திறவுச் சொற்கள்: இலக்குமொழி (Target Language), ஒலிபெயர்ப்பு (Transliteration), கலைச்சொல் (Technical Term), சொல் வாங்குதல் (Calque), ஞால மாமொழி (Lingua Franca), தடந்தகை (Strategy), புதுச்சொல்லாக்கம் (Neologism), பொருளுறை மொழியாக்கம் (Semantic Translation), மூலமொழி (Source Language).
1.0 அறிமுகம்
தமிழின் முதற்பேராசிரியர், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர், மறைந்த யாழ் இசைக்கருவியையும் நாடகத்தமிழையும் மீட்க முயன்றவர் முதலிய பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் விபுலானந்த அடிகளார். பிறமொழியில் அமைந்துள்ள அறிவுச்செல்வங்கள் ஒரு மொழிக்கு மொழிமாற்றப்படுவது, அம்மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்திருந்த அடிகளார், தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாகவேண்டும் என்றும் விடாது வலியுறுத்திவந்தவர். கலைச்சொல்லாக்கத் துறை சார்ந்த அடிகளாரின் சிந்தனைகள் இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அடிகளார் கலைச்சொல்லாக்கம், மொழியாக்கம் தொடர்பில் கொண்டிருந்த கோட்பாடுகளை மதிப்பிட முயலும் இவ்வாய்வுக்கட்டுரை, சமகாலத்தைய கலைச்சொல்லாக்கத் தடந்தகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு ஆராய முனைகிறது. அதன் வழியே சமகாலத் தமிழ் கலைச்சொல்லாக்கத்திலும் மொழியாக்கத்திலும் காணப்படும் இடைவெளிகளை சீர்செய்வதற்கான சில விதந்துரைகளையும் பட்டியலிட விழைகிறது.
2.0 இன்றைய உலகில் கலைச்சொல்லாக்கம்
வெறுமனே பிற பண்பாடுகள் உருவாக்கிய அறிவுத்தொகையை அடைவதற்காக மாத்திரமன்றி, அரசியல் கருத்தியல்களுக்காகவும் பண்பாட்டுச் சுய அடையாளப்படுத்தலுக்காகவும், பூகோள நலன்களை வென்று அடைவதற்காகவும் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த ஆயுதமாக, மொழிபெயர்ப்பு சமகாலத்தில் மாறியிருக்கிறது 1 . பிரித்தானியக் காலனிய ஆட்சியின் பின்னர் ஆங்கிலம், தன் “ஞால மாமொழி” (Lingua Franca) என்ற அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கும் போதும், சீனம், எசுப்பானியம் (Spanish) போன்ற தனி மொழிகளும் அரபுக்கூட்டமைப்பு (Arab League), பிரெஞ்சு பேசி நாடுகள் (Francophonie) முதலிய மொழிக்குழுக்களும் ஆங்கில ஆதிக்கத்தை தாக்குப்பிடிப்பதற்குப் பல்வேறு மொழிபெயர்ப்புத் தடந்தகைகளை (strategies) கடைப்பிடித்து வருகின்றன 2,3. உலகின் முதல் இருபது பெரிய மொழிக்குடும்பத்துள் ஒன்றாகவும் இன்றுள்ள பழம்பெரும் மொழிகளுள் ஒன்றாகவும் திகழும் தமிழ், மொழிபெயர்ப்புக்கெனவும் கலைச்சொல்லாக்கத்துக்கெனவும் தனக்குரித்தான பல தடந்தகைகளைப் பண்டுதொட்டு பயின்று வந்திருக்கிறது4 .
மொழிபெயர்ப்பின்போது உலகமொழிகள் பொதுவாக இரு பொறிமுறைகளைக் கையாள்கின்றன. முதலாவது பிறமொழிச் சொல்லை அவ்வாறே ஏற்பது, அடுத்தது தனது தனித்துவத்துக்கேற்ப அச்சொல்லை சிறிது உருமாற்றி ஏற்றுக்கொள்வது. ஆங்கிலத்தில் Foreignization, Domestication என்ற பெயர்களில் ஆராயப்படும் இப்பொறிமுறைகள்5 தற்சமம், தற்பவம் என்ற பெயர்களில் ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருப்பவை தான். காட்டாக, தமிழில் “கமலம்” எனும் வடமொழிச்சொல் மாற்றமேதுமின்றி தமிழில் அவ்வாறே – தற்சமமாக - ஆளப்படுகிறது. ஆனால் “லக்ஷ்மி” எனும் வடமொழிச்சொல், தமிழில் கிரந்தம் நீக்கி “இலக்குமி” அல்லது "இலட்சுமி" என்று தற்பவமாக எழுதப்படுகிறது.
2.1 கலைச்சொல்லாக்கத் தடந்தகைகள்
இந்த மொழிபெயர்ப்புப் பொறிமுறைகளின் அடிப்படையில் தமிழ் மொழியும் ஏனைய உலக மொழிகளும் கலைச்சொல்லாக்கத்தை மேற்கொள்வதற்கு நான்கு தடந்தகைகளைப் பயன்படுத்துகின்றன. ஒலிபெயர்ப்பு (Transliteration), சொல் வாங்குதல் (Calque), பொருளுறை (Semantic), புதுச்சொல்லாக்கம் (Neologism) என்பன அவை6.
2.1.1 ஒலிபெயர்ப்பு
பிறமொழிச்சொல்லின் பொருளை நோக்காமல், மேலோட்டமாக அதன் ஒலிப்பை மட்டும் மொழிபெயர்ப்பது இம்முறை. செல்ஃபி, தேங்யூ, டின்னர் என்பதெல்லாம் ஒலிபெயர்ப்பு முறையில் தமிழர் பயன்படுத்தும் மொழிபெயர்ப்புகள்.
2.1.2 சொல்வாங்குதல்
மூலமொழியிலிருந்து சொல்லுக்குச் சொல் பொருள்கூட்டி இலக்குமொழியில் சொல்லொன்றை உருவாக்குதல் “சொல்வாங்குதல்” என்று அழைக்கப்படுகிறது. இன்று தமிழில் பெரிதும் பயன்படும் நீர் + வீழ்ச்சி எனும் சொல் இம்முறையில் தான் Water + Fall எனும் ஆங்கிலச்சொல்லிலிருந்து பிறந்தது.
2.1.3 பொருளுறை மொழியாக்கம்
பொருளுறை மொழியாக்கம் என்பது மூலமொழிச்சொல்லை முற்றாக உள்வாங்கி, இலக்குமொழியின் இலக்கணம் மாறாத வகையில் புதுச்சொல்லொன்றைப் படைப்பது. காட்டாக, Personality என்ற ஆங்கிலச்சொல்லின் பொருள் மாறாவண்ணம் தமிழில் “ஆளுமை” எனும் கலைச்சொல் உருவானதைச் சொல்லலாம்.
2.1.4 புதுச்சொல்லாக்கம்
மூலமொழிச்சொல்லுக்கான இலக்குமொழிச்சொல் முன்னொருபோதும் இல்லாதபோது புத்தம்புதிதான சொல்லொன்றைப் படைப்பது புதுச்சொல்லாக்கம். காட்டு, Internet எனும் ஆங்கிலச்சொல்லின் பொருளை உள்வாங்கி 2000களின் ஆரம்பத்தில் படைக்கப்பட்ட “இணையம்” எனும் சொல். இவ்வாறே மின்சாரம், பேருந்து முதலிய கலைச்சொற்கள் தமிழில் உருவாகியுள்ளன.
சற்று எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம். Computer என்ற சொல்லை ஒலிபெயர்த்தால் “கம்ப்யூட்டர்”. சொல் வாங்கினால் “Computing Machine” என்பதன் நேரடிப்பொருளில் “கணிப்பொறி”. பொருளுறை மொழியாக்கினால் “கணினி”. புதுச்சொல்லாக்கம் என்றால் இதை இன்னும் சுருக்கி “கணி”. இன்றுவரை இந்நான்கு சொற்களும் கணினியைக் குறிக்கத் தமிழில் பயன்பட்டுள்ளதை நாம் கடந்த முப்பதாண்டு தமிழ்க் கணினி வரலாற்றில் காணலாம்7.
3.0 கலைச்சொல்லாக்கத்தின் சவால்கள்
கலைச்சொல்லாக்கத்திற்கென இரு பொறிமுறைகள், அவற்றினூடாக நான்கு தடந்தகைகள் பயன்பாட்டிலுள்ள போதும், கலைச்சொல்லாக்கம் பல்வேறு சவால்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. காட்டாக, மொழிபெயர்ப்பு பெரிதும் மொழிவல்லுநர்களாலே செய்யப்படுகிறது. அவர்கள் மொழிவல்லுநர்களே தவிர, தொழினுட்ப வல்லுநர்கள் அல்லர் என்பதால், அவர்கள் படைக்கும் சொல், சிலநேரங்களில் முழுமையான அர்த்தத்தைச் சுட்டாமல் போய்விடுவதுண்டு8.
கலைச்சொல்லை உருவாக்குவோரும், அதைப் பயன்படுத்துவோரும், வேறுவேறு துறை சார்ந்தோராக இருப்பதால் இன்னொரு இடரும் விளைந்திருக்கிறது. மொழிவல்லுநர்களால் உருவாக்கப்படும் கலைச்சொல் செயற்கைத்தன்மையுடனும் நீளமானதாகவும் விரிந்த பொருளைக் கொண்டிராததாகவும் அமைந்துவிடுகிறது. (உதாரணம் – கையடக்கத் தொலைபேசி). அத்தகைய சொற்கள் சில நேரங்களில் பொதுப்புழக்கத்துக்கு வந்து நிலைபெற்று விடுகின்றபோதும் நடைமுறையில் பயன்பாட்டுச் சிக்கலையே தோற்றுவிக்கின்றன
அப்படியே சரியான கலைச்சொல் உருவானாலும் அவை பொதுப்புழக்கத்தில் வருவதற்கு நேரமெடுப்பதும், பொதுமக்களால் புறக்கணிக்கப்படுவதும் மாபெரும் சவாலாகக் காணப்படுகின்றன. ஏனெனில், தங்களுக்குச் சொந்தமான இலக்குமொழி பற்றிய அக்கறையின்றி, ஆனால் மூலமொழிக்குச் சார்பான ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தவே பொதுமக்கள் விரும்புகின்றனர். தகவல் தொழிநுட்பம், சமூக வலைத்தளங்களின் பெருக்கம் என்பன காரணமாக மூலமொழிச் சொல்லை முன்கூட்டியே அறிந்துவிடும் மக்கள், அதை மீள இலக்குமொழியில் மாற்றி வழங்கினாலும், அந்த இலக்குமொழி அவர்களது தாய்மொழியாகவே இருக்கும்போதும், அச்சொல்லைக் கற்பதற்கு சோம்பல் படுகிறார்கள்9. வேலைப்பழு நிறைந்த அவசரமான சமகாலத்தில் புதிதாக ஒரு சொல்லை அறிவதும் கற்பதும் மேலதிக சுமை என்றும் நேரவீண் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்10,11.
உண்மையில், தாய்மொழியில் கலைச்சொற்கள் உருவாவதைத் தவிர்ப்பது, அம்மொழியின் கூர்ப்பையும் பேணுகையையும் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்குவதுடன், அம்மொழி சார்ந்த அறிவியல் மற்றும் நுட்பவியல் துறைகள் மருவி மறையவும் வழிவகுக்கும். நாளடைவில் அம்மொழி பேசும் இனத்தின் பண்பாட்டு அடையாளம் மறைந்தொழிந்து போம். யுனெசுகோ சுட்டிக்காட்டுவது போல்12, உள்நாட்டு மொழிகளை புத்துயிர்ப்பூட்டலும், அறிவியல், தொழினுட்பம் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையின் அனைத்து அமிசங்களிலும் அவற்றை இணையச்செய்தலும் அம்மொழிகள் கொண்டுள்ள பண்பாட்டு அறிவுத்தொகையை கட்டிக்காக்கவும், அவை பிழைத்திருக்கவும் இன்றியமையாதனவாகும்.
4.0 கலைச்சொல்லாக்கமும் அடிகளாரும்
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் வரிகளை தன் கட்டுரைகளில் வழிமொழியும் அடிகள், “பிறநாட்டாரிடத்துள்ள அரிய பெரிய விஞ்ஞான நூல்களையும் பிறவற்றையும் மொழிபெயர்த்துத் தமிழுக்கு உரிமையாக்க வேண்டும். அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளத்தக்க இலகுவாகிய தமிழ்நடையில் உயிர்க்குறுதி படைக்கும் உயர்ந்த சாத்திரங்களை எழுதுவித்தல் வேண்டும்….. வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய நூல்கள் மிகப்பல இருக்கின்றன….” என்று ஓரிடத்தில் சொல்கிறார்13. அவ்வாறு சொன்னது மாத்திரமன்றி, தானே உலகமொழிகளில் கற்ற பல நூல்களை தமிழ்ப்படுத்தி எழுத முயன்றார்.
விஞ்ஞானதீபம் எனும் கட்டுரை, அவர் தமிழில் அறிவியலை எழுத முயன்ற முயற்சியாகும்14. விஞ்ஞானக் கலைச்சொற்களை தமிழில் மொழியாக்குவதற்கான அடிப்படைகளை ஆராய்ந்து “மொழிபெயர்ப்பு முறை” என்ற கட்டுரையொன்றையும் வரைந்தார்15. சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1936.09.26 அன்று சென்னை மாகாணத் தமிழர் மகாசங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாட்டிற்கு அடிகளார் தலைமை தாங்கியதுடன், கலைச்சொல்லாக்கம் பற்றிய உரையொன்றையும் ஆற்றியுள்ளார்16. இவற்றில் கூறப்பட்ட விடயங்களும் மொழிபெயர்ப்பு சார்ந்த அடிகளாரின் வேறு கட்டுரைகளில்17 கண்ட விடயங்களும் இங்கு சுருக்கமாக ஆராயப்படுகின்றன.
4.1 திசைச்சொல் ஏற்பு
நல்ல தமிழில் கட்டுரைகளையும் கலைச்சொற்களையும் ஆக்கிய அடிகளார், கலைச்சொல்லாக்கத்தில் நெகிழ்வுப் போக்கையே கடைப்பிடித்தார். “தமிழ் மொழி இல்லாத வழி பொருத்தமுள்ள பிறமொழியை ஆளுதல் தகுதியாகும். தமிழ் வழக்கிருப்பின் உள்ள மொழியையே ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும்.” என்று சொல்லும் அவர், “ஆரியம் நன்று தமிழ் தீது, தமிழ் நன்று ஆரியம் தீது….. என்று இவ்வாறெல்லாம் பக்கம் பற்றிக் கூறுவாரது உரை அனைத்தும் மரபுநிலை திரிந்த வெற்றுரை” என்றும் சொல்கிறார்18. “வடமொழியிலிருந்து எடுத்துத் தமிழ் ஆன்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவை தம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக்கொள்வதே முறையாகும்”19 . “ஆரிய மொழியினும் ஏற்புடையனவற்றை ஆளுதல் இழுக்காகாது”20 என்றமையால் அவரது காலத்தில் நீடித்த தனித்தமிழ் இயக்கத்துக்கு அடிகளார் முற்றாக ஆதரவானவர் அல்லர் என்பது தெரிகிறது.
விஞ்ஞானதீபம் கட்டுரைத்தொடரில் கலைச்சொற்கள் பலவற்றை உருவாக்கிய அடிகளார் “யாம் ஆராய்ந்துணர்ந்த கருத்தினை உரைத்தற்கு ஏற்புடைய தமிழ்ச்சொல், வடசொல் இல்லாதவழி பொருத்தமுள்ள புதிய சொற்களை ஆக்கிகொள்வோம். யவனபுர மொழி (கிரேக்கம்), உரோமபுர மொழி (இலத்தீன்) ஆங்கிலமொழி இவற்றிலிருந்து தக்க சொற்களைத் திசைச்சொற்களாக எடுத்தாள்வோம்”21 என்று கூறியுள்ளமை, கலைச்சொல்லாக்கத்தில் தேவைக்கேற்ப ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்துவது தவறில்லை என்று அடிகளார் கருதியதை உறுதிசெய்கிறது.
இக்கருத்தில் இக்கட்டுரையாளனுக்கு மாற்றுக்கருத்து உள்ளது. பிறமொழிச் சொற்களை அவ்வாறே - தற்சமமாகவோ தற்பவமாகவோ - ஏற்கலாம் எனில் "எந்த எல்லை வரை ஏற்பது?" என்ற கேள்வி முக்கியமாகின்றது. பிறமொழிச்சொற்கள் அளவு கணக்கின்றி தமிழில் ஊடுருவும் இக்காலத்தில் ஊடுருவும் அத்தனை சொற்களையும் அவ்வாறே ஏற்றுக்கொண்டால், மொழித்தனித்துவம் பற்றி எதிர்காலத்தில் பேசமுடியாது போகும். மேலோட்டமான ஒலிபெயர்ப்பே கலைச்சொல்லாக்கத்தின் முதன்மைத் தடந்தகையாகக் காணப்படும் சமகாலத்தில் அடிகளாரின் “திசைச்சொல் ஏற்பு” சிந்தனையை இன்னும் அழுத்தம் திருத்தமாக வரையறுக்கவேண்டிய தேவைப்பாடு நிலவுகின்றது.
4.2 சுருக்கமும் தெளிவும்
புதிதாக உருவாக்கும் போதும், திசைச்சொற்களை எடுத்தாளும் போதும், கலைச்சொற்கள், சுருக்கம், விளக்கம், தெளிவு, தமிழுருவம் ஆகியவை பொருந்தியிருக்கவேண்டும் என்று அடிகள் கருதினார். “தனித்தமிழ் மொழிகள் ஓரெழுத்தாலும் ஈரெழுத்தாலும் ஆகிய மணி போன்ற சிறிய மொழிகளாம்” என்பதாலும் நீண்ட சொற்கள் “மாணாக்கனுடைய நாவுக்கு இடர் விளைவிப்பனவாக அமையும்” என்பதாலும், “நீண்ட சொற்களைக் கண்முன் வரவொட்டாது துரத்தவேண்டும்”22.
சிக்கலான வேதியியல் தனிம / மூலகப் பெயர்களை தமிழ்ப்படுத்துவது பற்றி ஆய்ந்த அடிகள், ஏற்கனவே தமிழர் மத்தியில் வழக்கிலுள்ள பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய சொற்களை அவ்வாறே ஏற்று, கண் மையிலுள்ள “Antimony”ஐக் கருத்தில் கொண்டு அம்மூலகத்துக்கு “மை” என்றும், யவனமொழியில் நிறம் எனும் பொருளினதாகிய Chlorineஐ “நிறம்” என்றும், மொழியாக்கினார்23.
Oxygenஇற்கு மதி என்று பெயர் சூட்டிய அவர் ஒட்சைட்டு / ஆக்சைடு எனும் வகுப்புப்பொருட்களுக்கும் அப்பெயரையே ஆண்டு பொன்மதி – Gold Oxide, செம்மதி – Copper Oxide போன்ற பெயர்களைப் பரிந்துரைத்தார். வேதியியல் குறியீடுகளையும் தமிழாக்க முயன்று, சோடியம் – லவம், ஒட்சிசன் – மதி ஐதரசன் – அம் என்பதால், NaOH என்பதை லவமதியம் = "லமஅ" என எழுத முயன்றார்24.
NaOH + HCl ® NaCl + H2O எனும் அடிப்படை வேதியியல் சமன்பாட்டை
லமஅ + அநி ® லநி + அ2ம
என்று எழுதலாம் என்றும் அதை
“லவ்மவ்அவ் உடன் அவ்நிய் சமம் லவ்நிய் உடன் அவ்விரண்டுமவ்”
என்பதையொத்து25 வாசிக்கமுடியும் எனவும் முன்மொழிந்தார்.
வேதியியலைத் தமிழில் கற்பிக்க முயன்ற அடிகளாரின் முயற்சி மெச்சத்தகுந்தது. ஆனால் அது இலங்கையிலோ தமிழகத்திலோ தோல்வியில் முடிந்த முயற்சி. சீனம், யப்பானியம் முதலிய மொழிகளில் தனிம வரிசை அட்டவணையை / ஆவர்த்தன அட்டவணையை தாய்மொழியில் கற்பிக்கும் முயற்சி நீண்டநாளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டபோதும், அதில் பல்வேறு சாதக பாதகங்கள் ஆராயப்பட்டுள்ளபோதும்26,27, தமிழில் அது நடைமுறைக்கு வரவில்லை. எனினும் ஏனைய துறைகளில் கலைச்சொற்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் உருவாக்கலாம் என்ற அடிகளின் கருத்து இன்றும் ஓரளவு பயன்பாட்டில் இருப்பது ஆரோக்கியமானது எனலாம்.
சீன மற்றும் யப்பானிய தனிம / ஆவர்த்தன அட்டவணைகள்.
(படங்கள்: விக்கிமீடியாவிலிருந்தும் Pinterestஇலிருந்தும்)
4.3 வேறுபிரித்தறியக்கூடிய தெளிவு
கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் அடிகள் அதிக கவனம் செலுத்தினார். “இருவேறு பொருளுக்கு ஒரு சொல்லைக் குறியீடு செய்தாளுதல் மலைவுறுதலுக்கு இடமாகும்” என்பதால் Mirror = முகம் பார்க்கும் கண்ணாடி என்றும், அதையொத்த Glass எனும் சொல்லை படிகம் என்றும் வேறுபிரித்தே சொல்லவேண்டும் என்றும் வரையறுத்தார். இப்படி, Figure – உருவம், Image – படிமம் என்றின்ன பல கலைச்சொற்களை அடிகள் ஆக்கியுள்ளதைக் காணலாம்28.
இன்றைய அறிவியலில் mirror என்ற சொல் ஆடி என்று பயன்படுகின்றது. Image என்பதை படிமம் அல்லது உருவம் என்றும் Figure என்பதை உரு என்றும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கலைச்சொல் குழப்பமில்லாதவாறு தெளிவுத்தன்மையோடு உருவாக்கப்படவேண்டும் என்ற அடிகளாரின் கோட்பாடு கலைச்சொல்லாக்கத்தில் இன்றைய மொழியறிஞர் பலரும் வலியுறுத்திவருவதே.
4.4 ஒலிப்பொருத்தம்
அடிகள் Barium, Helium என்ற வேதித் தனிமங்களுக்கு / மூலகங்களுக்கு பாரம், எல் என்ற சொற்களில் பொருட்பொருத்தத்தோடு ஒலிப்பொருத்தமும் கருதி அவற்றை தமிழ்ப்பெயர்களாகச் சூட்டினார். poly – பல, gonos – கோணம் எனும் மொழித்தொடர்பு உள்ளதால் Polygonal Prism என்பதை பலகோணப்படிகம் என்றார்.29 அடிகள் பரிந்துரைக்கும் இக்கருத்து கலைச்சொல்லாக்கத் தடந்தகைகளுள் ஒன்றான “பொருளுறைக்கு” மாறானதல்ல.
சமகாலத் தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இராம கி அவர்கள் ஒலிப்பொருத்தத்தோடு நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை ஆக்கியிருக்கிறார்30. அவரது கலைச்சொற்கள் பல ஆங்கிலச்சொல்லை அவ்வாறே ஒத்திருப்பதால் ( பரி – free, game – கும்மை, Gene - ஈன் ), பலரது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு. எனினும், விபுலானந்த அடிகள் பரிந்துரைத்தவாறு மொழித்தொடர்பும் சொற்பிறப்பியலும் நோக்கியே இராம.கியின் கலைச்சொற்கள் பல இருப்பதால் அவற்றில் ஏற்கக்கூடியவையே ஏராளமாக உள்ளன. அப்படியே ஆங்கிலத் தழுவலாகத் தென்பட்டாலும், ஒலிபெயர்ப்பே கலைச்சொல்லாக்கத்தின் முதன்மை முகமாக இருக்கும் இக்காலத்தில் பிறமொழித்தோற்றம் காட்டும் பொருளுறை மொழியாக்கங்கள் ஒப்பீட்டளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே அன்றி தள்ளத்தக்கவை அல்ல.
4.5 தமிழுருவம்
கலைச்சொற்கள் இயன்றவரை தூயநடையில் இருக்கவேண்டும் என்பதை அடிகள் விரும்பினார். “தமிழில் மொழிபெயர்ப்பு நூல் எழுத முன்வருவார் சிலர் நிரம்பிய தமிழறிவு இன்மையால் ஆங்கில மக்களும் தமிழ் மக்களும் ஒருங்கு வெறுக்கத்தக்க பயற்றுப்பச்சரிசி நடையில் மணிப்பிரவாளம் என்றாற்போல் நூல் எழுதி முடிக்கின்றார்கள். பைந்தமிழும் வெள்ளையர் ஆங்கிலமும் சரிக்குச்சரி கலந்த நடையைப் பயற்றுப்பச்சரிசி நடை என்றாம்” என்கிறார் அடிகள்31. இன்று தமிங்கிலம் அல்லது தமிங்கிலீசு என்று சொல்லப்படும் கலப்புமொழியை அடிகள் பயறும் பச்சரிசியும் கலந்த நடை என்று சொல்லி எள்ளுவதிலுள்ள நயம் இன்புறத்தக்கது.
சேக்சுபியருக்கு தமிழ்த் தோற்றம் காட்டும் “செகசிற்பியர்” என்ற கவித்துவமான பெயரை சூட்டியவர் அடிகளார் தான். ரோமியோ, யூலியட் எனும் செகசிற்பியரின் புகழ்பெற்ற பாத்திரங்கள் அவரால் “இரம்மியன், சுசீலை” என்று அழைக்கப்பட்டன32. அவரது மேற்றிசைச் செல்வம்33, ஏநேய காவியம்34, ஆங்கிலவாணி35 முதலிய கட்டுரைகள் இப்படி அவர் தமிழ்ப்படுத்திய பல்வேறு அழகான சொற்களைக் கொண்டமைந்துள்ளன. இலியட்டில் வரும் Paris, Achiles, Helena, Menelans முதலிய பெயர்கள் அடிகளாரால் பரீசன், அகிலேசன், ஏலேனா, மேனிலாவன் என்று மாற்றப்பட்டுள்ளன. Iliad, Odyssey, Troy, Aphrodite, Venus முதலிய பெயர்களும் ஈலியம், உலீசம், துரோயம், ஆவிரதை, வீநசை என்று தமிழ்ச்சாயலில் எழுதப்பட்டுள்ளன.
பிறமொழிச்சொற்களுக்குத் தமிழுருவம் கொடுப்பது சரி போலத் தென்படினும், இது மொழிபெயர்ப்பாளரின் தமிழறிவுக்கேற்ப மாறுபடலாம் என்பதால் ஒருங்கிசைவு ஏற்படாது போகக்கூடும். காட்டாக ஆவிரதை என்று அடிகளார் மொழிபெயர்த்த Aphrodite என்ற கிரேக்கப்பெயரை, ஒலிப்பும் கவித்துவமும் கருதி வேறு மொழிபெயர்ப்பாளர்கள் அப்பிராட்டியார், அப்பிரதிட்டி, ஏவிரதத்தி என்றெல்லாம் விதவிதமாக மொழியாக்க முடியும். இது கலைச்சொல்லில் சீரின்மையையே கொணரும். இத்தகைய பெயர்ச்சொற்களைத் தற்சமமாகவும், தமிழல்லாத (கிரந்தம் முதலிய) ஒலிப்பு இருப்பின் தற்பவமாகவும் எழுதுவது ஒன்றே இயலக்கூடியது. எனவே Aphrodite = அப்ரோடைட்(டு).
4.6 புதிய எழுத்துக் குறியீடுகள்
தமிழில் எல்லா ஒலிப்புக்களுக்கும் உரிய எழுத்துக்கள் இல்லை என்பதை அடிகள் ஒரு குறைபாடாகக் கருதினார் என்பது அவரது “தமிழில் எழுத்துக்குறை” எனும் கட்டுரை மூலம் தெரியவருகிறது36. இக்காரணமே கிரந்த எழுத்துக்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை என்ற முடிவுக்கு அவரை இட்டுவந்திருக்கக்கூடும்.
வடமொழியில் பெரும்பாலான வல்லின ஒலிப்புகளுக்கு நான்கு ஒலிப்புகள் உண்டு, உதாரணமாக க என்ற ஒலிக்கு வடமொழியில் ka, kha, ga, gha என்று நான்கு ஒலிப்புகள் உள்ளன. அவ்வொலியின் இயற்கையொலியும் அதன் மூன்று வர்க்கங்களும் தமிழில் உரப்பு ஒலி, எடுப்பு ஒலி, கனைப்பு ஒலி என்று அழைக்கப்படும். வடமொழி ஒலிப்புக்களை எழுத்தில் காட்டக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்த அடிகள், இரண்டாம் வர்க்க உரப்பொலிக்கு மேற்கோள் புள்ளி இட்டும், மூன்றாம் வர்க்க எடுப்பொலிக்கு கீழ்க்கோடு அல்லது இத்தாலியம் (underline or italic) இட்டும், நான்காம் வர்க்க கனைப்பொலிக்கு, எடுப்பொலி எழுத்தில் மேற்கோள்புள்ளி இட்டும் காட்டலாம் என விதந்துரைத்தார். அடிகளாரின் பரிந்துரையின் படி, நான்கு பகர வருக்க எழுத்துக்களும் வருமாறு அமையும் (அட்டவணை 01)
அட்டவணை 01. பகர வருக்க நான்கு வடமொழி ஒலிப்புக்களும் அவற்றுக்கான விபுலானந்தர் வழியிலான குறியீடுகளும்
இந்த இடத்தில் நாம் கவனிக்கவேண்டியது, வெறுமனே பொதுப்படச் சொல்லிச் செல்லாமல், ஒலிப்பு நுணுக்கங்களையும் எழுத்து வேறுபாடுகளையும் அடிகள் தெளிவாக இனங்கண்டே தன் முடிவுகளைச் சொல்லியிருக்கிறார். என்பதைத் தான் உதாரணமாக, “நன்னூலார் டகர வருக்க முதலெழுத்தை இருமொழிக்கும் பொதுவாகக் கூறினாரெனினும், உண்மையிலேயே வருக்கத்து மூன்றாம் எழுத்தே பொதுவெழுத்தாக உச்சரிக்கப்படுகின்றது” என்கிறார் அடிகள்37 . இது மிக முக்கியமான அவதானிப்பாகும். ஏனெனில், வடமொழி வருக்க வரிசையில் நான்கு டகர எழுத்துக்களையும், கண்ணை மூடிக்கொண்டு இயல்பொலி, உரப்பொலி, எடுப்பொலி, கனைப்பொலி என்று வரிசைப்படுத்திவிட முடியாது (அட்டவணை 02).
இங்கு “ṭa” என்ற வடமொழியின் இயல்பொலி தமிழில் இல்லை. எடுப்பொலியான மூன்றாம் வருக்க டகர எழுத்தே (da) தமிழில் இயல்பாக உள்ள டகரம் ஆகும். எனவே இயல்பு, உரப்பு, எடுப்பு, கனைப்பு மாத்திரம் கருதி வடமொழி மரபுக்கேற்ப எழுத்துக்குறியீடுகளைப் பயன்படுத்தும்போது, தமிழ் மரபில் வழுக்கள் ஏற்படச் சாத்தியமுள்ளது. (ஆனால் இன்று அவ்வாறு தான் பயன்படுத்தப்படுகிறது. மொழிபெயர்ப்பில் வருக்க எழுத்துக்களுக்கு வடமொழி ஒழுங்கில் ட1, ட2, ட3, ட4 என்று இலக்கமிட்டுப் பயன்படுத்தும் இன்றைய வடமொழி அறிஞர்களால், ட3 என்பது தான் தமிழின் இயல்பொலி ட என்ற கருத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. )
வருக்க எழுத்துக்களுக்கு குறியீடுகளை முன்மொழியும் அடிகள், இன்று பயன்பாட்டிலுள்ள எல்லாக் கிரந்த எழுத்துக்களையும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்றும், முப்பதாம் மெய்யான வடமொழிச் சகரத்தை தமிழில் வியப்புக்குறி சேர்த்து ச! என்று காட்டலாம் என்றும் கூறுகிறார். அவர் தமிழுக்கு மட்டும் எழுத்தில்லா ஒலிப்புகளுக்கு குறியீடுகளை முன்மொழியவில்லை. வடமொழியிலும் “தமிழை எழுதுவதற்கு ற, ன, ழ, எ, ஒ என்பவற்றுக்கு புது சமற்கிருத எழுத்துக்கள் அமைக்கவேண்டும் என்பதோடு”… “இருபக்கமும் நோக்கி ஆலோசனை செய்தாற்றான் விசயம் தெளிவுபடும்” என்கிறார்38.
அடிகளாரின் மொழிபெயர்ப்புக்கான பரிந்துரைகளில் புரட்சிகரமானதும் மிக முக்கியமானதுமாகக் கருதக்கூடியது இந்த எழுத்துக்குறியீடுகள் ஆகும். தமிழில் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துவது எப்போதும் எழுத்துச் சீர்திருத்தமாகவே கருதப்படும் சூழலில், தமிழில் இல்லாத ஒலிப்புகளை எழுத்தில் கொணரவேண்டியது, தமிழை ஞாலமாமொழி அல்லாவிடினும் ஞாலமாமொழிக்கு அருகிலேனும் உயர்த்த நினைக்கும் தமிழ்க்குடிமகன் ஒவ்வொருவனும் சிந்திக்கவேண்டிய விடயம் ஆகும்.
ஏனெனில் பிறமொழி ஒலிப்புகளுக்கான குறியீடுகளின் தேவையை இன்றியமையாததாக்கும் காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, பிறமொழியைத் தமிழிலே கற்றல், இரண்டு, அவ்வொலிப்புகள் தொடர்பான ஆய்வுகளை நேரடியாகத் தமிழிலேயே வெளியிடும் அறிவியல் படைப்பாக்க வசதிகள்.
இவை குறியீடுகள் மாத்திரமே என்பதால் அவை எழுத்தாகிவிடமுடியாது. அக்குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ள சொல் தமிழ்ச்சொல் அல்ல என்ற தெளிவும் இயல்பாகவே அதைப் பார்ப்பவருக்கு வந்துவிடும். இத்தகைய குறியீடுகளின் பாவனையை தமிழறிஞர்கள் எதிர்க்க எதிர்க்க, அந்த இடைவெளியை நிரப்ப வேறு வழியின்றி கிரந்த எழுத்துக்களின் பாவனை அதிகரித்தவாறே உள்ளது என்பதை அவர்கள் அறியாதுள்ளனர்.
துறவியொருவருக்குரிய சமரச மனநிலையில் இருந்த அடிகளார் கிரந்த எழுத்துக்களை ஏற்கப் பரிந்துரைத்ததும் வடமொழி வருக்க எழுத்துக்களுக்கு மட்டும் குறியீடுகளைப் பரிந்துரைத்ததும் இயல்பே. ஆனால் நீண்டகால நோக்கில் பார்த்தால், கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குப் பெரும் கேட்டையே ஏற்படுத்தியுள்ளதைக் காண்கிறோம். பிறமொழிக்கலப்பையும் ஒலிபெயர்ப்பு வழியான மொழிபெயர்ப்பையும் திணிப்பதற்கு கிரந்த எழுத்துக்களே காரணமாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. காட்டாக, அடிகளார் ச! என்ற குறியீட்டைப் பரிந்துரைத்த வடமொழி முப்பதாம் சகர மெய்யான “ஶ” இன்று அச்சுவாகனமேறி கணினி விசைப்பலகையிலும் இடம்பிடித்துவிட்டது. விபுலானந்த அடிகள் காலத்திலே தமிழ் அச்சியந்திரத்தில் கூட பெருமளவு பயன்படுத்தப்படாத ஒரு கிரந்த எழுத்து இன்று சமூக வலைத்தளங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு எழுத்தாக நிலைபெற்றுவிட்டது என்றால், அது ஏனைய கிரந்த எழுத்துக்களை தமிழ் வண்ணமாலையில் அனுமதித்தமையால் ஏற்பட்ட தீயவிளைவே ஆகும்.
எத்தனை தான் தமிழறிஞர் தலையிலடித்துக் கொண்டாலும், தமிழில் தற்பவ மொழிபெயர்ப்பையோ ஒலிப்புத் தவிர்ப்பையோ சமகாலத் தமிழர் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பது வெள்ளிடைமலை. அதற்கு ஒரேயொரு மாற்று பிறமொழி ஒலிப்புகளுக்கான கிரந்தமல்லா எழுத்துக்குறியீடுகளை அறிமுகம் செய்வது தான். முள்ளை முள்ளால் எடுக்க முனைவது போல், கிரந்த எழுத்துக்களுக்கு மாற்று அதையொத்த இவ்வாறான வேறு குறியீடுகளாகவே இருக்கமுடியும். ஆங்கிலத்தில் இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்காக நியமத் தராதரமாக உருவாக்கப்பட்டுள்ள ISO 15919 போல ஒரு தமிழ்க்குறியீட்டு நியமம், புலமைத்தளத்திலும் பிறமொழி ஒலிப்புகளைக் கற்கவும் ஆராயவும் பேருதவி புரியக்கூடும்39.
பல்வேறு மொழிகளின் ஊடாட்டத்தில், வடமொழி எழுத்துக்களுக்காக மாத்திரமன்றி, பிறமொழி ஒலிப்புக்களுக்கான குறியீடுகளும் அறிமுகப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக சிங்களத்திலுள்ள மூன்றாம் நான்காம் உயிரெழுத்துக்கள், ஆங்கில 26ஆம் எழுத்துக்கான ( z ) ஒலிப்பு என்பவற்றைச் சொல்லலாம். விபுலானந்த அடிகளாரின் குறியீட்டுப் பயன்பாட்டை சமகாலத்துக்கேற்ப இற்றைப்படுத்தி தமிழறிஞர் அமைப்புகள் பரிந்துரைக்கும் பட்சத்தில், நீண்டகால நோக்கில் தமிழுக்கு பெருத்த நன்மையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
5.0 கலந்துரையாடல்
கலைச்சொல்லாக்கத்தில்
அ) இயன்றவரை தமிழையும் இயலாதபொழுது பிறமொழிகளையும் பயன்படுத்தல்,
ஆ) சொற்சுருக்கம்,
இ) ஒன்றோடொன்று வேறுபிரித்தறியக்கூடிய தெளிவு,
ஈ) ஒலிப்பொற்றுமை கொண்ட கலைச்சொற்கள்
உ) தமிழுருவம்,
ஊ) எழுத்துக்குறியீடுகள்
ஆகிய ஆறும் விபுலானந்த அடிகளின் மொழிபெயர்ப்புக் கொள்கையில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளாகும்.
இவற்றில் இயலாதபொழுது பிறமொழிகளைச் சார்ந்திருக்கக் கோரும் முதல் பரிந்துரை நீண்டகால நோக்கில் தமிழ் மொழிவளர்ச்சிக்கு சாதகமற்றது. “இயலாதபொழுது பயன்படுத்தல்” என்பதில் அந்த “இயலாமை”யை வரையறுத்துக்கொள்வது சிக்கலானது. வரையறை இல்லாவிடின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் பிறமொழிச்சொற்கள் எண்ணிக்கையில் கூடி மொழித்தனித்துவம் சீர்குலையக்கூடும். அந்தத் இயலாமை வரையறுக்கப்படாமையால், வடமொழி வரையறையின்றிக் கலந்த சேரத்தமிழ், மலையாளம் என்ற மொழியாக மாறி, பழந்தமிழர் சந்ததியினர் பலர் தனித்தேசியமாகப் பிரிந்து நிற்கும் அவல வரலாறு தமிழருக்கு உண்டு.
இன்று அதே வரையறையின்மை காரணமாக நடைமுறையிலும் பொதுப்புழக்கத்திலும் எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் கலைச்சொற்களாக வலம் வருவதைக் காண்கிறோம் (ட்ரெண்டிங், ஸ்பெஷல், பிஸி… ). ஒலிபெயர்ப்பை வரையறுப்பது கடினம் என்பதால், இப்போதைக்கு பிறமொழி கலவாத தமிழ்வழிக் கலைச்சொல்லாக்கம் மாத்திரமே வேண்டுவது என்பது இக்கட்டுரையாசிரியனின் தரப்பு. அது அடிகளாரின் தரப்புக்கு எதிரானது. ஆனால் சமகால நுகர்வுசார் தொழினுட்ப உலகில் இவ்விரு தரப்பினருமே தோற்ற தரப்பினராகி தலைகுனிந்து நிற்கும் அளவுக்கு, தமிழில் ஒலிபெயர்ப்பு மூலமான கலைச்சொல்லாக்கம் காட்டுத்தீ போல – அல்ல – “வைரலாக” பரவிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனை.
அடிகளின் இரண்டாம் மூன்றாம் பரிந்துரைகள் தமிழறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும், இன்று தமிழர் பரந்து வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் உயர்கல்விக்கும் அறிவியல் கற்கைக்குமுரிய மொழியாக ஆங்கிலமே நீடிப்பதாலும், செய்தி ஊடகங்களின் அக்கறையின்மையாலும், சுருக்கமும் தெளிவும் பொருள் தனித்துவமும் கொண்ட கலைச்சொற்கள் உருவாவதிலும் அவை பொதுமக்களிடையே பரவலடைவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
நான்காம் பரிந்துரை, கலைச்சொற்களை முதலில் வேற்றுமொழியிலேயே அறிந்துகொள்ளும் இன்றைய சந்ததியினருக்கு இலகுவானது. வேலைப்பழுவையும் நேரவிரயத்தையும் காரணம் காட்டும் புதிய தலைமுறையினருக்கு ஒலிப்பொற்றுமை கொண்ட கலைச்சொற்கள் நினைவுகூர்தலை எளிதாக்கும். அதில் வேர்ச்சொல் அடிப்படையும் அடங்குவதால், மொழிவளர்ச்சிக்கு அது தடங்கலாக இராதவொன்று. ஆனால் இத்தடந்தகைக்கு தமிழறிஞர் எதிர்ப்பு நிரம்பவுண்டு என்பதால் பொதுப்புழக்கத்துக்கு வருவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.
ஐந்தாம் பரிந்துரை, கலைச்சொல் ஆக்குநருக்கேற்ப வேறுபட்ட கலைச்சொற்களை ஆக்கும் இடரைக்கொண்டுள்ளமையால் வரவேற்கத்தக்கதன்று. மேலும் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது எப்போதும் அவசியமாக இல்லாதபடியால், அதில் கூடிய கவனம் செலுத்தத் தேவையில்லை. அடிகளாரே முன்மொழிந்துள்ள ஆறாம் பரிந்துரை மூலம் இப்பரிந்துரை எதிர்கொள்ளும் சிக்கலுக்குத் தீர்வு காண இயலும்.
இறுதியான ஆறாம் பரிந்துரை புரட்சிகரமானது. எழுத்துக்குறியீடுகள் கல்வி நோக்கங்களால் சமகாலத்துக்கு அத்தியாவசியமானது. ஆனால் இதற்கும் தமிழறிஞர் எதிர்ப்பு உண்டு. அவ்வெதிர்ப்பையும் மீறிச் செய்வதென்றால், அதைச் செய்வது எவர் என்பது ஆயிரம் பொற்கிழிக்குரிய கேள்வி. அப்படியும் ஒருவரோ ஒரு அமைப்போ செய்ய முயன்றால், நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாகியுள்ள ஊடகங்களும் இன்றைய அரசுகளும் முழுத்தமிழ்ச்சமூகமும் அதை ஏற்குமா என்பது பதினாயிரம் பொற்கிழிக்குரிய கேள்வி.
6.0 பரிந்துரைகள்
விபுலானந்தரின் கலைச்சொல்லாக்கக் கொள்கைகளைப் பின்பற்ற விழையும் சமகாலத் தமிழர், தம் மொழிவளர்ச்சிக்கென கூடிய கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான விடயங்கள்; பல உள்ளன.
அ) ஆங்கிலம் உள்ளிட்ட உலகமொழிகளின் தற்சம – தற்பவச் சொற்களை எந்த எல்லை வரை ஏற்றுக்கொள்வது என்ற வரையறையை திருத்தமாக இட்டுக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் உதாரணமாக தகவல் தொழினுட்பத்துறையில் மாத்திரம் தற்பவ ஒலிபெயர்ப்புச் சொற்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ளலாம். ஏனைய துறைகளில் தனித்தமிழ் சார்ந்த பொருளுறை மற்றும் புதுச்சொல்லாக்கத் தடந்தகையைப் பயன்படுத்தி மொழியாக்கங்களைச் செய்யும் அணுகுமுறைகளை மொழியறிஞர்கள் மேற்கொள்ளவேண்டும்
ஆ) பொதுநிதி அமைப்புக்களின் உதவியுடன், கலைச்சொல் வங்கிகளை உருவாக்கி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மொழியியல் சமூகங்களில் திறந்த அல்லது நிகழ்நிலை உரையாடல்களை மேற்கொண்டு மொழிவளப்படுத்தலை ஊக்குவிக்கவேண்டும்.
இ) செயற்கை நுண்ணறிவு மூலம் பல்மொழி அகராதிகள், பொதுமக்களுக்கான மொழிபெயர்ப்புச் செயலிகள் என்பன எண்ணிம சாதனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படவேண்டும்.
ஈ) தமிழர் வதியும் நாடுகளின் அரச கொள்கைவகுப்பாளர்கள்; தமிழ் மொழிக்கான உரிய இடம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். காட்டாக, ஆரம்பப்பாடசாலைகளில் கட்டாயத் தாய்மொழிக் கற்றல், செய்தி ஊடகங்களில் கட்டாயத் தமிழ்ப் பாவனை, கேளிக்கைத் துறையில் தமிழ் மேம்பாட்டுக்கு உழைப்போருக்கு சலுகைக் கொடுப்பனவுகள், சமூக வலைத்தளங்களில் தமிழ் மூலம் அறிவியல், தொழினுட்பக் கல்வி மேம்பாட்டுக்கு உழைப்போருக்கு அரச அல்லது அமைப்புசார் விருது வழங்கல் என்பனவற்றைச் சொல்லலாம்.
உ) ஆங்கிலத்தைத் தாக்குப்பிடிக்க போராடிவரும் பிரெஞ்சுக் கலைக்கழகம் (Académie Française), சீன அரச மொழி ஆணைக்குழு, யப்பானின் நிஞ்சல் (NINJAL) போன்ற மொழிவளர்ச்சி அமைப்புகளை ஆராய்ந்து, தமிழ் மொழிவளர்ச்சிக்கான அமைப்பொன்றை அரசோ தனியாரோ நிறுவ முயல்வதன் மூலம் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
7.0 முடிவுரை
முதற்றமிழ்ப் பேராசிரியராக விபுலானந்த அடிகளார் முன்வைத்த கலைச்சொல்லாக்க – மொழிபெயர்ப்புப் பரிந்துரைகளில் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும் போதும், அவற்றில் பெரும்பாலானவை இக்கால மொழிபெயர்ப்புப் பொறிமுறைகளுக்கும் தடந்தகைகளுக்கும் பெரிதும் ஒத்திசைவாகவே உள்ளதுடன், இடைப்பட்ட நூறாண்டு காலத்தில் அந்தத் தடந்தகைகளை அடியொற்றியே இக்காலத் தமிழ் வளர்ச்சி கண்டு வந்துள்ளது என்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
பூகோளமயமாக்கம், நுகர்வுப்பண்பாட்டின் அதிகரிப்பு என்பன பெருவளர்ச்சி பெற்றுள்ள இக்காலம், மொழியையும் மொழிபெயர்ப்புக்களையும் கூட வணிகநோக்கம் சார்ந்த ஒன்றாகவே காண்கின்றது. இன்றுள்ள ஒரு புலமையாளர், பிறமொழிச் செல்வங்களையும் தன் சொந்த அறிவையும் எந்தளவு தன் தாய்மொழிக்குக் கொணர்ந்து பயனுள்ளதாக்குகிறார் என்பது ஒரு பொருட்டே அல்ல. அந்த அறிவை ஒரு புலமைச்சொத்தாக அவர் சர்வதேச சந்தையில் கூவி விற்றாகவேண்டும், அதுவும் சர்வதேச சந்தைக்குப் புரியும் ஆங்கிலம் அல்லது வணிகப்பெருமொழியொன்றில் இரந்து அழைத்தாக வேண்டும். எனவே தமிழ் போன்ற வணிக முக்கியத்துவத்தை இழந்துவிட்ட மொழியொன்றைப் பேசும் ஒருவர் எவ்வாறேனும் ஆங்கிலம் போன்ற உலகப்பெருமொழி ஒன்றைக் கற்றாகவேண்டிய கட்டாயம் இன்றைய முதலாளித்துவ உலகில் ஏற்பட்டிருக்கிறதே தவிர, பிறமொழி அறிவை தாய்மொழிக்குக் கொண்டுவரவேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவைப்பாடு கூட இன்றைய சராசரி புலமையாளனுக்கு இல்லை.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளால் இவ்விடைவெளி நிரப்பப்பட்டால் தவிர, பொருளீட்ட உதவாத மொழி மீதான புறக்கணிப்பும் பாகுபாடும் தேசிய, சர்வதேச ரீதியில் என்றும் நீடிக்கும் என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும். மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் மொழிசார் செயற்பாடுகள் அல்ல: அவை பண்பாட்டு இயக்கங்கள். சரியான ஆதரவைப் பெற்றுக்கொண்டால் தமிழ் போன்ற ஒரு பழைமையான மொழியால் நவீன அறிவை அடுத்த தலைமுறைக்கு இலகுவில் கடத்த இயலும். ஏனைய நாடுகளின் அணுகுமுறைகளைக் கற்று, மரபை தொழினுட்பத்துடன் கைகோர்க்கச் செய்யும் போது, மெல்லத்தமிழ் இனி வாழும்.
1. Venuti, 1995, pp. 170 - 176
2. Lo Bianco, 2010, pp.150 - 160
3. Jost, 2021, pp. 45–62.
4. Rajendran, 2015, pp. 55 – 78.
5. Venuti, 1995a.
6. Karakoç, 2014, p.1611.
7. இராம.கி, 2006.03.21
8. Khan, 2023, pp. 1 - 5
9. Paas, Renkl, & Sweller, 2003, pp.1 – 4.
10. Wadeea, 2024, pp. 2751 – 2756.
11. Jafari, 2023, 4 – 11.
12. UNESCO, 2023
13. தொண்டன், (2020), ப.524 - 525
14. மயில்வாகனன். 1922அ.
15. மயில்வாகனன். 1922ஆ.
16. செல்வநாயகம், 1961, பப. 1 - 11
17. விபுலாநந்தர், 1941, பப.249 - 253
18. மயில்வாகனன். 1922அ, ப.432
19. செல்வநாயகம், 1961, பப. 3
20. மயில்வாகனன். 1922ஆ. ப.62
21. மயில்வாகனன். 1922அ. ப.439
22. மயில்வாகனன். 1922ஆ, பப. 61, 65 .
23. மேலது. ப.64
24. மேலது. ப.64 - 65
25.“லவ்வொன்று மவ்வொன்று அவ்வொன்று உடன் அவ்வொன்று நிய்யொன்று சமம்,
லவ்வொன்று நிய்யொன்றுடன் அவ்விரண்டு மவ்வொன்று” என்பது அடிகளாரின் வாசகமாகும்.
மேலது. ப.66
26. Liu
& Li. 2017, pp. 1053–1059.
27. Chik, 2019, pp. 339–353.
28. மயில்வாகனன். 1922ஆ. பப.67 - 68
29. மேலது. பப. 65, 67
30. இராம கி, தி.இ.
31. மயில்வாகனன். 1922. பப.383.
32. அடிகள், 1987: X, XI
33. மயில்வாகனன் 1922, பப. 381 – 390.
34. மயில்வாகனன் 1916, பப. 289 – 300.
35. விபுலாநந்தர், 1941அ, 1- 24
36. விபுலாநந்தர், 1941, பப.249 - 253
37. மேலது, 249
38. மேலது, 253
39. தமிழில் இல்லாத சிங்கள ஒலிப்புக்களைக் காட்டுவதற்காக ஒலிக்கீறுகளை (diacritics) பயன்படுத்தி ஒரு சோதனை முயற்சி, இரண்டாண்டுகளுக்கு முன் இக்கட்டுரையாசிரியனால் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்டுரையாசிரியனின் ""ஈழத்துக் கீழைக்கரை" தொடர் பெரிதும் இவ்வொலிக்கீறுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகும். அவ்வொலிக்கீறுகளின் பட்டியலை இங்கு காணலாம். இப்பட்டியலின் நடைமுறைச்சாத்தியம், செய்ய வேண்டிய திருத்தங்கள் என்பன விரிவாக ஆராயப்படவேண்டியது. இன்னொரு சோதனை முயற்சியாக அண்மையில் தமிழ் ஒலிப்பில் (phonetic) பிறமொழிகளை எழுதுவதற்காக கணியறிஞர் திரு.வினோத் ராசன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள சக்ரேசுவரி எழுத்துருவைச் சொல்லலாம்.
உசாத்துணை
முதன்மை மூலங்கள்.
• அடிகள், விபுலானந்த. (1987). மதங்க சூளாமணி, கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு. • செல்வநாயகம், அ. (1961). “கலைச்சொல்லாக்கம்”, விபுலானந்த வெள்ளம், குருமண்வெளி, மட்டக்களப்பு. • தொண்டன், த. (2020). “தமிழ்த்தொண்டு”, க.இரகுபரன் (பதி). விபுலாநந்தம் இல். 523-525. • மயில்வாகனம், எஸ். (1916) ஏநேய காவியம், செந்தமிழ், தொகுதி 14, பகுதி. 8, 289 – 300. • மயில்வாகனன், பண்டித. (1922) மேற்றிசைச்செல்வம், செந்தமிழ், தொகுதி 20, பகுதி. 10, 381 – 390. • ______________. (1922அ) விஞ்ஞானதீபம், செந்தமிழ், தொகுதி 20, பகுதி. 11, 431 – 440. • ______________. (1922ஆ). விஞ்ஞானதீப மொழிபெயர்ப்பு முறை, செந்தமிழ், தொகுதி 21, பகுதி. 2, 61 – 68. • விபுலாநந்தர், சுவாமி. (1941). தமிழில் எழுத்துக்குறை, கலைமகள், தொகுதி 20, இல. 117. 249 – 253. • விபுலாநந்தர், சுவாமி. (1941அ). ஆங்கிலவாணி, மணிமலர்: பண்டிதமணி முதுபெரும்புலவர் திருவாளர். மு.கதிரேசச்செட்டியார் அவர்களுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் செட்டிநாட்டரசர் திருமிகு. ராஜா.சர்.மு.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தலைமையில் அளித்த கட்டுரைத்தொகுதி, புதுக்கோட்டை.
துணை மூலங்கள்
· இராம. கி. (2006.03.21). “கணி”, வளவு வலைப்பதிவு, https://valavu.blogspot.com/2006/03/blog-post_21.htmlஇலிருந்து மீள்விக்கப்பட்டது.
· இராம. கி. (தி.இ). கலைச்சொல்லாக்கம், வள்ளுவர் வள்ளலார் வட்டம். https://www.archive.org/இலிருந்து மீள்விக்கப்பட்டது.
· Chik,S. S. (2019). Translating Science: The Challenges and Benefits of Translating Technical
Terms in Education. Language and Education, 33(4), 339–353.
· Jafari, Z. (2023). The Role of AI in Supporting Indigenous Languages. AI and Tech in Behavioral and Social Sciences, 1(2), 4–11.
· Jost, F. (2021). Language Policies and the Battle Against Anglicisms in French. Journal of Language and Politics, 20(1), 45–62.
· Karakoç, N.Y. (2014). Structural Calques in Neologism Translation and Unintelligibility: The Case of Generation X. International Journal of Language Academy, 2(3), 1611–1619.
· Khan, N. (2023). Unveiling the Challenges of Translating Neologisms: A comparative study between human and machine translation. Eurasian International Journal of Philosophy, Science and Communication, 3(12), 55–64.
· Liu, Y., & Li, M. (2017). The Impact of Teaching the Periodic Table in Native Languages: A Comparative Study Between English and Mandarin Chinese. Journal of Chemical Education, 94(8), 1053–1059.
· Lo Bianco, J. (2010). Language Policy and Planning. In N. Hornberger & S. McKay (Eds.), Sociolinguistics and Language Education (pp. 143–176).
· Rajendran, S. (2015). A comprehensive study of word formation in Tamil. International Journal of Dravidian Linguistics, 44(1), 55–78.
· UNESCO. (2023). Indigenous Languages Matter for Peace and Development. Retrieved from https://www.unesco.org/en/articles/indigenous-languages-matter-peace-and-development
· Venuti, L. (1995). Translation and the Formation of Cultural Identities. In M. Baker (Ed.), Routledge Encyclopedia of Translation Studies (pp. 170–176). London: Routledge.
· ________. (1995a). The Translator’s Invisibility: A History of Translation. Routledge.
· Wadeea, S. J. (2024). The Cultural Impact of Generation Z on Neologism and its Translation:
Internet Slangs as a Model. Educational Administration: Theory and Practice,
30(6), 2751–2756.
(விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட "தமிழில் கலைச்சொல்லாக்கம்: விபுலானந்த அடிகளாரின் பரிந்துரைகளை முன்வைத்து ஒரு பார்வை" எனும் ஆய்வுக்கட்டுரை.யின் திருத்திய வடிவம்)