யாழ் புத்தகத் திருவிழா : நாலு விடயம் சொல்வேன்

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அனுசரணையில், இம்முறை யாழ் புத்தகத் திருவிழா ஓகஸ்ற் 27 முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.அதில் கடந்த ஓகஸ்ற் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சில மணித்துளிகளைக் கழிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது கண்ட அவதானிப்புகளிலிருந்து இந்தக் கருத்துக்கள்.

படம் மூலம்: tamil.news.lk


நான்கு குறைகள்:
- காட்சிப்படுத்தல் (பலர் பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமற்ற நூல்கள், ஒதுக்குப்புறமான இடங்களில் முக்கியமான நூல்கள்)
- ஒழுங்கான வகைப்படுத்தலின்மை, குழம்பிக் கிடந்த நூல்கள்.
- சிறுவர் நூல்கள், பாடநூல்களுக்கான முன்னுரிமை (அவை முக்கியம் தான்; அவை மட்டுமே முக்கியம் அல்ல)
- அவிழ்க்கப்படாத பொதிகளில் அகப்படாமல் போன அநாமதேய நூல்கள்.


நான்கு நிறைகள்:
- சகல வயதினரும் உள்ளடங்கலாக, மூச்சு விட முடியாமல் நிரம்பி வழிந்த கூட்டம். (நான் சென்றது வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில்) 
- அனைத்து விதமான முக்கியமான நூல்களும் நிறைந்திருந்த பல அரங்குகள்.
- இளைஞர்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி சர்வசாதாரணமாக காதில் விழுந்து கொண்டிருந்த டோல்ஸ்டோய், தஸ்தயவ்ஸ்கி, சாரு, ஜெமோ, எஸ்ரா, மனுஷ், தேவதச்சன் முதலிய சொற்கள். (நான் நின்றிருப்பது யாழ்ப்பாணத்தில் என்பதை, ஒரே நேரத்தில் அயலவனாகவும் பெருமிதத்துடனும் எண்ணிக்கொண்டேன்.) 
- ஊடே இடம்பெற்றுக்கொண்டிருந்த சிறகுகள் அமையத்தின் 'நூல் தானம் செய்யுங்கள்' முன்னெடுப்பு. 


நான்கு கருத்துக்கள்:
- குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடநூல்கள், பயிற்சிநூல்கள் என்பவற்றை மட்டும் காட்சிப்படுத்தும் அரங்குகளை தவிர்க்கத்தேவையில்லை; ஆனால் அடுத்த ஆண்டுகளில் குறைக்கலாம். வாசிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே புத்தகத்திருவிழாக்களின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.


- ஆற அமரக் கவனிக்க முடியவில்லை என்றாலும், பிரிட்டிஷ் கவுன்சிலின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு சிறப்பாக இருந்தது. பெரியவர்களுக்கு, கொழும்பு சர்வதேச புத்தகக்கண்காட்சியில் இடம்பெறும், இலக்கியவாதிகளின் சந்திப்புகள், உரையாடல்கள், கலைநிகழ்வுகள் என்பன, நல்ல இளைப்பாறலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்படி எதையும் இங்கு ஒழுங்கு செய்திருந்தார்களா தெரியவில்லை. அடுத்தடுத்த முறைகளில் முயலலாம். (ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் பற்றித் தெரிந்திருப்பதால் கொஞ்சம் பீதியோடு தான் இதைப் பரிந்துரைக்கிறேன். )


- புத்தகத்தின் உள்ளடக்கப் பெறுமதியை விட விலைப்பெறுமதியைப் பார்ப்பவர்கள் தமிழர்கள். நூல் விற்பனைத் துறை பொதுவாக இலாபகரமான துறை இல்லை தான் என்றாலும், இது போன்ற நிகழ்வுகளிலாவது வெளியீட்டகங்கள் கொஞ்சம் கூடிய விலைக்கழிவைக் கொடுக்கலாம். விலைக்கழிவுக்குப் பிறகும் பலர் முகம் வாடி நின்றதையும், ஆக்ரோசமாக பேரம் பேசிக்கொண்டிருந்ததையும் பொதுவாகக் கண்டேன். 


- இது எதுவுமில்லாவிட்டாலும், நூல்களை சரியான அறிவித்தல் சுட்டிகளோடு வகைப்பிரித்து ஒழுங்குபடுத்துவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம். குறுகிய நேரத்தில் குறித்த துறை நூல்களை அவசரமாகத் தேடிச் சென்ற என்னைப் போன்றவர்களின் பொறுமையை இது வெகுவாகச் சோதித்தது. வெண்பா அரங்கு மட்டுமே இதில் சிறப்பாக இருந்தது. இன்னொரு அரங்கில், நூலகத்துக்கு தொகையாக புத்தகம் பெற வருபவர்கள் எத்தனை அடுக்கினாலும் கலைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப்பட்டார்கள். அப்படி தொகையாகப் பெற வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களை அல்லது நேரத்தை ஒதுக்கலாம். புத்தகத்திருவிழா வாசகர்களுக்கானது. வ்ழக்கமாக பெருமளவு விற்பனையாகும் ஆன்மிக, ஜனரஞ்சக, சிறுவர் நூல்களைத் தவிர, ஏனைய நூல்களுக்கு வாசகர் மத்தியில் எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதை மதிப்பிட, வெளியீட்டகங்களுக்கும் இந்த வகைப்பிரித்தல் உதவும். 


இறுதியாக,
நான்கு வாழ்த்துக்கள்:
அதிக நல்ல புத்தகங்களைக் கொண்டிருந்த பூபாலசிங்கம்,புக்வின், வெண்பா, குமரன் பதிப்பகங்களுக்கு.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner