என்ன கொடுமை சந்திரமுகி இது!

0 comments
ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  


இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பேய்ப்படங்களுக்கான விதை, சந்திரமுகி போட்டது தான் என்று நினைக்கிறேன். 

சந்திரமுகியின் "ராரா"வுடன் தான் வாயில் நுழையாத வரிகள் கொண்ட திரைப்பாடல்களை பாடமாக்கும் என் விசித்திரமான பொழுதுபோக்கு ஆரம்பமானது. அப்போது குரலும் கொஞ்சம் கேட்கும்படி இருந்ததால் வகுப்புத் தோழர் - தோழிகள் உட்பட எல்லோரும் உட்கார வைத்து ராரா பாடச்சொல்லுவார்கள்.  மூச்சுவிடாமல் "ஜிகிபிகி ஜிகிபிகி சொகசுல மொரவினி" என்று கடைசி சரணத்தைப் பாடி, அவர்கள் முகத்தில் தெரியும் வியப்பைக் கண்டு பெருமிதத்தோடு புன்னகைப்பேன். (பல்கலைக்கழகம் போன பின்னர் தான்  எனக்கு மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கே ராரா தளதண்ணியாகப் பாடம் என்று அறிந்துகொண்டு வெட்கித் தலைகுனிந்தேன். 😞)

அப்போது  கல்முனைக் கல்வி மாவட்டத்தில்  சாரணர் பாசறைகள் இடம்பெறும் போதெல்லாம், பாசறைத்தீயில்,  எங்கள் பாடசாலை சார்பில் தவறாமல் இடம்பெறும் நாடகமாக "இலங்கையில் சந்திரமுகி" இருந்தது. பேய் புகுந்தவன் கட்டிலைத் தூக்கும் போது "உதறவா? பெட்சீற்ற நல்லா உதறவா?" என்று கேட்பதிலிருந்து, பேய் விரட்டும் மந்திரவாதி "ஊத்துங்கடா ஒயில" என்று சொல்வது வரை நாங்கள் அந்த நாடகத்தில் செய்த களேபரங்கள் ஏராளம். ஒருமுறை மாவட்ட சாரணர் பொறுப்பாளர் முஸ்தபா சேரே  தனியே கூப்பிட்டுத் திட்டிக் கெஞ்சிய பின்னர் தான், அந்த நாடகத்தை  நடிப்பதை நிறுத்தினோம். 😆


சந்திரமுகி வெளியான போதே, ஒளித்து வாசிக்கத் தொடங்கியிருந்த வீரகேசரி "நடுப்பூட்டு சினிமாத்துணுக்கு"களிலிருந்து அது ஒரு மொழிமாற்றப் படம் என்று தெரிந்திருந்தது. அது கன்னடத்தில் "ஆப்தமித்ரா" என்ற பெயரில் வெளிவந்திருந்தது என்பதும், ஆப்தமித்ராவுக்கு அடிப்படையே கூட "மணிச்சித்திர தாழ்" எனும் மலையாளப்படம் தான் என்பதும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தன. பெரியம்மா குடும்பத்தினர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார்கள். நான் ஆசையாகக் கேட்டவற்றில் முக்கியமாக அடங்கியிருந்தது மணிச்சித்திரதாழ் - ஆப்தமித்ரா இரண்டினதும் 'படச்சீடி'கள்.  


ஆனால் வீட்டில் 'டிஷ் அண்டனா' இணைப்புக் கிடைத்தபின்னர் 2010 முதல்  ஏசியாநெட் தொலைக்காட்சியில் அடிக்கடி  மணிச்சித்திரதாழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.   2011இல் இணையத்துக்கு அறிமுகமான போது, யூடியூப்பில் தேடி கன்னட ஆப்தமித்ரா, இந்தியில் போல் புலையா, வங்காளத்தில் ராஜ்மஹால் எல்லாவற்றின் உச்சக்கட்ட காட்சிகளையும் பார்த்துவிட்டேன். இவை எல்லாமே சந்திரமுகிக்கு முன்பின்னாக வந்த அதே கதையின் வெவ்வேறு மொழி வடிவங்கள்.  

மலையாளத்தில்  சோபனா,  தமிழ் நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?", கன்னடத்தில் சௌந்தர்யா, தெலுங்கு நாகவல்லியாக ஆடும் "ராரா சரசக்கு ராரா", இந்தியில் வித்யா பாலன் வங்கத்து மஞ்சுலிகாவாக ஆடும் "ஆமி ஜே தொமார்", வங்கத்தில் அனு சௌத்ரி ஒரிய (?) சந்திரமுகியாக ஆடும் "அமர் சோக்கே ஆகுன்" என்று, இந்தியப் பண்பாட்டுப் பல்வகைமையை திகட்ட திகட்ட பார்த்து இரசித்தேன்.

ஒரு முறை வந்து பார்த்தாயா?
(மணிச்சித்திரதாழ் 1993)



     


ராரா சரசக்கு ராரா
(ஆப்தமித்ரா 2004)




ராரா சரசக்கு ராரா
(சந்திரமுகி 2005)





அமர் சோகே ஆகுன்
(ராஜ்மகால் 2005)

ஆமி ஜே துமார்
(போல் பூலையா 2007)


இந்தப் படங்கள் எந்தளவுக்கு என்னைப் பாதித்திருந்ததென்றால், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, ஒரு குறும்படம் எடுக்கத் திட்டமிட்டோம். கண்டியின் இராஜசிங்க மன்னனால் படுகொலை செய்யப்பட்ட "சதுராங்கனி" என்ற சிங்கள நாட்டியமங்கையின் சாபம் இலங்கை மக்களை இன்றுவரை பீடித்திருப்பது தான் கதைக்கரு. நல்ல காலமாக அது நிறைவேறவில்லை. பின்பு அந்தக்கருவையே தமிழ் - சிங்கள நாட்டார் வழக்கிலுள்ள குமாரிஹாமி கதையோடு இணைத்து உவங்கள் இணைய இதழில் "அறவாழி" என்ற சிறுகதையை எழுதினேன்.

ஆனால் மணிச்சித்திரதாழைப் பார்த்த பின்னர் தான் தமிழில் அதன் கதை எத்தனை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கன்னட ஆப்தமித்ராவிலும் அதேதான். இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும் விஷ்ணுவர்த்தனும் அந்தப் படங்களில் நடித்ததால் அப்படி கதையை மாற்றுவது கட்டாயமாக இருந்திருக்கிறது. ஆனால், மலையாளத்தில்  முப்பதடிப் பாம்பும் இல்லை; பேயும் இல்லை. அது அருமையான ஒரு உளவியல் படம். அந்தக் கதை முழுக்க முழுக்க இயங்குவது ஷோபனா பாத்திரத்தின் பிளவாளுமை நோயை மையமாக வைத்துத் தான். 

மணிச்சித்திரதாழின் கங்கா, தான் தங்கியிருக்கும் தறவாட்டில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட  நாகவல்லி எனும் தமிழ் நடனமங்கையோடு தன் பிளவாளுமையை இனங்கண்டு கொள்கிறாள். உளவியல் மொழியில் சொன்னால், அவளது அகம் (Ego) கங்காவாக நீடிக்க, அவளது எதிர் அகம் (Alter Ego) நாகவல்லியாகி விடுகிறது. நாகவல்லி, கங்காவின் கணவனையும் தறவாட்டைச் சூழ வசிக்கும் ஒவ்வொருவரையும், தனது காலத்தவர்களாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறாள்.  தன்னை தமிழ் நாட்டிலிருந்து கடத்தி வந்து ஆசைநாயகியாக வைத்திருந்த தறவாட்டுக் காரணவர் சங்கரன் தம்பியாக நாகவல்லி நினைப்பது, கங்காவின் கணவனை! (மணிச்சித்திரதாழில் உள்ள கதை மாறுபாடும் முக்கியமானது. அங்கு  வேட்டையன்  சரவணன் அல்ல; செந்தில். என்னக் கொடுமை சரவணன் இது!)


மணிச்சித்திரதாழில் நாகவல்லியிலிருந்து கங்காவைக் காப்பாற்றும் இறுதிக்கட்டம், சந்திரமுகியில் இடம்பெறுவது போல் ஒரு பேய் விரட்டும் சடங்கும் இல்லை; "சங்கரன் தம்பி இறந்துவிட்டால் நீ கங்காவை விட்டு போய் விட வேண்டும்" என்ற ஆணை நாகவல்லிக்கு தாந்திரீகச் சடங்கு செய்யும் நம்பூதிரியால் வழங்கப்படுகிறது. சங்கரன் தம்பியை தான் கொன்றுவிட்டதாக நம்பும் கங்காவின் எதிர் அகமான நாகவல்லி, அடியோடு ஒழிந்துபோகிறாள். கங்கா குணமடைந்து விடுகிறாள்.

இந்த உளவியல் விளையாட்டு சந்திரமுகியில் தெளிவாக புரியும்படி இல்லை. அல்லது சாதாரண பாமர மனதுக்குப் புரியாது என்று வாசு அதை முழுக்க முழுக்க பேய்க்கதையாகவே மாற்றியிருக்கிறார். விஸ்வநாதன் கங்காவை  திட்டமிட்டு வேட்டையனின் மணிமண்டபத்துக்கு அழைத்துவருவதையோ, ராமச்சந்திர ஆச்சாரியார் "நீ அவனக் கொன்ன பிறகு இந்த தேகத்த விட்டு போய்டுவியா?" என்று கேட்பதையோ, தமிழ் இரசிகனால் பேய் விரட்டுவதற்கான இயல்பான காரணங்கள் என்றே புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்தக் காட்சிகளின் உளவியல் முக்கியத்துவம் என்ன என்பது, மணிச்சித்திரதாழில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

   


ஒரு வலைத்தளத்தில் இன்னொன்று படித்தேன். மலையாளப் பெண்ணான மணிச்சித்திரதாழ் கங்காவுக்கு பிளவாளுமை நோய் ஏற்பட்டால், அவளால் தமிழ் பேச முடியும் என்பதை உளவியல்படி ஏற்கலாம். ஏனென்றால் தமிழ் மலையாளத்தின் அன்னை மொழி. மலையாளியொருவனின் நனவிலி ஆழ்மனதில் எங்கோ சேரநாட்டுத் தமிழ் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகமும் எதிர் அகமும் மோதிக் கொள்ளும் போது, எப்போதோ கேட்க நேர்ந்த தமிழைக் கண்டறிந்து வெளியே உமிழ்வதற்கு மலையாள ஆழ்மனதால் முடியும். ஆனால் தமிழச்சி தெலுங்கு பேசுவதோ, கன்னடத்தி தெலுங்கு பேசுவதோ, இந்திக்காரி வங்காளம் பேசுவதோ, நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதை அமானுஷ்யமானதாக, ஆவியின் வேலையாக மட்டுமே சித்தரிக்கமுடியும். மணிச்சித்திரதாழிடம் அதன் வேற்று மொழி வடிவங்கள் தோற்று நிற்கும் இன்னொரு இடமாக இதைச் சொல்லலாம்.


மணிச்சித்திரதாழில் நான் கண்டுகொண்டது, சோபனா என்னும் மகத்தான நடிகையையும் கூட. கங்கா நாகவல்லியாக மாறி கட்டிலைத் தூக்கும் அந்த காட்சி ஒன்று போதும், சோபனா யாரென்று சொல்ல. சின்ன வயதில் அப்போது அச்சமூட்டிய ஜோதிகா, இந்த சோபனாவுக்கு ஒருபடி கீழ் தான் என்பேன்.  இன்னொரு இடமும் இருக்கிறது. கங்கா நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?" பாடலின் இரண்டாம் சரணத்தில் ஜேசுதாசின் காந்தர்வக் குரலில் ஒரு வரி வருகின்றது. "நாகவல்லீ மனோன்மணீ" என்று அவர் பாடும்போது  மத்தளம் சிணுங்கும் ஒரு இனிய இடம். அதற்கு சோபனா கொடுக்கும் அபிநயம் இருக்கிறதே, அப்பப்பா! 

                                             

 இந்தக் காட்சிக்கு அடுத்துவரும் மலையாள வரிகளும் பூரிக்கச் செய்பவை.

"மாணிக்ய வாசகர் மொழிகள் நல்கி தேவீ, 
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி.
தமிழகமாகெயும் ஸ்ருங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி"

மாணிக்கவாசகரின் திருவாசக மொழிகள். ஆனால் தமிழன் மறந்தாலும் மலையாளிக்கு கண்ணகியை மறக்க முடிவதில்லை. இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு, நாகவல்லி எங்கோ ஒரு இடத்தில்  கண்ணகியையே நினைவூட்டுகிறாள்.  இளங்கோவை மலையாளப்பாடலொன்றில் காணும் போது ஏற்படும் நெகிழ்வு வார்த்தைகளில் விளக்கமுடியாதது. அவன் கேரளத்தவரின் முப்பாட்டன் அல்லவா?

மணிச்சித்திரதாழுக்கு தன்னை இசையமைக்க அழைக்கவில்லை என்பதற்காக இசைஞானி வருத்தப்பட்டதை இப்படத்தின் இயக்குநர் பாசில் பதிவு செய்திருக்கிறார். "இது போன்ற படங்கள், இசையமைப்பாளனுக்கு உண்மையான சவால்கள். இப்படி ஒரு படத்துக்கு நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பேன்?" என்று கேட்டாராம் அவர். முரண்நகையாக  மணிச்சித்திரதாழின் பாடல்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாக்கிருஷ்ணன் "இப்படத்தை எடுக்காதே" என்று இயக்குநரிடம் அப்போது சொல்லியிருக்கிறார். "படம் தோற்கும். இது சொல்ல வரும் செய்தியை பாமர ரசிகனால் புரிந்துகொள்ள முடியாது." என்றிருக்கிறார் அவர். இன்று மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த பத்து படங்களுள் ஒன்று மணிச்சித்திரதாழ்.

மணிச்சித்திரதாழை சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அண்மையில் பார்த்தேன்.  ஆங்கில உபதலைப்புகளுடனேயே யூடியூப்பில் கிடைக்கிறது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் ஒருமுறை பாருங்கள். சந்திரமுகி தமிழுக்குச் செய்த கொடுமை என்ன என்பதை அது சொல்லும்.


பிகு: பிளவாளுமை நோய் பற்றி ஆசான் எழுதியிருக்கும் அருமையான இரு சிறுகதைகள் இருக்கின்றன. உற்றுநோக்கும் பறவை,  தம்பி. அண்மையில்  வெளியாகியிருக்கும் ஓநாயின் மூக்கு  பிளவாளுமையை மேலோட்டமாகத் தொட்டுச்செல்லும் ஒரு மகத்தான படைப்பு. 
மேலும் வாசிக்க »

சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?

0 comments
தமிழ்ப்புத்தாண்டு விடயத்தில் எத்தனையோ சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், தனிப்பட்ட ரீதியில் நான் தயங்கி நிற்கும் ஓரிடம் உண்டு. அது அறுபது ஆண்டு வட்டம். சித்திரைப்புத்தாண்டுக்கு எதிராக வாதிடும் சகலரும் தங்கள் அனைத்து ஆயுதங்களும் தோற்றபின்னர் எடுக்கும் பிரம்மாஸ்திரம் இது தான். "சரி, தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்?"

தமிழ் நாட்காட்டியில் பிரபவ முதல் அட்சய வரை அறுபது பெயர்களைக் கொண்ட ஆண்டு வட்டம் வழக்கில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த  ஒவ்வொரு ஆண்டின் பெயராலும் அழைக்கப்படும். தற்போது 2020  ஏப்ரல் 13ஆம் திகதி பிறந்த ஆண்டுக்குப் பெயர்,  34ஆவது பெயரான சார்வரி. இந்த வட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால், அறுபதாண்டுகளுக்குப் பின் 2080உம் சார்வரியாகத் தான் அமையும். 

நன்றி:  Tamil and Vedas வலைத்தளம்

ஆண்டுவட்டப் பெயர்கள் வெறுமனே வழக்கம் சார்ந்தவை, உண்மையில் சித்திரைப்பிறப்புக்கும் அறுபது பெயர்களுக்கும் தொடர்பில்லை. ஆனால் வழக்கம் என்பதற்காக பொருந்தாத மரபுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?  எத்தனை பாரம்பரியங்களை காலத்துக்கேற்ப கைவிட்டு அல்லது சற்று மாற்றியமைத்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்?  அறுபது ஆண்டுவட்டம் காலத்துக்கேற்றது தானா? 

இந்தக் கேள்விக்கு விடை காண முதல், நாம் ஆண்டுவட்டத்தின் தோற்றத்தைப் பார்க்கவேண்டும். பொதுவாக இன்றைய இந்தியப்பழங்குடிகளின் புத்தாண்டுகள் எல்லாமே வானியலைக் கொண்டு உருவானவை தான் என்பது ஏற்கனவே பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுவட்டமும் அப்படி உருவானது தான்.

ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய குறிப்புகள் வடநாட்டில் வழக்கில் இருந்த சூரிய சித்தாந்தம், ஆரியபட்டீயம், பிருகத் சம்ஹிதை முதலிய வானியல் நூல்களில் கிடைத்திருக்கின்றன. அவற்றுக்கு அங்கு "சம்வத்சரம்" என்று பெயர். ஆனால் அவற்றின் படி, அளக்கப்பட்டது வியாழன் கோளை அடிப்படையாகக் கொண்ட காலம் தான். சூரியன், சந்திரன், விண்மீன்களால் மட்டுமல்ல, வானில் உள்ள கட்புலனாகும் பெரும்பாலான விண்பொருட்களை காலக்கணிப்புக்குப் பயன்படுத்த முடியும். அப்படி, வியாழனைக் கொண்டு கணிக்கப்பட்ட காலம் தான் சம்வத்சர ஆண்டு. வியாழ ஆண்டை "சம்வத்சரம்"  என்றும் சூரிய ஆண்டை "வர்ஷம்" என்றும் வடநாட்டு வானியலில் வேறுபடுத்தித் தான் அழைத்திருக்கிறார்கள். அவற்றின் கணிப்புப்படி, ஒரு வியாழ ஆண்டுக்குரியவை சுமார் 361 நாட்கள். அதாவது சூரிய ஆண்டை விட (அண்ணளவாக 365.25 நாள்)  4.22 நாள் குறைவு. 

ஆனால் தென்னகத்தில் சம்வத்சரங்கள் நேரடியாக வியாழனின் இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தப்படவில்லை. இங்கு ஏற்கனவே வழக்கில் இருந்த சூரிய அல்லது சந்திர ஆண்டொன்றைக் குறிப்பிடவே சம்வத்சர ஆண்டுகள் பயன்பட்டன. எனவே இங்கு வருஷம், சம்வத்சரம் இரண்டும் ஒத்தகருத்துச் சொற்கள் ஆகிவிட்டன.  இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது என்பதில் தெளிவில்லை. கர்நாடகத்தை ஆண்ட சாளுக்கிய மன்னன் மங்களேசனின் பொபி 602ஆம் ஆண்டுக் கல்வெட்டில் 53ஆவது சம்வத்சர ஆண்டான சித்தார்த்தி குறிப்பிடப்பட்டிருப்பதே தென்னகத்தின் ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய  குறிப்பு என்கிறார்கள்.

இன்றும் தமிழர், கன்னடர், தெலுங்கர் ஆகிய மூன்று இனத்தாரும் தான் சம்வத்சர ஆண்டுப்பெயர்களை தங்கள் புத்தாண்டின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். (தமிழரது சித்திரைப் புத்தாண்டு சூரியக்கணக்கு. கன்னடர்-தெலுங்கரின் யுகாதி புத்தாண்டு சந்திரக்கணக்கு. யுகாதியின் படி சார்வரி சம்வத்சரம் போன மார்ச் 25ஆம் திகதியே பிறந்துவிட்டது). 

தமிழகத்தைப் பொறுத்தவரை, பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கல்வெட்டுக்களில் தான் இந்த சம்வத்சரப் பெயர்கள் இடம்பெற ஆரம்பிக்கின்றன.  குறிப்பாக விஜயநகர அல்லது நாயக்கர் காலக் கல்வெட்டுக்களில்.  முக்கியமாக தமிழ்ச் சோதிடம் பற்றிய பல தகவல்களை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகின்ற இலங்கையின் மிகப்பழைய சோதிட நூலான சரசோதிமாலையிலே கூட (1310இல் எழுதப்பட்டது) ஆண்டுவட்டப் பெயர்கள் எங்கும் இல்லை.

பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தையதாகக் கருதப்படும்  "வருடாதி வெண்பா" என்ற நூலில் தான் நேரடியாக அறுபது ஆண்டுகளின் பெயர்ப்பட்டியல் தமிழில் முதன்முதலாகக் கிடைக்கின்றது. அதை சித்தர் இடைக்காடர் பாடியதாகச் சொல்கிறார்கள். அவர் தான் பாடினார் என்பதற்கு வேறெங்கும் சான்றுகள் இல்லை.  அது காலத்தால் பிந்திய இட்டுக்கட்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லலாம். பத்தாவது சம்வத்சரமான தாது வருடத்துக்கு 'வருடாதி வெண்பா'வின் பாடல் இதுதான். தாது வருடத்தில் வேதனையே இல்லை. விளைவு இருக்குமாம். குளிர்மழை பொழியுமாம். உலகம் உய்யுமாம். 

தாது வருடம் தராதலத்தோர் வாழ்ந்திருப்பார் 
வேதனையுமில்லை விளைவுண்டு – சீத 
மழை பெய்யும் பரிவாரம் பேருடனே 
எந்நாளும் உய்யும் படி உலகிலுண்டு

வேதனை என்னவென்றால் 1876இல் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நீடித்து தமிழகத்தையே உலுக்கிய தாது வருடப் பஞ்சம், உலக வரலாற்றில் மோசமான பேரிடர்களில் ஒன்று. அது ஆரம்பித்தது தாது வருடமான 1876இல் தான். 

அது போகட்டும். இந்தப்பட்டியலை எதிர்ப்பவர்கள் எழுப்பும் விமர்சனங்கள் மொத்தம் மூன்று இருக்கின்றன. முதலாவது, நாம் ஏற்கனவே பார்த்த 'தமிழ் ஆண்டுக்கு வடமொழிப் பெயர் ஏன்' என்பது. 

"ஆண்டுவட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால் மூடத்தனமானது, அதனால் காலம் காட்டமுடியாது" என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்வி தவறு. அப்படி அல்ல. நமது வாரங்கள், மாதங்கள் எல்லாமே மீளத்தொடரும் வட்டங்கள் தான். குறித்த ஆரம்பப் புள்ளியொன்றைத் தீர்மானித்து வட்டத்துக்கு இலக்கமிட்டு இத்தனையாம் வட்டத்தின் இந்த ஆண்டு என்று குறிப்பிட்டால், அவற்றாலும் காலம் காட்டமுடியும். என்ன, நாம் அப்படி காலம் கணிக்க அதைப் பயன்படுத்துவதில்லை.

அறுபது ஆண்டுகளை எதிர்ப்பவர்கள் கூறும் மூன்றாவது காரணம் கொஞ்சம் பதினெட்டு சக சமாச்சாரம். பெண் வடிவெடுத்த நாரதருக்கும் கண்ணனுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள் தான் இந்த சம்வத்சரங்கள் என்ற கதை அது. 

நாரதர் பெண்ணாக மாறிய கதை பல்வேறு புராணங்களில் இடம்பெற்றிருப்பது தான். தேவி பாகவதத்தில் அவர் சௌபாக்ய சுந்தரி எனும் பெண்ணாக மாறி கன்னோசி மன்னன் தாலத்துவஜனை மணந்து பன்னிரண்டு அல்லது எட்டு பிள்ளைகளைப் பெறுகிறார். அதன் சில வேற்றியங்களில்  சௌபாக்ய சுந்தரிக்கு குழந்தைகளே இல்லை. பத்ம புராணத்தின்படி கிருஷ்ணனின் ராசலீலையைக் காண்பற்கு பெண்ணாக மாறி கோலோகம் சென்று ஒருவருடம் கோபிப்பெண்ணாக மகிழ்ந்திருக்கிறார் நாரதர்.

நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த ஒவ்வொரு புராணக்கதைக்கும் பின்னே சொல்லப்படும் நீதி வெவ்வேறு. ஆனால் இவை எதிலும் கண்ணனுக்கும் நாரதப்பெண்ணுக்கும் பிறந்த அறுபது வருடங்கள் என்ற கதை இல்லை. அது உண்மையில் கடந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறுகுறிப்பு தான். வெறும் இந்துத்தொன்மம் என்பதற்கு மேல் அதற்கு எவ்வித முன்னுரிமையோ நம்பகத்தன்மையோ கொடுக்கத்தேவையில்லை.

ஒட்டுமொத்தத்தில், ஆண்டுவட்டம் இப்போதும் தமிழ் உலகுக்குத் தேவையா என்ற கேள்விக்கு அறுதியும் இறுதியுமான பதில், தேவையே இல்லை என்பது தான். ஏன்?

சூரிய - சந்திர நகர்வை காலக்கணிப்பில் பயன்படுத்தும் தமிழ் நாட்காட்டிக்கு வியாழக் கணிப்பீடு தேவையற்றது. அதிலும் சூரிய ஆண்டுகளை வியாழ ஆண்டு சம்வத்சரத்துக்குச் சமனாகக் கணிக்கும் இன்றைய பட்டியல் எவ்விதத்திலும் காலத்துக்குப் பொருத்தமானதே அல்ல. சரியாகச் சொன்னால் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே, இவை வழக்கில் வந்திருந்தபோதே, திருத்தியிருக்கவேண்டிய தவறு இது. 

இன்னொன்று, சித்திரைப்புத்தாண்டு தமிழரின் மரபான புத்தாண்டல்ல என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு ஏற்பட்டதற்கு முதன்மையான காரணமே இந்த வடமொழிப் பெயர்கள் தான். தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்? 

சம்வத்சரக் கணக்கு இன்றும் சமயம் சார்ந்ததாகவே பயன்படுகிறது - பஞ்சாங்கங்களில், கோவில் அறிவித்தல்களில், மங்கல நிகழ்வுகளின் அழைப்பிதழ்களில். அங்கெல்லாம் ஆண்டுவட்டப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை தமிழர்களே உணர்ந்துகொண்டு நிறுத்தவேண்டும். வருடப்பிறப்பு அறிவித்தல்களிலும்  விளம்பரங்களிலும் அந்தப் பெயர்களை பிரபலப்படுத்துவதை தமிழ் ஆர்வலர்கள் இனி மேற்கொள்ளவே கூடாது.

ஆண்டுப்பெயரை பயன்படுத்தாமல் அழைப்பிதழ் தயாரிப்பதென்றால், "நிகழும் மங்களகரமான.....??" அடுத்து என்ன போடுவது? நம் வருடம் வெறுமனே  மொட்டையாக இருப்பதா?

கொல்லம், ஹிஜ்ரி போல தமிழருக்கென ஆண்டுக்கணக்கொன்று இதுவரை உத்தியோகபூர்வமாக இல்லை தான். திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்று ஏற்கனவே நம் மத்தியில் வழக்கில் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்கனவே பல குழப்பங்கள் இருக்கின்றன. உலகின் எல்லா நாட்டுத் தமிழரும் திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசின் படி தை முதலாம் திகதி அது ஆரம்பிக்கின்றது. அதன் கணிப்புக்கு (பொது ஆண்டோடு 31ஐக் கூட்டுவது) எந்தவிதமான அறிவியல் காரணமும் இல்லை. வள்ளுவர் பொமு 31இல் பிறந்தார் என்பது வெறுமனே மறைமலையடிகளின் ஊகம் தான். முன் தோன்றி மூத்தகுடி என்று பெருமைபேசும் தமிழினம் ஒரு அறிவியல் ஆதாரமோ வானியல் - வரலாற்றியல் காரணங்களோ இல்லாத ஒரு ஆண்டுக்கணக்கையா தனக்கெனப் பின்பற்றுவது?

நமக்கென நாம்  ஒரு ஆண்டுக்கணக்கை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.

1. கீழடி முதலிய தமிழர் தொல்மையங்களில் கிடைக்கும் ஏதாவது மிகப்பழைமையான ஒரு பொருளை, காபன் திகதியிடலுக்கு உட்படுத்தி அதன் சரியான பயன்பாட்டு ஆண்டைக் கண்டுபிடித்து, அதில் துவங்கும் "தமிழ் ஆண்டு" ஒன்றை நிர்ணயித்தல். அதைவிடப் பழைய பொருள் ஒன்று எதிர்காலத்தில் கண்டறியப்படலாம் தான். ஆனால் நமக்கு இது பயன்படுவது ஒரு நியமக் கணக்கீட்டுக்காக. அந்தப்பெறுமானம் எதிர்காலத்தில் கூடுவதாலோ குறைவதாலோ, ஆண்டுக்கணக்கில் எவ்வித தாக்கமும்  ஏற்படத்தேவையில்லை.

2. வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழரிடம் வழக்கில் இருக்கும் கலி ஆண்டு, சக ஆண்டு, விக்கிரம ஆண்டு என்பவற்றில் ஒன்றை தற்காலிக நியமமாக எடுத்துக்கொள்ளல். இவற்றில் பெரிய பெறுமானமாக, அதேவேளை பெரும்பாலான இந்திய இனக்குழுமங்களின் உத்தியோகபூர்வமற்ற காலக்கணிப்பு ஆண்டாக இருக்கும் கலியாண்டை நான் தனிப்பட்ட ரீதியில் இப்போதைக்கு முன்மொழிவேன்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திராமல் இதில் ஒன்றை யாரேனும் செய்ய முயலலாம். அவசரமில்லை. "கொவிட்" பேரிடரிலிருந்து உலகம் மீண்ட பின்னர் கூடச் செய்யலாம் 😊.

கடைசியாக ஒன்று, தனிப்பட்ட ரீதியில் ஆண்டுவட்டம் காலத்துக்குப் பொருத்தமற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், மரபுவாதிகளுக்கு அது  சற்று கடினமாக இருக்கும் என்பது புரிகிறது. எவ்வாறேனும் அறுபது ஆண்டு வட்டத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்ன செய்வது?

அதற்காக ஏற்கனவே ஓரளவு பிரபலமாக இருக்கும்  தமிழறிஞர் சத்தியவேல் முருகனாரின் அறுபது தமிழ் வருட பெயர் பட்டியலை  பரிந்துரைக்க முடியாது. அந்தப் பெயர்கள் வடமொழிப் பெயர்களுக்குச் சமனான தமிழ் மொழிபெயர்ப்புகள் அல்ல. சில மொழிபெயர்ப்புகள் முற்றிலும் தவறானவை கூட. எனவே பொருத்தமான ஒரு அறுபது பெயர்ப்பட்டியல் ஒன்றை தமிழர்களே தாமாகத் தயாரித்துக்கொள்ள வேண்டியது தான். 

தாது வருடப் பஞ்சத்தை சுட்டிக்காட்டி, இந்த உரையாடலை தொடக்கி வைத்து, என்னோடு பேசிக்கொண்டிருந்த சைவ அறிஞர் முருகவேள் ஜயச்சந்திரன் ஐயா அவர்கள், தமிழ்ச்சைவர்கள் வேண்டுமென்றால், சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் அறுபது பேரின் பெயரைப் பயன்படுத்தலாமே என்று  கூறினார். தேவார முதலியரான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால், ஏனைய அறுபதின்மர் பெயரையும் அறுபது வருடங்களுக்குச் சூட்டலாம் என்றார் அவர். இதை சைவ உலகு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

எது எவ்வாறேனும், அறுபது ஆண்டுகள் என்ற காலத்துக்கொவ்வாத மரபிலிருந்து தமிழர்கள் முற்றிலும் வெளியேறுவதே சாலப்பொருத்தம் என்று கருதுகிறேன்.  வயதிலும் அனுபவத்திலும் சிறிய ஒருவனின் பரிந்துரை இது. நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற முடிவு தமிழ் அறிஞர்பெருமக்களின்  கையில்.

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
தம்பை மாநகர் புத்தாண்டு
மேலும் வாசிக்க »

ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்

0 comments

அம்மம்மா வீட்டில் நடுவறையிலிருந்த புழுதி பிடித்த புத்தக அலுமாரியில் மூன்று ஏட்டுச்சுவடிகளைக் கண்டபோது எனக்கு வயது பதினொன்று. அவை அலுமாரியின் அடித்தட்டில், செல்லரித்து பக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த "மகாமாரித்தேவி திவ்வியகரணி"க்கும் "மூவருலா"வுக்கும் நடுவே,  சற்று நைந்துபோன "டொப்டெக்ஸ்" வேக்கில்  சுற்றிக் கட்டி சொருகப்பட்டிருந்தது. டொப்டெக்ஸ் அப்போது கல்முனையில் பிரபலமாக இருந்த துணிக்கடை. உடுப்பு வாங்கும் கடையின் பெயர், பெஸ்ட்பொயிண்டா, றஸ்பாஸா, முபாரக்கா பெயர் பற்றியெல்லாம் கவலை இல்லை.  உடுதுணி வாங்கும் எல்லா பொலித்தீன் பைகளுமே எங்கள் வீட்டில் "டொப்டெக்ஸ் வேக்கு" தான்.

வேக்கில் இரண்டு பழுப்புநிற சிறு ஏட்டுச்சுவடிகள். சணற்கயிறால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தன. மூன்றாவது மிகப்பெரியது. கறுப்பு நிறம். கையில் தூக்கி வைத்தால்  நீளமான கருங்காலிப்பலகை போல பாரித்தது. 

நான் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தபோது அம்மப்பா வீட்டில் இல்லை. காளையடிக்கு சென்றிருந்தார். இது மாந்திரீகம் செழித்த பூமி. மந்திரம் எழுதிய வாகடங்கள் பற்றி அவர் கதை கதையாகச் சொல்லியிருந்தார். சில ஏடுகளைத் திறப்பதற்கு முதல் சொல்வதற்கென்றே மந்திரங்கள் உண்டு.  வசியம், ஏவல் போன்றவற்றுக்கான மந்திரங்களை எளியவர்கள் பார்க்கக்கூடாது என்றே அந்த ஏற்பாடு. குறித்த மந்திரம் சொல்லாமல் திறந்தால் கதை முடிந்தது. மந்திரம் படிக்கும் ஆவலில் பரிசாரியார் ஒருவரின் மந்திர ஏடுகளை இரகசியமாகப் இரவில் திருடி வந்து வாசித்த ஒருவர் மறுநாள் கையில் ஏட்டுடன் இரத்தம் கக்கி செத்துக்கிடந்த கதையை அவர் சிலநாட்களுக்கு முன் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த  ஏட்டை விரித்துப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. வீட்டில் அம்மம்மாவிடமோ ஏனையவர்களிடமோ சொன்னால் பூசை கிடைப்பது உறுதி. பேசாமல் மூன்றையும் சுற்றிக்கட்டி வைத்துவிட்டேன்.

மாலை அம்மப்பா திரும்பியதும் தயங்கித் தயங்கி ஏடுகள் பற்றிக் கேட்டேன்.  "பயந்திற்றாயெல்லோ?" சத்தமாகச் சிரித்தபடி அலுமாரிக்கு அழைத்துச் சென்று டொப்டெக்ஸ் வேக்கை திறந்தார். பேக்கைத்திறக்கும் சரசரப்பே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. இரண்டு சிறிய ஏடுகளும் ஏதோ புதையல் இரகசியம் எழுதிய புத்தகங்கள் போல் விதிர்விதிர்க்கச் செய்தன. 

"இது குளுத்தில் காவியம். அம்மங்கோயில்ல குளுத்திலண்டக்கி ராவுல படிக்கிர. மத்தது பெருங்கதை. புள்ளையார் நோம்புல படிக்கிர." 

"அப்ப அது?" பெரிய ஏட்டைச் சுட்டிக்காட்டினேன்.

"அது அம்மன்  வளக்குரை. உப்ப விரிக்கப்பொடா. சடங்கு நேரத்தில மட்டும் தான் துறக்கலாம்"

"அதெப்பிடி? குளுத்தில் காவியத்த துறந்தேலே?"

"அத என்னேரமும் விரிக்கலாம். குளுத்தில் காவியத்தில குளுத்திப்பாட்டு மட்டுமில்ல. கனமா இரிக்கி. உனக்குப்ப அதெல்லாம் தேவல்ல. "

எனக்கு ஓரளவு புரிந்தது. பெரிய ஏட்டில் கண்ணகி வழக்குரை மட்டும் இருக்கிறது. வைகாசிச் சடங்கில் ஏழு நாளும் கோவிலில் பாடப்படுவது. அதை மற்ற நேரங்களில் அவிழ்த்துப் படிக்கக்கூடாது. சடங்கின் ஏழாம் நாள் இரவில் பாடப்படும் குளிர்த்திக்காவியம் இப்போது என் கையில் இருக்கிறது. அதில் வேறு சில பாட்டுகளும் இருப்பதால் படிப்பதில் தவறேதுமில்லை. அதை விரித்துப் பார்த்தேன்.

"சிரபொருநதுமைஙகரனே. இதென்னாதி இது? ஒண்டும் விளங்கல்ல"

"அதப்பிடி இல்ல. எழுத்தில குத்து இருக்காது. இடைவெளி இருக்காது. நம்ம தான் விளங்கி வாசிக்கோணும். நீ சொன்னது சீர் பொருந்தும் ஐங்கரனே" 

எனக்கு வியப்பாக இருந்தது. குற்று இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாக்கியங்களா, அவற்றை படித்து புரிந்துகொள்ளவும் முடியுமா?

"சரி இஞ்ச கொண்டா. இதெல்லாம் தமிள் எளுத்தெண்டு உனக்கு விளங்கினதே பெரிய விசயம்." 

அம்மப்பா அப்படிச் சொன்னது என் தன்மானத்தை  சீண்டியது. ஏன், இது அத்தனை கடினமா? என்னால் வாசிக்க முடியாதா?

"அம்மப்பா இது மூண்டையும் தாங்கோ, வாசிச்சிப்போட்டு தாறன்"
"உனக்கென்னத்துக்குறா மனே?"
"தாங்கோவன். நான் எல்லாம் படிக்கப்போறன். குளுத்தில்  பாடமாக்கோணும்."

அவர் சிரித்தார்  "நீ பாடமாக்கி என்னெய்யப்போறாய், வடுவா, இது செஞ்சேரியான் படிக்கிரது."

அவர் தென்சேரி. அவர்கள் தான் குளிர்த்தி பாடமுடியும். அம்மன் கோவிலில் எனக்கு உரிமை இல்லை. நான் வடசேரி.  அம்மம்மாவின் குடி. 

"அதெல்லாம் தெரியா. உப்ப தரப்போறேலோ இல்லயோ"
"செரி. அப்ப மத்த ரெண்டயும் கொண்டோ. வளக்குரை இஞ்சே கிடக்கட்டும். கவனமா வெச்சிக்கொள்ளு"

எனக்கும் சரி போலத் தான் தோன்றியது. சும்மா பார்க்கும் போதே அச்சமூட்டிய அந்தக் கருங்காலிப் பலகை அங்கேயே இருக்கட்டும். 

நான் இரண்டு ஏட்டையும் எங்கள் வீட்டுக்குக் கொணர்ந்து சாமியறையில் வைத்தேன்.  குளிர்த்திக் காவியம்  ஏட்டைத் தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். இரண்டு நாட்கள் கஷ்டமாகத் தான் இருந்தது. மெல்ல மெல்லப் பழகி விட்டேன். 

வாழ்க்கையின் வியப்புக்குரிய விடயங்களில் ஒன்று இருக்கிறது.  இலகுவில் கிட்டாத பொருளொன்றில் ஏற்படுகின்ற ஆர்வம், அது கிடைத்த பின்னர், ஏற்பட்ட வேகத்திலேயே வடிந்து விடும்.   ஏடுகள் பல மாதங்கள் அதற்குப் பிறகு விரிக்கப்படவே இல்லை. சாமியறையில் தினமும் அம்மாவின் ஒற்றைச் செவ்வரத்தம் பூக்களைச் சூடும் புனிதப்பொருட்களாக அவை மாறி மாதங்கள் கடந்திருந்தன. அம்மப்பா இறந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் அவற்றை எடுத்துப்பார்த்தேன். 

அப்போது 2004 டிசம்பர் பாடசாலை விடுமுறை. அம்மப்பா இறந்தபின், அவரது புத்தக அலுமாரி எனது கைகளுக்கு வந்திருந்தது. ஏதோ எண்ணம் தோன்றி தேடிப்பார்த்தபோது வழக்குரை ஏடு இருந்த டொப்டெக்ஸ் வேக்கைக் காணவில்லை. அல்லது அவர் யாருக்கும் கொடுத்திருந்தாரோ! அது இல்லாமல் போய்விட்டது. அந்தக் கருங்காலிப் பலகையை அஞ்சினேன் என்பதால் அதன் இழப்பு அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. (இப்போது வேதனையாக இருக்கிறது 😔)   

பிறகு தான் நினைவு வந்து சாமியறையில் பட்டுச் சுற்றப்பட்டு இன்னுமொரு சாமியாக மாறியிருந்த ஏடுகளை அவிழ்த்து மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.  அத்தனை கடினமாக இருந்தது. பிள்ளையார் பெருங்கதை ஏற்கனவே வீட்டில் புத்தகமாக இருந்தது. ஆனால் குளிர்த்திக் காவியம்? சில சொற்களை இன்னதென இனங்காணவே முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை சர்வசாதாரணமாக வாசித்தவன் நான் எனும் எண்ணமே வெட்கத்தைத் தந்தது. மற்றவர்கள் முன் அல்ல, தனக்கு முன் தானே அவமானப்படுவது தான் உலகின் மிகப்பெரிய அவமானம். 

எனக்குள் இருந்த இன்னொருவன் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். இவன் வாயை அடைக்கவேண்டும். அடுத்த தடவை இதை விரித்து இவனிடம் சர்வசாதாரணமாக வாசித்துக் காட்டவேண்டும். கடைசியில்  அவனே ஐடியா தந்தான்.  "ஏட்டில வாசிக்கிர தானே கஸ்ரம்? இடைவெளி வுட்டு குத்து வெச்சி ஒரு  கொப்பில எழுதிவையன்?" 

2004 டிசம்பர் 21 அந்தக் காரியத்தைத் தொடங்கினேன்.  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பாட்டு என்று கண்ணகை அம்மன் காவியத்தை கைப்பிரதியாக எழுதிக்கொண்டிருக்கும் போது சுனாமி அனர்த்தம். இடம்பெயர்ந்து சின்ன மாமாவின் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களிலும் கொப்பியை எடுத்து வந்து எழுதிக்கொண்டிருந்தேன். அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் 2005 ஜனவரி நான்காம் திகதி  அதை வெற்றிகரமாக எழுதிமுடித்தேன்.  


15 வருடங்கள் தாண்டிய பொக்கிஷம்.
அம்மன் காவியம் கையெழுத்துப் பிரதி

வழக்குரை போல் இல்லாமல், இந்த ஏட்டை எந்த நேரமும் எடுத்துப் படிக்கலாம் என்று ஏன் அம்மப்பா சொன்னார் என்று அப்போது புரிந்தது. அதில் உண்மையில் ஆறு காவியங்கள் இருந்தன.  எழுதி முடித்த காவியம் தவிர, குளிர்த்திக் காவியம், கண்ணகி அம்மன் வயந்தன் பள்ளு, கண்ணகி அம்மன் கும்மி, செவ்வாட்டு வயந்தன், ஐவர் காவியம் என்று ஐந்து.   ஐவர் காவியம், மகாபாரதத்தின் சுருக்கம்.  திரௌபதி வழிபாட்டோடு தொடர்புடையது. செவ்வாட்டு வயந்தனில் கொம்புமுறி வசைப் பாடல்கள் இருந்தன. ஏனைய நான்கும் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்குரியவை.  

குளிர்த்திக் காவியம் தான் என் பிரதான இலக்கு என்பதால், அடுத்து அதை எழுதினேன். பின்பு பள்ளும் கும்மியும். அவை முடிந்ததும் மீண்டும் ஆர்வம் வடிந்துவிட, ஏடு மீண்டும் சாமியறையை தஞ்சமடைந்தது. இடையில் சம்மாந்துறையில் ஒரு கண்காட்சிக்காக ஒரு ஆசிரியர் வந்து கேட்டபோதும், என்  பாடசாலையில் கலைநிகழ்ச்சிகளுக்காக தேவைப்பட்டபோதும் அது அங்கிருந்து எழுந்தருளி ஊர்வலம் சென்று திரும்பியது. 

அதன் பின் பழைய ஆர்வம் தூண்டப்படுவதற்கு ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டன.   உயர்தரப்பரீட்சையின் பின் கிடைத்த விடுமுறையில் 2011இல் ஏட்டிலிருந்த செவ்வாட்டு வயந்தனை கைப்பிரதியாக எழுதினேன்.  எஞ்சியிருந்தது ஐவர் காவியம் மட்டும் தான். 21 ஓலைகள் கொண்ட அந்தச் சுவடியில் அது தான் நீளமானது.  ஐந்து ஓலைகளில் 26 பாடல்கள்.  ஏனோ அதை எழுத பொழுதும் கூடவில்லை.  எனக்கு கண்ணகி அளவு திரௌபதி மனதைக் கவர்ந்தவள் அல்ல என்பதும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். 

செவ்வாட்டு வயந்தன் கையெழுத்துப் பிரதி

கடைசியாக 2014இல்  கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அந்த குளித்தில் ஏட்டை எடுத்துச் சென்றேன். ஒரு குறும்படத்துக்காக.  அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். ஆனால் அது மட்டக்களப்பு மாந்திரீக ஏடு என்று பொய் சொல்லி  இளமுறை நண்பர்களை சந்தோசமாக 'பேய்க்'காட்ட முடிந்ததில் எனக்கு குதூகலமாகப் போய்விட்டது. கூட இருந்த ஒன்று இரண்டு கிழக்கிலங்கை நண்பர்கள் ஆமாம் சாமி போட, "அப்ப இதெல்லாம் உண்மைதானாடா" என்று அவர்கள் முகம் வெளிறி அமர்ந்திருக்க, சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமென்று தலையாட்டினேன்

அதற்குப் பிறகு அந்த இரண்டு ஏட்டையுமே மறந்துவிட்டேன். இரண்டாண்டுகளுக்கு முன் நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்துக்காக ஊர் முழுக்க அலைந்தபோது, அம்மப்பாவின் சொந்த வீட்டிலிருந்து உதிரி ஓலைகளாக அவரது தாய்வழி முதுசமான  "வள்ளி அம்மானை" எனும் ஏடு கிடைத்தது. அதை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்கிறேன்.   அது சிதைந்த உதிரி ஓலைகளாகக்  கிடைத்ததில் எனக்கு அத்தனை கவலை இருக்கவில்லை. ஏனென்றால், சித்தாண்டி முருகன் கோவிலில் அது பாடப்படும் தகவல் கிடைத்திருந்தது. அவசரமென்றால் எப்படியும் அங்கு தேடி எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை தான். (அந்த அம்மானை போன ஆண்டு டிசம்பரில் அச்சில் வெளிவந்து விட்டது என்பது நிறைவாக இருக்கிறது. கலாநிதி.முருகு தயாநிதி அவர்களின் பதிப்பு. 2019, வள்ளியம்மன் அம்மானை, புதுச்சேரி தமிழ்ப்புதுவை வெளியீடு.)

வள்ளி அம்மானையை கண்டெடுத்தபோது  வீட்டு ஏடுகளின் நினைவு ஏற்பட்டது உண்மை. ஆனால் தேடவில்லை. எங்கே போகப்போகிறது. இங்கு தான் எங்கோ பாதுகாப்பாக  இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எல்லாம் நேற்று மாலை வரை தான்.

அக்காவும் அத்தானும் புத்தாண்டுக்காக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். எங்காவது ஏடு கிடைத்தால் எடுத்து வை என்று அக்காவிடம் சொல்லியிருந்தேன். மாலை தான் அக்கா சொன்னாள் "உண்ட ஏடு கிடைச்சிது பாத்தயோ? அந்தப் பெட்டிக்குள்ள இரிக்கி" அவள் சொன்னதில் இருந்த இகழ்ச்சிக் குறிப்பை நான் கவனிக்கவில்லை. ஆர்வத்தோடு போய் பெட்டியைத் தூக்கினேன்.  உள்ளே செல்லரித்த புத்தகங்களும் துண்டு துணிகளும் கையோடு வந்தன. அதிர்ந்தபடி பெட்டியைக் கவிழ்த்தால், அரிக்கப்பட்டு உதிர்ந்த ஓலைத்துண்டங்கள் சிதறி விழுந்தன. எலியின் வேலை. ஒரு ஓலை கூட முழுமையாக எஞ்சவில்லை.  எல்லாம் போய்விட்டது. இனி அவை இல்லை. ஒன்று கூட இல்லை. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது.



நல்ல காலமாக அவற்றில் பிள்ளையார் பெருங்கதை ஓலைகளைக் காணமுடியவில்லை. எனவே கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது. அது மட்டுமாவது எங்கோ தப்பியிருக்கிறதென்று. இந்த விடுமுறைக் காலத்துக்குள் எப்படியாவது தேடி எடுத்துவிடவேண்டும்.  "செரி. அப்ப மத்த ரெண்டையும் கொண்டோ. கவனமா வெச்சிக்கொள்ளு" என்று அம்மப்பா ஆதூரமாகத் தந்த இரண்டில் ஒன்று. அது அம்மப்பாவின் எனக்கான பரிசு. விலைமதிப்பற்ற பரிசு. அதில் ஒன்றை என்றைக்குமாக இழந்துவிட்டேன்.

ஓரளவு மனநிறைவைத் தருவது என்னவென்றால், அதன் கையெழுத்துப் பிரதி என்னிடம் இருக்கிறதென்பது தான். ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரு நினைவுமலரில்  பிரசுரிப்பதற்காக அதிலிருந்த பாடல்களை அண்ணா ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். செவ்வாட்டு வயந்தன் தவிர ஐந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நூல்களில் முழுமையாக அச்சில் வெளிவந்திருக்கின்றன. வீ சீ கந்தையா பதிப்பித்த கண்ணகி வழக்குரையில் (1968) அம்மன் காவியமும் குளிர்த்தியும் பின்னிணைப்பாக வெளிவந்திருக்கிறது. 

ஐவர் காவியம், கிழக்கிலங்கை கிராமிய இலக்கியங்களின் தொகுப்பான "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் (1971) திரௌபதையம்மன் காவியம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அம்மன் கும்மியும் அம்மன் பள்ளும் நா.நவநாயகமூர்த்தி அவர்களின் "தம்பிலுவில் கண்ணகி வழிபாடு" (1999) நூலில் வெளியாகி இருக்கிறது. அதிசயம் என்னவென்றால் அவருக்கு ஏட்டிலிருந்த இந்த கும்மியையும் பள்ளையும் கையெழுத்துப்பிரதியாக  எழுதிக்கொடுத்தது அம்மப்பா தான். அதை அவர் அங்கு அடிக்குறிப்பாக எழுதியிருக்கிறார். செவ்வாட்டு வயந்தனின் சில பாடல்கள் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அச்சில் வராத பாட்டுக்கள் அதிகம். அவற்றை எப்படியோ கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றிவிட்டேன். அதுவரைக்கும் எனக்கு திருப்தி தான். 

இந்தப் பாடல்களில் எதுவுமே அச்சில் வராமல் ஒருவேளை இழக்கப்பட்டிருந்தால் அப்படி என்ன அரிய செய்தி இல்லாமல் போயிருக்கும்? இரண்டு சிறிய உதாரணங்களைச் சொல்கிறேன். அம்மன் வயந்தன் பள்ளு இறுதியாக இப்படி முடிகிறது.

"பார்வாழி தென்திருக்கோயில் குமரன் வாழி
பார்த்திப நரேந்த்ரசிங்க மூர்த்தியும் வாழி
கார்வாழி தம்பிலுவில் ஊர்வாழி - வந்தருள்செய்
கண்ணகைத் தாய் நீடூழி காலம் வாழியே"

பார்த்திப நரேந்திரசிங்க மூர்த்தி யாரென்று தெரியுமா? 1707 - 1739 இடையே கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் வீர நரேந்திரசிங்கன். அடுத்தது அம்மன் கும்மியில் வரும் இறுதிப் பாட்டு.

"வாழி பூவாழி மறைவாழி - மன்னன்
வர ராசசிங்கன் வாழி
ஊழிகாலம்  வரை பட்டின் கண்ணுறை
கண்ணகைத் தாயாரும்  வாழியதே"

இவன் எந்த ராஜசிங்கன் என்று தெரியாது. கிழக்கிலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கண்டி மன்னர்களாக வாய்மொழியில் நினைவுகூரப்படுபவர்கள் பலர். இரண்டாம் இராஜசிங்கன் (1635–1687), விஜய ராஜசிங்கன் (1739 - 1747) மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747–1782). ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் எவரும் ஆகலாம். 

தம்பிலுவில் கண்ணகியைப் புகழும் இவை இரண்டும் என் ஊரில், ஒருவேளை என் கொள்ளுப்பாட்டனோ அவரது எள்ளுப்பாட்டனோ பாடியிருக்கக்கூடிய பாடல்கள். அவர்கள் பாடியது என்பதற்கு மேல்,  இன்றியமையாத முக்கியத்துவம் இவற்றுக்கு உண்டு. கீழைக்கரையோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த நெருக்கமான பந்தத்துக்கு சான்று இந்த இலக்கியங்கள். கண்டியின் சிங்கள மற்றும் நாயக்க மன்னருக்கும் கிழக்கிலங்கைக்குமான அரசியல் - சமய - சமூக உறவு இதுவரை ஆராயப்படாத சுவையான புலங்களில் ஒன்று. அதற்கு உதவக்கூடிய முதன்மையான சில சான்றுகளை மயிரிழையில் இழக்க இருந்தோம்.  

ஐவர் காவியத்தை கடைசிவரை படியெடுக்கவே இல்லை என்பதால், அது என்றைக்குமாக இல்லாமல் போய்விட்டது என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். சிதைந்தொழிந்து விட்ட ஏட்டில் எஞ்சிய ஓலையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் பரிசோதித்துப் பார்த்து, அங்கு அது  துரோபதையம்மன் காவியமாக அச்சில் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் நெஞ்சில் தண்ணீர் வந்தது. இப்போதும் மீளாமல், பித்துப்பிடித்தவன் போல் கையெழுத்தாக எஞ்சியிருக்கும் செவ்வாட்டு வயந்தனை தடவி மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.


ஒருவேளை என் ஏட்டை, குறிப்பாக செவ்வாட்டு வயந்தனை  கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றாமல் விட்டிருந்தாலோ, அல்லது ஐவர் காவியம் என்பது அச்சில் வராத வேறொரு நூலாக இருந்திருந்தாலோ, இந்தக் குற்றவுணர்விலிருந்து அத்தனை சீக்கிரம் வெளிவந்திருக்கமாட்டேன். இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் உங்கள் யாரோ ஒருவர் வீட்டில், சின்னச் சின்னக் கவனயீனத்தால் எத்தனை ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை இழந்துகொண்டிருக்கிறீர்கள்?

அதனால் தான் சொல்கிறேன். ஏட்டில் இருந்ததை கையெழுத்தாக எழுதி வைத்த கதையைச் சொல்லி முடித்துவிட்டேன்.   நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான். பிரமாதமாக ஒன்றுமில்லை.

ஆவணப்படுத்துங்கள், இன்றே இப்போதே.


பிகு: யாழ்ப்பாணத்தில் நூலகம் நிறுவனத்தையும், மட்டக்களப்பில் அதன் கிழக்குக் கிளையையும் ஆவணப்படுத்தலுக்கென தொடர்பு கொள்ள முடியும்.  தொட்டால் உதிரும், செல்லரித்த ஏடுகளை, அரிய ஆவணங்களைக்கூட எண்ணிமப்படுத்தி மூல ஆவணத்தை உங்களிடமே திருப்பித் தருவார்கள். அதன் மின்வடிவத்தை, எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க  ஆவணகம் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது.  
மேலும் வாசிக்க »

இரு இசைத்தொகுதிகள்

0 comments
இந்த நாட்களை இனிதாக்கிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான இசைத்தொகுதிகளைச் சொல்லவேண்டும்.


முதலாவது திரு ராஜன் சோமசுந்தரம் அவர்களின் "சந்தம்: செந்தமிழைச் சந்திக்கும் சிம்பொனி" இசைத்தொகுதி (Sandham: Symphony Meets Classical Tamil). சங்க இலக்கியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடல்கள் சிம்பொனி இசையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "வேரல் வேலி" (குறுந்தொகை 18), பிரியங்கா பாடிய "முல்லை ஊர்ந்த" (குறுந்தொகை 275), ராஜலட்சுமி பாடிய "ஞாயிறு காயாது" (குறுந்தொகை 378), சைந்தவி பாடிய "கலம்செய் கோவே" (புறம் 256), கார்த்திக் - பிரகதி பாடிய யாயும் ஞாயும் (குறுந்தொகை 40), கார்த்திக் பாடிய "யாதும் ஊரே" (புறம் 192) என்று ஆறு பாடல்கள். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும் அ.முத்துலிங்கமும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரிகள், இன்றும் இயல்பான மானுட உணர்வுகளை நமக்குக் கடத்தும் போது ஏற்படும் சிலிர்ப்பு ஒருபக்கம். உலகின் வேறு எத்தனை இனத்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும் என்ற பெருமிதம் இன்னொரு பக்கம்.
இதில் யாயும் ஞாயும் (இருவர் - நறுமுகையே), வேரல் வேலி (இதயம் - கோச்சடையான்), ஆகிய இரண்டும் கவிப்பேரரசு உபயத்தில் சாதாரண திரையிசை ரசிகர்களும் அறிந்த வரிகளைக் கொண்டவை.
சில பாடல்களுக்கு வரிகளும் அர்த்தமும் இணைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் பாடல்களைக் கேட்கமுன்பு மேற்படி ஆறு சங்கப் பாடல்களின் பொருளையும் இணையத்தில் தேடிப் படித்துவிட்டுக் கேளுங்கள். இல்லாவிட்டால், "முல்லை ஊர்ந்த" பாட்டில் "ஈர் மணற் காட்டாறு வரூஉம் தேர் மணிகொல்?" என்ற வரிகளை அடுத்து சட்டென மேல்ஸ்தாயியில் எழும் ஆண் குரல் சொல்லவருவது என்ன; "கலம்செய் கோவே" பாடல் முடியும் போது ஏன் வீணை நரம்பு அறுந்துவிடுகிறது; இப்படி ஒவ்வொரு பாட்டிலும் உள்ள சிறுசிறு குறியீடுகள் புரியாமல் போய்விடும். (வீணை அல்ல; உண்மையில் சாரங்கி எனும் இசைக்கருவி அது)
ஏன் சொல்கிறேனென்றால், சில மீம்கள் புரிவதற்கு, குறிப்பிட்ட படத்தை நாம் பார்த்திருக்கவேண்டும், இல்லையா? 
சந்தம் கேட்க: https://tinyurl.com/rmaqqgv
இரண்டாவது இசைத்தொகுதி, ஈஷா அமைப்பின் "தேவாரம்: தமிழ்ப்பக்தியின் பெருக்கெடுப்பு " (Thevaram: The Outpourings of Tamil Devotion). பெருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும் ஈஷாவின் சிவராத்திரி விழாவில் அது வெளியிடப்பட்டது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பே யூடியூப்பில் வெளியாகிவிட்டது. தில்லைவாழந்தணர், மந்திரமாவது நீறு, பித்தா பிறை சூடி, தோடுடைய செவியன், வானனை, மாதர்ப்பிறைக்கண்ணி ஆகிய ஆறு தேவாரங்களும் நவீன இசைக்கலப்பில் இனிமையாக வெளிவந்திருக்கின்றன. பித்தா பிறைசூடி இதில் என் முதல் தெரிவு.
ஒரு புத்திந்து (Neo Hindu) அமைப்பாக, ஈஷா மீது தனிப்பட்ட ரீதியில் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், அங்கு எனக்கு மிகப்பிடித்த விடயம் இது. இசை, நடனம், நாடகம் இவை மூன்றும் தமிழ் மரபில் கோவில் சார்ந்து வளர்ச்சி கண்டவை. ஆனால் மரபார்ந்த சைவத்தில் அவை எப்போதோ மறக்கப்பட்டு விட்டன. அதிலும் திருமுறை ஓதும் போது (ஓதுதல் என்பதற்கு தமிழில் முதன்மையான அர்த்தமே பாடுதல் என்பது தான்) வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. பழங்காலக் கல்வெட்டுக்களைத் தட்டினால், திருப்பதியம் விண்ணப்பிப்பதும், விதவிதமான இசைக்கருவிகள் மீட்டப்படுவதும் கோவில்களில் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பது தெரிகின்றது.
திருமுறைகளை நவீன இசைக்கலப்பில் கேட்கும் போது ஏற்படும் உணர்வு வார்த்தைகளில் விபரிக்கமுடியாதது. இசைஞானியின் சிம்பொனி திருவாசகம், திரைப்படங்களில் வந்த பாருருவாய (தாரை தப்பட்டை), மாசில் வீணையே (கோச்சடையான்), தாயிற்சிறந்த (அழகுக்குட்டிச்செல்லம்) முதலியன இந்தப்பட்டியலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
மேற்படி பாடல்களில் தொனிக்கும் மிகையான நவீன நெடி மரபார்ந்தவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் ஈஷாவின் இந்த இசைத்தொகுதியில் அந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்பேன்.
"தமிழோடிசை பாடுவது' என்ற பாரம்பரியத்தையே மறந்துவிட்டோம். ஈஷாவின் இசைத்தொகுதி அதைச் செய்துகாட்டியிருக்கிறது. புத்திந்து அமைப்புக்களை குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில் இது போன்ற நல்ல முன்மாதிரிகளை மரபுச்சைவத்தில் நடைமுறைப்படுத்த நாம் முயலலாம்.
தேவாரம் இசைத்தொகுதி யூடியூப்: https://tinyurl.com/thevaram
(பிகு: ஈஷா சிவராத்திரியில் புகழ்பெற்ற "சோஜுகாதா" கன்னட நாட்டார் பாடலின் தமிழ் வடிவமும் நன்றாக இருக்கிறது. இங்கே: https://tinyurl.com/tjdaaol )
மேலும் வாசிக்க »

எவனோ ஒருவன் கை அம்பு

0 comments


நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான்.

'தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன்

ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி எங்கேயோ வாசித்தோமே? அதுவும் நினைவில்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது. மறதி சாத்தியம் தான். கவையில்லை, அது 1509ஓ 1507ஓ, ஐநூறாண்டுகள் கடந்துவிட்டதே எழுத வேண்டிய விடயம் தான் என்று எழுதி வலைப்பதிவிலும் போட்டதைத் தான் நீங்கள் படித்தீர்கள்.

இன்று காலை வழக்கம் போல 5.55, 6.00, 6.05 என்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால், அதை ஒலி அணைத்தபடி தொடர்ந்தும் தூங்கி வழிந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு கனவு. கனவென்றும் சொல்லமுடியாது. ஒரு நினைவு. கொழும்பு அருங்காட்சியக நூலகத்தில் அமர்ந்து சி.பத்மநாதனின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற ஆங்கில நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பழுப்பு நிறப் பக்கங்களில் தைப்பூசம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை நுணுக்கமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று தைப்பூசம் என்பது நினைவில் இருந்தது உண்மை. பேராசிரியர் பத்மநாதனின் அந்தப் பெயருடைய ஒரு ஆங்கில நூல் இருப்பதும் உண்மை. ஆனால் அதில் தைப்பூசம் பற்றிய எந்த விபரமும் இல்லை. நான் கொழும்பு அருங்காட்சியகத்துக்கு பலமுறை சென்றிருந்தாலும், அங்கிருந்த நூலகத்துக்குச் சென்றது ஒரே ஒரு தடவை தான். அதுவும் போன டிசம்பர் மாதம், இதற்குப் பின் எப்போது சாத்தியமாகிறதோ தெரியாது என்ற அச்சத்தில் போய் வந்தேன். வருகிற போது அருகே இருந்த விற்பனைச் சாலையில் மேற்படி ஆங்கிலப் புத்தகத்தைக் கண்டேன். அதில் பிரசுரமானவை தமிழிலும் பிரசுரமாகி நான் ஏற்கனவே வாசித்து விட்ட கட்டுரைகள். எனவே வாங்கவில்லை. ஆனால் இன்னொரு ஆங்கிலப் புத்தகம் வாங்கினேன்.சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் சிறிமல் ரனவல்லவின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள சிங்களக் கல்வெட்டுக்கள்".


இப்படி ஒரு கனவு அல்லது நினைவு வந்ததும் தான் அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. நான் கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பி இரண்டு மாதங்களாகி விட்டது. ரனவல்லவின் புத்தகம் உட்பட கொழும்பில் பயன்படுத்திய புத்தகங்களெதுவும் பொதி அவிழ்க்கப்படாமல் அப்படியே பழைய அலுமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அட! இந்தப் புத்தகம் வாங்கியதை மறந்தே விட்டோமே, வாசிக்கவேண்டும் என்று எடுத்து வந்து தட்டிக்கொண்டிருந்தபோது தான் ஆறாம் விஜயபாகுவின் தெவிநுவரப் பலகைக் கல்வெட்டைக் கண்டேன். ஆறாம் விஜயபாகு பற்றிய அந்த சிங்களக் கல்வெட்டு அவனை இப்படி அறிமுகப்படுத்துகிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ சுத்த சக வருஷ எக் தஹஸ் சாரசிய தெனிஸ்வன்னெஹி ரஜ பெமிணி ஸ்வஸ்தி ஸ்ரீ மகாசம்மத பரம்பரானுயாத சூரிய வங்ஷாபிஜாத ஸ்ரீலங்காதிபதி ஸ்ரீமத் சிறிசங்கபோ ஸ்ரீ விஜயபாகு சக்ரவத்தி ஸ்வாமின் வஹன்செட்ட சதர வன்னென் மது அவுறுது பொசொன"

இதன் பொருள் இது தான். "மங்கலம் பொலிக. சுத்தமான சகவருடம் 1432இல் முடிசூடியவரும், மகாசம்மதரின் பரம்பரையில் சூரிய வம்சத்தில் உதித்தவருமான இலங்கைக்கதிபதி சிறிசங்கபோதி விஜயபாகு சக்கரவர்த்தி அவர்களின் நான்காம் (ஆட்சி) ஆண்டில் பொசன் மாதத்தில்"

இங்கு வரும் மகாசம்மதன் என்பவன் பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் க்ஷத்திரிய குலத்து முதல் மன்னன். பெரும்பாலான சிங்கள மன்னர்கள் தாங்கள் அவன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்தியக் கல்வெட்டுக்கள் போல சில இடங்களில் சக ஆண்டுக்கணக்கையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொசன் எனும் சிங்கள சந்திரவழி மாதம், தமிழ் ஆனி மாதத்துக்குச் சமனானது.

இலக்கியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தக்கூடிய ஆண்டுகளை விட, கல்வெட்டு ஆண்டுகள் ஒப்பீட்டளவில் திருத்தமானவை. சக ஆண்டு, கிரகோரியன் ஆண்டுக்கு 78 ஆண்டுகள் பிந்தியது. விஜயபாகு மன்னன் முடிசூடிய ஆண்டு சக ஆண்டு 1432 என்கிறது தெவிநுவரைக் கல்வெட்டு. ஆக கணக்கிட்டால், கிரகோரியன் படி அவன் ஆட்சிக்கு வந்தது, 1432 + 78 = 1510!

எனவே இனி ஐயத்துக்கிடமில்லை. 1507ஓ, 1509ஓ, 1513ஓ அல்ல; ஆறாம் விஜயபாகு ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஆண்டு 1510. ஆக, அவன் பத்தாம் ஆட்சியாண்டில் தம்பிலுவில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது, 1520இல். சரி தான். இந்த 2020ஆம் ஆண்டுடன் மிகச்சரியாக 500 ஆண்டுகள் ஆகிவிட்டது!

தெவிநுவர பலகைக் கல்வெட்டை, இந்து பண்பாட்டுத் திணைக்களத்தின் மாநாட்டில் கடந்த ஒக்டோபரில் வாசித்த "தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்" கட்டுரைக்காக படித்திருக்கிறேன். "தம்பிலுவில் கல்வெட்டு" கட்டுரை எழுதிக்கொண்டிருந்த போது, அதை எடுத்து தகவலை சரி பார்க்க ஏன் எனக்குத் தோன்றவில்லை?

இன்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் தைப்பூசத்தையும் கொழும்பு அருங்காட்சியகத்தையும் முடிச்சுப் போட்டு ஏன் அந்தக் கனவை நான் காணவேண்டும்? அந்தக் கனவு ஏன் ரனவல்லவின் நூலை நினைவூட்டவேண்டும்? அந்த நூலை தேடி எடுத்துப்பார்க்கும் எனக்கு, தெவிநுவரக் கல்வெட்டில் விஜயபாகுவின் சரியான ஆட்சியாண்டு ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? ஐந்து நாட்களின் பின்பு நான் எழுதிய கட்டுரை சரி தான் என்று ஏன் உணரவேண்டும்?

வரலாறு, ஆய்வு என்றெல்லாம் எழுதும் போது, "உன் எழுத்துநடை நன்றாக இருக்கிறது", "உன் வயதில் இந்த ஆய்வைச் செய்வதெல்லாம் பெரிய விடயங்கள்", என்று நிறையப்பேர் பாராட்டியிருக்கிறார்கள். அதை எண்ணி சந்தர்ப்பங்களில் இலேசாக தலைக்கனம் ஏறுவதும் உண்டு. அப்போதெல்லாம் ஓங்கி சம்மட்டியால் அடிப்பது போல் இப்படி ஏதாவது நிகழும்.

"இது எதையுமே நீ செய்யவில்லை. நீ செய்விக்கப்படுகிறாய். நீ வெறும் கருவி. உனக்கு இந்த இந்தத் துறையில் ஆர்வமேற்படவேண்டும் என்று நீயா விரும்பினாய்? உன் இலட்சியங்கள் என்ன? இப்போது நீ இருக்கும் இடம் என்ன? கர்வப்படாதே, நீ அம்பு மட்டும் தான். எய்பவன் வேறொருவன். இந்த இந்த விடயங்கள் உன் மூலம் நிகழவேண்டும் என்று மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்த்திவிட்டு ஓரமாக ஒதுங்கிக்கொள். அதற்கு மேல் உனக்கொரு இடம் இல்லை."

வேறெங்கோ, வெகு தூரத்தில் நின்று இப்படி யாரோ சொல்லுவதைப் போல அடிக்கடி உணர்கிறேன். உண்மையில் எல்லா சாதாரண மனிதருக்கும் உரிய சாதாரண கோபதாபங்கள் எனக்கும் உண்டு. அர்த்தமற்ற எண்ணங்கள், பொருந்தாத் துயர்கள், குழப்பங்கள், தயக்கங்கள். இப்போது அவையெல்லாம் பெருமளவுக்கு இல்லை. அவை வருவது ஏதோ ஒரு காரணமாகத் தான். என்னைச் செலுத்தும் பெருவிசைக்குத் தெரியாதா அதெல்லாம்? அதைத் தீர்க்கும் வழியையும் அந்தப் பெருவிசை அறியும். என்னைக் காக்கும். பிரபஞ்சப்பெருவிசை!

ஏன் கடவுள் நம்பிக்கை தேவை என்று கேட்டால் என் முதன்மையான பதில் இது தான். வாழ்வு பொல்லாதது. அது உங்களை சுக்கு நூறாக உடைத்தெறியும் தருணங்கள் பல வாழ்க்கையில் வரும். மனதளவில் நீங்கள் எத்தனை வலியவர் என்றாலும் அதற்கு முகங்கொடுக்க முடியாத நிலை உங்களுக்கு ஏற்படலாம். திட்டியோ தழுவியோ அழுதோ அப்போதைக்கு தள்ளாடாமல் பிடித்துக்கொள்ள ஒரு தூண் தேவை. பெரும்பாலும் அந்தத் தூண் இறைநம்பிக்கை தான்.

அப்படி, யாரோ ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கின்ற முடிவுறாத திரைக்கதையொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதே எத்தனை இனியது. இயக்குநரைத் தெரியாது. அடுத்த காட்சி யார், என்ன நடக்கும் என்றும் தெரியாது. இதில் நடிப்பதே அருமையான விளையாட்டு. நடிகன் ஒருபோதும் தலைக்கனம் கொள்ளக்கூடாது. அவன் நடிப்பு மொத்தமாக சீர்கெட்டுவிடும். அல்லது இயக்குநன் அவனைக் கடாசி விட்டு வேறொரு நடிகனைத் தேர்ந்தெடுக்கக் கூடும்.


நான் எவனோ ஒருவன் கையில் அம்பு என்பதை மட்டுமே பெருமையாக எண்ணிக் கொள்ள விரும்புகிறேன். கையில் அம்பை ஏந்தி, அந்த அம்பு ஆணவம் கொண்டதால், அதை நினைத்துப் புன்னகைத்து, அந்தப் புன்னகையாலேயே முப்புரங்களை எரித்தவனின் கதை புராணங்களில் உண்டு. எப்போதாவது இந்த எளிய அம்பு அப்படி கர்வத்தோடு எண்ணிக் கொள்வதைக் கண்டீர்களென்றால் சுட்டிக்காட்டிவிடுங்கள். "ஆடாதே, நீ வெறும் அம்பு தான்" என்று

மேலும் வாசிக்க »

பாயும் ஒளி நீ எனக்கு!

0 comments

ரட்சகன் ஸ்ரீதரின் 'பாயும் ஒளி'

ரட்சகன் ஸ்ரீதர் என்பவர் பாடிய பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" பாடலை அண்மையில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பாடல் அருமையாகத் தான் இருக்கிறது. ஆனால் முன்பும் இந்தப்  பாடல் நிறைய வடிவங்களில் வந்திருக்கின்றது. அவற்றில் சிறந்ததாக நான் கருதுவது சைந்தவியின் "பாயும் ஒளி". அது 2013இல்  நிவாஸ் கே பிரசன்னாவின்  "Kannamma - Eternal Love" எனும் இசைத்தொகுதியில் வெளியானது. அதன் பெரும்பாலான பாடல்கள் இப்போதும் என் கைபேசியை ஆக்கிரமித்திருப்பவை. குறிப்பாக இந்த "பாயுமொளி", "நின்னையே இரதி என்று", "தூண்டில் புழுவினைப் போல்" மூன்றும்.


சைந்தவியின் பாயும் ஒளி.

பாரதியின் பாடல்களில்,  அருமையான ஒன்று இந்தப்"பாயுமொளி நீ எனக்கு". அதில் தொனிப்பது, நாயகியை நினைத்து நாயகன் கொள்ளும் அளவற்ற பெருமிதம். உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அத்தனை அன்பு இருக்கிறதோ - இல்லையோ, அந்த அன்பும் உண்மையோ - பொய்யோ, "நீ இல்லாமல் நான் இல்லை" என்பதை  உவமைகளால் நிரப்பி கொஞ்சம் ஓவராகவே செல்லும் அழகான பாடல் அது.  பாரதியிலும் தவறு சொல்ல முடியாது தான். வள்ளுவனின் குறளில் "நலம் புனைந்துரைத்தலாக", இறையனாரின் குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கையாக" வெளிப்படும் தமிழ் அகத்துறை மரபின் தொடர்ச்சி அது. அதை விடுங்கள், இன்று வரை  உங்களில் எத்தனையோ பேர்  கூட இப்படி (பயத்திலாவது) "மானே தேனே" போட்டுக்கொண்டு தானே இருக்கிறீர்கள்? 🤣


பாடல் முழுக்க பாரதி தனக்கும் கண்ணம்மாவுக்கும் பயன்படுத்தும் உருவகங்கள் வழக்கமானவை தான். தேன் -  அதைக்குடிக்கும் தும்பி. வீணை - அதை மீட்டும் விரல், ஆபரணம் - அதில் கோர்க்கும் வைரம், மழை - மழையைக் கண்டாடும் மயில், பானம் அது ஊற்றப்படும் பாண்டம். இப்படிப் பல. ஒன்றை ஒன்று விட்டுப் பிரியாத, ஒன்றை ஒன்று நிரப்புகின்ற இருமைகள். பாரதியை  பின்பற்றித் தான்  பாரதிதாசனும் பின்பொருமுறை "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று மகிழ்ந்திருக்கிறார்.

ஆனால் பாரதியின் உவமைகளில் திடுக்கிடச் செய்யும் ஒன்று, நான்காவது சரணத்தில் வருகின்றது. "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்று தொடங்குகிறது அது.  வெண்ணிலவும்  கடலும்? நிலவு வானுக்குரியது. கடல் கரையோடு விளையாடுவது. ஆனால் இயற்கையின் நியதியில் நிலவும் கடலும் கூடிக்களிக்கும் தருணமொன்று வாய்த்துவிடுகிறது. 






நிலவொளி பிரதிபலிக்கும் கடலைப் பார்த்திருக்கிறீர்களா? சந்திரன் தன் மீது திகழும் அந்தக் கொஞ்சநேரம்  கடல் வெள்ளிநிறத்தில் பளபளக்கும். உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் இயற்கையின் அருமையான  காட்சிகளில் ஒன்று அது. அது நிகழ்ந்த பின்னர் நிலவு தன் பயணத்தை இயல்பாகத் தொடர்கின்றது. கடல் அலைக்கரங்கள் வீசி சாதாரணமாக கரையைத் தழுவிக்கொண்டிருக்கிறது. என்ன சொல்ல வருகிறான் பாரதி?


பாரதி உருகி உருகிப் பாடிய பல கவிதைகள் கண்ணம்மாவை நோக்கிப் பாடப்பட்டவை. மகாகவி ஒருவனின் உள்ளத்தை  இத்தனை ஆட்கொண்ட இந்தக் கண்ணம்மா யார் என்று நிறையப்பேர் ஆராய்ந்திருக்கிறார்கள். தன் மனைவி செல்லம்மாவைத் தான் அவர் கண்ணம்மா என்று  பாடுகிறார் என்று சொல்வார்கள் சிலர். பாரதி இறையேற்பர் - ஆத்திகன் என்பதால் தன் குலதெய்வமான கண்ணனைத் தான் அப்படி பெண் வடிவில் துதித்திருக்கிறார் என்றும், இல்லை இல்லை, சிவசக்தியையே நேரடியாகப் பாடுகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.


ஆனால், ஒருவேளை, பாரதியின் கற்பனையை நிறைத்திருந்த கண்ணம்மா அவர் மனைவி செல்லம்மா இல்லை என்று ஆகும் போது நமக்கு ஏற்படும் துணுக்குறல் கொஞ்சநஞ்சம் அல்ல.  செல்லம்மாவின் வாக்குமூலத்தின் படி, அவர்களது உறவு, ஊடலும் கூடலும் நிறைந்த ஒரு சாமானியத் தம்பதியின் போராட்டம் மிகுந்த உறவாகவே இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. கண்ணம்மா ஏன் வேறொருத்தியாக இருக்கக்கூடாது? 


வாசகனாக பாரதியிடம் நான் அத்துமீறுவதாக நீங்கள் கருதலாம். இல்லை. அவனை ஆராதிக்கிறேன். ஆனால் கலைஞனின் மனதை சாமானியர்களோடு ஒப்பிடமுடியாது.


ஒரு உதாரணம் சொல்கிறேனே. கிசுகிசுக்களில் இத்தனை ஆர்வம் காட்டுகிறோமே, ஏன் சினிமாத்துறையினர் , அரசியல்வாதிகள் மட்டுமே இத்தனை கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பிரபலம் என்பதால் என்று சிலர் சொல்லலாம். இல்லை அவர்கள் இப்படி உணர்ச்சிகரமானவர்களாக  இருப்பதற்குக் காரணம், மீறல். இத்தகையவர்களுக்கு மட்டுமே வாய்த்த மீறல்.

அந்த மீறல் இருப்பதால் தான் அவர்கள் சாதாரண மக்களிலிருந்து ஒருபடி மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அழகு, திறமை,  அறிவு, பலரை ஈர்க்கும் வல்லமை இவை எந்தவித முயற்சியுமின்றி இயல்பாகவே கிடைப்பது சிலருக்குத் தான். அப்படி அள்ளிக் கொடுத்த ஒருவரிடம், இயற்கை, நிகராக இன்னொன்றைப் பறித்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தராசை சமப்படுத்துவது ஒழுக்கமோ, மகிழ்வான மணவாழ்க்கையோ, புகழோ, உடல்நலமோ, பிள்ளைகளோ, நிம்மதியோ ஏதோ பெறுமதியான ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒரு  உதாரணத்துக்கு அரசியல் - திரைத்துறைக்குச் சொன்னாலும், இதை சமூகத்தால் கொண்டாடப்படும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாரிடமும் நீங்கள் காணலாம் - எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  விஞ்ஞானிகள், புத்திஜீவிகள் உட்பட. சில விதிவிலக்குகள் உண்டு தான். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


நான் பாரதியை வாசிப்பது இந்தக் கோணத்திலேயே. பாயுமொளி நீ எனக்கு என்று ஒரு பெண்ணை - பெரும்பாலும் செல்லம்மாவை, அல்லது மகள்  தங்கம்மாவை பாரதி போற்றுகிறான் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், மகளுக்கு இந்தப் பாடலை பாட வாய்ப்புக் குறைவு.


இன்னொரு துப்புக் கிடைக்கிறது. பாரதியாரின் இரண்டாவது மகள் பெயர் சகுந்தலா. துஷ்யந்தனுக்காகக் காத்திருந்தவள். எத்தனையோ புராணப் பாத்திரங்கள் இருக்க மகாகவி ஒருவன் தன் மகளுக்கு அந்தப் பெயரை வைக்கக் காரணம் என்னவாக இருக்கும்?

தனது வாழ்க்கை வரலாற்றில் தன் பள்ளிப் பருவக்  காதலி பற்றி சொல்லியிருக்கிறார் பாரதி. அவரது மணமே 12 வயதில் இடம்பெற்ற குழந்தைத் திருமணம் தான். அதில் காதலியா? ஆம். அவளை அவர் அறிமுகப்படுத்துவது..

'ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்'

இந்த சகுந்தலை  தான் பாரதியின் கண்ணம்மாவா? எது எப்படியோ சரஸ்வதி, திருமகள், காளி என்று மூன்று காதலாக, அவன் கனவுகளில் வெளிப்பட்ட பெண் செல்லம்மா அல்லாத வேறொருத்தி என்றே தெரிகிறது.


 பாரதியின் நிலை இப்படி இருக்க, பாயும் ஒளி கவிதை எழுந்த நனவிலிப் பெருவெளியில் அவனையும் மீறி வெளிப்பட்டவள் கண்ணம்மை. வெண்ணிலவு அவள், மேவும் கடல் அவன்.  அந்த இணை நீடிக்கப் போவதில்லை; ஆனால் இயற்கையின் இணைகளிலேயே அதியற்புதமானது. வெவ்வேறு இலக்குகளுடன் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட  இருவர்  ஒருவரையொருவர் கடந்து சென்ற போது,  மற்றவருக்கு நிகர்த்துணையாக நிற்க முடிந்த தருணமொன்று எனலாமா?


இந்தத் துணுக்குறலோடு வாசிக்கும் போது பாயுமொளி நீ எனக்கு பாடலில் தொனிப்பது பெருமிதம் தான் அல்லது, குதூகலம் தான் என்று சொல்லத் தோன்றாது; அது முழுத்த துயர். அல்லது நிர்மலமான விரக்தி. என்னைப் பொறுத்தவரை அந்தத் துயர்  முற்றாக வெளிப்படுவது சைந்தவியின் பாடலில் தான் என்பேன்.


"வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நான் உனக்கு"
இந்த வரிகள் வரும் போது, மேல்ஸ்தாயிக்கு நகர்கிறது  பாடல். உள்ளே என்னவோ செய்கிறது. துயரம் வழியும் வயலின் இசை உடன் தொடர்கிறது.

"எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இல்லை நின் சுவைக்கு" என்று நெகிழும்  வரிகள் புகழ்வது கண்ணெதிரே நாயகன் பாடிக் கொண்டிருக்கும் நாயகியை அல்ல; எண்ணத்தை முழுவதுமாக நிறைத்த, நினைத்தால் மட்டுமே இனிக்கிற ஒருத்தியை.  அவள் இப்போது இல்லாதவள்; ஆனால் இப்போது இருப்பவளில் எழுந்தவள். அவளைக் கவிஞன் கண்டுகொண்ட கணம் பூரித்துப்போகிறான்.

"கண்ணின் மணி போன்றவளே, கட்டியமுதே, கண்ணம்மா" 
என்று ஆராதிக்கிறான்.

பாடல் தொடர்கின்ற போதும் இந்த சரணத்தோடு நிறுத்திவிட்டார் இசையமைப்பாளர். அவர் அனுபவித்துக் தான் இசையமைத்திருக்க வேண்டும்.  சைந்தவியின் குரலை இரசிக்கும் போது தான், துயர் தோய்ந்த இந்த வரிகளைப் பாட பெண் குரல் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறது.


கண்ணம்மா உண்மையில் யாராகவும் இருக்கட்டும். அவள் மகத்தான கவிஞன் ஒருவனை முழுவதுமாக நிறைத்து நின்ற காதலி.  உண்மையில்  பாரதியின் வாழ்வில் அவ்வாறு இருந்தவள்  எச்சமின்றி மறைந்து விட்டாள்.  ஆனால் என் கண் முன்னே, பல நண்பர்களின் வாழ்வில் கண்ணம்மாக்கள் இருந்திருக்கிறார்கள். என்ன, என் நண்பர்கள் எல்லாம் பாரதிகள் இல்லை. அதனால் அவர்களது கண்ணம்மாக்கள் முண்டாசுக் கவிஞனின் கண்ணம்மா போல அமரத்துவம் அடையவில்லை.
மேலும் வாசிக்க »

தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

1 comments
தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள
கல்வெட்டுக்களும் கற்றூண்களும்


காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன முறையிலான கற்கைகள், 1850களுக்கு பின்பே ஆரம்பமாகின. இந்தப் பின்னணியில், பிரித்தானியக் குறிப்புக்களில் திருக்கோணமலை மாவட்டத்திலும் பொலனறுவை மாவட்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப்படும் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தவிர்த்தால், இலங்கைக் கல்வெட்டியலில்  முதன்முதலாக விரிவாக ஆராயப்பட்ட தமிழ்க் கல்வெட்டு என்று தம்பிலுவில் கல்வெட்டைச் சொல்லலாம். இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் பிரித்தானிய அலுவலர் ஹியூஜ் நெவில். கண்டறியப்பட்ட ஆண்டு 1885.


1847இல் பிறந்த ஹியூஜ் நெவில், தன் 17ஆவது வயதில் பிரித்தானிய நீதியரசரின் தனிப்பட்ட செயலாளராக இலங்கை வந்தவர். இலங்கையின் பல பாகங்களிலும் சிலோன் நிர்வாக சேவை எழுதுநர், மாவட்ட நீதிபதி, உதவி அரசாங்க அதிபர் போன்ற பதவிகளை வகித்த நெவில், மிகச்சிறந்த புலமையாளர். தொல்பொருளியல், கல்வெட்டியல், வரலாறு, இனவரைவியல், சமூகவியல், மானுடவியல், விலங்கியல், தொன்மவியல், புவியியல் என்று அவரது புலமைசார் பங்களிப்பின் பட்டியல் நீண்டது. சிங்களம், தமிழ், வேடர் மொழி என்பவற்றில் நல்ல சரளம் பெற்றிருந்த நெவில், தன் அறிவுசார் கண்டறிதல்களை, "தப்ரபேனியன்" எனும் ஆய்வேடொன்றில் பிரசுரித்து வந்தார். அதில் தான் "சிலோனில் தமிழ்க் கல்வெட்டு" என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது தம்பிலுவில் கல்வெட்டு.
நெவிலின் "தப்ரபேனியன்" ஆய்வேட்டில் வெளியான கட்டுரை, 1885 ஒக்டோபர் இதழ்


அப்போது மண்ணாலான ஓலைக்குடிசையாக இருந்த தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின், ஒரு சுவரோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது இக்கல்வெட்டு. அதைப் பிரித்தெடுத்து சுத்தம் பண்ணிய நெவில், அதில் மயில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, இது ஒரு முருகன் கோவிலுக்குரியது என்ற முடிவுக்கு வந்திருந்தார். எனவே அருகில் இருந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு இக்கல்வெட்டு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.  தற்போதும், இக்கல்வெட்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலேயே வைத்துப் பேணப்படுகின்றது. 


தம்பிலுவில் கல்வெட்டு சுமார் ஐந்தடி உயரமான கற்றூண் ஒன்றாகும். அதன் ஒருபுறம் திரிசூலமும் மறுபுறம் மயிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய இருபக்கங்களிலும் முப்பத்தெட்டு வரிகளில் கல்வெட்டு பொளியப்பட்டிருக்கிறது. கல்வெட்டு வாசகத்தின் ஆரம்பத்தில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சூரியன் சந்திரன் உள்ளவரை, கல்வெட்டு சொல்லும் செய்தி நின்று நிலவவேண்டும் என்பது இதன் பொருள்.

தம்பிலுவில் கல்வெட்டின் மைப்படி,
பத்மநாதன்.சி, 2013, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, நூலிலிருந்து

கல்வெட்டு வாசகம் இது தான்:
"ஸ்ரீ சங்கபோதி பற்மரான திறிபுவனச் சக்கிறவத்திகள் ஸ்ரீ விசயவாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் ௨௰ தியதி,சிவனான சங்கரர்க் கோவிலுக்குக் கொடுத்த வோவில். இன்த தன்மத்துக்கு அகித்தம் சேதானாகில் கெங்கைக் கரையில் காரம்பசுவைக் கொந்ற பாவத்தை கொள்ளக் கடவராகவும்"

"ஸ்ரீசங்கபோதி வர்மரும் திரிபுவனச் சக்கரவர்த்தியுமான ஸ்ரீ விஜயபாகு தேவரின் பத்தாவது ஆட்சியாண்டில் வருகின்ற தை மாதம் இருபதாம் திகதி, சிவனான சங்கரர் கோவிலுக்கு வோவில் கொடுக்கப்பட்டது. இந்த அறச்செயலுக்கு யாரும் தீங்கு செய்தால் அவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவாராக" என்பது இக்கல்வெட்டின் பொருள்.

இக்கல்வெட்டு கூறுகின்ற விசயவாகு தேவர் யார் என்பதில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆய்வாளர் அமரர்.க.தங்கேஸ்வரி அவர்கள் இக்கல்வெட்டு சொல்லும் விசயவாகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த கலிங்க மாகோன் என்கின்றார். பல்கலைக்கழக வரலாற்றறிஞர்களான சி.பத்மநாதன், கா.இந்திரபாலா, ஏ.வேலுப்பிள்ளை, செனரத் பரணவிதான உள்ளிட்டோர் இவனைக் கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1510 -  1521) என்கின்றனர். பெற்ற தந்தையை மூன்று மகன்மார் மண்ணாசைக்காகக் கொலை செய்த "விஜயபாகு கொள்ளை" என்ற துயர் மிகுந்த வரலாற்றுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவன்  இவனே. 

கல்வெட்டைப் பொறித்தது ஆறாம் விஜயபாகு தான் என்பதற்கு பேராசிரியர் பத்மநாதன் கொடுக்கும் வலுவான ஆதாரங்கள் இரண்டு. ஒன்று, இக்கல்வெட்டு பொலனறுவைக் காலக் கல்வெட்டுக்கள் போல் மன்னனை கிரந்தம் கலந்து 'விஜயBபாஹூ' என்று குறிப்பிடாமல், அவன் பெயரைத் தமிழ்ப்படுத்தி 'விசயவாகு' என்று குறிப்பிடுகின்றமை. இதே மன்னனின் கொழும்பு அருங்காட்சியகத் தமிழ்க் கல்வெட்டு, இதே போல இவனை "விசயவாகு தேவர்" என்றே அழைக்கிறது.

இரண்டாவது ஆதாரம் இக்கல்வெட்டின் வரிவடிவம். இன்றைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ வளர்ச்சி பெரும்பாலும் 16ஆம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்று விட்டது. இன்றும் ஓரளவு எளிதாக வாசிக்கும் நிலையிலுள்ள இக்கல்வெட்டு 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்கிறார் அவர். அந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

இங்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் என்றால் என்ன என்று இன்று யாருக்கும் தெரியாது. நூறாண்டுகளுக்கு முன் "Monograph of Batticaloa" எனும் நூலை (1921) எழுதிய கனகரெட்ணம் முதலியார்,  வோவில் அப்போது வேவில் என்று அழைக்கப்படுவதாகவும், திருக்கோவிலுக்குத் தெற்கே சுமார் நான்கு மைல் தூரத்தில்  அது இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெவிலும் இதையே சொல்வதை மேலே காணலாம்.

ஆனால் இன்று வோவில் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாத நிலையில், அதை  இனங்காணக் கைகொடுத்தது 1695இல் வரையப்பட்ட ஒரு இடச்சு வரைபடம். அதில், திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு நீர்நிலை வரையப்பட்டு, அது "Gravet van Bouwille" - போவில் மடு என்றும், அதற்கும் தெற்கே "Bouwilipattu" - போவில்பற்று என்ற இடமொன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகே இடச்சு மொழியில் "Tamblewielle: een groot vondel met v: water"  என்று எழுதப்பட்ட வரிகள் காணப்படுகின்றன.  "தம்பிலுவில்: இங்குள்ள ஒரு பெரிய நீர்நிலை" என்பது இதன் பொருள். எனவே தம்பிலுவில் கல்வெட்டில் சிவனான சங்கரர்க் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் ஒரு நீர்நிலை என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு அல்லது கோவில் சார்ந்தோருக்கு, நீர்நிலைகளை, அல்லது அவற்றால் பாசனம் செய்யப்படும் வயல் வெளிகளைக் கல்வெட்டு பொறித்து தானம் கொடுப்பது, அந்தக்கால வழக்கம். 



Gravet van Bouwille, Dutch Map of Ceylon (1685 CE)

சங்கமன்கண்டி அருகே மனுநேய கயவாகு மன்னனால், முப்பத்திரண்டு மதகுகளுடன் இருபத்தாறு ஏரிகளை இணைத்து பெரும் ஏரி அமைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பொன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலிலும் காணப்படுகின்றது. இன்று குறித்த பகுதியில் உவர்நீரேரியாகக் காணப்படும் "தாண்டியடிக் களப்பே" இந்த "வோவில்" ஏரி ஆகலாம்.

கல்வெட்டில் மயில் பொறித்திருப்பதால், அதை முருகன் கோவிலுக்குரியதெனச் சொல்வது எத்தனை உசிதமானது என்பதை ஆராயவேண்டும். திருக்கோவில் முருகன் அப்போது மட்டக்களப்புத் தேசத்தின் பெருந்தெய்வம் என்பதால், அவனால் காக்கப்படுவதைக் குறிக்கவும் மயில் பொறிக்கப்பட்டிருக்கலாம். மயிலை கோட்டை அரசின் அல்லது அப்போதைய மட்டக்களப்புச் சிற்றரசின் குலச்சின்னம் என்று கருதவும் இடமுண்டு.

ஒருவேளை கல்வெட்டுச் சொல்லும் "சிவனான சங்கரர் கோவில்" என்பது இன்றைய தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் அமைவிடத்தில் இருந்து பின் அழிந்தும் போயிருக்கலாம். பேராசிரியர்கள். கா.இந்திரபாலாவும் சி.பத்மநாதனும் இந்தச் சந்தேகத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊகத்துக்கு எதிரான இன்னொரு சான்றும் கிடைக்கிறது. திருக்கோவில் ஆலயத்தில் இன்று பேணப்படும் நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று சதுரப்பலகை வடிவில் கிடைக்கும் திருக்கோவில் கல்வெட்டு. "திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில்" என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடுகின்ற மிகப்பழைய ஆவணம் அது தான். 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞான சங்கரிகள் ஸ்ரீ விசயவாகு தேவர்க்கு யாண்டு ௰வதில் தை மாசத்தில் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் குணர் மேற்கு..." என்ற வரிகளின் பின் அது சிதைந்திருக்கிறது. வரிவடிவம், கல்வெட்டு வாசகம், பொறித்த மன்னன் முதலிய பல விடயங்களிலும் தம்பிலுவில் கல்வெட்டை ஒத்த  இக்கல்வெட்டில் வருகின்ற "சிவஞான சங்கரிகள்" என்பதை தம்பிலுவில் கல்வெட்டில் வரும் "சிவனான சங்கரரோடு" ஒப்பிடலாம்.

பேராசிரியர் பத்மநாதன் இதற்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்கிறார். சிவஞான சாகரி என்பது விஜயபாகு தேவரின் பட்டம் என்றும் கல்வெட்டைப் பொறித்தவர் சிவஞானசாகரி என்பதை, சிவஞான சங்கரி என்று தவறாகப் பொறித்துவிட்டார் என்றும் அவர் சொல்கிறார். தன் வாதத்துக்குத் துணையாக அவர் சொல்வது, ஆறாம் பராக்கிரமபாகுவின் முன்னேஸ்வரச் சாசனமொன்று அம்மன்னனை "சைவஞான மகோததி" என்று அழைப்பதாகும். மகோததி, சாகரம் இரண்டுமே பெருங்கடலைக் குறிக்கும். சிங்கள மன்னர்கள் பௌத்தம் சார்ந்த தானங்களில் "சங்கபோதி" என்றும், சைவம் சார்ந்த கொடைகளில் இப்படி "சிவஞானப்பெருங்கடல்" என்றும் தம்மைக் குறிப்பிட்டிருந்தால், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்கிறார் அவர்.

ஆனால் தம்பிலுவில் கல்வெட்டை வாசித்த யாருமே இரு கல்வெட்டுக்களிலுமுள்ள இந்த இரு ஒத்த சொற்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. 'சங்கரி' என்று முடிகின்ற ஆண்பால் பெயர்களைக் கொண்டிருந்த மட்டக்களப்பு வன்னியச் சிற்றரசர்கள் பற்றி ஐரோப்பியர் குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இக்கல்வெட்டு, அது பொறிக்கப்பட்ட காலத்தில் ஆண்ட கோட்டைப் பேரரசன் விஜயபாகுவையும், அவனுக்குக் கீழ் இருந்த உள்ளூர்ச் சிற்றரசன் சிவஞான சங்கரியையும் குறிப்பிடலாம் என்பது ஒரு ஊகம்.

அல்லது தம்பிலுவில் கல்வெட்டிலுள்ள சிவனான சங்கரர் என்பதையும் சிவஞான சங்கரி என்றே வாசித்து, அது ஒரே மன்னனின் பட்டமே என்று அமைதி காணலாம். இவ்வாறு வாசிப்பதே சரி என்றால், இக்கல்வெட்டும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரியது தான் என்று உறுதிப்படுத்த முடியும்.


சரி, இந்தக் கல்வெட்டில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? வெறுமனே ஒரு நீர்நிலையை தானம் செய்வதைச் சொல்லும் ஒரு கல்வெட்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் தான் என்ன?

அவசியம் இருக்கிறது. இந்தக் கல்வெட்டின் முதலாவது முக்கியத்துவம் ஒரு சைவக்கோவிலுக்கு இந்தக் கொடையைத் தமிழில் பொறித்த மன்னன்  விஜயபாகு எனும் சிங்கள அரசன் என்பது. இரண்டாவது முக்கியத்துவம், கோட்டை அரசனின் கை, கிழக்குக்கரையின் எல்லை வரை ஓங்கியிருந்தது என்பது. 

போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிந்தைய ஆவணங்களின் படி, கீழைக்கரையின் மட்டக்களப்பு வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் கீழ் திறைசெலுத்தி வரும் சிற்றரசுகளாகவே இருந்து வந்தன. அதற்கு முன் அவை என்னவாக இருந்தன என்ற விபரம் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த வரலாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மட்டும் நம்புவது நம்மைத் தவறாக வழிநடத்திவிடும்.

பொலனறுவை அரசு காலத்தில் கிழக்கு உரோகணமாக இருந்த மட்டக்களப்பு நாடு, முதலாம் விஜயபாகுவிலிருந்து  ( 1072 –1110)  மகா பராக்கிரமபாகு  (1123–1186) வரையான மன்னர்களின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தது என்பது, மகாவம்சத்திலிருந்து தெரிகிறது. பின்பு தெற்கே நகர்ந்த தம்பதெனியா, கம்பளை சிங்கள அரசுகளின் காலங்களில்  இங்கு யார் ஆண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. நம் ஊகம் சரி என்றால், சோழராட்சியின் எச்சங்களான வன்னியர்கள் அப்போது சுதந்திரச் சிற்றரசர்களாக இங்கு இருந்து வந்தார்கள் என்று கொள்ளலாம்.

ஆனால் 1546இல் "மட்டக்களப்பு" என்ற தனி அரசை வரலாற்றுலகுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்யும் போர்த்துக்கேயப் பாதிரியார் சைமாவோ கோயம்பரா, கோட்டை அரசனிடமிருந்து தமது அரசை விடுவிக்கும் படி மட்டக்களப்பு மன்னன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததை எழுதியிருக்கிறார். அப்போது கண்டி அரசு முற்றாக வலுப்பெற்று எழவில்லை என்பதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கவேண்டும். கோயம்பரா சொல்வதை உறுதிப்படுத்த நமக்குக் கிடைக்கும் இன்னொரு சான்று தான் தம்பிலுவில் கல்வெட்டு.

கோட்டை அரசானது, விஜயபாகுவின் மாயாதனு (சிங்களத்தில் மாயாதுன்னை) முதலிய மூன்று மைந்தர்களால், சீதாவாக்கை, இறைகமம், கோட்டை என்று மூன்றாகத் துண்டாடப்படுவதற்கு முன்பு, அதன் கிழக்கு எல்லை, வங்காள விரிகுடா வரை நீண்டிருந்ததையே தம்பிலுவில் கல்வெட்டுச் சொல்கின்றது. இக்கல்வெட்டைப் பொறித்து குறைந்தது ஐந்தாண்டுகளுக்குள் விஜயபாகு மன்னன் கொலை செய்யப்படுகிறான். அப்போதைய கோட்டை அரசின் கிழக்கு அந்தத்தில் அவன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது, அரசியல் குழப்பங்கள் நிறைந்த அந்தக் காலத்தில், போர்த்துக்கேயருக்கோ தன் மக்களுக்கோ ஏதோ செய்தியைச் சொல்லத் தான் என்று தோன்றுகிறது. அதை இன்றுள்ள தலைமுறையினருக்கும் சொல்ல முயன்றுகொண்டிருக்கும் இந்த முப்பத்தெட்டு வரிகளைக் கொண்டாடுவதில் என்ன பிழை?


ஆறாம் விஜயபாகு எப்போது சரியாக ஆட்சிபீடமேறினான் என்பது தெரியவில்லை. குறிப்புக்கள் 1507, 1509, 1513 ஆகிய மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. அவன் குறைந்தது 10 ஆண்டுகள் அரசு புரிந்திருக்கின்றான் என்பதாலும், 1521இல் தன் சொந்த மக்களால் கொலையுறுகிறான் என்பதாலும், 1513ஆமாண்டு பொருத்தமாக வரமுடியாது. ஏனைய இரண்டில் எது சரியாயினும் தம்பிலுவில் கல்வெட்டுக்கு இன்று வயது 500 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது. அதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் 1509 தான் ஆறாம் விஜயபாகுவின் சரியான பட்டாபிஷேக ஆண்டு என்றால், இன்று தான் அந்த நாள்.  அப்படியே ஓடிப்போய் 2020 பெப்ரவரி மூன்றாம் திகதி பஞ்சாங்க நாட்காட்டியின் தமிழ்த் தேதியைப் பாருங்கள். தை மாதம் 20ஆம் திகதி! விசயவாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20ஆம் திகதி. சரியாக 501 ஆண்டுகள்! ♥ 


காற்றுப் புகாத ஒரு அறையில், கொங்கிரீட்டைக் கொட்டி அதில் இனிமேல் என்றுமே வாசிக்கமுடியாதபடி நட்டு வைத்துப் பாதுகாக்கிறோம் ஒரு பெருஞ்சொத்தை! அறம் மட்டுமல்ல, அறச்செயலைப் பொறித்த சாசனமும் புனிதமானதே. "இந்த தர்மத்துக்கு அஹிதம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையக் கடவராகவும்" என்று இந்தக் கல்வெட்டு சபிப்பது யாரை? வீண்பெருமை மாத்திரமே பேசிக்கொண்டு, ஆனால் பெருமைக்குக் காரணமான பொக்கிஷங்களைக் கேட்பாரற்று  குப்பையாகப் போட்டு வைக்கும் நம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே அல்லவா?
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner