அன்பென்று கொட்டு முரசே

0 comments



வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க. இது ஹலால். உங்கட ஊர்ல வாங்கின கோழி இறைச்சி தான்" அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "தேங்ஸ். " என்றாள்.

இது ஒரு நண்பனுக்கு நடந்தது. தனது இஸ்லாமியத் தோழன் ஒருவன் வீட்டுக்கு முதன்முதலாகப் போயிருக்கிறான். இவன் முன் சிற்றுண்டி கொணர்ந்து வைக்கப்பட்டது. இவன் உண்ணவில்லை. அவன் "டேய் இது மாட்டிறைச்சி இல்லடா, நீ சாப்பிடலாம்" என்றிருக்கிறான். இவன் பேசாமலிருக்க, அவன் புன்னகை மாறாமல் சொன்னானாம் "வெள்ளிக்கிழமை தானே. நீ வாறாயெண்டு மரக்கறி ரோல்ஸ் தான் எடுத்து வெச்சன். சாப்பிடு." நண்பன் நெகிழ்ந்து விட்டான். அவன் உள்ளூர் வழக்கப்படி வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உண்பவன்.
முன்பொருமுறை பிள்ளையாருக்கென பொங்கிய பொங்கலை "இது படையலில வைக்காத பொங்கல். சாப்பிடுங்க" என்று சொல்லி கிறிஸ்தவ நண்பனொருவனுக்கு பகிர்ந்தளித்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் பிற தெய்வங்களுக்கென சமர்ப்பிக்கப்பட்ட உணவை கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ உண்பதில்லை.
இந்த மூன்றுமே மதம் அல்லது மதம் சார்ந்த வாழ்வியலால் உணவுப்பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள். ஆனால் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே குதூகலித்துப் போயிருக்கிறார்கள். அடுத்தவன் பண்பாட்டை தான் அறிந்திருந்ததால் நாகரிகமாக நடந்துகொள்ள முடிந்தது என்ற பெருமிதம், அவ்வாறு நடந்து கொண்டவருக்கு. தன் பண்பாட்டை இவர் இத்தனை மதிக்கிறாரே என்பதை அறிந்துகொண்டதால் நட்புணர்வு பலமடங்கான பூரிப்பு அவ்வாறு நடத்தப்பட்டவருக்கு.
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. நமது அன்றாட வாழ்க்கை முறைமையே சிறந்தது - உயர்ந்தது என்ற எண்ணம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் நமக்குக் கீழானவர்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த மேல் தட்டு எண்ணம் தனிமனிதனுக்கு என்று இல்லாமல், ஒரு குடித்தொகைக்கு இருக்கும் போது, அது அங்கீகாரமும் பெற்றுவிடுகிறது. எனவே தான் தனிமனிதனை விட சமூக உணர்வு முன்னிலைப்படுத்தப்படும் சமயம்-இனம்-சாதி-பிரதேசம் முதலிய பிரிவினைகளில் வன்மம் சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.
இன்றும் உலகின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று மதச்சகிப்பின்மை தான். தன் மதத்தின் வழக்கம் தான் உசத்தி; மற்றவனுடையது கீழானது என்ற மேலாதிக்க மனப்பான்மை எழும்போது சிக்கல் பெரிதாகிறது. நான் என் மதவழக்கப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறேன். அவன் தன் விருப்பப்படி வாழ்க்கைமுறையை அமைத்திருக்கிறான். அவன் அவனுக்கு விதித்தபடி நடக்கட்டும்.ஆனால் நான் எனக்கு விதித்தபடி நடப்பேன். இருவரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை. இப்படி எண்ணிக் கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் தான், யதார்த்தத்துக்குப் பொருத்தமான தீர்வு.
ஆனால் இறைமறுப்பு தரப்பினர் இந்த சந்தர்ப்பங்களுக்குச் சொல்லும் எளிய தீர்வொன்று இருக்கிறது. "இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே தயங்கிய முதல் தரப்பினர் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாகவேனும் விட்டொழித்து விட்டு அப்போதைக்கு இயல்பாக நடந்துகொண்டிருக்க வேண்டும்".
அது அத்தனை இலகுவானதல்ல. அவர்கள் எண்ணுவது போல் சராசரி மனிதன் ஒருவனால் இலேசில் தன் உணவுப் பழக்கவழக்கத்திலிருந்து வெளியேறமுடியாது. ஏன் இறைமறுப்பர்களாலேயே கூட. "பூகோள வெப்பமயமாதலுக்கு கால்நடைகள் தான் காரணம். இனி ஆயுள் முழுக்க அனைவரும் மரக்கறி உணவு மட்டும் உண்ணவேண்டும்" என்று அரசாங்கம் சட்டம் கொணர்ந்தால் அவர்கள் ஆமாம் சாமி போட்டுவிட்டு பேசாமல் அமர்ந்து விடுவார்களா? ஊரே ரணகளம் ஆகியிருக்காது?
🙂
உணவுப் பழக்கவழக்கம் என்பது உணர்வு சார்ந்தது. மத அடையாளம் இல்லாவிட்டாலும், கிழக்கு ஆசியர் நாயையும் பூச்சிகளையும் உண்ணுவதைக் காணும் போது நமக்குக் குமட்டிக்கொண்டு வருவதற்கும், 'வௌவால் சாப்பிட்டு கொரோனா தொற்றை உலகெலாம் பரப்பினான் சீனன்' என்று குரூரமாக இனவாதம் பேச நம்மை அனுமதித்ததும், இந்த அன்றாட வாழ்க்கை முறைமை சார்ந்த 'மேற்றட்டு உணர்வு' தான் முக்கியமான காரணம்.
சுவாரசியம் என்னவென்றால் அதே உணர்வு சம்பந்தப்படுவதால் தான், முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டிய இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், எல்லாத் தரப்பினர் இடையேயும் அன்யோன்னியமும் நெருக்கமும் கூடும் வாய்ப்பு ஏற்பட்டது.
இப்படியும் சொல்லலாம். இறைமறுப்பர்கள் பரிந்துரைப்பது, வண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லாவற்றையும் வெள்ளை நிறமாக்கி விடுவோம் என்ற ஒரு இலட்சிய (ideal) கருதுகோளை. இலட்சியம் என்பதாலேயே அது நடக்காது. நடக்கவும் முடியாது. ஏனென்றால் இயற்கை என்பதே பல்வகைமை (diversity) தான். மாறல்கள் (variation) இருப்பதால் தான் கூர்ப்பு அல்லது பரிணாமமே இடம்பெறுகிறது என்பது அடிப்படை விஞ்ஞானம் தெரிந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
எந்த சமயம் அதிகமான பின்பற்றுநர்களை வைத்திருக்கிறது, எது சமகாலத்துக்குப் பொருத்தமான கருத்துக்களை தன் வசம் வைத்திருக்கிறது என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. எந்த சமயம் ஏனைய சமயத்தை பின்பற்றுபவனின் உணர்வுகளை மதிக்கிறது, அவனையும் அங்கீகரிக்கிறது என்பது தான் சமகாலத்தில் முக்கியமாகக் கருதவேண்டிய பிரச்சினை. ஆம் அங்கீகாரம் தான் முதன்மையான பிரச்சினை.
மதம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதன் என்றால் உங்களால் சகமனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அடுத்த சமயத்தவனோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனது வாழ்வியலை நீங்கள் மதிக்கிறீர்கள், அங்கீகரிக்கிறீர்கள் என்பதற்கு ஒரு சிறு சான்றையாவது காட்டிவிடுங்கள். அப்போது அவன்/ அவள் முகத்தில் பூக்கும் புன்னகைக்கு விலை இல்லை. அப்படி விலை தீர்மானிக்க முடிந்தால் அதன் பெறுமதி தான் உங்களுக்கான அங்கீகாரம். மாற்றுமதத்தவனின் உங்கள் மதத்துக்கான அங்கீகாரம் கூட.
அன்பென்று கொட்டு முரசே.
❤
மேலும் வாசிக்க »

உயிர் மெய்

0 comments



வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் உன் பெயர் அழகாக இருக்கிறது என்று நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் துலாஞ்சனன் என்பது சிங்களப்பெயர். சிங்களவரிடம் அந்த உச்சரிப்பை ஒத்த "டுலங்ஜன்" என்ற பெயர் நல்ல பிரசித்தம். (ஒளிர்கின்ற கண் இமையைக் கொண்டவன் என்ற விந்தையான பொருள்.

சிங்களத்தில் "ஞ்ச" என்ற ஒலிக்கூட்டு வழக்கத்தில் இல்லை. அது ஞ்ஞ அல்லது ங்ஜ என்று தான் வரும். என்றாலும் அங்கு ஞகரத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன. தமிழ் போலவே சிங்களத்திலும் ஞகரம் அரிதான ஒலிப்பு. எனவே துலாங்ஜனன், துலான்ஸனன், துலாஞ்ஞனன் என்றெல்லாம் என் பெயர் சிங்களத் தோழர்களால் கடித்துக் குதறப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு ஒரு தமிழ் ஆசிரியரே கஷ்டப்பட்டு துலாங்ஙன் என்று அழைத்த கிருபை.. ச்சீ பெருமை அதற்குண்டு.

உத்தியோகபூர்வ ஆவணங்களில் என் பெயரை சிங்களத்தில் எழுதும்போது சிக்கலாக இருந்தது. கடந்த ஆண்டு தொழில் நிமித்தம் முறைப்படி சிங்களத்தை கற்கத் தொடங்கியபோது ஆசிரியையிடம் என் சிக்கலைச் சொன்னேன். அவர் பூர்வீக சிங்களவர். இளம்பெண் கூட. மொழி இலக்கணத்தை தாங்கள் பெயர் எழுதும் போது பார்ப்பதில்லை. விரும்பியபடி எழுதுங்கள் என்று அவர் சொன்ன பின்னர் தான் என் சந்தேகம் தீர்ந்தது. ஆங்! நான் சொல்லவந்தது என் பெயர் பற்றியோ அழகான சிங்கள ஆசிரியை பற்றியோ இல்லை. சிங்களம் கற்றது பற்றி.

போன ஆண்டு முறைப்படி கற்ற போது தான் சிங்கள அரிச்சுவடியை கவனித்தேன். சிங்கள உயிரெழுத்துக்கள் 20. தமிழ் பன்னிரண்டுடன் எஹ், ஏஹ், ருஹ், ரூஹ், லுஹ், லூஹ், அங், அஃ என்று எட்டு எழுத்துக்கள் மேலதிகம்.
ஆனால் சிங்கள மெய்யெழுத்துக்களுக்கு நிலையான எண்ணிக்கை இல்லை. அது மாறிக்கொண்டே செல்லும் என்பதால் இத்தனை தான் என்று எண்ணிக்கை சொல்லிக் கற்பிக்கமாட்டார்கள். எஃப்பிற்கான சிங்கள எழுத்து அண்மையில் தான் சிங்கள அரிச்சுவடியில் சேர்க்கப்பட்டது. தற்போது இஸ்ஸட்டிற்கான எழுத்தைச் சேர்க்கும் திட்டம் வரைவில் இருக்கிறது.

என்றாலும் சிங்கள மெய்யெழுத்துக்களைக் கற்பிக்கும் போது ஒரு ஒழுங்கில் கற்பிக்கிறார்கள். முதலில் க, ச, ட, த, ப என்னும் ஐந்து எழுத்துக்களும் அவற்றுக்கான மூன்று வர்க்க எழுத்து வகைகளும் ('க'விற்கு ka, kha, ga, gha, 'ச'விற்கு cha, ccha, ja, jha, 'ட'விற்கு ta, tta, da, dda, 'த'விற்கு tha, ttha, dha, ddha, 'ப'விற்கு pa, pha, ba, bha) கற்பிக்கப்படுகின்றன.

பிறகு ங, ஞ, ண, ன, ம என்னும் ஐந்து எழுத்துக்களும், அவற்றை முறையே க, ச, ட, த, ப உடன் புணர்த்தி, ங்க, ஞ்ஞ, ண்ட, ந்த, ம்ப ஆகிய ஐந்து கூட்டெழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன.

அடுத்து ய, ற, ல, வ எனும் நான்கு எழுத்துக்கள். இறுதியாக அந்த அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட ஶ, ஷ, ச, ஹ, ள, ஃப மெய்களுடன் அரிவரிப் பயிற்சி ஏறத்தாழ நிறைவுறுகிறது.

தமிழ் அரிச்சுவடியை சிங்கள அரிச்சுவடியோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தமிழ் அரிச்சுவடியும் ஒரு ஒழுங்கிலேயே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் தலா ஆறாக பதினெட்டு மெய்யெழுத்துக்கள் என்று படித்திருக்கிறோமல்லவா? அந்த ஒழுங்கில் தான் வண்ணமாலை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி?

வல்லினம் ஆறில் க,ச,ட,த,ப என்னும் ஐந்தும், மெல்லினம் ஆறில் ங, ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும் மாறி மாறி ஒன்று விட்டு ஒன்று என்ற ஒழுங்கில் வருகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம.
இந்தப் பத்துக்குப் பின்னர் ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறு இடையினங்கள் வருகின்றன. விடுபட்ட வல்லினம் றவும், விடுபட்ட மெல்லினம் னவும் இணைக்கப்பட்டு இறுதியில் தமிழ் வண்ணமாலையின் 18 மெய்களும் பூர்த்தியாகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம
ய, ர, ல,வ, ழ, ள
ற, ன
ஏன் இந்த ஒழுங்கு? றகரமும், னகரமும் ஒழுங்கு மாறி ஏன் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன?
இந்தக் கேள்விக்கான விடை எளிமையானது. சிங்கள அரிச்சுவடி சுட்டிக் காட்டுவது போல, தமிழிலும் ஆரம்பத்தில் வல்லினமும் மெல்லினமும் ஐந்து ஐந்து தான். தமிழ் மொழி வளர்ச்சி கண்டபோது, அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் தான் றவும் னவும். ரகரத்தின் வலிய பலுக்கல் றகரம். ஒரே உச்சரிப்பு போல இருக்கும் நகரமும் னகரமும் தமிழில் பல்லாண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்தியதை கல்வெட்டுக்களிலேயே காணலாம். அங்கெல்லாம் னக்குப் பதில் ந பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்களை நாம் தமிழி எழுத்துருவில் மிக எளிதாக கண்டுகொள்ளலாம். தமிழி எழுத்துரு அல்லது தமிழ்ப்பிராமி எழுத்துரு, கி.பி முதலாம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். புரிகிற மாதிரிச் சொன்னால் நாம் குறுஞ்செய்தியில் roman ezuththil thamizai ezuthuvathu pola. எழுத்து வடிவம் வேறு. ஆனால் எழுதப்பட்ட மொழி தமிழ். திருக்குறள் முதலிய பழந்தமிழ் இலக்கியங்கள் தாம் எழுதப்பட்ட போது, தமிழி எழுத்துருவில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழி அரிச்சுவடியில் 'ற'வை எழுதப் பயன்படும் எழுத்து 𑀶. உரோமன் Cயும் கிரேக்க லம்டாவும் (𑀢) இணைந்த வடிவம். உரோமன் C என்பது தமிழியில் ட. கிரேக்க லம்டா 𑀢 என்பது தமிழியில் த.
ற என்பது டகரத்திகற்கும் தகரத்திற்கும் இடையே ஒலிப்பதால், ற என்ற புதிய ஒலிப்பை அரிச்சுவடியில் சேர்த்த போது அந்த 'ட'வையும் 'த'வையும் சேர்த்து (C+𑀢) புதிய எழுத்தை ( 𑀶) உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல், தமிழியில் ந என்பது தலைகீழ் T (𑀦). ன என்ற எழுத்தை இறுதியாக இணைத்தபோது ந எழுத்தின் உச்சியை சுழித்து தலைகீழ் J என்ற எழுத்தை (𑀷) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதே எழுத்து மாற்றத்தை, ஒத்த உச்சரிப்புக் கொண்ட ல, ள எழுத்துக்களிலும் காணலாம். ல என்பது தமிழியில் பக்கவாட்டு கேள்விக்குறி 𑀮 . ள என்ற எழுத்துக்கு அந்த எழுத்தோடு சிறு கால் - 𑀴 - இணைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் அரிச்சுவடியின் இறுதி மூன்று எழுத்துக்களும், தேவைக்காக, ஏற்கனவே இருந்த மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பை ஒத்து உருவாக்கி சேர்க்கப்பட்டவை என்பது இப்படித் தெளிவாகிறது.
சிங்கள அரிச்சுவடி சுட்டிக்காட்டுவது போல ஆதியான தமிழ் அரிச்சுவடியும் ஒரு காலத்தில் 'வ'கரத்துடனேயே நின்றிருக்கலாம். அதற்குப் பிறகு தமிழின் சிறப்பெழுத்தான ழகரமும், அடுத்த மூன்று எழுத்துக்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சேர்ப்பெல்லாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால், 12,18, 1, 216, என்ற திருத்தமான எழுத்துக் கணக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் நீடித்திருக்க முடியாது.
ஆனால், இதையெல்லாம் கண்டறிந்து வியப்பதற்கு முறைப்படி சிங்களம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. சிங்களம் இந்தோ - ஆரியத் தோற்றம் காட்டினாலும், அதன் மொழியமைப்பு அது அப்பட்டமாக திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்று சுட்டிக்காட்டப் போதுமானதாகி விடுகிறது.
இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழியில் லகரத்திலிருந்து ளகரத்தை வருவித்துக்கொண்டது போல, நகரத்திலிருந்து னகரத்தை வருவித்துக் கொண்டது போல, றகரத்தை உருவாக்கிய மொழியறிஞன், அதை ரகரத்திலிருந்து வருவிக்கவில்லை.
இரண்டின் உச்சரிப்பும் ஒத்தது என்றாலும், இனம் வேறு என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ர இடையினம், ஆனால் ற வல்லினம். அதனால் 'ர'வின் வலிந்த உரப்பாக 'ற' பிறக்கும் என்று சொல்லாமல், தகரத்துக்கும் டகரத்துக்கும் இடையே இன்னொரு வல்லினமாக ற பிறக்கும் என்பதை அந்த ஆசான் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறான்.
மொழி என்பதை வெறுமனே தொடர்பாடல் ஊடகம் என்று வரையறுத்து விட்டு எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால் அதை உருவாக்குவதற்கு, இலக்கணம் படைத்து வரையறுப்பதற்கு, எத்தகைய ஆழ்ந்த ஞானம் படைத்திருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு.
மொழியை வரம்பறுத்தவனை இறைவன் என்பதில் என்ன தவறு?
அந்த ஆலமர் செல்வனை வியந்து பணிகிறேன்.
அவன் படைத்த தமிழ் காலம் தாண்டித் திகழ்க.
குறிப்பு 01:
வட இந்திய, அல்லது ஏனைய திராவிட மொழிக்குடும்பங்களின் வண்ணமாலைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியாது. வேறு மொழிகளில் வல்லின - மெல்லின - இடையின பாகுபாட்டோடு அரிச்சுவடி கற்பிக்கப்படுகிறதா, அவற்றில் தமிழின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதை பன்மொழி அறிஞர்களே கூறவேண்டும்.
குறிப்பு 02:
சிங்கள அரிச்சுவடியைக் கற்றபோது நான் அடைந்த ஊகத்தை, தமிழி எழுத்துவடிவத்தின் தோற்றம் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். என் ஐயம் சரி என்றால், அது பெரும்பாலும்
கி இராம
ஐயாவின் வளவு வலைத்தளத்தில் வெளியாகியிருக்கவேண்டும். அந்த இணைப்பைக் கண்டறிந்தால் இங்கு பகிர்கிறேன்.
குறிப்பு 03:
மொழிக்கட்டமைப்பின் வரலாற்றை ஆராயும் போது, மொழிப்பற்றுக் கடந்து அறிவியலோடு இணைத்து நிறைய சிந்திக்கவேண்டி இருக்கிறது. சிங்களம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதன் மொழியமைப்பு திராவிடச் சாயல் கொண்டது என்பதை பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதன் அரிச்சுவடியிலிருந்து தமிழ் வரிவடிவ வளர்ச்சியையும் ஊகிக்க முடிவதால், அதில் உண்மை இருக்கக்கூடும். சிங்களம் எத்தனை பழைய மொழி, தமிழுக்கும் அதற்குமான உறவென்ன, தமிழின் ஆதிமொழி உரிமைகோரல் முதலிய பொருட்கோடல்கள் எல்லாம் தனியே ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
மேலும் வாசிக்க »

ஒரு விசுவசிப்பு

0 comments

 


“சுவாமி,
அருட்தந்தை சிமோ டீ கோயம்பரா இங்குள்ள விருத்தாந்தங்களை தங்களுக்கு அறிவிப்பதற்காக இந்தியாவுக்கு யாத்திரைப்படும் போது இங்கு எழுந்தருளினதை தேவரீர் அறிவீர். அவர், சத்தியத்தை நோக்கி அடியேன் மனத்தை திறந்ததுடன், தங்கள் கத்தோலிக்க வேதம் பற்றியும் பிரசங்கித்தார். அடியேன் ஜீவனை இரட்சிக்கவும், போர்த்துக்கேய சக்கரவர்த்திகளுக்கு அன்யோன்யச் சிற்றரசாக மாறவும் நீண்ட நாட்களாக வெகு விருப்பமாயிருக்கிறேன்.
இப்போது யான் மனதளவில் சத்திய கிறிஸ்தியானி என்றாலும், ஞானஸ்நானத்துக்கான முழுக்காட்டு தீர்த்தத்தைப் பெறாததனால் மிக வருத்தமுற்றவனாயிருக்கிறேன். யான் இன்னும் கிறிஸ்தியானியாகவில்லை என்றால், அது தமியேனின் அபிலாஷையால் அல்ல சுவாமி; தேசத்தின் நிலைமையை அறியவொண்ணாததினாலேயே.
எதுவாகினும் சுவாமி, அடியேனின் இராச்சியத்துக்கான வாரிசான என்னுடைய குமாரன், சத்திய வேதத்தைத் தழுவி, தொம் லூயிஸ் என்ற நாமத்தையும் பெற்றிருக்கிறான். நான் என் எல்லா இனசனங்களோடும், என்னால் ஆளப்படுகின்ற எல்லா மக்களோடும் சுவிசேஷத்தை அறிவதற்காக தேவரீர் அல்லது தேவரீரின் புதல்வர் வரவேணுமென்று பிரயாசைப்பட்டுக் காத்திருக்கிறேன். தேவரீர் இவ்விடம் எழுந்தருளும்போது தேவபக்தி இங்கு பரவுமென்று நான் பரிசுத்த மரியன்னை மீது விசுவசிக்கிறேன்.
ஆகையால் சுவாமி, ஆண்டவரின் திருப்பெயரால், மரியாளின் திருப்பெயரால் மன்றாடுகிறேன். என்னையும் கண்டி இளவரசனையும் கிறிஸ்தவர்களாக்குவதற்கு, தேவரீர் வரவேணும். அல்லது தேவரீரின் புதல்வரை அனுப்பி வைக்கவேணும். ஏற்கனவே கிறிஸ்தவனாயிருக்கப்பட்ட என் குமாரனும், அவ்வாறு விசுவசிக்கும் நானும், போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் திருக்கரங்களிலும் இரட்சிப்பிலும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஒரு கிறிஸ்தியானியாக, போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் சைனியத்துணைவனாக, உபராசனாக, தேவரீர் எனக்கு சகாயமும் இரட்சையும் தரவேணும்.
இப்போதிருந்து என்னையும் என் தேசத்தையும் தங்கள் சொந்த ஆஸ்தி போலவே தாங்கள் பயன்படுத்தக் கூடுமாயிருக்கும். என் துறைமுகத்தில் படகுகளும் கப்பல்களும் தெப்பங்களும் கட்டுமரங்களும் கட்டுவதற்கு, தாங்கள் கட்டளை வழங்க முடியுமாயிருக்கும். தங்களுக்குத் தேவையான அளவு மரக்கட்டைகளை தமியேன் தரக்கூடுமாயிருக்கும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேணுமென்றால், இந்தப் பாதிரியாரைக் கேட்கவும். அவரிடம் நான் கூறச்சொன்ன காரியங்களெல்லாம் அவர் அறிவிப்பார். தேவன் தங்களுக்கு சொஸ்தம் தருவாராக.”
-----------------------------------------------------------
மட்டக்களப்பின் மன்னன், போர்த்துக்கேய பிரான்சிஸ்கன் பாதிரியாரான சிமோ டீ கோயம்பரா ஊடாக கோவாவின் போர்த்துக்கேய ஆளுநருக்கு அனுப்பி வைத்த 1546 டிசம்பர் 25ஆம் திகதியிட்ட கடிதத்தின் தமிழாக்கம்.
கிழக்கிலங்கையில் கண்டி, சீதாவாக்கை, வியாளை (யால) ஆகிய அரசுகளை எல்லையாகக் கொண்ட "மட்டக்களப்பு" (மட்டிக்கலோ/Matecalo) எனும் சிற்றரசு நிலவியது என்பதைச் சொல்லும் மிகப்பழைய காலனித்துவ ஆவணம் இக்கடிதமாகும். இந்த மன்னனின் உண்மைப் பெயர் தெரியவில்லை.
இங்கு சொல்லப்படும் கண்டி இளவரசன், குசுமாசன தேவியின் தந்தை கரலியத்தை பண்டாரம்(ஆட்சி 1552 - 1582) என்று கருதப்படுகிறான்.போர்த்துக்கேய அரசுக்கு ஆதரவாக, மட்டக்களப்பு அரசன் கண்டி அரசோடு இணைந்து படைக்கூட்டு கொள்ள முயல்வது, கோட்டை அரசுக்கு எதிராக என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கடிதம் எழுதப்பட்டு ஆறாண்டுகளில் கோட்டை அரசு போர்த்துக்கேயர் கைகளில் வீழ்கிறது.
இந்தக் கடிதம், பெரும்பாலும் மட்டக்களப்பு மன்னன் சொல்லச்சொல்ல பாதிரியார் கோயம்பரா தன் கைப்பட எழுதியதாக இருக்கவே வாய்ப்பதிகம். அந்தப் போர்த்துக்கேய கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம், சுவாரசியத்துக்காக இங்கு கத்தோலிக்கத் தமிழில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது.


மேலும் வாசிக்க »

ஹம்ச கமனா

0 comments



தம்பலகாமம் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். பிறந்தகத்தின் பெயரை ஒத்திருப்பதாலோ என்னவோ அவ்வூர் மீது எனக்கு நெடுநாளாகவே ஈர்ப்பு உண்டு. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அது திருக்கோணமலையின் நான்கு பற்றுக்களில் ஒன்றின் தலைநகராக இருந்தது. பற்று என்பது பழங்கால இலங்கையின் ஒரு நிர்வாக அலகு. இன்று மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராம சேவகர் பிரிவு என்று இலங்கையின் உள்ளூர் அலகுகள் பிரிக்கப்பட்டிருப்பது போல, அக்காலத்தில் இங்கு ரட்டை/தேசம், கோரளை, பற்று, ஊர் என்று நிர்வாக அலகுகள் காணப்பட்டிருந்தன. இந்தப் பிரிவுகளுக்கென சிங்களப்பகுதிகளில் ரட்டமகாத்தயா, கோரளை, அத்துகோரளை, பத்து, அத்தபத்து முதலிய பதவிகளும், தமிழ்ப்பகுதிகளில், வன்னியர், உடையார், முதலியார், போடியார் முதலிய பதவிகளும், இந்த நிர்வாக அலகுகளில் அதிகாரமிக்க பதவிகளாக விளங்கின.

இன்றைய திருக்கோணமலை மாவட்டம் என்பது அப்போது திருக்கோணமலைத் தேசமாக - திருக்கோணமலைப்பற்று, கட்டுக்குளம்பற்று, கொட்டியாறுப்பற்று, தம்பலகாமம்பற்று என்னும் நான்கு பற்றுக்களின் தொகுப்பாக இருந்தது. தம்பலகாமப்பற்று இன்று தம்பலகமம், கந்தளாய், கிண்ணியா என்று மூன்று பிரதேசங்களாக உடைந்து நீடிக்கின்றது. அந்தப்பற்றின் தலைநகராக விளங்கிய ஊர் தான் தம்பலகாமம். இன்று பண்டைய பெருமையின் எச்சச்சொச்சங்களை மாத்திரம் சுமந்து ஒரு சிற்றூராக களையிழந்து காணப்படுகிறது.

தம்பலகாமத்தின் பெருமையே அங்கு கம்பீரமான இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் "ஹம்ச கமனாம்பிகா சமேத ஆதிகோணநாதர் ஆலயம்" தான். ஈழத்தின் பாடல் பெற்ற இரு தலங்களில் ஒன்றான திருக்கோணேச்சரம் போர்த்துக்கேயரால் 1624ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து அமைக்கப்பட்ட ஆலயம் இது.

கிழக்குலகின் உரோமாபுரி என்று புகழப்பட்ட திருக்கோணேச்சரம், போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டபோது அங்கிருந்த வழிபாட்டுச்சின்னங்கள் பல இடங்களிலும் பாதுகாப்புக் கருதி மறைத்து வைக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விக்கிரகங்கள், தம்பலகாமத்தின் கழனிமலையில் வைத்து வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. பின்னாளில் அவற்றை தற்போது கோவில் அமைந்துள்ள இடத்துக்குக் கொணர்ந்து, கண்டி அரசின் அனுசரணையுடன் இக்கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். சரி, கோணேச்சரம் இடிக்கப்பட்ட பின்னர், தம்பலகாமத்தில் ஆதிகோணைநாயகர் கோவில் உருவாகக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு ஊகத்தை முன்வைக்கலாம். அதற்குமுன், பழங்காலத்தில் நிலவிய "கோவில்மைய நிலவுடைமைச் சமுதாயக் கட்டமைப்பு" பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

அரச ஆதரவில் ஒரு பெரிய பிரதேசமொன்றையும் அதில் வசிக்கும் சகல சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் "கோத்தளி" (Royal Temple) ஒன்று நிறுவப்படும். குறித்த கோவிலில் இன்னின்ன ஊரவர்கள் அல்லது இன்னின்ன சமூகத்தவர்கள் இன்னின்ன கடமைகளை அல்லது தொழும்புகளைச் செய்யவேண்டும், அதற்கு பிரதிபலனாக குறித்த தரப்பினருக்கு கோவில் சார்பில் வாழ்வாதார உதவிகள் இலவசமாக வழங்கப்படும். அது விவசாயம் செய்வதற்கான வயலாகவோ, கால்நடைகளாகவோ, அல்லது வேறு மானியங்களாகவோ இருக்கலாம். கோவிலில் அந்த தரப்பினரின் கடமை/தொழும்பு "சந்திராதித்தவல்" (சூரிய சந்திரன் உள்ளவரை) தொடரவேண்டும் என்ற ஆணை பெறப்படுவதால், குறித்த குடும்பங்கள் அப்பணியைச் செய்து கோவில் உதவியிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்க்கை நடத்த முடியும். இதுதான் கோவில்மைய நிலவுடைமைச் சமுதாய அமைப்பு.

இதற்கான கால்கோள் தமிழகத்தில் சோழர் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது தெரிகிறது. இலங்கையில் கிழக்கே திருக்கோணேச்சரம், திருக்கோவில், கொக்கட்டிச்சோலை கோவில்களிலும், மேற்கே முன்னேச்சரத்திலும் இவ்வழமை மத்திய காலத்திலும் நீடித்ததற்கான சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

திருக்கோணமலைத் தேசத்தில் திருக்கோணேச்சரத்தை அடிப்படையாகக் கொண்டு நூறுநூறு ஆண்டுகளாக கோவில்மைய நிலவுடமைச் சமுதாயக் கட்டமைப்பு ஒன்று நிலவி வந்திருக்கிறது. கோணேச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டபோது, இந்த நிலவுடைமைப் பொருளாதாரக் கட்டமைப்பு முற்றாகச் சிதைந்தொழிந்து போகிறது. கோணேச்சரத்துத் தொழும்பில் ஈடுபட்டிருந்த தானத்தார், வரிப்பத்தர், இருபாகை முதன்மைகள், வன்னிமைகள் முதலிய மேற்றட்டு வர்க்கத்தினரும் ஏனைய மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்களும் பொருளாதார அமைப்பு சீர்குலைந்ததால் இடர்களுக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள். கோணமாமலையை உள்ளடக்கி போர்த்துக்கேயரும் பின்பு ஒல்லாந்தரும் வலிமையான கோட்டை கட்டி அங்கேயே தங்கிவிட்ட பின்னர், இனி திருக்கோணேச்சரம் மீள எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற வேதனையான முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். "முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே இனி மீளவும் இயற்ற எண்ணாரே வரும் வேந்தர்கள்" என்று சொல்லும் பிரடரிக் கோட்டைக் குளக்கோட்டன் கல்வெட்டு இந்தக் காலத்தில் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதே காலத்திலேயே வேறுவழியின்றி, தம்பலகாமத்தில் கோணேச்சரத்தின் மாதிரி அமைப்பில் ஆதிகோணைநாதர் கோவில் எழுந்திருக்கிறது. அப்படி ஒரு தேசத்துக்கோவிலொன்றை புதிதாகக் கட்டுவதற்கு, உள்ளூரில் அப்போது வலிமையாக விளங்கிய கண்டி அரசு ஆதரவு அளித்திருந்தால், அதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை.

பழைய கோணேச்சரத்தின் தொழும்புகளை விவரித்து அல்லது மீள்வரையறுத்து "கோணேசர் கல்வெட்டு" எனும் இலக்கியம் இந்தக் காலத்தில் தான் தம்பலகாமம் ஆதிகோணேச்சரம் மீது பாடப்பட்டிருக்கவேண்டும். அதிலுள்ள காவிய அழகு கொண்ட தொன்மங்களும் பிற்சேர்க்கைகளும், கோணேச்சரக்கோவிலையும் அதன் உண்மை வரலாற்றையும் முற்றாக மறந்துவிட்ட நான்கைந்து தலைமுறைகள் கடந்த பின்னரே அந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.

கடந்தவாரம், வேறு விடயமாக அந்தப்பக்கம் போனபோது தம்பலகாமத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திடீர் விஜயம் என்பதால் போதுமான ஆயத்தங்களுடன் செல்லவில்லை. அம்மண்ணின் மைந்தரும் ஆய்வாளருமான மருத்துவர் தங்கராஜ் ஜீவராஜ் அவர்களை கைபேசியில் அழைத்துப் பேசினேன். (தம்பலகாமம் மற்றும் திருக்கோணமலை பற்றிய அவரது அருமையான பல வரலாற்று ஆய்வுகளை அவரது ஜீவநதி வலைத்தளத்தில் படிக்கலாம்) அப்பகுதியிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், தமிழகத்திலோ ஈழத்திலோ வேறெங்குமே இன்றி தம்பலகாமத்தில் மட்டுமே நீடிக்கும் தனித்துவமாக வழிபாட்டு மரபுகளையும் பற்றியும் அவர் விவரித்தார்.

கோணேச்சரத்திலிருந்து எடுத்துவரப்பட்ட சிறு கல் கூட கோணேச்சரப் பெருமானாகவே பார்க்கப்பட்ட ஒரு வலிமிகுந்த காலத்தை ஜீவராஜ் அண்ணா சுட்டிக்காட்டினார். தம்பலகாமத்தில் ஆதிகோணைநாயகர் என்ற பெயரில் வழிபடப்படுபவர் உண்மையில் யார் என்பதை தமிழ் உருவவியலிலும் தென்னகச் சிற்பநூல்களிலும் அறிமுகம் உள்ள எவருமே இலகுவாக இனங்கண்டுவிடலாம். அதைப் பொதுவெளியில் பேசினால் அடியவர் மனம் புண்படும். அது இறைவன் திருவுளம் என்று நகரவேண்டியது தான் என்று சொல்லி ஆமோதித்தேன்

தம்பலகாமம் ஆதிகோணநாயகர்


ஆனால் தம்பலகாமம் கோவிலில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய திறப்பு வேறொன்று. அது அங்கு வினோதமான பெயருடன் வீற்றிருக்கும் அன்னை. ஹம்சகமனாம்பிகா!

கமனம் என்றால் வடமொழியில் போதல் என்று அர்த்தம். சிங்களத்தில் கூட இலங்கை போக்குவரத்து சபையை ஸ்ரீலங்கா கமனாகமன மண்டலய என்பார்களே! அது அதே அர்த்தம் தான். ஹம்சம் போல் செல்பவள். அன்னம் போல் நடப்பவள். அன்னநடை மடவாள்!

சட்டென்று எனக்கு பற்றிக்கொண்டது. திருஞானசம்பந்தர் தேவாரம், கோணேசர் கல்வெட்டு, தட்சிணகைலாய புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்று பல இலக்கியங்களைப் புரட்டி, கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் அன்னையின் உண்மைப்பெயர் மாதுமை அல்ல; "பிடியன்ன மென்னடை" என்பதைச் சொல்லி சில மாதங்களுக்கு முன் தான் வீரகேசரி வாரவெளியீட்டில் கட்டுரை வரைந்திருந்தேன். அதை உறுதிப்படுத்தி சிரித்துக்கொண்டிருந்தாள் தம்பைமாநகரத்து அன்னநடை மடவாள்.

அதெப்படி? பிடியன்ன மென்னடையும் அன்னநடையும் ஒன்றா? பெயரிலேயே ஒற்றுமை இல்லையே?

இல்லை. கோணேச்சரம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னர், அங்கிருந்த மரபுகளையும் தொழும்புகளையும் தொடர்வதற்காகவே தம்பலகாமத்தில் ஆதிகோணேச்சரம் எழுந்தது என்பதைச் சொன்னேன் அல்லவா? தம்பலகாமத்து இறைவன் கோணைநாயகன் என்ற பெயரைச் சூடியது போலவே, இங்கு எழுந்தருளிய தேவியும் பிடியன்ன மென்னடை என்ற பழைய தேவியின் பெயரையே தானும் சூடியிருக்கிறாள். பிடியன்ன மென்னடை மருவி பின்னாளில் அன்னமென்னடை என்று ஆகியிருக்கிறது. அதை வழக்கம் போல யாரோ வடமொழி தெரிந்த பண்டிதர் ஹம்சகமனா என்று மாற்றியிருக்க வேண்டும்.

அல்லது பிடியன்ன மென்னடை என்ற பெயரே, பிடி+அன்ன+மென்னடை = பிடியானை மற்றும் அன்னம் போல் நடப்பவள் என்று புரிந்துகொள்ளப்பட்டு "கரிணீஹம்சகமனா" என்று வடமொழியில் அழைக்கப்பட்டிருக்கக் கூடும். பிடியின் வடமொழிப் பெயரான "கரிணீ" புரியாத பிற்காலத்தவர்கள் அதைத் தவிர்த்து விட்ட ஹம்சகமனாவை மட்டும் தக்கவைத்திருக்கலாம்.

எது எப்படியோ மாதுமையம்மையின் உண்மைப் பெயர் பிடியன்ன மென்னடை என்பதை இன்னொரு தடவை உறுதிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இந்தப் பயணத்தின் மூலம் கிடைத்தது. உண்மையைச் சொன்னால், ஒரு தமிழ் ஆர்வலனாக எனக்கு மாதுமையோ பிடியன்ன மென்னடையோ எதுவுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய அழகான பெயர்களே. ஆனால் வரலாற்று ஆர்வலனாகவும் இறைநம்பிக்கையாளனாகவும் பிடியன்ன மென்னடை என்ற பெயரே எனக்கு உவப்பானது. அதற்கான வரலாற்று ரீதியான காரணங்களை முன்பே வீரகேசரியில் எழுதியிருக்கிறேன்.

மேலும் இறைநம்பிக்கையாளனாக அப்பெயர் தெய்வீகமானது. தமிழ்ச்சைவத்தின் நான்கு ஆசான்களில் - சமய நாற்குரவரில் ஒருவரான சம்பந்தரின் அருள்வாக்கில் இடம்பெற்ற பெயர் அது. கோணமலைப் பதிகத்தில் "பிடியனநடையாள் பெய்வளை மடந்தை" என்று பாடப்பட்ட பெயர் அது. தமிழ்ச் சைவ சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவனுக்கு தேவாரம் என்பது களங்கமேதுமற்ற பதிவாக்கியம். இறைவனருளால் நேரடியாக வெளிப்பட்டது. எனவே மாதுமையா? பிடியன்ன மென்னடையா? என்று கேட்டால், ஐயமின்றி பிடியன்ன மென்னடையே உயர்ந்தது என்பேன்.

நாமெல்லோருமே ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனிதர்கள் . ஆனால் எவனோ ஒருவன் கையில் நாம் அம்பாக இழுக்கப்படும் தருணங்களில் செய்வதறியாது அச்சத்துடன் கைகூப்புவது ஒன்றே நாம் செய்யக்கூடியது. ஹம்சகமனாவிலிருந்து பிடியன்ன மென்னடைக்கு என்னை இழுத்துச் சென்றது அந்த வில்லின் விசை தான். தன்னைத் தரிசித்த அந்தக்கணத்தில் அப்படி அன்னம் போல் நடந்து நெருங்கி வந்து ஒரு ஊகத்தை உருவாக்கி புன்னகைத்திருக்கிறாள் அன்னநடை அம்மை. அவள் வாழி. அவள் பெயர் வாழி. கோணையங்கிரி உள்ளவரை கோமகள் பிடியன்னமென்னடை வாழி.

🔱🙏
மேலும் வாசிக்க »

கிழக்கிலங்கை - ஒரு சூம் உரையாடல்

0 comments




கடந்த யூலை 19ஆம் திகதி அரங்கம் பத்திரிகையும் Tamil Institute for Leadership excellence அமைப்பும் இணைந்து நடாத்திய சூம் கலந்துரையாடலின் யூடியூப் இணைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.

"ஐரோப்பியர் வருகையின் பின்னர் கிழக்கிலங்கை வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினேன் (50:00 - 1:05:00). திரு.ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைக்க, திரு.சீவகன் பூபாலரட்ணம் ஐயா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். சூம் உரையாடல் முழுவதிலும் தொகுப்புரை செய்து கலந்துரையாடலைச் சீராகக் கொண்டு சென்றவர் பேராசிரியர் மௌனகுரு ஐயா அவர்கள். 

உண்மையில் கிழக்கிலங்கை பற்றிய தோராயமான அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முழுமையான உரையாடல் போதுமானது. "கிழக்கிலங்கை பூர்வீக வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பிலான திரு விஜயரட்ணா எட்வின் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கையின் தமிழ் சமூக உருவாக்கமும் பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான கலாநிதி சுந்தரம்பிள்ளை சிவரட்ணம் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் உருவாக்கமும் இஸ்லாமிய பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஐயா அவர்களின் உரை, என்பவற்றை ஒட்டுமொத்தமாகச் சேர்த்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமை பெற்றுவிடுகிறது. 

கிழக்கிலங்கையின் அரசியல், நிர்வாகம், நிலப்பரப்பு, பொருளாதாரம், சமயம், துறைமுகங்கள், பண்பாடு, உணவுப்பொருட்கள், அன்றாட வாழ்க்கை என்பவற்றில் ஐரோப்பியரால் அல்லது அவர்களின் பின்னணியில் உருவான அகக்காரணிகளால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது திருப்பங்கள் என்னுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இறுதியாக இடம்பெற்ற பேராசிரியர் மௌனகுரு ஐயாவின் உரை மிக முக்கியமானது. சமூகவியல், மானுடவியல் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாதது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்கின்ற கேள்வி பதில் பகுதியையும் அவதானிக்கலாம்.




மேலும் வாசிக்க »

பிறந்தகத்தை ஆவணப்படுத்தல்

0 comments


பிறந்த மண்ணை பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆசை எப்போதிருந்தோ இருக்கிறது. ஆனால் அந்நூல் தகவல் தொகுப்பில் முழுமையானதாக, ஏனைய ஊர் வரலாற்று நூல்களுக்கு முன்மாதிரியானதாக அமைய வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை எடுப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது.


மூன்றாண்டுகளுக்கு முன், நூலகம் நிறுவனத்தின் 'ஊர் ஆவணப்படுத்தல்' செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டபோது, நூலின் உள்ளடக்கத்துக்கான ஒரு வரைவை தயாரித்துக்கொள்ள முடிந்தது. எனினும் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் செயற்றிட்டத்தில் முழுப்பங்களிப்பை அளிக்க முடியவில்லை. (அந்த வரைவை ஆவணகம் வலைத்தளத்தில் இங்கு படிக்கலாம்.)

எனினும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்யலாம் என தீர்மானித்தேன். எனது தகவல் சேகரத்தின் ஒரு பகுதியை தம்பியொருவனின் பாடசாலை ஆண்டு மலருக்கு வழங்கினேன். அதைத் திருத்தி இன்னும் சில விடயங்களை சேர்த்து, மறைந்த சகோதரர் அமரர். கோவேந்தன் அண்ணாவின் நினைவு வெளியீடான 'கோவேந்த வியாசத்துக்கு' வழங்கினேன்.

எதிர்பார்த்தது போலவே அக்கட்டுரை ஊரில் சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அக்கட்டுரையில் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்த ஊரின் சமூக அடுக்கு சார்ந்த குடி முறைமை, தத்தி, கத்தறை, வறுகை, பாகை, முதலிய மறைந்து வரும் மரபுகள் அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும் எதிர்கொள்ளப்பட்டன. சிலர் நீதி கேட்டு வீட்டுப் படி கூட ஏறினார்கள்.
🙂

முற்றாக அருகிவிட்ட அந்த சமூகவியல் தரவுகளை சேகரிப்பதில் நான் விட்டிருந்த இடைவெளிகளை அந்த சர்ச்சைகள் மூலம் பெருமளவு நிரப்பிக் கொள்ள முடிந்தது.
அந்தக்கட்டுரையின் பிரசுரத்துக்கு முந்திய வடிவம்
Prasad
அங்கிளின் முயற்சியில், சில திருத்தங்களுடன் ஆரையம்பதி இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதைப் படித்த அன்பிற்குரிய ஆசான் பேராசிரியர் மௌனகுரு ஐயாவும் அழைத்து அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை சிலாகித்து பேசியது ஆன்ம திருப்தியை தந்திருக்கிறது. இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் சகல ஊர்களும் தங்கள் வரலாற்றைத் தொகுத்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமைபெறும் என்றார் அவர்.

அக்கட்டுரையின் உண்மை நோக்கமும் அதுவே. புள்ளி வைத்து தான் கோலம் போட முடியும். வரலாறு என்பது பிரதேசம், குழுக்கள், பிராந்திய மரபுகள் என்றெல்லாம் சுருக்கி எழுதப்படும் நுண்வரலாறுகளின் தொகுப்பு என்பதை இங்கு ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இன்று வரை ஒழுங்கான வரலாறு இன்றி, தொன்மங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் பக்கச்சார்பின்றி தத்தம் ஊர்வரலாற்றை தொகுத்துக் கொண்டாலே போதும். அத்தனையையும் ஒட்டுமொத்தமாக்கி இலங்கைத்தமிழர் வரலாற்றை கட்டியெழுப்பி விடலாம்.
ஐயமின்றி இந்தக் கட்டுரை தகவல் பிழைகளும் குறைகளும் கொண்டதே. சில இடங்களில் நடுநிலைமை தவறி வெளிப்பட்டுள்ள ஊர்ப்பற்றும் உள்நோக்கம் கருதியது தான்.
இதையே ஒரு சவாலாக எடுத்து, இதே மாதிரியில் அல்லது இதைவிட சிறப்பான உள்ளடக்கங்களுடன் ஏனைய ஊர் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படட்டும். சில ஊர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கின்றன. என்றால் அந்நூலை அல்லது அக்கட்டுரையை தகவல் பிழைகள் திருத்தி இற்றைப்படுத்த முயலலாம். இயன்றால் பத்தாண்டுகளுக்குள் பக்கச்சார்பின்மை கொண்ட சமூகவியல் - மானுடவியல் ரீதியிலும் முழுமையான ஒரு இலங்கைத் தமிழ்ச்சமூக வரலாற்று நூல் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் நப்பாசை. ஆர் குத்தி என்ன, அவலானால் சரி.
கோலத்தை திட்டமிட்டாயிற்று. புள்ளிகளை வைப்போமா? ❤️



மேலும் வாசிக்க »

பெரியசாமியின் கப்பல்

0 comments

பாற்சேனை பெரியசாமி கோவில்


 "பெரிய சாமி கோவில் நாளையோடு முடிகிறது. போகிறேன். வரப்போகிறீர்களா?"

போன கிழமை, அலுவலகத்தில் பணி முடிந்து கிளம்புகையில் நண்பர் ஒருவர் வந்து இப்படி சொன்னதும் நான் வியப்படைந்தேன்.

"பெரியசாமியா? அது யார்?"

"பெரியசாமி தெரியாதா? அந்தக்கோவில் பாற்சேனையில் இருக்கிறது. இப்போது திருவிழா. கொரோனாவால் இந்த முறை சிறப்பாக இருக்காது. ஆனால் சும்மா போய் வரலாம். வருவதென்றால் வாருங்கள்."

பெரியசாமி, பாற்சேனை முதலிய பெயர்கள் விந்தையாகவும் ஆர்வமூட்டுவனவாகவும் இருந்தன. கரும்பு தின்னக் கைக்கூலியா? மறுவார்த்தை பேசாமல் புறப்பட்டுவிட்டேன்.

திருக்கோணமலை மாவட்டத்தின் தெற்கே பாயும் வெருகல் கங்கையுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஆரம்பிக்கிறது. அங்குள்ள எல்லைக் கிராமம் கதிரவெளி. கதிரவெளிக்குத் தெற்கே மூன்று கிமீ பயணித்தால் பாற்சேனை கிராமம். பழைமை வாய்ந்த ஊர்களில் ஒன்று தான். அங்கு கடலோரமாக அமைந்திருக்கிறது பெரியசாமி கோவில்.

கோவில் ஆரவாரமாகத் தான் இருந்தது. சூழ்நிலை நல்லபடி இருந்திருந்தால் கூட்டம் இன்னும் அதிகம் என்பது தெரிந்தது. கோவில் அண்மையில் ஆகமவிதிப்படி புதுக்கிக் கட்டப்பட்டு குடமுழுக்கு கண்டிருக்கிறது. பிள்ளையார் சன்னதி, வைரவர் சன்னதி, வசந்த மண்டபம் என்பன அழகுற அமைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இங்கு பிரதானமான வழிபடு பொருள் கொடிமரம் தான். அங்கு நின்று பூசகர்கள் அடியவர்களுக்கு கட்டுச்சொல்வதும் ஆசீர்வதிப்பதுமாக இருந்தார்கள்

பெரியசாமியை கப்பல் தெய்வம் என்றும் சொல்கிறார்கள். கோவில் முழுவதும் கப்பல் சின்னம் பொறித்த வண்ணக் கொடிகள் அசைந்தாடுகின்றன. அவர் தமிழகத்திலிருந்து கப்பலில் வந்தவர் என்று நம்பிக்கை. ஆனால் அவர் முதலில் வந்திறங்கிய இடமாகச் சொல்லப்படுவது இலங்கைத்துறை முகத்துவாரம்.

இலங்கைத்துறை முகத்துவாரம், பாற்சேனையிலிருந்து 25 கிமீ வடக்கே உள்ளது. அது இன்று "லங்காபட்டுன" என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். சற்று ஒதுக்குப்புறமாக உள்ளதால், மட்டக்களப்பு - திருக்கோணமலை நெடுஞ்சாலையில், வெருகல் கங்கைக்கு 2 கிமீ வடக்கே உள்ள முத்துச்சேனை சந்தியில் வலப்புறமாக திரும்பி 13 கிமீ செல்லவேண்டும். கடலும் காயலும் (களப்பு) இணையும் முகத்துவாரத்தில் ஒரு சிறிய குன்றொன்று இருக்கிறது. அது தான் பெரிய சுவாமி வந்திறங்கிய முதல் இடம். உள்ளூரில் குஞ்சிமாப்பா மலை என்றும் குஞ்சிதபாத மலை என்றும் சொல்கிறார்கள்.

குஞ்சிமாப்பா மலையில் வைகாசி முழுநிலவை ஒட்டி வரும் நான்கு நாள்கள் பெரிய சுவாமிக்கு கொடிமரம் நாட்டி சடங்கு இடம்பெற்று வந்திருக்கிறது. குன்றின் உச்சியில் இருந்த அவர் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. எனினும் பொது வழிபாட்டுக்காக குன்றின் மையப்பகுதியில் இருந்த சமநிலத்தில் அவருக்கு இன்னொரு சிறுகோவில் இருந்தது. நிலவு எறிக்கும் வைகாசி முழுமதி நாளில், கடற்காற்று வீச குன்றில் மக்கள் குழுமி, கலைநிகழ்ச்சிகள்,ஆடல், பாடல் என்று பார்க்கவே இரம்மியமாக இருக்குமாம்.

2000களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் வசித்த அமெரிக்கத் துறவி தந்திரதேவா அடிகளாரால் இந்த பெரியசாமி கோவில் திருத்திக் கட்டப்பட்டு கருவறையில் ஒரு முருகன் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் யுத்த காலத்தில் இவை அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. தற்போது இது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பௌத்தத் தலம். இங்கு பெருமளவு உல்லாசப் பயணிகளைக் கவரும் சமுத்திரகிரி ரஜமகா விகாரை அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் புத்தபிரானின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டிருக்கிறது. போதிமாதவனின் புனித தந்ததாது இந்த லங்கா பட்டுனவில் தான் வந்து இறங்கியதாக தற்போது ஐதிகங்கள் தோன்றிப் பரவுகின்றன. இலங்கைக்கு கலிங்க நாட்டிலிருந்து திருப்பற்சின்னத்தைக் கொண்டுவந்த இளவரசி ஹேமமாலை, இளவரசன் தந்தகுமாரன் ஆகியோரின் சிற்பங்களும் அங்கு வடிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைத்துறை முகத்துவாரம் என்ற பெயரும் இப்போது மக்கள் வழக்கில் "லங்கா பட்டினம்" என்று மாறிவிட்டது. முரண்நகை என்னவென்றால் பிரித்தானிய, ஒல்லாந்துக் குறிப்புகளின் படி, இவ்வூரின் பெயர் இலங்கைத்துறை அல்ல; இலந்தைத் துறை. இலந்தை மரங்கள் சூழ்ந்த துறை.

குஞ்சிதபாத மலையின் அருகே, கழிமுகத்தின் அக்கரையில் இலங்கைத்துறை முகத்துவார பத்தினியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. பெரிய சுவாமி, தற்போது கொடிமரம் நாட்டப்பட்டு இங்கும் வழிபடப்பட்டு வருகிறார். இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கு அயலிலுள்ள வாழைத்தோட்டம், வெருகல் முகத்துவாரம் முதலிய ஊர்களிலும் பெரியசாமிக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலும் பெரியசாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குஞ்சிமாப்பா மலைக் கோவில் அழிக்கப்பட்ட பின்னர், இன்று பாற்சேனைக் கோவில் மட்டுமே பிரசித்தமான பெரியசாமிக் கோவிலாக இருக்கிறது.

சரி, யார் தான் இந்த பெரியசாமி? அது தெரியவில்லை. தமிழகத்தில் பிரபலமான நாட்டார் தெய்வங்களுள் ஒருவரான பெரியண்ணசாமியை பெரியசாமி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அவருக்கும் இந்த பெரிய சாமிக்கும் தெளிவான தொடர்பேதும் இல்லை. இவர் போல கப்பலும் கொடிமரமும் தமிழக பெரியண்ணசாமி வழிபாட்டில் பயன்படுவதில்லை. அவரை வழிபடும் மக்களிடம் விசாரித்தால், பெரியசாமி, கப்பல் தெய்வம், குஞ்சிமாப்பா என்ற மூன்று பெயர்களும் ஒரே தெய்வத்தைக் குறிப்பிடும் பெயர் தான் என்றும், இல்லை மூவரும் வேறுவேறு என்றும், அது தனியே ஒரு தெய்வமல்ல; நிறைய குழுத்தெய்வங்களுக்கான பொதுப்பெயர் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

பெரியசாமியின் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களில் "வண்ணான்" என்ற சொல் அடிக்கடி வருகிறது. சலவைத்தொழிலாளர்களுக்குத் தனித்துவமான தெய்வங்கள் பெரிய தம்பிரானும் நீலாசோதையனும். இங்கே குஞ்சிமாப்பா மலையில் பெரியசாமிக்கும், அருகே வெருகல் கல்லடியில் நீலி அம்மனுக்கும் கோவில்கள் அமைந்திருப்பது தற்செயலா என்பது தெரியவில்லை. வெருகல் கல்லடி மலைநீலி ஒருகாலத்தில் கொட்டியாரப்பற்றின் புகழ்பெற்ற தெய்வம். கோணேசர் கல்வெட்டின் படி கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்த நீலாசோதையன் படையினர் வழிபட்ட அம்மன் இவள் என்று மரபுரைகள் நிலவுகின்றன. இன்று கல்லடி மலைநீலி கோவிலும் ஒரு பௌத்த விகாரமாக மாறியிருக்கிறது.

பெரியசாமியை சலவைத்தொழிலாளரின் பெரியதம்பிரானோடு இணைப்பது முடியாத காரியம் என்றால், தமிழகத்திலிருந்து வந்திறங்கி இங்குள்ள மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வேறொரு இனக்குழுவின் குலதெய்வ வழிபாடு என்றே கொள்ளமுடிகிறது. அல்லது கப்பல் பயணத்தில் மரித்தோருக்கு நிகழ்ந்த ஒரு இறந்தோர் வழிபாடும் பெரிய சாமி வழிபாடாக பரிணமித்திருக்கலாம். இலங்கைத்துறை முகத்துவாரத்தில் கப்பல் வடிவில் கடலுக்குள் தெரிந்த ஒரு பாறையை பெரியசாமி வந்த கப்பல் கல்லாகி விட்டது என்று காட்டினார்கள். கடந்த உள்நாட்டு யுத்தகாலத்தில் இரவு வேளைகளில் கடல் ரோந்து போகும் இரு தரப்பினரும் எதிரிப்படையின் கப்பல் என்றெண்ணி இதை மாறிமாறிச் சுடுவதுண்டாம்.

பாற்சேனை பெரியசாமிக்கும் உருவம் இருக்கவில்லை. கொடிமரமாகவே வழிபடப்பட்டிருக்கிறார். எனினும் தற்போது ஆகமவிதிக்கு உட்பட்டு மேல்நிலையாக்கம் அடைந்தபோது, மாலொருபாகன் வடிவாக மாற்றப்பட்டிருக்கிறார். அர்த்தநாரீஸ்வரரை ஒத்த சிவன் - விஷ்ணுவின் இணைந்த வடிவம் அது. அரைவாசி சிவனாக, அரைவாசி திருமாலாக வடிக்கப்பட்ட பெரியசாமியின் திருவுருவமொன்று கோவில் நுழைவாயில் மேலே அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, வசந்த மண்டப விமான மேற்பகுதிகளில் இடபமும் கருடனுமே பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கருவறையில் திருமாலின் ஐம்பொன்னாலான திருவுருவம் நிறுவப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக பெரியசாமியை திருமாலாக அடையாளம் காணும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பாற்சேனை பெரியசாமியின் கொடிமரத்தில் சுற்றப்பட்டிருந்த கொடியில் எட்டெழுத்து மந்திரம் எழுதப்பட்டிருப்பதை அவதானித்தேன். கோவில் திரைச்சீலைகளிலும் ஆழிவண்ணனே புன்னகைக்கிறார். வாசலில் அனுமன் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நான் சென்றிருந்த அன்றிரவு அனுமான் வசந்தனாட்டம் நடக்க இருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். வசந்தனாட்டம் ஆண்களால் ஆடப்படும் கீழைக்கரையின் பாரம்பரியக் கோலாட்டக் கலை. அனுமன் வேடத்தில் சிறுவர்கள் கோலடித்து நடிப்பது தான் அனுமன் வசந்தன். அவசரமாகக் கிளம்பி வேண்டி இருந்ததால், இரவுச் சடங்கோ வசந்தனாட்டமோ பார்க்க முடியவில்லை.

அங்கு சென்று ஓரிருநாட்களிலேயே தற்செயலாக இலங்கைத்துறை முகத்துவாரம் சமுத்திரகிரி விகாரைக்கு போகக்கிடைத்தது. அங்கு பெரியசாமிக்கு முன்பு கோவில் இருந்தது என்பதற்கான தடயமெதுவும் இன்றில்லை. ஆனால் கீழே அக்கரையில் பத்தினியம்மன் கோவிலில் கொடிமரமாக நின்றுகொண்டிருந்த பெரியசாமியை குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். தொன்மங்கள், வரலாறுகள் கண் முன்னே எத்தனை மாற்றமடைகின்றன? பெரியசாமி நின்றிருந்த குன்றில் இன்று புத்தபிரான் வீற்றிருக்கிறார். பெண்கள் போகக்கூடாது என்ற மரபு நிலவிய மலையுச்சியில், புதிய தாதுகோபத்தின் அடியில், சிங்கள அன்னையரும் கன்னியரும் சூட்டுகின்ற மலர்கள் கடற்காற்றில் வாடி அசைந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே பற்சின்னமாக புத்தபிரான் வந்தடைந்ததை நினைவுகூர்ந்து தான் பெரியசாமி தொன்மம் உருவானதா? மெய்வடிவில் மீண்டும் தானே அங்கே அமர புத்தர் திருவுளம் கொண்டாரா? ஆக்கிரமிப்பு, அழிப்பு, திணிப்பு என்றெல்லாம் நாம் புலம்புகின்ற எல்லாமே, நம் கண்ணுக்குத் தெரியாத நுண்சரடுகளைக் கொண்டு நம்மைப் பிணைத்து தெய்வங்கள் கண்சிமிட்டி மகிழ்ந்தாடும் மாய விளையாட்டுக்கள் தானா?

குஞ்சிமாப்பா மலை உச்சியில் நின்று பார்க்கும் போது, பத்தினியம்மன் கோவில் சற்று தெளிவில்லாமல் தான் தெரிகின்றது. அதன் உச்சியில் சிலம்பேந்தி கைநீட்டிக் கூவி, சம்பந்தமில்லாத யாரோ ஒருவரிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறாள் பத்தினி. அருகே வானை முட்டி எழுந்து வண்ணக் கொடிக்கரங்களை அசைத்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது பெரியசாமியின் கொடிமரம். இதோ, என்னருகே, குஞ்சிமாப்பா மலையில், மறுபக்கம் கடலை நோக்கித் திரும்பி ஆசீச முத்திரை காட்டியபடி நிற்கும் ததாகதன் போதிமாதவன் யாரைத் தான் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான்? அல்லது அத்தனை பேரும் சேர்ந்து, அவர்களின் பாராமுகம் கண்டு நெஞ்சம் வெதும்புவோரைஒற்றைச் சொல்லில் சபித்துக் கொண்டிருக்கிறார்களா?

"இதோ புறப்பட்டுவிட்டேன்.", "இல்லை, புறப்படவில்லை" என்று ஒரு நேரத்தில் சொல்வது போல் கடலுக்குள் நின்றுகொண்டிருக்கிறது, கல்லாகிப் போன பெரிய சாமியின் கப்பல். எதிரிப்படையுடையது என்று தவறாகக் கருதப்பட்டு இரு தரப்பினராலும் மாறிமாறித் தாக்கப்பட்ட கப்பல். அங்கிருந்து எழுந்து வந்து ஓலமிட்டபடி என் முகத்தில் அறையும் இந்தக் கடற்காற்று அத்தனை உப்பாக இருக்கிறது. உள்ளே இனம்தெரியாத கசப்பு ஊறிப்பெருக முகம் சுழித்தபடி குஞ்சிமாப்பா மலையிலிருந்து கீழே இறங்குகிறேன்.


மேலும் வாசிக்க »

காலம் மறைத்த ஒரு காப்பியக்கோவில்

0 comments
யாழ்ப்பாணத்தின்  வலிகாமம் மேற்கு பகுதியில் சண்டிலிப்பாய்க்கு  அருகே அமைந்துள்ள ஒரு ஊருக்கு மாசியப்பிட்டி என்று பெயர். அதை மாகியப்பிட்டி என்றும்  சொல்வார்கள்.அந்தப்பெயர் என் கருத்தைக் கவர்ந்த  ஊர்ப்பெயர்களில் ஒன்று. ஏனென்றால் சிங்களத்தில்  தமிழ்த் திசைச்சொற்கள் வந்து சேரும் போது சகரம் ஹகரம் ஆவது வழமை. சந்தி - ஹந்தி. சொதி - ஹொதி, இப்படிப் பல உண்டு. ஆனால் சகரம் ககரமாகத் திரியும் இலக்கண விதி ஈழத்தமிழுக்கும் பொருந்துமா என்று சிந்திக்கவைத்த பெயர்களில் ஒன்று இது. மாசியப்பிட்டி - மாகியப்பிட்டி.  

மாகியப்பிட்டிக்கு மிக அருகே தான் பிரசித்தமான பௌத்தத் தொல்லியல் மையமான கந்தரோடை அமைந்திருக்கிறது.  யாழ் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரம். 

இந்தக் கட்டுரையாசிரியன் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்துக்கு  அடுத்தமுறை போகக் கிடைக்கும்  போது,  மாகியப்பிட்டிக்குப் போகவேண்டும் என்பது அவன் திட்டம். மாகியப்பிட்டிக்கா? காரணம் இருக்கிறது. அதற்கு முதல் ஒரு விடயம் சொல்லவேண்டும்.

ஒரு  தெய்வத்தை புகழ்ந்து பாடும் போது அத்தெய்வம் கோவில் கொண்ட எல்லாத் தலங்களையும் பாடுவது தமிழ் மரபில் வழக்கமான ஒன்று. அந்த மரபை கிழக்கிலங்கையில் கடந்த முந்நூறாண்டுகளில் எழுதப்பட்ட பல கண்ணகி இலக்கியங்களிலும் காணலாம்.   கீழைக்கரையின் கண்ணகி இலக்கியங்களெல்லாம், ஒரு தலம் மீது பாடப்பட்டவை எனினும், தங்கள் இறுதிப்பாடல்களில் தங்களுக்கு அருகே அமைந்துள்ள ஏனைய கண்ணகியின் தலங்களையும் புகழ்ந்தபடி நிறைவுறுகின்றன. தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், செட்டிபாளையம் அம்மன் காவியம், பட்டிமேட்டு ஊர்சுற்று காவியம், உடுகுச்சிந்து,  முதலிய  இலக்கியங்களை இதற்கு  உதாரணமாகச் சொல்லலாம்.

இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பல தலங்களை இந்த ஒன்றுக்கு மேற்பட்ட கோவில்களின் பட்டியலில் மீண்டும் மீண்டும் காணமுடிகின்றது. உடுகுச்சிந்தில் மட்டும் திருக்கோணமலையின்  நீலாப்பளை, மாகாமம் மற்றும் கண்டி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் பத்தினியர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.  ஆனால் அந்த மண்ணில் தோன்றிய கண்ணகி இலக்கியங்களில், கிழக்கிலங்கைக்கு வெளியே அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள ஆலயம் ஒன்றே ஒன்று தான். அங்கணாமைக்கடவை.

அங்கணாமைக்கடவை பற்றி தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், மண்முனை அம்மன் காவியம், குயில் வசந்தன், ஊர்சுற்றுக்காவியம் ஆகிய ஐந்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  25 தலங்களில் வீற்றிருக்கும் கண்ணகியைப் பாடும் எழுபத்திரண்டு பாடல்கள் கொண்ட ஊர்சுற்றுக் காவியத்தின் நான்கு பாடல்கள் அங்கணாமைக்கடவையைப் புகழ்கின்றன.

 மாகியப்பிட்டிக்கு போகும் ஆசை இருந்தது என்று சொன்னேனே, அதற்குக் காரணம் ஒன்று தான்.  கீழைக்கரை கண்ணகி இலக்கியங்கள் பாடும்  அங்கணாமைக்கடவைக் கோவில் அங்கு தான் அமைந்திருக்கிறது. இன்று அதன் பெயர் சண்டிலிப்பாய் மாகியம்பதி கந்தரோடை அங்கணாக்கடவை ஸ்ரீ மீனாட்சி கண்ணகை அம்பாள் ஆலயம்.  மீனாட்சிக்கே இன்று கூடிய முன்னுரிமை இருக்கும் போதிலும், மக்கள் வழக்கில் கண்ணகையம்மன் கோவிலாகவே அறியப்படுகிறது.


அங்கணாக்கடவை மீனாட்சி கண்ணகி அம்மன் ஆலயம்

நாவலர் காலத்து சைவ எழுச்சியின் பின்னரான மேனிலையாக்கத்துடனேயே  அங்கணாக்கடவையில் மீனாட்சி வழிபாடு, ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் அங்கு மீனாட்சியையும் கண்ணகியையும் இணைத்து ஒரு மரபுரை, இவ்வூருக்கு அருகே அமைந்துள்ள அளவெட்டி வெளிவயல் முத்துமாரியம்மன் கோவிலில் வழங்குகிறது. 

முன்பொருமுறை கடும் வரட்சி நிலவிய காலத்தில் முக்காடு போட்டு வெள்ளைச்சீலை உடுத்த மூன்று பெண்கள் தாகத்துக்குப் பசும்பால் கேட்க, அங்கு வயல் உழுதுகொண்டிருந்த ஒரு உழவனின் பால்வற்றிய மாட்டில் பால் சுரந்ததாகவும், அவர்களின் ஆணைப்படி அவன் எறிந்த மூன்று எலுமிச்சைக்கனிகள் விழுந்த இடங்களில் மூன்று கோவில்கள் எழுந்ததாகவும் கதை செல்கின்றது. இரண்டு எலுமிச்சைகள் விழுந்த மாகியப்பிட்டியில் கண்ணகியும் மீனாட்சியும் கோவில் கொண்டனராம்.  வெளிவயலில் மூன்றாமவள் முத்துமாரி.

இன்னொரு கதையின் படி, சேரநாட்டில் கண்ணகி அருள்பெற்று யாழ்ப்பாணத்தின் மாதகல்லில் இறங்கிய கயவாகு மகாராசன் அனுராதபுரம் சென்றபோது, கண்ணகிக்கென அமைத்த முதற்கோவில் அங்கணாக்கடவை. மதுரையை எரித்த பின் மனம் வெதும்பி இலங்கை வந்த கண்ணகி ஐந்துதலை நாகவடிவில் நயினாதீவு வந்ததாகவும், அங்கிருந்து களையோடை, சீரணி, கந்தரோடை வழியாக நாகர்கோவில் வரை சென்றதாகவும் இன்னொரு தொன்மம் செல்கிறது.  
 
யாழ் குடாநாட்டின் ஒரேயொரு ஆறான  வழுக்கையாறு,   அங்கணாக்கடவையை அடுத்து ஓடி அராலியில் கடலில் கலக்கிறது. அதற்கு கண்ணகி வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புண்டு.  கண்ணகி ஐந்துதலைப் பாம்பாக மாறி வழுக்கிச் சென்ற பாதை அது தான்  என்பது தொன்மம். அதன் இருகரையிலும் பல நாகதம்பிரான் கோவில்கள் அமைந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். கிழக்கிலும் கண்ணகி நாகத்தோடு இணைத்து தான் சொல்லப்படுகிறாள். கீழைக்கரையில் கண்ணகியின் ஆதித்தலங்களாகச் சொல்லப்படும் தம்பிலுவில்லிலும் பட்டிமேட்டிலும் அவளுக்குப் பெயரே "நாகமங்கலை" என்பது தான்.

கடந்த பெப்ரவரி மாதம் வேறொரு தேவைக்காக யாழ் சென்றிருந்த போது, அக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கோவிலின் முன்புறம் வழுக்கையாறும், சுற்றிவர மரங்களும் என்று கோவில் அழகாகத் தான் அமைந்திருக்கிறது. வெயிலேறத் தொடங்கிய பொழுது. நாங்களும் கோவிலுக்குள் நுழைய அர்ச்சகரும் கோவிலைப் பூட்ட நேரம் சரியாக இருந்தது.   நிலைமையை விளக்க அர்ச்சகர் பின்கதவை பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். நாங்கள் விட்ட தவறு, அவர் தொடர்பிலக்கத்தையோ, நிர்வாகத்தார் யாருடைய தொடர்பிலக்கத்தையுமோ பெற்றுக்கொள்ளவில்லை. இல்லாவிட்டால் இக்கட்டுரைக்குத் தேவையான மேலதிக தகவல்கள் பல கிடைத்திருக்கக்கூடும். 

ஒரே வளாகத்தில் கண்ணகிக்கும் மீனாட்சிக்கும் அருகருகே கோவில்கள். மீனாட்சியின் கோவிலை நோக்கித் தான் பிரதான வாசல். கண்ணகிக்கும் ஒரு சிறிய நுழைவாயில் இருந்தது. கோவிலில் இப்போதும் திருப்பணி வேலைகள் இடம்பெறுகின்றன. மீனாட்சி அம்மன் சன்னதி ஓரளவு வலம் வந்து வணங்கும் அளவு இருக்கிறது. ஆனால் கண்ணகி கோவில் பற்றை மண்டிக்கிடந்தது. அறிவித்தல் பலகையில் இருந்த அறிவித்தலொன்றில் குளிர்த்தி என்ற சொல்லைக் காணமுடிந்தது. அது கிழக்கில் இன்றும் கண்ணகி வழிபாட்டில் முக்கியமான சொல். 



சரி. வடக்கில் பல கண்ணகி கோவில்கள் இருக்க, அங்கணாமைக்கடவை மட்டும் ஏன் கிழக்கில் போற்றப்பட வேண்டும்? அதற்கு இரண்டு ஊகங்களை முன்வைக்கலாம். 

முதலாவது ஊகம், கிழக்கில் நிலவும் ஒத்துக்குடா கந்தன் பற்றிய தொன்மத்துடன் தொடர்புடையது. போர்த்துக்கேயர் காலத்தில் இடம்பெற்ற சமய ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி, ஏழு அம்மன் விக்கிரகங்களை எடுத்துக்கொண்டு நாடார் குலத்தவரையும் தன் குடும்பத்தவரையும் அழைத்துக்கொண்டு ஒத்துக்குடா கந்தன் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வந்ததாகவும், தகவல் பரிமாறலில் ஏற்பட்ட தவறால், அவரை போர்த்துக்கேய உளவாளி என்று அஞ்சி கண்டியரசனின் ஆளுகையின் கீழிருந்த மண்முனை அரசன் கொன்றதையும் அத்தொன்மம் விவரிக்கின்றது. 

பின்பு அவர் கொணர்ந்த ஏழு விக்கிரகங்களும் வட மட்டக்களப்பில் ஏழு இடங்களில் கோவில் கொள்கின்றன. அந்த ஏழு தலங்களும் எவை எவை என்பதற்கு இன்று சரியான தரவு இல்லை. பிற்காலத்தில்  இந்த கோவில்களிலிருந்து இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் பிரிந்த தரப்பினர் தங்கள் புதிய அல்லது பூர்வீக இடங்களில் தனிக்கோவில்கள் அமைத்திருக்கிறார்கள்.  இன்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆரையம்பதிக்கும்  மகிழூருக்கும் இடைப்பட்ட, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் எழுவான்கரையிலும் படுவான்கரையிலும் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்த ஏழு தலங்களின் பின்னணியில் எழுந்தவை ஆகலாம். 

ஏழுகோவில் தொன்மத்தில் சொல்லப்படும் கந்தனின் சொந்த ஊரான ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் எங்கிருந்தது என்பது இன்று தெரியவில்லை . ஆனால் அங்கணாக்கடவைக்கு கிழக்கில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை சிந்தித்து, ஒத்துக்குடாவானது அங்கணாமைக்கடவைக்கு அருகாக  வழுக்கையாற்றின் கரையில் அல்லது அராலிப்பகுதியில் அமைந்திருந்த ஏதேனும் பழைய ஊர்  என சந்தேகிக்கலாம்.

எனினும் இதை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அங்கணாமைக்கடவையை முன்னிலைப்படுத்தும் தம்பிலுவில் மற்றும் பட்டிமேடு கோவில்களுக்கு ஒத்துக்குடா கந்தன் தொன்மத்துடன் நேரடித் தொடர்பேதும் இல்லை.

எனவே அடுத்த இரண்டாவது ஊகத்தைப் பார்த்தோமானால், கயவாகு தொன்மம் சொல்வது போல, இலங்கையில் எழுந்த முதல் கண்ணகி கோவில் அது ஆகலாம். இலங்கை முழுவதும், வற்றாப்பளைக்குச் சமனான, அல்லது வற்றாப்பளையை விட அதிகமான முக்கியத்துவம் ஒருகாலத்தில் குடாநாட்டு அங்கணாமைக்கடவைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே  மட்டக்களப்பில் உருவான கண்ணகி கோவில்களெல்லாம், அதை ஆதி கண்ணகி தலமாக போற்றி தங்கள் தங்கள் இலக்கியங்களில்  பதிவு செய்து வைத்திருக்கின்றன.


இந்த இரண்டாவது ஊகம் தான் சரி என்றால், இன்று அங்கணாமைக்கடவை கோவிலின் இன்றைய நிலையைப் பார்த்து நாம் பரிதாபம் மட்டுமே படமுடிகின்றது. 

வரலாற்றின் செல்திசை புரிந்துகொள்ளமுடியாதது. தெய்வங்களே அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைவதுண்டு. ஒரு காலத்தில்  கண்ணகியின் மண்ணாக விளங்கிய யாழ்குடாநாடு, இன்று அவளை பெருமளவு மறந்து நிற்பது காலத்தின் விபரீதச் சிரிப்பு என்றால், கிழக்கிலங்கை வரை புகழ்பெற்று பாடல் பெற்ற  பழம்பெரும் கண்ணகி கோவிலொன்று, இன்று அடையாளமிழந்து கேட்பாரற்று  உருத்திரிந்து நிற்பது தான் இன்னொரு சோகம். எளிய மானுடர்கள் நாம். ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடியும். 


கோவிலை விட்டு வெளியேறும் போது ஆற்றாமையுடன் அவள் கோவிலை திரும்பிப் பார்த்தேன். அங்கணாமைக்கடவையாள் ஓவியமாக அப்போதும் புன்னகைத்துக்கொண்டு தான் இருந்தாள். இந்தக் கணக்கெல்லாம் உன்னைப் போன்ற சிறியவர்களுக்குப் புரியப்போவதில்லை என்று சொல்லியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டேன்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner