கார்த்திகைத் திருநாள்
"அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலில் ஒரு வரி வரும். “கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே”. போதாக்குறைக்கு "வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்" பாட்டிலும் அதே வரி வருகிறது. "கார்த்திகை போனால் மழை இல்லை மானே". அது உண்மையா? கார்த்திகை பிறந்தால் தானே இப்போதெல்லாம் மழையே வலுக்கிறது? வேறு காரணமொன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது. காலநிலை மாற்றம் அவ்வளவு தான். ஆனால் "கார்த்திகை போனால் கடும் மழை இல்லை" என்ற பழமொழிக்கு ஈராயிரம் ஆண்டு அனுபவமும் வானியல் அறிவும் இருக்கிறது. அதற்கு ஆதாரம் சங்க இலக்கியமான அகநானூறு. அதன் 141ஆம் பாடல் அப்படித் தான் சொல்கிறது. கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி அண்ணாந்து பார்க்கிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இந்தப் பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள். “வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று தலைவி சொல்வது, "...