கச்சியப்பத் தமிழ்!
படம்: ரமேஷ் ஹரிகிருஷ்ணசாமி தமிழில் உருவான புராணங்களில் ஒன்று கந்தபுராணம். பன்னிரண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை வெவ்வேறு காலங்களை இதற்குச் சொல்வதுண்டு. இதைப் பாடிய கச்சியப்பர், வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பாகத்தையே தமிழில் கந்தபுராணமாகத் தான் பாடுவதாகச் சொல்லியிருந்தாலும், தமிழ் மரபுக்கேற்ப இதில் அவர் பல மாற்றங்களைச் செய்திருப்பது வெளிப்படை. இந்தப் புராணம், பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணத்தோடு இணைத்து, தமிழ்ச்சைவர்களின் முப்பெரும் புராணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. நாவலரின் சைவமறுமலர்ச்சியின் பின்னணியில், தமிழகத்தை விட, இலங்கையில் கந்தபுராணம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணப் பண்பாட்டையே "கந்தபுராணக் கலாசாரம்" என்று மெச்சும் படி, அந்நூல் யாழ்ப்பாணத்தார் வாழ்வியலில் செலுத்துகின்ற தாக்கம் அதிகம். கந்த சஷ்டி விரதகாலம் முழுவதும் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது ஈழத்துச் சைவக்கோவில்களில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது. உண்மையில் கந்தபுராணத்தைப் படித்தால், அதற்கு இலங்கையில் கிடைக்கும் முதன்மையில் தவறே சொல்ல முடியாது என்றே சொல்லத்தோன்...