தெத்தாதே உஞ்சில் தெத்தாதே!
புத்தாண்டு இனிதே கடந்து விட்டது. இன்னொரு ஆண்டு. இன்னொரு வயது. இந்தக் கட்டுரையாளனுக்கு வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. இந்த முப்பது ஆண்டுகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்டு வந்த - வருகின்ற மாற்றத்தை கண்ணெதிரே, கண்டு உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான் அவன். ஏழாண்டுகளுக்கு முன்பு அவன் பிறந்தகமான தம்பிலுவில்லில் நாட்டுக்கூத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. சுமார் நாற்பதாண்டு இடைவெளிக்குப் பின் சித்திரைக்காக வட்டக்களரியில் இடம்பெற்ற கூத்து அது என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் சித்திரை பிறந்தாலே கூத்துத் தானாம். வைகாசியில் கண்ணகியம்மன் கோவில் கதவு திறக்கும் வரை, ஏன் திறந்த பின்னும் கூட, நாட்டுக்கூத்தும் வசந்தனும் விலாசமும் நாடகமும் மாறி மாறி இடம்பெறுமாம். “உப்ப நீங்க இரிக்கிர வூடு இரிக்கே. அதுக்கு முன்னுக்கு இரிந்த பாழ்வளவுக்குப் பேர் வெள்ளமணல் வளவு. சித்திராபோர்ணமில அங்க வட்டக்களறி போட்டு ஆடினா நிலவுல சும்ம அந்தமாதிரி இரிக்கும். மத்தளம் பேசின அரவாசிக் கூத்து அங்க தான் அரங்கேறிரிக்கி. அப்ப எங்களுக்கு பத்து பன்ரண்டு வயது. பூலோகறம்பை பொம்பிள வே...