வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள்
படம்: tripadvisor.in
மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு.

ஆனால், தமிழருக்கென்று இத்தகைய நிற விதிகள் எதுவும் இல்லை. தமிழரின் ஆடை அலங்காரங்கள் பகட்டானவை. சில இடங்களில் அவை சமூக ஏற்றத்தாழ்வை வெளிக்காட்டுவனவாகவும் அமைவதுண்டு. இதுபற்றிய விவாதமொன்றில் , மலையாளிகளும் சிங்களவரும் தமிழருக்கு எத்தனை நெருக்கமான பண்பாட்டுப் பங்காளிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைப் போலவே தமிழரும் வெண்ணிறாடையை தம் சீருடையாக ஏற்றுக்கொண்டால் நல்லது என்று கருத்துத் தெரிவித்திருந்தேன்.

குறைந்தபட்சம் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும்போதாவது தமிழச்சிகள் அதைக் கடைப்பிடிக்கலாமே என்று அந்த விவாதம் வளர்ந்தது (ஆண்கள் ஏற்கனவே வெள்ளை வேட்டி அணிகிறார்கள்) பின்பு அது “விதவையரின் ஆடைநிறம்” (மெச்சிங்கா தலையில மல்லிகைப்பூ வைங்களன்?) என்றும் “அவள் உடை அவள் உரிமை” (ஏன் வெள்ளைச்சாறி கட்ட விருப்பமான பொம்பிளையள் இல்லையா?) என்றும், பெண்ணிய விவாதமாக மாறிவிட்டதால் அத்தோடு விவாதம் நின்றுபோனது. :)

ஆனால், இந்த திருவிழா நாட்களில், கோயில் கோயிலாகச் சுற்றும்போது தான் அக்கருத்து எத்தனை தவறு என்று உணர்கிறேன். பஞ்சவர்ணத்திலிருந்து பஞ்சுமிட்டாய் நிறம் வரை, இளவட்டங்கள் ஜொலிக்கின்றன. மின்மினிகள் போல மின்னும் சரிகைச்சேலைகளும் ஜிங்கிச்சா ஜிங்கிச்சா ஆடைகளும், உண்டாக்கும் களிவெறிக்கு வேறெதையும் ஈடு இணை கூறமுடியாது. :)

நம் பண்பாடு தான் எத்தனை வண்ணமயமானது? இதையே முன்பு கனவுகண்டவாறு, வெண்ணிறத்தோடு எல்லோரும் உலவுவதாக கற்பனை பண்ணிப் பார்த்தேன். அதில் கருத்தைக் கவரும் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கும். ஆனால் வெவ்வேறு நிறங்களின் சீரின்மையில் ஏற்படுகின்ற இந்த வினோதமான கவர்ச்சி, அந்தத் தனிநிறத்தில் கிடைத்துவிடாது. ஆம். வேறுபாடுகள் இருப்பதால் - உயிர்ப்பல்வகைமை என்பதால் தானே இயற்கையும் பேரழகாகக் காட்சியளிக்கிறது?
தமிழர் திருவிழாக் காட்சி ஒன்று, பெரம்பலூர், தமிழ்நாடு
(படம்:travelwhistle.com)

தூவெள்ளைச் சீருடை என்பதன் அபத்தத்தை எண்ணி ஒருதடவை எனக்குள் சிரித்துக்கொண்டேன். கூடவே அப்படி விதியொன்றும் உருவாகி எழாதவாறு, பண்பாட்டை வண்ணமயமாகவே வளர்த்தெடுத்த நம் முப்பாட்டனார்களின் கலாரசனையையும் எண்ணி வியந்துகொண்டேன்.  

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner