ஆர்கலியில் ஓர் துளி!

பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.”

இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” என்ற பொதுமைப்படுத்தல் சிந்தனை தவறென்பதை உணரும் கணத்தில், பொறுக்கமுடியாமல் அவர்களிடம் நாமோ, நம்மிடம் அவர்களோ இவ்வசனத்தைச் சொல்வதுண்டு.

முகநூல் பதிவுகளிலும், நட்பார்ந்த அரட்டைகளிலும், தனிநபர் நடத்தையிலும் மேற்சொன்ன ஒவ்வொரு நண்பர்களும், இனப்பிரச்சினை சார்பான தம் நிலைப்பாட்டை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தனி ஒருவனின் பழக்கம், ஒரு இனக்குழுமம் சார்ந்த அவர்களது பொதுக்கருத்தை மாற்றியதை (குறைந்தபட்சம் மாற்ற முயன்றதை) தம் வாயாலேயே அவர்கள் ஒப்புக்கொண்டபோது ஒன்றை உணர்ந்தேன். என்னையறியாமலேயே அவர்களுடன் - புன்னகைத்த - பேசிய – உணவு உண்ட - ஒவ்வொரு கணத்திலும், இந்தச் சிறுதீவுக்குள் சுமார் நான்கு மில்லியன் குடித்தொகை கொண்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக நின்றிருக்கிறேன். நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருந்தது.

அடையாளங்களும், அடையாளப்படுத்தல்களும் நம்மை பல்லாயிரம் பேரோடு இணைத்து நமக்குப் பேருருவத்தை அளிக்கின்றன. இதையே நாம் ஒரு வேற்றுலகவாசியை சந்திப்பதாக சிந்தித்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர் என்பதை உலகத்தமிழர் என்று விரித்தால், எண்பது மில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். உலகம் என்று பார்த்தால், ஏழரை பில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். கற்பனை பண்ணவே மூச்சுமுட்டுகிறது!

தனி ஒருவன் என்று பார்த்தால், நாம் இயற்கையில் எந்தளவு பொருளற்றவர்கள்? நம்மை ஒரு பொருட்டாக கருதாமலேயே இயற்கை தொடர்ந்து இயங்கிக்கொண்டு தானே இருக்கிறது! இடையில் நாம் வந்து போகும் இந்த அறுபது எழுபது ஆண்டுகளில் தான் எத்தனை ஆட்டம் போடுகிறோம்!

பிரபஞ்சப் பெருங்கடலில் நான் வெறுமனே ஒரு சிறுதுளி என்பதை எப்போதும் மறவாதிருப்பேனாகட்டும்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner