வமாகக் கொண்டனர் உரோகிணி நாட்டினர். தேவன் உறைந்த அவ்விடம் தேவனுறை என்று பின்னாளில் அறியப்பட்டது. 

ஆறாமவள் சுவாதி தென்கிழக்கே சென்றாள். அவள் சந்ததி செழித்த ஊர் தெற்குவாவி மண்டலம் என்று அறியப்பட்டது. அவளது பரம்பரையில் பிறந்த "உதியன்" என்பவனது காலத்தில் தான், குடியைக் காக்கும் பொறுப்பு பெண்களிடமிருந்து ஆண்களுக்கு கைமாறியது. உதியனுக்கு பிறகு தந்தை வழியில் கைமாறப்பட்ட ஆட்சி உரிமையைப் பெற்ற சுவாதியின் வம்சத்தவர்கள் "உத்தியாக்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

தெற்குவாவியின் மக்கள் உதியனை சுவாதியின் மைந்தர் என்ற பொருளில் 'குமாரர்' என்று அழைத்தார்கள். குமாரரின் மூத்த  மகன் நாதன் காலத்திலே தான் நீர்நிலைகளுக்கு அணைக்கட்டு கட்டி நீர் தேக்கி வேளாண்மை செய்யும் நடைமுறையை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவ்வாறு தெற்குவாவியில் நாதன் அமைத்த முதல் அணைக்கு நாதனணை என்று பெயர்.

பேரன்னை கணித்தபடி, நெடுங்காலத்துக்கு பிறகு நாகத்தீவின் வேறெங்கோ ஏழாமவள் வந்திறங்கினாள். அரசு மரத்தைக் குலச்சின்னமாகவும், முறத்தைக் கொடியாகவும் கொண்ட அவள் பெயர் விசாகை. பேரன்னை சொல்லியிருந்த படி  வந்திருப்பது அவள் தான் என்பதை அவள் கையிலும் காலிலும் அணிந்திருந்த சிலம்புகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். பத்தர்களே அவளை முதலில் அடையாளம் கண்டு கொண்டதால் விசாகையைப் பத்தினி என்றும் அழைத்தார்கள். நாகத்தீவின் நடுவிலிருந்த சமனொளி மலையில் குடியிருந்த அவள், வானத்திலிருந்தே இறங்கியிருக்க வேண்டும்  என்று எல்லோரும் நம்பினர். அங்கு கல்லில் பதிந்திருந்த பாதங்கள் அவளுடையவை என்றும் மணிநாக தெய்வத்துடையவை என்றும் கதைகள் உருவாகி வழிபாட்டுக்கு உரியவை ஆயின.

விசாகையால் நாகநாடு முழுவதும் ஆளப்பட்ட போது கோகர்ணத்தில் மாட்டை குலச்சின்னமாகவும் நுகத்தடியைக் கொடியாகவும் கொண்ட பரதர் என்னும் குலத்தார் வந்து இறங்கினர். பரத குலத்தாரை வடமொழியில் ஆரியர் என்றும் தமிழில் ஆயர், ஐயர் என்றும் அழைத்தார்கள். கோகர்ணத்து பத்தர்களின் ஐயர் - மூத்தோர் என்ற பொருளில் அவர்கள் பத்தண்ணமார் என்று அழைக்கப்பட்டார்கள். கால்நடை வளர்த்து ஊரூராகத் திரிந்த ஆய் குலத்து பத்தண்ணமார் பின்னாளில் வதனமார் என்று அழைக்கப்பட்டார்கள். 
 
ஆயரின் தெய்வம் அவ்வை எனும் அன்னை. தங்கள் மூதன்னையரை அவ்வை என்று அழைக்கும் வழக்கம் ஆயருக்கு இருந்தது. சுவாதிக்கும் அவ்வைக்கும் ஒரே கொடி.  வதனமார் தங்கள் அதே கொடி கொண்ட சுவாதியின் நாடு பற்றிக் கேள்வியுற்று அங்கு சென்று தங்கலாயினர். வதனமாரோடு வந்த பாணர்கள் அவ்வையே சுவாதி, சுவாதியின் மறுபிறப்பே விசாகை என்று தெற்குவாவி மண்டலத்தில் பாடிப் பரவினார்கள். 

இறுதிக்காலத்தில் வேங்கை மரத்தடியில் துறவு பூண்டு விண்ணேகிய விசாகையை பத்தினித்தெய்வம் என்று போற்றினர் நாகத்தீவு மக்கள். விசாகையும் அவள் ஆறு சகோதரிகளும் மீண்டும் மீண்டும் பத்தினித்தெய்வங்களாகப் பிறப்பார்கள் என்று நாகத்தீவில் கதைகள் உலாவத்தொடங்கின. அந்தக்கதைகள் சொன்னபடியே நடந்தது. சப்தபத்தினியர் மீண்டும் உதித்தார்கள்.  ஏழு பத்தினியர் வாழ்க. ஏழு அன்னையர் வாழ்க. 

தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, நீங்கள் இனிதே கேட்டது உலகம் மறந்து போன ஏழு அன்னையரின் கதை.  தெற்குவாவி நாட்டை தோற்றுவித்த சுவாதியம்மையின் கதை. குமார தெய்வத்தின், உத்தியாக்களின்,  வதனமாரின், சத்பத்தினியரின் கதை. சுவாதியம்மையை போற்றுங்கள். அவள் வீற்றிருக்கும் நாதனை வெளியைப் பாடுங்கள். நான்கு திக்குகளையும் பாடுங்கள். இந்த நாகத்தீவைப் பாடுங்கள்.

(யாவும் கற்பனை)

 - இன்னும் எழுதப்படாத ஒரு நாவலின் முதல் அத்தியாயம்.








தகவலுக்காக:

புகைப்படங்கள்  - நாதனை சுவாதியம்மன் கோவில், வெல்லாவெளி.

நட்சத்திரங்களின் மறுபெயர்கள்
அச்சுவினி - பரிநாள், யாழ்
அனுராதா - அனுசம், முடப்பனை, தேள்
உத்தரம் - அரவம், பரிதிநாள்
உரோகிணி - சகடை, உருளை
மிருகசீரிடம் - மும்மீன், மதிநாள்
சுவாதி - விளக்கு, நுகத்தடி
விசாகம் - முறம்

ஆய் / அய / ஆர்ய  / ஐயன் - பிராமிக் கல்வெட்டுக்களில் பதவிப் பெயராகக் காணப்படும் ஒரு பெயர். இதன் பெண்பாற்பெயர்  அபி / அவ்வை. 

பத்த அல்லது பத: கிழக்கிலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் பெருமளவில் குறிப்பிடப்பட்ட ஒரு இனக்குழு. 

பத்து சகோதரர்கள் - கிழக்கு, தென்கிழக்கில் ஏறாவூர் முதல் கதிர்காமம் வரை ஆண்ட அரச வம்சத்தினர். இவர்களை பிராமிக்கல்வெட்டுக்கள் "தச பாதிய" என்கின்றன.

மணிநாகன்: ஈழத்து நாகர்களின் தெய்வமாக சொல்லப்படும் இறைவன்.  பிராமிக்கல்வெட்டுக்களிலும் குறிப்பு உண்டு.

குமாரர், உத்தியாக்கள், வதனமார்: கீழைக்கரை நாட்டார் தெய்வங்கள்
மேலும் வாசிக்க »

நாதனைச் சுவாதி

0 comments
"அண்ணன், சுவாதி அம்மன் கோயில் எவடத்த இருக்கு?" திடீரென்று நான் கை நீட்டி மறித்த படபடப்பில் சற்றுத்தூரம் சென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்த அவர் "சுவாதியம்மனோ? தெரியாதே?" என்றார். தாடியைச் சொறிந்தபடி "இது பிள்ளையார் கோயில். அம்மன் கோயில் இல்லே?" என்றார். நானும் "அதானே, இல்லே!" என்று இசைப்பாட்டு போட்டேன். இப்போது தலைக்கவசத்துக்கு மேலால் தலையைச் சொறிந்துவிட்டு "அந்தக் கடையடில கேட்டுப்பாருங்களன்" என்றபடி அவர் நகர, மீண்டும் கூகிள் வரைபடத்தை எடுத்து சரி பார்த்தேன்.  

நான் நின்றுகொண்டிருக்கும் இடம்  கல்லடிப் பிள்ளையார் கோவில் என்று தான் காட்டுகிறது. நிச்சயமாக சுவாதி அம்மன் கோவில் அருகில் தான் எங்கோ இருக்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் கூகிள் வரைபடத்தை நம்ப முடிவதில்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பதும், கூகிள் மெப் பிழையா இடம் காட்டாது என்பதும் இப்போது ஒத்த பழமொழிகள் ஆகிவிட்டன. 

கடையடியில் கேட்டேன். ஒரு முதியவர் எழுந்து வந்தார் "இந்தப் புள்ளையார் கோயிலுக்கு கொஞ்சம் முன்னுக்கு போங்க மகன். அங்கால தெரியிர மலையடிலான் கோயில் இரிக்கி" என்றார். நன்றி கூறி அந்த இடத்தில் போய் வண்டியை நிறுத்தினால், வயலுக்கு நடுவே பற்றைகள்  மண்டி வேம்பும் ஆலும் அடர்ந்து  வளர்ந்து நின்ற சிறிய பாறை ஒன்று அது. அக்கம் பக்கம் கோவிலுக்கான சிறு தடயத்தையும் காண முடியவில்லை. வீதியோரத்தில் வயலுக்குள் இருந்து இன்னொருவர் தலையைக் காட்ட அவரிடமும் கேட்டேன் "சுவாதியம்மன் கோயில்...?" 

"நீங்க நிக்கிரது தான்" என்றார் அவர். நான் சுற்றுமுற்றும் பார்க்க, அவர் சிரித்தார் "கோயிலெண்டு பெரிசா ஒண்டுமில்ல. மத்தப்பக்கம் போய் பாருங்க" என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் வயலுக்குள் இறங்கி மறைந்தார்.

இந்தச் சிறுகுன்றைத் தானா கோவில் என்கிறார்கள்? மெல்ல நடந்தேன். புதருக்குள் திரிசூலம் ஒன்று தென்பட்டது. ஓ, கோவில் தான். நம்பிக்கை பிறந்து விட்டது. தொடர்ந்து நடந்தால், மற்றப்புறம் அந்தக்குன்று சீராக இறங்கி செங்குத்தாக நின்றது. அங்கு ஒரு சிறுமேடை. முன்புறம் யாரோ வந்து தரையை நன்கு கூட்டிப்பெருக்கிய தடமும் பக்கத்திலேயே விளக்குமாறும் தெரிந்தது. கீழே கிடந்த பட்டுத்துணியொன்று காற்றில் படபடத்தது. மேடையில் திருநீறு சாற்றப்பட்ட ஒரு கல். அதன் முன்னே காய்ந்த பூக்கள். சுவாதியம்மன்!  ஒருகாலத்தில் மட்டக்களப்பு முழுவதும் போற்றிய நாதனைச் சுவாதியம்மன்!
சுவாதியம்மன் பாறை, நாச்சிமார் கல்லடி, நாதனை.

நான் நிற்குமிடம் கல்முனைக்கு  வடமேற்கே 20 கிமீ தொலைவில், மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள வெல்லாவெளி. வெல்லாவெளியில் இந்தக்கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு நாதனைவெளி என்று பெயர். இன்று நாதனைவெளி, வெல்லாவெளி எல்லாமே போரைதீவுப்பற்று பிரதேசத்தில் அடங்குகின்றன. ஆனால் வரலாற்றுக்கால மட்டக்களப்பில் நாதனை தனக்கென ஒரு வன்னியனை ஆட்சியாளனாகக் கொண்ட ஒரு தனித்த 'பற்று' பிரிவாக விளங்கியது. நாதனை வன்னியருக்கு குலதெய்வமாகவும், முழு மட்டக்களப்பும் ஆண்டுக்கொருமுறை கூடி வழிபடும் பெரும் தெய்வமாகவும் விளங்கியவள் தான் நாதனைச் சுவாதியம்மன்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிடைக்கும் குறிப்புக்களில் மட்டக்களப்பு வன்னியர் அனைவரிலும் நாதனைப்பற்று வன்னியனே முதன்மை பெற்றதாக சொல்லப்படுகிறது. மட்டக்களப்புத் தேசத்தில் நிகழ்ந்தது வன்னியர்களின் கூட்டாட்சி. அங்கு எப்போதும் ஒரே வன்னியர் முதனிலை பெற்றதில்லை; அல்லது ஐரோப்பியர் வருகையோடு முதன்மை என்பது வெவ்வேறு பேருக்கு கைமாறியிருக்கிறது. போர்த்துக்கேயர் வரும் போதும், அதற்கு முன்பும் சம்மாந்துறை வன்னியன் முதல் நிலையாளனாக விளங்கினான். ஒல்லாந்தர் காலத்தில் பழுகாமம் மற்றும் போரதீவு வன்னியர்கள் கை ஓங்கியதாகத் தெரிகிறது. பிரித்தானியர் காலத்தின் ஆரம்பத்தில் கரைவாகு மற்றும் மண்முனை வன்னியர்கள் இந்த முன்னிலையைப் பெற்றதோடு வன்னிமை ஆதிக்கம் மெல்ல மெல்ல மறைந்துபோகிறது.



இந்த இடைக்காலத்தில் நாதனை வன்னியன் எந்தக் காலவேளையில் முதன்மை பெற்றிருந்தான் என்று தெரியவில்லை.  ஒல்லாந்தர் காலத்து நிர்வாகத்தில் நாதனையும் தெற்கே இறக்காமம் - மல்வத்தை உள்ளடங்கிய நாடுகாடும் இணைந்து தனித்த "நாதனை நாடுகாடுப்பற்று" பிரிவாக கருதப்பட்டன.  1804 பிரித்தானிய சிலோன் அறிக்கையில், வேடர் தலைவர் (Head of Vidos) என்ற குறிப்புடன் நாதனை வன்னியர் அம்பகப் பண்டார வேலப்பன் பட்டியலிடப்பட்டிருக்கிறார். அது பிரித்தானியரின் கீழ் பொலிச விதானையாகக் கடமையாற்றி, ஆனால் கண்டி அரசுக்கு விசுவாசமாக நடந்துகொண்டோரை துரோகிகளாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்தின் அறிக்கை.

1842இல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஒத்துழைப்போடு நாதனையில் வேடர்களுக்கென ஒரு கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுவாதி அம்மன் இந்த வேடர்களின் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட பழங்குடியினரின் தாய்த்தெய்வமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கீழைக்கரை நாட்டார் இலக்கியங்களில் அவள் பொதுவாக "வதனமார்" எனும் தெய்வங்களோடு  இணைக்கப்படுகிறாள். 

பாலாவதனன் மேடை, நாச்சிமார் கல்லடி, நாதனை.
ஆனால் நாதனையில் சுவாதியம்மன் வழிபாடு பற்றிய முதலாவது தகவல், வெஸ்லியன் மடத்தைச் சேர்ந்த பாதிரிமாரின் 1893ஆமாண்டு குறிப்பில் தான் கிடைக்கிறது. நாதனை, வன்னியரின் பூர்வீகக் குடியிருப்பு. ஆனால் அப்போது பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கு "நாச்சிமார் கல்லு" எனும் இடத்தில் பத்து நாட்கள் பிரமாண்டமான திருவிழா இடம்பெறுவது வழக்கம். அதில் மட்டக்களப்பின் எல்லாக் குலத்தினரின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள் என்று செல்கிறது அத்தகவல். 

சுவாதியம்மனோடு இணைத்துச் சொல்லப்படும் வதனமார் என்போர் குழுமாடு (காட்டுமாடுகளும் காட்டெருமையும்) பிடித்தோராகச் சொல்லப்படுகின்றனர்.  அவர்களது வழிபாட்டுக்கு நாதனையில் "வில்லை கட்டிச்சடங்கு" என்று பெயர். இன்றும் கால்நடைகளின் நலனுக்காக வதனமாரை வழிபடும் வழக்கம் கீழைக்கரையின் பல ஊர்களில் நிலவுகிறது.

விவசாயம், உணவுத்தேவைக்கு மாடுகள் அவசியமாக இருந்ததால், நாதனை போன்ற அடர்காடுகளில் அலைந்த குழுமாடுகள் இப்படி பிடித்து அடக்கப்பட்டு நாட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. உயிராபத்தும் வீரமும் நிறைந்த அருஞ்செயல் என்பதால், குழுமாடு பிடித்தல், இப்பகுதியை ஆண்ட சிற்றரசரின் ஆதரவில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலிருந்து இதைக் கேள்வியுற்று வந்து இவ்விழாவில் குழுமாடு பிடித்தபோது இறந்த வீரர்கள் பின்னாளில் வதனமாராக தெய்வ நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது மருவினாலும், இவ்விழா வில்லைகட்டுச் சடங்காக எஞ்சி நிற்கிறது. 

நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் தான் இந்த "நாச்சிமார் கல்லு". இன்று சுவாதியம்மன் பாறை என்றும் அழைக்கிறார்கள். அந்த பத்து நாள் திருவிழா இன்றில்லை என்றாலும் வெல்லாவெளி மாரியம்மன் சடங்கில் ஒருநாள், இந்த இடத்தில் சுவாதி அம்மன் வழிபாடும் வதனமார் சடங்கும் இடம்பெறுகிறது. வதனமார் சடங்கில் முக்கிய இடம் வகித்த பிள்ளையார் பாறை, சற்றுத்தள்ளி இன்று கல்லடிப் பிள்ளையார் கோவிலாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் சுவாதியம்மனுக்கு இங்கு தொடர்ச்சியான வழிபாடு இல்லை. நாதனை வன்னியரின் இரு பெண்குழந்தைகள் நாச்சிமார் கல்லில் இருந்த கல் வாயிலுக்குள் தவறுதலாக நுழைந்து அக்கதவு திறக்கப்படாமல் போனபின்னர் இங்கு வழிபாடற்றுப் போனது என்று ஒரு கதை சொல்கிறார்கள். இங்கிருந்து ஒன்றரைக் கிமீ தொலைவில் இருநூறாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வெல்லாவெளி மாரியம்மன் கோவிலிலேயே மக்கள் வணங்குகிறார்கள்.

வெல்லாவெளி முத்துமாரி அம்மன் கோவில்

கண்டி மன்னனும், மட்டக்களப்பு வன்னியரும் வருகை தர, கீழைக்கரை மக்களெல்லாம் திரண்டு குழுமிய பத்து நாள் திருவிழாவான நாதனை வில்லைகட்டிச் சடங்கு இன்றில்லை. அந்தச் சடங்கு இடம்பெற்ற நாச்சிமார் கல்லடியில், வயல்களின் நடுவில், காற்றில் ஆடும் பெருமரங்களின் மெல்லிய சலசலப்பில், வானமே கூரையாக அமைதியாக அமர்ந்திருக்கிறாள் சுவாதி அம்மன். எப்போதோ ஒருமுறை மட்டக்களப்பில் முதன்மை பெற்றிருந்த நாதனை வன்னியரின் குலதெய்வம். நேற்று முளைத்த எத்தனையோ கோவில்களைக் கொண்டாடுகிறோம். கோவில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அந்த வீதியில் சாதாரணமாகப் போய் வரும் பலருக்கே அவளை இன்று தெரியவில்லை. சரி தான். தெய்வங்களால் கூட சில நேரங்களில் காலத்தை வெல்ல முடிவதில்லை.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner